Friday, May 28, 2010

மாவீரன் திப்புசுல்தான்


1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: 'இன்று முதல் இந்தியா நம்முடையது' என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் "ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்" எனக் குறிப்பிடுகிறார்.(. 'Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company' என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், '30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது'. என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், 'இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்' என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். "அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! "ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது 'அக்னி சிறகுகள்' என்ற நூலில் தான் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, 'இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன' என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.

இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: "மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?" என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
'எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது' என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்."

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது 'திப்புவின் சமயக் கொள்கை' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் 'திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்' என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.

திப்புவின் விவசாயக்கொள்கை
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


போர்களத்தில் நேர்மை
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை."

மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. "அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்".என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

திப்புவை மாவீரனாக மாற்றியது எது?
இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.
உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.

திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது.ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது. கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. சஞ்சய்கான் 'the sword of tippu' என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை 'கற்பனைக்கதை' என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை 'கற்பனை கதை' எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன. அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும்,வறுமை,லஞ்சம்,ஊழல்,நிர்வாக சீர்கேடுகள்,தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும்.அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

Friday, May 21, 2010

மகத்தான இயலாமையின் மோனமொழி


கர்ணமோட்சம் குறும்படத்தை முன்வைத்து

குறும் படம் எனும் அற்புதமான கலைவடிவத்தை கையாளுகின்ற கலை ஆளுநர்கள் அதன் சிறப்பில்புகளை ஒரு சிலரை தவிர மற்றுள்ளவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை.ஆயினும் தமிழில் தொடர்ச்சியாக பல குறும்படங்கள் உயரங்களை தாண்டும் வல்லமை மிக்கதாக இருக்கிறது.எனது புலம் பெயர் வாழ்தலில் தமிழகத்தை போல பலவசதிகளை அடையமுடியாமல் போனாலும் தகவல் புரட்சியின் விளைவாக பல விஸயங்களை பயன்படுத்த முடிகிறது.அந்த வகையில் யூடூப் இணைய விடியோ மூலமாக பலவிதமான பாராட்டுதல்களை பெற்ற கர்ணமோட்சம் குறும்படத்தை கண்டேன்.பொதுவாக நான் விமர்சனம் எழுதினாலும் சிலாகித்து எழுதுவதில்லை.ஆனால் இந்த படத்தை குறித்து சிலாகித்து எழுதுவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்.எந்த ஒரு கலை வடிவமும் கால நீட்சியில் நிகழும் மாற்றத்தின் புழுதியில் தன் சாரத்தை இழந்து தனிமைப்படும்பொழுது அதை சார்ந்து இயங்கும் கலைஞனின் வாழ்வு அவன் அளவிலும் மற்றவர் பார்வையிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஒவ்வோரு காலகட்டமும் வாழ்வைப்பற்றிய பொதுவான ஒரு பார்வையை அதன் சமூகத்திடமிருந்து உருவாக்கிக்கொள்கிறது. பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் உய்வும் , எந்த வித நோக்குமற்ற கேளிக்கையும் நம்முடைய “ஊடக காலத்து” வாழ்வியல் பார்வையாக இருக்கும் பிண்ணனியில் ஒரு தெருகூத்து கலைஞனின் வாழ்வை முன் வைக்கிறது முரளி மனோகர் இயக்கிய “ கர்ணமோட்சம்” என்ற குறும்படம். [இந்த வருடம் கலை மற்றும் கலாச்சார பிரிவில் தேசிய விருதை பெற்றகுறும்படம்]



ஒரு பள்ளியில் தன் கர்ணமோட்சம் கூத்தை நிகழ்த்திக்காட்ட இருங்கூர் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு தன் மகனுடன் – அவனுக்கு கிரிக்கெட் மட்டையும்,பந்தும்,வெள்ளை தொப்பியும் கூத்து முடிந்ததும் வரும் பணத்தில் வாங்கிதருவதாக வாக்கு - வருகிறான் கோவிந்தன் என்ற கூத்து கலைஞன். வரும் வழியிலேயே தன்னை கர்ணனாக வேசம்கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் கோவிந்தன் ,பள்ளி தாளளர் இறந்து விட்டதால் பள்ளி விடுமுறை என அறிந்து என்ன செய்வது என்றறியாது நிற்கிறான். பள்ளியின் தலைமை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊருக்கு திரும்பி செல்லக்கூட பணமில்லாத நிலையை கூற தலைமையாசிரியர் தான் வெளியே இருப்பதாகவும் சாயங்காலம் வீட்டிற்கு வந்தால் உதவுவதாகவும் கூறுகிறார். கோவிந்தனுக்கு வேறு வழியில்லை. காத்திருப்பதை தவிர. பசியோடிருக்கும் தன் மகனுக்கு ஒரு வடை வாங்கிகொடுத்துவிட்டு தண்னீர் குடித்து பசியாறுகிறார் “கர்ணன்”. அந்த தேநீர் கடையில் வேலை செய்யும் ஊமை சிறுமிக்கு கர்ணனின் பசி தெரிந்திருக்கவேண்டும். தெரு பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருக்கும் “கர்ணனு”க்கு சாப்பிட கொடுக்கிறாள் அவள். கையேந்தி பெற்றுக்கொள்கிறார் “ கர்ணன்”

அவரைப்பற்றி அவள் கேட்க கோவிந்தனுக்கு உற்சாகமாகிவிடுகிறது –அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு ஜீவனாவது இருக்கிறதே! – தான் அவள் வயதில் செஞ்சி துரைசாமி தஞ்சிரானிடம் கூத்து கற்றுக்கொண்டதையும். தான் கூத்தில் கர்ணன் வேசம் கட்டுவதையும் தான் பாட ஆரம்பித்தால் விடிய விடிய ஊரு சனம் மொத்தமும் கேட்கும் என் கூறிக்கொண்டே வ்ருபவர்“இப்பொழுதெல்லாம் யார் இருக்கா இதல்லாம் பார்க்க எல்லாத்தையும் டி.வி பொட்டி இழுத்துக்குச்சே” என்கிறார் ஏக்கத்துடன். ஒரு உற்சாகத்துடன் அந்த ஊமை பெண்ணிற்கு கூத்தை கற்றுக்கொடுக்க தொடங்குகிறார்.தன் குருவிற்கு வணக்கம் தெரிவித்து. அந்த சமயம் அங்கு வரும் தேநீர் கடைகாரன் அவள் முகத்தில் தண்ணீரை விசிறியடித்து அவளை இழுத்துச்செல்லும் பொழுது .“நாலு இட்லி வாங்க காசில்லாமல் தெரு தெருவாக சுத்துகினு இருக்கிற இதுல இவளுக்கு கூத்து கத்து குடுக்க போரியா போய்யா ஒ வேலய பாத்துக்கிட்டு” என கூறி “கர்ணனை” கிட்டதட்ட ஒரு பிச்சைகாரனாகவே ஆக்கிவிட்டுப்போகிறான்.

மிகவும் வேதனையுடன் அங்கிருந்து நடந்து செல்லும் கோவிந்தனை ஓடி வந்து வழி மறைக்கிறாள் அந்த ஊமை சிறுமி. கர்ணன் அவளையே பாக்கிறார். அவள் தன் கைகளை நீட்டி அவருக்கு ஏதோ கொடுக்கிறாள். கர்ணன் அதை கை நீட்டி வாங்குகிறார் கோவிந்தன். ஒரு ரூபாய் நாணயம். குரு தட்சணை. அவள் தன் குருவிற்கு குரு வந்தனம் செய்து ஓடுகிறாள். கோவிந்தன் அவளைப்பார்த்த வண்ணம் நிற்கிறார். இருக்கலாம் அந்த நிமிடம் கோவிந்தன் -கர்ணன்- மனம் மோட்சம் அடைந்திருக்கலாம். மெல்ல நடந்து போகும் கோவிந்தன் எதிர்படும் பள்ளி சிறுவர்களிடம் “ நான் கர்ண மஹாராஜா” என கூறி தன் கிரீடத்தை கழட்டி குடுத்துவிட்டு போகிறார். கிரீடம் தன் தன்மையை இழந்து அந்த சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாகிபோகிறது. அது அவருக்கும் இந்த சூழலுக்கு பொருந்தா விசயமாக பட்டிருக்கவேண்டும்.

அடுத்த தலைமுறையின் ரசனையும் அவர்களது உலகமும் கோவிந்தனுக்கு புரிவதில்லை. அடுத்த தலைமுறை தன் வாழ்வோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் விசயங்களிலிருந்து உருவாகப்போகும் மலினமான வாழ்வியல் பார்வை நம் கண்முன்னே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிதர்சனம். கோவிந்தன் மகன் கையில் ஒரு பொம்மை செல்போன் கிடைக்கிறது. அதை “அதிஷ்டம்” என சந்தோஷப்படும் அவன், முதலாய் தொடர்புகொள்வது சச்சின் டெண்டுல்கரை. பின் அவன் “பெப்ஸி” உமாவை தொடர்புகொண்டு பேசுகிறான் “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.......விஜய் படத்திலேந்து பாட்டுப்போடுங்க” கிரிகெட்,சினிமா இவற்றை ஆதர்சனமாகக்கொண்டு கேளிக்கையும் அந்த நேர சந்தோஷத்தை மட்டும் பிரதானமாய் கொள்ளும் தட்டையான தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் உழன்று கிடக்கும் அடுத்த தலைமுறைக்கும் கோவிந்தனின் கலைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிறப்பமுடியாத பெருவெளி. (மற்றோரு இடத்தில் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கோவிந்தன்Ring Ring Tone ஆக எதிர்கொள்ளும் பாட்டு : “ வாள மீனுக்கும் , விலங்கு மீனுக்கும் கல்யாணம்....” இந்த பாடல் மூலமாக அந்த தலைமையாசிரியரைப்பற்றி இயக்குனர் நம் மனத்தில் எழுப்பும் பிம்பம் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு)


இரண்டாவது கிளாஸ் தண்ணீர் கேட்ட கோவிந்தனை விரட்டுகிறான் தேநீர் கடைக்காரன். அவனுக்கு வாழ்க்கை பணம் சார்ந்தது உறவுகள்,நிகழ்வுகள் எதையுமே பண வடிவாய் புரிந்துக்கொள்பவன். அவனைப்பொருத்தவரை அந்த கூத்துக்காரன் “இடத்தை அடைத்துக்கொண்டு “ வியாபாரத்தை கெடுக்கும் இடையூறு. கோவிந்தனால் நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால் அவனால் கோவிந்தனையும், அவன் கூத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும்.அப்படி இல்லாத பட்சத்தில் எந்த கலைவடிவமும், கலைஞனும் அவன் வாழ்க்கைக்கு தேவையில்லாத வஸ்துக்கள். நம் காலத்து மனசாட்சியாக இருக்கிறான் அவன்.

தானும் தன் கலையும் கால மாற்றத்தில் தனிமைப்பட்டு போவதும், உறவுகளின் எதிர்பார்புகளை நிறைவேற்றமுடியாதசரிவும், தன்கென்றிருந்த வெளி இல்லாமல் போகும்பொழுது ஏற்படும் சூன்யமும் “ கர்ணமோட்சம்” முழுவதும் நிறைகிறது. பொருளாதாரம்,அர்த்தமற்ற வெற்று கேளிக்கை சார்ந்து இயங்கும் நம் கால சூழலில் பொருத்திக்கொள்ளமுடியாமல் திணரும் எந்த கலைக்கும்,கலைஞனுக்கும் பொருந்தும் “ கர்ணமோட்சம்”

கர்ணமோட்சம் குறும்படத்தை இயக்கிய முரளி மனோகர். பிறந்தது கும்பகோணம். படித்த்து ,வளர்ந்தது திண்டிவனம்.தமிழ்நாடு திரைப்படகல்லுரியில் இயக்குனர் பட்டய படிப்பு. இவரது மற்ற குறும்படம்” அக்காலம்” ஜெமினி ஸ்டியோ கேண்டீனில் வேலைப்பார்த்த ஏ.என்.எஸ்.மனியனைப்பற்றிய,அவர் நினைவுகள்பற்றிய ஆவணப்படம். கர்ணமோட்சம் தமிழ்நாடு அரசின் விருதையும் இந்த வருடம் மத்திய அரசின் விருதையும் பெற்றது. தற்சமயம் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் முரளி மனோகருக்கு வாழ்த்துக்கள்.




கர்ண மோட்சம்:

தயாரிப்பு : எம்.ஜீ.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

இயக்கம் : முரளி மனோகர்

கதை,உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்.

இசை : இரா,பிரபாகர்

நடிப்பு : ஜார்ஜ்,யுவராஜ்,கலியமூர்த்தி,பூர்ணிமா,சண்முகம்.

Tuesday, May 11, 2010

கசாக்கின் இதிகாசத்தை எழுதிப்பார்த்த ஒ.வி.விஜயன்



I wish to escape nothing, Ravi answered from within his silence, I want to be the sand of the desert, each grain of sand; I want to be the lake, each minute droplet. I want to be the laya, the dissolution.

From The Legends Of Khasak, 1969
ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.
பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.
கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.

ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.

கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :

…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.

“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.

“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.

“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.

“அக்காவை மறந்துவிடுவாயா?”

“மாட்டேன்”

“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”

இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.

… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”

... Long before the lizards, before the dinosaurs, two spores set out on
an incredible journey. They came to a valley bathed in the placid glow
of sunset.
My elder sister, said the little spore to the bigger spore, let us see
what lies beyond.
This valley is green, replied the bigger spore, I shall
journey no farther.
I want to journey, said the little spore, I want to discover. She
gazed in wonder at the path before her.
Will you forget your sister ? asked the bigger spore.
Never, said the little spore.
You will little one, for this is the loveless tale of karma; in it
there is only parting and sorrow.
The little spore journeyed on. The bigger spore stayed back in the
valley. Her root pierced the damp earth and sought the nutrients of death
and memory. She sprouted over the earth, green and contended.
... A girl with silver anklets and eyes prettied with surma came to
Chetali's valley to gather flowers. The Chempaka tree stood alone-
efflorescent, serene. The flower gatherer reached out and held down a soft
twig to pluck the flowers. As the twig broke the Chempaka said, My little
sister you have forgotten me !

