Monday, January 11, 2016

மஹாகிரந்தம் : நிறைவேறா ஆசைகளின் கதம்பம்

மஹாகிரந்தம் : நிறைவேறா
ஆசைகளின் கதம்பம்
பி.எஸ்.அஜீத் குமார்
1
மானுட சமூகத்தின்
பரிணாமத்திலும்
வரலாற்றிலும் பொதுமையான
பல கூறுகளை நாம் இனம்
காணமுடியும்.அதிகாரத்துக்கான
விழைவே வரலாறாக இருக்கிறது
என்று
சொல்லப்படுகிறது.அதிகாரத்துக்கு
எதிரான போராட்டமாகவும்
வரலாறு இருக்கிறது.நாம்
வரலாற்றை பார்க்கும் போது
மானுட விழுமியங்கள்
சிதைக்கப்பட்டு மனிதர்களே
மனிதர்களை நசுக்கும் ஒரு
வினோத மிருகத்தனத்தை மானுட
சமூகம் இன்னமும் இழந்து
விடவில்லை.
பொய்,குரோதம்,காமம்,ஆசை,வஞ்சித்தல்,ஏமாற்றுதல்
போன்ற எதிர்மறையான அத்தனை
மனித குணங்களுக்கும்
செயல்வடிவம் கொடுக்கும்
போது எழும் பிரச்சனைகளை
இந்த சமூகங்கள் காலந்தோறும்
கண்டுவருகிறது.மனித
சுபாவத்தில் எந்த மாற்றமும்
இல்லாத நிலையே இன்றும்
காணப்படுகிறது.வரலாற்றை
பற்றி நாம் விவாதிக்கும்
போது கொஞ்சம் அதிகமாகவோ
கொஞ்சம் அபிலாஷையோ
இல்லாமல் யாருக்கும் சொல்ல
இயலுவதில்லை.தப்பெண்ணங்களும்,பெருமைகளும்
தன்னகத்தே சுமக்கும் சமூகம்
வேறுபாடுகளை கொண்டே தன்
இருப்பை நிரூபித்து
வருகிறது.
திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின் வரலாறும்
ஆதிக்க சக்திகளால்
பெருமைபட்டும் ஒடுக்கப்பட்ட
சமூகங்களால்
வெறுக்கப்பட்டும் உள்ள
சூழ்நிலைகளை நாம்
மறப்பதற்கில்லை.இந்த நாவலை
வாசித்து முடிக்கையில்
என்னால் இப்படி தான் ஒரு
முடிவுக்கு வரமுடிகிறது.
1. அரவிந்தன் பிள்ளையின்
அரியணை ஏறும் எண்ணம்
நிராசையாகிறது.
2. சுவர்ண மினியின் திட்டமாக
தன் கணவனை அரியணை ஏற்ற
முயலும் ஆசையும்
நிராசையாகிறது.
3. ரகுமான் சாகிபின் காதலியை
கரம் பிடிக்கும் ஆசையும்
நிராசையாகவே தொடர்கிறது.
4. மன்னனின் ஆசைப்படி
அரவிந்தன்பிள்ளை எப்படியும்
தன் நாட்டை காப்பாற்றி
விடுவான் என்ற ஆசை
நிராசையாகிறது
5. அரவிந்தன்பிள்ளை தன்
மனைவியின் வஞ்சகத்தை
முறியடிக்க வேண்டும் என்ற
எண்ணம் நிராசையாகிறது
6. சிவசித்தனின் கிழவனை
குமரனாக்கும் எண்ணம்
நிராசையாகிறது
7. பென்னிக்கிழவனின்
குமரனாகும் ஆசை
நிராசையாகிறது
ஆனால் மஹாகிரந்தத்தின்
வாக்குகள் மெய்யானதா?
அல்லது சிவசித்தனின் சாபம்
பலித்ததா? என்று
பார்க்குமிடத்தும் இந்த
இரண்டையும் தாண்டி
நீலலோகிதையின்
பழிவாங்குதல் அந்த நாட்டின்
அழிவுக்கே வழிகோலுவதாக
அமைகிறது.நீலலோகிதைக்கும்
மஹாகிரந்தத்துக்கும் எதாவது
சம்பந்தம் இருக்கிறதா?
மஹாகிரந்தம் என்பது எதை
குறிக்கிறது?என்பன போன்ற
கேள்விகளே இறுதியில்
மிஞ்சுகின்றன.
