Saturday, February 28, 2009

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு




[ இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் சண்டைகளால் வீடிழந்து, நாடிழந்து, உயிரிழந்து, உற்றார்-உறவை இழந்து நிற்கும் மக்களில், பிறந்தது முதல் சண்டையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையும் உருவாகிவிட்ட சூழலில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிறந்த துன்பங்களுக்கு காரணமான இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த நமது விருப்பு வெறுப்பற்ற ஆய்வின் முதல் பகுதி இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழர் பிரச்னையை முன் வைத்து எல்.டி.டி.ஈ அமைப்பினை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் என நாம் முன் வைத்துள்ளவை 'ஈழ விடுதலை - நமது கடமை என்ன?' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்]

இலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கைத் தமிழ் போராளிகள் குழுவான எல்.டி.டி.ஈ. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக்கியப் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளது. கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றுடன் வடக்குப் பகுதியையும் இலங்கையின் பிற பகுதியையும் இணைக்கும் கண்டி - யாழ்ப்பாணம் சாலை முல்லைத்தீவு நகர் ஆகியவை எல்.டி.டி.ஈ. கட்டுப்பாட்டில் இருந்து சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளன.

அதற்கு ஆயுதம் மற்றும் நிதி வந்து கொண்டிருந்த வழிகள் அடைபட்டுப் போயுள்ளன. உலகில் எந்தவொரு நாடும் எல்.டி.டி.ஈ. அமைப்பு அறிவித்த தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காததோடு இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் அந்த அமைப்பின் மீது தடையும் விதித்துள்ளன. இந்நிலையில் மூச்சுவிடும் இடைவெளி கூட அதற்கு கிடைக்காவண்ணம் இராணுவத்தின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. போர்ச்சூழலில் சிக்கிக் கொண்டுள்ள இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வழக்கம்போல் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இதனை ஒட்டி பல அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதாவது நாடாளுமன்றவாத அரசியலில் தாங்கள் ஆதாயம் பெறவும் அல்லது தங்களுக்கு எதிராக உள்ள கட்சிகள் இவ்விசயத்தை கையில் எடுத்து அரசியல் ஆதாயம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவும் பெரிய அரசியல் அமைப்புகள் இதனைக் கையில் எடுத்துள்ளன. எத்தனை உக்கிரமாகவும் உரத்தகுரலிலும் அவை தங்களது கருத்துக்களை முன் வைத்தாலும் அவற்றின் நோக்கம் வெளிப்படையானது. அதாவது அரசியல் ஆதாயமடைய அவர்களின் கைகளில் உள்ள பல பிரச்னைகளில் இலங்கைத் தமிழர் பிரச்னையும் ஒன்று என்பதே அது.

அப்பாவி இலங்கைத் தமிழர்கள் இச்சண்டையினால் உயிரிழக்கும் போக்கிற்கு எதிரான மனநிலையும் இதனால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள இலங்கைத் தமிழ்மக்கள் மீதான அனுதாபமும் தமிழக மக்கள் மத்தியில் இயல்பாகவே அதிகம் உள்ளது. மேலே கூறிய பெரிய அரசியல் கட்சிகளின் பெரும்பான்மையான செயல்பாடுகள் இவற்றைக் கருத்தில் கொண்டதாகவே உள்ளது.


அக்கட்சிகளைத் தவிர வேறுபல அதிதீவிர இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளும் இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. இவற்றின் போக்கு பெரிய அரசியல் கட்சிகள் செய்வது போல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது அல்ல. இவை உயிரிழக்கும், பாதிப்பிற்கு ஆளாகும் சாதாரண இலங்கை தமிழ் மக்கள் மீது மட்டுமின்றி அவர்களின் நலன் காக்கும் ஒரே அமைப்பு எல்.டி.டி.ஈ.யே என்ற கருத்துடனும் செயல்படுகின்றன.

ஆனால் இராஜீவ்காந்தியின் கொலைக்குப் பின் சாதாரண தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எல்.டி.டி.ஈ. அமைப்பின் மீது இருந்த அபிமானம் பெருமளவு குறைந்து விட்டது. இந்நிலையில் இந்த இடதுசாரி அமைப்புகளின் கருத்து மக்களிடையே வெளிப்படையான பெரிய ஆதரவு எதையும் பெறவில்லை என்பதே உண்மை. அதனால் இப்பிரச்னையை ஒட்டி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பெரிய அரசியல் கட்சிகள் எழுப்பும் பெரிய பெரிய முழக்கங்களுக்கு ஒத்து ஊதுவது போன்றே உள்ளது. தனிப்பட்ட முறையில் பெரிய அளவிலான முன்முயற்சிகள் எதுவும் இவர்களால் எடுக்கப்படவில்லை.

இக்கட்சிகள் உண்மையிலேயே இலங்கைத் தமிழர் பிரச்னையின்பால் பெரும் அக்கறை கொண்டவையாக இருந்தால், அவற்றின் மிதமிஞ்சிய தமிழ் உணர்வும் எல்.டி.டி.ஈ. அமைப்பின் மீதான ஆதரவை வெளிப்படுத்துவதும் மட்டுமே போதாது. இந்த அமைப்புகள் இன்று கண்களை உறுத்தும் பல நிகழ்வுகளை ஊன்றிப்பார்த்து அவற்றிற்கு விடை காண முயல வேண்டும். அதாவது 1983ம் ஆண்டை ஒட்டிய காலங்களில் தமிழகத்தில் மாபெரும் மக்கள் ஆதரவினை பெற்றிருந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு தற்போது அதனைப் பெருமளவு இழந்து நிற்கக் காரணம் என்ன?


தமிழகத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும் கூட இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான பெரிய மக்கள் இயக்கங்களோ எழுச்சியோ ஏற்படவில்லையே, அதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை காண முயலவேண்டும். அத்துடன் உலகமே பிரமிக்கும் வண்ணம் ஒரு அரசின் நிலையான இராணுவத்தை எதிர்த்து கடுமையான போரினை நடத்தி வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுவந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு இன்று அடைந்துள்ள பின்னடைவுகளுக்கு காரணம் என்ன? ஏராளமான உயிர்த்தியாகம், சாகசம் ஆகியவற்றைப் புரிந்த அவ்வமைப்பு இன்று உலக அரங்கிலும் உள்நாட்டிலும் தனிமைப்பட்டு நிற்பது ஏன்? என்ற கேள்விகளுக்கும் விடை காண முயலவேண்டும்.

ஆனால் இந்திய இடதுசாரி அரசியல் கட்சிகளைப் பீடித்துள்ள ஒரு நோய் இவர்களையும் பீடித்துள்ளது. அதனால்தான் இக்கேள்விகளுக்கு விடைகாணும் விதத்திலான கருத்து எதையும் கொண்டவர்களாக இவர்கள் இல்லை.

சாதனையை காட்டி அரசியல் நடத்துவது - சோதனை வருகையில் காணாமல் போய்விடுவது

அதாவது இந்திய இடதுசாரிக் கட்சிகளிடையே ஒரு போக்கு காலம்காலமாக இருந்து வருகிறது. இங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகள் கம்யூனிசம், சோசலிசம் இவற்றின் மேன்மை குறித்தும் சோசலிச அமைப்பு வந்தே தீரும் என்ற வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி குறித்தும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளாது சோசலிச நாடுகளான சோவியத்யூனியன், மக்கள் சீனம் இவற்றின் பிரமிக்கத்தகுந்த சாதனைகளை மட்டும் வெளிச்சம்போட்டுக் காட்டித் தங்களது செல்வாக்கை ஒரு எளிதான, மலிவான விதத்தில் மக்களிடையே பல காலம் வளர்த்து வந்தன.

அதனால் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்புகள் தகர்ந்து போன சூழ்நிலையில் இவர்களும் அதிர்ந்துபோய் ஏன் அந்த அமைப்புகள் தகர்ந்து போயின என்பதற்கான உரிய விளக்கத்தைகூட முன் வைக்காது அயர்ந்துபோய் நின்றன. அத்தகைய கையாலாகாத நிலை எடுத்ததன் மூலம் சோசலிசக் கண்ணோட்டம் காலாவதியாகிவிட்டது என்ற முதலாளித்துவ பொய்பிரச்சாரத்திற்கும் இவர்களை அறியாமலேயே இவர்கள் வலு சேர்த்தனர்.

அதைப்போல் கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு விடுதலைப் புலிகள் அடைந்த வெற்றிகளை முன் வைத்தே இங்கு செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள், தற்போது விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு நேர்ந்துள்ள நிலையில் மக்களிடையே பின்னடைவின் தன்மை எத்தகையது? அது எதனால் ஏற்பட்டுள்ளது? என்பது போன்ற விளக்கங்களை முன் வைக்க முடியாமல், உணர்ச்சியூட்டும் விசயங்களையே மீண்டும் மீண்டும் முன் வைக்கின்றன. அவ்வாறு அவர்கள் முன் வைக்கும் சில கருத்துக்களும் விஞ்ஞானப்பூர்வ அடிப்படை எதையும் கொண்டிராமல் முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானவையாகவும் பாதி உண்மைகளாகவும் உள்ளன.

ஒரு உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் இதழ் என்ற ரீதியில் நாம் அவ்வாறு இருக்க முடியாது. எனவே இந்த பிரச்னை குறித்த நமது பகுப்பாய்வை நாம் மக்களின் முன் வைக்க பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.

தேசிய இனப் பிரச்னையாகவே இருந்ததா? அல்லது ஆக்கப்பட்டதா?

அந்த வகையில் இலங்கையில் நிலவிவரும் பிரச்னை உண்மையிலேயே முழுக்கமுழுக்க ஒரு தேசிய இன பிரச்னையா? என்பதையும் அல்லது வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் ஆளும் வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களும் கடைபிடித்த பாரபட்சக் கொள்கைகளின் விளைவாகவும் அவற்றிற்கு எதிராக எதிர்வினையாற்றிய இலங்கைத் தமிழ் அமைப்புகளின் நடவடிக்கைகளாலும் தேசிய இனப்பிரச்னையாக ஆக்கப்பட்டதா? என்பதில் தொடங்கி இத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்னைகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். இந்த இதழில் முதற்கண் இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டே ஒரு தேசிய இனப் பிரச்னையா? இல்லையா என்பதையும் அடுத்து வரும் இதழ்களில் இதோடு தொடர்புடைய வேறு பிரச்னைகளையும் பார்போம்.

இங்கு தமிழர் பிரச்னை என்ற பதாகையை முன் வைத்து விடுதலை புலிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகள் எந்த வகையான உரிய பகுப்பாய்வும் இன்றி இப்பிரச்னை சிங்கள பேரினவாதத்திற்கும் தமிழ் சிறுபான்மை இனத்திற்குமான பிரச்னை என்ற கருத்தினை தங்களுக்கே உரித்தான காரணங்களுக்காக முன் வைத்து முழுக்க முழுக்க ஒரு இனப்பிரச்னையாக இதனை காட்டுவதற்கு முயற்சி செய்கின்றன.

சிங்கள இனம், தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டதா?

அதாவது அவை இது எத்தனை கொடுமையான இனப்பிரச்னை என காட்ட முயல்கின்றன என்றால் சிங்களர்கள் தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்று கூறும் அளவிற்கு சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் நேர் விரோதத் தன்மை கொண்டவர்கள்: இவர்களில் ஒரு பகுதியினரின் அழிவில் தான் மற்றொரு பகுதியினரின் வாழ்க்கை உள்ளது என்று மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு முயல்கின்றன. ஆனால் இது இப்படித்தானா? என்று பல வரலாற்று நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்ப்பது நமக்கு மிகவும் அவசியமாகும்.

பிரிட்ஷாரை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றிணைந்தது எவ்வாறு?

இவர்களின் இத்தகைய இலங்கையின் இனப்பிரச்னை குறித்த பார்வை, இந்தியாவின் தேசிய இனப்பிரச்னைகள் குறித்தும் இவர்கள் கொண்டுள்ள தவறான பார்வையினைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அதாவது முதலில் இப்படி ஓரினத்துடன் மற்றொரு இனம் ஒத்து வாழவே முடியாத இனப்பிரச்னை ஒன்று இலங்கையின் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே இருந்திருக்குமானால் அவ்விரு இனங்களும் ஒன்றுசேர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற போராடியிருக்க முடியுமா? இது நமக்கு எழும் முதல் கேள்வியாகும்.

இதற்குப் பதில் கூறும் வகையில் எவ்வாறு தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே பழக்க வழக்கங்கள், மதம் பண்பாடு இவை சார்ந்த வேறுபாடுகளும் ஒருவரை ஒருவர் பரிகசித்துக் கொள்ளும் போக்கும் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது என்பது போன்ற சான்றுகளை முன் வைப்பது முறையாகாது. ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற முரண்பாடுகள் நிலவவே செய்யும்.

நேர் விரோத முரண்பாடா, இல்லையா?

நாம் பார்க்க வேண்டியது அத்தேசிய இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் ஒன்றின் அழிவில்தான் மற்றொன்றின் வாழ்க்கை இருக்கிறது என்ற அடிப்படையிலான நேர்விரோத முரண்பாடுகளா? அல்லது நேர்விரோதமற்ற சமரச முறையிலேயே தீர்வைக் கொண்டு வர முடியும் என்று கூறத்தக்க முரண்பாடுகளா? என்பவையே.

நாம் முதலில் கூறிய நேர் விரோத முரண்பாடு தமிழ் - சிங்கள தேசிய இனங்களுக்கிடையே நிலவியிருக்குமானால் நிச்சயமாக இவ்விரண்டு இனங்களும் ஒன்றிணைந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியிருப்பது சாத்தியமல்ல.

குதிரைக்குப் பதிலாக சிங்களத் தலைவர்கள் இழுத்த தேர்

விடுதலைப் போராட்டக் காலத்தில் நிலவிய இன ஒற்றுமைக்கு சான்றாக அக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். அதாவது விடுதலைப் போராட்டத்தை ஒட்டி 1915-ல் தடைக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர் டி.எஸ். சேனநாயகாவை விடுவிப்பதற்காக பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு கடல்வழியாக இங்கிலாந்து சென்று திறமையாக வாதிட்டு நாடு திரும்பிய தமிழர் தலைவரும் வழக்கறிஞருமான திரு.பொன்னம்பலம் ராமநாதனை ஊர்வலமாக சிறப்புடன் அழைத்துச் செல்ல ரதம் ஒன்றை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்தனராம்.

ஆனால் அவர் வந்தவுடன் ரதத்தின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு விட்டு அவருக்கு தாங்கள் பட்டிருந்த நன்றிக்கடனை வெளிப்படுத்தும் முகமாக திரு.எ.ஈ. குணசிங்கா உள்பட வந்திருந்த சிங்கள தலைவர்கள் அந்த ரதத்தை தாங்களே இழுத்து வந்தனராம். இப்படிப்பட்ட வகுப்பு ஒற்றுமையும் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் விடுதலைப் போராட்ட காலத்தில் நிலவியுள்ளது. இந்நிகழ்வு இவ்விரு இனங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ முடியாதவாறு நேர் விரோத முரண்பாடுகளுடன் எப்போதுமே இருந்து வந்துள்ளவை என்பதையா காட்டுகிறது?

நிர்வாக வசதிக்காக ஏகாதிபத்தியம் கட்டாயப்படுத்தி இணைத்ததா?

இது ஆரம்ப முதற்கொண்டே தேசிய இனப்பிரச்னையே என்ற கருத்தை முன் வைக்கக் கூடியவர்கள் மற்றுமொரு வாதத்தையும் வலியுறுத்திக் கூறுகிறார்கள். அதாவது ஏகாதிபத்திய ஆட்சி பல இடங்களில் தனது நிர்வாக வசதிக்காக பல தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளை கட்டாயப்படுத்தி இராணுவ வலிமையின் மூலம் ஒருங்கிணைத்து வைத்திருந்தனர்; அவ்வாறு ஒருங்கிணைத்து வைக்கப்பட்டதே இலங்கையின் தமிழ்-சிங்கள தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளாகும் என்பது அந்த வாதம்.

அதாவது வற்புறுத்தல் தவிர வேறு எந்த அம்சமும் அவைகளின் ஒருங்கிணைப்பை கொண்டு வரவில்லை என்பது அவர்கள் முன் வைக்கும் கருத்து. நிர்வாக வசதிக்காக இலங்கையின் தமிழர் வாழும் பகுதியையும் சிங்களர் பகுதியையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இணைத்திருந்தாலும், அதனால் மட்டுமே சிங்கள, தமிழ் இனமக்கள் கட்டாயத்தால் ஒன்று சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது உண்மையல்ல.

