Sunday, July 07, 2002

கேளன்

கேளன்
மலையாள மூலம்: இ.ஹரிகுமார்
Sci Fi BioHazard Wallpaper Pictures, Images and Photos

இரவு ஒன்பது மணி. தினசரி வழக்கப்படி நிறைந்த போதையில் கேளன் கள்ளுக்கடையிலிருந்து இறங்கினான். பேருந்து நிறுத்தத்தை நெருங்கியபோது இரண்டு பெண்கள் நிற்பதைப் பார்த்தான். இரவு எட்டு மணிக்குப் பிறகு பேருந்து நிறுத்தத்தில் ஒற்றையாகவும், இரட்டையாகவும் நிற்கும் பெண்களைப் பார்த்து அனுபவப்பட்ட கேளன் அவர்களை நன்றாகக் கூர்ந்து கவனித்தான். பேருந்து நிறுத்தத்தின் எதிரில் தெரு விளக்கு எப்போதும் எரியாது என்பது நிச்சயம். அது என்ன காரணத்தினால் என்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. நினைப்பதில்லை. மற்ற விளக்குகள் சுடர்ந்து எரிகின்ற போது பேருந்து நிறுத்த விளக்கு மட்டும் ஏனிப்படி? என்றேனும் ஒருநாள் அது எரியும். அடுத்த நாள் முதல் ப்யூசாகிக் கிடக்கும்.

இருவரும் இளவயதுக்காரர்கள். அவன் யோசித்தான். காரிய சாத்தியம் குறித்த சிந்தனையுடன் அவன் இருளில் நிற்கும் உருவங்களின் வடிவ நேர்த்தியைக் கூர்ந்து ஆராய்ந்தான். ஒருத்தி கொஞ்சம் கனத்த சரீரமாகத் தெரிந்தாள். மற்றவள் மெலிந்திருந்தாள். மிகவும் சிறுவயதுக்காரி. ‘எப்படியிருந்தாலும் ரெண்டாவது வேண்டாம். மூத்தது போதும்.’ அவன் அவர்களின் பக்கம் நெருங்கினான். எப்படித் தொடங்குவது? காரியமெல்லாம் சரிதான். அவன் இப்படிப்பட்ட காட்சிகளைக் காணத்தொடங்கி கொஞ்ச காலம் ஆகிவிட்டது. நந்தினி அவனைப் புறக்கணித்துச் சென்று ஓராண்டு முழுதாக முடிந்துவிட்டது. அன்று சொன்னான்: “இந்தக் கேளனுக்கு ஒரு பெண் போனா ஆயிரம் பெண்ணுங்க கிடைப்பாங்கடி.”

“எனக்கு மட்டும் ஆம்பளை யாரும் அகப்பட மாட்டங்களா...? நா போறேன்.” நந்தினி ஐந்து வயது மஞ்சுவை இழுத்துக் கொண்டு நடந்தாள்.
வீட்டு வாசலில் நடப்பதை வேடிக்கை பார்த்து நின்ற இளம் வாலிபன் கூட அவள் வெளியேறி நடக்கும் அதிசயத்தில் திறந்த வாயை கள்ளுக்கடையில்தான் போய் மூடினான். அது வாயோட விஷயம். மனித உடம்பில் வேறு அவயங்களும் இருக்கின்றன. அவைகளைக் குறித்தும் பார்க்க வேண்டுமல்லவா? அதனால் தான் கேளன் பேருந்து நிறுத்தத்தை அடுத்த இருளில் உருவங்களை ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தான். ஆயிரக்கணக்கிலில்லை. நான்கு, ஐந்து எண்ணிக்கையில் மட்டும் இன்னமும் வாழ்க்கை இருக்கிறதல்லவா?

கேளன் அவர்களை நெருங்கிச் சென்றான். நெருங்கியபோது அவன் மிகவும் குழப்பமடைந்தான். மூத்தவள் நல்ல பெண்தான், சரி. ஆனால் மற்றவள்? சிறு வயது. அழகியும். ‘யாரைத் தேர்ந்தெடுப்பது’ அவன் தனக்குள்ளாக ஒரு தேர்வு நடத்தினான். மூத்தவள்தான் ஜெயித்தாள்.
அவன் அவளிடம் சொன்னான்: “வா போகலாம்.”

