Friday, July 30, 2010

யுத்தங்களுக்கிடையில்... (நாவல்)



வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017 பக்கங்கள்: 160 விலை: ரூ. 60

கதைகளில் காலம், இடம் ஆகியன அழுத்தமாகப் பதிக்கப்பட்டாலும் அவற்றைக் கடந்த மனித வாழ்க்கைதான் முன்னுக்கு நிற்கிறது - அம்சன் குமார்

நாவல் என்பது வெறும் கதையல்ல. அது கதையையும் சொல்கிற அனேக ஊடகங்களில் ஒன்று. அவ்வூடகத்தின் சிறப்பு நாவலைப் படித்துவிட்டு நாவலைப் போன்றே ஒருவர் கதையைச் சொல்லிவிட முடியாது என்பதில் உள்ளது. அசோகமித்திரனின் நாவல்கள் இத்தகைய சிறப்பியல்பை நமக்கு உடனே ஞாபகப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளன.

அவரது சமீபத்தியதும் எட்டாம் நாவலுமான யுத்தங்களுக்கிடையில் பின்னிப்பிணைந்த உறவுக்காரர்களின் பார்வைகள், அனுபவங்கள் ஆகியனவற்றை முன்வைத்து நகர்கிறது. உள்ளடக்கம் உருவத்தைத் தீர்மானிக்கிறபடியால் நாவல் ஊடுபாவுகள் மிகுந்த ஹைபர்லிங் உத்தியைக் கொண்டுள்ளது. ஹைபர்லிங் என்பது உண்மையில் உத்தி அல்ல. அதுவும் ஒரு புனைகதை வகை, கதையாடல். ஹைபர்லிங் என்கிற சொல்லாக்கம் கடந்த ஐந்து வருடங்களாகத்தான் எல்லோரது கவனத்தையும் பெற்றுள்ளது. அது ஒரு இணைகோட்டில் சந்தித்து மீண்டும் தன்வழியே பயணித்துச் செல்கிற கதாபாத்திரங்கள், கதைப் போக்குகள் ஆகியவற்றின் கோவையைக் குறிக்கின்றது. சமீபத்திய லத்தின் அமெரிக்கப் படங்கள் பல இக்கதையாடலைக் கொண்டுள்ளன. அமரோஸ் பெர்ரொஸ் (தமிழில் ஆயுத எழுத்து) ஒரு உதாரணம். திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் இக்கதையாடல் புனைகதைகளுக்கு ஒன்றும் புதிதல்ல. ஜுலியா கொர்தசாரின் ஹாப்ஸ்காட்ச், ஜீன் பால் சார்த்தின் ரிப்ரீவ் ஆகியன இத்தகைய கதையாடலைக் கொண்டுள்ள நாவல்கள். 1967இல் தீபம் இதழில் தொடராக வெளிவந்த அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் இதைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. கரைந்த நிழல்களைவிடவும் முழுமையாகவும் வெற்றிகரமாகவும் யுத்தங்களுக்கிடையில் நாவல் ஹைபர்லிங்கை பயன்படுத்தியுள்ளது. இதன் சில பகுதிகள் வார்த்தை இதழில் வெளிவந்தன.

பாரம்பரியமான கதைசொல்லல் இல்லாது போவதால் இவ்வகை நாவல்கள் வாசகனின் முயற்சியைக் கூடுதலாக வேண்டுகிறது. இவ்வகை நாவல் எழுதுபவர்கள் இந்தச் சிக்கலிலிருந்து வாசகன் வெளிவரவும் சில துப்புகள் தருவார்கள். அசோகமித்திரன் சில வர்ணனைகளைத் திரும்பத் திரும்பத் தருகிறார். ஆனால் கூறியது கூறல் என்றதாக இல்லாத வண்ணம் அவை ஒவ்வொரு முறையும் கதையின் வேறிடத்திற்கு வாசகனை அழைத்துச் செல்கின்றது. ஒரே மூச்சில் நாவலைப் படித்துவிடலாம். 155 பக்கங்கள். அசோகமித்திரனின் படைப்புகளை இருமுறை படிப்பதன் அவசியம் பற்றி ஏற்கனவே பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இது கட்டாயம் இருமுறை படித்தாக வேண்டிய நாவல். எனவே மறுமூச்சு எடுத்து இரண்டாம் முறையாக நாவலை உடனே படித்தால் புரிதல் எளிதாவதோடு மட்டுமின்றிப் படிப்பதன் சுவாரஸ்யமும் கூடும்.

நாவலின் கதை நிகழ்வுகளை ஒரு நேர்க்கோட்டில் வரிசைப்படுத்தினால் அது இவ்வாறு இருக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொடங்கி இரண்டாம் உலகப் போர் வரையிலான காலத்தில் நாவல் நிகழ்கிறது. மாயவரம் பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு நடத்தும் வாத்தியார் தனது நாற்பதாம் வயதில் இறந்துபோகிறார். அவருக்கு மொத்தம் பதினாறு குழந்தைகள். அவர்களில் உயிரோடு இருப்பவர்கள் எட்டு பேர். ஐந்து ஆண்கள். ரங்கமணி, சாம்பசிவன், ராமேசன், பாலு, சங்கரன். மூன்று பெண்கள். முதல் இரண்டு பெண்களின் பெயர்கள் தரப்படவில்லை. கடைசிப் பெண் சீதா. மூத்தவளைத் தவிர மற்ற இருவரும் விதவைகள்.
முதல் உலகப் போர் முடிந்திருக்கிறது. வாத்தியாரின் முதல் மகன் ரங்கமணி சர்க்கரை நோய் வந்து ஒரு காலை இழந்த பிறகு இறந்து போகிறான். பி.ஏ. படித்த அவனது தம்பி சாம்பசிவன் தவிர அக்குடும்பத்தில் யாருமே சரியாகப் படிக்கவில்லை. சாம்பசிவத்திற்குப் போலீஸ் உத்தியோகம். அவன் மீது உத்தியோகத்தில் அவப்பெயர் ஏற்படவே கவரிமான் போல் உயிரைவிட்டு விடுகிறான். ராமேசனுக்கு நிஜாம் சமஸ்தானத்தில் ரயில்வேயில் வேலை கிடைக்கிறது. அவன் தனது தம்பிகளான பாலு, சங்கரன் ஆகியோரை அங்கு அழைத்துவந்து வேலை வாங்கித் தருகிறான். அவர்களது வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம். ராமேசனின் முதல் மகன் ஸ்ரீவத்ஸன் அகால மரணமடைகிறான். ராமேசனுக்கு மேலும் மூன்று பெண்கள். ஒரு பையன் சீனு.
பாலுவுக்கு ட்ராலியில் சென்று கைகாட்டிகளைப் பராமரிக்கும் அலைச்சல் மிகுந்த வேலை. அவனுக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள். ஆறு ஆண்டுகள் கழித்து அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்து செகந்திராபாத்திலேயே பணி மாற்றலாகிறது. சங்கரனது குடும்ப வாழ்வில் சறுக்கல்கள். முதல் மனைவி பவானி இறந்துவிட அவன் அவளது அக்கா மகளான சுந்தரியை இரண்டாம் தாரமாக மணந்துகொள்கிறான். ஆனால் மூன்று சகோதரர்களும் கெட்டிக்காரர்கள். வந்த சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்தி அதில் தங்களுக்கேயான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். சகோதரர்கள் விட்டுப்போன தந்தையின் சிராத்தத்தை ஒன்றுகூடி புது இடத்தில் செய்கிறார்கள். அவர்களுடைய மனைவிமார்களும் மொழி தெரியாவிட்டாலும் சமயோசிதத்துடன் நடந்துகொள்கிறார்கள். ராமேசனின் மனைவி லட்சுமிக்குத் தையல் மிஷனை ஓட்டவும் தெரியும்.

ஆண்கள் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்வதைப் போல் பெண்கள் இரண்டாம் தாரமாகவும் வாழ்க்கைப்படுகிறார்கள். சீதா, சீதாவின் அக்கா இருவரும் ஐம்பது வயதுக்காரர்களுக்கு இரண்டாம் தாரங்கள். சீதாவின் கணவன் ஒரு பணக்கார வக்கீல். முதல் தாரத்துப் பையன் சீதாவை அவன் அப்பா மணந்தது பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறியவன்தான். கடைசிவரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

நாவலில் சீதாவிற்குத்தான் அதிக இடம். அவள் தனது கணவனின் சொத்துகளைத் திறமையாக நிர்வகிக்கிறாள். பணக்கார விதவையான அவள் வீட்டுக்குச் சகோதரர்களும் வந்து தங்கிப் போகிறார்கள். தனக்குத் துணையாக இருக்கட்டும் என்று கருதி, தன் அண்ணன் ரங்கமணியின் மகன் ராமசுப்புவை அழைக்கிறாள். அவனுக்குப் போதிய சாமர்த்தியம் இல்லாவிட்டாலும் அவனை அரவணைத்து ஆளாக்குகிறாள். விசாலாட்சி என்கிற பெண்ணை மணமுடித்து வைக்கிறாள். பண்டாபீசில் வேலையும் வாங்கித் தருகிறாள். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் ராம சுப்புவிற்குச் சீதாவின் சித்தப்பா மகன் வைதுவின் கூடா சகவாசம் ஏற்படுகிறது. அவனைப் பெரிதாக நம்பியிருந்த சீதா மனம் துவண்டு இறந்துபோகிறாள். சீதாவின் பணத்தை எடுத்துக்கொண்டு போய் வைதுவுடன் மெட்ராஸில் சுருட்டு வியாபாரம் செய்கிறேன் என்று எல்லாவற்றையும் இழந்துவிட்டு மீண்டும் பண்டாபீசில் ப்யூனாக வேலை பார்க்கத் தொடங்குகிறான் ராமசுப்பு.

சாம்பசிவனின் மூத்த மகன் ராகவன் தன் தாய் தந்தையரைப் போல் நல்ல சிவப்பு. அவனது தாய்மாமன் கல்யாணச் சந்தையில் விலை போகாத கறுப்பான தன் மகள் பார்வதியை மணமுடித்து வைத்துவிடுகிறார். ராகவன், தன்னுடைய அம்மா, தம்பி, பார்வதி எல்லோரையும் பம்பாய் அழைத்துச் சென்று வாழ்கிறான். மோட்டார் மெக்கானிக்கான அவன் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குப் பம்பாய் அண்ணாவாகத் தெரியவருகிறான். ரங்கமணி மற்றும் அவனது உடன்பிறப்புகளின் தாய் எவரிடமும் நல்ல பெயர் வாங்கவில்லை. மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டே வாழ்ந்து உடம்புக்கு முடியாமல் ஆனால் கடைசிவரை தன் சொந்த வீட்டிலேயே வாழ்ந்து இறக்கிறாள்.

எஞ்சியுள்ள சகோதர சகோதரிகள் அவர்களுடைய குடும்பங்களுடன் ஒன்றுகூடும் மகிழ்வான வைபவமும் நடக்கிறது. போலகத்தில் வாழ்க்கைப்பட்ட மூத்த சகோதரியின் கணவர் ராஜப்பையரின் சஷ்டியப்த பூர்த்திக்கு எல்லோரும் கூடுகிறார்கள். இதை முன்னின்று நடத்துவது ராமசுப்பு என்று அறியும்போது அவர்களுக்கு வியப்பு கூடுகிறது. எவ்வளவோ இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் நடுவே அனைவரின் ஒன்றுகூடல் நிகழ்கிறது. அதன் பின் இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் தமிழ்நாட்டையும் நிஜாமின் சமஸ்தானத்தையும் உலுக்குகின்றன.

அசோகமித்திரன் முன்னுரையில் கூறுவதைப் போல் இது பிழைத்திருத்தல் பற்றிய நாவல். பிழைப்பும் ஒரு யுத்தம். அதற்கிடையே மனிதர்கள் எத்தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பதை நாவல் பரிசீலிக்கிறது. கல்வியை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கீழ் மத்திய தர பிராமணக் குடும்பம். சிலரால் கல்வியைப் பெற முடியவில்லை. சிலரால் கற்க இயலவில்லை. நூறு ரூபாய்கூட இயலாத நிலையில் ராகவனால் பட்டப்படிப்பு படிக்க முடியாது மெக்கானிக்காக ஆகிவிடுகிறான். சாம்பசிவன் பி.ஏ. படித்து முடிப்பதற்குள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வீட்டில் அவர்கள் இலைபோடும்வரை காத்திருந்து உண்ண வேண்டியிருந்தது. மற்றவர்களை எப்படியாவது கரையேற்றிவிட வேண்டும் என்கிற ஒரு பொறுப்புணர்வு பிழைப்பு தேடுகிறபோதே கூட வருகிறது. ராமேசன் தன் தம்பிகளையெல்லாம் செகந்திராபாத்துக்கு அழைத்து ரயில்வேயில் வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறான். மோழை என்று சொல்லப்பட்ட ரங்கமணி தனது தம்பிக்கு வேலையும் கல்யாணமும் நேர்வதற்குக் காரணமாகிறான். ராகவன் தன் தம்பியைப் பம்பாய்க்கு அழைத்துச் செல்லும்போதே அவனை எப்படி உற்சாகத்துடன் வைத்திருப்பது என்றும் யோசிக்கத் தொடங்குகிறான். சீதா ராமசுப்புவுக்கு வேலை ஏற்பாடு செய்து கல்யாணமும் செய்விக்கிறாள். தான் நினைத்தது சரியாக அமையவில்லை என்னும்போது ஜன்னியை வரவழைத்துத் தற்கொலை செய்துகொள்கிறாள். சங்கரன் தனது முதல் தாரத்து குழந்தைகளைத் தன்னோடு வைத்துப் பராமரிக்க முடியாதது கண்டு துயரத்தில் ஆழ்கிறான்.
வாத்தியாரின் மனைவிதான் அனைவராலும் விரும்பப்படாதவள். ஆனாலும் அவள் என்னதான் செய்வாள் என்று அவளுடைய நிலையில் தங்களை வைத்துப் பார்க்க அவளது குழந்தைகள் தவறுவது இல்லை. செகந்திராபாத் பால்காரனின் மனைவி ஜானகிபாயிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் சிற்றுண்டி நிலைய மானேஜர்வரை பல்வேறு மனிதர்கள் மற்றவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவிக்கொண்டே இருக்கிறார்கள். விதவையான சீதா தனது கணவனின் சொத்தை அவனது முதல் மனைவியின் மகனுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று நினைத்து வாழ்கிறாள். பிழைப்பைத் தேடும் அனைவரிடமும் ஒரு லட்சிய வேகமும் குடிகொண்டிருக்கிறது. வாடகை வீட்டிலிருக்கும் தேவதாசிகள் வீட்டுக்காரர்களிடம் எத்தனை கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள்! ராமேசனைப் போல் தனது குழந்தையையும் இழந்துவிட்ட வெள்ளைக்கார மேலதிகாரி அவனைக் கட்டிக்கொண்டு அழுவது பொதுவான மனிதப் பண்பின் அடையாளம்.

