Friday, July 30, 2010

சிலுவையில் தொங்கும் சாத்தான்


வெளியீடு: தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை 600 078
பக்கம் : 424
விலை ரூ. 125.00

தலைமறைவு இலக்கியங்கள் காலத்தை கருத்தில் கொள்பவையல்ல. பிரதி வாசகனுக்கு வழங்க வேண்டிய கருத்தியலை மட்டுமே கணக்கில் கொள்ளும் ரஷ்ய, இலத்தீன், அமெரிக்க, ஆப்பிரிக்க நாட்டினது இலக்கிய வரலாறுகள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்களின் கதையாடல்கள் மையம் என்கிற நிறுவனத்துக்கு எதிரான நிறுவனமாக மாறுகிறபொழுது அதனுடன் சமரசம் செய்து கொள்ளாத எதிர்நிலை கதையாடல்களாக மாறுகிற பொழுது இந்நிலையினை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதே தளத்திலேயே கூகி வா தியாங்கோவும் இயங்குகின்றார்.

"Pearls of Blood" என்ற நாவலுக்காக நாடு கடத்தப்பட்டவரும், தன் வாழ்வை சிறையில் கழித்த பொழுது அங்கே தரப்பட்ட மலம் துடைக்கும் தாளில் எழுதி மறைத்து வைத்து பின்னாளில் பெறப்பட்டு நாவலாக வெளிவந்த நீண்ட வரலாறுக்குரியவர்.

மொழி என்பது அதிகாரம் சார்ந்து கட்டமைக்கப்படுகின்ற பொழுது அதனைத் தகர்தெறிகின்ற பண்பாட்டுடன் கூடிய மாற்று மொழி வடிவம் எந்தவொரு விளிம்புநிலை படைப்பாளிக்கும் அவன் உணர்ந்து கொண்ட காலத்தின் நிகழ்வின் அசைவினைப் பொறுத்து எதிர் தன்மையில் அமையும். அம்மொழி விடுதலை நோக்கி மையம் நோக்கி பயணிக்கும் பொழுது மையம் எதிர் நிலையில் இயங்குவதையும் மொழியைச் சார்ந்தியங்கும் தேவையும் மையத்திற்கு ஏற்படுகிறது. தமிழக வரலாற்றைப் பின்னோக்கினால் சமண, பௌத்த மொழி அமைப்புடன் தொடங்கும் போராட்டம் இன்றைய காலகட்டம் வரைத் தொடர்கிறது. ஒட்டுமொத்தமாக மையம் என்கிற நிறுவனத்தை நோக்கி பயனிக்கின்ற அந்த கால இடைவெளியில் எடுத்துச் செல்லுகின்ற மொழியாளனின் நிலையும் அந்த நிகழ்வும் வரலாற்றில் என்றும் மறுக்கவியலாத பக்கங்களாகும். அதை இவருடைய படைப்பில் காட்டியிருப்பது எளிமையான எதார்த்தம்.

மொழி சார்ந்த குறியீட்டு வடிவம் வாசகனுக்கும் படைப்பாளிக்குமான புரிதலை மேலும் வலுப்பெற வைப்பதற்கும், படைப்பாளி சார்ந்த கருத்துருவாக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்வதற்கும் உதவுகின்றன. "சிலுவையில் தொங்கும் சாத்தான்" என்கிற முரணான எதிர்நிலை கருத்துருவாக்கமே நாவலை அர்த்தப்படுத்துகின்றன என்கிறபொழுதும் இவருடைய இடதுசாரி சிந்தனைகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் நிலைப்பாடுடையதாக ஆக்கியுள்ளது.

தலையில் துவங்கிய முரண்குறியீட்டை நாவலின் இறுதிவரையிலும் நகர்த்திச் செல்லுகின்றார். "தற்கொலை என்கிற கோழைத்தனமான முடிவிலிருந்து மீண்ட நிலையுடன் நாவல் தனது பயணத்தைத் தொடங்குகிறது. ஏகாத்திபத்தியமும், முதலாளித்துவம் தனது கோர கரங்களுக்குள் சமூகத்திலுள்ள அனைத்துவித மக்களையும் ஆட்கொண்டுள்ளது என்கிற நிலைபாட்டை ஒரே வண்டியில் பயணிக்கும் சாதாரண பெண் (வரீயங்கா), மாணவன் (கத்தூய்ரியா), போராளி (வங்காரி மாத்தாய்), தச்சுத் தொழிலாளி (முதூரி) வியாபாரி (விரேரி), தொழிலாளி (மூகிராய்) இவர்கள் அனைவரது வாழ்வும் முதலாளிய வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையினைக் கூறுவதோடு அவர்கள் பயணிக்கும் வண்டியின் உரிமையாளன் தனது மனசாட்சியை அடகுவைத்து விட்டு வரும் (முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாக சாத்தான்) குறியீடு செய்து இவர்கள் அனைவருமே அவனைத் தவிர்க்கவியலாது கட்டாயம் பயணிக்க வேண்டிய நிலைப்பாடு உடையவர்கள் என்கிற நிலையும் அந்நிலைக்கெதிரான கலகக்குரலை எழுப்பாதத் தன்மையினையும் சுட்டிச் செல்கின்றார்.