- O.V.Vijayan "Legends of Khasak"

Short stories

* Short Stories of Vijayan(1978)
* Oru Neenda Rathriyude Ormakkayi(1979)
* Asanthi(1985)
* Balabodhini(1985)
* Kadaltheerathu(1988)
* Kattu Paranja Katha(1989)
* Poothaprabandham and Other Stories(1993)
* Kure Kathabeejangal (1995)
* O V Vijayante Kathakal (2000)
* Arakshithavastha(2007)

Collection of Essays

* Khoshayathrayil Thaniye(1987)
* Oru Sindoora Pottinte Orma(1987)
* Sandehiyude Samvadam(1988)
* Vargasamaram Swathwam(1988)
* Kurippukal(1988)
* Ithihasathinte Ithihasam(1989)
* Haindavanum Athihaindavanum(1998)
* Andhanum Akalangal Kaanunnavanum(2001) Satire
* Ente Charithranewshana Pareekshakal(1987)

Cartoons

* Ithiri Neramboke, Ithiri Darsanam (ഇത്തിരി നേരമ്പോക്ക്, ഇത്തിരി ദര്‍ശനം) (1990)
* Memoirs: A Cartoonist Remembers, Rupa & Co. (2002)
* Cartoon: Tragic Idiom ~ O.V. Vijayan's Cartoons & Notes on India, Edited by Sundar Ramanathaiyer and Nancy Hudson-Rodd, DC Books, (2006)

Translations into English

* After the Hanging and other stories
* The Saga of Dharmapuri
* The Legends of Khasak
* Infinity of Grace
* O. V. Vijayan:Selected fiction
Awards

* 1970- Odakkuzhal Award, for Khasakinte Itihasam
* 1990- State and Central Academy awards of Gurusagaram
* 1991- Vayalar Award for Gurusagaram
* 1992- Muttathu Varkey Award for Khasakinte Itihasam
* 2001- Ezhuthachan Award
* 2003- Padma Bhushan

Sunday, April 25, 2010

அதிகாரத்தின் சரடுகளை இழுக்க துடித்த ஒரு அராஜகவாதியின் கதை


“எந்தவொரு தத்துவ அறிஞரையும் அவருக்கு இணையாகக் கூறமுடியாது. மற்றவர்கள் இயற்கையானவை எனப்பார்த்தவற்றில் அவர் வரலாற்றைக் கண்டார். மற்றவர்கள் அத்தியாவசியமானவை என நினைத்தவற்றில் அவர் தற்செயல் நிகழ்வுகளைப் பார்த்தார்.’’
மிஷல் பூக்கோ 1924 பிரான்ஸிலுள்ள போய்ஷியர்ஸ் என்ற சிறு நகரில் பிறந்தவர். பிரஞ்சுப் பல்கலைக்கழகத்தின் போராசிரியர். சமூகவிஞ்ஞானி. கருத்துக்களின் வரலாற்றாசிரியர். பூக்கோ ஒழுங்கமைப்பு, அதிகாரம், பாலியல் முதலியன குறித்து நுண்அரசியல் ஆய்வுகளின் வாயிலாக அறியப்பட்ட ஒரு தத்துவஞானி. அதிகாரம் பற்றிய இவரது ஆய்வுகள் நீட்ஷெயின் அணுகுமுறையை அதன் எல்லைநோக்கி விரித்துச் சென்றன. இவரது கருத்துக்களில் அமைப்பியல், பின்னமைப்பியல் சிந்தனைக் கட்டங்களைக் காணமுடியும்.
Discipline and Punish. Madness and the civilization. Archeology of knowledge என்பன அவரது நூல்களில் சில. பூக்கோவின் சிந்தனைகளை மையமாகவைத்து முந்திய பூக்கோ, பிந்திய பூக்கோ எனப் பிரிப்பர். முந்திய பூக்கோ அல்தூஸரின் கருத்துக்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட மார்க்ஸிய வாதியாக இருந்தார். பிந்திய பூக்கோ நீட்ஷெயின் கருத்துக்களுக்குட்பட்டு மார்க்ஸிய விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தார்.
“நம்முடையதைப் போன்றதொரு சமூகத்தில் உண்மையான அரசியல் செயற்பாடென்பது சுயேச்சையானதாக, நடுநிலையானதாக காட்டிக்கொள்ளும் நிறுவனங்களை விமர்சித்து அந்நிறுவனங்களின் ஊடாக செயற்பட்டு அரசியல் வன்முறையை வெளிப்படுத்துவதாக இருக்கும். இப்படி வெளிப்படுத்திக் காட்டுவதன் மூலமே அந்நிறுவனங்களையும் அந்த அரசியல் வன்முறையையும் எதிர்த்துப் போராடும் படி பிறருக்குதவ முடியும்.’’ என்ற பூக்கோ “அதிகாரம் ஒரு தருணத்தில் தோன்றி மற்றதற்குச் செல்கிறது. எல்லாவித உறவுகளிலும் அதன் உற்பத்தி நடக்கிறது. அதிகாரம் எங்கும் நிறைந்திருக்கிறது. இப்படிக் கூறுவது அது எல்லாவற்றையும் தழுவியுள்ளது என்பதனால் அல்ல. அது எல்லா இடங்களிலிருந்தும் வருகிறது என்ற காரணத்தினால்தான்.’’ என்று விளக்குகிறார்.
முந்திய காலப் பூக்கோ அறிவினை முதன்மைப்படுத்தினார். பிந்தியகாலப் பூக்கோ அறிவைக் காட்டிலும் அதிகாரம் (Power) என்பதனை முதன்மைப்படுத்தினார். என்று பேராசிரியர் மௌனகுரு குறிப்பிடுகின்றார்.
மேலாதிக்கத் தொடர்புகளால் மனிதர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சமூக யதார்த்தத்தின் அடிப்படைத்தத்துவமே மேலாதிக்கம் என்றும் பூக்கோ கூறினார். மேலாதிக்கம் அறிவினால் தோற்றுவிக்கப்படுவதில்லை. எனினும் அறிவின்றி மேலாதிக்கத்தைச் செயற்படுத்துவது சாத்தியமில்லை என்பார் பூக்கோ. அறிவே ஆதிக்கமாகச் செயற்படுவதாகக் கூறி அறிவின் ஆதிக்கத்தை விமர்சனம் செய்வர் பின்னவீனத்துவ வாதிகள். அறிவு நிறுவனக் கட்டுப்பாடுகள் இருப்பதை விதிக்குட்படுத்தல் என்பவற்றோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது என்பது பூக்கோவின் வாதம். முடியாது என்ற சொல்லும் அதிகாரமும் தடையாணையிடும் வல்லமையும் ஆதிக்க மேலாண்மையின் உரிமைகளாகும். ஆனால் இந்த ஆதிக்கத்துக்குச் சவாலாக இருத்தல் ஒரு மீறலாகவும் பூக்கோவினால் கருதப்பட்டது.
ஆதிக்கம் என்ற கருத்துருவைச் சமூகத்திற்கு மாத்திரமின்றி உடலுக்கும் பொருத்திப் பார்க்கிறார் பூக்கோ. இக்கருத்துக்களை இவர் சிக்மண்ட் பிரய்ட்டிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார். பிரய்ட்டுக்குப் பிறகு உளப்பகுப்பாய்வு பற்றி நிறையக் கருத்துக்கள் வந்துவிட்டன. இவை எல்லாம் பூக்கோவைப் பொறுத்தளவில் சமூக ஆதிக்கத்தின் கையில் மனிதர்கள் எவ்வாறு அகப்படுகிறார்கள் என்பதற்கான சான்றுகள்தான்.
உளப்பகுப்பாய்வில் மனிதர்கள் சமூக ஆதிக்க சக்திகளோடு ஒத்துழைக்கின்ற, தானாக ஒப்புக்கொள்கின்ற, ஒருங்கு சேர்ந்து விடுகின்ற தன்மைகள் வெளிப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் உடலின் ஆதிக்க சக்தி உடல்மீதான எல்லா ஆதிக்கங்களையும் எதிர்க்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார் பூக்கோ. உடலின் ஆதிக்கம், உடல் மீதான ஆதிக்கம் இரண்டுமே அரசியல்தான். தனிமனித உறவுகளையும் தந்தை பிள்ளை உறவுகளையும் அரசியல் பாதிக்கிறது. அதுபோல உடலாதிக்கமும் அரசியலைப் பாதிக்கிறது. உடலின் ஆதிக்கத்தை ஆதிக்க-அதிகாரத்தினையும், அதிகாரம் சார்ந்த அறிவினையும் எதிர்க்கப்பயன்படுத்த இயலும் என்பது பூக்கோவின் கருத்து.
பூக்கோ தனது நூலின் வாயிலாக, மிக அழுத்தமான வன்முறைப் பண்பு கொண்ட மேற்கத்திய கலாசாரத்தின் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளார். பூக்கோவின் முக்கிய கருத்துக்களில் ஒன்று, “எல்லா மானிடச் செயற்பாடுகளையும் நிர்ணயிப்பது ஆதிக்கத்திற்கான போட்டியே’’ என்பதாகும்.
நம் சமூகத்தில் நிலவும் அரசியல் வன்முறையை நீதியின் பெயரால் நாம் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதுதான் நாம் வழக்கமாகக் கொண்டிருக்கும் கருத்து. ஆனால், “அரசியல் வன்முறையை எதிர்ப்பதென்பதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவதும் அதிகார உறவுகளை மாற்றியமைப்பதற்குத்தான்’’ என்கிறார் பூக்கோ.உற்பத்தி உறவுகளை ஆராய்வதற்கான கருவிகளை பொருளாதாரக்கோட்பாடும் பொருளாதார வரலாறும் நமக்கு வழங்கியிருப்பது போல அதிகார உறவுகளை ஆய்வு செய்ய நமக்கு எவ்வித உபகரணமும் இல்லை என்று மிஷல் பூக்கோ குறிப்பிடுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.
பதினாறாம் நூற்றாண்டுக்குப்பிறகு தொடர்ந்து வளர்ந்து வருகிற ஒரு புதிய வகை அரசியல் அதிகார வடிவமாக அரசு இருப்பதைக் கண்ட பூக்கோ குடிமக்களிடையே ஒரு வர்க்கத்தின் அல்லது ஒரு குழுவின் நலன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிற ஒரு விதமான அரசியல் அதிகாரம் என்பதாக மட்டுமே அரசைப் பலரும் புரிந்து கொண்டுள்ளனர்.
ஆனால் அது அரசின் தன்மையைப் பற்றிய முழுமையான விளக்கமல்ல என்றார்.
அரசின் அதிகாரம் என்பது ஒட்டு மொத்தமாக்குவதும் தனிமைப்படுத்துவதும் தான் என்ற உண்மையை அவர் வலியுறுத்திக் கூறினார். அதிகாரத்தின் இந்த இரட்டைத் தன்மை துலக்கமாக வெளிப்படையாக நமக்குப் புலப்படுவதில்லை. அதனை புலப்படச் செய்வதன் மூலமே அதைக்கடந்து செல்ல முடியும். ‘நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைக் கண்டறிவதல்ல நமது குறிக்கோள். மாறாக நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மறுப்பதுதான்’ என்று கூறும் பூக்கோ புதிய தன்னிலைத்துவத்தை (subjectivity) உருவாக்கியாக வேண்டும். என்று முன்மொழிந்துள்ளார்.
ஒவ்வொரு முக்கிய போராட்டத்தின்போதும் அதை அடக்குவதற்கான புதிய உத்திகளை அரச இயந்திரங்கள் கண்டறிந்து வளர்த்துக்கொண்டன. 1940 களுக்கு முன்புவரை ராணுவத்தைப் பலப்படுத்துவது காலனி ஆதிக்கத்தை நிலை நாட்டுவது என்பதாக இருந்த அரச இயந்திரத்தின் யுக்திகள் அதற்குப் பின்பு பொலிஸ் அமைப்பை பலப்படுத்துவது உளவுத்துறையை வலுவாக்குவது எதிப்பாளர்களைச் சிறையில் அடைப்பது என்பதாக மாறிவந்துள்ளதை பூக்கோ எடுத்துக்காட்டுகிறார். இது பாசிசத்துக்கு நெருக்கமானதொரு அமைப்பின் யுக்தியாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
Madness and Civilization என்ற அவரது நூல் பைத்தியம் என்று கருதப்பட்டவர்களை மேற்கத்திய சமுதாயம் எப்படி நடத்தியது என்ற கணக்கெடுப்பு வரலாறுதான். உளப்பிறழ்வு உடையவர்களை சிறைப்படுத்தல், நிறுவனக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தல் ஆகியவற்றிற்கான உத்திமுறைகள், மத்திய காலம் முதல் வளர்ந்துவந்துள்ள வரலாற்றைக் கூறும் நூல் இது. இதன் உட்பொருள் ஆதிக்க தர்க்க அறிவை அதன் விலங்கியல்பை, மற்றையதிலிருந்து வேறுபடுத்திப் பிரிக்கின்ற ஒடுக்குமுறைத் திட்டத்தினை எதிர்ப்பதுதான். இதனை ஓர் அறிவார்ந்த சவால் நூல் என்பர்.
மத்திய காலத்தின் முடிவில் பைத்தியம் எனும் நோய் பெரும் இடத்தைப் பிடிக்கிறது. இவர்கள் மனநோயாளர்கள் எனக்கருதி கடுமையாகக் கண்காணிக்கப்படுகின்றனர். ஒழுக்கத்தின் பெயரால் பித்தர்கள் வதைக்கப்பட்டனர். சிறைப்படுத்தப்பட்டனர். பித்து நிலையிலேயே ஞானங்கள் பிறக்கும். பகுத்தறிவு வாதம் பித்தர்களை ஒதுக்கியமையினால் பித்துநிலையாளர்களின் ஞானத்தை இழந்துவிட்டோம் என்று வாதிடுகிறார் பூக்கோ. அர்த்தோ (நாடகம்) வான்கோ (ஓவியம்) சல்வடோர் டார்லி (ஓவியம்) நீட்ஷே (தத்துவம்) ஆகியோர் பைத்திய நிலைபெற்றுத் தம் ஞானத்தை வழங்கியவர்களாவர் என்பது பூக்கோவின் வாதம்.
பூக்கோ ஆதிக்கத்தினால் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட குழுக்கள் சார்பில் வாதிட்டார். இதிலிருந்துதான் Sublatten Studies – விழிம்பு நிலை மக்கள் பற்றிய ஆய்வு கிளைவிட்டது.
இவ்வகையில் அதிகார மேலாண்மை, அறிவு அதற்குத் துணைபோதல், அதனை எதிர்க்கும் விளிம்பு நிலை மக்கள் என்ற கருத்துக்களை பூக்கோ முன்வைத்தார்.
இதுவரை மிஷல் பூக்கோ, அப்துல் ரஹ்மான் அல் கவாகிபி ஆகிய இருவரின் சிந்தனைகளை மிகச்சுருக்கமாக நோக்கினோம். கவாகிபியும் பூக்கோவும் அதிகாரங்களை எதிர்ப்பதில் ஒன்றுபடுகின்றனர். ஆனால் அதிகாரத்தைப் பொறுத்தளவில் பூக்கோவின் நிலைப்பாடு நம்பிக்கை வரட்சி கொண்டதாக உள்ளது. தனது கடைசிகாலத்தில் பூக்கோ எந்தவிதமான நேரடியான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடில்லாதவராக இருந்ததாக எட்வர்ட் செய்த் கூறுகிறார்.
ன்நவீனத்துவவாதிகளும்; கலாச்சாரச் சார்புவாதிகளும் அரசியல் இஸ்லாம் குறித்த அணுகுமுறைகளைத் தொடர்ந்து குழப்பியே வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஆதர்சமாக இருப்பவர் பிரெஞ்சுத் தத்துவவாதியான மிசேல் பூக்கோ ஆவார்.
ஈரான் புரட்சியை அன்றைய சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆக்கபூர்வமான புரட்சி என வரையறை செய்தன. வெகுமக்கள் எழுச்சியுடன் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையுடன் நடந்த இந்தப் புரட்சி ‘முதலாளித்துவமற்ற பாதை நோக்கிச் செல்லும்’ எனவும் அவர்கள் வரையறை செய்தார்கள். வளர்ந்துவரும் அரசியல் இஸ்லாம்; தமக்கு எதிராகத் திரும்பும் என்ற அவதானத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை.
தமக்கிடையிலான கட்சிக் கருத்தியலை தாண்டி(party ideology)எதிரிக்கு மாற்றான பொதுத் திட்டத்தினை உருவாக்கக் கூடிய தகைமையினை, அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஸ்டாலினிய, டிராட்ஸ்க்கிய, மாவோயிச வித்தியாசங்களைத் தாண்டி அவர்களால் செல்ல முடியவில்லை. பெண்ணிலைவாதிகளும் தமது குழுசார்ந்த தாராளவாத, மாரக்சிய,தீவிர பெண்ணிலைவாத்திற்கு அப்பால் பொதுவான போராட்டத்துக்கான திட்டங்களை அவாவியிருக்கவில்லை.
மத அடிப்படைவாதிகள் தமது அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்ட அதே போதில், மார்க்சியர்களும் தாராளவாதிகளும் பெண்ணிலைவாதிகளும் தமக்கிடையிலான கருத்தியல்களால் பிளவுண்டு போயிருந்தார்கள். தம்மில் ஒரு சிலர்; தனிமைப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டபோது, இவர்கள் கருத்தியலின் பெயரில் மௌனம் காத்தனர்.
முதலில் பெண்ணிலைவாதிகளையும் பிற்பாடு தாராளவாதிகளையும் இறுதியில் மார்க்சியர்களையும் இதனால் மிகச்சுலபமாக அரசியல் இஸ்லாமியர்கள் அழித்தொழிக்க முடிந்தது. தாராளவாதிகள் மீதும் பெண்ணிலைவாதிகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்ட அதே காலத்தில் எகாதிபத்திய எதிர்ப்பு எனும் ஒரே காரணத்துக்காக சோவியத் யூனியனால் வழிநடத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியான டூடே கட்சி அரசியல் இஸ்லாம் ஆட்சியாளர்களை ஆதரித்து நின்றது. பிற்பாடு அவர்களும் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம், மனித உரிமைகள், பொதுவான விடுதலை தொடர்பான ஒற்றுமை போன்ற அனைத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கோசத்தின் கீழ் சமரசப்படுத்திக் கொண்டார்கள்.
புரட்சியின் பின் பெண்கள் கட்டாயம் முழு உடலையும் மூடும் முக்காடு அணிய வேண்டும் என கொமேனியின் அரசு சட்டம் கொண்டு வந்தபோது 50000 பெண்கள் டெஹ்ரான் நகரில் அதனை எதிர்த்து ஆரப்பாட்டம் நடத்திய வேளையில் இஸ்லாமியக் குடியரசுக்காக ஆதரவாக நின்றார்கள் டூடே கட்சியினர்.
அதற்கான விலையையும் அவர்கள் வெகு விரைவிலேயே கொடுத்தார்கள்.
தாராளவாதிகளும் அரசியல் குழப்பத்திலேயே இருந்தார்கள். அரசியல் தலையீட்டாளர்களுக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நிலைபாடு எடுப்பதற்கு அவர்களுக்குச் சிரமமாகவே இருந்தது. மறுமலர்ச்சியுக கோட்பாடுகள் சார்ந்த நவீனத்துவம் தொடர்பான பிரெஞ்சுத் தத்துவவாதிகளின் விமர்சனம், சோசலிச எதேச்சாதிகாரம், முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் தொடர்பான பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களின் விமர்சனம் போன்றன ஈரானியப் புரட்சி தொடர்பாக கல்வியாளர்களிடமும் அறிவாளிகளிடமும் நிலைபாடு எடுப்பதில் தடுமாற்றத்தையே உண்டு பண்ணியிருந்தன.
அதுவரை நடந்த புரட்சிகள் அனைத்தும் அக்டோபர் புரட்சியை அடியொற்றியவையாக, மார்க்சியத்தை அடியொற்றியவையாக இருந்தன. கலாச்சாரப் புரட்சியின் அத்துமீறல்கள் அப்போதுதன் உலக அளவில் அறித் துவங்கியருந்தன.. நவீனத்துவத் திட்டம் பற்றி மிகப் பெரிய நடைமுறை சந்தேகங்கள் சோவியத், சீனப் புரட்சிகளை முன்வைத்தும், பாசிசம், தேசியம் போன்றவற்றை முன்வைத்தும் ஏற்பட்டிருந்தன. மறுமலர்ச்சிக்காலம் தோற்றுவித்த சமூக அமைப்பு சிந்தனையையும் உடலையும(a system which controls thought and body)கட்டுப்படுத்தும் அமைப்பு என்பதனை பூக்கோ முன்வைத்தார்.
எல்லையற்று விரிந்திருக்கும் அதிகாரம், அதிகாரமாக ஆகியிருக்கும் அறிவு போன்றவற்றுக்கும் அப்பால், காரண காரியப் பார்வைக்கும் அப்பால் தேடிச்செல்லும் அறிவுத்துறைப் போக்காக பூக்கோவின் பாலியல் மற்றும் சிறை அமைப்பு குறித்த ஆய்வுகள் வெளிப்பட்டன.
நவீனத்துவத்திற்கு முந்திய ரோம-கிரேக்கப் பண்பாட்டிலும், வட ஆப்ரிக்கப் பண்பாட்டிலும் ஆண்சமப்பாலுறவுக் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமையை பூக்கோ கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் முன்வைத்தார். மனித விடுதலை ஆன்மீகத் தன்மையற்ற ஸ்டாலினிய, பாசிச அரசியல் முறைமைகளுக்கு மாற்றாக ஒரு கோட்பாட்டையும் அரசியல் அமைப்பையும் அவாவிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் ஈரானியப் புரட்சி தொடங்கியது.
‘அசல்;தன்மை’ என்பதனை பூக்கோ எப்போதுமே காரண காரியத்தைச் தாண்டிச்செல்லும் தருணம், மரணத்தின் விளிம்பில் ஆபத்தான தருணத்தில் நிகழும் போக்குகள் போன்றவற்றிலேயே கண்டார். இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் ஒரு நாகரீகத்தையும் ஒரு வாழ்முறையையும(islam as a civilisation and a way of life)கண்ட பூக்கோ நவீனத்துவத்தின்; காரண காரிய அறிவை மீறிச் செல்லும் மாயப்பண்பும் ஆன்மிகத்தன்மையும் கொண்ட (mythical and spirtual) ஒரு தனித்த புரட்சியாக, ( singular revolution), தமது உயிரையும் தமது கற்பனாவுலகுக்குக் கொடுக்கத் துணிந்த இஸ்லாமிய அடிப்படையவாதிகளின் தீரம் (martyrdom) அவரது தத்துவப்பார்வைக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது.
அசல்தன்மை (authenticity) தொடர்பான பூக்கோவின் எண்ணங்கள் எப்போதுமே மரணத்தோடும், காரணகாரியத்தை மீறும் பண்போடும் -near death and exploring rationality- பிணைக்கப்பட்டிருந்தன என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில்லர். இந்தத் தன்மை சிருஸ்டிகரமான புதியதொரு கோட்பாட்டு நிலைக்கும் வாழ்நிலைக்கும் அரசியலுக்கும் அறத்தின் அடிப்படையிலான ஒரு சமூகத்துக்கும் மனிதர்களை இட்டுச்செல்லும் என பூக்கோ நம்பினார்.
இதன் பொருட்டு ஈரானியப் புரட்சிக்கும், அரசியல் இஸ்லாம் இயக்கத்துக்கும், அயதுல்லா கோமெனிக்கும் தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி;னார் பூக்கோ. ஈரானியப் புரட்சியின் தன்மைகள் குறித்த அனைத்து விதமான விமர்சனங்களையும் மறுத்தார் பூக்கோ. அத்தோடு ‘தான் எப்போதுமே விவாதங்களில் நம்பிக்யைற்றவன். இப்போதும் தான் விவாதிக்க விரும்பவில்லை’ என்றே தனது ஈரான் ஆதரவு நிலைபாட்டுக்கு விளக்கமும் சொன்னார் பூக்கோ.
ஈரானியப் புரட்சி குறித்த தனது கட்டுரைகளில், ஈரானியப் புரட்சியானது பெண்களின் உரிமைகளை உத்தவரவாதப்படுத்தும், சிறுபான்மையினர் உரிமைகளை அது பாதுகாக்கும், ஆண் சமப்பாலுறவை அச்சமூகம் அனுமதிக்கும், ஜனநாயகத்தையும் தனிநபர் உரிமையையும், மனித உரிமைகளையும் அங்கீகரிக்கும் என்றெல்லாம் திட்டவட்டமாக பூக்கோ எழுதியிருக்கிறார்.
பூக்கோவின் நம்பிக்கைகள்; அனைத்தும் அவரது வாழ்காலத்திலேயே பொய்த்துப் போனது. ‘மதகுருக்கள் அரசில் அங்கம் பெறமாட்டார்கள்’ என அவர் குறிப்பிட்டார். அது முற்ற முழுதாகப் பொய்யாகிப் போனது. இன்றளவிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தையே ஈரானியப் புரட்சியானது தோற்றுவித்திருக்கிறது. அரசியல் இஸ்லாம் ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு நாடுகளாக ஆப்கானிஸ்தானும் ஈரானும் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளுமே பெண்களின் மீதான மட்டுமீறிய அடக்குமுறையை ஏவிய நாடுகளாகவே இருக்கிறது.
ஈரானியப் புரட்சியை ஒரு ‘தனித்த புரட்சி’ என்று பாரப்பதற்கான பூக்கோவின் ஆதாரமான காரணம்தான என்ன?
ஈரானியப் புரட்சி நடந்த தருணத்தின்போது ஐரோப்பாவில் பூக்கோவுக்கு எற்பட்டிருந்த கருத்தியல் ரீதியான அங்கீகரிப்பையும் நாம் முன்பாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அன்றைய நிலையில் பூக்கோ மேற்கத்திய சமூகச் சூழலில் சிறையைமைப்பு, பைத்தியநிலை, பாலியல்பு(prision madness and sexuality) தொடர்பாக நூல்களை வெளியிட்டிருந்தார். அவரது மிகப் புகழ் பெற்ற நூலான ஓழுங்கும் தண்டனையும் (discipline and punishment ) எனும் நூலின் வழி ஐரோப்பிய அரசியல் ஒழுங்கான தாராளவாத சமூகத்தை அவர் ஒழுங்குபடுத்தும் சமூகம் எனக் குறிப்பிட்டார். தாராளவாத சமூகமானது ‘உடல் அளவில் குறைந்தபட்சமாகத் தோன்றுகிற தண்டனைகளை வழங்கினாலும் கூட, பாரிய அளவில் மிக அதீதமான பாதிப்புகளை மனிதனுக்கு ஏற்படுத்துகிற தண்டனைகளையே அதுகொண்டிருக்கிறது’ என அவர் குறிப்பிட்டார்.
நவீனத்துவத்திற்கு எதிரான அவரது எதிர்-சொல்முறையில் நவீனத்துவ நிறுவனங்களானது நம்மை விடுவிப்பதாகத் தோன்றினாலும் அவைகள் நம்மை உள்ளார்ந்த வகையில் அடிமைப்படுத்தவே செய்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரத்தின் பாய்ச்சல்களையும்,சரடுகளையும் முறுக்கி பிடித்த அந்த அராஜகவாதி சிந்தனைகள் அரசியல் பாடத்தில் திருப்புமுனை என்பதில் சந்தேகம் இல்லை

