Friday, December 31, 2010

இருப்பினை தொலைத்து சென்றவன்


சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்

நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்

என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்

நீங்கள் யாரென்று சொல்லுங்கள்

உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்

முழித்த முழி முழியையே முழுங்கும் போல

நீங்கள் யாரானால் என்ன

நான் யாரானால் என்ன

அனாவசியக் கேள்விகள்

அனாவசிய பதில்கள்

எதையும் நிரூபிக்காமல்

சற்று சும்மா இருங்கள்

சில எதிர்கால நிஜங்கள்


அரிசி மூட்டையிலிருந்து சிதறிய

அரிசி மணிகள் போல்

தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த

சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்

மொசைக் தரையில் தவறிப்போன

ஒற்றை குண்டூசி போல்

இவற்றைப் போல் இன்னும்

ஆயிரக்கணக்கான போல்கள்

பழக்கம்


எனக்கு கிடைத்த சதுரத்தில்

நடை பழகிக்கொண்டிருக்கிறேன்

கால்கள் வலுவேறின

நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று

என் நடப்பைத்

தெரிந்துகொண்ட சில மாக்கள்

விளம்பினர்

ரோட்டிலேயே நடக்க முடியவில்லை

ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்

நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா

என் கால்கள்

என் நடை

என் சதுரம்

ஐயோ

சொன்னால் மறுக்கிறார்கள்

எழுதினால் நிராகிக்கிறார்கள்

தாக்கினால் தாங்குகிறார்கள்

சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்

அற்புத உலகம்

அற்புத மாக்கள்

சுற்றி

அரச மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

வேப்ப மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

எந்த மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை இவன்

ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?


ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்த பின்னும் தன் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது ' என்றார் ஆத்மாநாம். என்னை அழித்தும் என்னை அழிக்க இயலாது என்றும் சொல்லியிருக்கிறார். அது சரிதான். அவருடைய் சாரம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அவருடன் உறவாட முடிகிறது. இந்த நேரத்தில் ஆத்மாநாமின் கவிதைகளை முழுமையாகவும் சிறப்பாகவும் பதிப்பித்து தந்திருக்கும் பிரம்மராஜனின் பணியை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

புதுக் கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு. ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர். தன் செயல்பாடுகள் குறித்தும் தான் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவருக்கு யோசனைகள் இருந்திருக்கின்றன. காலத்தின் வரிசையில் கடைசியாக தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் கவிதைகளின் பொதுக் குணத்தை பிரதிபலித்தல் இவருக்கு இயற்கையாக இல்லை. தன்னுடைய கவிதைகளை கண்டுபிடிக்கும் முயற்சியாகவே இவர் கவிதைகள் இருக்கின்றன. ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைப் போக்கை பிரதிபலித்து இவர் எழுதியுள்ள 'இன்னும் ' என்ற தலைப்பிட்ட கவிதையில்தான் இவர் சுத்தமாக இல்லாமல் இருக்கிறார். மற்றக் கவிதைகளில் - மொத்தம் 143 கவிதைகள் - இவரது ஆளுமை, பலவற்றில் மங்கலாகவும் ஒரு சிலவற்றில் மிகச் சிறப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. பிரதிபலிப்பு படைப்பாகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வாழ்நிலையில் தான் பெற்ற அனுபவங்களை கவிதை மூலம் இவர் ஆராய்ந்து கொண்டே போகிறார். தன்னை அறிந்து தன் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முனைப்பு இது. இந்த தெளிவு கூடிவரும் வகையை உணருவது இன்று சிரமமாக இருக்கிறது. இவரது கவிதைகளை கால வரிசைப்படுத்தித் தர பிரம்மராஜனுக்குச் சாத்தியப்பட்டிருக்கும் என்றால் இவர் பெற்றுள்ள வளர்ச்சியை இன்னும் துல்லியமாக நாம் மதிப்பிட்டிருக்க முடியும்.

சுதந்திரம் மனித ஆளுமைக்கு தரும் விகாசம், வாழ்நிலை சார்ந்த அபத்தங்களும் கேவலங்களும் தரும் வருத்தம், மனிதனை ஆசுவாசப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கும் இயற்கை, நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், இவை சார்ந்த உணர்வுகள் அவர் கவிதைகளில் அழுத்தம் பெறுகின்றன. தன் கவிதைகள் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் இவர். இதனால் தன் கவிதை மொழி தன் சக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதில் அவருக்கு கவனம் இருந்தது. ஏற்கும் புதுமையின் பொருள் என்ன என்பதிலும் இந்த மண் சார்ந்து அதன் பொருத்தம் என்ன என்பதிலும் அவர் கவனங்கள் கொண்டிருந்தார்.
'கவிதையை, நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.

கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.'

மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை.

பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை உமிழ்கிற (உதாரணம்: கட்டாந் தலைகள்), சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், பட்டியலிடும் கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.
'குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்', 'குட்டி இளவரசி வந்துவிட்டாள்', 'புத்தம் புதிய' எனும் தலைப்பிலுள்ள கவிதைகள், குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. குட்டி இளவரசிக்கு ஒரு கடிதத்தில், குழந்தைகளின் புனைவுலகம் சார்ந்த ஷிநீஷீஷீதீஹ் எனும் நாய் வருகிறது அல்ல வருகிறான். நாய்களின் தலைவனைக் கௌரவிக்கக் கூட்டம் நடக்கிறது. அந்தத் தலைவன் எதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் தெரியுமா, பின்னால் சுமக்கும் பையைக் கண்டுபிடித்ததற்காக.

'குட்டி இளவரசி வந்துவிட்டாள்' கவிதையைப் பார்ப்போம்: டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/ சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/ கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/ மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/ ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/ பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/ பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/ தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/ ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/ பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/ அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.

குட்டி இளவரசி நடக்கக் கற்றுக் கொண்டவள்; அநேகமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. பசிக்கு அழுதால்தான் அழுகை. வளர்ந்தவர்களின் ஒழுக்கம்/ ஒழுக்க விதிகள் அவளுக்குப் பொருந்தமாட்டா. மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுகிறாள். பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள் . . . வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?

'பூச்சுக்கள்' என்ற தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்.
வாழ்க்கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ தலை சீவி/ பவுடர் பூசி/ வெளிக் கிளம்பினேன்/ பஸ் ஸ்டாண்டில்/ என்னைப் போலவே/ ஆண்களும் பெண்களும்/ அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ அலங்கரித்து/ காத்து நின்றிருந்தனர்/ வந்து போய்க்கொண்டிருந்த/ வாகனங்களில்/ பொதுமக்கள்/ வேற்றுமை காண இயலாவண்ணம்/ உட்கார்ந்து கொண்டும்/ நகர்ந்துகொண்டும்/ பயணம் செய்துகொண்டிருந்தனர்/ என்னுடைய வாகனம் வந்துவிட்டது/ இடிபாடுகளுக்கிடையே/ நானும்/ ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/ எங்கோ ஒரு இடத்தில்/ நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/ ஒரு பூ கீழே தவழ்ந்தது.

இந்தக் கவிதையில் நகரத்தின் காலை நேரக் காட்சியொன்று தரப்படுகிறது. காலை நேரம் என்பதை எட்டிலிருந்து பத்து மணிக்குள் என்று வைத்துக்கொள்ளலாம். திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் ஏதோ ஒரு வேலை நாளாக இருக்க வேண்டும். இதில் வரும் கவிதை சொல்லி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நிற்கிறார். இவரைப் போலவே ஆண்களும் பெண்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அடையாளம் காண இயலாவண்ணம் பயணம் செய்கிறார்கள். இவரது வாகனம் வருகிறது. இவரும் ஒரு கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பெருநகரமொன்றின் வேலைநாட்களின் காலை நேரம் அதன் அத்தனை அவசரத்தோடும் அவதியோடும் கவிதைக்கான காட்சிப் பின்புலமாக நமக்குத் தரப்படுகிறது.

முதல் வரியிலிருந்தே, முதல் சொல்லிலிருந்தே கவிதை தொடங்கிவிடுகிறது. கண்ணாடியில் முகம் பார்த்து, தலை சீவி, பவுடர் பூசி, வெளிக் கிளம்பினேன் என்றாலே கவிதை சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டதை நமக்குக் காட்டிவிடலாம். ஆனால் வாழ்க்கைக் கண்ணாடி என்கிறார். நாம் ஏன் வெளியே கிளம்புவதற்கு முன் கண்ணாடி பார்க்கிறோம் கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரிகிறதா? ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம்? கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா? அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா? இப்படி வாசிக்கலாம். மற்றொரு வாசிப்பாகப் பேருந்து நெரிசலில் தவிக்கிற அதே சமயத்தில் பூமியின் வேறொரு பகுதியில் பூமி நகர்ந்து, கடல் கொந்தளிந்துவிடலாம். வேறொரு இடத்தில் தனக்குக் கீழே தண்ணீரிலோ காற்றிலோ பூவொன்று தவழ்வதைக் கவிஞர் சொல்வதாகக் கொள்ளலாம். அதாவது முதலில் சொல்லப்பட்ட சந்தடியும் இரைச்சலுமான நகரக் காட்சியின் அருகில் பூமியின் வேறெதோ இடத்தில் வேறெதோ காலத்தில் நடந்த, நடக்கப் போகிற நிகழ்ச்சியை வைத்துக் கவிதைக்கும் வாழ்வுக்கும் அழகூட்டிவிடுகிறார். இப்படியும் வாசிக்கலாம்.

