Tuesday, August 31, 2010

மத அடிப்படைவாதம்,ஜனநாயகம்,பயங்கரவாதம்:அடிமைவாதத்தின் கோரமுகங்கள்



றியாத் மாநகரில் வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் குடியிருப்பு அது. சகல வசதிகளையும் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடங்களைச் சுற்றி நாற்புறமும் ஆளுயர மதில்கள். அங்கே வசிப்பர்கள் அனைவரும் அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிக சம்பளம் வாங்கும் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். சாதாரண மனிதர்கள் எவரும் அந்தக் குடியிருப்புப் பக்கம் செல்லமுடியாது. நேரம் இரவு 11.20 மணி. வரப்போகும் ஆபத்தை உணராத குடியிருப்பைப் பாதுகாக்கும் வாயிற்காவலர்கள், தம்மை நெருங்கிய அமெரிக்கத் தயாரிப்புக் காரைக் கண்டு அசட்டையாக இருந்தார்கள். திடீரெனக் காருக்குள் இருந்தவர்கள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். ஒரு நிமிடத்திற்குள் காவலரண் தாக்குதல் செய்பவர்களின் வசமானது. தொடர்ந்து நுளைவாயில் கதவு திறக்கப்பட்டது. இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த ட்ரக் வண்டியொன்று விசையுடன் ஓடிச்சென்று அடுக்குமாடிக் கட்டடமொன்றுடன் மோதியது. காதைச் செவிடாக்கும் பயங்கர வெடிச்சத்தம் மாநகரின் உறக்கத்தைக் கலைத்தது. இவ்வளவும் 15 நிமிடத்திற்குள் நடந்தேறின.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இந்தத் தாக்குதல் மேற்குலக நாட்டு பிரசைகளை நோக்கிக் குறிவைத்ததாகத் தோன்றும். இருப்பினும் இம்முறையும் சர்வதேசச் செய்தி ஊடகங்களால் ஒரு முக்கிய உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அமெரிக்கக் கம்பனிக்குக் குறிவைக்கப்பட்ட விடயம் பலருக்குத் தெரியாது. "வினெல் கோப்ரேஷன்" என்ற சவூதி அரேபிய இராணுவத்தைப் பலப்படுத்த வந்துள்ள தனியார் வர்த்தகப் பாதுகாப்பு நிறுவனம்தான் தாக்குதல்காரரின் இலக்கு.

"வினெல் கோப்ரேஷன்" தொடக்கத்தில் அமெரிக்க லொஸ் ஏஞ்ஜலஸ் பகுதியில் அணைகட்டும் பணிகளில் ஈடுபட்டது. பின்னர் தனது வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கோடு இராணுவ வர்த்தகத்தில் இறங்கிவிட்டது. சீனாவின் உள்நாட்டுப்போரில் சியாங்கை சேக்கின் பாஸிச இராணுவத்திற்கு ஆயுதத் தளபாட உதவி வழங்கியது. வியட்னாம் போரின்போது இராணுவ நோக்கத்திற்கான அமெரிக்க இராணுவத்திற்கு விமான நிலையங்களைக் கட்டிக்கொடுத்தது. கிரெனெடாவில் சி.ஐ.ஏ உடன் சேர்ந்து கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட இடதுசாரிப் பிரதமரின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தது. தொண்ணூறுகளில் மிகப்பெரிய பாதுகாப்பு வர்த்தக நிறுவனமான "கார்லைல் குறூப்", "வினெல் கோப்ரேஷன்" ஐ வாங்கியது. தாய் நிறுவனமான கார்லைல் குறூப்பின் தலைவர் பிராங் கார்லூச்சி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ரீகனின் செயலாளராகப் பதவி வகித்தவர். இன்றைய ஜனாதிபதி புஷ் ன் குடும்பத்திற்கும் இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

"வினெல் கோப்ரேஷன்" சவூதி அரேபியாவில் என்ன செய்கிறது ? இந்த நிறுவனம் சவூதி அரேபிய அரசுடன் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. வேலை ? எண்ணைக் கிணறுகளபை; பாதுகாப்பது, சவூதி அரேபிய இராணுவத்திற்குப் பயிற்சி ஆலோசளை வழங்குவது, மன்னர் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்குவது... நேரடியாகச் சொன்னால், இக் கம்பெனி ஒரு கூலிப்படையாக சவூதி அரேபியாவில் தொழிற்படுகிறது. தனது சொந்தப் பிரஜைகளை நம்பாத சவூதி மன்னர் கடந்த இருபத்தைந்து வருடங்களாக வினெலை தனது நம்பிக்கைக்குரிய பாதுகாப்புப் படையாக வைத்துக்கொண்டுள்ளார். 1979 ம் ஆண்டு (ஈரானால் தூண்டப்பட்ட) கிளர்ச்சியாளர்கள், மெக்காவில் வருடாந்தம் இடம்பெறும் புனித யாத்திரையைப் பயன்படுத்தி, மெக்கா பெரிய பள்ளிவாசலை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மன்னரின் உத்தரவின்பேரில் கலகத்தை அடக்க வினெல் கூலிப்படை மெக்கா சென்றது. ஆயிரக்கணக்கான கலகக்காரரை கொன்று குவித்தது. இந்தச் சம்பவம் அன்று உலக நாடுகளின் கண்களை, காதுகளை எட்டாவண்ணம் மறைக்கப்பட்டது. ";இன்னொரு ஈரான்" உருவாவதைத் தடுப்பது முக்கியம் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரீகன் படுகொலைகளை நியாயப்படுத்தினார்.

