Sunday, January 17, 2016

வகாபிய முதலாளித்துவம்

வகாபிய முதலாளித்துவம்
பேரா.எச்.முஜீப் ரஹ்மான்

வகாபிய முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறைமையாகும். அத்துடன் இம்முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகள் தொடர்புபடுகின்றன.
முதலாளித்துவச் செயற்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டுக்கும், 19 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஐரோப்பாவில் நிறுவனப்படுத்தப்பட்டது. வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியது. இது இங்கிருந்து, சிறப்பாக இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும் தொழில்மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக விளங்கியது.கால அடிப்படையிலும், புவியியல், அரசியல், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலும், முதலாளித்துவம் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றது. பல நாடுகளைப் பொறுத்து இதைக் கலப்புப் பொருளாதாரம் என்று அழைப்பதே பொருத்தம் எனச் சிலர் கருதுகின்றனர்.
சவுதி உருவாக்கமே வகாபிய முதலாளித்துவத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு காரணமாகியது.சவுதியில் மன்னர் 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார். சவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடாகும். மசகு எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது.
சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை அண்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர மக்கள்குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது.சவுதி மட்டுமல்லமல் வளைகுடா நாடுகள் மசகு எண்ணையை உற்பத்தி செய்கின்றன.
"வளைகுடா நாடுகள் " அல்லது "அராபிய பாரசீக வளைகுடா நாடுகள் அல்லது "பாரசீக வளைகுடா அரபு நாடுகள் "  என்றெல்லாம் பொதுவாக அறியப்படுபவை நடுவண் ஆசியாவில் பாரசீக வளைகுடாவினை ஒட்டி அமைந்துள்ள எண்ணெய்வளமிக்க முடியாட்சிகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன் மற்றும் ஓமன் ஆகும். ஈராக் மற்றும் ஏமன் நாடுகளும் பெர்சிய வளைகுடாவினை ஒட்டி யிருந்தாலும் அரபு நாடுகளாக இருப்பினும் அவை வளைகுடா நாடுகளாகக் கருதப்படுவதில்லை. பாரசீக வளைகுடாவின் அனைத்து அரபு நாடுகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் மிகுந்த வருமானம் பெறுகின்றன. சவுதி அரேபியாவைத் தவிர ஏனைய நாடுகள் சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. இதனால் இந்நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் அண்டை நாடுகளின் வருமானத்தைவிட கூடுதலாக உள்ளது. தங்களின் பணியாள் தேவைகளுக்காக தெற்காசியா (பெரும்பாலும் இந்தியா) மற்றும் தென்கிழக்கு ஆசியா (பெரும்பாலும் பிலிப்பைன்சு, இந்தோனேசியா) பகுதிகளிலிருந்து குடியுரிமையற்ற பொருளாதார குடியேறிகளை அமர்த்துகின்றனர்.
மசகு எண்ணையை பிரதானமாக கொண்டே வகாபிய முதலாளித்துவம் தன்னை சூப்பர் பவர் முதலாளித்துவமாக அல்லது பெட்ரோ முதலாளித்துவமாக கட்டமைத்துக்கொண்டது.மேலும் வகாபியத்தை அரசுக்கொள்கையாக சவுதி பின்பற்றிய போது ஹஜ்ஜை பிரதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.புனித ஹஜ்ஜை மையப்படுத்தி சவுதியின் பொருளாதார வளர்ச்சி நாற்கால் பாய்ச்சலில் சென்றுக்கொண்டிருக்கிறது.பர்தா அல்லது ஹிஜாப் புதுமாதிரியான பண்பாட்டு அடையாளமாக ஆக்கப்பட்டு உலகநாடுகள் அனைத்திலும் பெருவணிகர்களால் அடையாள சின்னமாக பெண்களுக்கு உருவாக்கப்பட்டது.இதில் கோடிக்கணக்கான டாலர் புரள்கிறது.
வகாபியமுதலாளித்துவம் என்பது தனிமனித உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரு சமுதாய அமைப்பு" என்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.  "தனிமனித உரிமை என்பது சொத்துரிமையையும் உள்ளடக்கியது. முதலாளித்துவத்தில் எல்லா சொத்துக்களுமே தனி மனிதர்களின் உடைமையாக மட்டுமே இருக்கும். உற்பத்தி, வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் அரசு பங்கேற்காது. இதுவே அரசியல் சுதந்திரம்" என மேலும் விளக்கமளிக்கிறார்கள் இவர்கள்.