அசோகமித்திரனின் கதைகளில் காலம், இடம் ஆகியன அழுத்தமாகப் பதிக்கப்பட்டாலும் அவற்றைக் கடந்த மனித வாழ்க்கைதான் முன்னுக்கு நிற்கும். இதனாலேயே அவரது கதைகள் மூப்படைய மறுக்கின்றன. அவரது நகைச்சுவை தனித்தன்மை பெற்றது.

"ரயில் நிலையம் அருகே ஒரு தர்மச் சத்திரம். பாஷையே புரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது. அந்தச் சத்திரத்தில் ஆறு நாட்களுக்குமேல் தங்க விடமாட்டார்கள்".
"ராமசுப்பு பெண்ணைப் பார்த்தவன் வாய் மூடாதபடி இருந்தான். யாருக்கும் அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. ஆனால் அவளை மணம் செய்விக்கவில்லை என்றால் பட்டினி கிடந்து சாவேன் என்று சொல்லி ஒருவேளை சாப்பிடாமலும் இருந்தான். இன்னொரு வேளைக்குக் காத்திருக்கலாம். அதற்குள் சம்மதம் என்று சொல்லியனுப்பிவிட்டார்கள்".

இருண்மையான நகைச்சுவைக்கு அவர் தன்னிகரில்லாதவர்.
"சிவனே வந்து கைலாசத்திற்குக் கூப்பிட்டாலும் அவருக்கு நடக்கக் கால் இல்லை".
சிக்கனம் மிகுந்த அவரது சொல்நடை எவ்விதத் தயாரிப்புமின்றி வாசகனுக்கு உடனேயே பதைபதைப்பினையும் தர வல்லது.
"ஆறு வயதுப் பையன் நெருப்புச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சவ ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினான்".
"பதினேழு வயதில் தலை மொட்டை அடிக்கப்பட்டு உடுத்த நார்மடி. அவள் தலையை மழித்தவருக்குக்கூட அழுகை வந்திருக்கும்".
அவரது சற்றும் குறையாத வண்ணங்களுடன் வெளிவந்துள்ள நாவல் யுத்தங்களுக்கிடையில்.

(யுத்தங்களுக்கிடையில்... (நாவல்), ஆசிரியர்: அசோகமித்திரன், பக்: 160, விலை: ரூ. 60, முதல் பதிப்பு: பிப்ரவரி 2010, வெளியீடு: நர்மதா பதிப்பகம் 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017)

Saturday, July 24, 2010

நாட்டுப்புறவியல்-வீச்சும்,பரிணாமங்களும்



நாட்டுப்புறவியல் பல்கலைகழக பாடத்திட்டமாக வைக்கப்பட்டதிலிருந்து மைய முக்கியத்துவம் பெற்று வரும் வேளையில் நாட்டுபுறவியல் குறித்த நம்மவர்களின் ஆய்வும் நோக்கும் சரியானதாக இருந்திருக்கிறதா என்பதை இத்தருணத்தில் ஆய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.'நாட்டுப்புறவியல்' என்னும் நூலில், தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் எவ்வாறு தமிழ் நாட்டாரின் வாழ்வியலையும் நாநவில் படைப்பாக்கங்களையும் அயல்மொழிகளில் உள்ளவைபோல உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

"இணையம் வழியாக இன்று உலக அறிஞர்களின் அறிவுத்தொகுப்புகளை உற்று நோக்கிக் கற்கும்பொழுது மேல்நாட்டினரின் வளர்ந்த நிலையும் நாம் இன்னும் வளர்ச்சி நோக்கி நெடுந்தூரம் செல்ல வேண்டி உள்ளதும் புலப்படுகிறது. நாட்டுப்புறவியல் என்று சொல்லப்படும் 'FOLKLORE' எனும் துறை சார்ந்த படிப்பின் தேவை இந்திய அளவில் இன்னும் முழுமையாக உணரப்பட்டதாகத் தெரியவில்லை. 'FRRC,' 'IFSC,' 'FOSSILS' போன்று அங்கொன்றும், இங்கொன்றும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளனவே தவிர மேல்நாட்டை நோக்க, செய்யத்தகுந்த ஆய்வுக்களங்களைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இத்துறை மிகுந்த வளர்ச்சி பெற வேண்டி உள்ளது. பழுத்த தாள்களில் அச்சடித்து அகம் மகிழும் நம் மனப்போக்கினை மாற்றிக் கொண்டு இணையம் வழியாகச் செய்திகளை வெளி உலகிற்கு மின்மொழிகளில் தெரிவிக்க வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம். அதுபோல் தொன்மரபு பின்பற்றும் மக்கள் வாழும் காலத்திலேயே நம் பழைய அடையாளங்களைத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.

தமிழில் உள்ள இணையப் பக்கங்களை நோக்கும் பொழுது உள்ளூர்ச் செய்திகளின் தரத்தில் நம் இணையப் பக்கங்கள் உள்ளனவே தவிர, உலகத் தரத்தில் நம் பக்கங்களை வடிவமைக்க வேண்டி உள்ளது. உலகின் எந்த முனையில் உள்ளவரும் நம் பழமரபுச் செல்வங்கள் பற்றிய விரிவான பரந்த செய்திகளை அறியும் வண்ணம் நம் நாடு முழுவதும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். நம் நாட்டின் செய்தியைச் சொல்லும் எந்த இணையப் பக்க முகப்பிலும் பழமரபுச் செல்வங்கள் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் தொடர்புகள் (Links) இணைக்கப்பட வேண்டும். அரசு இணையப் பக்கங்களில் சுற்றுலா, கோயில், பார்க்கும் இடங்கள், மருத்துவம், திரைச்செய்தி, தங்கும் இடம் பற்றிய குறிப்புகள் இருப்பது போலவே மரபுச் செல்வங்கள் (Heritage) அல்லது 'Folklore' என்னும் செய்திப் பகுதி இணைக்கப் பெறல் வேண்டும். அமெரிக்க நாட்டுப்புறவியல் கழக இணையப் பக்கத்திற்குச் சென்றால் அமெரிக்காவில் உள்ள நாட்டுப்புறவியல் கல்விக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், படிப்பு முறைகள், படிக்கும் நேரம், கட்டணம், ஆசிரியர்கள், கட்டட அமைப்பு, முன்னோடி ஆய்வுகள், நூலகம் பற்றிய குறிப்புகள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. அதுபோல் நம் இணைய அமைப்புகள் அனைத்திலும் அறியத்தகுந்த இணையத் தொகுப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வாளர்களை அடையாளப் படுத்தும் கட்டுரைகள், படங்கள், மின்முகவரிகள், தொலைபேசி எண்கள், இணைய முகவரிகள் யாவும் நம் ஆய்வு முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்று தன் நாட்டத்தை வெளிப்படுத்தும் இளங்கோவன், நாட்டுப்புறவியல் துறையில் அரும்பாடுபட்டு உழைத்து மிகச் சிறந்த முடிபுகளைத் தம் ஆய்விதழான 'ஆராய்ச்சி''யில் கொண்டுவந்த அறிஞர் நா. வானமாமலை முதலான அறிஞர் பெருமக்களையும் அவர்களின் அறிவுப் புலத்தையும் உலகளாவிய நிலையில் அறியச் செய்வது நம் கடமை என்று உணர்த்துகிறார். அதே சமயம், "அதற்குரிய ஆக்கப் பணிகளில் வாய்ப்பு அமையப்பெறின் ஈடுபட்டு உழைப்போம்...." என்று எழுதுவதுதான் மனத்தை உறுத்துகிறது. வாய்ப்பு அமையப்பெறின் எவரும் எதையும் செய்யலாம். வாய்ப்பை உருவாக்கி அமைத்துக் கொண்டு அத்துறையில் ஈடுபட்டு உழைப்பதுதான் உண்மையான பணி. பின்னடைவுகளே வலிமைமிக்க முன்னெடுப்புகளுக்கு வழிவகுப்பன என்று 'போரின் கலை'(The Art Of War) என்னும் சீனப் பழம்நூல் சொல்லுகிறது.

'நாட்டுப்புறவியல்' என்ற இந்த நூல், அடிப்படைக(basics)ளிருந்து தொடங்குகிறது.

நாட்டுப்புறவியலை 'Folklore' என்ற சொல்லால் வில்லியம் ஜான் தாமஸ் 1846ஆம் ஆண்டில் குறிப்பிட்ட பின்பே இத்துறை தனியாக வளரலாயிற்று என்ற செய்தி முதல் இயலில் இடம்பெற்றுள்ளது. உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் நாட்டுப்புறவியல் தொடர்பாக ஆய்விலும் தொகுப்பிலும் மேற்கொள்ளப்பெற்ற முயற்சிகளும் பணிகளும் விரிவாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.

பின்னர் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய திரைப்படப் பாவலர் பாடல்கள் வரைக்கும் கொண்டுள்ள நாநவில் இலக்கியத்தின் தாக்கத்தை அலசுகிறது.

நாட்டுப்புறப் பாடலுக்குரிய தனித்தன்மைகளுள் ஒன்று சொல்லோ தொடரோ திரும்ப வருதல்; அந்தத் தனித்தன்மையுடன், சமூக மாற்றத்துக்கான கருத்து வீச்சுகளும் - மொழி அடிப்படையில் வழக்குச் சொற்களும் பழமொழிகளும் சித்தர் பாடல்களில் அமைந்துள்ளமையால் சித்தர் இலக்கியத்தை மக்கள் இலக்கியம் என்று அறிஞர்கள் உரைப்பது பொருத்தமே என்று குறிப்பிடுகிறார் இளங்கோவன்.(பக். 40-42)

நாட்டுப்புறவியல் கோட்பாடுகளின் விளக்கம் விரிவாக மூன்றாம் இயலில் சொல்லப்படுகிறது. அத்துறையின் முன்னோடி ஆய்வறிஞர் சி.எம். பெளராவின் அறுவகைப்பாட்டையும் மரியாலீச்சின் ஐவகைப்பாட்டையும் தவறாமல் குறிப்பிடுகிறார். தாலாட்டுப் பாடல்கள் தொடங்கி ஒப்பாரிப் பாடல்கள் வரையிலான நாநவில் இலக்கிய வடிவங்களை விளக்கி உரிய சான்றுகளையும் வயணமாகத் தந்துள்ளார்.

அடுத்த நான்காம் இயலான 'கதைப்பாடல்கள், 'நாட்டுப்புறவியல்' என்னும் இந்நூலின் அச்சாகத்(axle) தெரிகிறது. பண்பாடு வளர்ந்துள்ள நிலப்பகுதிகளைவிட வறண்ட பகுதிகளிலும் பின் தங்கிய பகுதிகளிலும் மட்டுமே கதைப்பாடல்களின்(Ballads) பெருக்கம் சாத்தியம் என்ற உலகநூல் கலைக் களஞ்சியத்தின்(The World Book Encyclopaedia) கருத்து உரியவாறு பயன்படுத்தப் பட்டுள்ளது(ப.98). வாய்மொழியாகப் பரவுவதே கதைப்பாடல்களின் முதன்மையான செயல்பாடு என்ற டேவிட் புக்கான் கருத்தும் இவ்வாறே.