2
திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின் கீழிருந்த
குமரி மாவட்டத்தில் அன்று
நிலவிய சாதிக்
கொடுமைகளையும், சாணார்
சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு
ஒடுக்கப்பட்டனர் என்பதையும்,
இன்று தங்களுடைய
ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து
ஆதிக்கச் சாதியினராக சாதியக்
கொடுமைகளை நிகழ்ந்தும்
பிற்படுத்தப்பட்ட சாதியினர்
குறித்தும் வழக்குரைஞர்
இலஜபதிராய் எடுத்துரைத்தார்:
“இராமன் சீதையைக் கரம் பிடித்த
கதையையும், மகாபாரதக்
கட்டுக்கதைகளையும்,
பகவத்கீதையின்
பிதற்றல்களையும்
அறிந்திருக்கும் நம் மக்கள்,
முத்துக்குட்டி
என்றழைக்கப்பட்ட சமூகப்
போராளியின் போராட்டங்கள்
குறித்தோ அல்லது நமது
சகோதரிகள் மேலாடை
(மாராப்பு) அணியக் கூடாத
அனுமதிக்கப்படாத அவலங்கள்
குறித்தோ அறியாமலிருப்பது
வருந்தத்தக்க ஒன்றாகும்.
1754-ல் திருதாங்கூர்
சமஸ்தானத்தின் இராணுவச்
செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி
விதிக்கப்பட்டது.
இத்தலைஇறையைக் கட்ட
முடியாமல் பலரும் வாழ வழி
தேடி திருநெல்வேலிக்குத்
தப்பியோடினர். 1807-ல் மட்டும்
ஈழவர், நாடார், சாம்பவர் சாதி
மக்களிடம் ‘தலைஇறை’யாக
வசூலிக்கப்பட்ட தொலை 88,000
ரூபாய். இவ்வரி வசூலிப்பு,
ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த
கைப்பிடியுள்ள குடைக்கு வரி,
பெண்களின் மார்புக்கு வரி
எனப் பல்வேறு வகைகளில்
நடைமுறைப்படுத்தப்பட்டு
வந்தது.
இப்பார்ப்பனியக்
கொடுங்கோன்மையை எதிர்த்த
முத்துக் குட்டி என்பவர், தமது
‘அகிலத் திரட்டு’ எனும் நூலில்
அன்று நடைமுறையிலிருந்த
பல்வேறு வரிகளைப் பதிவு
செய்கிறார். “தாலிக்கு ஆயம்;
சருகு முதல் ஆயம்; கம்புத்
தடிக்கு ஆயம்; தாளமேறும்
சான்றோருக்கு ஆயம்; அரிவாள்
தூர்வெட்டிக்கு ஆயம்;
வட்டிக்கு ஆயம்; வலங்கை
சென்றோர் கருப்புக்
கட்டிக்கும் ஆயம் வைத்தானே
கருநீசன்” என்று
குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட சாதிக்கொடுமைகள்
நடைபெற்ற பொழுது, இந்துமத
மடாதிபதிகளோ சைவ
மடாதிபதிகளோ,
சங்கராச்சாரிகளோ அச்சாதிக்
கொடுமைகளை எதிர்த்துக்
குரல் கொடுக்கவில்லை.
1937 வரையிலும் கூட
ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது
வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட
உயரத்துக்கு மேல்
வைக்கக்கூடாது; அவர்கள்
வீட்டில் செம்புப்
பாத்திரங்களை உபயோகிக்கக்
கூடாது; வீடுகளில்
பசுமாடுகள் வளர்க்கக் கூடாது;
நிலம் வைத்திருக்கக் கூடாது”
போன்ற கடுமையான விதிகள்
அமுலாக்கப்பட்டன. இன்றும்
நமது சட்டங்கள் மூலமாகவும்,
நீதிமன்றங்கள் மூலமாகவும்
மறைமுகமாகவோ அல்லது
நேரடியாகவோ
நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான்
வருகின்றன.
ஒடுக்கப்பட்ட சாதியினர்
செல்லப் பெயர்களைச் சூட்டிக்
கொள்ள அனுமதி
மறுக்கப்பட்டனர்; ‘சோறு’
என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’
என்றே சொல்ல
வேண்டுமென்றும், தமது
வீடுகளை ‘குடிசை’ என்றே
அழைக்க வேண்டுமென்றும்
இழிவுபடுத்தப்பட்டனர். குமரி
மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட
சாதிகளைச் சேர்ந்த பெண்கள்
மேலாடை அணிய அனுமதி
மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை
நீடித்திருந்தால் நல்லதுதான்.
இன்று குமரி சுற்றுலா
மையமாக மாறியிருக்கும்”
என்று உயர்சாதி
இளைஞனொருவன் வக்கிரமாகக்
குறிப்பிடுகின்றான்.