எதிரியின் பலம் இணைந்து போராட வைத்தது

இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சியின் கீழ் இருந்த போதும் அந்நாடுகளில் இருந்த பல்வேறு தேசிய இனங்களும் தங்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனித்தனியே போராடி தனித்தனி தேசிய அரசுகளாக உருவாக ஏற்ற சூழ்நிலை இல்லை. ஏனெனில் அத்தேசிய இனங்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்த ஏகாதிபத்தியம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்ததால் அதனைத் தங்கள் தங்களது தனித்த போராட்டங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை அத்தேசிய இனங்களுக்கு ஏற்படவில்லை.

விடுதலைப் போராட்டம் விளைவித்த ஒற்றுமை

எனவே அவை ஒன்று திரண்டு, ஒருங்கிணைந்து பொது எதிரியை எதிர்த்துப் போராடின. அப்போராட்டத்தின் விளைவாக பல தேசிய இன மக்களிடையே நல்லுறவும் ஏற்பட்டது. இலங்கையைப் பொருத்தவரை தமிழர் வாழும் பகுதிகளிலிருந்து தங்கள் படிப்பிற்கேற்ற அரசு வேலைகள் கிடைக்கும் போது சிங்களர் பகுதி என இவர்கள் கூறும் கொழும்பு போன்ற நகரங்களிலும் தமிழ் மக்கள் சென்று வாழ்ந்தனர். இதன் விளைவாக தேசிய இனங்களின் ஒன்று கலத்தலும் நிகழ்ந்தது. இது ஏகாதிபத்திய நிர்வாக வசதிக்காக அது கட்டாயப்படுத்தி ஒருங்கிணைத்ததனால் மட்டும் ஏற்பட்டதல்ல.

இந்திய அனுபவம்

இலங்கையைப் போன்றே இந்தியாவும் பல தேசிய இனங்களை கொண்ட நாடு. ஏறக்குறைய மிகப் பெரும்பாலான அம்சங்களில் இரண்டு நாடுகளின் சூழ்நிலையும் ஒன்றே. அப்படியிருக்கையில் இங்கும் இலங்கையைப் போன்றே ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநிறுத்த பிரிட்டிஷ் அரசு அதன் மிகவும் மேலான இராணுவ வலிமையைப் பயன்படுத்தியது. இருந்தாலும் பல சமஸ்தானங்களை தன்னுடைய நேரடி ஆட்சி அதிகாரத்திற்குள் அது கொண்டுவரவில்லை.

எடுத்துக்காட்டாக திருவாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானம் போன்றவை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேயில்லை. நிர்வாக வசதிக்காக ஏகாதிபத்தியங்கள் ஒரு பூகோள பகுதிக்குள் இருக்கும் அனைத்து பிரிவினரையும் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பார்கள் என்றால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதை ஏன் செய்யவில்லை?

சமஸ்தான மக்களின் விடுதலை வேட்கை

அத்துடன் விடுதலை போராட்ட காலத்திலேயே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆட்சியில் இல்லாத சமஸ்தானங்களில் இருந்த மக்களும் ஆதரித்தனர். அங்கும் காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஏகாதிபத்தியத்தின் வற்புறுத்தல்தான் தேசிய இனங்களின் இணைப்பிற்கு காரணம் என்றால் சமஸ்தானங்களின் சாதாரண மக்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து மானசீகமாக அதில் ஈடுபட்டது எவ்வாறு?

லாப - நஷ்டக் கணக்கே தீர்மானித்தது

உண்மையில் ஏகாதிபத்தியங்கள் என்பது, வளர்ச்சியடைந்த முதலாளித்துவங்களே. அந்த அடிப்படையில் ஒரு பகுதியை ஒருங்கிணைத்தால் நமக்கு லாபமா அல்லது ஒருங்கிணைக்காவிட்டால் லாபமா என்பது போன்ற கேள்விகளே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எப்பகுதிகளை ஒருங்கிணைப்பது எதனை ஒருங்கிணைக்காமல் விடுவது என்பதைத் தீர்மானித்ததேயன்றி வேறு கட்டாயங்கள் அல்ல. எனவே தான் பல பகுதிகளை இணைத்த அவர்கள் சில பகுதிகளை வற்புறுத்தி இணைக்கவுமில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு இனவாதமே காரணம் என்போர் தங்களின் சித்தாந்த வலிமையை காட்டுவதற்காக தேசம் குறித்த ஸ்டாலினின் மிகச்சரியான கண்ணோட்டமான ஒரு தேசத்தின் நான்கு முக்கிய கூறுகளான, பொதுவான மொழி, பொதுவான பண்பாடு, ஒற்றைப் பொருளாதார அமைப்பு, ஒரு வரலாற்று ரீதியான எல்லைப்பரப்பு ஆகியவற்றை முன்வைக்கின்றன.

தேசிய வாதத்தின் ஊற்றுக்கண் தேசியச் சந்தையே

ஆனால் அவர்கள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தேசம் என்ற கண்ணோட்டம் தோன்றுவதற்கே ஊற்றுக்கண்ணாக இருக்கக்கூடிய வேறொரு விசயத்தை முன்வைக்கவில்லை.

அதாவது ஆங்காங்கே வட்டார அளவுகளில் நிலவிய பகுதி அளவிலான சந்தை, ஒரு மொழி பேசும் பகுதி முழுவதுடனோ அல்லது அதையும் தாண்டியோ பரவுவதும் தேசிய இனக்கண்ணோட்டம் உருவாவதற்கு மிகமுக்கியக் காரணம் என்பதை முன்வைக்கவில்லை அல்லது மூடிமறைக்கிறார்கள். உண்மையில் தேசிய வாதம் என்ற பாடத்தை முதலாளித்துவத்திற்கு கற்றுக்கொடுத்த பள்ளியே ஒன்றிணைந்த தேசிய சந்தைதான். இதை இலாவகமாக இவர்கள் கூறத் தவறுகிறார்கள் அல்லது மூடிமறைக்கிறார்கள்.

இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி இப்பகுதிகளைக் கைப்பற்றி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு முன்னேறிய பொருள் உற்பத்தி முறையை அதாவது முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக தமிழ்ப் பகுதியும், சிங்களப் பகுதியும் ஒரு ஒன்றுபட்ட சந்தையாகப் படிப்படியாக மாறியது. இதன் விளைவாக சிங்களப் பகுதிகளில் தமிழ் வியாபாரிகளும், தமிழர் பகுதிகளில் சிங்கள வியாபாரிகளும் வியாபாரங்களில் ஈடுபட முடிந்தது.

பிரிட்டிஷ் அரசின் நிர்வாகமும் இதுபோல் தமிழர் பகுதி சிங்களர் பகுதி என்ற பாரபட்சமில்லாது ஒன்றிணைந்த இலங்கை முழுவதிலும் தமிழ், சிங்கள ஊழியர்களைப் பணியமர்த்தியது. பெரிய அளவில் இலங்கையைப் பொருத்தவரை பெரும் தொழிற்சாலைகள் இந்தியாவைப் போல் வளர வாய்ப்பிருக்கவில்லை என்றாலும் தொழிற்சாலைகள் வளர்ந்த அளவிற்கு அவற்றிலும் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஓரளவு ஒருங்கிணைந்து வேலை செய்யும் சூழல் உருவானது. இதன் விளைவாக முதலீடுகள், வேலைத் திறன் இவற்றிற்கான சந்தை இலங்கை முழுவதும் ஒன்றாக மாறியது.

அச்சந்தை வாய்ப்பும் மக்களுக்கிடையே நாம் அனைவரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உணர்வு பூர்வமாகவும் ஏற்படுத்தியிருந்தது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டு தேசிய இனப்பிரச்னையே என்ற கருத்தை இங்கு முன்வைப்பவர்கள் கூற வருவது போல் சிங்கள, தமிழ் இனமக்கள் எப்போதுமே எண்ணெய்யும், தண்ணீருமாகவே இருந்தார்கள் என்பது உண்மையல்ல.

சாதாரண சிங்கள மக்கள் தமிழரை எதிரிகளாக பார்க்கிறார்களா?

சிங்கள பேரினவாதம்தான் இன்று இலங்கையில் நிலவும் தமிழர்கள் பிரச்னைக்கு மிகமுக்கியக் காரணம் என்று கூறும் வெறியில் இவர்கள் சாதாரண சிங்கள மக்களையே அப்பட்டமாக குறைகூறி யதார்த்த நிலையைத் தவறாக சித்தரிக்கிறார்கள். "சிங்கள மக்கள் தங்களின் உண்மையான எதிரிகளை மறந்துவிட்டு தமிழர்கள் மீது வெறுப்புகொள்ளத் துவங்கினர்" என்ற உண்மைக்குப் புறம்பான கருத்தை முன்வைக்கிறார்கள்.

1983 கலவரத்திலும் சரி அதற்கு முன்பும் சரி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலருக்கு பல சிங்கள மக்கள் பாதுகாப்பும் ஆதரவும் தந்தனர் என்பதே அனைவரும் அறிந்த உண்மை. யதார்த்தத்தில் பெரும்பாலும் இதுபோன்ற இனக் கலவரங்களில் சாதாரண மக்கள் ஈடுபடுவது இல்லை. தங்களுக்கு அண்டை அயலாராக இருக்கும் வேறொரு இனத்தையோ மதத்தையோ சேர்ந்த மக்களை கலவரம் ஏற்பட்டவுடன் உடனடியாக இன அடிப்படையில் தங்களை மாற்றிக் கொண்டு வெறியுடன் தாக்குவது என்பது யதார்த்தத்தில் நடக்க இயலாத ஒன்றாகும்.

காலிகளும் கேடிகளுமே கலவரம் செய்பவர்கள்

எல்லாக் கலவரங்களிலுமே அவற்றில் ஈடுபடுபவர்கள் ஈடுபடும் இனங்களைச் சேர்ந்த கிரிமினல்களாகவும், கேடிகளாகவுமே பெரும்பாலும் இருப்பர். அவர்களின் நோக்கமும் கலவரத்தில் ஈடுபட்டு முடிந்த அளவு அகப்பட்டதை சுருட்டுவது என்பதாகவே இருக்கும். இத்தகைய கேடிகளும், கிரிமினல்களும் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான பல கலவரங்களில் பல சாதாரண சிங்களர்களை அவர்கள் தமிழர்களுக்கு பாதுகாப்பு தந்தனர் என்ற ஒரே காரணத்திற்காக தாக்கிய, கொலை செய்த சம்பவங்களும் உண்டு.

சிங்கள இனவெறிவாதம் ஒரு வெறித்தனத்தை சாதாரண சிங்கள மக்களிடையே ஏற்படுத்த பல யுக்திகளை கையாளுகின்றது என்பது உண்மையே. ஆனால் அவற்றைப் போலவே சாதாரண சிங்கள மக்கள் மீது அவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று பழிபோடும் போக்கும் இந்த தமிழ் அமைப்புகளிடையே உள்ளது என்பதும் உண்மையே.

தேசிய முதலாளிகளை உத்தமர் ஆக்கும் வேலை

சிங்கள பேரினவாதம்தான் பிரச்னைக்கு காரணம் என்று கூறும் வகையில் இந்த அமைப்புகள் முன் வைக்கும் அடுத்த அபத்தமான வாதம் இலங்கையின் சுதந்திரம் தமிழ் மற்றும் சிங்கள தரகு முதலாளிகளின் கைக்கு வந்தது என்பதாகும். அதாவது தேசிய முதலாளிகள் கைக்கு விடுதலைக்குப் பின் ஆட்சி அதிகாரம் வந்திருந்தால் அது இன வெறிவாதத்தைக் கடைப் பிடித்திருக்காது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் தரகு முதலாளிகளாக இருந்ததால் தான் சிங்களப் பேரினவாதப் போக்கு ஆட்சிக்கு வந்தவுடன் மேலோங்கியது என்பதே இவர்களது கூற்றின் உட்பொருள்.

தங்களது அபத்தமான அரசியல் நிலையை, நிலை நாட்டுவதற்காக இலங்கைப் பிரச்னையில் மட்டுமல்ல, இந்தியா குறித்த ஆய்வுகளிலும்கூட தேசிய முதலாளித்துவத்தை உன்னதப்படுத்தும் வேலையை பல சமயங்களில் சிரமேற்கொண்டு இவ்வமைப்புகள் செய்கின்றன.

யாருக்குத் தரகன்?

ஆனால் தரகு முதலாளிகள் என்றால் விடுதலை பெறுவதற்கு முன்பு இலங்கையை ஆட்சி செய்த பிரிட்டிஷ் முதலாளிகளுக்கே இம்முதலாளிகள் தரகர்களாக இருந்திருக்கமுடியும். அத்தரகு முதலாளிகளின் கைகளுக்கே ஒரு ஆட்சியதிகாரம் வந்தது என்றால் சுதந்திரத்திற்குப் பின்பு இலங்கையில் ஏற்பட்டது பிரிட்டிஷ்காரர்களின் பொம்மை அரசு என்பதே அதன் பொருளாக ஆகும்.

ஆனால் அந்தோ இலங்கையின் விடுதலைக்கு பின்பு அங்கு தோன்றிய எந்தத் தங்களது பொம்மை அரசின் முக்கிய பிரச்னையிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தலையிடவே இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்ற சிறுபிள்ளை தான் விளையாட உருவாக்கிய பொம்மையை உருவாக்கியவுடனேயே தூக்கி எறிந்துவிட்டது. விடுதலைக்குப் பின் இலங்கையின் வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து நோக்குவோர் இவர்களின் கூற்றை வைத்து இப்படி ஒரு முடிவுக்கே வரமுடியும்.

இங்கிலாந்தின் தரகனா? இந்தியாவின் தரகனா?

இதற்கு மாறாக இலங்கையைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் நேரடி மறைமுக தலையீடுகளும் செல்வாக்கு செலுத்துதலும் அநேக சமயங்களில் விடுதலைக்குப் பின் இலங்கையில் இருந்துள்ளது. தரகு முதலாளிகள் கைகளுக்கு இலங்கையின் விடுதலை வந்தது என்ற இவர்களின் இந்த வாதம் இந்த அடிப்படையில் அபத்தமானது என்று நாம் கூறும் போது இவர்கள் கூறலாம்: அதாவது விடுதலைக்கு முன்பு இலங்கை முதலாளி பிரிட்டிஷ் முதலாளியின் தரகனாக இருந்தான்; அதன் பின் அவன் இந்தியா உட்பட அனைத்து சிறிய, பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் தரகனாக ஆகிவிட்டான் என்று-அதுவும் வேறு வழியின்றி இந்த பிரச்னையில் இந்தியா வளர்ந்து வரும் ஒரு ஏகாதிபத்தியம் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டால்.

தரகு முதலாளி கேவலமானவனே; ஆனால் தேசிய முதலாளி உத்தமனல்ல

தன்னகத்தே மூலதன திரட்சி கொண்டவனாக ஒரு முதலாளி இருக்கும் போது அவன் இது நமது நாடு; இதில் முதலீடு செய்து சம்பாதிக்க நமக்கு மட்டுமே உரிமையுண்டு. எங்கிருந்தோ வந்தவனுக்கு முதலீடு செய்ய என்ன உரிமை என்று எண்ணுவான். அப்போது அவன் தேசிய முதலாளி. அத்தகைய மூலதன திரட்சி இல்லாத நிலையில் அதனை திரட்டுவதற்காக அவன் தரகனாக, எடுபிடியாக எப்படி வேண்டுமானாலும் இருப்பான். அப்போது அவன் தரகு முதலாளி. ஆனால் எப்போதுமே எந்த முதலாளியும் உழைப்பைச் சுரண்டி பொருள் சேர்ப்பவனே.

பொருளாதாரத்தை முந்திச் செயல்படும் அரசியல்

இந்தியா இலங்கை போன்ற நாடுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அன்னிய சுரண்டலில் ஆட்பட்டு இருந்ததால் இங்குள்ள முதலாளிகளிடம் மூலதன திரட்சி ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தது. இப்போதும் கூட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியாவில் ஜப்பான் போன்ற நாடுகளின் முதலாளிகளுடன் ஒப்பிடுகையில் இவர்களின் மூலதன திரட்சி குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் முதலில் தரகனாக இருந்த முதலாளி எப்போதும் தரகனாகவே இருக்க வேண்டுமென்பதில்லை.