ஈரான் என்னதான் மத அடிப்படைவாத அரசாக இருந்தபோதும், சவூதி அரேபியாவின் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத ஆட்சியின் தீவிரத் தன்மையளவிற்கு இல்லை. விமான நிலையச் சுங்கப்பரிசோதனையின் போது, சாதாரண சினிமாச் சஞ்சிகையின், கவர்ச்சி நடிகைகளின் படங்கள் மீது கறுப்பு வண்ணம் பூசப்படும், பிற மதத்தவர்கள் தமது வீட்டில் கூட தெய்வ உருவப்படங்களை வைத்திருப்பதற்குத் தடை, பெண்கள் வாகனம் ஓடத்தடை, பேரூந்து வண்டிகளில் பெண்களுக்கெனப் பின்புறத்தில் ஒதுக்கப்பட்ட தனியான இடங்கள், பூங்காக்களில் ஆண்களுக்கு மட்டும் அல்லது குடும்பங்களுக்கு மட்டும் என வேறுபாடுகள் கொண்ட இட ஒதுக்கீடு, பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட உயர்கல்வியும் , வேலைவாய்ப்பும், நாடுமுழுவதிலும் எந்த இடத்திலும் சினிமா இல்லை, மதுபானத் தடை, சட்டவிரோதமாக மதுதயாரிப்போரின் சிறையடைப்பு, களவுக்குக் கைவெட்டுதல், கள்ள உறவு வைத்த பெண்களைச் சந்தியில் வைத்துக் கல்லால் எறிந்து கொல்லுதல் போன்றவையெல்லாம் சவூதி அரேபியாவின் சாதாரண விடயங்கள். இந்நாடு எத்தனை தூரம் மத அடிப்படைவாதத்தில் ஊறியுள்ளதென்பதற்கான சில சான்றுகள் இவை.

சவூதி அரேபியாவில் "ஜனநாயகம்" , "சுதந்திரம்" போன்ற சொற்களைப் பாவிப்பதே குற்றம் என்று சொல்லுமளவிற்குச் சர்வாதிகார ஆட்சி நிலவுகிறது. மன்னர் குடும்பம்தான் ஜனாதிபதி, மந்திரிகள், பாராளுமன்றம், அரசாங்க அதிகாரிகள் எல்லாம். (மன்னரின் நூற்றுக்கணக்கான மனைவிமாருக்குப் பிறந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் போதும் முழு நாட்டையும் நிர்வகிக்க). சாதாரண குடிமக்கள் உழைத்துச் சாப்பிடும் வேளை, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சும்மாவிருக்க அரசாங்கம் பணம் கொடுக்கிறது. ஈராக்கில் சதாம் கட்டிய ஒரு டசின் மாளிகைகளைப்பற்றி உலக நாட்டுப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளின. ஆனால், சவூதி மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான இருபதிற்கும் குறையாத ஆடம்பர மாளிகைகள் பற்றி யாரும் கதைப்பதில்லை. முன்னாள் மன்னர் பஹ்த் கடைசியாக ஸ்பெயினுக்கு உல்லாசப் பிரயாணம் போனபோது தன்னோடு 50 பென்ஸ் கார்களையும் 350 சேவகர்களையும் எடுத்துச்சென்றார்.

இவ்வளவிருந்தும் சவூதி அரேபியாவை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை ஏன் எந்தவொரு செய்தி ஊடகமும் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத, சர்வாதிகார ஆட்சியாளர்களைப்பற்றி அறிவிப்பதில்லை? எல்லாம் சவூதி அரேபியா மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியென்ற காரணத்தால்தான். பெரும்பாலான சவூதி அரேபியாவின் இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. அதேபோல பெருமளவு எண்ணை ஏற்றுமதியாகுவதும் அமெரிக்காவிற்குத்தான். (சவூதி அரேபியா உலகிலேயே முதலாவது எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடு). மத்திய கிழக்கில் பெருமளவு அமெரிக்க ஆயுதங்களை, யுத்த விமானங்களை சவூதி அரேபியா வாங்கிக் குவித்து வருகின்றது. மலிவு விலையில் எண்ணை வாங்கும் அமெரிக்கா, பின்னர் ஆயுத விற்பனை மூலம் "பெற்றோலிய டொலர்களை" திரும்பப் பெற்றுக்கொள்கிறது.

1991 ம் ஆண்டு வளைகுடாப் போர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. யுத்தத்திற்கான செலவில் கணிசமான பகுதியை சவூதி அரேபியா பொறுப்பெடுக்கவேண்டுமெனக் கூறியது அமெரிக்கா. மில்லியன் டொலர்களை விழுங்கிய போர்ச் செலவுகள் சவூதிப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே எழுபதுகளின் மத்தியில் உருவான உலக பொருளாதாரப் பின்னடைவு வேறு சேர்ந்துகொண்டது. இதுவும் போதாதென்று (மேற்குலக நாடுகளால் வற்புறுத்தப்பட்ட) எண்ணை விலையிறக்கம் ஏற்றுமதி வருமானத்தைக் குறைத்தது. விளைவு ? வேலைவாய்ப்புகள் குறைந்தன, மாதாந்த வருமானம் குறைந்தது, சலுகைகள் நிறுத்தப்பட்டன. 1980 ல் ஒரு தனிநபரின் சராசரி வருட வருமானம் 28000 டொலர்களாக இருந்தது. இது அன்றைய அமெரிக்கரின் வருமானத்திற்குச் சமமானது. இன்று சவூதி அரேபிய தனிநபர் வருமானம் 7230 டொலர்களாகக் குறைந்துவிட்டது. இதேநேரம் அமெரிக்காவில் இவ்வருமானம் 34100 டொலர்களாக உயர்ந்துவிட்டது. விரைவான சனத்தொகைப் பெருக்கமும் பெருநகரங்களை நோக்கிய இடப்பெயர்வும் நிலைமையை மோசமடைய வைத்தது. இன்று சவூதி அரேபிய அரசாங்கம் 55 பில்லியன் டொலர்களுக்குக் கடனாளி என்றால் நம்புவது கடினமாகத்தானிருக்கும்.