1993-ல் அப்பாபாலு – இங்க்ளே
எனும் வழக்கின் தீர்ப்பில்
நீதிபதி கே.ராமசாமி என்பவர்
வேதனையோடு
குறிப்பிட்டதைப் போல,
‘இன்னும் இந்த நாட்டில்
தாழ்த்தப்பட்ட மக்களைப்
பாதுகாப்பதற்காக
வன்கொடுமைச் சட்டம்
உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த அரசியலமைப்புச்
சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’
“பசு புனிதமானதென்றும்,
இந்துக்கள் பசு மாமிசம் உண்ண
மாட்டார்கள்” என்றும் நாடு
முழுவதும் பிரச்சாரம்
செய்கிறார்கள். ஆனால், குமரி
மாவட்டத்திலுள்ள 60,000
பார்ப்பனர்களைத் தவிர்த்து
மற்ற அனைவரும் பசுமாமிசம்
உண்பவர்கள்தான். அம்மக்களை
இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள்
தந்திரமாகத் தங்கள் பின்னால்
அணிதிரட்டி வருகிறார்கள்.
ஆணாதிக்கக் கொடுங்கோலன்
ராமனுக்கு, தன் மனைவி
சீதையைச் சந்தேகப்பட்டுத்
தற்கொலை செய்யத் தூண்டிய
ராமனுக்குக் கோவில் கட்ட
முற்படுகிறார்கள்.
1746-ல் மார்த்தாண்ட வர்மா
எனும் திருவனந்தபுரத்து
மன்னன் தனது அரண்மனையைக்
கட்டும் பொழுது,
அரண்மனையின் பலத்துக்காக
வேணி ஈழவர், நாடார், முக்குலர்
சாதிகளைச் சேர்ந்த 15
குழந்தைகளைப் பலி
கொடுத்தான்.
அத்திருவனந்தபுரம் அரண்மனை
மட்டுமன்றி, நம்முடைய
ஒட்டுமொத்த அரசியலமைப்புச்
சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட
சாதிகளின் பலிபீடங்களின்
மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”
3
திருவிதாங்கூர்
சங்ககாலத்தில் ஐந்திணைகளாக
பிரிக்கப்பட்டு சமஉரிமை படைத்த
திராவிடர்களின் பூமியாக
இருந்துள்ளது. கி.மு மூன்றாம்
நூற்றாண்டு முதல்
திருவிதாங்கூரில் துவங்கிய
ஆரிய பண்பாட்டு படையெடுப்பு
கி.பி 8ம் நூற்றாண்டில் தனது
ஆதிக்கத்தை
நிலைநிறுத்தியது (தமிழக
வரலாறும் பண்பாடும்: டாக்டர்
A.சாமிநாதன்). இந்த
காலகட்டத்தில் சாதி அமைப்பை
உருவாக்க துவங்கியது. "சாதி
அமைப்பில்லாத சமத்துவ
சமுதாயத்தில் குடியேறிய
ஆரியர்கள் சதுர்வர்ண
அடிப்படையில் ஆரிய சித்தாந்த
சாதி அமைப்பை
உருவாகினர்" (மேற்கோள்:
வரலாற்றாசிரியர் திரு.
ஸ்ரீதரமேனன்). 19ம்
நூற்றாண்டில்
திருவிதாங்கூர் பார்ப்பனீய
கொடுங்கோன்மையின்
உச்சநிலையில் இருந்தது.
பார்ப்பனீயவாதிகளால்
விதிக்கப்பட்ட இந்துமத விதிகள்
ஒடுக்கப்பட்ட மக்களை
தீண்டாமை தீயில் வேக
வைத்தது.
கன்னியாகுமரியில்
அடக்குமுறையாளர்கள்
பெரும்பாலும் நாயர்
சாதியினர். திருவிதாங்கூர்
அரசகுடும்பத்திற்கு
விசுவாசமாக இருந்ததற்காக,
போரில் அபரிதமாக
செயலாற்றியதற்காக
நாயர்களுக்கு பிள்ளை,
பணிக்கர், நம்பியார், மேனன்,
கர்தா, கைமால்... என பட்டங்களை
மன்னன் வழங்கியிருந்தான்.
இந்த பட்டங்களை நாயர்
குடும்பங்கள் நிரந்தரமாக
பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
காலப்போக்கில் இந்த பட்டங்கள்
துணைசாதிகளாக அடையாளம்
காணப்பட்டன. நம்பூதிரிகளின்
நிழல் அதிகார மையங்களாக
நாயர் குடும்பங்கள்
விழங்கியது.