விடுதலை பெற்று தன் சொந்த தேசிய அரசை நிறுவிய பின்னர் அவன் தேசிய முதலாளி ஆகிவிடுகிறான். ஏனெனில் அரசியல் விடுதலை பெற்றவுடன் அவன் ஸ்தாபிக்கும் அரசு முதலாளித்துவத்தின் மிக வேகமான வளர்ச்சிக்காக எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறது. இலங்கையின் இத்தகைய நடவடிக்கை குறிப்பாக 1956-ல் பிரதமராக வந்த திரு.பண்டாரநாயகா அவர்களால் முழு வீச்சுடன் செய்யப்பட்டது. இதைத்தான் மாமேதை லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூலில் அரசியல் பொருளாதாரத்தை முந்திச் செயல்படுகிறது என்று கூறினார்.

தரகு முதலாளி தரகு முதலாளியாகவே இருந்தால் ஏகபோக முதலாளியாக ஆகியிருக்க முடியாது

இந்நிலையில் ஒரு காலத்தில் தரகு முதலாளிகளாக இருந்தவர்கள் விடுதலைக்குப் பின் தேசிய முதலாளிகளாக மாறியுள்ளதோடு அவர்கள் இந்தியா போன்ற நாடுகளில் ஏகபோக முதலாளிகளாகவும் ஆகிவிட்டனர். இவ்விடத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும் தரகு முதலாளியாக இருக்கும் எவனும் ஏகபோக முதலாளியாக ஆக முடியாது. அவனை தரகனாக வைத்திருக்கும் முதலாளி அவ்வாறு அவன் ஆக அனுமதிக்க மாட்டான். உண்மையில் இந்தியாவில் பல முதலாளிகள் ஏகபோக முதலாளிகளாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் ஒப்புநோக்குமிடத்து இலங்கை முதலாளிகளைக் காட்டிலும் பெரிதாக வளர்ச்சியடைந்து ஏகபோகங்களை உருவாக்கி தன்னிடம் உள்ள உபரி மூலதனத்தை முதலீடு செய்ய இடம் தேடி அலைவதாக இருப்பது இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள இந்தியாவே; இங்கிலாந்து அல்ல. எனவேதான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் உள்பட இந்தியாவின் மேலாதிக்கத்தை நாசூக்காக நிலைநாட்டும் பல சரத்துக்களை கொண்ட பல ராஜிய ரீதியிலானதும் வர்த்தக ரீதியிலானதுமான ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையயாப்பமிடப்படுகின்றன.

மேலும் இயக்கவியல் அடிப்படையில் எந்தவொரு நிகழ்வினையும் சூழலையும் அதன் வளர்ச்சிப் போக்கிலும் அசைவிலும் நகர்விலும் ஆய்வு செய்யவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் ஒருவன் அல்லது ஒரு நிறுவனம் ஒரு காலத்தில் தன்னை ஆட்சி செய்த அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு தரகு வேலை பார்த்து அதற்கான கமிசனைப் பெற்று பொருள் சேர்த்தாலும் அந்தப் பொருள் மூலதனத் திரட்சி பெற்றதும்; அதனைத் தானே முதலீடு செய்து லாபம் ஈட்டவேண்டும் என்றே எண்ணுவான். அப்போது கிட்டும் வாய்ப்புகளைப் பொறுத்து தன்நாடு, தன்மக்கள் இவர்களைக் கொண்டு தொழில் நடத்த தங்களுக்கே முழு உரிமை உண்டு என்ற வாதத்தையும் அவன் முன்வைப்பான்.

அபத்தத்திலும் அபத்தம்

மேற்கூறிய வாதத்தை முதலாளித்துவம் எப்போது எடுக்கத் தொடங்குகின்றதோ அப்போதே அதற்கு தேசிய முதலாளித்துவத்தின் கூறுகள் வந்துவிடுகின்றன. எனவே தரகு முதலாளித்துவ நிறுவனமாகத் தோன்றிய ஒன்று அது இறுதிவரை தரகு முதலாளித்துவமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

தரகு முதலாளித்துவம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு பகுதிக்கு அது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் ஆற்றும் வரலாற்றுப் பங்கினை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட காரணப்பெயரே தவிர இடு குறிப்பெயர் அல்ல. எனவே அதன் மண்டை மண்ணுக்குள் போகும் வரை தரகு முதலாளி என்ற பெயரை அத்துடன் பொருத்திக் கூறுவது அபத்தத்திலும் அபத்தமாகும்.

இந்தப் பின்னணியில் இலங்கையின் இனப்பிரச்னையை ஆய்வு செய்தால் நாம் இத்தகையதொரு முடிவுக்கே வரமுடியும்: அதாவது இலங்கையில் தற்போது நிலவும் பிரச்னை அடிப்படையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் அளவிற்கான இன வேறுபாடுகளின் அடிப்படையில் தோன்றியதல்ல.

இலங்கையில் ஆட்சிசெய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி கொள்கைகளாலும் தேச விடுதலையைச் சாதித்த பின் அங்கு ஆட்சிக்கு வந்த தேசிய முதலாளி வர்க்கம் அது சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகவும் வளர்த்து விடப்பட்டதே இந்த இனப்பிரச்னை என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.

தனிநாடல்ல - தனிமாநிலம் கூட கோரப்படவில்லை

தமிழர்கள் சிங்களப் பகுதிகள் பலவற்றில் வேலைகளிலும், தொழில்களிலும் இருந்ததால் விடுதலை பெற்ற வேளையில் தமிழர்களின் தலைவர்கள் தனி நாடல்ல, தனி மாநிலம் கூட கோரவில்லை.

மத்தியத்துவப் படுத்தப்பட்டதாக இருந்த இலங்கையின் ஆட்சியமைப்பில் குடிமக்கள் அனைவருக்குமான வாக்குரிமை இருக்கக்கூடாது; ஏனெனில் அது காடையர்கள் ஆட்சி அமைவதிலேயே சென்று முடியும்; படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை இருக்கவேண்டும் என்பதே தமிழர்களின் தலைவர் பொன்னம்பலம் ராமநாதன் போன்றவர்கள் விடுதலை பெற்ற காலத்தில் முன் வைத்த வாதமாக இருந்தது.

படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை என்றால் தமிழர்களில் மிகப் பெரும்பாலோர் வாக்குரிமை பெற்றவர்களாக ஆகி சிங்கள மக்களுடன் வாக்குரிமை விகிதத்திலும் ஏறக்குறைய சம நிலைக்கு வந்துவிடுவர் என்பதே அவரது எண்ணம். எனவே அனைவருக்கும் வாக்குரிமை என்பதை எதிர்த்த அவர் மத்தியத்துவப் படுத்தப்பட்டதாக இருந்த இலங்கை அரசமைப்பை எதிர்க்கவில்லை. தமிழர் வாழும் பகுதிகளை ஒன்றிணைத்து ஒரேமாகாணமாக ஆக்கவோ கூட்டாட்சி முறை வேண்டுமென்றோ அவர்கள் அக்காலத்தில் கோரவில்லை.

அடுத்து இலங்கைக்குக் கிட்டிய அரசியல் விடுதலை பல எதிர்பார்ப்புகளை அந்நாட்டின் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே விடுதலைப் பெற்ற வேளையில் உருவாக்கியிருந்தது. ஆனால் விடுதலைக்குப்பின் கட்டியமைக்கப்பட்ட முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை வெகு விரைவிலேயே சந்தை நெருக்கடியையும், அதன் விளைவான வேலையின்மைப் பிரச்னையையும் எதிர்நோக்க நேர்ந்தது. அதிலிருந்து தப்பிக்க இருந்த ஒரே வழியான புது வேலைவாய்ப்புகளை உருவாக்க திராணியற்றதாக நெருக்கடி சூழ்ந்த நிலையில் இருந்த இலங்கை முதலாளி வர்க்கம் இருந்தது.

அதன் அரசு இயந்திரத்தை இயக்கிய ஆட்சியாளர்கள் பிரச்னையைத் திசை திருப்புவதற்காக ஏற்கனவே இருபெரும் தேசிய இனங்களைக் கொண்டதாக இருந்த அந்நாட்டில் அவ்வப்போது தோன்றும் இன வேறுபாட்டுப் போக்குகளைப் பயன்படுத்தி இந்த இனப்பிரச்னையை முன்நிறுத்தி அதனை வளர்த்து விட்டனர். அதற்கு எது எதை எல்லாம் பயன்படுத்த முடியுமோ அதை எல்லாம் பயன்படுத்தினர்.

கல்வி வாய்ப்புப் பெற்ற தமிழ் மக்கள்

கல்வியிலும், அரசு அலுவல்களிலும் பொருளாதாரா ரீதியாகவும் தமிழர்கள் ஓரளவு சிங்களர்களைக் காட்டிலும் மேம்பட்டு இருந்தது இவ்விசயத்தில் ஆட்சியாளர்களால் திறமையாகப் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதி, சிங்களர்கள் வாழும் பகுதியைப் போல அத்தனை இயற்கை வளம்மிக்கதல்ல. அதனாலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தப் பல வகைகளில் போராட வேண்டியிருந்தது. கல்வி பெற்று எப்படியாவது அரசு அலுவல்களைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.

அமெரிக்க மெத்தாடிஸ்ட் சர்ச் சார்ந்த நிறுவனங்கள் தமிழ் தெரிந்த அமெரிக்கர்களைக் கொண்டு தரமான ஆங்கிலக் கல்வியை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப்பகுதியில் வழங்கியதால் அதனை கற்று பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பல அலுவல்களில் 19ம் நூற்றாண்டில் கடைசிப் பகுதி முதற்கொண்டே தமிழர்கள் பணியமர்ந்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற தமிழர்களுக்கு இந்தியாவிலும் மலேசியாவிலும் கூட தரமான வேலைகள் கிட்டின.

ஆனால் சிங்களர் வாழ்ந்த பகுதிகள் நீர்ப்பாசன வசதி மிக்கவையாய் இருந்ததால் விவசாயத்தைச் சார்ந்தே அவர்களால் வாழமுடியும் என்ற நிலை இருந்தது. 1929-1931களில் உலகையும் இலங்கையையும் குலுக்கிய பொருளாதார நெருக்கடி நேர்ந்த சமயத்தில்தான் அதுவரை தங்களது வளமான பகுதியில் விவசாய வேலைகளில் மட்டும் ஆர்வம் காட்டிவந்த சிங்களர்கள் அரசு வேலைகளை ஏறெடுத்துப் பார்க்கத் தொடங்கினர். ஆனால் அப்போதே அரசுப் பணிகளில் பெரும்பாலும் தமிழர்கள் பணியமர்ந்துவிட்டனர்.

ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகள் பொதுவாகவே தொழில் துறை முதலாளிகளின் நலனையே பெரிதும் பேணுபவை. ஏனெனில் தொழிற்சாலைகளுக்கு இடுபொருட்களாக விவசாய விளைபொருட்கள் இருப்பதால் அவற்றின் விலை ஏற்றத்தை பெரும்பாலும் முதலாளி வர்க்கம் அனுமதிப்பதில்லை. இதனால் தொழிற்சாலை யுகத்தில் விவசாயப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்தே வந்தது. மேலும் அடுத்தடுத்த தலைமுறைகள் வருகையில் நிலப்பகிர்வும் ஏற்படுவதால் விவசாயத்தை நம்பியே இருக்கமுடியாது என்ற சூழ்நிலை நடுத்தர, மேல்மட்ட சிங்கள விவசாய உடைமை வர்க்கங்களுக்கு ஏற்பட்டது.

சிங்கள இனத்தில் தோன்றிய வேலையின்மைப் பிரச்னை

அந்நிலையில் அரசு வேலைகளுக்கும் பிற தொழில் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அப்போது அவைகளில் தங்களது மக்கட் தொகை விகிதத்தைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் தமிழர்கள் இருந்தது அவர்களுக்கு பெரும் பிரச்னையாகப் பட்டது. இது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி இருந்த 1930-களிலேயே ஆரம்பித்துவிட்டது.

விடுதலைக்குப்பின் ஏற்பட்ட ஆட்சியதிகாரத்தில் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்த சிங்கள ஆட்சியாளர்களும் அவர்களது கட்சிகளும் விடுதலைக்குப் பின் இதையே பெரிதாக காட்டி தமிழ் எதிர்ப்புணர்வை வளர்க்கத் தொடங்கினர். தங்களது வாய்ப்புகளை எல்லாம் தமிழர்கள் தட்டிப்பறித்து விட்டனர் என்ற உணர்வை சாதாரண சிங்கள மக்கள் மனதில் பதிக்கத் தொடங்கினர்.

ஆட்சி மொழி

இவ்வாறு சிங்கள மக்களிடையே வெறிவாதத்தை ஊட்டுவதற்கு அவர்களுக்குப் பயன்பட்ட மற்றொரு விசயம் ஆட்சிமொழியாகும். அரசின் நிர்வாக மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், அல்லது ஆங்கிலம் சிங்களம் ஆகிய இரு மொழிகள் இருந்தாலும், அல்லது ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள் இருந்தாலும் அல்லது சிங்களமும் தமிழும் மட்டும் இருந்தாலும் கூட தமிழ் மக்களே அதிக அரசு வேலைகளைப் பெற வாய்ப்புடையவர்களாக ஆகிவிடுவர் என்ற அச்சத்தை சிங்கள நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் சிங்கள அரசியல்வாதிகள் உருவாக்கினர். அதாவது சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே அரசு வேலைகளில் சிங்கள மக்கள் அமர முடியும் என்ற எண்ணத்தை அவர்கள் உருவாக்கினர். எனவே சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

இந்திய இட ஒதுக்கீட்டை ஒத்ததே

நமது நாட்டின் சாதிய இடஒதுக்கீட்டு முறையை நியாயப்படுத்த எந்தெந்த வாதங்களை இங்குள்ள நமது ஆட்சியாளர்கள் முன் வைக்கிறார்களோ ஏறக்குறைய அதனை ஒத்த வாதங்களை முன்வைத்து அவர்களது முன்னேறிய நிலையை சாக்காகக்கூறி கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கு இருந்த வாய்ப்புகளை குறைக்கத் தொடங்கினர். இந்தியா மற்றும் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தனர். அதாவது மக்களின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடுகளும் சலுகைகளும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழாது இருப்பதற்கு எது எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தனர்.

வளர்ந்து வந்த வர்க்கப் போராட்டம்

உள்ளபடியே வேலையின்மைப் பிரச்னை முதலாளித்துவச் சுரண்டல் உற்பத்தி முறையினால் தவிர்க்க முடியாமல் ஏற்படுவது ஆகும். எனவே சமூக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் சிங்களர் தமிழர் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களிடமும் உருவாவதற்கேற்ற சூழ்நிலை இலங்கையில் பெரிதும் நிலவியது. இந்தியாவைக் காட்டிலும் கல்வி கற்றோர் விகிதம் இலங்கையில் அதிகம். அதுமட்டுமல்ல கல்வியின் தரமும் நன்றாக இருந்தது.

இந்த நிலையில் விசயம் தெரிந்தவர்களாகவும், சமூகம் வர்க்கங்களால் பிளவுபட்டுள்ளதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளது என்பதைச் சிரமமின்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்களாகவும் அம்மக்கள் இருந்தனர். 1947-ல் தோன்றிய போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம், 1953-ல் நடந்த இலங்கை முழுவதையுமே ஸ்தம்பிக்க வைத்த முழு அடைப்புப் போராட்டம் போன்றவை இதை உறுதிசெய்கின்றன.

இதற்கு ஏதுவானதாக அன்று நிலவிய உலகச் சூழ்நிலையும் இருந்தது. சோசலிஸ அமைப்பின் மேன்மை, சோசலிஸ நாடுகளின் சாதனைகள் சாதாரண மக்களையும் ஈர்க்க வல்லவையாக இருந்தன. இதனால் தான் அவசர அவசரமாக மக்கள் ஒற்றுமையை துண்டாடவல்ல இன வெறியைத் தூண்டி, மக்களிடம் வேறொருவகைப் பிரிவினையைப் பூதாகரமாக உருவாக்கி அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமான வர்க்கப் பிரிவினை அவர்களது மனதில் தோன்றாதிருப்பதற்கு முடிந்த அனைத்தையும் ஆட்சியாளர் செய்தனர். அதாவது இனபேதம் கடந்த சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்று உறுதியாக எண்ணினர்.