Saturday, March 20, 2010

ஆசிரியன் சாகத்தான் வேண்டுமா?




நாம் ஏன் எழுதுகிறோம் ? நாம் ஏன் படிக்கிறோம் ? 'கலை ' மனிதர்களுக்கு ஏன் முக்கியம் ?

ஒரு கலைப் படைப்பின் உள்ளே ஒரு ரகசிய உயிர் இருக்கிறது. அது கலைஞனின் விருப்பத்தின் வெளிப்பாடு. புராணக் கதைகளிலும் , மாயாஜாலக் கதைகளிலும் இந்த 'விருப்பம் ' வெளிப் படையானதாக இருக்கிறது.

வாழ்க்கையில் காணக்கிடைக்காதவைகள் கலைகளில் கிடைக்கின்றன. 'தவறுகளுக்குத் தண்டனை ', 'நல்லதுக்குப் பரிசு ' என்று ஒரு நியாயம், பெரும் இடர்களுக்கிடையே அரும்பும் நேச நெகிழ்வு , சுகமான முடிவு இவைகளைக் கலைப்படைப்புக்களில் காண்கிறோம். மிகச்சிறந்த கலைப்படைப்புக்களில் இந்த 'விருப்பம் ' கலைஞனால் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் மறைந்திருக்கலாம். சில சமயம் இந்த 'விருப்பத்தை ' கலைஞன் மறுக்கவும் மறுக்கலாம்.

டி. எச். லாரன்ஸ், தன்னுடைய 'தேர்ந்த அமெரிக்க இலக்கிய வாசிப்புகள் ' என்ற (1923 வருடத்திய) என்றநூலை எழுதினார். பல முன்முடிவுகளைத் தகர்த்தது அந்தக் கட்டுரைத் தொகுப்பு. அதில் அவர் ' கலைஞனை நம்பவே நம்பாதே. கதையை நம்பு. ' என்று சொல்கிறார். 'விமர்சகனின் முக்கியமான பணி, படைப்பாளியிடமிருந்து படைப்பை காப்பாற்றுவது தான் ' என்றும் அவர் சொல்கிறார்.

பல சமயம், கலைஞர்கள், தம் படைப்பினை முடிக்கும் வரை தாம் எழுதுவது என்னவென்று தெரியாமலே இருக்கக் காணலாம். நம்மில் சிலருக்கு , கதையையும், ( வேறு வார்த்தை கிடைக்காததால் இதை 'கதை ' என்று சொல்லலாம்), அது அமையும் அமைப்பையும் தொடர்பு படுத்துகிற ஒரு ரகசியச் சரடு இந்த விருப்பம்தான். இது இல்லையென்றால், இறுக்கமான, கட்டுமானமான ஒரு படைப்பு சாத்தியமில்லை.

ஒரு கதையின் வெளித் தெரிவதான கட்டமைப்பானவை 'எங்கே தொடங்குகிறது ', 'எங்கே முடிகிறது ', 'தூக்கலாய்த் தெரியும் படிமங்கள் ', 'தொனிகள் ' போன்றவை. எழுத ஆரம்பிக்கும்போது, எரிமலையாய்க் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் இருப்பினும், பிற்பாடு அதைச் சீர் திருத்தி செப்பம் செய்வது மிகச் சாவதானமான செயல் தான்.

'சாவதானத்திலேயே, விரல்களில் சூடேறுகின்றன. அவனைத் தொடும் விரல்களெல்லாம் அதிர்வடைகின்றன. அதனால் தான் பலரும் அவன் தகிப்பதாய் உணர்கிறார்கள். ' நீட்ஷேயின் இந்தச் சொற்றொடரில் கலைஉருவத்தில் அக்கறையுள்ளவனின் உள் பார்வையைக் காணலாம். உணர்வுபூர்வமாய் இயங்கும் ஒருவன் தன் படைப்பை அளிப்பது, அவன் தீவிரமாய் உணர்ந்த கணங்களின் பதிவு. அந்த உணர்வுகள் இப்போது இல்லையெனினும் கூட.

கலைஞன் இயல்பாகவே கும்பலின், அரசாங்கத்தின், சமகால நெறிகளின் நிரந்தர எதிரியா ?