திருவிதாங்கூரில் சாதி
அடுக்கில் நம்பூதிரிகளுக்கு
அடுத்த இடம் நாயர்களுக்கு
இருந்தது. நம்பூதிரிகளின்
ஆதரவு நாயர்களுக்கு
தடையில்லாமல் கிடைக்க
முக்கிய காரணம்
அவர்களுக்கிடயிலான morganatic
மணஉறவுகள். சிலநேரங்களில்
பெண்ணின் விருப்பத்திற்கு
எதிராக, நிலவுடமையாளர்களாக
இருந்த நம்பூதிரிகளின்
செல்வத்தை பெற இந்த மண
உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
நாயர் பெண்ணின் வீட்டிற்கு
நம்பூதிரி "வரலாம்"; அந்த
வேளை அவளது கணவனை விட
நம்பூதிரிக்கே முதலிடம் என்ற
வழக்கம் இருந்தது. இவ்வகை
உறவுகளினால் நம்பூதிரிகளின்
நிழலில் நாயர்கள் பதவி,
அதிகாரம், சொத்து, படைபலம் என
அனைத்தையும் அனுபவித்தனர்.
மன்னனின் படைகளில் முக்கிய
பதவிகளில் நாயர்கள்
இடம்பெற்றனர்.
விளைநிலங்களான வயல்,
தென்னந்தோப்புகள்
நாயர்களிடமிருந்தது.
வழிபாட்டு முறைகளிலும்
நாயர்கள் சூரியவணக்கம் முதல்
பெரும்பாலும் நம்பூதிரிகளின்
வழிபாட்டுமுறைகளை தழுவியே
இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில்
இன்றும் நாயர்களை நேரில்
காணும் போதும், பேசும்
போதும் அழைக்க "ஏமானே
(எஜமானே)" என குறிப்பிடுவது
வழக்கமாக இருக்கிறது. 'எஜமான்'
நிலையில் இருந்த இவர்களை
அப்படி அழைத்த சொல் யாமான்,
ஏமான் என்று மருவி சொல்
வழக்காக இருக்கிறது. அதே
நாயர் நேரில் கண்ணில் படாத
வேளை சூத்திரன் என
திட்டுவதும் உண்டு.
அடக்குமுறையை அனுபவித்த
வலியின் வெளிப்பாடு
சூத்திரன் என நாயரை
ஒடுக்கப்பட்ட மக்கள்
தங்களுக்குள் சொல்ல
வைத்தது. பண்ணையார்களாக
இருந்த நம்பூதிரிகளும்,
நாயர்களும் ஒடுக்கப்பட்ட
மக்களை அடிமைகளாக
வைத்திருந்தனர்.
கொல்லம் திவான் எழுதிய
மடலில் திருவிதாங்கூரில்
1,64,864 பேர் அடிமைகளாக
இருந்துள்ளனர் என்பதை
குறிப்பிடுகிறார். அடிமைகளாக
இருந்த மக்கள் ஆங்கிலேய
காலனியாத்திக்க
பிரதிநிதிக்கு எழுதிய
கடிதத்தில் "பரம்பரை
பரம்பரையாக நாங்கள் விவசாய
கூலிகள், வேலையும் சமூக
அடக்குமுறையும் சேர்ந்து
எங்களை விவசாய கூலி
அடிமையாக பண்ணையார்களிடம்
வைத்திருக்கிறது. நாங்கள மன,
வாழ்வு அடிப்படையில் சுதந்திர
மனிதர்களாக பண்ணையார்கள்
எதிராக உள்ளனர். ஆதிக்க
சாதியினர் அனுபவித்து வருகிற
உரிமைகள் எங்களுக்கு
மறுக்கப்படுகிறது. நில
உரிமையாளர்களின் பிடியில்
சிக்குண்டு மழையிலும்,
வெயிலிலும் மிருகமாக
உழைத்து எஜமானர்கள் சொத்தை
பெருக்க நாங்கள் அரை
வயிற்றில், அழுக்கு சாக்கில்
அவதிப்பட
வைக்கப்பட்டுள்ளோம்" என
எழுதினர். அடிமைகளை
வாங்குவதும், விற்பதும்
ஆதிக்கசாதி நில
உடமையாளர்களுக்கு
உரிமையாக இருந்தது. இரணியல்,
தொடுவெட்டி, படந்தாலுமூடு
போன்ற பகுதிகளில்
அடிமைகளை விற்க சந்தைகள்
இருந்துள்ளன. அடிமைகளை
சக்கையாக பிளிந்து வேலை
வாங்கிய பின்னர் வதைப்பதும்,
கொலைசெய்வதும், மீண்டும்
விற்பது என
கொடுங்கோன்மையின்
உச்சகட்டம் நிலவியது.
திருவிதாங்கூர் பார்ப்பனீய
அரண்மனை, கோட்டைகளின்
அழகிலும், கோயில்களின்
சுவர்களிலும் இந்த
அடிமைகளின் இரத்தமும்
சதையும் கலந்த வரலாறு செல்வ
செழிப்பாக கலந்திருக்கிறது.
பார்ப்பனீயம் உச்சநிலையில்
ஈடுபட்ட அரசுகளில்
நம்பூதிரிகளும், நாயர்களும்
இணைந்து ஆதிக்கம்
செலுத்திய திருவிதாங்கூர்
மன்னராட்சி குறிப்பிடத்தக்கது.