சிங்களரோடு கைகோர்த்து செயல்பட்ட தமிழ் உடைமை வர்க்கம்

விடுதலை பெற்ற ஆரம்ப காலத்தில் உழைக்கும் வர்க்கப் புரட்சி சார்ந்த சிந்தனைகள் சமூகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் சிங்கள முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளோடு தமிழ் முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளும் கைகோர்த்துச் செயல்பட்டனர். அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு மலையகத் தமிழர்களை வெளியேற்ற இந்தியாவுடன் இலங்கை ஆட்சியாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தமும் அதற்குத் தமிழ் தேசிய முதலாளிகளின் பிரதிநிதிகள் அளித்த மனமுவந்த ஆதரவுமாகும்.

உழைப்பால் நாட்டிற்கு வளம் குவித்த மலையகத் தமிழர்

மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இலங்கையில் ஒரு ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையை நடத்தவில்லை. மாறாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு போதிய ஆட்கள் அங்கு கிடைக்காததால் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அங்கு வேலை செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டவர்களே அவர்கள். நெற்றிவேர்வை நிலத்தில் விழ அவர்கள் பாடுபட்டதன் பயனாக பெரும் அந்நிய செலாவணி இலங்கைக்குக் கிடைத்தது.

இடதுசாரிகளின் தேர்தல் வெற்றியும் செங்கொடி சங்க வளர்ச்சியும்

விடுதலைக்குப் பின்பு அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை ஒட்டியே அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு கூடுதலாக ஏற்பட்டது. குறிப்பாக 1964ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 7 இடதுசாரி வேட்பாளர்களை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். அதுமட்டுமல்ல தேயிலைத் தோட்டத் தொழிலாளரிடையே செங்கொடி சங்கத்தின் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்க விதத்தில் இருந்தது.

இன பேதம் கடந்த முதலாளிகளின் வர்க்க ஒற்றுமை

மேலும் அத் தேர்தல் முடிவுகள் எந்த பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்து சோசலிச ரீதியிலான சமூக மாற்றம் அங்கு வந்துவிடுவதை தடுக்க இலங்கையின் ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் விரும்பினார்களோ அந்த இனப் பிரிவினையை உடைத்து நொறுக்கும் விதத்தில் சிங்கள, தமிழ் தொழிலாளரின் உழைக்கும் வர்க்க ஒற்றுமை அங்கு ஏற்பட்டதை கோடிட்டு காட்டியது. இதனைக் கண்டு பீதியடைந்த சிங்கள-தமிழ் தேசிய முதலாளிகளும் அதாவது திருமதி. பண்டார நாயகாவும் செல்வ நாயகமும் கையோடு கைகோர்த்தே சாஸ்திரி-பண்டாரநாயகா ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.

அதன் விளைவாகவே இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் தமிழகம் திரும்ப நேர்ந்தது. அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தேசிய இனங்களிலும் இருந்த உடமை வர்க்கங்களின் தலைவர்கள் மலையகத் தமிழர்களிடம் தோன்றிய இனம் மொழி கடந்த தொழிலாளர் ஒற்றுமையும் இடதுசாரி சிந்தனைப்போக்கும் இலங்கை முழுவதும் வியாபித்து வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அன்று அவ்வாறு கைகோர்த்து செயல்பட்டனர்.

உண்மையிலேயே அப்பழுக்கற்ற இன உணர்வு இலங்கைத் தமிழர்களை வழிநடத்தியிருக்குமானால் மலையகத் தமிழரின் வெளியேற்றத்தின் போதுதான் அவ்வுணர்வு மிகப் பெரிதாக வெளிப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 15 லட்சம் மலையகத் தமிழர்களும் வெளியேற்றப் படாமல் இருந்திருந்தால் தமிழர் மக்கள் தொகையும் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். மத்தியத்துவப் படுத்தப்பட்ட ஆட்சியமைப்பில் கூடுதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற அது வழியும் வகுத்திருக்கும்.

இனமா? உடமையா? என்றால் உடமைக்கே முன்னுரிமை

ஆனால் மலையகத் தமிழர் பகுதியில் வளர்ந்த வர்க்க அரசியல் மேலும் வலுப்பெற்றால் அதனால் சொத்துடைமை அமைப்பிற்கே பங்கம் நேர்ந்துவிடும் என்பதால் தமிழ் தேசிய இனத்தின் உடைமை வர்க்கப் பிரதிநிதிகள் உடைமை வர்க்க அரசியலுக்கு தலைமையேற்றிருந்த சிங்கள அரசியல் வாதிகளுக்கு ஒத்துஊதி துயரகரமான மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கும் இன்னும்பல மலையகத் தமிழர் நாடற்றவராய் அங்கே இருப்பதற்கும் வழிவகுத்தனர். அதாவது உடைமையா, இனமா என்ற கேள்வி எழுந்த போது தமிழ் தேசிய உடைமை வர்க்கம் உடைமைக்கே முன்னுரிமை தந்தது.


தற்செயல் நிகழ்வல்ல

இன்று இங்கு தமிழ் இன பிரச்னையை முன்னெடுத்து முழுங்குபவர்கள் முன் வைப்பது போல் மலையகத் தமிழரின் வெளியேற்றம் இலங்கைத் தமிழர் அதற்கு தேவைப்பட்ட அளவு முக்கியத்துவம் தராததாலோ அல்லது தற்செயலாகவோ, ஒரு சாதாரண நிகழ்வாகவோ நடந்ததல்ல.

பொதுவாக இயல்பான வேளைகளில் உடமை வர்க்கங்களிடையே சந்தையை கைப்பற்றும் வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்தும் போட்டியே உக்கிரமாக நடைபெறுகிறது. அது எதுவரை என்றால் உடமை வர்க்கங்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடையாத வரை. அப்போட்டியில் வலு சேர்ப்பதற்காக உடமை வர்க்கங்கள் தங்களின் இனம், மொழி, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் திறம்படப் பயன்படுத்துகின்றன.

ஆனால் எப்போது தனி உடமைக்கே உலைவைக்கும் உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள் தலைதூக்குகின்றனவோ அப்போது இன, மொழி, கலாச்சார பேதங்கள் அனைத்தையும் மறந்து உடைமை வர்க்கங்கள் தங்களது அடிப்படை நலனான தனிச் சொத்துரிமையை பாதுகாக்க ஒன்று கூடி விடுகின்றன. இதனை அப்பட்டமாகவும் தெளிவாகவும் நிரூபித்ததே இலங்கையின் மலையகத் தமிழர் வெளியேற்றப் பிரச்னையாகும்.

நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க உடனடியான போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசும் எல்.டி.டி.ஈ.
அமைப்பும் முன்வரவேண்டும்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பிரச்னையால் அமைதியான வாழ்வை இழந்து நிற்கும் இலங்கைத் தமிழர்கள் இன்று நெருக்கடியான போர்ச்சூழலில் சிக்கித்தவிக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழீழம் என்று எல்.டி.டி.ஈ-யினால் அறிவிக்கப்பட்டு அங்கு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் பலவற்றை அது ராணுவத்திடம் இழந்துள்ளது. இறுதியில் தனது அரசியல் தலைநகரமான கிளிநொச்சியையும் முக்கிய கடற்படைத்தளமான முல்லைத் தீவு நகரையும் இழந்து எல்.டி.டி.ஈ. அமைப்பினரின் எல்லை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிக் காடுகளுக்குள் சுருக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை இராணுவத்துக்கும் எல்.டி.டி.ஈ-யினருக்கும் இடையிலான போர்க்களம் 300 சதுர கி.மீ. பரப்பளவிற்குள் முக்கியமாக புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. கிளிநொச்சியில் இருந்தும் முல்லைத் தீவிலிருந்தும் எல்.டி.டி.ஈ-யினர் பின் வாங்கும் போது அந்நகரங்களில் வாழ்ந்த மக்களோடு பின்நகர்ந்ததால் இந்த 300 சதுர.கி.மீ பரப்பளவிற்குள் சுமார் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரையிலான அப்பாவித் தமிழர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வீடின்றி வாசலின்றி காடுகளிலும் மேடுகளிலும் குடியேறி உள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையிலான சண்டையில் ராணுவத்தின் குண்டு வீச்சில் அனுதினமும் நூற்றுக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். காயம்பட்டவர்களுக்கு மருத்துவ வசதியும் உணவும் இன்றி அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தி ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி இலங்கை ராணுவம் அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிகிறது. எல்.டி.டி.ஈ கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை அமைதிப்பகுதி என அறிவித்து அங்கு வரும் மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன் மூலம் மக்களிடமிருந்து விடுதலைப்புலிகளின் தாக்குதல் மையங்களை தனிமைப்படுத்த அரசு முயல்கிறது. அதை நம்பி பாதுகாப்பு பகுதிக்கு வந்த மக்கள் மீதும் ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்துகிறது.

விடுதலைப்புலிகள் மக்கள் மத்தியில் இருந்து தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் என்று ராணுவம் சொல்கிறது. இல்லை, நாங்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தவில்லை; தமிழ் மக்களை கொல்ல வேண்டுமென்பதற்காகவே இலங்கை ராணுவம் குண்டு வீசுகிறது என்று விடுதலைப்புலிகள் சொல்கின்றனர்.

அங்கே போர்க்களத்தில் சுதந்திரமான பத்திரிக்கையாளர் எவரும் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் எது உண்மை என்று சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. ஆனால் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இச்சண்டையில் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களின் உயிர் அபாயத்தில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

தமிழகத்தின் அரசியல் கட்சிகளோ இப்போது எழுந்துள்ள இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எப்படி ஆதாயம் அடையலாம் அல்லது எதிர்தரப்பை ஆதாயம் அடையவிடாமல் எப்படித் தடுக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கின்றனர். அதே சமயம் இந்திய அரசு தனது ஏகாதிபத்திய நலனை மனதில் கொண்டு, அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்த போரில் இலங்கை அரசிற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறது. ராணுவத் தளவாடங்கள் முதற்கொண்டு ஆலோசனை வரை அனைத்தும் வழங்கி வருகிறது.

சமீபத்தில் இலங்கை சென்று வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி, எல்.டி.டி.ஈ மீது பரிவு காட்ட முடியாது, அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்புப் பிரதேசங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தை ஆளும் தி.மு.க-வின் நிதிஅமைச்சர் அன்பழகன் அடுத்த நாட்டு விவகாரத்தை ஓரளவிற்குத்தான் விவாதிக்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் இராஜபக்சே, போர்ச்சூழலில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளித்து அதற்குள் பாதுகாப்பு பகுதியன அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் வந்துவிட வேண்டுமென்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் மூலம் 48 மணி நேரத்திற்குள் இறுதி கட்டத் தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் தயாராகி வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள் 2 லட்சம் மக்கள் இருப்பதே கடும் நெரிசலாக இருக்கும் நிலையில் அங்கே இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்கும் போது அப்பாவித் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் மடிவது நிச்சயம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்களின் உயிரிழப்பு நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்யவேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தி வரும் இலங்கை அரசையும், அதற்கு உதவி செய்து வரும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையும் மாற்றுக்கருத்து! வன்மையாக கண்டிக்கிறது.

* உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி இருதரப்பும் போர்நிறுத்தம் செய்து 2 லட்சம் அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.

*ஐ.நா. சபை, செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடங்களுக்குச் சென்று மீண்டும் குடியேற உதவ வேண்டும்.

*இலங்கை ராணுவத்திற்கு இந்தியா செய்துவரும் ஆயுத உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டும்.

*ஆரம்பத்தில் தேசிய இனப் பிரச்னையாகக் கருக்கொள்ளா விட்டாலும் பின்னாளில் தேசிய இனப்பிரச்னையாக உருக் கொண்டுவிட்ட இலங்கைத் தமிழர் பிரச்னை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட - ஜனநாயக வழிமுறையாகிய வாக்கெடுப்பின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

அதாவது ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் (ஒட்டு மொத்த இலங்கை மக்கள் மத்தியில் அல்ல) வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அம்மக்கள் விருப்பப்படி தனிநாடாக பிரிந்து செல்வதா ஒன்று பட்ட இலங்கையில் சுயாட்சியுடன் இணைந்திருப்பதா என்பது முடிவு செய்யப்பட வேண்டும். அம்முடிவிற்கு இலங்கை அரசு மற்றும் எல்.டி.டி.ஈ உட்பட சர்வதேச சமூகமும் மதிப்பளிக்க வேண்டும்.

மேலே கண்ட ஜனநாயக வழிமுறையில் இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு தமிழகத்தில் உள்ள இடதுசாரி முற்போக்கு சக்திகளும், ஜனநாயக எண்ணம் கொண்டோரும், அறிவுஜீவிகளும் உணர்ச்சிக்கு இடமளிக்காது இலங்கையின் வரலாற்றுச் சூழலோடு இலங்கைத் தமிழர் பிரச்னையை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட நம் பங்கை ஆற்றவேண்டும்.

Friday, February 27, 2009

வான்கோவின் காது


வான்கோவின் காது
-மோவாசிர் ஜெய்மி ஸ்க்ளையர்

நாங்கள், வழக்கம்போல் சீரழிவின் எல்லையிலிருந்தோம். என் தந்தை, சிறு மளிகைக் கடை முதலாளி. அவருக்கு சரக்கு சப்ளை செய்த ஒருவருக்கு எக்கச்சக்கமாக பணம் பாக்கி வைத்திருந்தார். கடனை அடைக்க வழி எதுவும் இல்லை.

ஆனால் தந்தையிடம் பணத்திற்கு குறையிருந்தாலும் கற்பனைக்கு பஞ்சமில்லை, அவர் ஒரு உற்சாக மனோநிலையுடன் கூடிய புத்தி கூர்மையுள்ள பண்பட்டவர். அவர் பள்ளியை முடித்திருக்கவில்லை. ஒரு எளிய மளிகைக் கடையில் விதி அவரை முடக்கிப் போட்டது. இங்கு பிற இறைச்சிகளுடன் மற்றும் பன்றி இறைச்சிகளிடையே இருப்பின் தாக்குதல்களை தைரியத்துடன் எதிர் தாக்குதல் செய்தார். வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்து, அதைத் திருப்பிக் கேட்காததால் என் தந்தை மீது அவர்களுக்கு எப்போதுமே ப்ரீதி. ஆனால் இவருக்கு சரக்கு சப்ளை செய்பவர்களிடம் இது வேறு கதை. மன உறுதி மிக்க அந்த கனவான்கள், பணத்தை திரும்பிப் பெற விரும்பினர்.

அப்படி என் தந்தைக்கு கடன் கொடுத்த ஒருவர் இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யமற்றவர் என்பது ஊர் அறிந்தது.

வேறு யாராவதாக இருந்தால் விரக்திக்கு விரட்டியடிக்கப் பட்டிருப்பார்கள். வேறு சிலரோ தலைமறைவாக செல்ல உத்தேசம் பூண்டிருப்பர் அல்லது தற்கொலை கூட செய்து கொண்டிருப்பர். என் தந்தை அப்படி அல்ல. எப்போதுமே தன்னம்பிக்கையான என் தந்தை, அந்த தயவு தாட்சண்யமற்ற கடன்காரரிடமிருந்து விடுபட வழி இருப்பதாகவே நம்பினார். அந்தக் கடன்காரருக்கு பலவீனம் ஏதாவது இருக்க வேண்டும் அதை வைத்துதான் அவரை நாம் பிடிக்கப் போகிறோம் என்று கூட என் தந்தை கூறுவார். அங்குமிங்கும் அக்கம் பக்க விசாரணை மேற்கொண்ட என் தந்தை வளமான நம்பிக்கையுள்ள ஒன்றை தோண்டி கண்டுபிடித்தார்.

தோற்றத்தில் முரட்டுத்தனமான, உணர்ச்சியற்ற மனிதனான அந்தக் கடன்காரருக்கு வான்கோ மீது ரகசிய காதல் இருந்து வந்தது. மிகப்பெரிய அந்த ஓவியரின் மறு படைப்புகள் கடன்காரரின் வீட்டை முழுவதும் அலங்கரித்தன. கிர்க் டக்ளஸ் நாயகனாக நடித்த வான்கோவின் துன்பமான வாழ்க்கை பற்றிய திரைப்படத்தை அவர் குறைந்தது அரை டஜன் முறைகளாவது பார்த்திருந்தார்.

நூலகத்திலிருந்து வான்கோவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் ஒன்றை வாங்கி வந்த தந்தை வார இறுதியில் அந்தப் புத்தகத்தில் மூழ்கினார். பிறகு ஞாயிறு மாலையில் அவருடைய படுக்கையறைக் கதவு திறந்தது என் தந்தை வெற்றிக் களிப்புடன் அதிலிருந்து தோன்றினார்.