வகாபிய முதலாளித்துவத்தை "லெஸ்-ஸெய்-ஃபேர் கொள்கை என்றும் அழைக்கிறார்கள். இந்த பிரெஞ்சு வார்த்தையின் பொருள் "அப்படியே விட்டு விடு" என்பதாகும். வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாமல் அவற்றைச் சந்தையின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்ற முதலாளித்துவத்தின் அடிப்படையையே இது பிரதிபலிக்கிறது.வகாபிய முதலாளித்துவத்தின் மிக முக்கிய குணமே சுரண்டலாகும்.

வர்த்தகத்தை, சந்தையின் போக்கிலேயே விட்டுவிடுவது எப்படி என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு பழ வியாபாரி ஒரு மாந்தோப்பிலிருந்து மாம்பழங்களை வாங்கி, தனது ஊர்ச் சந்தையில் ஒரு பழம் ரூ.2 என்ற விலையில் விற்கிறார். நன்றாக வியாபாரம் நடக்கிறது. சில மாதங்கள் ஆன பிறகு இன்னொரு வியாபாரி அதே தோப்புப் பழங்களை அதே சந்தையில் ரூ.1.80-க்கு விற்கத் தொடங்குகிறார். தனியாளாக ஒருவர் மட்டும் வியாபாரம் செய்து வந்து வந்த பழச்சந்தையில் இப்போது போட்டி வந்து விட்டது. முதலாமவரின் வாடிக்கையாளர்கள் இப்போது இரண்டாமவரிடம் வாங்கத் தொடங்கி விட்டார்கள். வேறு வழியின்றி முதலாமவரும் தனது விலையை ரூ.1.80-க்கு குறைத்தார். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு வியாபாரி வருகிறார். அவரும் அதே பழங்களை ரூ.1.50-க்கு விற்கத் தொடங்கி விட்டார். போட்டி இன்னும் கடுமையாகி விட்டது. முதல் இருவரும் தங்கள் விலையையும் ரூ 1.50-க்கு குறைத்தாலன்றி வியாபாரம் செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களும் விலையைக் குறைத்தனர்.

முதலாமவர் கொஞ்சம் மாற்றி யோசித்தார். இப்படியே போய்க் கொண்டிருந்தால் போட்ட முதலைக்கூட எடுக்க முடியாது. ஒரே தரத்திலுள்ள பழத்தை வைத்துப் போட்டி போட்டுக் கொண்டிருப்பதை விட்டு நாம் சற்று உயர்தர பழத்தை விற்கலாமே என்ற யோசனை அவருக்குத் தோன்றியது. சிறிது தூரத்திலுள்ள வேறொரு தோப்பிற்குச் சென்று விசாரித்தார். அங்கு விளையும் பழம் சந்தையில் இருக்கும் பழத்தைவிட உயர்தரமானது. ஆனால் கொள்முதல் விலை கிட்டத்தட்ட அதேதான். அவர் அந்த உயர்தர பழங்களை வாங்கி வந்து தனது கடையில் அறிமுகப் படுத்தினார். விலை ரூ. 1.50. அதே விலைக்கு உயர் தரமான பழம் கிடைக்கிறது என்பதால் வாடிக்கையாளர்கள் திரும்பவும் அவரது கடைக்கு வரத் தொடங்கினார்கள். தான் ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த பழத்தின் விலையையும் அவர் ரூ. 1.40 எனக் குறைத்தார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த நடவடிக்கையில் நிகர பலன் அடைந்தது வாடிக்கையாளர்கள்தான். சந்தையில் அவர்கள் வாங்கிக் கொண்டிருந்த பழத்தின் விலை ரூ 2.00-லிருந்து 1.40-க்கு குறைந்ததோடல்லாமல், ரூ.1.50-க்கு உயர்தர பழவகை ஒன்றும் கிடைக்கிறது.  இவையெல்லாம் வெளியார் யாருடைய தலையீடும் இல்லாமல் சந்தையில் போட்டி ஏற்பட்டதன் விளைவு. முதலாளித்துவத்தால் கிடைக்கும் மிகச் சில பலன்களுள் இதுவும் ஒன்று!.ஆனால், வகாபிய முதலாளித்துவத்தின் இன்னொரு முகம் இதிலிருந்து வேறுபட்டது. பொதுநலம் கடுகளவுமின்றி, முழுக்க முழுக்கச் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பணக்கார முதலைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டது