அந்தப் பெண் அதிசயமாக அவனைப் பார்த்தாள். அவன் பக்கம் வருவதைப் பார்த்ததும் ‘ராத்திரி தங்குறதுக்கு ஒரு இடம் தேவைப்பட்ற அவசியத்தப் புரிஞ்சிதா வரச்சொல்றான்’ என்னும் நினைவில் அவள் நடக்க ஆரம்பித்தாள். நகரத்தில் நிறைந்து கிடக்கும் சேறு சகதிகளும், ஏமாற்றும் பள்ளம் படுகுழிகளும் அவளுக்குத் தெரியாது. பேருந்து நிறுத்தத்தில் எப்படி இரவைக் கழிப்பது என்றுதான் அவள் கேட்க நினைத்தாள். அப்போது தான், அவன் இவளிடம் சொன்னான்: “வா போகலாம்.”

அவன் அந்த இளம்பெண்ணைப் பார்த்தான். அவள் கண்களில் பயம் தெரிந்தது. அந்த மனிதனின் சுவாசத்தில் கள் நாற்றம் வீசுவதை அவள் உணர்ந்து கொண்டாள். பள்ளியிலிருந்து திரும்பும் பேருந்து பயணங்களில் அவளுக்கு அந்த மணம் அனுபவமாகியிருந்தது. எதுவும் பேசாமல் அவள் அம்மாவுடன் சமமாக நடக்க ஆரம்பித்தாள்.

பேருந்து நிறுத்தத்தின் இருளைப் பின்னுக்குத் தள்ளிய அடுத்த தெருவிளக்கின் கீழ் சென்ற போது, கூட அழைத்துப் போகும் பெண்களை நன்றாகப் பார்க்கும் எண்ணத்தில் கேளன் திரும்பிப் பார்த்தான் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு. இரண்டு பெண்கள். அவன் கண்களை விழித்துக் கூர்ந்துப் பார்த்தான். ‘ஏ, இது குடிச்சதனால் ஏற்பட்ட கேடு இல்ல. ரெண்டுதான். நான் கூப்பிட்டது பெரியவளை மட்டும். சிறியவளைக் கவனிக்கல.’

‘அடக்கடவுளே! நான் ரெட்டிப்பா பணம் கொடுக்க வேண்டி வருமே. ஆனா ரெண்டு பேரோட ஒண்ணா இருக்கறது நல்லாதா இருக்கும். அவங்களுக்கு இருக்கும் தாக்கத்துக்குச் சரியா சமாளிக்கும் சக்தி கேளனுக்கு உண்டு.’ ‘தாக்கம்’ என்ற வார்த்தை ஏதோ ஹிந்தி சினிமாவிலிருந்து கிடைத்தது. அது அவன் எப்போதும் தனது பாலியல் திறத்தோடு சம்பந்தப்படுத்தி சொல்லிக் கொள்வது.

“உங்க தாக்கத்துக்குச் சரியான சமாளிப்புச் சக்தி எனக்கு உண்டு” அவன் அவர்களை நோக்கிச் சொன்னான்.

“என்ன?”

“இப்போ இது புரிஞ்சா போதும். வேள வரும் போது எல்லாம் புரியும். புறப்படலாம்.”

தாய் தலையை ஆட்டினாள். புலி வாலைப் பிடிச்சிட்டோமா? தனக்கு முன்னால் வேறு வழிகளும் தெரியவில்லை. சாயங்காலத்திலிருந்து நிற்க வேண்டியதாயிடுச்சி. மகளின் இண்டர்வியூ முடியறப்ப நான்கு மணியாயிடுச்சி. எவ்வளவு சிரமமாயிடுச்சி அங்க? இண்டர்வியூ முடிஞ்சி ஒரு ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுத் திரும்பினதும் கிராமத்துக்கான பஸ் ஸ்டாப் விசாரிச்சதுல தெரிஞ்சது, கடைசி பஸ் அஞ்சி மணிக்கு, அந்த பஸ்ஸூல போனா எப்படின்னாலும் ரெண்டு பஸ் ஏறி இறங்கி மாறி கிராமத்த போய் சேர்றதுக்குள்ள ராத்திரி பதினொன்னு ஆயிடும். அந்த இடத்துக்கு ராத்திரில போறது சரியா இருக்காது. அதனாலதா குடும்பஸ்தங்க யாராவது தெரிஞ்சா அவங்களோட இங்கயே தங்கிடலாம்னு நினைச்சது. கடைசி பஸ் உள்ள தலைகாட்ட முடியாத அளவுக்கு கூட்டமா இருந்தது.