கண்டுபிடித்து விட்டேன்"!"
ஓரமாக என்னை அழைத்துச் சென்று - பனிரெண்டு வயதில் நான் தான் அவருக்கு பாங்கனும் கையாளும் - கண்கள் மினுமினுக்க கிசுகிசுத்தார் :

"வான்கோவின் காது. காது நம்மை காப்பாற்றும்"

"என்ன அங்க ரெண்டு பேரும் கிசுகிசுன்னு!" அம்மா கேட்டாள்.

என் அப்பாவின் அவள் கூறும் "தகிடுதத்தங்களை" அவள் சகித்துக் கொள்வதில்லை.

"ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை" என்றார் தந்தை, பிறகு குரலைத் தாழ்த்தி என்னிடம் "பின்னால் விளக்குகிறேன்" என்றார்.

பைத்தியக் கணத்தின் உச்ச நிலையில் வான்கோ தன் காதை அறுத்து காதலிக்கு அனுப்பி வைத்த கதையை என்னிடம் கூறினார் தந்தை. இந்த உண்மை அவரை ஒரு திட்டம் வகுக்கத் தூண்டியது. அதாவது வான்கோவை காதலித்த அந்தப் பெண் காதல் வயப்பட்ட என் தந்தையின் பாட்டனார் வான்கோவின் அறுபட்ட பதனப்படுத்தப்பட்ட காதை மரபுரிமையாக என் தந்தையிடம் ஒப்படைத்திருக்கிறார், கடன்காரரிடம் வான்கோவின் காதை கொடுத்துவிட வேண்டியதுதான் பதிலாக என் தந்தையின் கடனை அவர் நீக்கிவிடுவதோடு, கூடுதலாக கடன்களையும் அளிப்பார். இதுதான் தந்தையின் திட்டம்.

"நீ என்ன நினைக்கிற?"

அம்மா சொல்வது சரிதான் : அவர் வேறு ஒரு கற்பனையான உலகத்தில் வாழ்கிறார், இருப்பினும் அவரது யோசனையின் அபத்தம் அல்ல முக்கியப் பிரச்சினை, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எங்களுடைய நிலைமைதான் காரணம்.

"ஆனால் காதிற்கு எங்கே போவது?"

"காது?" இது அவரது மூளையில் உதிக்கவேயில்லை என்பது போல என் தந்தை அதிர்ச்சியடைந்தார்.

"ஆமாம்" வான்கோவின் காது, உலகத்தின் எந்த மூளையிலிருந்து உனக்கு அது கிடைக்கப் போகிறது?" என்றேன் நான்.

"ஹ", பிரச்சினையே இல்லை. பிணவறையிலிருந்து நமக்கு அது கிடைக்கும், என் நண்பன் ஒருவன் அங்கு வாயிற் காவலனாக இருக்கிறான், எனக்காக எது வேண்டுமானாலும் செய்வான்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே அவர் புறப்பட்டார். முற்பகலில் ஒளிப்பிழம்பாகத் திரும்பிய அவர், தன் கையிலிருந்த பார்சலை கவனமாக பிரிக்கத் தொடங்கினார். அது ஒரு பதனக்காப்புக் குடுவை, அதில் கருப்பான, விளக்க முடியாத வடிவத்தில் ஒன்று இருந்தது. என் தந்தை வெற்றிக்களிப்புத் தோரணையுடன் வான்கோவின் காது என்று அறிவித்தார்.

இல்லை என்று எவர் கூற முடியும்? இருப்பினும் எதற்கும் இருக்கட்டும் என்று குடுவையின் மீது "வான்கோ - காது" என்ற பட்டியை ஒட்டி வைத்தார்.
மதியம் கடன்காரர் வீட்டுக்கு இருவரும் புறப்பட்டோம். தந்தை அவர் வீட்டினுள் சென்றார், நான் வெளியே காத்திருந்தேன் ஐந்து நிமிடம் கழித்து அலங்கோலமாக மட்டுமல்லாது உண்மையில் கடுஞ்சீற்றத்துடன் தந்தை வெளியே வந்தார். கடன்காரர் என் தந்தையின் செய்கையை நிராகரித்ததோடு நிற்காமல் குடுவையைப் பிடுங்கி ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியவும் செய்திருந்தார்.

"மரியாதை கெட்டத்தனம்!"

நடந்தவை தவிர்க்க முடியாதது என நான் சிந்தித்த போதிலும் அவரது கோபத்திற்கு நான் உடன்பட்டேன். "மரியாதை கெட்டத்தனம்" "மரியாதை கெட்டத்தனம்" என்று சதா தந்தை முணுமுணுத்தவண்ணம் நாங்கள் அமைதியான அந்தத் தெருவில் நடக்கத் தொடங்கினோம்.

பாதி நடையில் சிலை போல் நின்ற அவர் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் :

"அது வலதா அல்லது இடதா?"

என்ன கேட்கிறார் என்று புரியாமல் "என்ன?" என்றேன்.

"வான்கோ அறுத்துக் கொண்ட காது. அது வலது காதா இடது காதா?" இந்த அனைத்து நடைமுறைகளிலும் எரிச்சலடைந்தவனாக, "எனக்கு எப்படி தெரியும்?" உனக்கு தான் தெரிஞ்சிருக்கணும், நீதான் புத்தகத்தை படிச்ச?"

"ஆனா தெரியலை" என்று துயரமிக்க குரலில் அவர் கூறினார், எனக்குத் தெரியவில்லை என்று நான் ஒப்புக் கொள்கிறேன்"

நாங்கள் ஒரு சில நிமிடங்களுக்கு அமைதியாக நின்றோம். அப்போது என்னை நச்சரித்து வந்த ஒரு சந்தேகத்தினால் நான் தாக்கப்பட்டேன், சந்தேகத்தை வெளிப்படுத்தும் தைரியம் எனக்கில்லை, ஏனெனில் அதன் விடை எனது சிறுபிராயத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்று எனக்குத் தெரியும். எனினும் :

"குடுவையில் இருப்பது வலது காதா, இடது காதா?" என்று கேட்டேன்.

வாயடைத்துப் போனவராக அவர் என்னைப் பார்த்தார்.

"உனக்கு தெரியுமா? எனக்கு சுத்தமா தெரியல" என்று பலவீனமான குரலில் அவர் கிசுகிசுத்தார்"

பிறகு நாங்கள் எங்கள் வீட்டை நோக்கி நடை போடத் துவங்கினோம், ஒரு காதை, நீங்கள் கவனமாக ஆராய்ந்தீர்களானால் - எந்த காதாயிருந்தாலும், அது வான்கோவினுடையதோ அல்லது இல்லையோ - காது கிருக்கு மறுக்கான பல்வழி அமைப்பு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த கிருக்கு மறுக்கு அரும்புதிர் பாதையில் நான் தொலைந்து போனேன், அதிலிருந்து மீண்டு வெளியேற எனக்கு எப்போதும் வழி தெரிந்திருக்கவில்லை.

Tuesday, February 24, 2009

இசையே உயிர்மூச்சு




இரு ஆஸ்கர்விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்,தமிழர்களான நம் அனைவருக்கும் மிகப்பெரிய கவுரவத்தை தேடித்தந்திருக்கிறார்.இதற்கு முன் எந்தவொரு இந்திய இசை அமைப்பாளரும் சாதிக்காததை சாதித்து மிக உயர்ந்த இடத்தை ரஹ்மான் எட்டிவிட்டார். அமெரிக்க மண்ணில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி, இந்தியர்களாலும் சர்வதேசத் தரத்துக்கு இணையானதிறமையை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்துவிட்டார். இந்திய சாதனையாளர்களைக் கொண்ட வெளிநாட்டுப் படங்களும், இந்தியப்படங்களும் இனி ஆஸ்கரில் போட்டி போட்டு முந்தி செல்வதற்கான பாதையை ரஹ்மான் வகுத்துவிட்டார். இடைவிடாத முயற்சி, இரவு பகல் பாராத கடின உழைப்பின் மூலம் இச்சாதனையை அவர் புரிந்திருக்கிறார்.
1967 ஜன. 6ல் சென்னையில் பிறந்தவர் ரஹ்மான். இவரது தந்தை சேகர், கேரள சினிமாவின் இசையமைப்பாளர். ரஹ்மானின் 9 வயதில் அவரது தந்தையை இழந்தார். குடும்ப சுமை காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விடும் நிலை ஏற்பட்டது.இந்துவான இவர் தனது குடும்பத்தினருடன் இஸ்லாம் மதத்துக்கு மாறினர். திலீப்குமார் என்ற பெயரை ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.இளம்வயதில் தன்ராஜ் என்பவரிடம் இசை கற்றார். 11வது வயதில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற பிரபலங்களின் மேடை நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞராக பங்கெடுத்துக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் "வெஸ்டர்ன் கிளாசிக்கல்' இசையில் பட்டம் பெற்றார். சென்னையில் சொந்தமாக இசைபதிவுக்கு "பஞ்சதன் ரெக்கார்ட் இன்'ஒரு ஸ்டுடியோ அமைத்து விளம்பரங்கள், டாக்குமென்ட்ரி படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.

1992ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தனது "ரோஜா' படத்தில் இசையமைக்க ரஹ்மானுக்கு வாய்ப்பளித்தார். இப்படத்தின் சின்ன சின்ன ஆசை... உள்ளிட்ட பாடல்கள் தமிழ் இசை உலகில் புரட்சிஏற்படுத்தின. பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதிலிருந்து இப்பாடல் மறையவில்லை.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை கைப் பற்றினார். "டைம்'பத்திரிகை உலகின் சிறந்த பத்து பாடல் தொகுப்புகளில் ஒன்றாக "ரோஜா' திரைப்படத்தின் பாடல்களை குறிப்பிட்டுள் ளது. இந்தியாவில் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத பெருமைகள் இவை. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ரஹ்மான் உயர்ந்தார். இவரால் மேற்கத்திய இசையில் மட்டுமே சாதிக்க முடியும் எனபரவலாக விமர்சனம் எழுந்தது. "கிழக்கு சீமையிலே', "கருத்தம்மா' ஆகிய படங்கள் மூலமாக இந்த விமர்சனங்களையும் பொய்யாக்கினார். "ரோஜா', "பம்பாய்', "ஜென்டில்மேன்',

"காதலன்' ஆகிய படங்கள் மூலமாக பாலிவுட்டில் நுழையும் முன்பே ரஹ்மான் இந்தி திரையுலகிலும் பிரபலமடைந்தார்.பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் "ரங்கீலா' படத்தின் மூலமாக இந்தி சினிமாவில் ரஹ்மான் கால்பதித்தார். இந்தப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்துபாலிவுட் படங்களில் பணியாற்ற தொடங்கினார். "தில்சே', "லகான்', "தால்' என ரஹ்மானின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது. பாலிவுட்டில் தயாரிக்கப்படும் முக்கியமான படங்களுக்கு ரஹ்மான் இசையமைக்க தொடங்கினார்.இந்திய சுதந்திர பொன்விழாவின் போது ரஹ்மானின் "வந்தே மாதரம்' வெளியானது. ஜெர்மனியில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி, பிரிட்டனில் "பாம்பே டிரீம்ஸ்' இசை நாடகம் என சர்வதேச வாய்ப்புகள் ரஹ்மானுக்கு கிடைத்தன. "எலிசபத், த கோல்டன் ஏஜ்', "லார்ட் ஆப் த ரிங்ஸ்', "வாரியர்ஸ் ஆப் ஹெவன் அண்டு எர்த்', "இன்சைட் மேன்', "ஆக்சிடென்டல் ஹஸ்பண்ட்' போன்ற ஹாலிவுட் படங்களில் இவரது இசை பயன்படுத்தப்பட்டது. "வந்தே மாதரத்தின்' வெற்றியை தொடர்ந்து "ஜன கண மன' வெளிவந்து பாராட்டை பெற்றது. இது இந்திய தேச உணர்வை இளைஞர்களிடையே தட்டி எழுப்பியது. ஐ.நா.,வின் வறுமை ஒழிப்பு குறித்து திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்வெளியான "பிரே பார் மி பிரதர்' என்ற இவரது ஆல்பமும் புகழ்பெற்றது.2005ம் ஆண்டு ஏ.எம்., ஸ்டுடியோ தொடங்கி அதை பஞ்சதன் ஸ்டுடியோவுடன் இணைத்தார்.

கே.எம்., மியூசிக் என்ற பாடல் கேசட்கள் வெளியிடும் நிறுவனத்தை தொடங்கினார். முதன்முதலில் தனது "சில்லுனு ஒரு காதல்' பாடலை இந்தநிறுவனம் மூலமாக வெளியிட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லியனர்' படம் இவரது இசைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. உலகம் முழுவதும் திரைப்பட விழாக்களில் இந்தப்படம் விருதுகளை வாரிக்குவித்தது. இந்த படத்தின் இசைக்காக ரஹ்மானுக்கு கோல்டன் குளோப், பாப்டா, பிளாக் ரீல் அவார்ட், புராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அவார்ட், சேட்டிலைட் அவார்ட்ஸ் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன. இந்தியாவிலேயே நான்கு முறை தேசியவிருது பெற்ற இசையமைப்பாளர் ரஹ்மான் மட்டுமே.கோல்டன் குளோப், பாப்டா விருதுகளை பெறும் முதல் இந்தியரும் அவரே. உலகிலேயே மிக வேகமாக விற்பனையாகும் இசைத்தொகுப்புகளில் ரஹ்மானின் இசைத் தொகுப்புகுள் ஆறாவது இடத்தில் உள்ளன. இதன் மூலம் மடோனா, எல்டன் ஜான் போன்ற ஜாம்பவான்களையே ரஹ்மான் முந்தியுள்ளார். 42 வயதாகும் ரஹ்மானுக்கு மனைவி சாய்ரா பானுவும் குழந்தைகள் கதீஜா, ரகீமா, அமான் ஆகியோர் உள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இவரது மூத்த சகோதரியின் மகன்.இந்திய இசை வரலாற்றில் தனக்கென ஒரு புதியஅத்தியாயத்தை பெற்றுவிட்ட ரஹ்மான் வாழ்த்துஇசையாலும் மகிழ்ச்சியாலும் மனம் நிறைந்திருக்கிறார்.


ஆஸ்கர் விருதை கைப்பற்ற வேண்டும் என பல இந்திய திரைப்படகலைஞர்கள் ஆசைப்பட்டாலும். இதற்குமுன் இரு இந்தியர்களுக்கு மட்டுமே கனவுபலித்திருக்கிறது.பானு அத்தையா : (காந்தி திரைப்படம்) - 1982இந்தியாவின் முன்னணி உடை வடிவமைப்பாளர் பானு அத்தையா மும்பையை சேர்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் உடைவடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 1982ல்பிரிட்டனின் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் "காந்தி' படத்தில் பணியாற்றியதற்காகஇவருக்கு சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. ஜான் மோலோ என்ற பிரிட்டன் உடை வடிவமைப்பாளருடன் ஆஸ்கர் விருதை இவர் பகிர்ந்துகொண்டார். அத்தையா உடை வடிவமைப்பாளராக பணியாற்றிய"லகான்' படம் ஆஸ்கரின் இறுதிச்சுற்று வரை சென்றது. இந்த படத்துக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இது வரை இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் பானு. ஆஸ்கர் விருதுக்குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

சத்யஜித்ரே - 1992: மேற்கு வங்கத்தை சேர்ந்த இயக்குனர் சத்யஜித்ரே. "பதேர் பாஞ்சாலி', "அபராஜிதோ' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களை இயக்கியவர். இவரது "செஸ் பிளேயர்' படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. எனினும் விருது பெறவில்லை."கான்' விருது உள்ளிட்ட பல புகழ் பெற்ற சர்வதேச விருதுகள், 32 தேசிய விருதுகள், தாதா சாஹேப் பால்கே விருது என இந்திய சினிமாவின் மிகப்பெரிய சாதனையாளராக சத்யஜித் ரே திகழ்ந்தார். 1992ம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்த ஆண்டே இவருக்கு "பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. 1992ல் சத்யஜித்ரே மறைந்தார். இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளராகவும் இவர் சாதித்தார்.