நம்பூதிரிகளும், நாயர்களும்
சேர்ந்து கோவில்கள், வீதிகள்
எங்கும் கட்டுப்பாடுகள்
அமைத்து தங்களுக்கு சாதகமான
அமைப்பை உருவாகி
வைத்திருந்தனர். அதிகார
மையங்களில் தங்களுக்கு
சாதகமான சட்டங்களை
உருவாக்கி வைத்திருந்தனர்.
ஈழவ சாதியில் பிறந்தவர்கள்
நம்பூதிரிகளிடமிருந்து 32 அடி
தூரம் விட்டும்,
நாயர்களிடமிருந்து 16 அடி தூரம்
தள்ளியும் நடக்கவேண்டும்
என்ற சட்டங்கள் நடைமுறையில்
இருந்தது. கண்ணால்
பார்த்தாலே தீட்டு என சில
சாதிகளை ஒதுக்கி
வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட
மக்கள் இடுப்புக்கு மேல்
உடையணிய தடையும், அபராதமும்
விதித்திருந்தனர். நாயர்
வீடுகளின் அருகில் பிற
சாதியினர் செல்லக்கூடாது.
நாயர்கள் குளிக்கும் பொது
இடங்களில் பிற சாதியினர்
குளிக்கக்கூடாது. நாயர்கள்
போல மேலாடை
அணியக்கூடாது. கிணற்றில்
தண்ணீர் எடுக்கக்கூடாது.
கோவிலில் நுழையக்கூடாது.
இருபதாம் நூற்றாண்டு
வரையிலும் இப்படியான
கொடுமைகள் தொடர்ந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில்
இந்த கொடுமைகளை அதிகம்
அனுபவித்தவர்கள் பள்ளர்,
பறையர், சாணார், முக்குவர்
சாதி மக்கள்.
இந்த கொடுமைகளை எதிர்த்து
ஒவ்வொரு காலகட்டத்திலும் பல
இடங்களில் கிளர்ச்சிகள்
எழுந்து கலவரங்களாக
வெடித்தது. அந்த
போராட்டங்களில் மூழ்கி எழுந்த
முத்தாக
சமூகப்புரட்சியாளர்கள் பலர்
உருவாகினர்.
திருவிதாங்கூரில் உருவான
வீரம் செறிந்த மாமனிதர்களில்
அய்யங்காளி, நாராயணகுரு,
அய்யா வைகுண்டர்
(முத்துக்குட்டி சாமிகள்) என
பலர். அன்றைய வர்ணாஸ்ரம
சாக்கடையான
திருவிதாங்கூரை சீர்படுத்திய
இந்த மாமணிகளின் வரலாறு
இன்றைய தலைமுறை
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
தெரியவில்லை.
பள்ளிப்பாடங்களிலும்,
வரலாற்று புத்தகங்களிலும்
இவற்றை அறியாமல்
வளர்ந்துவிட்டோம்.
மன்னர் ஆட்சியில்
நம்பூதிரிகளும்,
நாயர்களும்அனுபவித்து வந்த
பதவி சுகங்கள், அதிகாரம்
அனைத்தும்
காலனியாதிக்கத்தில் இடம் மாற
துவங்கியது. கிறிஸ்தவ மற்றும்
இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய
மக்கள் தங்களது உரிமையை
அனுபவிக்க ஆரம்பித்தனர்.
மேலாதிக்கத்தின் பிடி மெல்ல
நழுவ துவங்கியது. பார்ப்பனீய
மதத்தில் மறுக்கப்பட்ட
உரிமைகள் மதம் மாறினால்
கிடைக்குமென நம்பி அதிக
எண்ணிக்கையில் மக்கள் மதம்
மாற துவங்கினர்.
வாழ்வுரிமையையும்,
கலாச்சாரத்தையும், வழிபாட்டு
உரிமையையும் மீட்டெடுக்க
தெற்கு திருவாங்கூரில்
சமூகநீதி போராட்டங்கள்
மதத்தை மையமாக வைத்து
உருவானது.
ஈழவ மக்களுக்கு கோவிலில்
வழிபட, சாலைகளில் நடமாட தீட்டு
என தள்ளி வைத்தனர் ஆதிக்க
சாதியினர். வைணவ
இந்துகோயில்களில்
ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டாக
வைத்து வழிபாட்டு உரிமையை
மறுத்ததை எதிர்த்த
நாராயணகுரு ஈழவ மக்களுக்காக
தனியாக கோயில்களை
உருவாக்கினார்.