சவூதி அரேபியாவில் வறுமை என்பது சில வருடங்களுக்கு முன்பு கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கமுடியாத விடயம். அங்கே வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் தொகை 20 வீதமாக இருக்கலாம் எனப் புகலிடத்தில் அரசியல் நடாத்தும் எதிர்க்கட்சி ஒன்று தெரிவித்தது. தலைநகரம் றியாத்திலும், ஜித்தாவிலும் சில பகுதிகள் ஏழைகள் வாழும் சேரிகளாகக் காட்சியளிக்கின்றன. திருட்டு, போதைப்பொருட்பாவனை என இன்னபிற குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. தெருவோரங்களில் பிச்சையெடுக்கும் பெண்களைக் காண்பது சாதாரணமாகிவிட்டது. இருப்பினும் குறிப்பிட்ட சேரிப்பகுதிகளினுள் வெளியிடத்து ஆட்கள் போவது இலகுவானதல்ல. நிலைமையைப் பார்க்கப்போன பத்திரிளையாளர்களைத் தடுத்து பொலிஸ் திருப்பியனுப்பியுள்ளது. உதவி நிறுவனத்தின் சார்பிலும் யாரும் அங்கு செல்லமுடியாது.

பல வருடங்களுக்கு முன்பு பிற அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியதால் பிரஜா உரிமை பெற்றவர்களின் பிள்ளைகள், விவாகரத்துப் பெற்ற அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தொழிற்தேர்ச்சி பெறாத சவூதிப் பிரஜைகள் ஆகியோரே அதிகமாக வறுமையில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சனைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேலையில்லாதோர் தொகை 8 வீதம். ஆனால், உண்மைத் தொகை 25 வீதமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. வருடந்தோறும் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு, இரண்டு மடங்கு பேர் விண்ணப்பிக்கின்றர். இப்படியான நிலையிலும் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டவரைத் தொடர்ந்தும் வேலைக்கு வைத்திருக்க விரும்புகின்றன. ஒரு சவூதிப் பட்டதாரி 800 டொலர்களை மாதச் சம்பளமாகக் கேட்டால் அதே வேலையை அனுபவமிக்க இந்தியப் பட்டதாரி 400 டொலருக்குச் செய்யத் தயாராகவிருப்பதுதான் இதற்குக் காரணம். ஒரு சவூதிப்பிரஜை தன்னுடைய குடும்பத்தையும் பராமரிக்கவேண்டிய நிலையிலிருக்கிறான். மேலும் வேலையில்லாப் பிரச்சினை காரணமாக ஆண்களுக்குத் திருமணமாவதும் தள்ளிப்போடப்படுகின்றது. அங்கே மணம் முடிக்கவேண்டிய ஆண், சீதனம் கொடுக்கவேண்டுமென்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். இன்னொரு பக்கத்தில் துப்பரவுத் தொழில் போன்றவற்றைச் செய்யும் அடிமட்டத் தொழிலாளர்கள் இப்போதும் வெளிநாட்டவர்கள் தான். அவர்கள் மாதாந்த வருமானம் 80 டொலர்களாகும். அத்தோடு எந்தவிதத் தொழிலாளர் நல உரிமையுமற்று அவர்கள் சுரண்டப்படுகின்றனர். சவூதி அரேபிய அரசு தனது உழைப்பாளர் வர்க்கத்தை இவ்வாறு தந்திரமாகப் பிரித்து வைத்துள்ளது.

இதுவரை கூறப்பட்ட பின்னணியின் அடிப்படையிலேயே சவூதி அரேபியாவில் அல்-கைதாவின் வளர்ச்சியைப் பார்க்கவேண்டும். எண்பதுகளில் "சர்வதேசக் கம்யூனிசத்தை" எதிர்த்த அணியில் சவூதி அரேபியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. உள்நாட்டுப் பிரச்சனைகளை மறைக்க தனது நாட்டு இளைஞர்களை ஆப்கானிஸ்தானுக்கு சோவியத் இராணுவத்தை எதிர்த்துப் போராட அனுப்பி வைத்தது. கடைசியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் (பனிப்) போர் முடிந்து நாடு திரும்பியவர்களுக்கு, அமெரிக்க அடிவருடி மன்னரின் ஊழலாட்சி கண்ணுக்குப் புலப்பட்டது. அப்போது ஆரம்பித்ததுதான் அல்-கைதாவின் சவூதி அரேபிய விடுதலைப் போராட்டம். ஆடம்பரமாக வாழ்ந்து, ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் மன்னர் "முஸ்லீம் அல்ல, மக்களின் எதிரி" என அல்-கைதா அறிவித்தது. வறுமையில் வாடிய வேலையற்ற இளைஞர்கள் அல்-கைதாவினால் கவரப்பட்டனர். இன்று சவூதி அரேபியாவில் சுதந்திரமான தேர்தல் நடாத்தப்பட்டால் பின்லாடன் ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ளதை எதிரிகளும் ஒப்புக்கொள்கின்றனர்.

2001 செப்டம்பர் 11 ல் நிகழ்ந்த நியூ யோர்க் தாக்குதலுடன் உடனடியாக ஆப்கானிஸ்தான் தொடர்புபடுத்தப்பட்டது. விமானக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் சவூதி அரேபியப் பிரஜைகள் என்ற விடயத்திற்கு அன்று யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தத் தாக்குதலில் அல்-கைதா தான் பொறுப்பு என்பது, இதுவரையும் உறுதியாகத் தெரியாவிட்டாலும், செப்டம்பர் 11 க்கும் பிற்பாடு, சவூதி அரேபியாவில் அல்-கைதாவிற்கு ஆதரவு பெருகியுள்ளது, மறுக்கவியலாத உண்மை. இதற்கு அமெரிக்க அரசின் சர்வதேச அளவிலான பிரச்சாரமும் காரணமாக இருக்கலாம். சவூதி ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தபோதும் அவர்களைக் குறிவைக்கும் தாக்குதல்களை பின்லாடன் ஆதரிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இருப்பினும், சவூதி அரசாங்கம் அல்-கைதாவை அடக்குவதில் தீவிரம் காட்டுகிறது. (பார்க்க: அறிக்கை 17- ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம்).