பூக்குட்டி 3வது சாதனையாளர்: ரஹ்மானின் பெயரை அறிவிப்பதற்கு சற்று முன் விருதை பெற்று இந்திய ஆஸ்கர் விருது பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றுவிட்டார் ரெசுல் பூக்குட்டி.37 வயதாகும் பூக்குட்டி, கேரளாவின் கொல்லத்தில் பிறந்தவர். புனேயில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பயின்றார். இவரது முதல் படம் "பிரைவேட் டிடெக்ட்டிவ்'. 2005 வெளிவந்த "பிளாக்' திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை. "டிராபிக் சிக்னல்', "காந்தி மை பாதர்', "கஜினி'(இந்தி) ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார். காந்திஜியின் மகன் ஹரிலால் காந்தியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட "காந்தி மை பாதர்' படத்தில் பணிபுரிந்ததை மறக்க முடியாத அனுபவமாக இவர் குறிப்பிடுகிறார். பூக்குட்டி பாலிவுட்டின் மிக முக்கியமான சவுண்ட் மிக்சிங் கலைஞராக உயர்ந்தார். இதனால் "ஸ்லம்டாக் மில்லினர்' வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. சவுண்ட் மிக்சிங் பிரிவில்"பாப்டா' விருது கிடைத்த போது, "13 ஆண்டுகளாக திரைக்கு பின்னால் பணிபுரிந்து வருகிறேன். அதற்கான அங்கீகாரம் தற்போது கிடைக்க தொடங்கியுள்ளது' என பூக்குட்டி குறிப்பிட்டார். வெற்றியை மலையாள திரையுலகுக்கு சமர்ப்பிப்பதாக பூக்குட்டி கூறியுள்ளார். "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் பணிபுரிந்த ரிச்சர்ட் பிரைக், இயான் டாப்ஆகியோர் சவுண்ட் மிக்சிங்குக்காக ஆஸ்கர் விருதை பூக்குட்டியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

குல்சார்: இந்தி பாடலுக்கு ஆஸ்கர் : "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் இடம்பெற்ற "ஜெய் ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த பாடலுக்கான விருதை ஏ.ஆர். ரஹ்மானோடு பகிர்ந்து கொண்டிருப்பவர் இந்தி பாடலாசிரியர் குல்சார்.72 வயதாகும் குல்சாரின் இயற்பெயர் சம்பூரன் சிங் கல்ரா. பஞ்சாபில் பிறந்த குல்சார் 1961ம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். இந்தி நடிகை ராக்கியை இவர் திருமணம் செய்து கொண்டார்.பாடல்கள் எழுதுவதோடு, படங்களில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1999ம் ஆண்டு"இஜாசத்' படத்துக்காக தேசிய விருதை வென்றார். 2004ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்தது.

ரூ.50 சம்பளத்திலிருந்து ஆஸ்கர் விருது வரை:வெற்றி வாழ்க்கையை சொல்கிறார் ரஹ்மான்!: இசையமைப்பாளர் ரஹ்மான் இசைக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். 1990களில் இந்திய இசைத்துறையில் தனக்கென தனிப்பாணியை வகுத்த இவர், மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றார். இவரது முதல் படமான ரோஜா தேசிய விருது பெற்றது. இவரது முதல் ஆங்கில படமான "ஸ்லம்டாக்மில்லினர்' ஆஸ்கர் விருதுகளை குவித்துவிட்டது.


அமெரிக்காவில் ரஹ்மான் அளித்த பேட்டி:

"ஸ்லம்டாக் மில்லினர்' இயக்குனர் இந்தியாவை இதற்கு முன் பார்த்ததில்லை. மும்பை சேரிப்பகுதி குறித்த அவரது படத்தில் பங்கேற்க நீங்கள் தயங்கினீர்களா?
முதலில் டேனி பாய்ல் திரைக்கதையை அனுப்பி வைத்தார். ஆனால் அதை படிக்க எனக்கு நேரமில்லை. இயக்குனர் சேகர் கபூர் டேனி அவரது நண்பர் என்றும் அவரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்றார். அதன் பின் சில மாதங்களில் இயக்குனர் அனுப்பிய "டிவிடி'யை பார்த்தேன். படம் பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். மூன்று வாரங்களில் இசையமைத்தேன்.

உங்கள் வாழ்க்கையையும் படம் பிரதிபலித்ததா?
ஆம், ஆனால் அந்த அளவுக்கு நான் போராடவில்லை. நானும் நடுத்தர குடும்பத்தில் தான் பிறந்தேன். அப்போது பல விஷயங்களை எட்டவில்லை. இப்போது ஹாலிவுட்டில் உங்கள் முன் அமர்ந்து பேசுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.

பாய்ல் உங்களிடம் எவ்வாறான இசையை எதிர்பார்த்தார்?
சென்டிமென்ட், சோகமான இசை வேண்டாம் என கூறினார். சிலகாட்சிகள் படத்தில் சோகமாக இருக்கும். அதை மாற்றும் வகையில் இசை அமைந்திருக்கும். படம் பார்க்கும் போது மலை உச்சியில் இருந்து விழுவது போலவும், பின்னர் சிறகை விரித்து பறப்பது போலவும் இருக்கும்.

இந்திய படங்களுக்கும், ஆங்கிலப்படங்களுக்கும் இசையமைப்பதில் என்ன வித்தியாசம்?

"ரோஜா' படம் பல விருதுகளை பெற்ற போது மிகப்பெரியஆச்சர்யமாக இருந்தது. தற்போது தான் முழுவதுமாக ஓர் ஆங்கில படத்தில் பங்கேற் றுள்ளேன். இது புதிய அனுபவம்.

முதலில் பெற்ற சம்பளம்?
முதலில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக சம்பளம் பெற்றேன். தினம் ரூ.50 கொடுத்தார்கள் என நினைக்கிறேன். பின்னர் ஒரு போட்டோ லேப் விளம்பரத்துக்கு இசையமைத்தேன். விளம்பரங்களில் பணம் கிடைத்தது. அதன் மூலமாக சினிமாவில் நுழைந்தேன்.

ஒரு ஆண்டில் எத்தனை படத்துக்கு இசையமைப்பீர்கள்?
சில சமயம் எட்டு படங்களை முடிப்பேன். ஒரு சில ஆண்டுகளில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன்.பாலிவுட்டில் ஒரு சிலர் ஒரே ஆண்டில் 30 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

எந்த ஹாலிவுட் படத்தில் பணியாற்றியது சுவாரஸ்யமாக இருந்தது?
"லார்ட் ஆப் த ரிங்ஸ்' படத்தில் வேலை அதிகமாகவும் இருந்தது. சுவாரஸ்யமாகவும் இருந்தது."எலிசபத்' படத்திற்காக இது வரை செய்யாத புதிய பாணியில் இசையமைத்தேன்.


இந்திய கதை - வெளிநாட்டு தயாரிப்பு: இந்திய படங்கள் எதுவுமே இதுவரை ஆஸ்கர் வென்றது இல்லை. இந்திய மொழி படமாக இருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படமாக இருந்தாலும் ஆஸ்கர் எட்டாக்கனியாக இருந்தது. முதல் ஆஸ்கரை வென்ற காந்தி, "ஸ்லம்டாக் மில்லினர்' மற்றும் தற்போது குறும்படப்பிரிவில் ஆஸ்கர் வென்றுள்ள "ஸ்மைல் பிங்கி' ஆகிய படங்கள் அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகளே.

காந்தி: முதன்முதலில் இந்தியர் ஆஸ்கர் விருதை கைப்பற்ற காரணமாக அமைந்தது காந்தி திரைப்படம். தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்தப்படம் 1982ம் ஆண்டு வெளிவந்தது. இதன் பெரும்பாலான காட்சிகள் இந்தியாவிலேயே படம் பிடிக்கப்பட்டன. ரிச்சர்ட் அட்டன்பரோ இந்தப்படத்தை இயக்கினார். பென் கிங்ஸ்லி காந்தியாக நடித்தார். சிறந்த படத்துக்கான விருது உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை இந்தப்படம் கைப்பற்றியது. பானு அத்தையாவுக்கு சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. காந்திஜியின் இறுதிச்சடங்கு காட்சிக்காக ஏறத்தாழ 3 லட்சம் துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதன் மூலமாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்தப்படம் இடம் பிடித்தது.

"ஸ்மைல் பிங்கி': இந்தியாவில் எடுக்கப்பட்ட "ஸ்மைல் பிங்கி' என்ற குறும்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 39 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் ஆறு வயது சிறுமியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. "சிறிய குறும்படம்' என்ற பிரிவில் இந்த படத்துக்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது. இதன் கதை உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் நடந்தது. இந்தி மற்றும் போஜ்புரி மொழியில் இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிளவு அண்ணத்தால் பாதிக்கப்பட்டதால் ஒரு சிறுமிசமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறாள். ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலமாக அவளது குறைபாடு நீங்குகிறது. இது எவ்வாறு அவளது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றுகிறது என்பதை இந்த திரைப்படம்விவரிக்கிறது.இந்தப்படத்துக்காக அண்ணபிளவு குறைபாடு கொண்ட ஒரு சிறுமியை கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளனர். படத்தில் வருவது போல உண்மையிலேயே அவளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் மேகன் மைலன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்
ஸ்லம்டாக் மில்லினர்: மும்பை நகரில் படம்பிடிக்கப்பட்ட "ஸ்லம்டாக் மில்லினர்' திரைப்படம் மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றயுள்ளது. இந்த ஆண்டில் அதிக ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றிய படம் இது தான்.பாலிவுட் சூப்பர்ஸ்டார்அமிதாப் பச்சன் நடத்திய "கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குரோபதி நிகழ்ச்சியை நடத்துபவராக இந்தி நடிகர் அனில் கபூர் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜமால் மாலிக் என்ற இளைஞன் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறி ரூ. 1 கோடி வென்றுவிடுகிறான். அடுத்த நாள் கடைசி கேள்விக்கு பதில் கூறினால் ரூ.2 கோடி கிடைக்கும் என்ற நிலையில் அவன் மீது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு சந்தேகம் எழுகிறது. போலீசார் அவனை கூட்டிச் சென்று கடுமையான முறையில் விசாரிக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் ஜமால் தனது கதையை கூறும் போது மும்பையின் சேரிப்பகுதியான தாராவியில் பிறந்த அவன் குரோர்பதி கேள்விகளுக்கு எவ்வாறு சரியாகவிடையளித்தான் என்ற மர்மம் விடுபடுகிறது. ரூ. 75 கோடியில் இந்தப்படம் தயாரிக்கப்பட்டது. பிற ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடும் போது இது மிகச்சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் திரையிட்ட பின்னர், நேரடியாக "டிவிடி'யில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் முதலில் அமெரிக்காவில் திரையிடப்பட்டவுடன் விமர்சகர்களின் பாராட்டுக்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் இந்த படம் வெளியிடப்பட்டது. "பாப்டா', "கோல்டன் குளோப்', "ஸ்ரீட் ஆக்டர்ஸ் கில்ட்' உள்ளிட்ட முக்கிய திரைப்பட விருதுகளை "ஸ்லம்டாக் மில்லினர்' கைப்பற்றியது.விரைவில் தமிழிலும் மொழிமாற்றம் பெற்று வெளியாகவிருக்கிறது.

Saturday, February 21, 2009

Muslims must get out of this sense of victimization?? Ajit Sahi


Q: Muslims must get out of this sense of victimization?? Ajit Sahi
Ajit Sahi is an investigative reporter with the New Delhi-based Tehelka magazine. He recently published several startling reports clearly indicating that scores of innocent Muslims, including some former members or associates of the banned Students? Islamic Movement of India (SIMI), across the country have been falsely implicated by the police, intelligence agencies and the media as being behind various terror attacks. In this interview with Yoginder Sikand, he talks about how influential sections of the Indian media are playing a major role in demonizing Muslims today.


Q: You have been associated with the media for several years now. How do you see the way in which the so-called ?mainstream? Indian media responds to or projects Muslims and Islam, particularly in the context of the recent spate of bomb attacks, in which the media, despite the absence of evidence, has blamed Muslims and Muslim organizations for?

A: I think the media does not want to recognize or admit it, but it sees these issues from basically a Hindu, or at least a non-Muslim, point of view. I tell my media friends that if they were Muslims they would not believe any of this media propaganda about Indian Muslims taking to terrorism, or at least would be greatly suspicious of these claims, because these claims are largely dubious and false. Their typical answer is, ?No, we are secular, liberal and progressive. We are not communal?. But I do not agree, of course. I think the way they respond necessarily indicates that they are influenced by their not being Muslim. A hidden anti-Muslim bias pervades the media, although media persons who like to call themselves secular and liberal would hate to admit this. This is reflected, for instance, in the fact that in most cases of Muslims arrested on grounds of terrorism, all that we have are ?confessions? before the police, which are not admissible as evidence before courts, because obviously such ?confessions? are often false and procured after brutal torture. But the media simply projects these statements as supposed evidence, and then weaves this picture of Muslims as terrorists.

At the same time, there is a distinct lack of willingness in large sections of the media to recognize the very obvious and very deadly fact of terrorism being engaged in by people linked to the Hindutva camp. Thus, for instance, there is huge evidence against Narendra Modi of being responsible for the massacre of Muslims in 2002, and if it was somewhere else in the world Modi would have been tried as a criminal, and would probably have been sentenced to death or a hundred years in prison. (For the record, I am opposed to capital punishment.) I mean, he should be tried under international criminal law and charged with ?ethnic cleansing?, but, of course, our supine, so-called ?mainstream? media is not demanding this. You really can?t expect anything else from India?s weak-kneed so-called intellectuals. They do not have the guts to correctly describe Hindutva as it really is?as fascism, in the same league as Nazism.


Q: How do you explain what you have referred to as the deep and pervasive anti-Muslim bias in large sections of the Indian media?

A: One reason for this, of course, is that there are very few Muslims in the so-called ?mainstream? media, even in those newspapers, magazines and TV channels that see themselves as ?progressive? or ?liberal?. Now, some might say that this is because there are relatively very few well-educated or well-qualified Muslims, but I don?t buy that argument. Surely, if you have a staff of a hundred people it should not be difficult to find twelve or fourteen educated Muslims to employ to reflect the proportion of Muslims in the Indian population. But I would be surprised if any of the so-called ?mainstream? papers have even half that proportion of Muslims among their staff.
The argument is also often made that ensuring a proper representation of the Muslims or the marginalized castes; the Dalits and the Adivasis, in the media would impact on the media?s quality or merit. I think this cry about merit is the biggest hoax. After all, we all know that appointments in government services and even so often in the private sector are often not made on the basis of any sort of merit at all. Give me another story! I?d rather believe that the British are going to come back to rule India than swallow the claim that appointments are always made on the basis of merit.

Q: How do you think this sort of portrayal of Muslims in the media can be countered?

A: The media is a reflection of the middle class of any country. It is the middle class that inhabits the media. So, unless the dominant views in a middle class change, the media cannot change substantially. People have to be sensitized to realities, but this is not what the media is really doing. This can only happen when there is a fair representation of all social groups, including religious communities and castes, in the media. But, like India?s bureaucracy and the judiciary, the Indian media has a very heavy over-representation of ?upper? caste Hindus, who are otherwise a numerical minority in our society.

The Indian news media has become even more blatantly communal and anti-Muslim in recent decades. A turning point came when LK Advani became Minister for Information and Broadcasting in the Janata Party Government under Morarji Desai in 1977. That gave a tremendous boost to the RSS, which started pushing in large numbers of hardcore RSS-walas into various newspapers. Before that, the Hindutva ideology was considered so demeaning that people would not even discuss it in their drawing rooms. It was considered a pathetic contrast to the uplifting moral ideology of Mahatma Gandhi and Jawaharlal Nehru, which aimed at healing our society and nation-building.

Q: In which way does nationalist jingoism feed into anti-Muslim biases?

A: I think there is a very clear and direct relationship between the two. The sort of nationalism that is being projected by the Hindutva lobby is fiercely anti-Muslim. It is premised on a Brahminical worldview. It projects Muslims, but also all non-Hindus and those Hindus who do not agree to its ideology, as ?anti-national?. The Hindutva groups say they are willing to accept Muslims so long as they don?t ?look Westward?. This is a cunning strategy aimed at forever stoking the flames of divisiveness. For what is a Muslim worth if he doesn?t look westward, toward Makkah? Isn?t it bizarre to argue that capitalism is good to globalize but Islam must only localize?

Also, the Hindutva lobby is obsessed with military power and the desperate lust for India to be recognized as a ?super-power?. But the irony of the thing is that while it brands Muslims as ?anti-national?, there are an overwhelming number of middle-class Hindu families in this country whose sons and daughters have gone, or who want to go, to settle in the US and thereby turn their backs to India. Strange as it may seem, NRI Hindus are one of the fiercest backers of Hindutva lobby that pushes son-of-the-soil nationalism. I think that it is these people who have abandoned India for the American life that are pathetically anti-national. Why shouldn?t they be first asked to show their patriotism toward India by returning to the motherland? I mean, how do you turn your back on your parents, on the land of your birth, its mountains, the air and the rivers of the country that nurtured you, and defect to America, a country founded on genocide and still practicing it on a global scale, and yet be not considered anti-national?