எளிய பண்ட பரிவர்த்தனையில் உழைப்பதற்கு தேவைப்படும் சாதனங்களும், உழைப்பும் உற்பத்தியாளரைச் சார்ந்தே நடைபெற்றது. ஆனால் முதலாளித்துவத்தில் உற்பத்தி சாதனங்கள் முதலாளிக்குச் சொந்தமானவையாகவும், உழைப்பதற்கு என்று தனியே தொழிலாளர்களை, வைத்து உற்பத்தி நிகழ்த்தப்படுகிறது. எளிய பண்ட உற்பத்தியின் இறுதி நோக்கம் உற்பத்தியாளரின் சொந்த தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதாகும், முதலாளித்துவத்தில் ஆதாயத்தை அடைய வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் உற்பத்தி நடத்தப்படுகிறது. எனவே இயற்கை பொருளாதாரத்தில் பரிவர்தனையாக செய்யபப்பட்ட பண்டத்திற்கு, சாதாரணமாக பொருள் என்ற வகையிலேயே நிகழ்த்தப்படுகிறது, முதலாளித்துவத்தில் அப்பொருளுக்கு சரக்கு என்று பெயர்பெறுகிறது.

சரக்கு உற்பத்தி  என்பது சமூக வேலைப் பிரிவினையிலும், இதனோடு்கூட உற்பத்தி சாதனங்கள், தனிநபர்களிடம் தனியுடைமையாய் ஒன்றுகுவிவதன் மூலமும்  தோன்றுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், வாங்கப்பட்ட உழைப்புச் சக்தியும், முதலாளிக்குச் சொந்தமானவையாகும், அதனால் எதை உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு, எப்படி செய்யவேண்டும் என்பதை, முதலாளியே முடிவு செய்கிறார். இத்தகைய முதலாளியின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளி வேலை செய்கிறார். தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கை விற்று பணமாக்கி அதனை முதலாளி் சொந்தமாக்கிக் கொள்கிறார்.

முதலாளி, தொழிலாளிக்கு அவரது உழைப்புச் சக்தியின் மதிப்பிற்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதாவது சரக்கு என்ற முறையில் உழைப்புச் சக்திக்கு மட்டுமே இங்கு சம்பளம் தரப்படுகிறது.  தொழிலாளி தமது அவசியத் தேவைகளை நிறைவு செய்யப்பட்டால் தான் அவரால் தொடர்ந்து உழைக்க முடியும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு சாப்பட்டிற்கு செலவு செய்கிறார். அவரது ஆடைகள், காலணி போன்ற தேவையான பொருட்கள் தேய்மானம் அடைகிறது. வீட்டு வாடகைக்கு என குறிப்பிட்ட பணத்தை கொடுக்கிறார். முதலாளிக்கான புதிய உயிருள்ள சரக்கான வளர்ந்து வரும் குடும்பத்தையும் கவனிக்கிறார். இந்த செலவிற்கான பணத்தை மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக தரப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளி செலுத்தும் உழைப்பு இரு பகுதியாக செயல்படுகிறது.  அதாவது தொழிலாளி  வேலை நாளின் ஒரு பகுதியில் தமது உழைப்புச் சக்தியின் மதிப்புக்குச் சமமான மதிப்பை உற்பத்தி செய்கிறார். இதற்கு அவசிய உழைப்பு என்றழைக்கப்படுகிறது. உற்பத்தி செய்த மற்றொரு பகுதிக்கான மதிப்பை தொழிலாளிக்கு பணம் கொடுக்காமல்,  முதலாளி தனதாக்கிக் கொள்கிறார். இதற்கு உபரி உழைப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த உபரி உழைப்பே, உபரி மதிப்பை தோற்றுவிக்கிறது. அவசிய உழைப்பிற்கு மட்டுமே தொழிலாளி சம்பளம் வாங்குகிறார். உபரி உழைப்பிற்கு என்று எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தொழிற்சாலை முதலாளிக்குச் சொந்தமானவை, அங்கு உற்பத்திசெய்யப்பட் சரக்கு அனைத்தும் முதலாளிக்குச் சொந்தமானதாகிறது, ஆகவே இந்த உபரி மதிப்பு முதலாளிக்கு எவ்வித செலவுமில்லாமல் சென்றுவிடுகிறது.