இந்தக் கவிதையில் 'இடிபாடுகளுக்கிடையே' என்ற சொல்லைக் கவனியுங்கள். நெரிசல் என்ற சொல்லே பொதுவாக உபயோகத்திலுள்ள சொல், தகர்ந்த கட்டுமானங்களைப் பற்றிச் சொல்லும்போது நாம் உபயோகிக்கிற சொல் 'இடிபாடுகள்' என்பது, இப்போது மீண்டும் இந்தக் கவிதையை வாசியுங்கள்.

ஆத்மாநாமின் கவிதை உலகை மேலும் அறிவதற்கு ஏதுவாகச் சில வரிகளைப் பார்ப்போம்:

முட்டிமோதிப் பார்க்கிறது கடல்/ மணலைத் தன் நீலப் புடவைக்குள்/ சுருட்டிக்கொள்ள* உங்கள் இருப்பை நிரூபிக்க/ முத்தத்தைவிட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது . . . முத்தம்/ முத்தத்தோடு முத்தம்/ என்று/ முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்* முன்பென்றால் நினைவு/ பின்பென்றால் கனவு/ இப்பொழுதென்றால் நான்* நானும் வேறான நானும் பொய்/ நான் இல்லை* சித்திரத்திற்கு குரல் இருக்க வேண்டும்/ அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்/ பார்ப்பவன் பேச வேண்டும்/ பேச்சில் தெளிவு வற்றாதது தெளிவு/ நீங்கள் ஒவ்வொரு வரும்/ ஒரு சமவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்* எல்லோருமே/ ஒரே ஒரு புத்தகத்தைத்தான்/ படிக்கப்/ போகிறீர்கள்/ அது உங்கள் புத்தகம் தான்* இந்தக் கவிதை/ எப்படி முடியும்/ எங்கு முடியும்/ என்று தெரியாது./ திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும்/ இது முடியும்போது/ இருக்கும் (இருந்தால்) நான்/ ஆரம்பத்தில் இருந்தவன்தானா.* உதிரும்/ மலரின்/ கணிதத்தை/ என்றாவது/ யோசித்திருந்தால்/ மட்டும்/ இது புரியும்* சரக்கென்று/ உடல்விரித்துக்/ காட்டும்/ கற்றாழையின்/ நுனியிலிருந்து/ துவங்கிற்று வானம்* வயல்களுக்கப்பால் இருந்த/ சூரியன் மேலே சென்றான்/ எருமைகள் ஓட்டிச் சென்ற/ சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.

மொத்தக் கவிதைகளில் பதினைந்துக்கு மேற்பட்ட சமூக/ அரசியல் கவிதைகள் உள்ளன. ஒருவகையில் தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கான முன்னோடி என்றுகூட ஆத்மாநாமைச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகளில் நுட்பமானவையும் உள்ளன, அப்பட்டமானவையும் உள்ளன. இவ்வகைக் கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.

தூங்குபவர்களையும்/ தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களையும்/ எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்/ புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை* எனது சுதந்திரம்/ அரசாலோ தனி நபராலோ/ பறிக்கப்படுமெனில்/ அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்* மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்/ அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து* இந்த நகரத்தை எரிப்பது/ மிகச் சுலபம்/ ஒரு தீப்பெட்டி போதும் . . . ஓசைகள் குறைந்த இரவில்/ எங்கேனும் துவங்கலாம் . . . தனியொருவன் எரித்தால் வன்முறை/ அரசாங்கம் எரித்தால் போர்முறை * மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட/ அரச குமாரர்கள் . . . ஜனநாயக சர்வாதிகாரம் . . . சூழ்ந் துறங்கும்/ மனித உரிமைகள்.

இவ்வகையிலான இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்:

'நன்றி நவிலல்' எனும் தலைப்பில்: இந்தச் செருப்பைப் போல்/ எத்தனை பேர் தேய்கிறார்களோ/ இந்தக் குடையைப் போல்/ எத்தனை பேர் பிழிந் தெடுக்கப்படுகிறார்களோ/ இந்தச் சட்டையைப் போல்/ எத்தனை பேர் கசங்குகிறார்களோ/ அவர்கள் சார்பில்/ உங்களுக்கு நன்றி/ இத்துடனாவது விட்டதற்கு.