"சவூதி அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்குவதில் தீவிரம் காட்டவில்லை. றியாத் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை" என்று அமெரிக்க அரசு அறிவித்தது. இந்தக்கூற்று நகைப்பிற்கிடமானது. ஏனெனில் உலகில் சவூதி அரேபியாவிற்கு நிகரான சர்வாதிகார ஆட்சியை காண்பதரிது. அங்கே அரசியல் நிர்ணயச்சட்டம் எதுவும் கிடையாது. மன்னர் சொல்வதுதான் சட்டம். அப்படியான நிலையில் அரசுக்கு எதிராகக் கதைப்பதற்குக் கூட யாரும் துணியமாட்டார்கள். மேலும் றியாத் தாக்குதலுக்கு இலக்கான வினெல் நிறுவனம் சவூதி அரசின் முழுப்பாதுகாப்பையும் பொறுப்பெடுத்திருந்தது. இப்போது யார் யாரைப் பாதுகாக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் போரின் பின்னர் அல்-கைதாவை அடக்கிவிட்டோம் என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்த பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்திருப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அண்மையில் முடிந்த ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போர் அந்தப் பிராந்தியத்தில் எதிர்விளைவுகளை உண்டாக்குமென்பது, மத்தியகிழக்கு அரசியலை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகைகளில் கூட இது பற்றி விமர்சனக் கட்டுரைகள் வந்திருந்த போதும், சாதாரண அமெரிக்கர்கள் தம் நாட்டுப் பத்திரிகைகள் கூடவா வாசிப்பதில்லை எனப் பலர் வினவுமளவிற்கு நிலைமை இருக்கிறது. உண்மையில் தன்நாட்டு மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமெரிக்க அரசின் வெளிநாட்டு அரசியல் போக்கு இன்னமும் மாறவில்லை. சாதாரண அரபுமக்கள் அமெரிக்க முதலாளித்துவத்தை அல்ல அதன் வெளிவிவகாரக் கொள்கைகளையே எதிர்க்கின்றனர்.

இருப்பினும் அமெரிக்க அரசின் வெளிவிவகாரக் கொள்கையும் முதலாளித்துவப் பொருளாதாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை என்பது மத்திய கிழக்கு அரபுக்களுக்கு புரிய இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். ஆனால், சித்தாந்த ரீதியாகச் சீரமைக்கப்படாத தன்னெழுச்சியான எதிர்ப்பியக்கங்கள் வளர்ந்து வருகின்றன. அவைகள் "பேசும் மொழி" இஸ்லாமாக இருப்பதனால் பிறருக்கு இதைப்புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் அரபு நாடுகளின் அரசாங்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லாவகையான எதிர்ப்பையும் முறியடித்த பின்னர், மக்களுக்குத் தனது எதிர்ப்பை காட்ட இருக்கும் ஒரே வழி மதம் மட்டும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளூர் சந்தைகளில் வந்து குவியும் மேலைத்தேச நுகர்பொருட்களின் தாக்கம் உருவாக்கும் எதிர்விளைவுகள் அளவிடமுடியாதவை. உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் வீழ்ச்சி அதனைச் சார்ந்திருக்கும் மக்களின் வருமானத்தைப் பாதித்து வறுமைக்குத் தள்ளிவிடுகின்றது. மேலும் உள்நாடு உற்பத்திகள் அந்தப்பிரதேச மக்களின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. இதற்கு மாறாக மேற்கத்தைய பாவனைப் பொருட்கள் கலாச்சாரச் சீரழிவை உருவாக்குகின்றன. குறிப்பாக, அமெரிக்கா தனது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக பிறநாட்டுக் கலாச்சாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டித்தான், ஈரானிய மத அடிப்படைவாதத் தலைவர் கொமெய்னி "அமெரிக்கா பெரிய சாத்தான்" என்று கூறினார். அதாவது சாத்தான் மக்களின் மனதை மயக்கி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

இஸ்லாமிய ஆயுதபாணி இயக்கங்கள் மோசமடையும் சமூகப் பிரச்சினைகளை தமது கண்ணோட்டத்தில் பார்க்கின்றன. வறுமையை ஒழிக்க, அந்நியக் கலாச்சார ஆதிக்கத்தைத் தடுக்க முழு முஸ்லீம்களினதும் தேசியவிடுதலைப் போராட்டமே சரியான பாதை என்று போதிக்கின்றன. இதனால் இஸ்லாம் மூலம் தமக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்பும் குறிப்பாக வேலையற்ற, வறிய இளைஞர்கள் தீவிரவாத அரசியலால் கவரப்படுவதில் வியப்பில்லை. மொரோக்கோவிலுள்ள கஸாபிளாங்கோவில் நடந்த தாக்குதலைச் செய்தவர்கள் அனைவரும் மாநகர சேரிப்பகுதிகளிலிருந்து வந்த வறிய இளைஞர்கள் என்பதை அரசே தெரிவித்தது.

அடிப்படை வசதிகள் இன்மை, வேலைவாய்ப்பு இன்மை, வறுமை என்பனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் விளைநிலங்கள். அதனால் பயங்கரவாதத்திற்கெதிராக போர் புரிபவர்கள் முதலில் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என இதுவரை பலர் கருத்துக் கூறியுள்ளனர். பிரான்ஸில் நடந்த உலகப் பணக்கார நாடுகளின் G 8 மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்த சமூக ஆய்வு நிறுவனமொன்று உலகில் பல உள்நாட்டு யுத்தங்களுக்குக் காரணம் இனங்களுக்கு அல்லது மதங்களுக்கு இடையிலான மோதலல்ல, மாறாக வறுமைதான் அடிப்படையென்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை பல மேலைத்தேய (ஆளும் வர்க்க சார்பு) அறிஞர்களின் கருத்துகளை நிராகரிக்கின்றது. பல்வேறு இனங்கள், மதங்கள் தமது கலாச்சார ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒன்றோடொன்று மோதுகின்றன. " கலாச்சாரங்களின் மோதல்" (?) அல்லது ஜனநாயகமின்மை என்பவையே இன்றைய யுத்தஙகளுக்குக் காரணமென்பது மேற்கத்தைய புத்திஜீவிகள் எம்மீது திணிக்க விரும்பும் கருத்து.