நம்பூதிரிகளும், நாயர்களும்
அதை எதிர்த்தனர். எதிர்த்த
நம்பூதிரி ஒருவனிடம் "இது
நம்பூதிரி சிவனுக்கான
கோயிலல்ல, இது ஈழவ சிவன்
கோவில்" என்றாராம்
நாராயணகுரு. எங்களை எங்கள்
வழியில் வாழவிடு என்பதாக
அமைந்த நாராயணகுருவின்
பாதை அணுகுமுறை
பார்ப்பனீயத்தை உலுக்கியது.
பார்ப்பனீய
கொடுங்கோன்மையில்
சாலையில் நடக்க கூட
உரிமையில்லாதவர்களாக
புலையர் சாதி மக்கள்
நடத்தப்பட்டனர். கிறிஸ்தவ
மதத்திற்கு மாறிய பின்னரும்
தங்களது பொருளாதாரமும்,
வாழ்க்கையும் முன்னேறாமல்
இருந்த புலையர் சாதி மக்கள்
சாலைகள், பள்ளிக்கூடங்கள்
உள்ளிட்ட பொது வசதிகளுக்காக
இயக்கமாக போராட்ட துவங்கினர்.
1893ல் புலையர் சாதியினர்
வெங்கனூர் என்னும் இடத்தில்
பள்ளிக்கூடம் ஒன்றை
துவங்கினர். இந்த பள்ளிக்கூடம்
ஆதிக்கசாதியினரால்
தகர்க்கப்பட்டது. புலையர் சாதி
மக்களிடமிருந்து பிறந்த ஒருவர்
அதை எதிர்த்து கடுமையாக
போராடினார். ஆதிக்க
சாதியினர் நிலங்களில் விவசாய
வேலைகள் செய்வதை
புறக்கணிக்க அழைப்பு
விடுத்தார் அந்த மனிதர். மாட்டு
வண்டியில் பொது சாலையில்
சென்று போராட்டம்
துவங்கினார். 1898ல் அவர்
தலைமையில் பொது சாலையில்
புலையர்கள் நுழையும்
போராட்டத்தை நடத்தினார்.
புலையர் சாதி மக்களுக்கும்
ஆதிக்க சாதியினருக்கும்
மோதல்கள் வெடித்தன.
கன்னியாகுமரி,
நெய்யாற்றின்கரை, வைக்கம்
முதலான இடங்களில் வெடித்த
போராட்டங்களை அரசு
அடக்கியது. இந்த போராட்டத்தை
முன்னின்று நடத்திய மாபெரும்
மனிதர் தான் அய்யன்காளி.
அய்யன்காளி, வலிக்கர சோதி
முதலிய தலைவர்களின்
போராட்டங்களின் பலனாக
புலையர் சாதி மக்களுக்கு
கல்வி உரிமைக்கான சட்டத்தை
1914ல் திருவிதாங்கூர் அரசு
உருவாக்கியது. இந்த சட்ட
உரிமையை ஆதிக்க சாதியினர்
கடுமையாக எதிர்த்தனர்.
புல்லத்து என்ற இடத்தில்
புலையர் சாதி குழந்தைகள்
படித்த பள்ளிக்கூடத்தை
நாயர்கள் தீவைத்து
கொழுத்தினர். இந்த
பிரச்சனையில் காலனியாதிக்க
அரசு தலையிட்டது.
நாடு முழுவதும்
கலனியாதிக்கத்தின் பிடி
அழுத்தமாக இருந்த
வேலையிலும் பார்ப்பனீய
கொடுங்கோன்மை ஆதிக்க
சாதிகளால் நடத்தப்பட்டே வந்தன.
குறுநில மன்னர்கள் போல
திருவிதாங்கூரின் பல
பகுதிகளின் பல கிராமங்களை
நம்பூதிரிகள், நாயர்கள்
கூட்டணி ஆட்சி செய்து வந்த
அதிகார மையங்களே இதற்கு
அடிப்படை காரணம். இந்த அதிகார
மையங்கள் மன்னனுடன்
தொடர்பை வைத்திருந்தது.
