Tuesday, August 25, 2009

வண்ணநிலவன் நாவல்கள்


பல எழுத்தாளர்கள் வருடத்திற்கு நான்கு புத்தகங்கள் எழுதுவார்கள். அந்த புத்தகங்கள் வந்த சுவடே தெரியாமல் இருக்கும். ஆனால், ஒரு சில எழுத்தாளர்கள் நான்கு வருடத்திற்கு ஒரு புத்தகம் தான் எழுதுவார். அவர் எழுத்துக்கள் நம்மை பெரிதும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர்களின் ஒருவர் தான் வண்ணநிலவன் அவர்கள். இவருடைய 'கடல்புறத்தில்' நாவலை படித்த பிறகு இவர் எழுதிய மற்ற புத்தகங்களை தேடிய போது மிக குறைவான புத்தங்கள் தான் கிடைத்தது. நாற்பது வருட எழுத்துறை வாழ்க்கையில் இதுவரை ஐந்து நாவல்கள் தான் எழுதியுள்ளார்.

கம்பாநதி

இது ஒரு நதியை பற்றிய கதையல்ல. நதியை சுற்றி வாழும் மனிதர்கள் பற்றியது. 'கம்பாநதி' அருகில் வாழும் மனிதர்களின் ஆசை, கனவு, வாழ்க்கை பற்றியது. நாவலில் நாயகன், நாயகி என்று யாருமில்லை. எல்லோரும் சம்பவத்தால் பின்னப்பட்டவர்கள். முக்க்கிய கதாபாத்திரங்களான பாப்பையா, சுந்திர பிள்ளை, சௌந்திரம், சிவகாமி, கோமதி போன்ற பாத்திரங்களை சொல்லலாம்.

வேலை தேடி அளையும் பாப்பையா, அவனை காதலித்து வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொள்ளும் கோமதி,குடும்பத்தை பற்றி கவலை மனதில் இருந்து இளசுகளுடன் சீட்டு விளையாடு சுந்திரபிள்ளை, சிவகாமி, சௌந்திரம் என்று பாத்திரங்களை நன்றாக பதிய வைத்திருக்கிறார்.

இந்த நாவல் எழுதப்பட்ட காலம் 1979. அன்றைய காலக்கட்டத்தில் ஒரு இளைஞனின் முக்கிய தேவையான 'வேலை' எப்படி அவன் வாழ்க்கையை திருப்பி போடுகிறது என்று பாப்பையா கதாப்பாத்திரம் மூலம் வண்ணநிலவன் காட்டியிருக்கிறார். இறுதியில் அவன் இராணுவத்தில் சேர்வதை சொல்லும் போது அவனின் தேசபக்தி பற்றி எதுவும் சொல்லவில்லை. பாப்பையா கண்ணுக்கு முன் இருப்பது கோமதியை கைப்பிடிக்கும் கனவு தான். ஆனால், அவன் இராணுவத்தில் சேர்ந்ததும் அவள் வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.

அடிப்படை தேவை கிடைத்துவிட்டால், ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்து விடாது என்பதை இந்த நாவல் அழகாக உணர்த்துகிறது.

ரெயினீஸ் ஐயர் தெரு

வசனமில்லாத நாவல்.வேகமில்லாமல் மெதுவாக நகர்கிறது. சில இடங்கள் நகர்வதாக தெரியவில்லை. சிலருக்கு இது பிடிக்காமல் போகவும் வாய்ப்புல்லது. 'ரெயினீஸ் ஐயர் தெரு' வாழும் கதாப்பாத்திரங்களை ஒவ்வொரு வீடாக விவரிக்கிறார். தன் வர்ணனை மூலம் கதாப்பாத்திரங்களின் இயல்பை சொல்ல முயற்சித்திருக்கிறார். சில சமயம் கட்டுரை நூல் படிப்பது பிம்பம் தோன்றியது. சில கதாப்பாத்திரங்கள் மனதில் பதியவில்லை.

இதனாலே கதை எந்த இடத்திற்கு நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போல் இருக்கிறது. அதனால் தான் இந்த நாவலுக்கு 'ரெயினீஸ் ஐயர் தெரு' என்று பெயர் வைத்தாரோ என்னவோ !!

இரண்டு நாவலும் வண்ணநிலவனின் 'கடல்புறத்தில்' இணையாக சொல்லமுடியவில்லை. இருந்தாலும், இரண்டு நாவலும் படிக்க வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...