"சவூதி அரேபியா ஜனநாயக நாடானால், அவர்கள் எம்முடன் ஒத்துழைக்கமாட்டார்கள்." என்று வெளிப்படையாகவே கூறினார் அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர். பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு ஆயுத உதவி செய்வது எந்த வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை. ஈரானில் இவ்வாறான போக்கு கடைசியில் இஸ்லாமியப் புரட்சிக்கு வித்திட்டது. சவூதி அரேபியாவில் அப்படியொரு நிலைவந்தால் அந்நாட்டு அரசியற் தலைமையை எதிரியாகக் காட்டிவிட்டு, அமெரிக்க இராணுவம் நேரடியாகத் தலையிடும். பனாமா, ஈராக் எனத் தொடரும் வரிசையில், நாளை சவூதியும் இணையலாம்.

கணிணி:நவகாலனியத்தின் அரசியல் குரு


கணிணி அசாதரணமான தருணத்தில் ஆனதிலிருந்து நாம் துவங்கலாம்,பத்தாண்டுகளுக்கு முன்னர், தகவல் தொழிற்புரட்சி சமுதாயத்தை மாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தொழிற்கல்வி கற்க விரும்பும் பிள்ளைகளில், அதிபுத்திசாலிகளை மட்டும் தெரிந்தெடுத்து கணிப்பொறி வல்லுனராக்க அனுப்பிக் கொண்டிருந்த காலமது. ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியை துரிதப்படுத்தவும், ஆட்குறைப்பு செய்து செலவை மிச்சம் பிடிக்கவும் என கணணி மயப்படுத்தப்பட்டன. அவற்றிக்கு தேவையான மென்பொருள்களை உருவாக்கவும், இருப்பதை மெருகூட்டவும் என அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தேவைப்பட்டனர். ஒரு பக்கம் இந்த புதிய தொழில்வாய்ப்புகளை நாடி கணிப்பொறி வல்லுனர்கள் படையெடுத்துக் கொண்டிருந்த போது, மறுபக்கம் அவர்கள் தயாரித்து வழங்கிய மென்பொருள் துணை கொண்டு நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வந்தன. அப்போது இது குறித்து எந்த ஒரு ஐ,டி.(IT) பணியாளரும் அப்போது அக்கறைப்படவில்லை. தனது நலனே பெரிதெனக் கருதி கருமமே கண்ணாக இருந்து விட்டனர். இப்போது காலம் மாறி விட்டது. ஐ.டி. துறையின் தலைக்கு மேலே பணி நீக்கம் என்ற கத்தி தொங்குகின்றது. அன்று ஐ.டி. துறையின் மகிமை பற்றி மட்டுமே எழுதி வந்த தினமலர் பத்திரிகை; இன்று அந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை என்று அழுதுவடிகின்றது. ஹைதராபாத் ஐ.டி. பணியாளர்கள் தமக்கு வேலை போய் விடக்கூடாது என்று திருப்பதி பாலாஜி சாமியிடம் வேண்டுவதாக(இது கிண்டல் தானே?) செய்தி வெளியிட்டது.

ஆங்கிலத்தில் புலமை மற்றும் கல்வித் தகமை காரணமாக, "Out sourcing" என்ற பெயரில் அமெரிக்க மென்பொருள் தயாரிக்கும் ஐ.டி.(IT) கம்பனிகள் இந்தியா வந்த போது, இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டனர். இந்தியாவில் ஒரு புதிய வசதிபடைத்த வர்க்கம் விரைவாக உருவாகியது. சராசரி இந்திய சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என்பதால், கண் விழித்து செய்யும் இரவு வேலை என்றாலும் ஏற்றுக் கொண்டனர். மறுபக்கத்தில் இதே வேலையை செய்ய ஒரு அமெரிக்க கணிப்பொறி வல்லுநருக்கு கொடுப்பதில் கால்வாசியை கூட சம்பளமாக கொடுக்காது செலவை மிச்சம் பிடித்தன, அந்த கம்பெனிகள். Out sourcing செய்யும் கம்பெனிகள் தமது தாயகத்தில் ஆங்கில மொழியே பேசப்படுவதால், இந்திய தொழிலகங்களிலும் ஆங்கில மொழியை "உத்தியோகபூர்வ" மொழியாக்கினர். (வேலை செய்யும் இந்தியர்கள் தமது ஓய்வு நேரங்களிலும்,தமக்குள்ளே ஆங்கிலம் பேசினர்.) இந்த "ஆங்கிலப் பருப்பு" இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வேகும். இதே அமெரிக்க கம்பெனிகள் ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலகங்களை நிறுவி, உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. ஆனால் அங்கெல்லாம் உள்ளூர் மொழிகளில் தான் முகாமைத்துவம் நடக்கின்றது.

காலனிய காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் தாம் என்றென்றும் பிரயோசனப்படுத்தக் கூடிய வர்க்கமொன்றை உருவாக்கினார்கள். அந்த வர்க்கம் தமது தாய்மொழியான ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டும். தொழிற்புரட்சி காரணமாக வளர்ந்து வரும் இங்கிலாந்து மருந்துக் கம்பெனிகளுக்கு தேவைப்படும் மருத்துவர்கள், கட்டுமான கம்பெனிகளுக்கு தேவைப்பட்ட பொறியியலாளர்கள், இது போன்று தமக்கு தேவைப்படும் தகமையுடைவர்களை மட்டுமே உருவாக்கினார்கள். அந்த வரிசையில் தற்போது கணிப்பொறி வல்லுநர்கள் உருவாக்கப்படுகின்றனர். பொருளியல் மொழியில் கூறினால், சந்தையில் எந்தப் பண்டத்திற்கு பற்றாக்குறை உள்ளதோ, அதை உற்பத்தி செய்ய வேண்டும். அந்தப் பண்டம் மாங்காயாக இருந்தாலும், மருத்துவராக இருந்தாலும், இது தான் சந்தையின் விதி.