கோவிலை சுற்றி அமைந்த பல
கிராமங்களை உள்ளடக்கி
ஆளப்பட்ட இந்த பகுதிகள்
சங்கேதம் என்று
அழைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை
கவனிக்க தனியாக படைகள்
எதுவும் இல்லாமல்
இருந்தாலும் இவை அதிகார
மையங்களாக விளங்கியது
(தகவல்: கொச்சி இராச்சியம்,
K.P.மேனன், 1911)
நாடார் பெண்கள் தங்கள் உடலின்
மேல்பகுதியில் (இடுப்புக்கு
மேலே) மார்பை மறைக்க
இடுப்புக்கு மேல் துணி அணிய
உரிமை மறுக்கப்பட்டது. மீறி
ஜாக்கட் அணிந்த பெண்கள்
கொடும் துயரத்துக்கு
ஆளாயினர். நாடார் சாதி
மக்களின் போராட்டங்களும்,
ஐரோப்பிய மிஷனரிகள்
ஆங்கிலேய அரசாங்கத்திற்கு
கொடுத்த அழுத்தத்தின்
விளைவாகவும் 1829-ம் ஆண்டு
திருவிதாங்கூர் அரசு நாடார்
பெண்கள் குப்பாயம் எனப்படும்
ஒருவித ரவிக்கையை மட்டும்
அணியலாம் என்று
அனுமதித்தது. ஆனால் அவர்கள்
மேல்சாதி பெண்களைப் போல
நல்ல உடை அணியக்கூடாது என
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாயர்களின் எதிர்ப்பு
காரணமாக அந்த உத்தரவை
நடைமுறைபடுத்த
முடியவில்லை. 1859ல் தெற்கு
திருவிதாங்கூரில்
(குமரிமாவட்டம்) இரணியல்,
கோட்டார், திட்டுவிளை,
தொடுவெட்டி மற்றும் பல
ஊர்களில் நாடார் சாதி மக்களை
நாயர்கள் கடுமையாக தாக்கி
வீடுகளை எரித்தனர். அவர்களது
ஜாக்கெட்களை நாயர்கள்
கிழித்தெறிந்த கொடுமை
தொடுவெட்டி (மார்தாண்டம்),
அருமனை என கன்னியாகுமரி
மாவட்டத்தின் பல பகுதிகளில்
நடந்தது.
1870ல் குமாரகோவில்
திரு.வெள்ளையன் நாடார்
தலைமையில் 12000 சாணார் சாதி
மக்கள் கோவிலில் நுழைந்தனர்.
ஒடுக்கப்பட்ட மக்களை
கோவிலில் அனுமதிக்காது
நாயர்கள் தாக்கியதில் 150
சாணார் சாதியினர்
கொல்லப்பட்டனர். இதுபோல
பார்ப்பனீய இந்து
கோவில்களில் ஒடுக்கப்பட்ட
மக்கள் நுழையவிடாத நிலை
திருவிதாங்கூர் முழுவதும்
இருந்தது.
அய்யாவழி இப்படியான
காலச்சூழலில் ஒடுக்கப்பட்ட
மக்களிடமிருந்து
தாழக்கிடப்பாரை
தற்காப்பதுவே தர்மம் என அந்த
மக்களின் உரிமைக்காக
அய்யாவழி தனி மதமாக பிறந்தது.
இல்லறமே உயர்ந்த அறமாக
போதித்த அய்யா வைகுண்டர்
இல்லறத்தையே கடைபிடித்தார்.
இயற்கையான வழியும்,
வாழ்வுமே அய்யாவழியின்
அடிப்படை என்பதற்கு
துறவறமின்மை, கண்ணாடியில்
தன்னையே கண்டு வணங்குதல்,
சுயமரியாதைக்கு அடையாளமான
தலைப்பாகை, ஒரே கிணற்றில்
எல்லோரும் சமமாக தண்ணி
அருந்துவது, சாதி
பாகுபாடின்மை என பல
அடையாளமாக உள்ளன 
ஒடுக்கப்பட்ட மக்களின்
மாமனிதர்களில் அய்யாவும்
ஒருவர்.
பார்ப்பனீய கொடுங்கோன்மை
திட்டங்களையும்,
கொள்கைகளையும் அறவே
எதிர்த்து பல தளங்களில்
போராடியவர்கள் தான் அய்யா,
நாராயணகுரு, அய்யன்காளி
போன்ற எண்ணற்ற மாவீரர்கள்.
இன்று அவர்களை பார்ப்பனீய
இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்
சொந்தமாக்க முனைவது ஓநாய்
அழுவதை தான்
நினைவுபடுத்துகிறது.
நம்பூதிரிகளும், நாயர்களும்
நடத்திய கொடுங்கோன்மை
கோரத்தாண்டவத்தை திருத்தி
எழுத பார்ப்பனீயவாதிகள்
முயல்கிறார்கள்.ஆனால்
மகாகிரந்தம் நாவல் உண்மையை
மறைக்காமல் அக்கொடுமைகளை
சொல்கின்றன.ஆதிக்கசாதியினர்
கொடுமைகள் தெளிவாக
பேசப்படுகின்றன.பெண்கள்
மீதான கொடுமைகள்
பேசப்படுகின்றன.இந்த
அளவுக்கு இன்னொரு நாவல்
பேசி இருக்குமா என்பது
சந்தேகமே.