தமிழ் - தமிழர் பண்பாடு தொடர்பான ஆய்வுகளில் ஏன் ஆங்கிலக் கலைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? அப்படிப் பயன்படுத்தினால் அந்தக் கலைச் சொல்லின் வழி குறித்து, மேற்கோளை மட்டுமே நம்பாமல், சொல்லாய்வுக்குச் சென்று அறிய வேண்டும். இலத்தீன் சொல்லிலிருந்து 'ballad' தோன்றியதாக(ப.97) இளங்கோவன் கூறுகிறார். "A narrative poem or song of popular origin in short stanzas, often with a refrain; originally handed down orally, often with changes and additions[

ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிகளுக்குள்ளோ மேற்கோள் குறிகளுக்குள்ளோ தராமல் நேரடியாகப் பயன்படுத்துவதையும் பிழையுடன் தருவதையும் ஆசிரியர் இனிவரும் பதிப்புகளில் தவிர்க்க வேண்டும். பக்கம் 19இல் "Finish Literature Society என்னும் பெயர்கொண்ட பின்லாந்து இலக்கியக்கழகம் 1831இல் தோற்றம் பெற்றது" என்று உள்ளது. 'Finish Literature Society' என்றால் "இலக்கியக் கழகத்தை ஒழித்துக் கட்டு!" என்று பொருள். இன்னொன்று, பின்லாந்திலுள்ள இலக்கியக் கழக்த்தின் பெயரை அப்படியே சுட்ட வேண்டுமென்றால் 'ஃபின்னிஷ்' மொழியில் தானே தர வேண்டும். இந்தச் சிக்கல்களை மிக எளிதாகத் தீர்க்க, பின்னிய இலக்கியக் கழகம்('Finnish Literature Society') என்று எழுதினாலே போதும். சொல்லுக்கு முன் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தாத ஆசிரியர், 'லோன்ராட்' என்று மொழிமுதல் வாராத எழுத்தைப் பயன்படுத்தாமல் 'உலோனிராடு' என்றல்லவா எழுத வேண்டும்? 'லோகநாதன்' என்ற பெயரை உலகநாதன் என்றெழுதுவதுதானே மரபு! சொல்லில் வடவெழுத்தை நீக்கியபின் தமிழ்மரபெழுத்துச் சொல்லமைப்பை அமர வைக்காமல் ஆங்கில எழுத்துகளில் அப்படியே சொல்லை எழுதுவது ஏற்புடையதா? திரைப்படப் பாடல்களுக்கு வடிவம் நல்கிய நாட்டுப்புறத்துக்குள் பகரமாக இன்று திரைப்பாவடிவம் வந்து நுழைந்துள்ளதுபோலத்தானே இதுவும்?

தோழர் உலகநாதன் பாடும் கானாப் பாடல்கள் சிலவற்றுக்கும் இதே கதைபொதி தன்மை (balade naturelle) இருப்பதை உணரலாம். தொல்பிரஞ்சுச் சொல் 'பலாத்'துக்கு உள்ள நடனப் பாட்டுத் தன்மையை "வாளைமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" என்ற உலகநாதனின் திரைப்பாட்டுக் காட்சியிலும் காணமுடிவது, "நாடுகளின் எல்லைகள் கடந்ததும் மொழியினப் பண்பாடுகள் கடந்ததுமான ஒருமையைக் கதை பொதி பாடல்களில் மட்டுமே காணமுடியும்" என்ற கருத்தியலை மெய்ம்மையுறுத்துவதாகும்.

நாட்டுப்புறவியல் அறிஞர் நா.வானமாமலை, தெய்வீகம், புராணம்,சமூகம், வரலாறு என்ற நான்கு அடிப்படைகளில் கதைப்பாடல்களை வகைமை செய்தது இந்நூலில் விளக்கம் பெற்றுள்ளது. சான்றுகளான இராமப்பையன் அம்மானை முதலான கதைப்பாடல் நூல்களைப் பற்றியும் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாவதும் இறுதியானதுமான 'நாட்டுப்புறவியலும் மானிடவியலும்' என்ற இயலில் கொடும்பாவி கட்டி இழுக்கும் வழக்கம், ஆவி வணக்கம், மந்திரம், மைபோடுதல், வசியம் செய்தல் முதலான பல நாட்டுப்புற நம்பிக்கைகள் விளக்கப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் வெளியான தமிழவனின் 'நாட்டுப்புற நம்பிக்கைகள்' என்ற நூல் இது தொடர்பான முன்னோடித் தொகுப்பு ஆகும்.

இவ்வியலில் 'வசியம் செய்தல்' பற்றிய பகுதியில் வரும்,

"மஞ்சள் அரைக்கையிலே

மதிலேறிப் பார்த்த மச்சான்

' என்னபொடி தூவி இங்கே

இழுத்தரைக்க கூடுதில்ல"

என்ற சான்றின் மூலவடிவம்-

"காரை வீட்டுத் திண்ணையிலே

கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே

என்ன நினைச்சுப் பார்த்தானோ

இழைச்சு அரைக்க முடியல்லியே"

என்ற தூய நாட்டுப்புறக் காதல் பாடல் ஆகும். நாற்பதாண்டுகளுக்கு முன் இந்த மூல வடிவம்தான் தொகுப்புகளில் இடம் பெற்றது.

நூலின் இறுதியில் 'உதவிய நூல்கள்' என்ற பட்டியலுக்குப் பின் 'உதவிய இணைய தளங்கள்' என்ற பட்டியலும் இடம் பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. ஏனெனில் மிகவும் சிறந்த தமிழறிஞர்களும் ஏனோ "அச்சைத்தான் பார்ப்போம்! இணையம் பார்த்திட ஏதிங்கே நேரம்?" என்று இன்னும் அடம் பிடித்துக் கொண்டிருக்கையில் இத்தகைய நலமனப்பான்மையை இளங்கோவன் கொண்டிருப்பது தென்பளிக்கிறது.

பின்னிணைப்பாக, தான் பல ஆண்டுகளுக்குமுன் பெரம்பலூர் மாவட்டத்தில் களப்பணியாகத் தொகுத்த சில பாடல்களைக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். உரை சொல்லி மாரடிக்கும் ஒப்பாரிப் பாடல் ஒன்று, கிட்டத்தட்ட பத்துப் பக்கம் தரப்பட்டுள்ளது. அதை வாசிக்கையில், நாட்டுப்புறக் குடும்ப வாழ்க்கையில் நிழலாடும் தனிமனிதச் சோகங்கள் பல நெஞ்சை நெருடுகின்றன. அதே சமயம் அதில் வரும் மருத்துவர் மற்றும் மருத்துவம் பற்றிய குறிப்புகள், ஓருவரின் இறப்புக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று தவிர்க்கும் தனிமனித மனநிலை(evasion)யைச் சுட்டுகின்றன.[இந்த மனநிலையை அடிப்படையாக வைத்தே சாந்திரார் என்ற சுவிட்சர்லாந்து நாவலாசிரியரை ஆராய்ச்சி செய்துள்ளார் பிரஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வே.நாயகர்.] நடவுப் பாடல் ஒன்றில்,

"காச செலவுபண்ணி

காலேஜிக்குப் போகச் சொன்னேன்

காலேஜிக்குப் போகாமலே எம்மா - அவன்

கடத்தெருவ சுத்தினாராம் எம்ம்மா - எம்மா"

என்று இடம் பெற்றிருப்பது சிரிப்பை உண்டாக்கினாலும், பின்னர் வரும் -

"ஆத்தங்கர ஓரத்தில்

ஏத்தம் எறக்கையிலே

வரப்போரம் வேலிகட்டி எம்மா - நான்

வறுமையிலே வளர்ந்தேனடி எம்ம்மா - எம்மா

பூமுடிச்சுப் பொட்டுவச்சுப்

பொன்னகையும் போட்டுவச்சு

கல்யாணம் முடிச்சீங்களே எம்மா - நான்

கண்கலங்கித் திரும்புவேனே எம்ம்மா - எம்மா

...........................................................................

ஸ்டவ்அடுப்பு முதல்கொண்டு

நீஎனக்கு எடுத்துவச்ச

இங்குஒரு ஸ்டவ்அடுப்பு எம்மா - என்

மாமிவாங்கி வச்சிருக்கா எம்ம்மா - எம்மா

ஒருசாதி ஒருரத்தம்

சொந்தமிடக் கூடாதுன்னு

என்னெ கொடுத்தாயே அம்மா - என்

இரத்தத்தையும் பார்த்தாயோ எம்ம்மா - எம்மா

தங்க அருகாபடி

தங்கதாண்டும் வாசப்படி

தங்களுக்குச் சீருசெய்ய எம்மா - அங்கத்

தகராறு ஆவுதடி எம்ம்மா - எம்மா"

போன்ற பாடல்கள் மனவெளியை ஈரமாக்குகின்றன. நாட்டுப்புறங்களில் பெண்கள் படும் கொடுமைகள் அவர்கள் வாய்விட்டுப்பாடும் நடவுப்பாடல்கள் முதலானவற்றில் பதிவானதிலிருந்தே நாட்டார் நாநவில் இலக்கியம் எவ்வளவு ஆற்றல் மிக்கதென உணரலாம். நாட்டுப் புறங்களில் வாழும் பெண்கள் குறித்த சித்தரிப்பு இப்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் வேறு ஒரு மாற்றுப் பரிமாணமும் கொள்ளத் தொடங்கியுள்ளது.நாட்டுப்புறவியலின் வகைமாதிரிகள் இந்திய குணத்துக்கேற்றவாறு,தமிழ் குணத்துக்கேற்றவாறு பரிணாமம் கொண்டிருக்கிறது என்பதை அறுதியிட்டு சொல்லமுடியும்.

Wednesday, June 02, 2010

தொ.பரமசிவம் என்ற மாமனிதன்



இந்தக் கட்டுரை இரண்டு வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து தொ.பரமசிவம் அவர்கள் எழுதியுள்ள “தெய்வம் என்பதோர் “ என்ற நூலை எடுத்து ஒவ்வொரு பக்கம் பக்கமாக புரட்டும் போதுதான் ..ஒவ்வொரு வரிகளுக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருப்பதாகப்படும்..ஆகவே அவசரப்பட வேண்டாம் என்று நானே முடிவெடுத்துக் கொள்வேன்..இப்படியே இரண்டு ஆண்டுகள் போய்விட்டன..தொ.ப தமிழகத்தில் அல்லாமல் மேற்கில் பிறந்திருப்பாரேயானால் கிளஸ் லெவிஸ்ட்ரஸ்,எமிலி டர்கைம்,மாஎசல் மாஸ் போன்றோருக்கு இணையாக நிச்சயம் பேசப்பட்டிருப்பார்.ஆனாலும் அவரின் தளம் அசாதரணமானது.


அதே மாதிரிதான்..தொ.பரமசிவம் அவர்களை பேராசிரியர் என்பதா ஆய்வாளர் என்று எழுதுவதா? என்ற குழப்பத்திலே நாட்கள் ஓடியதும் உண்டு..பேராசிரியர் அவர் பணி. ஆகவே அவரை பேராசிரியர் என்று அழைக்கலாம்தான். ஆனால் நான் நேரில் பார்த்துள்ள பேராசிரியர்கள் என் கண் முன்னர் வந்து போவார்கள்.அவ்வளவுதான் பேராசிரியர் என்று அவரை அழைத்து இழிவு படுத்த வேண்டாம் என்று முடிவெடுப்பேன்..அப்புறம் முனைவர் என்று எழுதலாம் என்றாலோ ஆய்வாளர் என்று எழுதலாம் என்றாலோ இந்த அடைமொழிகளுடன் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலோரை நினைத்து தொ.பரமசிவம் அவர்களை கீழ்மைப்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொள்வேன்., எந்த அடைமொழிகளுடன் அவரை அழைத்தாலும், யானையைப் பார்த்து கண் பார்வை இல்லாதவர்கள் சொன்ன கதையாகிப் போகும்.. அவருடைய ஆளுமையின் ஒரு பகுதிக்குத்தான் எந்த அடைமொழியும் பொருந்தும்.முழு ஆளுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு சொல் தேவை..


ஏன் இவ்வளவு முன்னுரை? ஒரு சங்கை அளவாக வைத்துக்கொண்டு கடல் நீரை அளக்க முடியுமா?அந்தப் பயம் தான் எனக்குள்ளும்.. என் அறிவு சங்கு என்றால் அய்யாவின் அறிவு கடல்..

தேவநேயப்பாவாணர் அவர்களைப் பற்றிச் சொல்வார்கள்.தனி மனிதனாக இருந்து கொண்டு ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணிகளை செய்தவர் என்று. அது மாதிரிதான்.. தொ.ப அவர்கள் ஒரு பல்கலைக் கழகத்திற்கு இணையானவர். அவருடைய பண்பாட்டு அசைவுகள் என்ற நூலுக்கு ஆ.இரா.வேங்கடசலபதி எழுதியுள்ளது போல் தொ.ப., அவர்களிடம் இருந்து தெறிக்கும் கருத்துகளும் மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது நூற்றுக்கு நூறு உண்மை..


2007 டிசம்பர் மாத்த்தில் ஒரு நாள் பாளயங்கோட்டையில் அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் இருந்தேன்..அந்த மணித்துளிகள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. இரண்டு மணி நேரத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் , ஒரு புதிய புத்தகம் போடும் அளவு இருந்த்து..மறுபடியும் சலபதி வார்த்தைகளையே கடன் வாங்கிக் கொள்கிறேன்..”நாம் நனகு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில், புதிய ஒளி பாய்ச்சுவதும், பயனற்ற ஒரு சொல் அல்லது ஒரு பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சொல்வதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை”


”தெய்வம் என்பதோர்” என்ற இந்தப் புத்தகத்தை புத்தகம் என்பதா? ஆய்வுக்கட்டுரை என்பதா? என்றே தெரியவில்லை..


அடிப்படையில் தொ.ப,.,அவர்கள் ஒரு பெரியாரியச் சிந்தனையாளர்.அவர் சிறு தெய்வஙகள் பற்றியும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றியும் எழுதுவதும் அதனை பெரியாரிய மார்க்சிய சிந்தனைகளோடு இணைக்கும் அவர் கண்ணோட்டம் தமிழக ஆய்வுலகில் மிகவும் புதியது மட்டுமின்றி மிக முக்கியமானது. தாய்த் தெய்வ வழிபாடு பற்றி மிக அருமையான மூன்று கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன..


”நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாடல் , ஒரளவு வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களிடம் ‘சாமியாடி,குறுதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே விரிகிறது.இந்தக் கணிப்புகள் அனைத்துமே தவறானவையே..நாட்டார் தெய்வங்கள் தத்துவ விசாரங்களில் நொறுங்கிப்போகும் அளவுக்கு மெலிதானவையல்ல.. அவற்றின் வேர்கள் வலிமையானவை அவை வட்டாரத்தன்மையும் உயிர்ப்பும் பன்முகத்தன்மை கொண்டவை. இந்தப் பன்முகத்தன்மை எனபது சைவம், வைணவம்,ஸ்மார்த்தம், இஸ்லாம்,கிறித்துவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகும்”-பக்கம் .84

அய்யா தொ.ப., அவர்கள் முன்வைக்கும் கருத்து மிகவும் புதியது மட்டுமின்றி மேலும் விவாதத்தை வேண்டி நிற்பவை.சைவம், வைணவம்,இஸ்லாம், கிறிஸ்துவம் ., அனைத்தும் நிறுவனம் சார்ந்த மதஙகள் என்றும் ‘நிறுவனம் “ என்று வந்துவிட்டாலே ‘மேல்-கீழ்’என்ற வரிசை முறையுடன் தான் தமது அதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுகின்றன..ஆனால் நாட்டார் தெய்வ வழிபாடுகள் இந்த இலக்கணத்தில் இருந்து மாறுபட்டு நிற்கின்றன..


இந்தக்காரணத்தினால் தான் அதிகார மையமாகத் திகழந்த கோயில்களையும் அதனை மையப்படுத்திய ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து வந்த தந்தை பெரியார்,, ஆண்டு முழுவதும் மண்மேடாக் கிடந்து ஆண்டில் ஒரு முறை தெய்வமாக உருப்பெரும் நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர் கொள்ளவில்லை..

இந்த முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும் வழியில் தான தொ.ப., நமது சிந்தனையின் அனைத்து கதவுகளையும் சாளரங்களையும் திறந்து கொண்டே செல்கிறார்..


நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு பல்வேறு நூல்களில் இருந்து ஆதாரம் திரட்டி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் ஆய்வாளர் அல்ல..தொ.ப.., கிணற்றடிகளில், கோயில் பிரவாகத்தில், தெருக்களில்,சாவு வீட்டு முற்றத்தில் , அங்கு கிடைக்கும் ஒப்பாரிகளில், கிராம சொலவடைகளில் கிடைக்கும் ஆதாரங்கள் என பல்வேறு களங்களில் இருந்து கிடைத்த ஆதாரங்களோடு தனது ஆய்வுகளை முன் வைப்பது தான் தொ.ப., வின் அரிய பணியாகும்.


இன்னுமொரு முக்கியமான கட்டுரை..


”இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்ட்த்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும்,நம்பிக்கைகளையும்,வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாவே இருக்க முடியும்...”


சமய நல்லிணக்கத்தின் ஆணிவேர் எது என்பது பெரியாரியவாதியான அய்யா தொ.ப., அவர்களுக்கு நன்கு தெரிகிறது என்பதால் தான் .. இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும் என்கிறார்..கோயிலுக்கு நுழைய முடியாத ஒரு கூட்டம், கருவறைக்குள் நுழைய முடியாத் ஒரு கூட்டம்..கருவறைக்குள் மட்டுமே இருக்கும் ஒரு கூட்டம் ..இதெல்லாம் சேர்ந்தது தான் ” இந்து” என்பது ஒரு பித்தலாட்டமாகவே தான் தெரிகிறது.


தமிழ் சமூகத்தின் மீது காதல் கொண்ட அனைவரும் அய்யாவின் எழுத்துக்களை தேடிப் படியுங்கள். கண்டிப்பாக ஒரு புதிய உலகம் புது தரிசனம் கிடைக்கும்..வாய்ப்பு கிடைத்தால் அய்யாவை நேரில் சந்தித்துப் பேசி ஒவ்வொரு மணித்துளிகளையும் அனுபவியுங்கள்..அவர் நிறைய எழுதவில்லை..ஆகவே அவரைப் பார்க்கச் செல்பவர்கள் ஒலிப்பதிவு கருவியடன் சென்று , பேச்சுப்போக்கில் தெறிக்கும் அனைத்து சங்கதிகளையும் சேமிக்கவும். மிக முக்கியமான சுவையான செய்திகள் உங்கள் தெருவிலே இருந்திருக்கும் ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்காது..அப்படி உள்ள செய்திகளாகச் சொல்லி புது வெளிச்சம் பாய்ச்சுவது தான் தொ.ப.,வின் உலகம்..
பழைய பெளரானிக மரபில் சொன்னால் ஒரு சபிக்கப்பட்ட நகரம் போல ஞாயிற்றுக் கிழமை மாலைகளில் மதுரை இருக்கிறது” ஒரு கூட்டத்தில் தன்னுடைய உரையை இப்படித் துவங்கினார் தொ.ப..,80 களின் நடுப்பகுதியில் பொதிகை தொலைக்காட்சி தென் தமிழகத்தில் தன் ஒளிபரப்பை தொடங்கிய காலத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலையை பற்றிய தொ.பவின் பதிவு அது.
அழகில் பிரமித்திருப்பீர்கள். அறிவில் பிரமித்திருக்கிறீர்களா? நான் எனது சம காலத்தில் அறிவில் பிரமித்தது அய்யா தொ.பாவிடமே.


டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வரும். ஒரு பெண் அமெரிக்கப் பெரு நகரமொன்றில் போக்குவரத்து நிறைந்த சாலையில் நிற்க நாலாப்பக்கமும் வாகனம் செல்ல அந்தப் பெண் பேசத் தொடங்குவாள் அதைப்போலவே தொ.பாவை மதுரை வீதிகளில் நிறுத்தீர்களேயானால் காலம் பின்னோக்கிப் போய் மன்னர்களும்,வரலாறுகளும்,மரபுகளும், தொன்மங்களும், நம்பிக்கைகளும் எட்டுத்திக்கும் எழுத்து வரும். தொ.பா அந்த வரலாற்று வீதிகளில் நடக்கத் தொடங்குவார் மன்னன் .செண்பக பாண்டியன் எழுந்து அய்யாவைப் பார்த்து தன் சிரம் தாழ்த்துவார்.
அவருடைய நூல்கள் அவருடைய சாதனைகள் எனில் நான் அவருடைய நேர் பேச்சுக்கு அடிமை. அவர் பேசத் தொடங்கினால் என் ஐம்புலன்களையும் செவியில் கொண்டு வந்து நிறுத்துவேன். ஒரு பெரிய சாக்குப் பையோடுதான் ஐய்யாவைப் பார்க்க போக வேண்டும்.
நீங்களும் நானும் அன்றாடம் செய்து கொண்டிருக்கும் சம்பிராதயங்களை, சடங்குகளை, மரபுகளை, மதிப்பீடுகளை அவரால் மிகக் கூர்மையாக புதிய அர்த்தங்களோடு சொல்ல முடியும். நீங்களும் நானும் கவனிக்கத் தவறியவற்றை, பொருட்படுத்தாதவைகளை, ஒன்றும் இல்லையென்று நினைப்பவற்றை தொ. ப. தன் அறிவால் துலக்கி வைக்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பு சொல்லி மாளாதது.
அவர் மதுரையில் மாடல் லாட்ஜ் விடுதியில் தங்கியிருந்த காலத்திலும் , பின்பு அண்ணாநகர் வீட்டிலும் அவரது ஞாயிற்றுக் கிழமை மாலை சந்திப்புகள் பிரசித்தி பெற்றவை. வட்டமாக ஆட்கள் உட்கார்ந்திருக்க, தேனீர் வந்து கொண்டேயிருக்க கேள்வி எங்கெங்கிருந்தோ வரும். அவர் பதில் சொல்லிக் கொண்டே போவார்.
அப்படியான ஒரு ஞாயிற்றுக் கிழமை சந்திப்பில் அதிகாரம் இல்லாமல் ஒரு அரசு வெற்றாக ஒரு நிமிடம் கூட இருக்காது என்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.நம் ஊரில் ஜமீந்தார்கள் இறந்தால் அவருக்கு அடுத்தபடியாக வாரிசாக வேண்டியவர் முடிசூட்டிக் கொள்ளாமல் ஜமீன் தாரின் பிணத்தை அவரைப் பார்க்க விடமாட்டார்களாம். உடனடியாக அந்த அதிகார பீடத்தில் அதன் வாரிசு அமர்த்தப்பட்டு, பக்கத்து அறையில் மரித்துப் போன ஜமீந்தார் இருக்க அடுத்த அறையில் அவசரமாக முடிசூட்டுதல் நடக்கும். அதன் பின்பே அவரைப் பார்க்க அனுமதி. இப்படி விளக்கிக் கொண்டிருந்தவர் சடாரென இதற்கு ஒரு சர்வதேச உதாரணம் சொன்னார். ஜான்.எப்.கென்னடி சுடப்பட்டு இறந்த பொழுது அவர் உடலைப் பார்க்க உதவி ஜனாதிபதி விமானத்தில் போக அந்த விமானத்திலேயே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். அதன் பிறகே அவர் ஜான்.எப்.கென்னடியின் உடலைப் பார்க்கின்றார். ஏறும் பொழுது உதவி ஜனாதிபதி இறங்கும் பொழுது ஜனாதிபதி இப்படி சொல்லிக் கொண்டே போனார்.
மற்றொரு சந்திப்பில் சொன்னார் “இப்பொழுது கிராமத்தில் யாருக்கும் அக்கானி காய்ச்சத் தெரியாது (பதனீர் காய்ச்சுவது) போன தலைமுறையோடு அந்த அக்கானி காய்ச்சும் நுட்பம் போய் விட்டது. நம் வீட்டு ஊறுகாய் ஜாடிகளை ஒரு மாயக்கரம் உடைக்கிறது.ruchi mango pickles என வாழப் பழகி விட்டோம். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு ஊறுகாய் போடத் தெரியும்.”
ஒருமுறை கமல்ஹாசன் இவரிடம் பேசும் பொழுது Tuesday of moorris என்ற படத்தைப் பற்றிப் பேசினாராம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு விரைவில் இறக்கவிருக்கும் பேராசிரியரின் கருத்துக்களை அவருடைய மாணவர்கள் முறை வைத்து பதிவு செய்கிறார்கள். இது பற்றி வியந்த கமலிடம் சொன்னாராம் தொ.ப “இது ஏற்கனவே நம் மரபில் உள்ளதுதான் வைஷ்ணவப் பெரியவர்கள் தங்கள் மரணம் நெருங்கும் தருவாயில் தங்களுக்குத் தோன்றுகின்ற கருத்துகளை குறித்து வைப்பது வழக்கம்.”