காலனியாதிக்க நாடான இங்கிலாந்தில் உருவாகிய மத்திய தர வர்க்கத்திற்கும், காலனி நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட மத்தியதர வர்க்கத்திற்கும் இடையே ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. இவற்றை சற்று விரிவாக பார்ப்பது இன்றைய நெருக்கடியை புரிந்து கொள்ள உதவும். "இங்கிலாந்து தேசியத்தில்" தங்கியிருந்த ஆங்கிலேய மத்தியதர வர்க்கம், ஏற்கனவே நாடளாவிய அதிகாரங்களை வைத்திருந்த அரச/பிரபு குடும்பங்கள் போன்ற உயர் வர்க்கத்திற்கு போட்டியாக புரட்சிகர மாற்றங்களை கொண்டுவந்தது. அரசவை மொழியான பிரெஞ்சு மொழியை கைவிட்டு விட்டு உழைக்கும் வர்க்கம் பேசிய ஆங்கில மொழியை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த தேசியவாத உணர்வு காரணமாகத்தான், அந்த தேசத்தை நிர்வகிக்க தேவையான அனைத்து வகையினரையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகின்றனவே அன்றி, நமது நாடுகளில் உள்ளது போல மருத்துவர்களை அல்லது கணிப்பொறி வல்லுனர்களை உற்பத்தி செய்யும் "சமூக தொழிற்சாலைகளை" கொண்டிருக்கவில்லை.

மத்தியதர வர்க்க பெற்றோர் தமது பிள்ளைகளை பெரும் மூலதனத்திற்கு சேவை செய்து சம்பாதிக்கும் படி போதித்து வளர்ப்பதால் தான், நிதி நெருக்கடியால் அமெரிக்க ஐ.டி. கம்பெனிகள் சொந்த ஊருக்கு மூட்டை கட்டும் போது, வேறு வழி தெரியாமல் திருப்பதி பாலாஜி சாமியிடம் சென்று முறையிடுகிறார்கள். பாமரர்கள் போல படித்தவர்களும் நடந்து கொள்வதை இந்தியாவில் தான் பார்க்கலாம். படித்தவர்கள் தமது திறமையை, அறிவை சொந்த தேச மக்களின் முன்னேற்றத்திற்கு செலவிட்டிருந்தால், தற்போது எதிர்காலம்
பற்றி அஞ்சத் தேவையில்லை. "உள்ளூரில் எனது திறமைக்கு தரும் கூலி குறைவு, அமெரிக்காவிலோ அள்ளிக் கொடுக்கிறார்கள்." என்று அதிக விலை பேசும் பெரு மூலதனத்திற்கு தனது உழைப்பை விற்கும் சுயநலவாதத்தை வெளிப்படுத்துவோர் அதற்கு தயாராகமாட்டார்கள். தமது உற்பத்தி செலவை குறைக்க மலிவு விலை தொழிலாளரை தேடி இந்தியா வரும் ஐ.டி. நிறுவனங்களுக்கும், தமது வருமானத்தை உயர்த்த அமெரிக்கா செல்லும் கணிப்பொறி நிபுணர்களுக்கும் தேசியம் தேவையில்லை. இது சர்வதேசியமல்ல, ஆனால் "சந்தை தேசியம்".

இந்தியாவில் தாம் அதிக வருமானம் எடுப்பதால் தம்மைப் பார்த்து பிறர் பொறாமைப்படுவதாக ஐ.டி. துறையில் பணி புரிபவர்கள் கவலைப்படுகின்றனர். மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாலேயே சிலருக்கு தலைக்கனம் வருவதும், பிறர் அதைப்பார்த்து பொறாமை கொள்வதும் மனித இயல்பு தான். இருப்பினும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் ஐ.டி. தொழிலாளிகள், பெரு மூலதனத்தின் நூலில் ஆடும் பொம்மைகள் என்பது அவர்களுக்கே தெரியாத போது, பிறர் அறியாததில் வியப்பில்லை. முதலில் தம்மை "கணிப்பொறி நிபுணர்கள்" போன்ற சிறப்பு அடைமொழியால் அழைக்கப்படுவதையே விரும்புவதும், பிற தொழிலாளர்களுடன் தம்மை இனம் காண மறுப்பதிலும் இருந்து தான் இந்த பிரச்சினை ஆரம்பமாகின்றது. அதிக சம்பளம் கொடுக்கும் பெரும் மூலதனம், இவர்களை அடிமட்ட உழைப்பாளர் வர்க்கத்திடம் இருந்து மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் குறைவாக சம்பாதிக்கும் பிற மத்தியதர வர்க்கத்திடம் இருந்தும் தனியாக பிரித்து வைத்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்திசாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம். இந்தியாவில் குறைந்த கூலியில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருளை, அதிக பட்ச விலை நிச்சயித்து அமெரிக்கா விலைக்கே இந்திய நுகர்வோருக்கும் விற்று தான் பில் கேட்ஸ் போன்றவர்கள் கோடீஸ்வரரானார்கள். மைக்ரோசொப்டின் விண்டோஸ் போன்ற அனைத்து மென்பொருட்களையும் பயன்படுத்தும் நிறுவனமொன்று காப்புரிமைப் பணம், வருடாந்த வாடகை என்று ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டிவருவதும், இந்த செலவை இறுதியில் எம்மைப் போன்ற அப்பாவி நுகர்வோர் செலுத்துவதும் எத்தனை பேருக்கு தெரியும்? உலகம் முழுவதும் கணனிப் பாவனையாளர்கள் தனது பொருட்களை மட்டுமே கட்டாயப்படுத்தி வாங்க வைத்து, ஏகபோக கொள்ளையடிக்கும் பில் கேட்ஸ் தான் இந்திய "கணனிக் கண்மணிகளின்" கண் கண்ட தெய்வம்.