நெறிமுறை சார்ந்த / குழு சார்ந்த / குடும்பம் சார்ந்த உலகம் ஒரு புறம். ஒரு தனியாளின் ஆன்ம உலகம் இன்னொரு புறம். எண்ணிக்கையில் அதிகமான, 'விதிகளின் ' உலகம் ஒரு புறம். விதிகளைப் புறம் தள்ளும் தனிமனித வேட்கை இன்னொரு புறம். இந்த இரு முரண்பட்ட உலகங்களிடையேயான போராட்டம் தான் விரட்டிக் கொண்டேயிருக்கிறது: வாழ்க்கையிலும் சரி, எழுத்திலும் சரி. கனவே போல, 'தான் ' கரைந்து , தூக்கம் கலைந்த அரை விழிப்பில், ஒரு தற்சார்பு அற்ற ஆளுமை எழுந்து , (கும்பல் நியதி சார்ந்த உலகு மீது) விசாரணைகளைத் தொடங்குகிறது. (என்னைப் பொறுத்த வரையில் இந்தத் துரத்தல் இளமைப் பருவம் தாண்டிய உடனேயே தொடங்கி விட்டது)

நான் யார் ? என்று கேடுகும் போதே , இந்தக் கேள்வியைக் கேட்கிற 'நான் ' தான் யார் ? மனித வரலாறு முழுதும், விடை கிடைக்காமலே கேட்கப் பட்டு வரும் கேள்வியோ இது ? இந்த நான் தனித் தன்மை வாய்ந்ததா ? சாராம்சத்தில் மற்ற 'நான் 'களில் உள்ள பெளதீக, ரசாயனக் கலவையைக் கொண்டது தானே ? அழிவையே மாறா உண்மையாய்க் கொண்ட, பல லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன் உருவான நட்சத்திரத் துகள் தானே ? எமிலி டிக்கின்சன் (1868 ?) சொற்களில் : ரத்தப் போக்கில் தொடங்கி , எழுச்சியற்ற வாழ்க்கையா ?

இதுவும் கூட ஒரு புனைகதை தானா ? கலாரீதியாக எழுப்பப்பட்ட ஒரு விருப்பமே தானா ? தனிமனிதத்தில் தோய்ந்த அனுபவங்களும், தாமரையிலைத் தண்ணீரே போல் தோய்ந்திராமல் ஆன அனுபவங்களும் , மொழியிலும் மெளனத்திலும் மோதி, கலை பிழம்பாய்ச் சாத்தியமாகிறது.

1969-இல் மைக்கேல் ஃபூக்கோ சிந்தனாமுறையில், 'படைப்பாளி என்பது என்ன ? ' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அவரால் தாக்கங்கள் பெரிதும் நிகழ்ந்திருப்பினும், அவர் தவறாகவே புரிந்து கொள்ளப் படுகிறார். சிந்தனைப் போக்கில் ஒரு சோதனை முயற்சியாகவும், அழகியல் விசாரணையைக் காட்டிலும் அரசியல் சார்பின் மிகுதியால், இந்தக் கட்டுரை புகழ் பெற்றது.

எழுத்தாளனின் படைப்புலக அடையாளத்தை விசாரித்தது - இல்லை அடையாளத்தை அழித்தது. (இருப்பினும் இது வெறும் கோட்பாட்டளவில் தான் - ஃபூக்கோவிற்குப் பின், ஃபூக்கோவுடன் உடன்படுபவர்கள் உட்பட, புத்தக அட்டைகளில் அவரவர் பெயர்களைத் துறக்கவும் இல்லை. புத்தக சம்பாத்தியத்தையும் கூடத் துறக்கவில்லை. பேர் தெரியாத எழுத்தாளர்கள் கூடத் தம்பட்டமடிப்பதை நிறுத்த வில்லை). இருப்பினும் 'படைப்பாளியின் இருப்பு ' பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. இதில் தீர்வுகள் சாத்தியமில்லை. ஏனென்றால், இதில் விவாதத்துக்குள்ளாக்கப் படுவது மொழியும் , விமர்சனச் சொல்லாக்கங்களும் தானே தவிர, பருண்மையானதோர் நிஜம் அல்ல. ரோலண் பார்த், ழாக் தெரிதா கூட இது போன்றே -- ஆனால் பெருமளவு தீவிரமாக அல்ல -- 'படைப்பாளியின் மரணம் ' என்று வாதிக்கிறார்கள் -- 'பிரதிக்கு அப்பால் ஒன்றுமில்லை ' என்கிற கோட்பாட்டைக் கூறி ' ஒரு இலக்கியப் படைப்பு இந்த மையம் அல்லது இணைந்த ஒரு தோற்றுவாய்ப் புள்ளியிலிருந்து என்று சொல்லத்தக்கதல்ல ' என்கிறர்கள். ( மோஸார்ட்டின் இசை என்று எதையும் சொல்ல முடியாது. மோஸார்ட்தனமான ஓர் இசைப் பிரதி, மற்ற மோஸார்ட் தனமான பிரதிகளுடன் சில குணாம்சங்களைப் பங்கிட்டுக் கொள்ளாலாம். அவ்வளவு தான். இவை ஒரு விதத்தில் சில ஒலி அடையாளங்களே தவிர வேறில்லை. சாராம்சமான அடையாளம் என்று சொல்லத்தக்கதாய் ஒன்றுமில்லை.) 1

இந்தக் கோட்பாட்டைத் தலை கீழாக்கிப் பார்க்கலாம். 'வரலாற்றில் தற்செயலாக நேர்ந்த ஒரு தனி ஆள்( பெயர், தனிமனித மூலக்கூறு(DNA), கையொப்பம் எல்லாம் சேர்ந்தவர்) ' எழுதிய எல்லாமே ஒரு படைப்புலகம்; எனில் முடிவான படைப்பு என்று உலகம் அறிய, செப்பமிட்டு அந்த ஆள் உழைத்து, அந்த நபர் அளித்த, புத்தக உருவில் கனத்த அட்டை கொண்ட புத்தகம் மட்டுமல்ல. எழுத்தாளன் விரும்பாமலே, அவன்(ள்) கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிக்கிறவர்கள், இந்த ஊகத்தில் தான் செயல் படுகின்றனர்: பெரும் தொகையை கொடுத்து, சாதாரண படைப்புகளையும் , இளம் பருவத்துக் கிறுக்கல்களையும், கவனமில்லாமல் அவசரமாய் எழுதப்பட்ட கடிதங்களையும் , வாங்கத் தயாராய் இருக்கின்றனர் -- தப்பிப் போன சுயத்தை ஸ்தாபிக்க இவை தாம் உண்மையான, இயல்பான முறையில் வெளிப்பட்டவை என்றும் சொல்லலாம். புகழ் பெற்ற எழுத்தாளரெனில், டி.எஸ்.எலியட் சொன்னது போலச் சொல்லலாம்: 'கலை என்பதே ஆளுமையின் அழிவு தான். ' இருப்பினும், கைப்பட எழுதிய எல்லாமே, அசடு வழிகிற தொனியில் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் , நாட்குறிப்புகள், -- எலியட்டின் யூத எதிர்ப்பு வரிகள், பெண்களைத் தாக்கும் வரிகளும், போர்னாகிராபிக் கனவுகளூம் -- எல்லாமே, அச்சிட்ட படைப்பினைக் காட்டிலும் மதிப்பு மிக்கதாய் இருக்கும். தனி மனிதர்கள் என்பதே இல்லை என்று வாதிக்கும் தத்துவக் கோட்பாடு ஒரு புறம் இருப்பினும், தனி மனிதனை அவனளவில் மதிக்கத் தான் மக்கள் விரும்புகிறார்கள். அடையாளப் படுத்துதல் என்னும் சிறையைலிருந்து தப்பிக்க எழுத்தாளர்கள் புனைப் பெயரைத் தேடி ஓடியபடி, பிரதி வெறும் பிரதியாய், படைப்பின் கீழ் உள்ள , ஊர் பேர் தெரியாத ஒரு நபரின் பெயருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் , எந்த முன்முடிவுகளும் இல்லாமல் , பிரதியாய் மட்டுமே இருக்கும் என்று நம்புகிறார்கள். மீண்டும் புதிதாய்ப் பிறந்தல் - மீண்டும் ஒரு தொடக்கம் -- படைப்பாளியாக அல்ல -- படைப்பாய் மட்டுமே. !

இருப்பினும், ஃபிரெஞ்சுக் கோட்பாடுகள் , 'புதிய ' வரலாற்றுப் பார்வை இவற்றுக்கு முரண்பட்டு, எழுத்தாளனின் 'வரலாற்று இடத்தி 'னை நிர்ணயம் செய்வதற்காக, அவனைப் பற்றிய எல்லா விபரங்களும் சேகரிக்கப் படுவது, நம் 'சார்பற்ற ' காலகட்டத்தின் அடையாளம் என்று சொல்ல வேண்டும்; எழுத்தாளனின் நோக்கத்தைக் கண்டறிய எதுவுமே சிறு விஷயமாகவோ, தரம் தாழ்ந்ததாகவோ, முக்கியமற்றதாகவோ கருதப் படாமல் எல்லா வாழ்க்கைத் துணுக்குகளும் சேகரிக்கப்படுகிறது. (உதாரணமாக ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கியப் பத்திரிகை சில்வியா ப்ளாத்-தின் கடைசி காலக் கவிதைகளை, மாதவிலக்காகும் முன்னர் படும் இறுக்கமான அவஸ்தையின் வெளிப்பாடாகப் புரிவிப்புச் செய்தது.) சமகால ஆட்களைப் பற்றி பெரிய வாழ்க்கை வரலாறுகளூம், பெரும் விவரணக் குவியல்களும் குவிக்கப்பட்டு , எழுத்தாளனின் இறைஞ்சுதலான ' என் படைப்பே என் வாழ்க்கை, என் படைப்பே என்னை அறிய வழி ' என்ற வேண்டுகோள் புறந்தள்ளப் படுகிறது. இருப்பினும், பல எழுத்தாளர்கள், எழுதி முடித்த படைப்புகளில் தாம் 'வசிப்பதில்லை ' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். எழுதி முடித்த பிறகு அதனுடனான உறவு முடிந்து போகிறது. இந்த உறவு காலத்துடன் பின்னிப் பிணைந்தது. காலம் போகும் திசை ஒன்றே தான். பிரதியைக் கலைப் படைப்பு என்று ஒப்புக் கொண்டால், அதற்கு வெளியில் ஒன்றுமில்லை என்று ஒப்புக் கொண்டாக வேண்டும். படைப்பாளியின் நோக்கம் , விமர்சனப் பார்வைகளில் இடம் பெறுவதே இல்லை. விமர்சன உலகுக்கு வெளியே, ஷேக்ஸ்பியர் ஒரு ஆளா, இல்லை, வேறு வேறா போன்றவை விவாதிக்கப் படலாம். மைக்கேல் ஃபூக்கோ கேட்டது போல் : ' யார் பேசுகிறார்கள் என்பது முக்கியமா என்ன ? '

மார்ஸெல் ப்ரூஸ்ட் தன்பாலுறவுக்காரன் என்று தெரிந்து கொள்வதால் என்ன பயன் ? ப்ரூஸ்டின் நாவலின் பெருமையை இது பாதிக்கிறதா ? படைப்பை விரிவு செய்கிறதா ? -- படைப்பிலிருந்து கவனத்தைத் திசை திருப்புகிறதா ? அதன் பெருமையைக் குறைக்கிறதா, அல்லது பெருக்குகிறதா ? ஆஸ்கார் ஒய்ல்டின் 'டோரியன் கிரேயின் சித்திரம் ' ஒய்ல்ட் தன் பாலுறவுக்காரனாய் இருந்ததால் நுணுக்கங்கள் ஏதும் பெற்றுள்ளதா ? அப்படி அவன் இல்லையென்றால் அதன் தன்மை மாறியிருக்குமா ? 'யார் பேசுகிறார்கள் என்பது முக்கியமா என்ன ? ' என்று கேள்வி இருப்பினும், பல வாசகர்களுக்கு இது முக்கியமாகப் படுகிறது.

ஒரு பெண் நிலைவாதிக்கு, ஒரு பிரதி பெண் எழுதியதா என்ற கேள்வி மிக முக்கியமானதாக ஆகிறது . ' ஒரு பெண்ணின் சொல்லாடல், ஓர் ஆணின் சொல்லாடலிலிருந்து - பிரதி ஒன்றே போல் தோன்றினாலும் -- கணிசமாய் மாறுபட்டிருக்கும். பெண் எழுதினால், 'பெண்ணின் கோபம் ' அதில் வெளிப் பட்டிருக்கலாம். அவள் கலைப் படைப்பு அவள் உடம்புடன் வெகுவாகத் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்தக் குறுகிய பார்வையின் நோக்கை மறுப்பவர்கள், பெண்பால் அடையாளத்தை மறுப்பவர்களாய் இருக்கலாம். ஆண் மொழியிலிருந்து வேறுபட்டு, பெண்மொழி என்று ஒன்று உள்ளதா ? இது பெண்குலத்துக்கே உரித்தான மொழியா அல்லது, ஒரு குறிப்பிட்ட பெண்ணின் உடைமையா ? 'இருபாலினத்தவரில் (ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் இருப்பவர்கள்) ' கலைஞர் இல்லையா ? ஒரு பெண்ணாகவும் அதே சமயம் எழுத்தாளியாகவும், ஒரு எழுத்தாளியாகவும் அதே சமயம் பெண்ணாகவும் இருக்கிற நான், பெண் உடம்பிலிருந்து குதித்தோடி வருவதாய் ஒரு மொழியை அறியவில்லை. -- அப்படிப் பட்ட கோட்பாட்டின் மாயக் கவித்துவ வேட்கையை நான் பரிவுடன் பார்க்க நேரினும் கூட. வரலாறு முழுதும் விளிம்புக்குத் தள்ளப்பட்டு. மீண்டும் மீண்டும், முழுமையான மனிதப் பிறவியல்லவென்று ஒதுக்கப் பட்டு, ஆன்மா அற்றவர்கள் என்று சொல்லப்பட்டு, எழுத முடியாது, வரைய முடியாது, இசையமைக்க முடியாது, தத்துவம்,கணிதம், அரசியல், அதிகாரபீடங்கள் எதற்கும் தகுதியில்லை என்று தள்ளப்பட்டு -- கருவறையும், தாய்ப்பாலுமே ஒரு ஆறுதல் தரத் தக்க அளிப்புகள் என்று ஓதப் பட்டு வந்துள்ளனர் பெண்கள் . பெண்படைப்பாளிக்கு, பெண்நிலை/ பெண்பால் அடையாளம் சார்ந்த விமர்சனம் மிகச் சிறப்பாக அவர்களைப் போஷிக்கக்கூடும். பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் கவனமாய்ப் படிக்கப் படுகின்றன. முன்னே ஒதுக்கப்பட்டவர்களும் , இன்று கவனத்துக்கு வருகிறார்கள்.