ஒரு முறை வரப்பு பயிர் பற்றி பேச்சு வந்தது. நிலங்களில் வரப்புகளில் விளைபவை. ரஷ்யாவில் பின்னாட்களில் இந்தியாவிலிருந்து வரும் வாழைபழங்களுக்காக நிண்ட வரிசையில் காத்திருப்பார்களாம். அதை இப்படி விளக்கினார். அங்கு கூட்டுபண்ணைகள் எற்படுத்தும் பொழுது வரப்புகள் அற்று போகின்றது.. வரப்புகளில் விளையும் வாழைபழத்தின் சுவையை ஒத்த சில பழங்கள் இல்லாது போகின்றது. அதனால் தான் வாழை பழத்திற்கு அத்தனை பெரிய வரிசை. சமூக மாற்றம் வந்து ஆறுபது ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் ஒர்மையிலும், கலச்சாரத்திலும் தங்கி போன சுவையை சுவையை ரஷ்யர்களால் மறக்க முடியவில்லை என்றார்.
நான் எனது வழக்கமான கேள்வியை முன் கேள்வியை முன் வைத்தேன். ஏன் மலையாளிகள் நம்மிடம் இருந்து தனியே போனார்கள்? ”இந்திய கண்டத்தில் அன்மைகாலம் வரை தாய் வழிசமுகம் நீடித்தது கேரளத்தில் மாத்திரமே. அதற்கான சான்றுகள் அவர்களின் மொழி, சொத்துரிமை, பெயரிடுதல், பாலியல் சுதந்திரம் போன்றவற்றில் சுலபமாக கானலாம்.அவர்கள் தமிழகத்தின் தென் மேற்க்கில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
மற்றொரு புறத்தில் தமிழ் சமுக அமைப்பு எறக்குறைய பத்தாம் நூற்றாண்டிலேயே தந்தைவழி சமுகமாக, நிலபிரப்புத்துவ சமூகமாக உருவாகுகிறது. இதில் இனைய முடியாமல் ஒதுங்கி போனவர்களாக மலையாளிகள் இருக்கலாம்.
சில வருடங்களுக்கு முன்னால் இதய நோயால் பாதிக்கப்பட்டு அய்யா தொ ப மதுரை மினாட்சி மிஷின் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அதிகாலை பார்கக போனேன். ஜ சி யு வில் இருந்தார். வெகுநேரம் காத்திருந்தோம். அவர் உறவினர் யாரிடம் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார்.”நிறைய பேர் பார்க்க வருகிறார்கள்.. அந்த தொல்லையிலிருந்து தப்பவே ஜ சி யு விற்கு மாறினோம் என்றார். நான் அய்யாவை பார்க்காமலே திரும்பினேன். நிச்சயம் கண்ணாடி கதவுகளுக்கு அப்பால் இருக்கும் அவர் அகம் அறிந்திருக்கும் என் போன்றவர்களின் வருகையை. மாட்டுதாவணி தூசி மிகுந்த சாலையின் திரும்பும் பொழுது நானும் அப்படி உனர்ந்தேன்.
நமது பெரியப்பாக்களை நினைவுபடுத்தும் முகம். வார்த்தைகளை லேசாக உறிஞ்சியபடி பேசுவார். சன்னமான குரல்.கறுப்பு வெள்ளை சினிமாவில் பார்த்த எவரையோ நினைவுபடுத்தும் சட்டென்று அவர் தோற்றம்.
உள்ளுர் திருவிழா, பெரு திருவிழா பற்றி பேச்சு வந்தது. அய்யா சொன்னார். ஒரு மனிதன் பெரு திருவிழாக்களை விட ஊர் திருவிழாக்களிலேயே தன்னை முழுமையாக அடையாளம் காண்கிறான் என்றார். பாளையங்கோட்டை ஒரு கிறிஸ்தவ ஊராக இருந்தாலும் நூற்றுக்கனக்கான அம்மன் கோவில்கள் உண்டு. வருடம் முழுக்க திருவிழாக்கள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள அம்மன் அனைத்தும் வடக்கு நோக்கியே அமர்ந்திருக்கிறார்கள். காரனம் மிக எளிது. நமக்கு எதிரிகள் வடக்கிலிருந்து மட்டும் தான்.
நுட்பமான அவதானிப்புகள், வரலாறு, சமூகம், சொல்லாடல்கள், பழம் நம்பிக்கைகள், தொன்மங்கள் இவற்றின் தொகுப்பு அய்யா தொ. ப.
பாளையங்கோட்டை யாதவர் தெருவிலிருந்து நீங்கள் அவரை சந்தித்து விட்டு வெளியே வரும்போது வேறு ஒரு மனிதராக ஆகியிருப்பீர்கள்.
திருநெல்வேலி சார்ந்த என் அழகியல் சித்திரங்கள் வண்ணதாசனாலும், வண்ணநிலவனாலும் தீட்டப்பட்டது. தென் தமிழகத்தின் வரலாறு சார்ந்த சித்திரம் அய்யா தொ. பவாலேயே தீட்டப்பட்டது.
மிக நுட்பமான ஒரு அறிஞனை தமிழ்சமூகம் அப்படியெல்லாம் கொண்டாடவில்லை.அவர் மதுரையிலிருக்கும் பொழுது திடீரென நேதாஜி சாலையில் எதிர்படுவார். அப்படியே சாலையோரத்தில் நின்று பேசத் தொடங்குவோம். சாலையின் இருமருங்கிலும் போகும் மந்தைகள் அறியாது இந்த அறிஞனை……
அவதார் படத்தில் 3D கண்ணாடி வழியே புதிது புதிதாக பொருட்கள் புலப்படுகிறதே அதுபோல அவரை வாசிக்கத் தொடங்குவீர்களேயானால் வாழ்க்கை புதிதாய்த் தோன்றக் கிடைக்கும். அதன்பின் உங்களால் ஒரு வசவுச் சொல்லைக் கூட யோசிக்காமல் சொல்லிவிட முடியாது.
இதுபற்றி அய்யா பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார் “இந்த கெட்ட வார்த்தை என்பவற்றைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா எவையெல்லம் விலக்கப்பட்ட உறவுகளோ அல்லது சமூகம் மறுக்கும் உறவுகளோ அவையே கெட்ட வார்த்தைகளாக சமூகத்தில் உருவாக்கப்படுகிறது. தமிழ் சமூகத்தில் அதிகம் புழங்கும் வசவுச் சொல் அம்மாவோடு உறவு கொள்ளுவதைப் பற்றிதான். அடுத்து அக்காவோடு, பின்பு தேவிடியா, தேவிடியா மகன். இப்படி சமூகம் எதை விலக்க நினைக்கிறதோ அதை மறுபடி மறுபடி இந்த கெட்ட வார்த்தைகளின் வழி வலியுறுத்துகிறது. நாம் ஒரு தாய்வழிச் சமூகமாக இருந்தோம் என்பதற்கான சாட்சி இந்த கெட்ட வார்த்தைகள். உடனடி உதாரணம் ஆங்கிலத்தில் mother fucker. ஒரு வேளை ஒரு தொன்மையான சமூகத்தின் மொழியில் இப்படியான கெட்ட வார்த்தைகள் இல்லையெனில் அந்த சமூகம் இந்த நிகழ் உற்பத்தி முறைக்குள் வராததே காரணம் என்றார்.(நான் அறிந்தவரை மலையாளத்தில் இது போன்ற கெட்ட வார்த்தைகள் கிடையாது. அதிகபட்சம் ’தேவிடிச்சி’ மட்டுமே. அதுவொரு தாய்வழிச் சமூகத்தின் தொடர்ச்சி என்பதற்கான முக்கிய சான்று இது.)

பாளையங்கோட்டை யாதவர் கிழக்குத் தெருவில் நான் நுழைவதும், அவர் வீட்டில் அந்த ஆட்டுக்குட்டிகளைத் தாண்டி அவரோடு அமர்ந்திருப்பதும், உரையாடும் கணங்களும் வாழ்வின் நான் வாழ்ந்த கணங்கள். அவர் காலைத் தொட்டு வணங்க முடிந்தது என் வாழ்வின் பேறு. எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருநெல்வேலி போய் அய்யாவிடம் மாணவராகி விட வேண்டுமென்ற நிறைவேறாத ஆசையெல்லாம் எனக்கு உண்டு. நிறைவேறாத ஆசைகளின் பட்டியல் கன்னித்தீவை விட நீளம். அதற்காக நிறைவேறாத ஆசைகளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா என்ன?
இன்னும் இந்த வாழ்க்கையை நுட்பமாக பார்ப்பதற்கும், வாழ்வதற்கும் யாதவர் கிழக்குத் தெருவும் அய்யா தொ. ப வும் எனக்காக இருக்கின்றார்கள்..
முனைவர் தொ.பரமசிவத்தின் நூல்கள்
1. நான் இந்துவல்ல நீங்கள் - யாதுமாகி பதிப்பகம் திருநெல்வேலி
2. இதுதான் பார்ப்பனீயம்
3. பூனா ஒப்பந்தம் ஒரு சோக வரலாறு

4. சங்கர மடம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்
5. தெய்வமென்பதோர்
6. வழித்தடங்கள்
7. இந்து தேசியம்

8. அறியப்படாத தமிழகம் - நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை
9. தெய்வங்களும் சமூக மரபுகளும்
10. நாள் மலர்கள்

11. பண்பாட்டு அசைவுகள் – காலச்சுவடு நாகர்கோவில்

12. சமயங்களின் அரசியல்- பரிசல் பதிப்பகம் சென்னை

13. சமயம் பற்றிய உரையாடல் – தென்திசை பதிப்பகம் சென்னை.
14. அழகர் கோவில் ஆய்வு

உணர்வும் உப்பும்

தொ பரமசிவம்

'உப்புப் பெறாத வேலை ' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடு வார்கள். (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடு கிறாயா ? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையதுதான். அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் 'சுவை ' என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன் படுத்தப்படும் உப்பிற்கு 'வெளிளுப்பு ' என்று பெயர். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியா மல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது 'வெளிளுப்பு '.

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் 'சம்பளம் ' என்ற சொல் பிறந்தது என்பர். ஆங்கிலத்திலும் சூஹஙீஹசுட் என்ற சொல் சூஹஙீஞ் என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியாரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள். அது போலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர்கள் அரிசியினையும் உப்பினையும் அன்பளிப்பாகக் கொண்டு வருவர். மதுரை மாவட்டக் கள்ளர்களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும் உப்பும் கொண்டு செல்கின்றனர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந் தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. 'தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது ' என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்குமொழி.

நன்றி கெட்ட விதுரா _ சிறிதும்

நாணமற்ற விதுரா

தின்ற உப்பினுக்கே _ நாசம்

தேடுகின்ற விதுரா

என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி இந்த நம்பிக்கையைப் பதிவு செய்கிறான்.

பழந்தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொரு ளாக உப்பு விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் 'உமணர் ' என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்து வுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழ்க் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு 'அளம் ' என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர் களின் பட்டப்பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ + அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள். 'ஜடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி சுந்தர பாண்டியன் காலத்தில் (கி. பி. 1268) அதும்பூர் என்னும் ஜனனாதப் பேரளம், செல்லூர் என்னும் அநபாய சோழப் பேரளம், இடையன் குழி என்னும் இராஜேந்திர சோழப் பேரளம், கூடலூர் என்னும் ராஜநாராயணப் பேரளம், திருநல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப் பேரளம், வெண்ணாரிகன் சுழி என்னும் ஏழிசை மோகன் பேரளம், சூரைக் காமு என்னும் ஆளப்பிறந்தான் பேரளம் ஆகியவற்றிலிருந்து உப்பு விற்கையில் ஒரு உறை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்துத் திருவதிகை திரு வீரட்டானேஸ்வரர் கோயில் திருவமுதுபடிக்கும் கோயில் சீரமைப் பிற்கும் நிவந்தமாக அளிக்கப்பட்டிருக்கின்றன ' என்று தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் எடுத்துக்காட்டுகிறார்.

போக்குவரத்து வசதிகள் பெருகாத காலத்தில் உப்பின் விலையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. 'நெல்லின் நேரே வெண்கல் உப்பு ' என்று பெண் ஒருத்தி விலை கூறி உப்பு விற்பதனைச் சங்க இலக் கியத்தில் பார்க்கிறோம். சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுக்களில் இருந்து தெரிகிறது. இன்றைய பொருளாதாரக் கணக்கில் உப்பின் விலை இப்போது உள்ளதைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருந்த தாகக் கொள்ளலாம். உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்ட தனால் 'மரவை ' எனப்படும் மரச்சட்டியிலும் 'கல்மரவை ' எனப்படும் மாக்கல் சட்டியிலும் வீடுகளில் உப்பு இட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டின் சமூகப் படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்கியுள்ளது. ஆக்கிய சோற் றோடு உப்பைச் சேர்த்து உண்பது ஒரு வழக்கமாகும். சாதிய ஒடுக்கு முறை கடுமையாக இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார், சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பையிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டது போலும்.

உப்பு வரிக்கு எதிராகக் காந்தியடிகள் சட்டமறுப்பைத் தொடங்கிய காரணம், உப்பு அனைத்து மக்களையும் (சாதி, சமயம், வர்க்கம் தாண்டி) பாதிக்கக்கூடியது என்பதுதான். உப்பிற்கு இருக்கும் பண் பாட்டு முக்கியத்துவத்தையும் குறியீட்டுச் சிறப்பினையும் சுட்டி, 'உப்புக்கு வரிபோடும் அரசும் ஓர் அரசா ' என்று கேள்வி எழுப்பி ஆங்கிலேய அரசு ஆளத்தகுதியற்றது என அதன் தகுதிப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது தேசிய இயக்கம்.

காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகமும், தண்டி யாத்திரையும் இந்திய அரசியல் வரலாற்றின் அழுத்தமான பக்கங்களாகும். தண்டி யாத்திரை நடந்த குசராத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு நிறுவனமான 'கார்கில் ' கம்பெனிக்கு மைய அரசு உப்புத் தயாரிக்க அனுமதி வழங்கியது. குசராத் மக்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் இந்த அனுமதியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ததும், இறுதியில் 'கார்கில் ' நிறுவனம் பின்வாங்கியதும் இந்திய வரலாற்றின் வெப்பம் மிகுந்த பக்கங்களாகும்.

Friday, May 28, 2010

மாவீரன் திப்புசுல்தான்


1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: 'இன்று முதல் இந்தியா நம்முடையது' என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் "ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்" எனக் குறிப்பிடுகிறார்.(. 'Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company' என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், '30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது'. என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், 'இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்' என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். "அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! "ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது 'அக்னி சிறகுகள்' என்ற நூலில் தான் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, 'இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன' என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.

இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: "மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?" என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
'எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது' என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்."

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது 'திப்புவின் சமயக் கொள்கை' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் 'திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்' என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.

திப்புவின் விவசாயக்கொள்கை
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


போர்களத்தில் நேர்மை
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை."

மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. "அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்".என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

திப்புவை மாவீரனாக மாற்றியது எது?
இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.
உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.

திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது.ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது. கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. சஞ்சய்கான் 'the sword of tippu' என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை 'கற்பனைக்கதை' என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை 'கற்பனை கதை' எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன. அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும்,வறுமை,லஞ்சம்,ஊழல்,நிர்வாக சீர்கேடுகள்,தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும்.அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

Friday, May 21, 2010

மகத்தான இயலாமையின் மோனமொழி


கர்ணமோட்சம் குறும்படத்தை முன்வைத்து

குறும் படம் எனும் அற்புதமான கலைவடிவத்தை கையாளுகின்ற கலை ஆளுநர்கள் அதன் சிறப்பில்புகளை ஒரு சிலரை தவிர மற்றுள்ளவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை.ஆயினும் தமிழில் தொடர்ச்சியாக பல குறும்படங்கள் உயரங்களை தாண்டும் வல்லமை மிக்கதாக இருக்கிறது.எனது புலம் பெயர் வாழ்தலில் தமிழகத்தை போல பலவசதிகளை அடையமுடியாமல் போனாலும் தகவல் புரட்சியின் விளைவாக பல விஸயங்களை பயன்படுத்த முடிகிறது.அந்த வகையில் யூடூப் இணைய விடியோ மூலமாக பலவிதமான பாராட்டுதல்களை பெற்ற கர்ணமோட்சம் குறும்படத்தை கண்டேன்.பொதுவாக நான் விமர்சனம் எழுதினாலும் சிலாகித்து எழுதுவதில்லை.ஆனால் இந்த படத்தை குறித்து சிலாகித்து எழுதுவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்.எந்த ஒரு கலை வடிவமும் கால நீட்சியில் நிகழும் மாற்றத்தின் புழுதியில் தன் சாரத்தை இழந்து தனிமைப்படும்பொழுது அதை சார்ந்து இயங்கும் கலைஞனின் வாழ்வு அவன் அளவிலும் மற்றவர் பார்வையிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஒவ்வோரு காலகட்டமும் வாழ்வைப்பற்றிய பொதுவான ஒரு பார்வையை அதன் சமூகத்திடமிருந்து உருவாக்கிக்கொள்கிறது. பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் உய்வும் , எந்த வித நோக்குமற்ற கேளிக்கையும் நம்முடைய “ஊடக காலத்து” வாழ்வியல் பார்வையாக இருக்கும் பிண்ணனியில் ஒரு தெருகூத்து கலைஞனின் வாழ்வை முன் வைக்கிறது முரளி மனோகர் இயக்கிய “ கர்ணமோட்சம்” என்ற குறும்படம். [இந்த வருடம் கலை மற்றும் கலாச்சார பிரிவில் தேசிய விருதை பெற்றகுறும்படம்]



ஒரு பள்ளியில் தன் கர்ணமோட்சம் கூத்தை நிகழ்த்திக்காட்ட இருங்கூர் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு தன் மகனுடன் – அவனுக்கு கிரிக்கெட் மட்டையும்,பந்தும்,வெள்ளை தொப்பியும் கூத்து முடிந்ததும் வரும் பணத்தில் வாங்கிதருவதாக வாக்கு - வருகிறான் கோவிந்தன் என்ற கூத்து கலைஞன். வரும் வழியிலேயே தன்னை கர்ணனாக வேசம்கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் கோவிந்தன் ,பள்ளி தாளளர் இறந்து விட்டதால் பள்ளி விடுமுறை என அறிந்து என்ன செய்வது என்றறியாது நிற்கிறான். பள்ளியின் தலைமை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊருக்கு திரும்பி செல்லக்கூட பணமில்லாத நிலையை கூற தலைமையாசிரியர் தான் வெளியே இருப்பதாகவும் சாயங்காலம் வீட்டிற்கு வந்தால் உதவுவதாகவும் கூறுகிறார். கோவிந்தனுக்கு வேறு வழியில்லை. காத்திருப்பதை தவிர. பசியோடிருக்கும் தன் மகனுக்கு ஒரு வடை வாங்கிகொடுத்துவிட்டு தண்னீர் குடித்து பசியாறுகிறார் “கர்ணன்”. அந்த தேநீர் கடையில் வேலை செய்யும் ஊமை சிறுமிக்கு கர்ணனின் பசி தெரிந்திருக்கவேண்டும். தெரு பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருக்கும் “கர்ணனு”க்கு சாப்பிட கொடுக்கிறாள் அவள். கையேந்தி பெற்றுக்கொள்கிறார் “ கர்ணன்”

அவரைப்பற்றி அவள் கேட்க கோவிந்தனுக்கு உற்சாகமாகிவிடுகிறது –அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு ஜீவனாவது இருக்கிறதே! – தான் அவள் வயதில் செஞ்சி துரைசாமி தஞ்சிரானிடம் கூத்து கற்றுக்கொண்டதையும். தான் கூத்தில் கர்ணன் வேசம் கட்டுவதையும் தான் பாட ஆரம்பித்தால் விடிய விடிய ஊரு சனம் மொத்தமும் கேட்கும் என் கூறிக்கொண்டே வ்ருபவர்“இப்பொழுதெல்லாம் யார் இருக்கா இதல்லாம் பார்க்க எல்லாத்தையும் டி.வி பொட்டி இழுத்துக்குச்சே” என்கிறார் ஏக்கத்துடன். ஒரு உற்சாகத்துடன் அந்த ஊமை பெண்ணிற்கு கூத்தை கற்றுக்கொடுக்க தொடங்குகிறார்.தன் குருவிற்கு வணக்கம் தெரிவித்து. அந்த சமயம் அங்கு வரும் தேநீர் கடைகாரன் அவள் முகத்தில் தண்ணீரை விசிறியடித்து அவளை இழுத்துச்செல்லும் பொழுது .“நாலு இட்லி வாங்க காசில்லாமல் தெரு தெருவாக சுத்துகினு இருக்கிற இதுல இவளுக்கு கூத்து கத்து குடுக்க போரியா போய்யா ஒ வேலய பாத்துக்கிட்டு” என கூறி “கர்ணனை” கிட்டதட்ட ஒரு பிச்சைகாரனாகவே ஆக்கிவிட்டுப்போகிறான்.

மிகவும் வேதனையுடன் அங்கிருந்து நடந்து செல்லும் கோவிந்தனை ஓடி வந்து வழி மறைக்கிறாள் அந்த ஊமை சிறுமி. கர்ணன் அவளையே பாக்கிறார். அவள் தன் கைகளை நீட்டி அவருக்கு ஏதோ கொடுக்கிறாள். கர்ணன் அதை கை நீட்டி வாங்குகிறார் கோவிந்தன். ஒரு ரூபாய் நாணயம். குரு தட்சணை. அவள் தன் குருவிற்கு குரு வந்தனம் செய்து ஓடுகிறாள். கோவிந்தன் அவளைப்பார்த்த வண்ணம் நிற்கிறார். இருக்கலாம் அந்த நிமிடம் கோவிந்தன் -கர்ணன்- மனம் மோட்சம் அடைந்திருக்கலாம். மெல்ல நடந்து போகும் கோவிந்தன் எதிர்படும் பள்ளி சிறுவர்களிடம் “ நான் கர்ண மஹாராஜா” என கூறி தன் கிரீடத்தை கழட்டி குடுத்துவிட்டு போகிறார். கிரீடம் தன் தன்மையை இழந்து அந்த சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாகிபோகிறது. அது அவருக்கும் இந்த சூழலுக்கு பொருந்தா விசயமாக பட்டிருக்கவேண்டும்.

அடுத்த தலைமுறையின் ரசனையும் அவர்களது உலகமும் கோவிந்தனுக்கு புரிவதில்லை. அடுத்த தலைமுறை தன் வாழ்வோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் விசயங்களிலிருந்து உருவாகப்போகும் மலினமான வாழ்வியல் பார்வை நம் கண்முன்னே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிதர்சனம். கோவிந்தன் மகன் கையில் ஒரு பொம்மை செல்போன் கிடைக்கிறது. அதை “அதிஷ்டம்” என சந்தோஷப்படும் அவன், முதலாய் தொடர்புகொள்வது சச்சின் டெண்டுல்கரை. பின் அவன் “பெப்ஸி” உமாவை தொடர்புகொண்டு பேசுகிறான் “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.......விஜய் படத்திலேந்து பாட்டுப்போடுங்க” கிரிகெட்,சினிமா இவற்றை ஆதர்சனமாகக்கொண்டு கேளிக்கையும் அந்த நேர சந்தோஷத்தை மட்டும் பிரதானமாய் கொள்ளும் தட்டையான தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் உழன்று கிடக்கும் அடுத்த தலைமுறைக்கும் கோவிந்தனின் கலைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிறப்பமுடியாத பெருவெளி. (மற்றோரு இடத்தில் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கோவிந்தன்Ring Ring Tone ஆக எதிர்கொள்ளும் பாட்டு : “ வாள மீனுக்கும் , விலங்கு மீனுக்கும் கல்யாணம்....” இந்த பாடல் மூலமாக அந்த தலைமையாசிரியரைப்பற்றி இயக்குனர் நம் மனத்தில் எழுப்பும் பிம்பம் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு)


இரண்டாவது கிளாஸ் தண்ணீர் கேட்ட கோவிந்தனை விரட்டுகிறான் தேநீர் கடைக்காரன். அவனுக்கு வாழ்க்கை பணம் சார்ந்தது உறவுகள்,நிகழ்வுகள் எதையுமே பண வடிவாய் புரிந்துக்கொள்பவன். அவனைப்பொருத்தவரை அந்த கூத்துக்காரன் “இடத்தை அடைத்துக்கொண்டு “ வியாபாரத்தை கெடுக்கும் இடையூறு. கோவிந்தனால் நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால் அவனால் கோவிந்தனையும், அவன் கூத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும்.அப்படி இல்லாத பட்சத்தில் எந்த கலைவடிவமும், கலைஞனும் அவன் வாழ்க்கைக்கு தேவையில்லாத வஸ்துக்கள். நம் காலத்து மனசாட்சியாக இருக்கிறான் அவன்.

தானும் தன் கலையும் கால மாற்றத்தில் தனிமைப்பட்டு போவதும், உறவுகளின் எதிர்பார்புகளை நிறைவேற்றமுடியாதசரிவும், தன்கென்றிருந்த வெளி இல்லாமல் போகும்பொழுது ஏற்படும் சூன்யமும் “ கர்ணமோட்சம்” முழுவதும் நிறைகிறது. பொருளாதாரம்,அர்த்தமற்ற வெற்று கேளிக்கை சார்ந்து இயங்கும் நம் கால சூழலில் பொருத்திக்கொள்ளமுடியாமல் திணரும் எந்த கலைக்கும்,கலைஞனுக்கும் பொருந்தும் “ கர்ணமோட்சம்”

கர்ணமோட்சம் குறும்படத்தை இயக்கிய முரளி மனோகர். பிறந்தது கும்பகோணம். படித்த்து ,வளர்ந்தது திண்டிவனம்.தமிழ்நாடு திரைப்படகல்லுரியில் இயக்குனர் பட்டய படிப்பு. இவரது மற்ற குறும்படம்” அக்காலம்” ஜெமினி ஸ்டியோ கேண்டீனில் வேலைப்பார்த்த ஏ.என்.எஸ்.மனியனைப்பற்றிய,அவர் நினைவுகள்பற்றிய ஆவணப்படம். கர்ணமோட்சம் தமிழ்நாடு அரசின் விருதையும் இந்த வருடம் மத்திய அரசின் விருதையும் பெற்றது. தற்சமயம் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் முரளி மனோகருக்கு வாழ்த்துக்கள்.




கர்ண மோட்சம்:

தயாரிப்பு : எம்.ஜீ.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

இயக்கம் : முரளி மனோகர்

கதை,உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்.

இசை : இரா,பிரபாகர்

நடிப்பு : ஜார்ஜ்,யுவராஜ்,கலியமூர்த்தி,பூர்ணிமா,சண்முகம்.

Tuesday, May 11, 2010

கசாக்கின் இதிகாசத்தை எழுதிப்பார்த்த ஒ.வி.விஜயன்



I wish to escape nothing, Ravi answered from within his silence, I want to be the sand of the desert, each grain of sand; I want to be the lake, each minute droplet. I want to be the laya, the dissolution.

From The Legends Of Khasak, 1969
ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.
பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.
கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.

ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.

கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :

…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.

“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.

“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.

“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.

“அக்காவை மறந்துவிடுவாயா?”

“மாட்டேன்”

“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”

இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.

… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”

... Long before the lizards, before the dinosaurs, two spores set out on
an incredible journey. They came to a valley bathed in the placid glow
of sunset.
My elder sister, said the little spore to the bigger spore, let us see
what lies beyond.
This valley is green, replied the bigger spore, I shall
journey no farther.
I want to journey, said the little spore, I want to discover. She
gazed in wonder at the path before her.
Will you forget your sister ? asked the bigger spore.
Never, said the little spore.
You will little one, for this is the loveless tale of karma; in it
there is only parting and sorrow.
The little spore journeyed on. The bigger spore stayed back in the
valley. Her root pierced the damp earth and sought the nutrients of death
and memory. She sprouted over the earth, green and contended.
... A girl with silver anklets and eyes prettied with surma came to
Chetali's valley to gather flowers. The Chempaka tree stood alone-
efflorescent, serene. The flower gatherer reached out and held down a soft
twig to pluck the flowers. As the twig broke the Chempaka said, My little
sister you have forgotten me !