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு படைகளால் பயன்படுத்தப் படும் மென்பொருட்கள் குற்றவாளிகளை மட்டும் பிடிக்கவில்லை, உள்நாட்டு போரில் அகப்படாது தப்பிவரும் அப்பாவி அகதிகளையும் பிடித்து சிறையில் அடைக்கின்றது, நாடு கடத்துகின்றது அல்லது தற்கொலைக்கு தள்ளுகின்றது. அந்தக்காலத்தில் ஹிட்லரின் கையில் இந்த மென்பொருட்கள் இருந்திருந்தால், எந்தவொரு யூதனும் தப்பியிருக்க முடியாது. தனிமனித சுதந்திரம் கொடிகட்டிப் பறப்பதாக பீற்றிக்கொள்ளும் மேலைநாடுகளில், தனிமனித நடவடிக்கைகளை அவதானிக்கும் மென்பொருட்கள் சத்தமில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நிறுவி வருகின்றன. பல நூறு பேரின் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மென்பொருட்களின் வருகையால், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலகில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேலையிழந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்? வேலை போனதால் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை? வேலை வாய்ப்பில்லாமல் எதிர்காலத்தை தொலைத்த இளைஞர்கள் எத்தனை? ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள், பிறரின் உயிர்களை பறிக்கும் குற்றத்தில் பங்கெடுக்கின்றனர். அதுபோல மென்பொருள் தயாரிப்பவர்களுக்கு, தாம் பிறரின் வேலைவாய்ப்பை பறிக்கிறோம், வறுமையை உருவாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு இருக்காதா? நிச்சயமாக இருக்கும்.

இந்த குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தான், பில் கேட்ஸ் தனது லாபத்தில் ஒரு சிறிய தொகையை தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்குகிறார். அதைக்கூட இடதுகைக்கு தெரியாமல் வலதுகையால் கொடுப்பதில்லை. ஊரைக்கூட்டி விளம்பரம் தேடிவிட்டு தான் செய்கிறார். ஐ.டி. நிறுவனங்களும் இது போன்ற விடயங்களை தெரிந்தே வைத்திருக்கின்றன. ஆனால் இந்த உண்மைகளை வெளிப்படையாக கூற முடியாது. "ஊழியர்களே! நாம் உலகில் நடக்கும் பாவங்களில் மறைமுகமாக பங்குபற்றுகின்றோம்!!" என்று எந்த தலைமை நிர்வாக அதிகாரியாவது கூறமுடியுமா? "சமூக சேவை தொண்டு செய்வது, தர்ம ஸ்தாபனங்களுக்கு நிதி வழங்குவது." என்று தமக்கும் சமூக பொறுப்புணர்வு இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். இந்த மாதிரியை தமது ஊழியர்களும் பின்பற்ற ஊக்குவிக்கின்றனர். வறுமைக்குள் தள்ளப்பட்ட நாடுகளை சுரண்டிக் கொழுக்கும், பணக்கார நாடுகளில் இந்த கலாச்சாரம் ஏற்கனவே உள்ளது.


ஐரோப்பிய கலாச்சாரத்தை...சரியாகச் சொன்னால் அமெரிக்க கலாச்சாரத்தை, அது சீரழிவே ஆனாலும், பழமைவாத இந்தியாவில் பரப்பத் துடிக்கும் ஐ.டி. நிறுவனங்களின் அரசியல் அதிகமாக கவனிக்கப்படுவதில்லை. கலாச்சார சீரழிவை தேர்ந்தெடுக்கும் ஒரு சிலரை வைத்துக் கொண்டு முழு ஐ.டி. துறையை களங்கப்படுத்தக் கூடாது என்பது உண்மைதான். ஆனால் அப்படி சீரழிவு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்களும் "அப்பாவி பலியாடுகள்" என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்து இந்த சீரழிவு கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் தரகு வேலையை ஐ.டி. நிறுவனங்களின் முகாமையாளர்கள் செய்கின்றனர். கம்பெனி செலவில் நடக்கும் இரவுக் களியாட்ட
விழாக்களில், மது தாராளமாக பரிமாறப்படுகின்றது. இந்தக் கம்பெனிகள் தர்ம ஸ்தாபனங்களுக்கு கிள்ளிப் போடும் தொகை, களியாட்டங்களுக்கு செலவழிக்கும் தொகையை விட மிகக் குறைவு என்பதை சொல்லத் தேவையில்லை.

இங்கே தான் ஐ.டி. கம்பெனிகளின் சுயரூபம் வெளிக்கின்றது. இந்திய கணிப்பொறி வல்லுனர்களின் உழைப்பை சுரண்டும் அதே நேரம், தாம் வழங்கும் (இந்திய தராதரத்தில்) அதிக சம்பளப் பணத்தை, நுகர்பொருள் கலாச்சாரம் நோக்கி திருப்பி விடுகின்றனர். ஐ.டி. கம்பெனிகளின் வருகைக்கு பின்னர் தான் இந்திய நகரங்களில் ஆடம்பர பாவனைப்பொருட்களை விற்கும் கடைகள் பெருகின. தீபாவளி, புதுவருடப் பிறப்புக்கு, ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது போல ஐந்நூறு, ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்களை வருடாவருடம் கொடுக்கின்றன. இவற்றை குறிப்பிட்ட (உதாரணத்திற்கு இறக்குமதி ஆடைகளை விற்பனை செய்யும்) கடைகளில் மட்டுமே பயன்படுத்தலாம். அப்படியான கடைகள் இருப்பது தெரியாதவர்களுக்கு கூட அவற்றை அறிமுகப்படுத்துவதுடன், அதிகமாக நுகர்வதற்கு ஆசை காட்டப்படுகின்றது.