இருப்பினும் இந்த விமர்சனப் பார்வை -- நல்ல நோக்கங்களுடன் செய்யப் படினும் -- உருவ அக்கறை கொண்ட, பெண்பால் பிரசினைகள் மட்டுமே தலையாய பிரசினையாய் எல்லாப் படைப்புகளிலும் துருத்திக்கொண்டிராத ஒரு படைப்பாளிக்கு , மிகக் கட்டுப்படுத்துவதாய்க் காணக் கூடும். (ஒரு எழுத்தாளி என்ற முறையில், பெண்களைப் பற்றி எழுதுகிறேன்; பெண்களின் கோணத்திலிருந்தும் எழுதுகிறேன்; ஆனால் ஆண்களையும் பற்றி எழுதுகிறேன். ஆண்களின் கோணத்திலிருந்தும் எழுதுகிறேன். ஆணோ பெண்ணோ என் கதாபாத்திரத்தில் என்னைக் கரைத்துக் கொள்வதின் மூலம், என்னுடையதாக இல்லாத ஒரு பிரக்ஞையின் பரிமாணத்துக்குள் நுழைகிறேன் - பெண் நிலையாகவும் சரி ஆண் நிலையாகவும் சரி, கதாபாத்திரத்திற்கு மிக நியாயம் செய்வதாகவே உணர்கிறேன். ) ஒரு தனி மனித சாராம்சத்தை, பிறப்புறுப்பு சம்பந்தப் பட்ட ஒன்றாக மட்டும் குறுக்கி விட முடியாது. எழுத்தாளியான பெண்ணை 'பெண் எழுத்தாளர் ' என்று அடையாளம் காண்பிப்பது, சங்கடம் தருகிற ஒன்று -- அதிலும் 'ஆண் எழுத்தாளர் ' என்று யாரும் அறியப் படாத போது.

'எங்கே படைப்பாளி ? ' என்ற கேள்விக்குத் திரும்பினால், ஹென்றி ஜேம்ஸ் சொன்னது போல, கலைஞனின் வாழ்க்கையே அவன் கலைப் படைப்பு என்று சொல்லலாம். கலைஞனின் படைப்பே அவன் வாழ்க்கை என்று சொல்ல முடியாது. கலைஞனின் வாழ்வில் ஒரு பகுதி தான் படைப்பு. பல சமயங்களில் கலைஞனின் -- மிகச் சிறப்பான கலைஞர்களுக்குக் கூட -- படைப்பு வாழ்வின் மிக முக்கியமான பகுதி கூட அல்ல. பிரதிகளைப் படைக்கிற எழுத்தாளிக்கும், வாழும் நபருக்கும் இருத்தலியல் ரீதியான ஒரு வேறுபாடு இருக்க வேண்டும் என்றும் வாதிடலாம். ஆக படைப்பே கலைஞன். அழகியல் படைப்பின்., பிரதியின், அச்சுப் பிரதியின், செப்பம் செய்யப்பட்டதின் 'செயற்கையான ஒரு ஆக்கத்தின்: ' ஒரு பகுதியே படைப்பாளி என்று வாதிடலாம். மனிதன் இயற்கையான நிகழ்வாய்ப் பிறக்கிறான் எனில்,. கலைஞன் அந்தத் தனிமனிதனிலிருந்து பிறக்கிறான். இந்த 'இயற்கை 'யின் போதாமையைப் பூர்த்தி செய்வதாகவும், முழுமையற்ற 'இயற்கை 'யை முழுமை செய்வதாகவும், வெறுமே இயற்கையென அறிவதைக் கடந்து செல்வதும் தான் படைப்புக்கான உந்துதல். எல்லாப் புனைகதைகளும் , கவிதைகளும் , புத்தகங்களும் அந்தப் 'புனைப்பெயர்களால் ' தான் இந்த உந்துதலின் பலனாகப் படைக்கப் பட்டன. அதை எழுதியவனும், அந்தப் பெயருக்குச் சொந்தமானவனும் ஒரே நபர் அல்ல தான்.

எங்கே படைப்பாளி ? படைப்பில் தான்.

படைப்பாளியின் 'படைப்பாளி ' அந்தப் பெயருக்குச் சொந்தமான நபர் இல்லையென்பது இதன் பொருள் அல்ல - தற்காலிகமாகவேனும்.

ஒரு கலைஞனின் வாழ்க்கைதான் அவனது படைப்பு. இதுவே அவனை அறிய சரியான இடம்.

-- ஹென்றி ஜேம்ஸ்

காகிதத்தில் கை வைத்த உடனேயே எல்லாமே உருவாயிற்று

-- சாமுவல் பெக்கெட் ( 'கோடோவுக்காகக் காத்திருத்தல் ' நாடகம் எழுதியது பற்றி)
****

குறிப்பு:

1. வொல்ஃப்காங்க் அமாடியஸ் மோஸார்ட் - மேதைகளின் உதாரண புருஷர். இந்தக் கீழே தரப் பட்ட கடிதம், மேதையும் கூட - ஒரு விதத்தில் செயலற்று, நினைவிலி மனத்தின் கைப்பாவையாய் இயங்கினார் என்று சொல்கிறது :

' தனியாக, நான் நானாகவே இருக்கும் போது, மகிழ்வில் ஆழ்ந்திருக்கும் போது.. என் கருத்துகள் பிரவகிக்கின்றன. எங்கிருந்து வருகின்றன, எப்படி வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவற்றைப் பலாத்காரமாய்த் தருவிக்கவும் என்னால் இயலாது.. . .

நான் எழுத முனையும் போது காகிதத்தில் மிகத் துரிதமாகவே பதிவு கொள்கிறது -- ஏனெனில் ஏற்கனவே எல்லாமும் முடிந்தது தான். என்னுடைய கையில் எழுதப்பட்டவை ஏன் மொஸார்ட் தனம் கொண்டவை என்றால் -- மற்ற இசைப் படைப்பாளிகளிடமிருந்து வேறு பட்டிருக்கிறது என்றால், என்ன காரணம் ? என் மூக்கு வளைந்திருக்க என்ன காரணமோ அதே தான். நான் அசலானதாய் இருக்க வேண்டும் என்று முயல்வதே இல்லை. '

என்றாலும் கூட மொஸார்டின் ஒப்பற்ற படைப்புகள் அவர் வாழ்ந்த யுகத்தின் முத்திரையைத் தாங்கித் தான் வந்துள்ளன. மேதையும் கூட அவன் வாழும் சூழ்நிலையின் குழந்தை தான்.

Saturday, March 13, 2010

செல்வராஜ் ஜெகதீசன் - மனக் குறிப்புகளின் புத்தகம்














நண்பர் செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகளை திண்ணையில் படித்து விட்டு மினனஞ்சலில் தொடர்பு கொண்டேன்.அப்போது தான் தெரிந்தது அவர் அபுதாபியில் நானிருக்கும் ஹம்தான் தெருவில் உள்ள அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார் என்று.அடுத்த முறை அவரை பார்த்த போது அந்தரங்கம் என்ற அவரது தொகுப்போடு நின்றிருந்தார்.அசகாய தூரம் இது.கடும் முயற்சி.உழைப்பு.மேலும் இலக்கியத்தில் இருபதுவருட தீவிரவாசகன்.கவிஞரின் பெயரை சொன்னாலே போது எதாவது தொகுப்பில் இருந்து சரளமாக மனப்பாடம் செய்து வைத்தாற் போல கவிதை சொல்லுகிறார்.புத்தகங்களுடனான அதீதமான உறவு இன்று ஒரு தொகுப்பாய் அவரை பேசவைத்திருக்கிறது.அவரது பணியோ எஞ்ஞினியரிங்.பி.ஈ.முடித்திருக்கும் இவர் தமிழில் கவிதை பாடுவது நமது மரபில் இல்லாத ஒன்று.சமூக போராளிக்கு சற்றும் தோய்வில்லாத அனுசரணை கொண்ட சமூக நோக்கும்,அவதானமும் அவரை கவிஞராக்கியிருக்கிறது.அடுத்த வருடமே வேறு ஒரு தொகுப்பு.பொறாமை பட வைக்கும் பாய்ச்சல்.அதுவே அவரை பேசவைத்திருக்கிறது.

ஒன்று

பரஸ்பர பிரதியுறவு அல்லது தற்சுட்டு என்பது இருப்பதை இன்னொரு முறை எழுதிப்பார்ப்பது என்று பேசப்படுகிறது.இலக்கியமும்,தத்துவமும் காலம்காலமாக இருந்து வருகிறது.ஆனால் புதிய விஷயங்கள்,மறுபடியும் எழுதிப்பார்ப்பது என்ற நிலை தாண்டி அவை இயங்கியது கிடையாது.படைப்புகள் பிற படைப்புகளில் இருந்து உருவாகின்றன என்பது அண்மைகாலத்திய கோட்பாட்டாளர்களின் முடிவாகும்.அவை தாங்கள் பயன்படுத்த எடுத்துக் கொள்ளும் மறுபடியும் உருவாக்கும்,சவாலுக்கு இழுக்கும், உருமாறும் முந்தைய படைப்புகளால் சாத்தியப்பட்டிருக்கின்றன.இதையே இண்டர் டெக்ஸ் என்கின்றனர். ஒரு படைப்பு மற்ற பிரதிகளுக்கிடையே மற்றும் அவற்றால் சூழப்பட்டு அவற்றுடன் அதற்க்குள்ள உறவுகளின் வழியே இருத்தல் கொள்கிறது என்கிறார் ஜோனாதன் கல்லர்.

தற்போது ஒரு கவிதையை இலக்கியமாக வாசிப்பது என்பது அதை மற்ற கவிதைகளோடு தொடர்பு படுத்துவதாக இருக்கிறது.அது அர்த்தத்தை நிகழ்விக்கும் விதத்தை மற்ற கவிதைகள் அர்த்தத்தை நிகழ்விக்கும் விதங்களோடு ஒப்பிடுவதும் வேறுபடுத்துவதாகும்.அதனால் ஒரு தளத்தில் கவிதையை வாசிப்பது என்பது கவிதையை பற்றி வாசிப்பது தான் என்பது சாத்தியமாகிறது.கவிதை கற்பனை மற்றும் செயல்விளக்க செயல்முறைகளுடன் தொடர்புடையதாக கவிதைகள் உள்ளன.அண்மை காலத்திய கோட்பாட்டின் படி தற்சுட்டும் தன்மை முக்கியமாகிறது.செல்வராஜ் ஜெகதீசனின் கவிதை ஒன்று சொல்லுவதை பாருங்கள்.

எழுதுதல்

யாரும் எழுதாத ஒன்றை

நான் எழுத போவதில்லை

யாரும் எழுதமுடியாத ஒன்றையும்

நான் எழுதிவிட போவதுமில்லை

ஆயினும்

எழுதிதான் தீரவேண்டியிருக்கிறது

எவருக்காக இல்லையென்றாலும்

எனக்காகவேணும்.

எழுதுவதின் தற்சுட்டு தன்மை என்பது தான் முக்கிய பாடுபொருளாக இந்த கவிதை சொல்லுகிறது.சிக்னேச்சர் ஈவெண்ட் காண்டெக்ஸ்ட் என்ற கட்டுரையில் தெரிதா எழுத்தின் மூன்று இயல்புகளை கூறுகிறார்

ஒன்று,எழுத்து:தன்னை இரு குறிப்பிட்ட தன்னிலையின் இயலாமையில் மட்டுமின்றி யாருக்காக எழுதப்பட்டதோ அந்த வாசகனின் இல்லாமையிலும் உச்சரிக்கப்படுவது

இரண்டு,எழுதப்பட்ட குறி:அதன் எழுத்தாளன் எந்த சூழலை உள்நோக்கமாக கொண்டு எழுதினானோ அந்த சூழலிருந்து விடுதலையாகிவிட முடியும் குறிகளின் எந்த தொடரும் எந்த ஒரு புது சூழலிலும் வைத்து வாசிக்கப்பட இயலும்

மூன்று,எழுதப்பட்ட குறி: இன்னொருவிதமான இடைவெளிவிடுதலுக்கு உள்ளானது.அதாவது சொற்கள் மற்றும் வாக்கியங்களுக்கு நடுவே இடைவெளி விடும் விதிகள் நிச்சயிக்கப்பட்டவை.அவை அவசியமும் கூட.பிறகு எந்த நோக்கத்துடன் எழுத்து எழுதப்படுகிறதோ அந்த சந்தர்ப்பத்தில் இருந்து விலகி இருக்கிறது.

எது கவிதை? எப்படி இருக்கும் கவிதை? என்ற கேள்விகளுக்கு எத்தனையோ பதில்கள் இருக்கின்றன. கவிதையை இனங்காணுவது இன்றைக்கு எளிதாக இல்லை. ஏனெனில்,

வடிவத்தை வைத்தோ, கற்பனையை வைத்தோ, உணர்ச்சி வெளிப்பாட்டை வைத்தோ முடிவுசெய்ய முடியாது. ஒரு காலத்தில் செய்யுளாக இருந்து, பின் நகர்ந்து செய்யுள் கவிதையாகிப், பின், அதையும் இழந்து வடிவற்ற நிலைக்கு வந்துவிட்டது கவிதை

ஒடித்துப்போட்டால்தான் கவிதை என்ற நிலையில் தேங்கித் திணறிக்கொண்டிருந்த கவிதை இப்பொழுது அதையும் இழந்து தட்டையாகிவிட்டது.தட்டையாகிவிட்டதினாலேயே அது கவிதை இல்லை என்று சொல்லமுடியாது. தட்டையாக எழுதினாலும் உயிருள்ள சொல்லாலும், சொல்லும் அழகாலும், அது கவிதையென்று தன்னை இனங்காட்டும்.

" விளைந்த நன்செய் நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்.

என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்...பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள்காண். பழமையினால் சாகாத இளையவள்காண்...நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்.நல்லழகு வசப்பட்டால்துன்பமில்லை" என்று

தட்டையாக எழுதிச்சென்றாலும்" நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்" என்ற சொற்றொடரிலும்

"பழைமையினால் சாகாத இளையவள்காண்" என்ற சொற்றொடரிலும் கவிதை கண்சிமிட்டுவதை உணர்கிறோம்.

இந்தச்சொற்றொடர்களைச் சொல்லும்போதும்; சொல்லிப்பார்க்கும்போதும் தட்டையான அதாவது சமநிலை உணர்வை மனத்தளவில் பெறமுடியாது. ஓர் உணர்வும் சுவையும் வியப்பும் சேர்ந்துவிடுகிறது. உச்சரிக்கும்போதே அதன் ஓசை உரைநடையிலிருந்து ஓங்கி ஒலிக்கிறது. உணர்வும் சுவையும் வியப்பும் கலந்து இவை வெறும் தட்டை வாக்கியமல்ல,உரைநடை அல்ல,ஏதோ ஒரு வித்தியாசமானது என்பதை உணர்த்துகிறது.

அந்த வித்தியாசம்தான்; அந்த உணர்ச்சி இடைவெளியைத்தான் உரைநடையிலிருந்து உயர்ந்தது என்கிறோம். இது உரைநடையுமில்லை வசனமுமில்லை என்ற முடிவுக்கு வருகிறோம்.ஆம் இது கவிதை என்று முடிவெடுக்கிறோம்.ஒடித்துப்போட்டாலும்,

வளைத்துப்போட்டாலும், தட்டையாக்கினாலும் கவிதையின் வண்ணம்; லட்சணம் தெரிந்துவிடும். தன்மையோடும் உணர்வோடும் இடம்பெறும் சொற்கள் சொல்லிவிடும்.