இருட்டத் தொடங்கிய பிறகுதான் தான், செய்த தவறு அவளுக்குத் தெளிவாயிற்று. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். அந்தப் பேருந்தில் தான் எப்படியாவது ஏறியாக வேண்டும். குடும்பஸ்தர் ஒருவரும் பேருந்து நிறுத்தத்ததில் இல்லை. பேருந்திலிருந்து யாரும் இறங்கவுமில்லை. அது மட்டுமல்ல. பிரச்சனை பண்ணுபவர்கள் பக்கத்தில் நெருங்குவதும், விலகுவதுமாக இருந்தார்கள். ஐயோ நகரத்தில்தான் எத்தனை தொல்லைகள்? அவ்வாறு இருக்கும் போதுதான் அந்த மனிதன் வந்து சொன்னான். “வா போகலாம்”. இனி மேலும் அங்கே நிற்பது குழப்பமுண்டாக்கும் என்று தோன்றியது. இருவரும் ஒருமித்த முடிவுடன் கேளனுடன் ஒன்றாக இறங்கி நடந்தனர். ‘இந்த ஆள் வீட்டுல மனைவியும், குழந்தைகளும் இருப்பாங்களா?’ வீட்டில் யாரும் காத்திருக்கவில்லை.

‘எனக்கு மகளும், மகளுக்கு நானும் மட்டும். ரெண்டு வருஷங்களுக்கு முன்ன கணவன் இறந்தப்பறம் இப்படித்தா இருக்கு. இவ்வளவு கஷ்டப்பட்டு அர்த்த ராத்திரியில் கிராமத்துக்குப் போக அவசர காரியம் எதுவுமில்ல. மகளுக்கு இந்த வேலை கிடைச்சிட்டா கிராமத்திலிருக்கற நான்கு சென்ட் மனையை குறைஞ்ச விலைக்காவது வித்துட்டு இங்க ஒரு சின்ன வீடு வாங்கணும். அத்தோட கிராமத்தோட உறவு முடிவுக்கு வந்துடும். எல்லாத்தையும் கெட்ட கனவுன்னு மறந்துடலாம்.”

இரண்டு பெண்கள் என்பது கேளன் மனதைக் குழப்பத் தொடங்கியிருந்தது. இதுவரை இவ்வாறு ஏற்பட்டதில்லை. அதனால்தான் என்ன செய்வது என்பதும் புரியவில்லை. வயதும் நாற்பத்தைந்தாகி விட்டது. முன்பு போல என்றால் தைரியமாகச் சொல்லலாம். வீட்டுக்கு நடக்கும் போது அவன் அவர்களுக்கு இணையாக நடந்தான். ‘இவங்க இப்படிப்பட்ட தொழில் செய்றவங்களா? ஆனா இவங்களும் மனுஷங்க தானே? சாதாரண மனுஷங்களுக்கு கொடுக்கற மரியாதையை இவங்களுக்கும் கொடுக்க வேண்டாமா? சில நேரங்கள்ல அதுக்கு பதிலடி கிடைக்கவும் கிடைக்கும். ‘நான் இவங்கள அழைச்சி வந்தது எதுக்காக? உண்மையைச் சொல்லியிருக்கலாமோ? பட்டு சிட்டுனு காரியத்த முடிச்சி பணத்தக் கொடுத்து அப்புறப் படுத்தணும் இவங்கள...’ அதில் பெரும்பாலும் பதிலடி கிடைக்குமென்றாலும் அவன் அந்தக் காரியத்தை நிறுத்தியதில்லை.

பல பெண்களுக்கு அதிர்ஷ்டமேற்பட்டது. அவர்கள் பதில் சொல்வார்கள். சிலர் தொலைபேசி எண்களையும் தருவார்கள். “அண்ணன் பெரிய நண்பர்களுக்கு இந்த நம்பரைக் கொடுக்கலாம். நல்லவங்களா பார்த்துக் கொடுக்கணும். மோசமானவங்க கிடைச்சா அந்த நாள் அவ்வளவு தான்.”
அப்படிப்பட்ட பெண்கள் கிடைத்தால் நல்லது. நாம் கொடுக்கும் முதன்மையாகத் தோன்றும். அவர்களெல்லாம் நேர்மையாகத் தொழில் செய்பவர்கள். மூன்றாவதாக ஒரு ஆள் குறுக்கிட்டு கமிஷன் வாங்க மாட்டான். அப்படிப்பட்ட நபர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும்.
கேளன் நடையை மெதுவாக்கி பின்னால் நடந்து வரும் பெண்களின் பக்கம் சென்றான். ஒரு உரையாடலைத் தொடங்குவதற்காக பக்கம் நெருங்கியவன் மூத்தவளிடம் கேட்டான்:

“உங்க பேர் என்ன?”