                அதிகமான ஆதாயத்தைத் தேடி அலையும் முதலாளிகள், உற்பத்தி செலவைக் குறைக்க இரு முறைகளைக் கையாளுகிறார்கள்.

                முதலாவதாக, உழைக்கும் நேரத்தை நீட்டிப்பதின் மூலம் நடத்தப்படுவது. இது உபரி உழைப்பின் அளவை அதிகப்படுத்துவதால் கிடைக்கிறது. இதுபோன்ற நேரங்களில் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் பகைமையும், எதிர்ப்புகளும் அதிகமாகிறது. இதனை தவிர்ப்பதற்காக  இரண்டாம் வழிமுறையை கடைபிடிப்பதிலியே முதலாளி அதிகம் கவனம் செலுத்துகிறார். அதாவது மேம்பாடு அடைந்துள்ள இயந்திரங்களை பயன்படுத்த விளைகிறார். புதிய தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடைந்த இயந்திரத்தை உற்பத்தியில் ஈடுபடுத்துகிறார்.

                இயந்திரங்கள் அதிகம் புகுத்தப்பட்ட தொடக்க காலத்தில் தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அதனை அடித்து, உடைத்து துடைத்தெறிய முனைந்தனர். தங்களது வேலையை இயந்திரம் பறித்துவிடுகிறது என்று நினைத்தனர். பிற்காலத்தில் இயந்திரங்கள் தமக்கு எதிரானதல்ல, இவைகளை பயன்படுத்திவரும் முதலாளித்துவ அமைப்பு முறையே பகைமையானது என்பதை கண்டுகொண்டனர்.

தொழிற்சாலையில் புதிய இயந்திரம் புகுத்தப்படும் போது தொழிலாளர்களின் பணிகள் எளியதாக்கப்பட வேண்டும், ஆனால் முதலாளித்துவ உடைமை அமைப்பு, இதற்கு இடம் கொடுக்காமல் உழைப்பின் கடுமையை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

                உழைப்பின் உற்பத்தித் திறன், உயர்வதின் மூலம் இயந்திரங்கள் சமூகச் செல்வத்தை அதிகரிக்க செய்கிறது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் தனிச்சொத்துடைமை நிலவுவதால், கிடைத்திடும் பலன்கள் முழுமையையும் முதலாளிகள் தம்முடையதாக்கிக் கொள்கிறார்கள். இதனால் உருவான முரண்பாடு, முதலாளித்துவ அமைப்பு நெடுகிலும் தீர்க்கப்படாமல் தொடர்கிறது.