தட்டையாய் எழுதவேண்டியதை கவிதை வடிவத்தில் எழுதிக்காட்டுவதால் கவிதையாகிவிடாது. கவிதையைத் தட்டையாக எழுதினாலும் அது உரைநடையாகிவிடாது. எது கவிதை? எங்கே மறைந்திருக்கிறது கவிதை? என்று தேடத்தொடங்குகிறோம்.தேடித்தேடிச் சலித்துவிடுகிறோம். கவிதை நிச்சயமாக உரைநடையில்லை.உரைநடை வடிவத்தில் கவிதையை எழுதினாலும்

உரைநடையை கவிதை வடிவத்தில் எழுதினாலும் கவிதை தன்னை தன்சொற்களால் அடையாளம் காட்டும்.கவிதை எப்படியும் நம்மைப்பார்த்து கண்சிமிட்டிவிடும்.

இயல்பூக்கம் இயல்பாகப்பெற்றவர்கள் எழுதுவது கவிதையாகிவிடுகிறது.

ஊக்கம்,உணர்வு இன்னும் எதுவும் இல்லாதவர்கள் கவிதை என்று எழுதினாலும் அது சவலையாகிவிடுகிறது. ஏன்? அது கவலையாகவும் ஆகிவிடுகிறது. இறுதியாக

எழுதி எழுதித்தன்னைக்கரைத்துக்கொள்ளும் ஜெயமோகன் சொன்னதைப் பார்வைக்கு வைக்கிறேன்: "கவிதையின் அடிப்படை அழகு சொல்.மற்ற மொழிவடிவங்கள் சொற்றொடராக எழுதப்படுகின்றன.வாசிக்கப்படுகின்றன.கவிதை

சொற்களாக நிகழ்வது.சொற்களுக்கு நடுவேதான் அதன் வாசக் இடைவெளிகள் உள்ளன.நவீன கவிதை மட்டுமல்ல சங்கக்கவிதையில் கூட"

இரண்டு

எப்பொழுதுமே பின்னோக்கும் நிழலுக்கு தனித்தன்மை உண்டு. எல்லாவித வாழ்வனுபவங்களும் ஒரே புள்ளியில் ஒன்று சேர வைத்து அடையாளத்தை நிறுவும் தன்மை அதற்குண்டு. வளைந்து நெளிந்து செல்லும் கடல். அதன் ஆர்ப்பரிக்கும் ஓசை தொடர்ச்சியாக/ முடிவற்றதாக ஒலித்து கொண்டிருக்கிறது. பறவையின் கண் மாதிரி காட்சி வெளிக்குள் அது சிறு துண்டாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு தீவுக்குள்ளும் ஒவ்வொரு தனித்த / தனித்தன்மையற்ற அடையாளங்கள் சிதறி கிடக்கின்றன. அதன் விளிம்பிற்குள் நிற்கும் போது நமக்குள்ளிருந்து அரூப ஒலி எழுகிறது. கவிதையின் வெளிப்பாடு/ அதன் இயங்கு தளம் குறித்து பல மாதிரியான கருத்துக்கள் ஒவ்வொரு இடங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றன. எல்லாவித வெளியும் வெளிப்படுத்தும் வாழ்வனுபவங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சலனங்களின் வெளிப்பாடாக கவிதை உருவாகும்போது கவிஞன் தனக்கான அடையாளத்தை பெறுகிறான். ஒவ்வொரு சூழலுமே ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நம்மை அழைத்து செல்கின்றன. அதன் புரியாத மர்மங்கள்/ ரகசியங்கள்/ உள் வாய்ப்புகள் கலாச்சாரம் தாண்டிய பிரதியை அர்த்தம் கொள்ள செய்கின்றன. இதன் காரணமாகவே வெவ்வேறு பிரதிகளை மாறுபட்ட சூழலில் ஒருவித ஊடாட்டத்தோடு கவனிக்க வேண்டியதிருக்கிறது.

'என் ஆடைகள் கிழிக்கப்படுகின்றன

உன் நாயின் நகங்களால்

கிழிப்பதற்கு அனுமதித்தார்கள்.

உன் உளவாளிகள்

ஒவ்வொரு நாளும் தட்டினார்கள்

உன் படையாட்கள் என்னை

தின்றார்கள் காலணியை கூட

நீ இருதடவை

உன்னை இழந்தாய். '

கவிதையை புரிந்து கொள்ள மொழி ஒரு தடையாக இருப்பதில்லை.அரபுலகில் செல்வாக்கு செலுத்திய சிரிய கவிஞர் ஹப்பானியின் கவிதை மொழி அசாதாரணமானது.

சர்வாதிகாரத்தின் வலிப்பு ஹப்பானியிடத்தில் கலக்குரலாக அமைந்தது. எவ்வித துயரங்களும் கலைஞனிடத்தில் ஏதாவதொரு விதத்தில் பாதிக்கதான் செய்கின்றன. காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்ட ஹப்பானியின் நிழல் நம்மை மேற்காசிய இலக்கிய உலகுக்கு அழைத்து செல்கிறது. எல்லா நிழல்களும் தன் காலத்தை தாண்ட முடிவதில்லை. வெவ்வேறு விதமான வாசிப்பிற்குள்ளிருந்து நாம் நமக்கான பிரதியை தேர்ந்தெடுத்து கொள்வது அவசியம்.அந்த வகையில் செல்வராஜின் கவிதை பிரதிகளுக்குள் வாசகனை வியப்பில் ஆழ்த்தும் சாராம் தான் என்ன என பார்ப்போம்.

வேறு ஒன்றும்

இன்னொரு முறை

பத்திரமாய்

தரையிறக்கித்

தரப்பட்டிருக்கிறது

இந்த வாழ்வு

என்பதைத் தவிர

வேறு ஒன்றும்

விசேசமாய்

சொல்வதற்கில்லை

இந்த இன்னொரு

விமான பயணம்

(இன்ன பிறவும்-கவிதை தொகுதி)

எப்போதும் கவிதை, நிகழ்காலத்தின் எதிர்வினை மட்டுமே. வரலாற்றின் விசாரணையும்

நிமித்திகத்தின் எதிர்பார்ப்பும் கவிதையின் பரப்பில் சமகாலச் சார்புடனேயே மேற்கொள்ளப் படுகின்றன.புதிய அனுபவ உலகை முன்னிருத்தவும் புதிய உணர்வோட்டத்தை அடையாளப்படுத்தவும் எத்தனிக்கும் இளங்கவிஞர்களுக்கு கவிதையை சமகாலத்தன்மை கொண்டதாக நிலைநிறுத்துவது சவாலான நடவடிக்கை.முன்னுதாரணங்களை அதேபடித் தொடர்வதோ, வழக்கிலிருக்கும் மொழியை அதேபடி எதிரொலிப்பதோ படைப்பாகாது; நகலெடுப்புமட்டுமே என்பதால்இந்தஅறைகூவலை எதிர்கொள்வது தவிர்க்கவியலாததாகிறது.மனித இருப்பு, அதன் காரணமாக உருவாகும் மனப்பெயர்வுகள்,இயற்கைமீதான கரிசனம்,வாழ்வின் தற்செயலான தருணங்களின் ஆச்சரியம் என நவீன கவிதையில் தொடர்ந்து புழங்கும் அம்சங்களையே மூலப்பொருட்களாகத் திரட்டிக் கொண்டிருந்தாலும் அதன் விளைவுகள் புத்துயிர்க் கவிச்சையுடன் திகழ்கின்றன. கவிதையின் பிறவிக்குணம் இது. ஆனால் செல்வராஜியிடம்மேலோட்டமான பார்வையில் எளிமையும் சிக்கலுமில்லாததாகத் தோன்றுகிறது

மூன்று

இன்று தமிழ்க் கவிதை கிட்டத்தட்ட வெகுசன ஊடகமாகிவிட்டது.அதன் குறையும் நிறையும் கவிதைகளிலும் காணப்படுகின்றன. இந்த வார்த்தைச் சந்தையில் தனி அடையாளத்துடன் தெரிய கவிஞன் அரும்பாடு படவேண்டியிருக்கிறது.தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. கவிஞன் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது என்பது தான் வாழும் காலத்தையும் சூழலையும் நுட்பமான அறிந்து கொள்வதன் மூலமே நிகழ்கிறது என்று கருதுகிறேன். புதிய தலைமுறை கவிஞர்களுடன் இணைந்து நிற்கவும் இந்த நடவடிக்கை அவசியம்.

என்னுடையதல்லாத கவிதைகளைப் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி உண்டு.கொஞ்சம் சுயநலம் கலந்த மகிழ்ச்சி.காரணம் பிறருடைய கவிதைகளை வாசிக்கிற சந்தர்ப்பங்களில் நான் எங்கே இருக்கிறேன் என்று சோதனை செய்துகொள்ள முடிகிறது. தவிர நான் இயங்கும் மொழியின் நிகழ்கால அடையாளங்களை இனங்காண்பது எனக்கு எளிதாகவும் இருக்கிறது.இந்தமகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருகிற சில கவிஞர்களில் செல்வராஜ் ஜெகதீசனும் ஒருவர்.

'நவீனக்கவிதைகள் மிக இறுக்கமானதொரு மொழிக் கட்டமைப்பில் எழுதப்படும் வேளையில் ஜெகதீசனின் கவிமொழி மிக எளிதாய், புதியதாய் இருக்கிறது. அழகியல் தொனி சற்று தூக்கலாகவே தெரியும் இத்தொகுதியில் கவிதைக்கூறுகள் சற்றே இளக்கமாகிக் கதையம்சம் மிக்கதாகவோ அல்லது கவிதைநடையில் எழுதப்பட்ட நட்சத்திரங்களாகவோ ஆகிவிட்டிருக்கிறது. புதுக்கவிதையின் பிதாமகனான எஸ்ரா பவுண்ட் வார்த்தைகளை நாம் சற்றெ பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

>எழுதும்பொருள் எதுவாயினும் நேர்முகமாய் அணுக வேண்டும்.

>கவிதையின் வெளிப்பாட்டுக்கும் பயன்படாத எந்த ஒரு சொல்லையும் சேர்க்கக்கூடாது.

>சொற்றொடர்களில் இசை தழுவிய தொடர்ச்சி அமைய வேண்டும்.

கவிதை பிரக்ஞையுடன் கூடியது.புதுக் கவிதையில் உரைநடையின் முதிர்ச்சியிருக்கிறது. எல்லாம் சரி.அப்போது அது உரைநடை போலத் தானே ?அது தானில்லை.உரைநடை கூட்டல் கணக்கு ,கவிதை பெருக்கல் கணக்கு. ஏன் அப்படி ? கவிதை என்று பெயர் வைத்து விட்டதாலா ? அது அப்படித் தான்.கவிதையின் ஈவு பல்லாயிரங்கோடி.கவிதை உரைநடை போல் தட்டை யில்லை. தகட்டுப் புழு இல்லை. நாடாப்புழு இல்லை.உரைநடை அசைவு வேறு. கவிதையின் இயங்கு தளம் வேறு. உரை நடை கூட்டுகிறது கவிதை பெருக்குகிறது என்று அதனால் தான் சொன்னார்கள்.

எங்கோ படித்ததாக ஞாபகம்

இந்தக் கடலில்

எந்தக்குபேர மூலையிலும்

கிடைக்காத புழுக்கள்

வேளை தவறாமல்

தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்

புயல்களும் இல்லை.

திமிங்கிலங்களை

அவதாரக்கடவுள்

காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்

ஒன்றுமட்டும்

புரியாத புதிராய் இருக்கிறது

உலகத்தை உதடு குவியப்புணர்கையில்

இஃதென்ன இடையில்

அப்புறம் ஒன்று

எங்கே எங்கள்

முள்ளுச்சூரியன்களும் கள்ளுப்பிறைகளும்.

முற்றிலும் புதிதாக,எளிதாகக் கருவை அமைத்து,யாரும் அதிகம் கையாண்டிராத வார்த்தைகளைக் கொண்டு வடிவமைத்து நடப்பியலுக்கு மிக அணுக்கமான விவரங்களைத் துணைக் கருவில் நீட்டித்து கவிதையாக்கம் உருப்பெறுகிறது.அதை போல

செல்வராஜும் ஒரு கவிதை செய்திருக்கிறார்.

நாற்காலிகள்.

நெரிசல் மிகுந்த நகரச் சூழ்நிலையில் தாக்குதல் மறந்து போனோம்.பகைவர் யார் நண்பர் யார் என்று தெரியாத நெரிசல் இங்கு.போர்க்குணம் உறைந்து கையாலாகாத்தனம் வலுத்த நடை முறை யுகத்தில் தான் மிருகத்தைக் கட்டிப் போட ஆரம்பித்தோம். கட்டிப்போட்டுப் போஷிக்கும் மிருகத்தைக் கருவாக்கி 'நன்றி ' சொல்கிற சீமைப்பழக்கம்,பஸ் பிடிக்கும்,சோடா உடைக்கும்,டாக்ஸி பிடிக்கும்,காட்சிசாலைக்கு விடுக்கும்,நகர்ப்புறச்சூழலை உள்ளடக்கி தன்னிடமிருந்து எப்போதும் விலகாமல் கூடவே இருக்கிற, தன்னை நெருக்கடிக்குள்ளாக்குகிற ஏதோ ஒன்றைப் படிமமாக்கினார். பிரம்மராஜன்.

'சொல்லில் கிடைத்த சங்கிலியைக்

கழுத்தில் கட்டி

இழுத்துக் கொண்டலைந்தேன் அம்மிருகத்தை '.

பற்றாக்குறைகளும் தடைகளும் நவீன யுகத்தின் தவிர்க்க இயலாத துண்டுகள்.எனவே நம் உடமைகளை அணுக்கங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்கிற பொறுப்பு நமக்கு ஏற்படுகிறது.அவ்வகையில் சங்கிலி போடுவதே நாகரிக உலகத்தின் அதி நவீன அம்ஸம்.

இன்னொரு சைக்கிள் ஓட்டியும்

பின்னொரு சிறுவனும்

கவிதை தானாகவே முக்கியப்படும். அதனால் தான் அதிகப் படி கவனத்தை ஒரு சார்புக்குத் தருவது கேலிக்கிடமாகிறது. யாருக்கும் அங்கி நுனியைப் பின்னாலிருந்து தூக்கிக் கொடுத்தோ குடை பிடித்தோ சுயலாபம் பெற விரும்புபவர்கள் கவிஞர்களையும் கவிதையையும் ஒருங்கே அழிக்கிறார்கள். அவரவருக்கான வாசிப்பை உகந்து தருவது தான் கவிஞர்களைக் கெளரவிக்கும் ஒரே வழி.

எளிமையான வார்த்தைகளைத் தனக்கே உரிய ஆளுமையுடன் இவர் கையாள்கிறார். சொல்வளம் அப்படியே சௌகரியமாக உட்கார்ந்திருக்கிறது. கவிதையின் அழகு எங்கிருந்து வருகிறது எனப் பார்க்கும்போது உள்ளடக்கத்திலிருந்து வருகிறதா? உத்திமுறையில் இருந்து வருகிறதா? உருவகமாக வருகிறதா? படிமம் குறியீடு ஓசைநயம் வார்த்தைப்பின்னல் இவற்றிலிருந்துமா? உண்மைநிலை யாதெனில் கவிஞனின் அடிமனதின் அனுபவச் செழுமையின் சத்திய வெளி;ப்பாடாகவே செல்வராஜின் கவிதைகள் வெளிவருகின்றன. அவரின் இலட்சிய வேட்கை தென்படுகிறது. இவரது கவிதைகள் அகன்று விழிக்கின்றன. இவரது ஆன்மா துடிப்பதைப் பார்க்கலாம். இலட்சியத் துடிப்போடு வாழ்கின்ற இவரது கவிதைகளை வரலாற்று ஆசிரியர்கள் தேடி எடுப்பது உறுதி. இவரது கவிதையில் பழைய இலக்கண காவலாளிகள் இல்லை. சம்பிரதாயங்கள் என்னும் சுற்றுவேலிகள் இல்லை. புதிய நோக்குக் கொண்டவையாக இருக்கின்றன. மக்களின் சிந்தனையில் கலந்து எம் தற்கால வாழ்வுப் போக்கைப் பதிவு செய்வனவாக அமைந்துள்ளன.