“என் பேர் சுமதி. இவ பேர் சுஸ்மிதா. நீங்க...”

“என் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்” இந்தப் பெண்களிடத்தில் விபரங்கள் சொல்ல வேண்டியதில்லை. தலையில் ஏறுவார்கள்.

“சரி”

“என் வீடு அதோ தெரியுது பாருங்க.” தனித்திருந்த வீட்டைச் சுட்டிக்காட்டி கேளன் சொன்னான்.

பதில் இல்லாத மற்ற கேள்விகள் சுமதியின் உதடுகளுக்குள் அடங்கிவிட்டன. “வீட்டுல யார் யார் இருக்கிறாங்க? என்ன வேலை செய்யறாங்க....?
அவர்களுக்கிடையே இடைவெளி அதிகமாயிற்று. வாசற்கதவைத் திறந்த கேளன் வீட்டினுள் நடந்தான். கேளனைத் தொடர்ந்தவர்களாக பெண்களும் வீட்டினுள் நடந்தார்கள். வாசல் விளக்கின் பட்டனை அழுத்திய அவன் சட்டைப் பையிலிருந்து சாவியை வெளியிலெடுத்தான். கதவின் வெளிதுவாரத்தில் சாவியை நுழைக்கும் போது சுமதி கேட்டாள்:

“வீட்டுல மனைவியும், குழந்தைகளும் இல்லியா?”

திறக்காமல் சாவி அப்படியே திரும்பி நின்றது. அவன் குனிந்த நிலையில் உறைந்து போனான். அந்தக் கேள்வி அவனைச் சிதறடிப்பதாக இருந்தது. அது புதைத்து மூடிவைத்த நினைவுகளைத் தேவையில்லாத நேரத்தில் வெளியே கொண்டு வந்தது. அவன் யோசனையிலாழ்ந்தான். ‘இவ எதுக்காக என் மனைவியைக் குறிச்சி விசாரிக்கிறா?’ அதைக் குறித்து யோசித்த போதுதான் புரிந்தது. ‘காரியமெதுவும் நினைக்கற மாதிரி இல்ல’ என்று கவலைப்பட்டான். ‘நான் ஏமாந்துட்டேன்’ என்றும் நினைத்தான். கதவைத் திறந்து சுவர்ப் பொத்தானை அழுத்தி விளக்கை எரிய வைத்த அவன் சொன்னான்:

“உள்ளே வா”

அம்மாவும், மகளும் உள்ளே வந்தார்கள். சாதாரணமான நல்ல அறை. அவர்களின் வீடு போலத்தான் இருந்தது. அந்த அறைக்கு இரண்டு கதவுகள். ஒன்று சமையலறைக்கு என்பது புரிந்தது. மற்றது படுக்கை அறைக்கு கதவாக இருக்க வேண்டும். அவன் தெளிந்த வெளிச்சத்தில் ஆராய்ந்தான். சுமார் இரண்டு நிமிட ஆராய்ச்சிக்குப் பிறகு அவன் கேட்டான்:

“நீங்க அம்மாவும், மகளுந்தானே?”

சுமதி தலையாட்டினாள். அவளும் அவனை ஆராய்ந்தாள். கனத்த உடம்பு இல்லை. தலைமுடி நரைக்கத் தொடங்கியிருந்தது. சிறிய மீசை. கன்னங்கள் உலர்ந்து ஒடுங்கியிருக்கின்றன. வேறு எதையும் முடிவு செய்ய இயலவில்லை. ‘மனைவி பிரிஞ்சி போய் எவ்வளவு நாளாச்சோ? கிராமத்துக்குப் போயிருக்கணும்’

“அப்போ எதுக்காக நீங்க பஸ் ஸ்டாப்புல நின்னுட்டிருந்தீங்க?”

“மனைவி எப்போ வருவாங்க?”

அந்த மனிதனுக்கு மனைவி இருப்பாள் என்னும் யூகத்தில்தான் அவள் இதைக் கேட்டாள். வீடு இருந்த நிலையிலும், அந்த மனிதனின் நடவடிக்கையிலும் ஒரு பெண்ணுக்கு மட்டும் ஏற்படும் ஏதோ ஒரு வித்தியாச உணர்வு அவளுக்குள் ஏற்பட்டிருந்தது.

“அவ இனிமே வர மாட்டாள்.”

“ஏன்?”