Q: What do you think Muslim organizations should do to counter the demonization of the community in the media?

A: To expect that the media, the courts, the police and the politicians would deliver on their own is futile. For this, one has to build public pressure. Muslim organizations and ordinary Muslims must get out of this sense of victimization in which they are trapped. I can empathise with them, given the concerted assaults on their lives and liberties. But they alone can bring themselves out of it. They have to mobilize their community and battle, without doubt in a non-violent way, for their civil rights as Indians. What can they do? Well, if a hundred Muslims were to arrive in a courtroom when an innocent Muslim, falsely accused of being a terrorist, is brought before the magistrate, there would be immense pressure on that magistrate to record the statement of the accused instead of leaning the way of the police and sending him back with the police, to be tortured more. need to dread the evil state and the public bias that our Muslim brothers face.

(Ajit Sahi can be reached at: ajit@tehelka.com)

Wednesday, February 18, 2009

Sudan’s top novelist dies in London at 80


Al-Tayib Saleh one of Sudan’s prolific and iconic novelists died today in London from complications related to a kidney condition, one of his close friends told Sudan Tribune. He was 80 years old.
Saleh was born at a village in North Sudan in 1929 and moved to the Khartoum for his bachelors’ degree. He then traveled to UK to receive a degree in international affairs.
During his stay in London, Saleh worked at the British Broadcasting Corporation (BBC) Arabic service and managed to become the head of the drama division at a record young age.
The Sudanese novelist also worked for the Information ministry in Qatar and the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) headquarters in Paris.
Saleh is best known for his masterpiece ‘Season of Migration to the North’ written in 1966 which deals with the perceptions of people in the third world to the West. The novel was translated to a number of world languages and a subject of intense debate inside and outside Sudan.
It was also selected by a panel of Arab writers and critics as the most important Arab novel of the twentieth century.
Owing to sexually explicit portions of the novel the Sudanese authorities banned the book in the 90’s. The Sudanese novelist at the time said the decision is similar to “locking the stable after the horse already gone”.
Some observers at the time described the move by Khartoum as retaliation to Saleh’s stance opposing the Islamic backed regime. He wrote highly publicized op-ed titled “Where did these people come from? Actually who are they?” questioning what he saw as blatant violation of Sudanese customs and traditions by the government and its figures at the time.
However in an interview with Sudanese TV last year Saleh praised the Sudanese president Omer Hassan Al-Bashir. He also said that a newer version of the government has emerged following the breakaway between Bashir and Islamist leader Hassan Al-Turabi.
A number of Sudanese organizations have recently pushed for nominating Saleh for the Nobel Prize in Literature.
Saleh enjoyed immense popularity and respect among ordinary Sudanese. He is survived by his wife and three girls.

Tuesday, February 17, 2009

கதை


எல்லாம் ஒலி மயம்

நீங்கள் இதை வாசிக்கும் போது மிகத் தெளிவாக புரியும் என்று நம்பலாம்.ஆனால் இதை வேறொரு ஆள் வாசிக்கும் போது உங்களுக்கு புரியாமலிருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.நீங்கள் காதில் 'உய்..ங் ' என்ற இரைச்சல் மட்டுமே கேட்பதாக சொல்லுகிறீர்கள் அதோ அந்த குழந்தை வீறிட்டழும் சப்தம் கூட 'உய்..ங் ' என்று மட்டுமே இருப்பதாக ஏன் சொல்லுகிறீர்கள் ? பசுமாடு விளிக்கும் சப்தம் கூட 'உய்..ங் ' என்று தான் கேட்கிறதா ? வீட்டில் உள்ளவர்கள் ஏதோ வாயசைத்து பேசுகிறார்கள் என்று மட்டும் தான் புரியமுடிகிறதா ? என்ன அவர்களும் கூட 'உய்..ங் ' என்று மட்டும் தான் சப்தமிடுகிறார்களா ? வேறு எந்த சப்தமும் கேட்கவில்லை என்றா சொல்லுகிறீர்கள் ? யாரு என்ன பேசினாலும் 'உய்..ங் ' என்று மட்டும் தான் கேட்கிறதா ?

நீங்கள் தொலைக்காட்சியை பார்கிறீர்கள்.ஆனால் தொலைக்காட்சியில் இருந்து “உய்..ங்” என்று தான் சப்தம் வருவதாக சொல்கிறீர்கள்.சரி..தொலைக்காட்சியை விடுவோம்.போன் மணி ஒலிக்கிறது.ரிஸீவரை எடுத்துப் பேசுங்கள்.மீண்டும் “உய்..ங்” என்று மட்டும் கேட்கிறது என்றா சொல்கிறீர்கள். ? நீங்கள் “உய்..ங்” என்று சப்தம் கேட்கிறது என்று புகாராகவா கூறுகிறீர்கள். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.யாருமே உங்களிடம் “உய்..ங்” என்று மட்டுமே வேண்டுமென்று சப்தமிடுவதில்லை.அவர்கள் உங்களிடம் “உய்..ங்” என்று சப்தமிட வேண்டிய அவசியம் என்ன ? அவர்களை விடுங்கள்..குழந்தையும், பசுமாடும்,தொலைக்காட்சியும்,போனும் கூடவா “உய்..ங்” என்று சப்தமிடவேண்டும்.நீங்கள் குழம்பிப் போய் இருக்கிறீர்கள் அல்லது உங்களுக்கு காதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. உங்களிடம் பிரச்சனையை வைத்துக் கொண்டு மற்றவரை குறை சொல்வது அவ்வளவு நல்லதல்ல.

நீங்கள் வீட்டை விட்டு வெளியே இறங்கி சாலையில் மெதுவாக நடந்து கொண்டிருக்கிறீர்கள்.சாலையில் வேகமாகப் போகும் வாகனங்களின் இரைச்சலும்,ஹார்ன் சப்தங்களும் கூடவா “உய்..ங்” என்று கேட்கவேண்டும்.உங்களுககு எதிரே வருபவர்களும் உங்களை தாண்டி போகுபவர்களும் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிட வேண்டிய அவசியம் என்ன ? நீங்கள் சொல்வது போல் எல்லோரும் திட்டமிட்டே இப்படி செய்கிறார்கள் என்பது வீணாக நீங்கள் கற்பனை செய்து கொண்டதாகும்.இந்த உலகத்த்டில் உள்ள எல்லா சப்தங்களும் உங்களுக்கெதிராக திசை திரும்பி சூழ்ச்சி செய்கின்றன என்று சொல்வது பெரிய அபாண்டமாகும். ஒவ்வொன்றும் அதற்கான சப்தத்துடன் அதனதன் ஏற்ற இறக்கங்களுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.சலசலக்கும் ஓடையின் சப்தமும்,பெருகியோடும் ஆற்ரின் சப்தமும்,காட்டாற்றின் இரைச்சலும்,ஓங்கி விழும் அருவியின் சப்தமும்,ஆர்ப்பரித்து அடிக்கும் அலையின் ஓசையும்,மெல்ல வீசும் காற்ரின் சப்தமும்,பறவை,விலங்கு என்று எல்லாசப்தமும் வேண்டுமென்றே “உய்..ங்” என்று மட்டும் சப்திக்க வேண்டிய அவசியம் என்ன ? சத்தியமாக நம்புங்கள்.இயற்கையும் செயற்கையும் சப்த அளவில் மாறுபாடு கொண்டிருந்த போதிலும் நீங்கள் சொல்வதைப்போல் ஒரேவ்தமாக ஒலிப்பதில்லை என்பதெ உண்மையாகும். நீங்கள் கடைவீதியில் செல்கிறீகள்.சந்தைக்கு செல்கிறீர்கள்.அங்கெல்லாம் மக்கள் வேண்டுமென்றே “உய்..ங்” என்று மட்டும் சப்தமிடுவதாக சொல்கிறீர்கள்.


நீங்கள் கடைக்காரரிடம் சென்று பேசி அந்த பொருளை விலைக்கு வாங்க முயல்கிறீர்கள்.நீங்களும் பேசுகிறீர்கள்.கடைக்காரரும் பேசுகிறார்.பின்னர் எப்படி கடைக்காரர் மட்டும் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிடுவதாக சொல்வீர்கள் எப்படியோ அந்த பொருளை வாங்கிய நீங்கள் அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கூட “உய்..ங்” என்று மட்டுமே சப்தமெழுப்புவதாக கூறுகிறீர்களே.இப்போது கடை வீதியில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.சற்று அமைதியாக சிந்தித்துப்பாருங்கள்.கடைவீதியில் மக்கள் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமெழுப்பி கொண்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபடமுடியாது வியாபாரிகளைப் பொறுத்தவரையில் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமெழுப்பிக்கொண்டு வியாபாரம் செய்தால் நிலைமை என்னவாகவிருக்கும் என்று நினைக்கிறீர்கள்.ஆனால் அப்படி தான் நடக்கிறது என்று அடித்து கூறுகிறீகள்

சிங்கம் கர்ஜிக்கிறது என்பதற்க்கு பதிலாக “உய்..ங்” என்று சப்தமிடுவதாகவும் புலி உறுமுகிறது என்பதற்க்கு பதிலாக “உய்..ங்” என்று சப்தமிடுவதாக சொல்வதும் யானை பிளிறுகிறது,ஓநாய் ஊளையிடுகிறது,குதிரை கனைக்கிறது,ஆடு கத்துகிறது,நாய் குரைக்கிறது,சேவல் கூவுகிறது,குளவி ரீங்காரம் செய்கிறது,காக்கை கரைகிறது என்பதர்க்கு பதிலாக இல்லை “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிடுவதாக நீங்கள் கூறுவதை நம்பமுடியாது.அதோ அந்த சிலைக்கு அருகில் பொதுக்கூட்டம் நடக்கிறது.ஒலிபெருக்கி ஓயாமல் “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிட்டுக்கொண்டு இருப்பதாக கூறுகிறீர்கள்.மேடையில் அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருபேராக மைக்கு முன் வந்து நின்று “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிடுவதாக சொல்கிறீர்களே..வழியில் உங்கள் நண்பன் உங்களை சந்தித்து “உய்..ங்” என்று மட்டுமே சப்தமிடுவாரா ? அப்படிதான் நடந்தது என்கிறீகள் சரி..எல்லோருமே,எல்லாமே “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவதால் என்ன லாபம் கிடைக்கபோகிறது.மிருகங்களின் ,பறவைகளின்,மற்றவைகளின் சப்தங்களை விடுங்கள்.மனிதர்கள் “உய்..ங்” மட்டுமே குரலெழுப்புவதால் உரையாடல் நிகழுமா ? பேச்சு நிகழுமா ? சொற்பொழிவு போன்ற அனேக காரியங்கள் நடைபெற வாய்ப்பு இல்லாமலல்லவா போகும்.சைகை காட்டி “உய்..ங்” என்று சொன்னால் புரியவாபோகிறது. வெறுமனே “உய்..ங்” என்று குரலெழுப்புவதால் உங்களால் புரியாமலல்லவா போகும்.அப்படி எல்லோரும் உங்களிடம் “உய்..ங்” என்று சொல்லுவதால் அவர்களுக்கல்லவா புரியாமல் போகும்.நீங்கள் பேசுவது தெளிவாக இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள்.ஆனால் அவர்களெல்லாம் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்பினால் எப்படி தொடர்பு உருவாகும் ? உங்களிடம் தொடர்பு வைத்திருக்காமல் இருக்க பிறர் விரும்புவார்களா ?ஏதாவது பகை இருந்தால் கூட “உய்..ங்” குரலெழுப்ப மாட்டார்களல்லவா. பிறர் உங்களி டம் பேசும் போது குறைந்தபட்சம் 'ஆம் ' அல்லது 'இல்லை ' என்றுதாம் சொல்லுவார்களே ஒழிய நீங்கள் சொல்லுவது போல “உய்..ங்” என்று குரலெழுப்பினால் என்ன புரிய போகறது. உங்களுக்கு புரியாத போது திருப்பி எப்படி பேச முடியும். நீங்கள் பேசிக்கொண்டிருப்பதாக சொல்லுகிறீர்கள்.ஆனால் பதிலுக்கு அவர்கள் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவதாக சொல்லுகிறீர்கள். இதனால் பலவிதமான சிக்கல்கள் தான் உருவாகுமே தவிர வேறொன்றும் நேராது.


மேலும் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.சாதாரணமாக பழக்கமில்லாதவர்களை கண்டால் தான் நாய் குரைப்பது இயல்பு.ஆனால் உங்களைப்பார்த்து நாய் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவதாக சொல்லுவது சரியானதல்ல.நீங்கள் கேட்டை தாண்டி வாசலருகே சென்று ஹாலிங்பெல்லை அழுத்துகிறீர்கள். சில நிமிடங்களுக்குளாக அந்த பெண்மணி கதவை திறந்து உங்களிடம் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவது எதற்க்காக. நிச்சயமாக உங்களுக்கு அந்த பெண்மணி எழுப்பிய குரலில் என்ன புரிந்திருக்கும் அந்த பெண்மணி ஒருவேளை உங்கள் நண்பர் இல்லை வெளியில் போயிருக்கிறார் என்று சொல்லாம் அல்லது அவர் உள்ளே இருக்கிறார்,வாருங்கள் என்று அழைத்திருக்கலாம்.ஆனால் நீங்கள் எதுவுமே புரியாமல் 'நாளைக்கு காலையில் அவரை வீட்டுக்கு வர சொல்லுங்கள் ' என்றீர்கள்.அத்துடன் அங்கே நிற்காது திரும்பி வந்துவிட்டார்கள்.ஆனால் நீங்கள் உங்கள் நன்பனை சந்தித்துபேச எண்ணிதான் வீட்டிற்க்கு சென்றீகள்.ஒருவேளை உங்கள் நண்பர் வீட்டில் இருந்திருந்தால் உங்களை பற்றி என்ன நினைத்திருப்பார். வா என்று சொல்லியும் வராமல் தானே போய்விட்டான் என்று தானே நினைப்பார்.வீட்டை விட்டு தெரு வழியாக நடந்து வரும் நீங்கள் ஒரு கும்பல் உரத்த குரலில் “உய்..ங்” கோஷம் போட்டு சென்றிருக்க முடியுமா ? ”உய்..ங்” என்று கோஷம் போட முடியாது.கோஷம் போடுவதற்கான காரணங்கள் குறைந்தபட்சம் வாழ்க அல்லது ஒழிக என்று தான் சொல்லிச் சென்றிருப்பார்களே ஒழிய நீங்கள் சொல்வது போல் இல்லை என்பது தான் உண்மை.


உங்கள் மனைவி, குழந்தைகள்,பெற்றோர்,சகோதர சகோதரிகள்,உற்றார் உறவினர்கள்,நண்பர்கள்,அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அனைவரும் உங்களுக்கு கேட்கும் சக்தியில் ஏதோ குளறுபடி நடந்தாக நம்பி கொண்டு உங்களை பிரபல ஈ.என்.றி டாக்டரிடம் கொண்டு போய் விஷயத்தைச் சொல்லி டாக்டரின் அட்வைசின் படி பல டெஸ்டுகள் எடுத்து கொடுத்த போது அதை படித்து பார்த்த டாக்டர் எந்த குழப்பமும் இல்லை என்று சொன்ன போது எல்லோரும் திடுக்கிட்டு போயினர்.பின்னர் நீங்கள் எனக்கு தான் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனையொன்றுமில்லை வேண்டுமென்றே எல்லோரும் ,எல்லாமும் “உய்..ங்” என்று குரலெழுப்புகின்றன என்றபோது உங்கள் மனைவி கதறி அழுதாள்.அப்போதும் நீங்கள் உங்கள் மனைவி “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்புவதாக கூறுகிறீர்கள்.உங்களை பல டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போய் காண்பித்து விட்டனர். எல்லோரும் ஒரே பதிலை தான் சொல்லுகிறார்கள். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று.அதுதான் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.எல்லாவிதமான மருத்துவ முறை டாக்டர்களையும் பார்த்தாயிற்று.கோயில்,குளம்,தற்ஹா,குருசடி என்றும் பார்த்தாயிற்று. துறவிகள்,மகான்கள்,சாமியார்கள் எல்லோரையும் பார்த்தாயிற்று.ஆனால் இன்னமும் நீங்கள் எல்லோரும்,எல்லாமும் “உய்..ங்” என்று குரலெழுப்புவதாக கூறுகிறீர்கள்.