இந்த இரண்டு தொகுதிகளின் பிரதிகளுக்குமிடையில் ஜெகதீசனின் கவிதைமொழியில் நிறைய மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. சொல்முறை, உணர்முறை, அவருடைய பார்வை, கருத்து, மொழி எல்லாவற்றிலும் மாற்றங்களும் முதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தொடர் பயணத்தை நிகழ்த்தும் படைப்பாளிகளிடத்தில் எப்போதும் இத்தகைய படிமலர்;ச்சியையும் முதிர்ச்சியையும் காணலாம். முதல் தொகுதியில் அவர் செய்கிற பிரகடனங்களை இரண்டாவது தொகுதியில் செய்யவில்லை. பதிலாக அவர் அருகிருந்தும் உள்ளிருந்தும் பேசுவதைப்போல தோன்றும் கவியாக்க முறைமையைக்கையாள்கிறார்.

எல்லாருக்கும் தெரியும் என்னை:

மின்னல் தேவனின் மகன் நான்.

இடித் தேவியின் மருமகன்.

மேலான சொர்க்கத்தில்

வசிப்பபன்தான் நான்.

கயிறு அறுந்த காரணத்தால்

மனிதனாக இருக்கிறேன்

* வியட்நாமிய நாடோடிப் பாடல்

அந்தரங்கம் –முதல் தொகுதி

இன்னபிறவும்-இரண்டாம் தொகுதி

அகரம் வெளியீடுகள்

Tuesday, March 02, 2010

திராவிடம் என்றொரு கருத்தியல்வாதம்


திராவிடம் என்பது இன்று மொழிகளை, இனத்தை, கட்சிகளைக் குறிக்கும் ஓர் பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது. ஆனால் அதை ஓர் பண்புத் தொகையாகவே நான் பார்க்கிறேன். இந்திய அரசியலில் அது சில பண்புகளை, இலட்சியங்களைக் குறித்த சொல்.

மையப்படுததப்பட்ட அரசியல் அதிகாரம், சுய அடையாளங்களைத் துறந்து ஓர் பொது அடையாளத்தை மேற்கொள்ள வற்புறுத்தும் கலாசார ஆதிக்கம் (hegemony), பிறப்பின் அடிப்படையில் ஒருவருக்கு சிறப்புகள் ஏற்படுகிறது, அதனால் அவர் அரசு, கல்வி, வழிபாடு ஆகியவற்றில் முன்னுரிமை பெற்றவராகிறார் என்ற கருத்தாக்கம் ஆகியவற்றை நிராகரித்து, அனைவருக்கும் சம உரிமை, சமநீதி கோரும் சமத்துவம், ஆகிய சிந்தனைகளின் அடையாளமாக உருவானது திராவிடம் என்ற கருத்தியல். சுருக்கமாச் சொன்னால் அது மேட்டுக்குடி மனோபாவத்திற்கு எதிரான, நிறுவனமயமான அதிகாரத்திற்கு எதிரான, சமூகத்தில் நிலவிவரும் மரபுகளுக்கெதிரான (anti-elite, anti establishment, anti status quo) ஓர் முற்போக்குச் சிந்தனை

தமிழர்களுக்கான தனி அடையாளம், அந்த அடையாளத்தின் பேரில் மரியாதை ஆகியவற்றிற்கான விழைவு, இவற்றால் உருவான சித்தாந்தம் அது

தமிழ், தமிழ்ச் சமூகம் என்பதைக் குறிக்க அரசியல் இயக்கங்களால் திராவிடம் என்ற சொல் நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்றாலும், அது தமிழ்ச் சொல் அல்ல. ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஒரு சம்ஸ்கிருத நூலில் (தந்திரவார்த்திகா) தமிழைக் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சொல்லை பயனுக்குக் கொண்டு வந்தவர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியார். திருநெல்வேலி பிஷப்பாகப் பணியாற்றியவர். திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் என கமில் ஸ்வலபில் போனறவர்கள் கருதுகிறார்கள் என்றாலும், கால்டுவெல் தனது ஆராய்ச்சியின் மூலம் ஆணித்தரமாக நிறுவிய ஒரு கருத்துத் (தமிழ் என்ற திராவிடமொழி, பல இந்திய மொழிகளைப் போல சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியது அல்ல, சம்ஸ்கிருதத்தைச் சார்ந்திராமல் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டது, மிகத் தொன்மையானது)தான் திராவிடம் என்ற அரசியல் கருத்தாக்கத்திற்கு ஆணிவேராகத் திகழ்ந்து வருகிறது.

வட இந்திய மொழிகள் சம்ஸ்கிருத்தின் வேரொற்றிக் கிளைத்தவை என்பதால் அந்த மொழி பேசும் வட இந்தியர்களின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்ப்பது, இந்திய தேசியம் என்ற கருத்தியல் சுய அடையாளங்களுக்கு மாற்றாக ஓர் பொது அடையாளத்தை வற்புறுத்துவதால் அந்தக் கருத்தியலை எதிர்ப்பது, வேதங்கள் சமஸ்கிருதத்தைக் கொண்டு எழுதப்பட்டிருப்பதால் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதிக மரபை எதிர்ப்பது, வேதத்தையும் சமஸ்கிருத்தையும் ஆராதிக்கும் பிராமணர்களை எதிர்ப்பது, வேதத்தின் ஒரு அங்கமான புருஷ சுக்தம் (ரிக் வேதத்தின் 10 மண்டலத்தில் 90வது சுக்தம்) பிறப்பின் அடிப்படையில் ஜாதி பேதங்களை நியாயப்படுத்துவதால் வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பது என்பவை திராவிடம் என்ற கருத்தியலின் அடிப்படைகளாக இருந்தன. இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு ஆகியவை அதன் சாரம்.

காங்கிரஸ் கட்சி வட இந்தியத் தலைவர்களின் செல்வாக்கிலும், தமிழ்நாட்டில் அது ராஜாஜி என்ற பிராமணரின் பிடியிலும் சிக்குண்ட காலத்தில், காங்கிரசிலிருந்து வெளியேறி அதை எதிர்க்க முற்பட்ட பெரியாருக்கு இந்தக் கருத்தியல் ஏதுவாக இருந்தது. ஆனால் வாக்குகளைச் சார்ந்தியங்கும் அரசியலில் இந்தக் கருத்தியலைக் கொண்டு அவரால் பெரும் தாக்கததை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் இதைக் கொண்டு சமூகத்தில் அவர் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் கணிசமானவையும், முக்கியமானவையும் மட்டுமல்ல, நிலைத்த தன்மையைக் கொண்டவையும் கூட. அவை தமிழர்களின் அடையாளத்தையும் (identity) சுயமரியாதையையும் நிறுவின.

ஆனால் வாக்குகளைக் கோரி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பெறும் நாடாளுமன்ற அரசியல் முறையை ஏற்று, சமூக இயக்கம் என்ற நிலையிலிருந்து மாறி அரசியல் கட்சிகளாகத் திராவிட இயக்கங்கள் செயல்படத் துவங்கியபோது, திராவிடம் என்ற சித்தாந்தம் நலிவடையத் தொடங்கியது..

மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் என்பதற்கு மாற்றாகத் தோன்றிய தனிநாடுக் கொள்கை கைவிடப்பட்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற கோஷமாக மாறி இன்று மத்தியில் கூட்டணி அரசில் பங்கேற்பதுதான் நடைமுறை சாத்தியமான அணுகுமுறை என்றாகிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்த போது இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு இருந்த் அதிகாரங்களில் சில (உதாரணம் கல்வி) மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசும் அதிகாரம் செலுத்த வகைசெய்யும் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது திராவிட அரசியல் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதுதான் நிகழ்ந்தது. இது வரை மாநிலங்களின் கையில் இருந்த விற்பனை வரி, மதிப்புக் கூட்டப்பட்ட வரியாக(VAT) மாறியதும் திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில்தான். குறைந்தபட்சம் கட்சிக்குள் கூட அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லை என்பதை திமுக அதிமுக ஆகிய கட்சிகளில் பார்க்கலாம். பரவலாக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல், ஒரு தனி நபரையோ, அல்லது அவரது குடும்பத்தினரையோ அச்சாகக் கொண்டு அவை மையப்படுத்தப்பட்டிருக்கின்றன.

வடவர் எதிர்ப்பு என்பது நேருவின் மகளே வா, நிலையான ஆட்சி தா என்று வட இந்தியர் ஒருவரின் தலைமைக்கு பகிரங்க அழைப்பு விடுத்த அரசியல் முழக்கத்தின் மூலம் சமரசத்திற்குள்ளானது. டால்மியா புரம் என ஒரு வட இந்தியரின் பெயரை தமிழ்நாட்டிலுள்ள கிராமம் ஒன்றிற்குச் சூட்டுவதை எதிர்த்துத் தண்டவாளத்தில் தலைவைக்கத் துணிந்த காலங்கள் பழங்கதையாகி, இன்று மகேந்திராசிட்டிகள் உருவாகிவிட்டன. நெய்வேலியில், தமிழ் மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்படும் நிலக்கரிக்கு மத்திய அரசு ராயல்டி வழங்க வேண்டும் எனப் போராடிப் பெற்றது ஒரு காலம். டாடாக்கள் டைடானியம் ஆக்சைட் ஆலை நிறுவ அரசே முன்னின்று நிலம் கையகப்படுத்திக் கொடுப்பதுதான் இன்றைய நிஜம்.

இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக ஆங்கில மோகத்திற்க இட்டுச் சென்றுவிட்டதையும் பார்க்கிறோம். பம்பாயும், கல்கத்தாவும், டிரிவாண்ட்ரமும், பெங்களூரும் பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்பே மதறாஸ் சென்னை ஆகிவிட்டது.ஆனால் திமுக தலைவரின் குடும்பத்தினர் அவரையும் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு தொலைக்காட்சி நிறுவனம் துவங்கியபோது அது சண்டிவியாகத்தான் மலர்ந்தது.

பிராமணப் பெண்ணாகப் பிறந்த ஒருவரை, நான் பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்த ஒருவரைத் தலைவியாக ஏற்றுக் கொண்டுவிட்டது ஒரு திராவிடக் கட்சி. இன்னொரு புறம், பிறப்பினால் ஒருவருக்குச் சிறப்புக்கள் சேர்வதில்லை என்று வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துப் போரிட்டவர்கள், அரசியல் அனுபவம் இல்லாத் போதும் தங்கள் மகளையும், பேரனையும், மகனையும் கொல்லைப்புற வழியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ற சித்தாந்தம் அது தோன்றிய போதிருந்த வீரியத்தை காலப்போக்கில் வாக்கு வாங்கும் அரசியலின் நிர்பந்தங்களுக்குப் பணிந்து நீர்த்துவிட்டது.காந்தியம், மார்க்சியம் போன்ற சித்தாந்தங்கள் அரசு செய்ய அதிகாரம் பெற்ற போது சந்தித்த திரிபுகளையும், சமரசங்களையும் திராவிடமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், திராவிடத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

உலகமயமாக்கல் என்பது நம் தோள்களில் ஏறிக் குந்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் முன்னெப்போதையும் விட அதிகாரப் பரவாலாக்கல், சுய அடையாளங்களைப் பேணுதல், புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் உரிமைகளை மீட்டுத் தருதல் ஆகியவற்றிற்கு அதிகம் தேவை இருக்கிறது அதாவது திராவிடம் தன் வேர்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் திராவிடத்தின் எதிர்காலம் அது தன் கடந்த காலத்திற்குத் திரும்புவதைப் பொறுத்திருக்கிறது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை குடும்பத்தார் வசம் ஒப்படைப்பதன் பொருட்டு, ‘எப்படியாவது’ தக்கவைத்துக் கொள்வது என்ற ஆசைகள் அதனை ஓர் வீர்யமிக்க சமுக இயக்கமாகச் செயல்பட அனுமதிக்குமா என்பது பெரிய கேள்விக் குறி. இதற்கு விடைகாண்பதிலேயே அதன் எதிர்காலம் ம்றைந்திருக்கிறது.

பின்மார்க்சியம்,பின்மார்க்சியர்கள்


எமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக வடிவமைக்கவேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். மரபான மார்க்சியர்களைப் பின்பற்றுவதன் மூலம் நாம் சரியான இடத்தை நோக்கிப் பயணிக்க முடியாத அதே வேளை மார்க்சியர்களுடன் உரையாடாமலோ அல்லது மார்க்சியர்களது நிலைப்பாடுகளை முற்றாகப் புறந்தள்ளியோ ஒடுக்குமுறைக்கெதிரான நமது தலைமுறைக்காகப் புதிய சித்திரத்தைக் கண்டடைந்துவிட முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. மராபார்ந்த மார்க்சியர்களுடனான தீவிர உரையாடல்கள் நிகழ்த்தப்படும் போது மட்டுமே இவ்விடயத்தைச் சாத்தியப்படுத்த முடியும். மேற்கில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் பரவலாக அறியப்படும் பின்மார்க்சியம் என்னும் வகைமாதிரிக்குள் அடக்கப்படும் கருத்தியல்கள் எமது சூழலுக்குப் போதுமானவை அல்ல. அதை உள்வாங்கியவாறு நமது சமூகவியல் பரிமாணங்களை அறிந்து நமக்கான புதிய சித்திரத்தை உருவாக்க வேண்டியுள்ளதே எமக்கான சவாலாகும். ஏராளமான அறிவுத்துறைகளை உள்வாங்கியே நாம் ஒடுக்குமுறைக்கெதிரான சித்திரத்தையும் அதன் செயற்பாடு சார்ந்த நடைமுறையையும் கண்டுகொள்ள வேண்டியுள்ளது.

நவ தாராளவாதச் சமூக உருவாக்கத்தின் பின்னர் அதற்கான மாற்றீட்டைப் பேசுவோர் பின்மார்க்சியர்கள் என்று பரவலாக அழைக்கப்படும் போதிலும் இங்கே இனிமேல் நான் 'பின்மார்க்சியம்' என்னும் பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதை உள்வாங்கி இடதுசாரித்துவம் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதையே பெரிதும் விரும்புகின்றேன். இடதுசாரித்துவம் என்பது பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்கெதிரான கருத்தியல்களை உள்வாங்கியவாறு வளர்ச்சி பெற்றது. இடதுசாரித்துவத்தைத் தனியே ஒருவகைக் கருத்தியலுக்குள் வைத்து பார்க்க முடியாதது. ஒடுக்குமுறைக்கெதிரான சகல கருத்தியல்களை ஒருங்கிணைப்பதற்காக 'இடதுசாரித்துவம்' என்னும் சொல்லைப் பயன்படுத்த முடியும். பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து மார்க்ஸ் இல் தொடங்கி லெனின், மாவோ வரையான அதன் பாதையில் இன்றைய பிரசண்ட, சாவோஸ் வரை இடதுசாரித்துவத்தின் பங்கு அளப்பரியது. அச்சொல்லின் வீச்சு இன்னும் மனிதகுல வரலாறு நெடுகிலும் செல்லப்போவது மாத்திரமல்லாது, பிரஞ்சுப் புரட்சிக்கு முன்னரான காலப்பகுதிக்குக் கூட அதை நீட்டித்துப் பொருள்கொள்ள முடியும். இடதுசாரித்துவமானது மார்க்சியம், லெனினியம், மாவோயிசம் போன்ற ஒடுக்குமுறைக்கு எதிரான சகல கருத்தியல்களையும் உள்ளடக்கக்கூடிய நெகிழ்ச்சியான சொற்பிரயோகமாகும். இடதுசாரித்துவமே சமத்துவம் நோக்கிய மனிதகுல வரலாற்றுப் பயணத்தில் எப்போதும் உடனிருந்தது. இன்றைய இடதுசாரித்துவக் கருத்தியல் வளர்ச்சியில் மார்க்சியத்தின் பங்கு அதிகமுக்கியத்துவம் பெற்றாலும் இடதுசாரித்துவம் வேறுபட்ட ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியல்களையும் உள்வாங்கியது என்பதையே வலியுறுத்தவேண்டியுள்ளது.