“அவ சண்டை போட்டுட்டுப் போயிட்டா. என் வேலை அவளுக்குப் போதல. என்னால முடிஞ்சதத்தானே செய்ய முடியும்? அவளுக்கு அது போதல. அதனாலதினம் சண்டைதா.”

“நீங்க குடிக்கறதாலயா?”

“நான் தொட்டதே கிடையாது. அவள் போன துக்கப்பறந்தா பழக்கம் அவ என் மகளையும் சேர்த்து இழுத்துட்டுப் போயிட்டா. அதிருக்கட்டும் நீங்க எதுக்காக அந்த பஸ் ஸ்டாப்பில நின்னுட்டிருந்தீங்க?”

“மகளின் இண்டர்வியூ முடிஞ்சப்போ நேரம் சாயங்காலம். பஸ் பிடிச்சி கிராமத்த சேர்றதுக்கு மணி பன்னெண்டு ஆயிடும். அப்ப என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டிருந்தபோது நீங்க போலாமான்னு கூப்பிட்டீங்க. பக்கத்துல ஆளுங்க வேற தொல்லை கொடுக்க ஆரம்பிச்சிருந்தாங்க. அந்த நேரம் நேர்மையா தெரிஞ்ச ஒருத்தர் வந்து கூப்பிட்டப்போ ராத்திரி தங்க பிரச்சனையில்லன்னு தீர்மானிச்சேன். நாங்க காலையில சீக்கிரமே கிளம்பிடுவோம்.”

“யார் உங்கள போகச் சொன்னது?”

சுமதியின் பேச்சு எங்கேயோ உதைத்தது. ‘நானும் ஒரு காலத்துல யோக்கியனாயிருந்தான். அப்படின்னா இப்ப இல்ல. எப்படிப்பட்ட யோக்யன்? ராத்திரில வெளிச்சமில்லாத பஸ் ஸ்டாப்புல காத்திருந்த பொம்பளைங்களை அழைச்சிக்கிட்டு வீட்டுக்குப் போற யோக்யன்? யாரும் காத்திருக்காத காலியான வீட்டுக்கு ஒத்தையில தான் மட்டும் தனிமையில் இருக்கற வீட்டுக்கு?’

எத்தனையோ பேர் அவனோடு வந்திருக்கிறார்கள். ஆனால், ஒருத்திகூட தங்கினதில்ல. அவர்கள் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு, கனவுகள் எதையும் வழங்காமல் இடத்தைக் காலி செய்வார்கள். இப்போது ‘ஒரு ராத்திரி தங்கிப் போக வந்ததா’ இதோ ஒரு பெண் சொல்கிறாள். அவர்கள் தாயும் மகளும், நான் இப்பவும் நேர்மையானவன்தான். நேர்மையானவன் இல்லன்னா எதுக்கிந்த அவஸ்தை? யார்கிட்ட எப்படி நடந்துக்கனுன்றது எனக்கு நல்லா தெரியும்.’

“நீங்க சாப்பிட்டாச்சா?” தாய் கேட்டாள்.

‘சாப்பாடு?’ அவன் யோசிக்க ஆரம்பித்தான். அவனுடைய இரவு உணவு என்ன? அப்படியொன்றுண்டா?

“நா இப்போ சமைச்சிட்றேன். அதுக்குள்ள தூங்க ஆரம்பிச்சிட்டீங்களே!”

“தூக்கம்! அதுவும் சாப்பாடு மாதிரிதா. சில நாட்கள்ல மட்டும். இன்னிக்கு மட்டும் எதுக்காக அதை ஒரு திருவிழாவாக்கணும்? அவன் சொன்னான். “எனக்கெதுவும் வேண்டாம்.”

சமையலறைக்குப் போகத் திரும்பிய அம்மாவும், பின் தொடர்ந்த மகளும் திரும்பி நின்றார்கள். அவன் புரிந்து கொண்டான். ‘இந்தப் பாவப்பட்ட சாதுவான பெண்களும் சாப்பிடல. பாவப்பட்டவங்க. இவங்க எதுக்காகப் பட்டினி கிடக்கணும்?’

“சமைச்சிக்கோ, மூணு பேருக்கும். காய்கறி எதுவும் இல்லை.”

“அது பரவால்ல.”

அவன் கைவைத்த நாற்காலியில் உட்கார்ந்தபடி மயங்கிய நிலையிலிருந்தான். கனவுகளில்லாத சிறு வயதுக்கால உறக்கங்களில் எப்போதும் கண்டறிந்த பூக்களும், வானவில்லும் இல்லாத வெறும் இருள் மட்டுமே நிறைந்த உறக்கம்....