"சாத்தானின் விருந்து" நிகழ்வுக்கு அவர்கள் அனைவரும் செல்ல அங்கு, நடைபெறும் நிகழ்வுகளும், காட்சிகளும், அரசியல், பொருளாதாரம் அதனைச் சார்ந்தியங்கும் சமூகப் பண்பாட்டில் உயரிய நிலையில் இருக்கின்ற ஆளும் வர்க்கத்தினரால் ஆளப்படும் வர்க்கம், அடிமைப்படுத்தப்படும் சுரண்டப்படும் தன்மையினை கூறப்படுவதுடன், அதனை தங்கள் சமூகத்தகுதியாகவும் ஆளும் வர்க்கத்தினர் கருதும் நிலையினையும் உணர்கின்றனர்.

காலனிய ஆட்சிக்கு மறைமுகமாக தாங்கள் பிரதிநிதி எனவும் பண வெறியினால் தங்கள் நாட்டினரையே அடிமைப்படுத்துவதையும் முட்டாளாக்குவதையும் பெருமையாகக் கருதுகின்றனர். சமூக வெளியில் மதிப்பீடு என்பது இவர்களுக்கு பலவிதமான கார்கள், பங்களாக்கள், பல மனைவிகள் மற்றும் பல பெண் நண்பிகளின் மூலம் அளவிடப் படுவதாக உள்ளனர்.

கடைநிலைத் திருடர்களை பெரிதுபடுத்தும் அதிகாரம் சார்ந்த அரசு இவர்களுடன் இயல்பாக பழகும் முரண்பட்ட நிலையினையும் காண முடிகிறது. இந்நிலைப்பாட்டை கண்ட சமூகக் கூட்டம் என்கிற எல்லா நிலையிலும் உள்ள வண்டியில் பயணித்தக் கூட்டம் அதிர்வினை உள்வாங்கி செரித்துக்கொள்ளவியலாத ஒவ்வொரு சமூகப் பாத்திரமும் அதன்தன் நிலைபாட்டில் தனது எதிர்ப்பினை தெரிவிக்கின்றது.

நீதியின் பக்கம் சார்ந்து உண்மையின் தளத்தில் நின்றாலும் அது ஆளும்வர்க்கத்தின் சார்பாகவே பேசும். மாறாக சார்ந்தவனையே பாதிக்கும் என்கிற தளத்தில் போராளி பாத்திரமும், சிலுவையில் தொங்கும் சாத்தானின் கருத்துக்குட்பட்டு மனசாட்சியை அதனிடம் விற்றால் முதலாளி வர்க்கமாக மாறலாம் என்கிற தளத்தில் உள்ள சாதாரண குடிமக்கள் உழைக்கும் மக்களின் கூட்டத்தோடு சேர்ந்து உரிய கல்வியறிவுடன் போராடினால் "சாத்தானின் விருந்து" சிதைபடும் என்கிறக் கருத்தாக்கத்தையும் ஒவ்வொரு பாத்திரமும் அதுதன் கையில் எடுத்துக் கொள்கிற போராட்டத்தின் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது.

போராட்ட களத்தில் அதனை முன்னெடுத்துச் செல்கின்ற தலைமைக்கும் அதனுடனான குடும்பம் என்கிற நிறுவனத்திற்கும் இனை முரணான நிகழ்வு அமைவது இயல்பு. அகப் போராட்டமான இந்நிகழ்வினை தலைமை கையிலெடுக்கின்ற நிலைப்பாட்டினைப் பொருத்து முன்னேறிச் செல்கின்ற தோல்வியடைகின்ற தன்மை அமையும். அதை எந்த நிலையிலும் நழுவ விடாது கதை நகர்ந்து செல்வதும் இறுதியில் "பெண்" மற்றொரு போராட்டத்திற்கு தயாராகுவதுமாக உள்ளது.

நாவலின் தமிழாக்கம் நாவலை எந்தவொரு இடத்திலும் வாசகனை அன்னியப்படுத்திவிடாமல் அதே தளத்தில் அழைத்துச் செல்வது மொழி பெயர்ப்பாளனின் வெற்றியே எனலாம். பாத்திரங்களின் நிலைபாட்டில் குறியீட்டை உணர்த்திய ஆசிரியர் பாத்திரங்களின் இடுதலிலும் அதனைச் செய்திருப்பாரோ எனத் தெரிகின்றது. அதன் விளக்கத்தினை தந்திருந்தால் இன்னும் மொழிபெயர்ப்பு சிறப்பாகவே அமைந்திருக்கும்.

இலங்கை போராளிகளின் களத்தில் உருவானது நாவல்களின் சாயல் இந்நாவலில் தென்பட்டாலும், காலனித்துவம், பின்னையக் காலனியத்துவம் என்கிற மேலைநாட்டு இலக்கியக் கொள்கைகள் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள சூழலில் காலனியத்துவ எதிர்ப்புடைய இந்நாவல் அனைவரும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது சிலுவையில் தொங்கும் சாத்தான் அல்ல நம்மனதில் தொங்கும் சாத்தான்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...