'தும்பி' எனும் தலைப்பில்: எனது ஹெலிகாப்டர்களைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் தும்பிகள்/ எனது தும்பிகளைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் வெடிகுண்டு விமானங்கள்/ எனது வெடிகுண்டு விமானங்களைப் பறக்கவிட்டேன்/ எங்கும் அமைதி/ எனது அமைதியைப் பறக்கவிட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்.

இவை மட்டுமல்ல, பல்வேறு தொனிகளில் ஏற்கனவே சொன்னதுபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, அரசியல் கவிதைகள் உள்ளன. இவ்வாறான கவிதைகளில் ஒன்று 'அவள்'. இந்த அவள் நீங்கள் நினைக்கிற 'அவள்' அல்ல, இது 1984க்கு முன்னர் எழுதப்பட்டது.

எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சகட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காண முடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறான். அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகித் தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச் சத்தம் ஒன்றும் கேட்கின்றன.

மேல் பத்தியிலுள்ளவையும் ஆத்மாநாமின் வாசகங்கள்தான். நம்மிடையே பல கவிஞர்களும் தம்மை நிறுவ முயன்று, தமக்கென்று ஒரு குறிப்பிட்ட ரீதியைத் தேர்ந்தெடுத்து, தம்மை மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கையில், தன்னையே தொடர்ந்து நிராகரித்து வந்ததால்தான் பல்வகைப்பட்ட, பல ரீதியிலான கவிதைகளை அவரால் எழுத இயன்றிருக்கிறது. தமிழில் பலவகையான கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஆத்மாநாம் ஒருவர். சரியாகச் சொல்வதானால் ஒரே ஒருவர்.

ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து Lithium, Hyportry, Largatyl, Fenargan போன்ற மருந்துகளை ஆத்மாநாம் தொடர்ந்து உட்கொண்டது தெரிகிறது. இவரது கவிதைகளில் 'ஒரு குதிரைச் சவாரி' என்கிற ஒரே ஒரு கவிதையில் மட்டுமே இந்த தனிப்பட்ட நிலைமை வெளியாகி வாசகனைத் துயருறச் செய்கிறது. எழுதுபவர்களது மன அவசங்களும் மன அலைவுகளும் மனச் சிக்கல்களும் கவிதையில் அதிகமாக எழுதப்படுகிற இந்தக் கட்டத்தில் கவிதை எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய தன்மை இது. கவிதைக்கு ஆட்படுவதற்கும் கவிதையை ஆட்படுத்த நினைப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை ஆத்மாநாம் உணர்ந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாத்திரைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொண்டுவரும் ஒருவரிடம் அவரது பெயர் கேட்கப்பட்டால், தனது பெயரைச் சொல்லக்கூட அவருக்கு நேரமெடுக்கும். ஆத்மாநாமுக்கு மனித உறவுகளிலும் சமூக வாழ்விலும் சிக்கலிருந்திருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு திடமான பரப்பில் நின்றிருந்திருக்கிறார். ஆத்மாநாம் கவிதைக்கு ஆட்பட்டவர்.

மொத்தம் நான்கே பக்கங்கள் வரக்கூடிய இவரது இரண்டு கட்டுரைகளும் பிரம்மராஜனுக்கு அளித்த நேர்காணலும் தமிழ்க் கவிதையியலுக்கு ஆத்மாநாமின் முக்கியப் பங்களிப்புகள். 'கவிதை எனும் வார்த்தைக் கூட்டம்' கட்டுரையில் எனது 'மனத்தில் தைத்த கவிதைகள்' எனத் தந்திருக்கும் கவிதை வரிகள், கவிதை பற்றிய புரிதலுக்குப் பெரிதும் உதவக்கூடியவை. இப்படி ஒரு பத்துக் கவிஞர்கள் அவர்களது மனத்தில் தங்கிய கவிதை வரிகளைத் தந்தால் அது தற்காலத் தமிழ்க் கவிதைகளின் உண்மையான வாசகருக்கு உதவக் கூடிய திரட்டாக அமையும்.

'ஆத்மாநாமைப் பற்றியும் கவிதை பற்றியும்' ஆத்மாநாம் - ஐ எனும் கட்டுரையில்:

தன்னிலிருந்து தானே விடுபடும் போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான் என்பவர், "உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்" என்று சொல்லி மேலும் "இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர், இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்று அஞ்சுகிறார்" என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தொடர்பாலா முடிந்தது? முடிந்ததா?