“மாமா!”

அந்த இளம் பெண்ணின் அழைப்புக்கேட்டு கேளன் விழித்துக் கொண்டான். அவள் நெருங்கி நின்று அவனை உலுக்கிக் கூப்பிட்டாள். “அப்பா! என்ன தூக்கம் இது!” சோற்றையும், குழம்பையும் மேஜையின் மேல் எடுத்து வைத்தாள். நீண்ட காலத்திற்குப் பிறகு வீட்டில் சமைத்த உணவின் வாசனை அவனைத்தேடி வந்தது. மூக்கு விடைக்க அந்த மணத்தை நிறைத்துக் கொண்டு அவன் எழுந்தான்.

எதையெதையோ யோசித்தபடி இரவு நீண்ட நேரத்திற்குப் பிறகு கேளன் படுத்தான். சாப்பிடுவதற்கு முந்தைய சிறிய உறக்கத்தின் காரணத் தினால் பிறகு அதிகநேரம் அவனுக்கு உறக்கம் வரவில்லை. ‘மகள் ஒரு பத்து வருஷங்க போனா இந்த இளம் பெண்ணைப் போல பெரியவளா இருப்பா என்று அவன் நினைத்தான்.

படுக்கையறையில் தாயும், மகளும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள். அவர்களின் கதவு கொஞ்சம் சாத்திய நிலையில் திறந்தே கிடந்தது. அது அவனை மகிழ்ச்சிப்படுத்திற்று. தன் மீதான நம்பிக்கையை அது காண்பிக்கிறது. வெளி அறையின் அருகில் போட்டிருந்த பெஞ்ச்சில் படுத்து அவன் எப்போதோ உறங்கிப்போனான்.

“அம்மா எங்க மகளே?”

காலையில் மகள் தேநீர் கொண்டு வந்த போதுதான் கேளன் எழுந்தான். அவள் குளித்து நெற்றியில் குறியிட்டிருந்த காரணத்தில் கூடுதல் அழகுடன் தெரிந்தாள். நேற்று அணிந்திருந்த சுடிதாரை மாற்றி நீண்ட பாவாடை, இரவிக்கையில் இருந்தாள் இளம் பெண்.

“அம்மா கஞ்சியும், துவையலும் செஞ்சிட்டிருக்காங்க. என்ன சமைக்கலாம்னு கேட்க கொஞ்ச நேரம் காத்திருந்தாங்க. மாமா நல்ல தூக்கத்திலிருந்தீங்க.”

அவன் சிரித்தான். மூன்று பேரும் மேசையை நெருங்கியமர்ந்து தேங்காய்த் துவையலுடன் கஞ்சியை குடிக்கும் நேரத்தில் கேளன் தனது நல்ல காலங்களை நினைத்துக் கொண்டான். ‘ஆனா அப்படியொன்னும் எனக்கு வாய்க்கல. வாய்ச்ச வங்க கூடுதல் புண்ணியம் செய்தவங்க.’

“எப்படி அண்ணனுக்கு நன்றி சொல்றதுன்னு தெரியல.”

‘நன்றி சொல்ற அளவுக்கு நா ஒண்ணும் உங்களுக்கு அப்படி எதுவும் செய்துடலியே’ அவன் தனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டான். நன்றி என்னும் வார்த்தையைச் சொல்ல வேண்டியவள் வேறு ஒருத்தியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவள் சொல்லவில்லை.
பேருந்து எட்டரை மணிக்கு. அதில் ஏறி அமரும் முன்பு அம்மா சொன்னாள்:

“அண்ணா, மகளுக்கு இங்கே வேல கிடைச்சிட்டா நாங்க இனிமேலும் வருவோம். இப்போ புறப்பட்றம்.”

பேருந்து புறப்பட்டுப் போன பிறகும் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான் கேளன். பிறகு முகத்தில் இரண்டு நாள் வளர்ச்சியைக் கண்டிருந்த ரோமங்களைத் தடவியபடி திரும்பி நடந்தான். போனவர்கள் நிறைய கனவுகளை அவனது வாழ்க்கையில் தூவியிருக்கிறார்கள். ‘அவை கனவுகள்தானா? அல்லது ஏமாற்றப்பட்ட ஆத்மாவின் தேம்பல்களா?’ என்னவென்று அறிய இயலவில்லை.

நன்றி : ஜனசக்தி மலையாள வார இதழ்

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...