ஏர்னஸ்ட் லக்லாவ் என்ற பின்மார்க்சியர் கூறுவது போன்று உற்பத்தி உறவுகளூடு சமூகத்தை அணுகுவதும் அதன் சமத்துவத்தை வலியுறுத்துவதென்பதும் இன்றைய உலகில் மிகவும் சிக்கலாகிவிட்டது. சமத்துவத்தை பொருளாதார மையப்படுத்தி அணுகும் முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் மார்க்சியம் மனிதகுலத்திற்கு கிடைக்கச்செய்த சாதகமான விளைவுகளைப் பட்டியல்படுத்த வேண்டிய அவசியமில்லை. லக்லாவ் கூறுவது போன்று மார்க்சியம் என்னும் சம்பவம் நமக்குக் கொடுத்திருக்கும் ஜனநாயமாகும் செயற்பாட்டை அதன் பொருளாதார மைய அணுமுறையைத் தாண்டி அகலிக்க வேண்டியதே நமது தலைமுறைக்கான சவாலாகும். இதையே நான் இடதுசாரித்துவம் என்னும் நெகிழ்ச்சியான கருத்தியலுக்குள் உள்ளடக்கிப் பார்க்க முயற்சிக்கின்றேன். பல உரையாடல்களிலும் வலியுறுத்திய 'சிறுபான்மை அரசியல்' என்னும் கருத்தியலையும் வேறுசில ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியல்களையும் 'இடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம்' என்னும் கருத்தியலுக்குள் உள்வாங்க முயற்சிக்கின்றேன். பல்வேறுபட்ட பின்மார்க்சியர்களது கருத்தியல் நிலைப்பாடுகள் எனது கருத்தியலில் தாக்கம் செலுத்துவதைத் தவிர்க்க முடியாத போதிலும் எமது தலைமுறை எதிர்கொள்ளும் உலகச்சூழலுக்குள் மாத்திரம் முடங்காமல் மூன்றாமுலக அரசியல் சூழல் மற்றும் நாம் வாழும் சமூகத்தின் கலாச்சாரச் செல்நெறிகள் உள்வாங்கியதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும். இங்கே நாம் கிராம்சியையும் மாவோவையும் துணைக்கழைத்துக் கொள்ள முடியும்.

இடதுசாரித்துவத்தை பிரஞ்சு புரட்சிக் காலத்தின் முன் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்தியல்கள் சார்ந்து நீட்டிப்பதும், அதனை இன்றைய சூழல் வரை புதிய கருத்தமைவுகளுடன் உள்வாங்கிச் செழுமைப்படுத்துவதுமே எமக்குள்ள முக்கிய பணியாகும். இதுவே இடதுசாரித்துவத்தை எதிர்காலத்திலும் சகல ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியலாக - மக்கள் சார்பான அரசியலாக வளர்த்தெடுக்க உதவும். மார்க்சியத்தின் முதல் மீறல் லெனினால் நிகழ்த்தப்பட்டதாக லக்லாவ் கூறுகின்றார். பொருளாதார மையமான மார்க்சியக்கட்டமைப்பை அதிகம் அரசியல் சார்ந்ததாக மாற்றியமைத்தவர் லெனினே. இத்தொடர்ச்சிக்கு மாவோவின் பங்களிப்பு புதிய பார்வையைக் கொடுத்தது. உதாரணமாகக் கருத்தியல் தளத்தில் ழீன் போல் சர்த்தரின் தன்னிலைக்கும் அமைப்பாக்கத்திற்கும் இடையிலான தெரிவுகளுடன் கூடிய கருத்தியல் மார்க்சியத்தின் மீது புதிய பார்வையைக் கொடுத்தது. இச்சமபவங்கள் நடைபெற்ற காலங்களில் அவை மீறல்களாக அடையாளப்படுத்தப்பட்டு மரபான மார்க்சியர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மார்க்கியத்தை அகலித்ததாகக் கொள்ளப்பட்டன. இவ்வகையான அகலிப்புகளுடன் கூடிய கூட்டுக்கருத்தியலின் வளர்ச்சியையும் போராட்ட வடிவங்களையும் இடதுசாரித்துவம் என்னும் பொதுக்கருத்தியலூடாக உள்வாங்கி அதன் மக்கள் சார்பையும் மக்களை அண்மித்த நிலைப்பாட்டையும் உறுதிசெய்யவதே எமது தலைமுறைக்கான முக்கியபணியாகும்.

ஏகாதிபத்தியம் முதலாளியத்தின் முரண்பாடுகளைச் சிக்கலாக்கி, அவற்றைக் கூர்மைப்படுத்துகிறது. அது ஏகபோகத்திற்கும் தடையற்ற போட்டிக்கும் முடிச்சுப் போடுகிறது. ஆனால் அதனால் பரிவர்த்தனை, சந்தை, போட்டி, நெருக்கடிகள் முதலானவற்றைத் தவிர்க்க முடியாது. ஏகாதிபத்தியம் என்பது தன்முடிவை அணுகிவரும் முதலாளியம்” Lenin Collected Works. Vol – 24 p464

நூற்றாண்டுகள் கடந்தும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட லெனினின் மேற்போந்த கூற்று, அதன் அடிப்படையில் இக்காலத்திற்கும் பொருந்துகின்ற போதிலும் நடைமுறையில் அதன் சாத்தியமின்மையைக் காண்கின்றோம். முதலாளியம் தன்னை மாறுபடும் வெவ்வேறு வடிவங்களில் கடந்த காலங்களில் நிறுவியிருக்கின்றது. முதலாளியம் சார்பான, முக்கியமாகத் தேசிய அரசுகளுடைய நிழலில் அது தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றது. தேசிய அரசுகள் உதிர்வதற்கு மாறாக மேலும் வலுப்பட்டிருக்கின்றன.

இங்கே நான் மூன்று பகுதிகளாக மார்க்சியக் கருத்தியல் போக்குகளை நோக்க முனைகின்றேன். முதலாவது மார்க்சின் கருத்தியலின் தோற்றுவாய்க்கு முன்னதான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு. இரண்டாவதாக மார்க்சியக் கருத்தியலின் எழுச்சியும் சோவியத் யூனியனின் உடைவு வரையான அதன் அகலிப்புடன் கூடிய வளர்ச்சியும். மூன்றாவதாக சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிற்பாடான மார்க்சியம் தொடர்பான கருத்தியல் போக்குகள்.

முதலாளித்துவத்தின் முடிவை கார்ல்ஸ் மார்க்ஸ் எதிர்வுகூறியதில் நியாயமற்ற தன்மைகள் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிற்கு முந்தைய பொருளாதாரக் கட்டமைப்புக்கள் பற்றிய ஆய்வுகளை விரிவாகவே செய்திருந்தார். 1858 ஆம் ஆண்டளவில் மார்க்ஸ் எழுதிய Pre-Capitalist Economic Formations என்னும் நூலில் முதலாளியம் என்பது நீண்டகால வரலாற்றைக் கொண்ட பொதுவுடமைச் சமுதாயத்தின் மீது திணிக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். இம்முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பு என்பது பாட்டாளி வர்க்கத்தால் நிராகரிக்கப்படுமிடத்து அத்திணிப்பு நீண்டகாலத்திற்கு தொடரப்பட முடியாதது என்பது அவரது கணிப்பாக இருந்தது. மனிதகுலத்தின் ஆரம்ப காலக் குலச்சமுதாயம் பொதுவுடமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அச்சமூகம் காலப்போக்கில் மக்கள் தொகைப்பெருக்கம் மற்றும் போர்கள் காரணமாக மாற்றம்பெற்றது. அதில் இருந்து கூம்புவடிவ அதிகாரச் சமூக அமைப்புத் தோற்றம் பெற்றது. இச்சமூக அமைப்புப் படிப்படியாக மாற்றம் பெற்று அரசுகள் தோன்றின. இங்கே அடிமைமுறைகள் கொண்டுவரப்பட்டன. பின்னர் நிலப்பிரபுத்துவ சமூகம் உருவாகியது. இது நில உரிமை தொடர்பான முரணைக் கொண்டிருந்தது. அதன் பின்னர் குடியாட்சி முறை உருவாகியது. குலச்சமுதாய அமைப்பில் இருந்து குடியாட்சி சமூகம் வரையான சமூகக் கட்டமைப்புக்கள் மார்க்சால் விரிவாக ஆய்வுசெய்யப்பட்டிருந்ததன் காரணமாகவே அதன் பின்பான முதலாளித்துவச் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புத் தொடர்பான தீர்க்கமான கருத்துக்களை அவரால் தெரிவிக்க முடிந்தது. நூறாண்டுகள் கழிந்த நிலையில் மார்க்சின் முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்புத் தொடர்பான – அதன் எதிர்காலம் தொடர்பான – அதன் உதிர்வு தொடர்பான ஊகங்கள் பொய்த்துப் போயினும் முதலாளித்துவப் பொருளாதார சமூகக் கட்டமைப்பின் ‘உயிரணு’ அதே வடிவத்தில் காணப்படுகின்றமை ஆச்சரியமானதே.

இரண்டாவதான விடயம் மார்க்சியக் கருத்தியல் எழுச்சியில் இருந்து சோவியத் யூனியன் உடைவு வரையானது. எர்னஸ்ட் லக்லாவ் கூறியது போன்று லெனினே மார்க்சியம் தொடர்பான முதல் மீறலை நிகழ்த்தியவர். இக்காலப்பகுதியில் மார்க்சியம் தொடர்பாக ஒடுக்கப்பட்டவர்கள் சார்ந்து மார்க்சியக்கருத்தியல் பல்வேறு வழிகளில் வளர்த்தெடுக்கப்பட்டது. மார்க்சியத்தை முன்வைத்து தேசியவாதம் தொடர்பான கருத்தியலை லெனினும் அதன் பின்னர் ஸ்டாலினும் வளர்த்துச் சென்றார்கள். இன்னும் சோசலிசப் பெண்ணியம் தொடர்பாக வளர்ச்சிபெற்ற கருத்தியல்களையும் இவ்வகைமாதிரியில் வைத்துக் கூற முடியும். அவ்வாறே கருத்தியல் ரீதியாகக் கிராம்சி முன்வைத்த சூழல் தொடர்பான மேலாதிக்க தன்மை. ஒடுகப்பட்டோருக்கான எழுச்சி என்பது குறித்த சமூகத்தின் சகல சமூகவியல் பரிமாணங்களையும் உள்ளடக்கிய போராட்ட வடிவமாக இருப்பதென்பது முக்கியமானது என்பது சாரப்பட்ட கருத்துக்கள். இவற்றை இரண்டாம் வகைமாதிரியில் உள்ளடக்குகின்றேன்.

மூன்றாவதாகப் ‘பின்மார்க்சியம்’ என்னும் கருதுகோள் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிற்பட்ட மார்க்சியத்தின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளூடும் உளப்பகுப்பாய்வு, சமூகவியல் மற்றும் மானுடவியல் துறைகளின் கருத்தியல் எழுச்சிக்குப் பின்னரான சமூகம் தொடர்பான கேள்விகளூடும் இக்கருத்தியல் எழுச்சி பெறுகின்றது. முதலாளித்துவம் தனது வடிவத்தை வெகுவாக மாற்றிக் கொண்டுவிட்ட நிலையில் நாம் மார்க்ஸ் சொன்னதை அப்படியே பின்பற்றுவதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என்று கூறும் புதிய தரப்பினருக்கும் மரபார்ந்த மார்க்சியர்களுக்குமிடையிலான தீவிரமான உரையாடலின் விளைவாகக் கவனம் பெற்ற கருத்தியல் போக்கு இவ்வகைக்குள் வைத்து நோக்கப்படுகின்றது. வர்க்கம் மற்றும் பொருளாதார அடிப்படைகளை மையப்படுத்திய ஏற்கனவேயான போக்குகளின் போதாமையும் அவற்றை இதர அடையாளங்கள் அல்லது ஒடுக்குமுறைகள் சார்ந்து அகலிக்க வேண்டும் என்பது ‘பின்மார்க்சியர்கள்’ இனது வேண்டுகோளாக இருந்தது. பெண், இனம், தேசியம், பாலியல் சிறுபான்மை, அணு ஆயுத எதிர்ப்புக் கருத்தியல் மற்றும் சூழலியல் போன்ற புதிய அரசியல் வெளிப்பாடுகளை உள்வாங்க வேண்டும் என்பதும் ஏற்கனவேயான வர்க்க அடிப்படை என்பதை மாறுபட்ட முதலாளித்துவ வடிவத்திற்கு ஏற்றதாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்துக்களுமே முக்கியத்துவம் பெறுகின்றன.

மேற்கூறிய ‘மார்க்சியத்திற்கு முன்’, ‘மார்க்சியமும் அதன் தொடர்ச்சியும்’ மற்றும் ‘பின்மார்க்சியம்’ ஆகிய மூன்றுவகைமாதிரியின் போக்குகளில் இதன் ஒவ்வொரு கட்டத்தை நிராகரிப்பவர்களும் உள்ளனர். பின்மார்க்சியம் என்பது மார்க்சியமே இல்லை என்பது சிலரது கருத்தாக இருக்கின்றது. வேறுசிலர் சோசலிசப் பெண்ணியம் தொடர்பான நிராகரிப்புகளையும் இன்னும் சிலர் மாவோ தொடர்பான நிராகரிப்புக்களையும் மேற்கொள்கின்றனர். இப்பிளவுகளைக் கடந்தாக வேண்டிய கடப்பாடு இளைஞர்களுக்கு உண்டு. இம்முரண்பட்ட கருத்தியல்களின் பின்னால் அணிவகுக்காமல் மாறாக முரண்களைக் கடக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. அதனால் நாம் மார்க்சியத்தின் தொடர்ச்சிப் போக்கை ‘இடதுசாரித்துவம்’ என்னும் பொதுப்பெயரால் அழைக்க முடியும். இனிமேல் ‘இடதுசாரித்துவம்’ என்னும் பொதுப்பெயருடன் எமது கருத்தியலை வளர்த்தெடுக்க முயற்சிப்போம்.

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள்

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள் தத்துவத்தின் முடிவிலாப் பெருவெளியில் தடம் பதிக்கும் ஒரு சிந்தனையாளனின் பயணம் எப்ப...