நீங்கள் பேச்சை ஒருவேளை சாதாரணமாக இருப்பதால் பேச்சின் மகத்துவம் தெரியாமல் எல்லோரும் உங்களை பரிகாசம் செய்வதாக நினைத்து கொள்கிறீகள்.நீங்கள் பேசும் போது வேண்டுமென்று ஒருவர் பரிகாசம் செய்தாலும் “உய்..ங்” என்று குரலெழுப்பமாட்டார்கள்.வெறுமனே ஒலி எழுப்புவதால் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்த முடியாது.தவிரவும் இது விலங்கின் குணம் ஆகும்.மேலும் ஒருவர் விலங்கின் குணத்தோடு இருக்கமாட்டார்கள் என்பது முக்கியமாகும்.மனிதர்களும் சரி,விலங்குகளும் சரி நீங்கள் சொல்வது போல இருந்தால் எந்த வித்தியாசமும் இல்லை என்றாகி விடாதா ? எனவே பேசுவது என்பது பரஸ்பரம் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சி ஆகும்.பேச்சின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபட்டாலும் பேச்சை தாண்டி வேறு வகையில் புரிவது ஆபத்தான விஷயமாக மாறிவிடும் என்று தெரிந்து வைத்துள்ளனர்.


திபாவளி சீஷனாக இருப்பதால் எல்லோரும் பட்டாசு வெடிக்கும் சப்தம் கூட “உய்..ங்” என்று கேட்பதாக சொல்வது யோசித்து பார்க்க வேண்டிய விஷயம் தான்.இரயில் போகும் சப்தமும்,விமானம் பறக்கும் சப்தமும்,கல்குவாரியில் பாறையை வெடிவைத்து பிளக்கும் சப்தமும்,டிராபிக் ஜாமால் வாகனங்களின் ஹார்ன் சப்தமும்,வாகனங்களின் இரைச்சல் சப்தமும்,கோவில் மணி ஓசையும், ஸ்கூல் விடும் போது வருகின்ற ஆர்பரிப்பும்,ஆர்பாட்ட சப்தங்களும்,பலமாக வீசியடிக்கும் காற்றின் இரைச்சல் சப்தமும்,மேகம் திரண்டு தெறித்த மின்னல்கீற்றில் கேட்ட இடியோசையும்,மழை பெய்யும் சப்தமும்,திருமண மண்டபத்தில் இருந்து வரும் ஆர்கெஸ்டிரா சப்தமும்,அடுத்த தெருவில் மரித்து போன வீட்டில் இருந்து வரும் அழுகை சப்தமும் என்று எல்லா சப்தங்களும் “உய்..ங்” என்று மட்டுமே கேட்பதாக சொல்கிறீர்கள்.


நீங்கள் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருக்கும் போது நண்பர்கள் வந்து “உய்..ங்” என்ற சப்தம் எழுப்பிக்கொண்டு போனதும்,மனைவி குழந்தைகள் “உய்..ங்” என்று சப்தம் எழுப்பி கொண்டிருப்பதாகவும்,அக்கம் பக்கத்திலுள்ளோர்கள் வந்து உங்களிடம் “உய்..ங்” என்று சப்தம் எழுப்பிக்கொண்டு சென்றதாகவும் தொடந்தார்போல் பலபேர்கள் “உய்..ங்” என்று மட்டுமே சப்தம் எழுப்பியதால் எரிச்சல் கொண்டு வீட்டுக்குள் சென்று அறையை தாழிட்டு கொண்டு இருந்ததாக சொல்கிறீர்கள்.உங்கள் சகோதரர் வந்து அறைகதவை தட்டியபோது “உய்..ங்” என்ற சப்தத்தால் கோபபட்டு படாரென கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போது சகோதரர் நின்றிருந்தார்.அவர் “உய்..ங்” என்று பேசுகிறார்.நீங்கள் பதிலுக்கு என்னவென்றே தெரியவில்லை எல்லோரும் என்னை எரிச்சலூட்டுகிறார்கள் என்கிறீர்கள்.அதற்கு பதிலாக அவர் “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்பியதாக கூறுகிறீர்கள்.நீங்கள் பேசும் போது தம்பி .. எல்லோரும் என்னை ஒருமாதிரியாக பார்ப்பது எனக்கு சங்கோஜமாக இருக்கிறது. நீ வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்.இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பார்.. மைனியும்,குழந்தைகளும்,பெற்றோர்களும் என்னை சுற்றி நின்று ஏளனம் செய்வது போல் தான் படுகிறது.நீயாவது அவர்களிடம் சொல்லி விலக்கி வை.என் நண்பர்களுக்கு என்ன ஆகி விட்டது. என்னை ஏன் திடாரென்று பரிகசிக்கவேண்டும்.ஒவ்வொருவராக வந்து நின்று என்னை கிண்டல் செய்கிறார்கள்.என் பொறுமைக்கும் ஓரளவு தான் எல்லை உண்டு.எவ்வளவு நேரம் தான் பொறுத்து பார்ப்பது.பக்கத்து வீட்டுகாரர்கள் கூட..சே..சே..நான் அவர்களிடம் நல்லவிதமாகவல்லவா பழகிக்கொண்டிருந்தேன்.அவர்களும் என்னை ஏளனம் செய்வது போல குரலெழுப்ப வேண்டுமா ? வேண்டுமென்றே எல்லோரும் ஏளனம் செய்கிறார்கள்.வெளியே இறங்கினதும் அப்படிதான் இருக்கிறது.சம்பந்தமில்லாதவர்கள் கூட ஏளனம் செய்கிறார்கள்.ஒருவேளை என்னை என்ன பைத்தியம் என்று நினைத்துக்கொண்டார்களா ? நான் பார்ப்பதற்கு தான் சாது.. கோபம் வந்தால் உனக்கே என்னை நல்லா தெரியும்.தயவு செய்து இந்தமாதிரியெல்லாம் கிண்டல் செய்யகூடாது என்று எல்லோரிடமும் சொல்லிவை.


நான் தாலி கட்டிய மனைவியும் ,பெற்றபிள்ளைகளும்,பெற்றோரும் என்னை ஏள்னம் செய்யும் போது மற்றவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்.எல்லாம் இப்படி தலைகீழாக மாறிப்போக என்ன காரணம் என்றே தெரியவில்லை.எல்லோரும் என்னிடம் தான் குழப்பம் இருப்பதாக சொல்கிறார்கள். நிச்சயமாக நான் ரொம்ப தெளிவாக தான் இருந்து கொண்டிருக்கிறேன்.என்னை சீண்டி விடுவதற்காக எல்லோரும் போடும் நாடகம் என்றே எனக்கு படுகிறது.திடாரென்று எல்லோரும் இவ்வளவு சாமர்த்தியமாக எப்படி தான் நடந்து கொள்ள முடிகிறது என்றெனக்கு வியப்பாகதான் இருக்கிறது என்று நீங்கள் சொல்லியபோது உங்கள் தம்பி பதிலுக்கு “உய்..ங்” என்று மட்டுமே குரலெழுப்பியதால் கோபபட்டுக்கொண்டு அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டு இருந்துவிட்டாகள்.



உங்களை “உய்..ங்” என்ற சப்தசுளி மூழ்கடித்து எங்கோ கொண்டு சென்று விட்டது. கண் திறந்து பார்த்தபோது உங்களுக்கு எல்லாமே நீலநிறத்தில் தெரிந்தது.எங்கு நோக்கினும் நீலநிறப்புகை கசிந்து கொண்டிருப்பதாக தோன்றியது.நீலநிறத்தையுடைய இலைகளைக் கொண்டொரு மரம் அசைந்தாடிக் கொண்டிருந்தது.செடிகொடிகள்,புற்பூண்டுகள்,மலைகள்,ஆறு அருவிகள்,விலங்குகள்,பறவைகள் இன்னபிற எல்லா ஜீவராசிகளும் நீலநிறத்திலே தெரிந்தது.நீலம், கருநீலம்,வெளிர்நீலம்,மென்நீலம்,உலர்நீலம் என்றுபலவகையான நீலங்களில் இயற்கையும்,ஜீவராசிகளும் காட்சியளித்துக் கொண்டிருந்தது. நீங்கள் பார்த்துகொண்டிருந்த போது அதிரூபசுந்தரியான தேவதையொருவள் உங்களருகில் தோன்றி வாழ்த்தி வரவேற்று வானத்தின் பால் உயர்த்தினாள்.வானத்தையடைந்த அவள் கதவை திறக்குமாறு கூறினாள்.அப்போது நீ யார் ? என்று கேட்கப்பட்டது. நீலலோகிதை என்று மறுமொழி பகர்ந்தாள்.உம்முடன் இருப்பவர் யார் என கேட்கப்பட்டது.மனிதபிறவி எனக்கூறினாள்.அவரையும் இங்கு அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என கேட்கப்பட்டது.ஆம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினாள்.உடனே கதவு திறக்கப்பட்டது.அப்போது நீங்கள் சிலரை சந்தித்து பேசியதாக கூறினீர்கள். அவர்களுடன் பேசும்போது அவர்கள் சொன்ன பதில் தெளிவாக கேட்டதாக கூறுகிறீர்கள்.”உய்..ங்” என்ற சப்தம் இப்போது கேட்கவில்லை என்கிறீர்கள்.தேவதை உங்களை பற்றி விலாவாரியாக எடுத்துரைக்கிறாள்.அவர்களுடன் பேசிய பேச்சிலிருந்து அந்தபகுதி சொர்க்கம் என்பதையும் மாட்சிமைமிக்க அவர்கள் நீல நிறத்திலிருப்பதையும் அறிந்துகொண்டார்கள்.


அந்த பகுதியே ஒரு பெரிய அரண்மனை மாதிரி தான் இருந்தது என்று சொன்னீர்கள் .அவர்கள் யாவரும் சிம்மாசனங்களில் வீற்றிருக்க பணிப்பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தார்கள். ஜந்தாறு பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர் . அற்புதமான இசை அந்த பகுதியில் பிரவாகமெடுத்தது. நீலநிற தட்டுகளில் வைத்திருந்த கனிவர்க்கங்கள் கூட நீலமாகயிருந்தது.குவளைகளில் வைக்கப்பட்டிருந்த பானங்கள் நீல நிறத்தில் காட்சியளித்தன.தேவதை உங்களை எல்லா இடங்களையும் சுற்றிகாட்டுகிறாள். நீல நிறத்தில் அந்த அரண்மனை அழகாக காட்சியளித்ததாகவும், வினோதமாக இருந்ததாகவும் கூறுகிறீர்கள்.நீலநிறத்தையுடைய பணிப்பெண்கள் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தனர் என்கிறிர்கள்.மாளிகையில் தொங்கிக்கொண்டிருக்கும் அலங்கார விளக்குகள் நீலநிறத்தில் ஒளியை உமிழ்ந்தன.அந்த நீலநிற வெளிச்சத்தில் அலங்கார நீரூற்றுகள் பீச்சியடித்ததும் அழகாக காட்சியளித்தது. மாடமாளிகைகளும்,கூட கோபுரங்களும்,நெடிதுயர்ந்து நிற்கும் தூபஸ்தம்பங்களும் என அரண்மனை காண்போர் கண்ணை கொள்ளை கொள்ளச் செய்வதாக கூறுகிறீர்கள்.நீங்கள் நடந்து வரும்போது கொஞ்சம் புறாக்கள் காலடி சப்தம் கேட்டு படபடவென சிறகடித்து பறந்து போயின.அவையும் நீலநிறத்தில் இருந்தன.நீல நிற மயில்கள் அலைந்து திரிந்தன.இப்படி பார்க்குமனைத்தும் நீலநிறமாக இருப்பது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.இப்போது தேவதை உங்களை அந்தபுரத்தில் அழைத்துச் செல்கிறாள்.அங்கே அழகிய தேவதைகள் நிறைய பேர் நின்றுகொண்டிருந்தனர்.அவர்களது தலையில் வைக்கப்பட்டிருந்த கிரீடத்திலிருந்து நீலநிற கற்கள் நீல ஒளியை உமிழ்ந்தன. உங்கள் கையை பிடித்திழுத்திறக்கி தாடகத்தில் குளிப்பாட்டிவிடுகிறார்கள்.நீங்கள் ரொம்பவும் வெட்கபட்டு கொண்டே குளித்து முடித்தாக கூறுகிறீர்கள்.பின்னர் விருந்துபசாரம் தடால் புடாலாக நடந்தெறியது.விருந்துண்டு முடிந்ததும் நீங்கள் ஓய்வெடுப்பதற்காக அரண்மனையின் விருந்தினர் மாளிகையில் அனுமதிக்க பட்டார்கள்.விருந்தினர் மாளிகையில் சயன அறையில் உங்களை விட்டுவிட்டு தேவதை விடைபெற்றுகொள்கிறாள். அறையில் மூன்று தேவதைகள் உங்களை இழுத்து படுக்கையில் போடுகின்றனர். இப்போது விளக்குகளின் வெளிச்சத்தை குறைக்க மங்கலான வெளிச்சத்தில் தேவதைகளை கண்ட நீங்கள் உடம்பில் உஷ்ணம் ஏறுவதை உணர்கிறீர்கள்.


சயனத்தில் கிடக்கும் உங்களை தேவதைகள் குறும்புகள் செய்து மகிழ்விக்கின்றனர்.தங்களது மேலாடைகளை கழற்றி காமமூட்டுகிறார்கள்.நீங்களும் காம களியாட்டங்களில் ஈடுபடுகிறீர்கள்.நீங்கள் உட்பட தேவதைகள் மூன்று பேரும் நிர்வாணமாக படுக்கையில் கிடந்து புரள்கிறீர்கள்.ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று மூன்று பேரையும் அனுபவிக்கிறீர்கள்.உங்கள் விந்து ஸ்கலிதமானதை உணரும் போது சொர்கத்தில் தான் இருந்தீர்களா அல்லது பூமியில் தான் இருந்தீகளா என்று தீர்மானமான முடிவுக்கு வரவில்லை என்று கூறும் நீங்கள் “உய்..ங்” என்ற சப்தத்தை பின் எப்போதும் உணரவில்லை என்று அடித்து சொல்கிறீகளே.

Monday, February 16, 2009

تقول أحبك Say I love you



"I love you" to say simply

تقولها كأنما قالتها ألف مرة من قبل Say, as if spoken by a thousand times

وأشعر بقلبي يهتز بين أضلعي I feel my heart between my ribs vibrate

وأرتبك ولا أعرف ما العمل And embarrassed and I do not know what to do



أأقول أحبك أيضاَ ؟ Am I love you, too?

أم أقول شكراً على مشاعرك النبيلة ؟ Or say thank you for your feelings noble?

يالها من عبارة مبتذلة What a vulgar expression

لكني لا أستطيع قول أحبك فهي كلمة جليلة I love you I can not say it is a great word




أخاف من حبها Afraid of love

أخاف من هجر اختبرته مع غيرها Fear of abandonment I tested it with other

أعرف أني جبان وأن خوفي لا مبرر له I know I am a coward and my fear unwarranted

لكني أرى شرها وأتجاهل خيرها But I think being the worst and ignore




ليس فينا أحد كامل None of us is full

لكني أضع العدسة المكبرة على العيوب الصغيرة I put the magnifying glass on the small defects

فالوحدة مؤلمة لكنها أسهل من الحب The division and painful, but easier to love

لقد خاطرت بقلبي مرة وقررت أنها الأخيرة I risked my heart again and decided it was the last



أختلق الأعذار الواهية Invent lame excuses

فتبكي وتحرق أصابعي دموعها عندما أجففها Mourning nearly burned my fingers and eyes when Oajafvha

هل أنا الملام ؟ Am I to blame? هل أنا قاسي المشاعر؟ Am I harsh feelings?

هل كلماتي تزيد آلامها أم تخففها؟ Is my pain increase or relax?



ما الخطأ وما الصواب ؟ What's wrong and right?

رباه لو كان بإمكاني معرفة المستقبل My God if I know the future

أسعادتي أم تعاستي تكمن في هذه اللحظة ؟ Taste or O.e.ti is at this moment?

إلهي يا عالماً بما في الصدور عليك أتوكل Oh God, what in the world of publishing, you Otokl



“أنا لست مستعداً بعد "I'm not yet ready

أنا لست الشخص الذي تتمنين I am not the person who Taatmnin

ولست بكاذب إن أخبرتك أن في تركي مصلحتك I do not Bkazb that told you that the Turkish Belongs

فانا أحبك لكن ليس كما تستحقين…” I love you deserve, but not as ... "

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...