குறிப்பிட்ட பொருளுக்கு, சந்தையில் பொதுவாய் காணும் தேவையின் அடிப்படையில், அனைத்து முதலாளிகளும் சரக்கை உற்பத்தி செய்கின்றனர். தனது பொருளை சந்தையில் அதிகயாய் விற்கவேண்டும் என்கிற போட்டி முதலாளிகளுக்கிடையே நிலவுகிறது. இதன் விளையாய் அதிக ஆதாயத்தை அடைவதற்கும், சந்தையில் தமது பொருட்கள் மிகுந்த அளவு விற்பதற்கும், பொருளின் விலை, போட்டி உற்பத்தியாளர்களின் சரக்குகளின் விலையைவிட குறைவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, தங்களது சரக்கின் உற்பத்திச் செலவை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதனால் முதலாளிகள் புதிதுபுதிதான தொழில்நுட்பத்தையும், புதுமையான இயந்திரத்தையும், தமது தொழிற்கூடத்தில் புகுத்துகின்றனர்.

சந்தையின் தேவையை நோக்கி பல்வேறு உற்பத்தியாளர்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த திட்டம் ஏதுமில்லாமல் சரக்கை உற்பத்தி செய்திடுகிறார்கள். இதனால் உற்பத்தியில் அராஜகம்  ஏற்படுகின்றது. குறிப்பிட்ட சரக்கின் தேவை சந்தையில் உருவாவதைக் காணும் போது, பல்வேறு முதலாளிகள் அப்பொருளையே உற்பத்தி செய்திட முனைகின்றனர். கால ஓட்டத்தில் அப்பொருளின் தேவைவிட அதிகமாக உற்பத்தியாகிவிடுகிறது, அதனால் உற்பத்தியான சரக்கு சந்தையில் விற்பனையாகமல் தேங்கிவிடுகின்றன. இது போன்ற நேரங்களில் விலையில் கடுமையாக இறக்கம் காண்கிறது. அதானல் உற்பத்தியாளர், அச்சரக்கின் உற்பத்தியை குறைத்துக்கொள்கிறார், அல்லது முழுவதுமாக நிறுதிவிட்டு, வேறொரு சரக்கை உற்பத்தி செய்ய முயல்கிறார்.

ஆதாயம் பெருகுவதையே நோக்கமாக கொண்ட முதலாளிகளுக்கிடையே உள்ள  போட்டா போட்டியின் விளைவாக மிகுதியான சரக்குகள் உற்பத்தி செய்து விடுகின்றனர், அதற்கான சந்தையின் தேவையைப் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு மிகுஉற்பத்தி என்னும் சிக்கலில் வீழ்கிறது முதலாளித்துவச் சமூகம்.

                முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்பு பல நெருக்கடிகளை சமூகம் கண்டிருக்கின்றன. அது வறட்சி, சுனாமி, பெருவெள்ளம் போன்றவற்றால் ஏற்பட்டவை, அதாவது இவை இயற்கையின் சீற்றத்தால் உருவானவை. மிகு உற்பத்தி என்ற இந்த நெருக்கடியை முதலாளித்துவ அமைப்பில் மட்டும் தோன்றக் கூடியதாக காணப்படுகிறது.

                மிகு உற்பத்தியால் வாணிபம் சுருங்குகின்றன, சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் குவிகின்றன, இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் உற்பத்தி குறைத்தல், உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலை மூடுதல் போன்றவை ஏற்படுகிறது. தொழிலாளிகளின் வேலையிழப்பு தொடர்கிறது.

                இந்த மிகை உற்பத்தி என்பது,  ஒருவகையில் சார்பானதாகும். அதாவது உண்மையில் சமூகத்திற்குத் தேவையானது போக மீதமுள்ளதை, இந்த மிகைஉற்பத்தி குறிப்பிடவில்லை, இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, தொழிலாளர் மற்றும் பல வேலையாளர்களை வேலையிழக்கச் செய்து, அவர்களிடம் வாங்கும் சக்தியிழக்க செய்துவிட்டது. முதலாளித்துவம், தனியுடைமை முறையில் செயல்படுவதால், உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், பலன்களை கையகப்படுத்தும் தனிவுடைமை பெற்ற முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே காணும் முரண்பாடாய் விளங்குகிறது.  

                முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்பட்ட அராஜக போக்காலும், மூலதனத்தின் உழைப்பைச் சுரண்டுவதின் விளைவுகளாலும், தொழிலாளிகளிடையே வாங்கும் திறனற்றுப் போயிற்று.  முதலாளித்துவத்தில் உற்பத்தியின் நோக்கம், மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதல்ல, உழைப்பாளியின் உபரி உழைப்பை சுரண்டி மூலதனத்தை பெருக்குவதே ஆகும். 

                முதலாளித்துவத்தின் சரக்கு உற்பத்தியானது, நுகர்வுடன் தொடர்புடையதாகும். நுகராமல் சந்தையில் சரக்கு குவிந்து கிடக்கும் காலகட்டத்தில் உழைப்பாளியும். மக்களும் நுகரமுடியாமல், வேலையிழந்து, பட்டினியில் கிடந்து  அவதிபடுகின்றனர்.

                முதலாளித்துவ அமைப்பில் மிகுஉற்பத்தி, நெருக்கடி, தேக்கம், ஏற்றம், செழுமை என்ற சுற்று மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. வீழ்ந்து போகாமல் தாக்குப்பிடித்த, தொழில் நிலையங்கள் புதிய ஏற்றம் பெற்று, புத்துயிர் உற்று வளர்கிறது. மீண்டும் முதலாளித்துவத்தில் திறனுடைய தேவையை கணக்கில் எடுக்காமல், மிகுஉற்பத்தி என்ற நிலையை நோக்கிச் செல்கிறது. மீண்டும் சந்தை சுருங்குதல், சரக்குகள் சந்தையில் குவிதல், உற்பத்தியில் வீழ்ச்சி, உற்பத்தி நிறுத்தம், தொழிற்கூடம் மூடுதல் என்ற பழைய நிலைமைகளை விட, கடுமையான நிலைமைகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது.

வகாபிய முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பணம் படைத்த முதலாளிகளும் மெகா கார்ப்பரேட் நிறுவனங்களுமே 'எதை உற்பத்தி செய்வது?, எதை யாருக்கு வினியோகம் செய்வது?' போன்றவற்றையும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளையும் தீர்மானிக்கிறார்கள். இந்த முடிவெடுத்தல்களில் அவர்களைச் செலுத்துவது ஒன்றேதான்: லாபம், அதிக லாபம், மேலும் மேலும் லாபம்.