- O.V.Vijayan "Legends of Khasak"

Short stories

* Short Stories of Vijayan(1978)
* Oru Neenda Rathriyude Ormakkayi(1979)
* Asanthi(1985)
* Balabodhini(1985)
* Kadaltheerathu(1988)
* Kattu Paranja Katha(1989)
* Poothaprabandham and Other Stories(1993)
* Kure Kathabeejangal (1995)
* O V Vijayante Kathakal (2000)
* Arakshithavastha(2007)

Collection of Essays

* Khoshayathrayil Thaniye(1987)
* Oru Sindoora Pottinte Orma(1987)
* Sandehiyude Samvadam(1988)
* Vargasamaram Swathwam(1988)
* Kurippukal(1988)
* Ithihasathinte Ithihasam(1989)
* Haindavanum Athihaindavanum(1998)
* Andhanum Akalangal Kaanunnavanum(2001) Satire
* Ente Charithranewshana Pareekshakal(1987)

Cartoons

* Ithiri Neramboke, Ithiri Darsanam (ഇത്തിരി നേരമ്പോക്ക്, ഇത്തിരി ദര്‍ശനം) (1990)
* Memoirs: A Cartoonist Remembers, Rupa & Co. (2002)
* Cartoon: Tragic Idiom ~ O.V. Vijayan's Cartoons & Notes on India, Edited by Sundar Ramanathaiyer and Nancy Hudson-Rodd, DC Books, (2006)

Translations into English

* After the Hanging and other stories
* The Saga of Dharmapuri
* The Legends of Khasak
* Infinity of Grace
* O. V. Vijayan:Selected fiction
Awards

* 1970- Odakkuzhal Award, for Khasakinte Itihasam
* 1990- State and Central Academy awards of Gurusagaram
* 1991- Vayalar Award for Gurusagaram
* 1992- Muttathu Varkey Award for Khasakinte Itihasam
* 2001- Ezhuthachan Award
* 2003- Padma Bhushan