தமிழ் மென்பொருட்களையும் இதே கணிப்பொறி நிபுணர்கள் உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. அதுகூட வியாபார நோக்கம் கருதித் தான் நடந்தது. தமிழ் மென்பொருள் பாவனை வந்த பிறகு கணணி விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளதையும், தமிழ் இணையத்தளங்களை பார்வையிடலாம் என அறிந்து ஆங்கிலம் தெரியாத ஆயிரக்கணக்கானோர் இணைய இணைப்பு பெற்றதை, நான் இங்கே புள்ளிவிபரங்களுடன் விளக்கத் தேவையில்லை. இதனை வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த விடயம் அது. ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால் தான் கணணி பயன்படுத்தலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. கணனிக்கு ஆங்கிலம் தெரியாது, அது குறியீடுகளை மட்டுமே புரிந்து கொள்ளும், என்ற அடிப்படை தொழில்நுட்பம் ஒருபுறம் இருக்கட்டும். ஆங்கிலத்தை மட்டும் நம்பியிருந்தால் சீனாவிலும், ரஷ்யாவிலும் கடை விரிக்க முடியாது; என்ற சந்தை நியதி தான் எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியையும் சாத்தியமாக்குகின்றது. தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல.

பங்குச் சந்தைக்கும், பால்காரனுக்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கு தெரியாது. அது போலத்தான் முதலாளித்துவம் எப்படி தம்மை பயன்படுத்தி விட்டு தூக்கியெறிகின்றது என்பது கணிப்பொறி நிபுணர்களுக்கு தெரியாது. அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளும், வர்த்தக நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு கணிப்பொறி நிபுணர்களை உருவாக்கும் கல்வியில் முதலிடுவதை நிறுத்தி விட்டன. அதற்குப் பதிலாக இந்தியாவில் ஐ.டி. படிப்பு முடித்தவர்களை பயன்படுத்திக் கொள்கின்றன. தாமே மென்பொருட்களை தயாரிக்கக் கூடிய வல்லமை இருந்தும், தகுதியான உள்ளூர் நிபுணர்கள் இருந்தும், அதற்கான முயற்சியே எடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இந்திய கணிப்பொறி நிபுணர்களை தருவித்து தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம், ஐ.டி. துறையில் இந்தியர்களை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதல்ல. பொருளாதார ரீதியான திட்டமிடலே ஒரேயொரு காரணம்.

உதாரணத்திற்கு ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நிறுவனம், தனக்கு தேவையான மென்பொருளை உருவாக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது, அதற்கு பத்து கணிப்பொறி நிபுணர்கள் தேவைப்படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை கூட்டிப்பார்த்தால், இறுதியில் அந்த மென்பொருளின் செலவு அதிகமாக இருக்கும். சந்தையில் அதைவிட குறைந்த விலைக்கு, ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் கிடைக்கின்றது. யாரும் எங்கே மலிவானது கிடைக்கும் என்று தானே பார்ப்பார்கள்? இந்திய கணிப்பொறி நிபுணர்களை தருவித்து, ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதால், இந்நாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் பயனடைகின்றன. குறிப்பிட்ட ஒரு நபரை பணியில் அமர்த்திக்கொள்ளும் நிறுவனம், அவரது சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவே முகவர் நிலையத்திற்கு கொடுக்கின்றது. இதனால் முகவர்கள் அதிக வருமானம் ஈட்டுவது ஒருபுறமிருக்க, தேவைப்படாவிட்டால் விரும்பிய நேரம் வேலையை விட்டு நிறுத்திவிடலாம் என்பது அனுகூலமாக பார்க்கப்படுகின்றது.

பெரும் மூலதனத்துடன் வரும், வெளிநாட்டு தேசங்கடந்த நிறுவனங்களை கையாள்வதில், கியூபாவின் நடைமுறை இங்கே ஒப்புநோக்கத் தக்கது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் உல்லாசப் பிரயாணத் துறையில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் யாவும், கியூபா அரசுடன் Joint Venture என்ற இரட்டை முகாமைத்துவ முறையின் கீழேயே அனுமதிக்கப்பட்டன. துப்பரவு பணியாளர் முதல் மனேஜர் வரை கியூபா பிரசைகளையே பணிக்கு அமர்த்திய போதும், அவர்களுக்கு வெளிநாட்டு நிறுவங்கள் முன்னூறு தொடக்கம் எண்ணூறு(தகுதிக்கேற்ற படி) டாலர்கள் என்று அள்ளிக் கொடுத்த போதும், அனைத்து சம்பளங்களும் சராசரி கியூப தரத்தை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன. உதாரணத்திற்கு கியூபாவில், சராசரி சம்பளம் நூறு டாலர் என்றால், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளம் நூற்றி இருபது டாலராக இருக்கும். மிகுதியை பிடித்துக் கொள்ளும் அரசாங்கம் அதனை பிற துறை சார்ந்த தொழிலாளர் நல திட்டங்களில் முதலீடு செய்யும். வெளிநாட்டு நிறுவனங்கள் ஐந்து அல்லது பத்து வருடங்கள் மட்டுமே நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்படுவதால், அதற்குப் பின்னர் அரசாங்கம் பொறுப்பு என்பதால், யாருக்கும் அங்கே நாளை வேலை போனால் என்ன செய்வது, என்ற அச்சம் இல்லை. தொழிலாளர் மத்தியில் வேறுபாடுகளை உருவாக்கி, சமுகத்தில் பிரிவினை ஏற்படுத்தும், ஏற்றத்தாழ்வான சம்பள முறை ஏற்கனவே இந்தியாவில் தவிர்க்கப்பட்டிருந்தால்; யாரும் "திமிர் பிடித்தவர்கள்" என்று பெயர் எடுத்திருக்கவும் மாட்டார்கள், யாரையும் "பொறாமைக்காரர்கள்" என்று குற்றம் சாட்டவும் அவசியம் இருந்திருக்காது.நவகாலனியத்தின் வேர்கள் பரவ நெட்டிசன்கள் பொய்மை எதார்த்தத்தில் வீற்றிருப்பது கார்பரேட் முதலாளித்துவத்தின் வெற்றிகளுள் ஒன்றாகும்

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...