நாம் இதுவரை பார்த்த 'தனியார் பொருளாதாரச் சுதந்திரம்' முதலாளித்துவத்தின் உயிர் மூச்சு என்றால், அதன் உடலெங்கும் ஓடும் இரத்தம் என வட்டியைச் சொல்லலாம். பொருளாதார இயந்திரம் சிக்கலில்லாமல் இயங்க உதவும் மசகு எண்ணெய்தான் வட்டி என முதலாளித்துவ ஆதரவாளர்கள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். ஆனால் உண்மையில், பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் ஏழைகள் பரம ஏழைகளாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மென்மேலும் அதிகரிக்க வகை செய்யும் கருவியே வட்டி.ஆனால் வகாபிய முதலாளித்துவத்தில் வட்டிக்கு பதிலாக கமிஷன் என்ற முறை நடைமுறையிலிருக்கிறது.ஆனால் இதன் செயல்பாடு வட்டியை போன்றதே.இன்றைய பெட்ரோ டாலர் அரசியல் முறையை தோற்றுவித்த்து வகாபிய பொருளாதார முறை என்றால் அதில் சந்தேகமேயில்லை.
1999ல் கச்சா எண்ணெயின் விலை சுமார் $16 அமெரிக்க டாலர் என்னும் அளவிலே இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக கருதபடுவன, இராக்கிய எண்ணெய் வயல்களில் அதிகமான உற்பத்தியும், ஆசிய பொருளாதார நெருக்கடி நிலையும் ஆகும். கச்சா எண்ணெயின் விலை, பிப்ரவரி 2005 வாக்கில் ஒரு பேரலுக்கு(பீப்பாய்க்கு) ஐம்பது அமெரிக்க டாலர் என்னும் அளவில் இருந்தது. அதுவே பிப்ரவரி 2008ல் ஒரு பேரலுக்கு நூற்றிப் பதினேழு டாலர் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் என்பது 42 அமெரிக்க கேலன்கள், ஒரு கேலன் சுமார் மூணே முக்கால் லிட்டர். ஆக, ஒரு பேரல் என்பது சுமார் 160 லிட்டர்கள்.
சில ஆண்டுகளுக்குள்ளாகவே விலை இவ்வளவு தூரம் கூடியும் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கும் வழிகளைக் கையாளவில்லை. எண்ணெய்ப் போக்குவரத்துக்குப் பயன்படும் கப்பல்கள் புதிதாய் நிர்மாணிக்கப் படவில்லை. எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைகள்  புதிதாகக் கட்டப்படவும் இல்லை. இவை எல்லாமே இந்த எண்ணெய் வளம் குறைந்து வருகிறது என்பதற்குச் சான்றுகள் என்று தங்கள் வாதத்திற்கு வலுச் சேர்க்கிறார்கள் ஹப்பர்ட் உச்சக் கோட்பாட்டுக்காரர்கள். நிலத்தடியில் இருந்தால் தானே எண்ணெய் உற்பத்தியைக் கூட்ட முடியும். அதனால் தான் விலை உயர்வடைந்தாலும் உற்பத்தி கூடவில்லை என்கின்றனர்.
ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள கிஷ் தீவின் தனது புதிய எண்ணெய் விற்பனை சந்தையை அமைத்துள்ளது. கணிணியும் மென்பொருட்களும் நிறுவப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால் சில அழுத்தங்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கும் என்பது சொல்லித்தான் அறிய முடியுமா என்ன?. மே 5ந்தேதி மிளிஙி பதிவு செய்யப்பட்டு விட்டது. சந்தை துவங்கும் நாள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் மாபியா கும்பல்களின் ஊடுருவலும் உலக நாடுகளின் அழுத்தமும் ... ... காரணம் என சிலரால் சொல்லப் படுகிறது,2007ல் எண்ணெய் 60 டாலர்களுக்கு கொள்வரவு செய்யப்பட்டது. டாலரின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைவதை அனைவரும் அறிவோம். தனது சந்தை மூலம் வெறும் யூகங்களை  முன்னிறுத்தி எண்ணெயின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. 60 டாலர்களுக்கு விற்ற எண்ணெயை 140 டாலருக்கு விற்றால் டாலரின் தேவை 230விழுக்காடுகள் அதிகரிக்கும். சமீபத்தில் எண்ணெய் விலையேற்றத்திற்கு 60சத காரணம் வெறும் யூகங்களைக் கொண்டு செய்யும் முன் வியாபாரம்தான் எனக் கூறியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக மசகு எண்ணையின் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் வளைகுடா நாடுகளின் உதவியாலே முன்னெடுக்கப்படுகிறது.தற்சமயம் பொருளாதார மந்தம் முற்றிலுமாக மாறிவிடாத சூழலில் இன்னும் சீனா,ஜப்பான்,மேற்கத்திய நாடுகளில் பொருளாதார மந்தம் நீடிப்பதினால் மசகு எண்ணையின் அரசியல் சற்று ஓய்வெடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.ஆனால் விரைவில் அதன் அரசியல் முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் முழுவெற்றியை அடைந்துவிடும்.முடிவாகச் சொல்வதென்றால் அமெரிக்கா தனது டாலரை அழிவிலிருந்து காக்க, உலகில் டாலருடைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்திக் கொள்ள எந்த நாட்டையும் அழிக்கத் தயங்காது.அதற்கு சவுதி போன்ற நாடுகள் துணை நிற்கின்றன.இது முதலாளித்துவம் தனது இருப்பை மறு உற்பத்தி செய்தி கொண்டிருக்கும் என்பதன் வெளிபாடாகும்.வகாபிய முதலாளித்துவமும் அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் அடிவருடியாகவே இருக்கிறது. 

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...