4
மகாகிரந்தம் நாவல்
பிரம்மாண்டாமாக நம்முள்
காட்சிகளை விரித்து
போடுகிறது.கொடூரங்களை
வெளிப்படையாகச்சொல்கிறது.ஆனாலும்
இந்த நாவலை வரலாற்று நாவல்
என்று சொல்ல முடியுமா என்ற
கேள்வியும் வரலாற்ற வரலாறை
இந்த நாவல் சொல்லுகிறதா
என்றும் யோசிக்க
வேண்டியிருக்கிறது.ஆனால்
திருவாங்கூர் சமஸ்தானத்தின்
வரலாறும்,நிகழ்வுகளும் இந்த
நாவலில் இல்லை என்று சொல்ல
முடியாது.
1. ஆதிக்க சக்திகளுக்கும்
நாடார் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட
சாதிகளுக்கு இடையிலான
முரண்கள் இந்நாவலில்
பதிவாகியுள்ளன.
2. திருவிதாங்கோடு என்ற
பெயர்மாற்ற வரலாறு
பதிவாகியுள்ளது.
3. முஸ்லிம்களின் இருப்பு
திருவிதாங்கூர் வரலாற்றில்
மறைக்கப்பட்டிருந்ததும் இந்த
நாவலில் முஸ்லிம்கள்
வரலாற்றில் முக்கிய இடம்
பெற்றிருந்ததையும்
தெளிவுபடுத்துகிறது.
4. தலித் சமூகத்துக்கும் அரசில்
வேலை
கொடுக்கப்பட்டிருக்கிறது
தெளிவாயிருக்கிறது.
5. முழுவதும் மறைக்கப்பட்ட
சமூகமான குறுப்பு
சமூகத்தின் நிலை
காட்டப்பட்டுள்ளது
6. குருகுல கல்விமுறையும்
அதில் மாற்று மதத்தவருக்கும்
பயில உரிமை இருந்ததை
காட்டுகிறது இந்நாவல்.
7. உயர்குல பெண்ணான நாயர்
பெண்ணை ஒரு முஸ்லிம்
காதலிப்பது குறித்த முரண்
பதிவாகியுள்ளது.
8. உயர்குல பெண்கள் தமது சமூக
உயர்வுக்காக ஆளும்
வர்க்கத்தை கையில் வைத்து
சாதகமாக்கியது குறித்து
பதிவு செய்யப்பட்டுள்ளது.
9. சிவசித்தன் போன்ற தலித்
மக்களின் எதிர் அரசியல்
பதிவாகியுள்ளது
10. நாடார்கள் நிலத்தை
கொண்டிருந்தனர் என்ற உண்மை
அம்பலபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நாவலில் மறைமுகமாக சில
உண்மைகள்
சொல்லப்பட்டுள்ளன.அய்யா
வைகுண்டர் குறித்த
குறிப்பும்,ஒடுக்கப்பட்ட மக்கள்
மீது முலைவரி போன்ற கொடும்
வரிகள் வசூலிக்கப்பட்டன
என்பதும் சாணார்களே
முஸ்லிமாக மதம் மாறினார்கள்
என்பதும் இஸ்லாம் பரவிய
வரலாறும் என்று சிறுசிறு
குறிப்புகளாக
வரலாற்றுண்மைகள்
பதிவாகியுள்ளது.சமஸ்தானங்களில்
பெண்கள் மீதான வன்முறை
குறித்தே இந்நாவல்
குவிமையமாக
செயல்பட்டிருக்கிறது.நீலலோகிதையானலும்,சுவர்ணமினியானாலும்,ஷாஜிதாவாக
இருந்தாலும்,ஏழு பெண்களை
பலாத்காரம் செய்தலும்,ஒரு
புலைச்சி கிழவியின் மீது
செய்யும்
வன்மமும்,ஒடுக்கப்பட்ட சமூக
பெண்களின் மீது நிகழும்
வன்கொடுமையும் இந்நாவல்
சுட்டிக்காட்டுகிறது.
வரலாற்று நிகழ்வுகளுக்கு
கொடுக்கப்படும் நாட்டார்
கதையாடல்கள் அதிக
முக்கியத்துவம் உடையது தான்
இந்நாவலில் ஒரு சூபி அவ்லியா
என்பவரது மாயஎதார்த்தம்
வினைப்பட்டுள்ளது.வண்ணார
சித்தன் குறித்த நாட்டார்
தொன்மமும்,திருவாங்கோடு
குறித்த பெயர்காரண கதையும்
அந்தவகையில் முக்கியத்துவம்
உடையவைகளே.திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின் முதல்
அமைச்சராக இருந்த பட்டம்
தாணுபிள்ளையின் கதைக்கும்
அரவிந்தன்பிள்ளையின்
கதைக்கும் ஏதாவது தொடர்பு
உள்ளதா என்று வாசகர்கள்
துலக்க வேண்டும்.ஒருவேளை
பட்டம் தாணுபிள்ளையின்
கதையாக இந்நாவல் இருந்தால்
இது ஒரு வரலாற்று ஆவணம்
என்பதில் யாருக்கும் சந்தேகம்
வராது.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...