Sunday, April 25, 2010

அதிகாரத்தின் சரடுகளை இழுக்க துடித்த ஒரு அராஜகவாதியின் கதை


“எந்தவொரு தத்துவ அறிஞரையும் அவருக்கு இணையாகக் கூறமுடியாது. மற்றவர்கள் இயற்கையானவை எனப்பார்த்தவற்றில் அவர் வரலாற்றைக் கண்டார். மற்றவர்கள் அத்தியாவசியமானவை என நினைத்தவற்றில் அவர் தற்செயல் நிகழ்வுகளைப் பார்த்தார்.’’
மிஷல் பூக்கோ 1924 பிரான்ஸிலுள்ள போய்ஷியர்ஸ் என்ற சிறு நகரில் பிறந்தவர். பிரஞ்சுப் பல்கலைக்கழகத்தின் போராசிரியர். சமூகவிஞ்ஞானி. கருத்துக்களின் வரலாற்றாசிரியர். பூக்கோ ஒழுங்கமைப்பு, அதிகாரம், பாலியல் முதலியன குறித்து நுண்அரசியல் ஆய்வுகளின் வாயிலாக அறியப்பட்ட ஒரு தத்துவஞானி. அதிகாரம் பற்றிய இவரது ஆய்வுகள் நீட்ஷெயின் அணுகுமுறையை அதன் எல்லைநோக்கி விரித்துச் சென்றன. இவரது கருத்துக்களில் அமைப்பியல், பின்னமைப்பியல் சிந்தனைக் கட்டங்களைக் காணமுடியும்.
Discipline and Punish. Madness and the civilization. Archeology of knowledge என்பன அவரது நூல்களில் சில. பூக்கோவின் சிந்தனைகளை மையமாகவைத்து முந்திய பூக்கோ, பிந்திய பூக்கோ எனப் பிரிப்பர். முந்திய பூக்கோ அல்தூஸரின் கருத்துக்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட மார்க்ஸிய வாதியாக இருந்தார். பிந்திய பூக்கோ நீட்ஷெயின் கருத்துக்களுக்குட்பட்டு மார்க்ஸிய விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தார்.
“நம்முடையதைப் போன்றதொரு சமூகத்தில் உண்மையான அரசியல் செயற்பாடென்பது சுயேச்சையானதாக, நடுநிலையானதாக காட்டிக்கொள்ளும் நிறுவனங்களை விமர்சித்து அந்நிறுவனங்களின் ஊடாக செயற்பட்டு அரசியல் வன்முறையை வெளிப்படுத்துவதாக இருக்கும். இப்படி வெளிப்படுத்திக் காட்டுவதன் மூலமே அந்நிறுவனங்களையும் அந்த அரசியல் வன்முறையையும் எதிர்த்துப் போராடும் படி பிறருக்குதவ முடியும்.’’ என்ற பூக்கோ “அதிகாரம் ஒரு தருணத்தில் தோன்றி மற்றதற்குச் செல்கிறது. எல்லாவித உறவுகளிலும் அதன் உற்பத்தி நடக்கிறது. அதிகாரம் எங்கும் நிறைந்திருக்கிறது. இப்படிக் கூறுவது அது எல்லாவற்றையும் தழுவியுள்ளது என்பதனால் அல்ல. அது எல்லா இடங்களிலிருந்தும் வருகிறது என்ற காரணத்தினால்தான்.’’ என்று விளக்குகிறார்.
முந்திய காலப் பூக்கோ அறிவினை முதன்மைப்படுத்தினார். பிந்தியகாலப் பூக்கோ அறிவைக் காட்டிலும் அதிகாரம் (Power) என்பதனை முதன்மைப்படுத்தினார். என்று பேராசிரியர் மௌனகுரு குறிப்பிடுகின்றார்.
மேலாதிக்கத் தொடர்புகளால் மனிதர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சமூக யதார்த்தத்தின் அடிப்படைத்தத்துவமே மேலாதிக்கம் என்றும் பூக்கோ கூறினார். மேலாதிக்கம் அறிவினால் தோற்றுவிக்கப்படுவதில்லை. எனினும் அறிவின்றி மேலாதிக்கத்தைச் செயற்படுத்துவது சாத்தியமில்லை என்பார் பூக்கோ. அறிவே ஆதிக்கமாகச் செயற்படுவதாகக் கூறி அறிவின் ஆதிக்கத்தை விமர்சனம் செய்வர் பின்னவீனத்துவ வாதிகள். அறிவு நிறுவனக் கட்டுப்பாடுகள் இருப்பதை விதிக்குட்படுத்தல் என்பவற்றோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது என்பது பூக்கோவின் வாதம். முடியாது என்ற சொல்லும் அதிகாரமும் தடையாணையிடும் வல்லமையும் ஆதிக்க மேலாண்மையின் உரிமைகளாகும். ஆனால் இந்த ஆதிக்கத்துக்குச் சவாலாக இருத்தல் ஒரு மீறலாகவும் பூக்கோவினால் கருதப்பட்டது.
ஆதிக்கம் என்ற கருத்துருவைச் சமூகத்திற்கு மாத்திரமின்றி உடலுக்கும் பொருத்திப் பார்க்கிறார் பூக்கோ. இக்கருத்துக்களை இவர் சிக்மண்ட் பிரய்ட்டிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார். பிரய்ட்டுக்குப் பிறகு உளப்பகுப்பாய்வு பற்றி நிறையக் கருத்துக்கள் வந்துவிட்டன. இவை எல்லாம் பூக்கோவைப் பொறுத்தளவில் சமூக ஆதிக்கத்தின் கையில் மனிதர்கள் எவ்வாறு அகப்படுகிறார்கள் என்பதற்கான சான்றுகள்தான்.
உளப்பகுப்பாய்வில் மனிதர்கள் சமூக ஆதிக்க சக்திகளோடு ஒத்துழைக்கின்ற, தானாக ஒப்புக்கொள்கின்ற, ஒருங்கு சேர்ந்து விடுகின்ற தன்மைகள் வெளிப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் உடலின் ஆதிக்க சக்தி உடல்மீதான எல்லா ஆதிக்கங்களையும் எதிர்க்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார் பூக்கோ. உடலின் ஆதிக்கம், உடல் மீதான ஆதிக்கம் இரண்டுமே அரசியல்தான். தனிமனித உறவுகளையும் தந்தை பிள்ளை உறவுகளையும் அரசியல் பாதிக்கிறது. அதுபோல உடலாதிக்கமும் அரசியலைப் பாதிக்கிறது. உடலின் ஆதிக்கத்தை ஆதிக்க-அதிகாரத்தினையும், அதிகாரம் சார்ந்த அறிவினையும் எதிர்க்கப்பயன்படுத்த இயலும் என்பது பூக்கோவின் கருத்து.
பூக்கோ தனது நூலின் வாயிலாக, மிக அழுத்தமான வன்முறைப் பண்பு கொண்ட மேற்கத்திய கலாசாரத்தின் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளார். பூக்கோவின் முக்கிய கருத்துக்களில் ஒன்று, “எல்லா மானிடச் செயற்பாடுகளையும் நிர்ணயிப்பது ஆதிக்கத்திற்கான போட்டியே’’ என்பதாகும்.
நம் சமூகத்தில் நிலவும் அரசியல் வன்முறையை நீதியின் பெயரால் நாம் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதுதான் நாம் வழக்கமாகக் கொண்டிருக்கும் கருத்து. ஆனால், “அரசியல் வன்முறையை எதிர்ப்பதென்பதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவதும் அதிகார உறவுகளை மாற்றியமைப்பதற்குத்தான்’’ என்கிறார் பூக்கோ.உற்பத்தி உறவுகளை ஆராய்வதற்கான கருவிகளை பொருளாதாரக்கோட்பாடும் பொருளாதார வரலாறும் நமக்கு வழங்கியிருப்பது போல அதிகார உறவுகளை ஆய்வு செய்ய நமக்கு எவ்வித உபகரணமும் இல்லை என்று மிஷல் பூக்கோ குறிப்பிடுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.
பதினாறாம் நூற்றாண்டுக்குப்பிறகு தொடர்ந்து வளர்ந்து வருகிற ஒரு புதிய வகை அரசியல் அதிகார வடிவமாக அரசு இருப்பதைக் கண்ட பூக்கோ குடிமக்களிடையே ஒரு வர்க்கத்தின் அல்லது ஒரு குழுவின் நலன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிற ஒரு விதமான அரசியல் அதிகாரம் என்பதாக மட்டுமே அரசைப் பலரும் புரிந்து கொண்டுள்ளனர்.
ஆனால் அது அரசின் தன்மையைப் பற்றிய முழுமையான விளக்கமல்ல என்றார்.
அரசின் அதிகாரம் என்பது ஒட்டு மொத்தமாக்குவதும் தனிமைப்படுத்துவதும் தான் என்ற உண்மையை அவர் வலியுறுத்திக் கூறினார். அதிகாரத்தின் இந்த இரட்டைத் தன்மை துலக்கமாக வெளிப்படையாக நமக்குப் புலப்படுவதில்லை. அதனை புலப்படச் செய்வதன் மூலமே அதைக்கடந்து செல்ல முடியும். ‘நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைக் கண்டறிவதல்ல நமது குறிக்கோள். மாறாக நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மறுப்பதுதான்’ என்று கூறும் பூக்கோ புதிய தன்னிலைத்துவத்தை (subjectivity) உருவாக்கியாக வேண்டும். என்று முன்மொழிந்துள்ளார்.
ஒவ்வொரு முக்கிய போராட்டத்தின்போதும் அதை அடக்குவதற்கான புதிய உத்திகளை அரச இயந்திரங்கள் கண்டறிந்து வளர்த்துக்கொண்டன. 1940 களுக்கு முன்புவரை ராணுவத்தைப் பலப்படுத்துவது காலனி ஆதிக்கத்தை நிலை நாட்டுவது என்பதாக இருந்த அரச இயந்திரத்தின் யுக்திகள் அதற்குப் பின்பு பொலிஸ் அமைப்பை பலப்படுத்துவது உளவுத்துறையை வலுவாக்குவது எதிப்பாளர்களைச் சிறையில் அடைப்பது என்பதாக மாறிவந்துள்ளதை பூக்கோ எடுத்துக்காட்டுகிறார். இது பாசிசத்துக்கு நெருக்கமானதொரு அமைப்பின் யுக்தியாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
Madness and Civilization என்ற அவரது நூல் பைத்தியம் என்று கருதப்பட்டவர்களை மேற்கத்திய சமுதாயம் எப்படி நடத்தியது என்ற கணக்கெடுப்பு வரலாறுதான். உளப்பிறழ்வு உடையவர்களை சிறைப்படுத்தல், நிறுவனக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தல் ஆகியவற்றிற்கான உத்திமுறைகள், மத்திய காலம் முதல் வளர்ந்துவந்துள்ள வரலாற்றைக் கூறும் நூல் இது. இதன் உட்பொருள் ஆதிக்க தர்க்க அறிவை அதன் விலங்கியல்பை, மற்றையதிலிருந்து வேறுபடுத்திப் பிரிக்கின்ற ஒடுக்குமுறைத் திட்டத்தினை எதிர்ப்பதுதான். இதனை ஓர் அறிவார்ந்த சவால் நூல் என்பர்.
மத்திய காலத்தின் முடிவில் பைத்தியம் எனும் நோய் பெரும் இடத்தைப் பிடிக்கிறது. இவர்கள் மனநோயாளர்கள் எனக்கருதி கடுமையாகக் கண்காணிக்கப்படுகின்றனர். ஒழுக்கத்தின் பெயரால் பித்தர்கள் வதைக்கப்பட்டனர். சிறைப்படுத்தப்பட்டனர். பித்து நிலையிலேயே ஞானங்கள் பிறக்கும். பகுத்தறிவு வாதம் பித்தர்களை ஒதுக்கியமையினால் பித்துநிலையாளர்களின் ஞானத்தை இழந்துவிட்டோம் என்று வாதிடுகிறார் பூக்கோ. அர்த்தோ (நாடகம்) வான்கோ (ஓவியம்) சல்வடோர் டார்லி (ஓவியம்) நீட்ஷே (தத்துவம்) ஆகியோர் பைத்திய நிலைபெற்றுத் தம் ஞானத்தை வழங்கியவர்களாவர் என்பது பூக்கோவின் வாதம்.
பூக்கோ ஆதிக்கத்தினால் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட குழுக்கள் சார்பில் வாதிட்டார். இதிலிருந்துதான் Sublatten Studies – விழிம்பு நிலை மக்கள் பற்றிய ஆய்வு கிளைவிட்டது.
இவ்வகையில் அதிகார மேலாண்மை, அறிவு அதற்குத் துணைபோதல், அதனை எதிர்க்கும் விளிம்பு நிலை மக்கள் என்ற கருத்துக்களை பூக்கோ முன்வைத்தார்.
இதுவரை மிஷல் பூக்கோ, அப்துல் ரஹ்மான் அல் கவாகிபி ஆகிய இருவரின் சிந்தனைகளை மிகச்சுருக்கமாக நோக்கினோம். கவாகிபியும் பூக்கோவும் அதிகாரங்களை எதிர்ப்பதில் ஒன்றுபடுகின்றனர். ஆனால் அதிகாரத்தைப் பொறுத்தளவில் பூக்கோவின் நிலைப்பாடு நம்பிக்கை வரட்சி கொண்டதாக உள்ளது. தனது கடைசிகாலத்தில் பூக்கோ எந்தவிதமான நேரடியான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடில்லாதவராக இருந்ததாக எட்வர்ட் செய்த் கூறுகிறார்.
ன்நவீனத்துவவாதிகளும்; கலாச்சாரச் சார்புவாதிகளும் அரசியல் இஸ்லாம் குறித்த அணுகுமுறைகளைத் தொடர்ந்து குழப்பியே வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஆதர்சமாக இருப்பவர் பிரெஞ்சுத் தத்துவவாதியான மிசேல் பூக்கோ ஆவார்.
ஈரான் புரட்சியை அன்றைய சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆக்கபூர்வமான புரட்சி என வரையறை செய்தன. வெகுமக்கள் எழுச்சியுடன் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையுடன் நடந்த இந்தப் புரட்சி ‘முதலாளித்துவமற்ற பாதை நோக்கிச் செல்லும்’ எனவும் அவர்கள் வரையறை செய்தார்கள். வளர்ந்துவரும் அரசியல் இஸ்லாம்; தமக்கு எதிராகத் திரும்பும் என்ற அவதானத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை.
தமக்கிடையிலான கட்சிக் கருத்தியலை தாண்டி(party ideology)எதிரிக்கு மாற்றான பொதுத் திட்டத்தினை உருவாக்கக் கூடிய தகைமையினை, அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஸ்டாலினிய, டிராட்ஸ்க்கிய, மாவோயிச வித்தியாசங்களைத் தாண்டி அவர்களால் செல்ல முடியவில்லை. பெண்ணிலைவாதிகளும் தமது குழுசார்ந்த தாராளவாத, மாரக்சிய,தீவிர பெண்ணிலைவாத்திற்கு அப்பால் பொதுவான போராட்டத்துக்கான திட்டங்களை அவாவியிருக்கவில்லை.
மத அடிப்படைவாதிகள் தமது அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்ட அதே போதில், மார்க்சியர்களும் தாராளவாதிகளும் பெண்ணிலைவாதிகளும் தமக்கிடையிலான கருத்தியல்களால் பிளவுண்டு போயிருந்தார்கள். தம்மில் ஒரு சிலர்; தனிமைப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டபோது, இவர்கள் கருத்தியலின் பெயரில் மௌனம் காத்தனர்.
முதலில் பெண்ணிலைவாதிகளையும் பிற்பாடு தாராளவாதிகளையும் இறுதியில் மார்க்சியர்களையும் இதனால் மிகச்சுலபமாக அரசியல் இஸ்லாமியர்கள் அழித்தொழிக்க முடிந்தது. தாராளவாதிகள் மீதும் பெண்ணிலைவாதிகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்ட அதே காலத்தில் எகாதிபத்திய எதிர்ப்பு எனும் ஒரே காரணத்துக்காக சோவியத் யூனியனால் வழிநடத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியான டூடே கட்சி அரசியல் இஸ்லாம் ஆட்சியாளர்களை ஆதரித்து நின்றது. பிற்பாடு அவர்களும் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம், மனித உரிமைகள், பொதுவான விடுதலை தொடர்பான ஒற்றுமை போன்ற அனைத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கோசத்தின் கீழ் சமரசப்படுத்திக் கொண்டார்கள்.
புரட்சியின் பின் பெண்கள் கட்டாயம் முழு உடலையும் மூடும் முக்காடு அணிய வேண்டும் என கொமேனியின் அரசு சட்டம் கொண்டு வந்தபோது 50000 பெண்கள் டெஹ்ரான் நகரில் அதனை எதிர்த்து ஆரப்பாட்டம் நடத்திய வேளையில் இஸ்லாமியக் குடியரசுக்காக ஆதரவாக நின்றார்கள் டூடே கட்சியினர்.
அதற்கான விலையையும் அவர்கள் வெகு விரைவிலேயே கொடுத்தார்கள்.
தாராளவாதிகளும் அரசியல் குழப்பத்திலேயே இருந்தார்கள். அரசியல் தலையீட்டாளர்களுக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நிலைபாடு எடுப்பதற்கு அவர்களுக்குச் சிரமமாகவே இருந்தது. மறுமலர்ச்சியுக கோட்பாடுகள் சார்ந்த நவீனத்துவம் தொடர்பான பிரெஞ்சுத் தத்துவவாதிகளின் விமர்சனம், சோசலிச எதேச்சாதிகாரம், முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் தொடர்பான பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களின் விமர்சனம் போன்றன ஈரானியப் புரட்சி தொடர்பாக கல்வியாளர்களிடமும் அறிவாளிகளிடமும் நிலைபாடு எடுப்பதில் தடுமாற்றத்தையே உண்டு பண்ணியிருந்தன.
அதுவரை நடந்த புரட்சிகள் அனைத்தும் அக்டோபர் புரட்சியை அடியொற்றியவையாக, மார்க்சியத்தை அடியொற்றியவையாக இருந்தன. கலாச்சாரப் புரட்சியின் அத்துமீறல்கள் அப்போதுதன் உலக அளவில் அறித் துவங்கியருந்தன.. நவீனத்துவத் திட்டம் பற்றி மிகப் பெரிய நடைமுறை சந்தேகங்கள் சோவியத், சீனப் புரட்சிகளை முன்வைத்தும், பாசிசம், தேசியம் போன்றவற்றை முன்வைத்தும் ஏற்பட்டிருந்தன. மறுமலர்ச்சிக்காலம் தோற்றுவித்த சமூக அமைப்பு சிந்தனையையும் உடலையும(a system which controls thought and body)கட்டுப்படுத்தும் அமைப்பு என்பதனை பூக்கோ முன்வைத்தார்.
எல்லையற்று விரிந்திருக்கும் அதிகாரம், அதிகாரமாக ஆகியிருக்கும் அறிவு போன்றவற்றுக்கும் அப்பால், காரண காரியப் பார்வைக்கும் அப்பால் தேடிச்செல்லும் அறிவுத்துறைப் போக்காக பூக்கோவின் பாலியல் மற்றும் சிறை அமைப்பு குறித்த ஆய்வுகள் வெளிப்பட்டன.
நவீனத்துவத்திற்கு முந்திய ரோம-கிரேக்கப் பண்பாட்டிலும், வட ஆப்ரிக்கப் பண்பாட்டிலும் ஆண்சமப்பாலுறவுக் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமையை பூக்கோ கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் முன்வைத்தார். மனித விடுதலை ஆன்மீகத் தன்மையற்ற ஸ்டாலினிய, பாசிச அரசியல் முறைமைகளுக்கு மாற்றாக ஒரு கோட்பாட்டையும் அரசியல் அமைப்பையும் அவாவிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் ஈரானியப் புரட்சி தொடங்கியது.
‘அசல்;தன்மை’ என்பதனை பூக்கோ எப்போதுமே காரண காரியத்தைச் தாண்டிச்செல்லும் தருணம், மரணத்தின் விளிம்பில் ஆபத்தான தருணத்தில் நிகழும் போக்குகள் போன்றவற்றிலேயே கண்டார். இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் ஒரு நாகரீகத்தையும் ஒரு வாழ்முறையையும(islam as a civilisation and a way of life)கண்ட பூக்கோ நவீனத்துவத்தின்; காரண காரிய அறிவை மீறிச் செல்லும் மாயப்பண்பும் ஆன்மிகத்தன்மையும் கொண்ட (mythical and spirtual) ஒரு தனித்த புரட்சியாக, ( singular revolution), தமது உயிரையும் தமது கற்பனாவுலகுக்குக் கொடுக்கத் துணிந்த இஸ்லாமிய அடிப்படையவாதிகளின் தீரம் (martyrdom) அவரது தத்துவப்பார்வைக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது.
அசல்தன்மை (authenticity) தொடர்பான பூக்கோவின் எண்ணங்கள் எப்போதுமே மரணத்தோடும், காரணகாரியத்தை மீறும் பண்போடும் -near death and exploring rationality- பிணைக்கப்பட்டிருந்தன என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில்லர். இந்தத் தன்மை சிருஸ்டிகரமான புதியதொரு கோட்பாட்டு நிலைக்கும் வாழ்நிலைக்கும் அரசியலுக்கும் அறத்தின் அடிப்படையிலான ஒரு சமூகத்துக்கும் மனிதர்களை இட்டுச்செல்லும் என பூக்கோ நம்பினார்.
இதன் பொருட்டு ஈரானியப் புரட்சிக்கும், அரசியல் இஸ்லாம் இயக்கத்துக்கும், அயதுல்லா கோமெனிக்கும் தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி;னார் பூக்கோ. ஈரானியப் புரட்சியின் தன்மைகள் குறித்த அனைத்து விதமான விமர்சனங்களையும் மறுத்தார் பூக்கோ. அத்தோடு ‘தான் எப்போதுமே விவாதங்களில் நம்பிக்யைற்றவன். இப்போதும் தான் விவாதிக்க விரும்பவில்லை’ என்றே தனது ஈரான் ஆதரவு நிலைபாட்டுக்கு விளக்கமும் சொன்னார் பூக்கோ.
ஈரானியப் புரட்சி குறித்த தனது கட்டுரைகளில், ஈரானியப் புரட்சியானது பெண்களின் உரிமைகளை உத்தவரவாதப்படுத்தும், சிறுபான்மையினர் உரிமைகளை அது பாதுகாக்கும், ஆண் சமப்பாலுறவை அச்சமூகம் அனுமதிக்கும், ஜனநாயகத்தையும் தனிநபர் உரிமையையும், மனித உரிமைகளையும் அங்கீகரிக்கும் என்றெல்லாம் திட்டவட்டமாக பூக்கோ எழுதியிருக்கிறார்.
பூக்கோவின் நம்பிக்கைகள்; அனைத்தும் அவரது வாழ்காலத்திலேயே பொய்த்துப் போனது. ‘மதகுருக்கள் அரசில் அங்கம் பெறமாட்டார்கள்’ என அவர் குறிப்பிட்டார். அது முற்ற முழுதாகப் பொய்யாகிப் போனது. இன்றளவிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தையே ஈரானியப் புரட்சியானது தோற்றுவித்திருக்கிறது. அரசியல் இஸ்லாம் ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு நாடுகளாக ஆப்கானிஸ்தானும் ஈரானும் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளுமே பெண்களின் மீதான மட்டுமீறிய அடக்குமுறையை ஏவிய நாடுகளாகவே இருக்கிறது.
ஈரானியப் புரட்சியை ஒரு ‘தனித்த புரட்சி’ என்று பாரப்பதற்கான பூக்கோவின் ஆதாரமான காரணம்தான என்ன?
ஈரானியப் புரட்சி நடந்த தருணத்தின்போது ஐரோப்பாவில் பூக்கோவுக்கு எற்பட்டிருந்த கருத்தியல் ரீதியான அங்கீகரிப்பையும் நாம் முன்பாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அன்றைய நிலையில் பூக்கோ மேற்கத்திய சமூகச் சூழலில் சிறையைமைப்பு, பைத்தியநிலை, பாலியல்பு(prision madness and sexuality) தொடர்பாக நூல்களை வெளியிட்டிருந்தார். அவரது மிகப் புகழ் பெற்ற நூலான ஓழுங்கும் தண்டனையும் (discipline and punishment ) எனும் நூலின் வழி ஐரோப்பிய அரசியல் ஒழுங்கான தாராளவாத சமூகத்தை அவர் ஒழுங்குபடுத்தும் சமூகம் எனக் குறிப்பிட்டார். தாராளவாத சமூகமானது ‘உடல் அளவில் குறைந்தபட்சமாகத் தோன்றுகிற தண்டனைகளை வழங்கினாலும் கூட, பாரிய அளவில் மிக அதீதமான பாதிப்புகளை மனிதனுக்கு ஏற்படுத்துகிற தண்டனைகளையே அதுகொண்டிருக்கிறது’ என அவர் குறிப்பிட்டார்.
நவீனத்துவத்திற்கு எதிரான அவரது எதிர்-சொல்முறையில் நவீனத்துவ நிறுவனங்களானது நம்மை விடுவிப்பதாகத் தோன்றினாலும் அவைகள் நம்மை உள்ளார்ந்த வகையில் அடிமைப்படுத்தவே செய்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரத்தின் பாய்ச்சல்களையும்,சரடுகளையும் முறுக்கி பிடித்த அந்த அராஜகவாதி சிந்தனைகள் அரசியல் பாடத்தில் திருப்புமுனை என்பதில் சந்தேகம் இல்லை

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள்

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள் தத்துவத்தின் முடிவிலாப் பெருவெளியில் தடம் பதிக்கும் ஒரு சிந்தனையாளனின் பயணம் எப்ப...