Friday, October 29, 2010

சூரியனோடு ஆடும் நாட்டியம்



பரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வளர்ந்து மலர்ந்துள்ளது எனத் திட்டவட்டமாக கூறலாம். குறிப்பாக சொல்லப்போனால் பரத முனவர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் நாட்டியம் சிறந்த கலையாகப் பரிணமித்திருந்தது எனப் பரதரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்தே அறிகிறோம். தென்னாட்டவர்கள் தமது நாட்டியத்தில் லலிதமாகவும், இனிமையாகவும், அங்க அபிநயங்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களது நாட்டியத்தில் நிருத்தமும் (அபிநயமில்லாது ஆடல் புரிவது), கீதமும் அதிகம் காணப்படும். இன்பச் சுவையும், சிருங்காரமும் அவர்களது ஆடலில் அதிகம் காணப்படுகிறது என்று
தக்ஷிணாத்யாஸ் தாவத்
பஹு நிருத்தகீத வாத்யா: கைசிகீ பிராயா:
சதுர மதுர லலித அங்காபி நயாஸ்ச

என்று பரதமுனிவர் கூறுகிறார். இன்று பரத நாட்டியத்தில் நிருத்தம் அதிகம் இடம் பெறுவதைக் காண்கிறோம். மேலும் தென்னாட்டினர் அரங்கில் ஆட நுழையும் போது வலப்புறத்திலிருந்து வருவதை மரபாகக் கொண்டுள்ளனர் என்கிறார் பரதர். அவர்களது சொற்களில் "ன" காரம் அதிகம் பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறார். இதிலிருந்து பரதர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் நாட்டியம் தனித்த மரபு கொண்டு வளர்ந்திருந்தது என்று விளங்குகிறது.
மார்க்கி - தேசி
பரதரின் நாட்டிய சாஸ்திரம் ஓர் ஈடிணையற்ற நாட்டிய இலக்கண நூலாக மலர்ந்தது. அது தோன்றிய பின்னர் அந்நூலில் உள்ள கருத்துக்களும் மரபுகளும் ஆடல் பாணிகளும் தமிழ் நாட்டியத்தைப் பெரிதும் வளம் படுத்தின. பரதர் மரபை மார்க்கி என்றும் அந்தந்தப் பகுதிகளிலே மலர்ந்த ஆடல்களைத் தேசி என்று அழைக்கும் மரபு வளர்ந்தது. ஆதலின் தமிழ் நாட்டியத்தை, தேசி நாட்டியம் என்றும் கூறுவர்.
தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரத்தில் நாட்டியத்தைப் பற்றிய அரிய செய்திகள் அரங்கேற்றக் காதையிலும் பிற இடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. அரசன் வீற்றிருந்த நாட்டிய அரங்கில் ஆடிய மாதவி முதலில் தேசி நாட்டியத்தை ஆடி பிறகு மார்க்கி நாட்டியத்தை ஆடினாள் என்று காண்கிறோம். எந்த மொழி பேசும் பகுதியில் நாட்டியம் ஆடுகிறார்களோ அப்பகுதி மக்கள் புரிந்து கொள்ளும் மொழியையும், நாட்டியத்தையும் முதலில் ஆடி பிறகு அனைத்திந்திய நாட்டியத்தை ஆடினர் என்பது இதனால் புலனாகிறது. நாட்டிய ஆசானுக்கும், ஆடுவோர்க்கும், இசை வாத்தியம் வாசிப்போருக்கும், தமிழ் மொழியும் மரபும் தெரிந்திருக்க வேண்டும் அத்துடன் சம்ஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம்.

தமிழில் நாட்டிய நூல்கள்
தமிழ்நாட்டில் எராளமான நாட்டிய நூல்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டன. தொல்காப்பியக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் நாட்டிய நூல்கள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உண்டு. நாட்டியத்தைக் குறிக்கும் சயந்த நூல், குணநூல், பரதசேனாபதியம், பஞ்சமரபு, செயிற்றியம், முதலிய நூல்கள் தமிழிலிருந்தன. சோழர் காலத்தில் எழுதப்பட்ட பல நூல்கள் மறைந்து போயின.
கி.பி. 13ம் நூற்றாண்டில் "சங்கீத ரத்னாகரம்" என்ற நூல் சம்ஸ்கிருத மொழியில் சாரங்க தேவரால் இயற்றப் பட்டது. நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட "அபிநய தர்ப்பணம்" என்ற நூலும் தமிழ்மொழியில் 300 ஆண்டுகளுக்கு முன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
அபிநய தர்பணம் என்னும் நூலை வீரராகவய்யன் என்பவர் தமிழ்ப்படுத்தியுள்ளார். சங்கீத ரத்னாகரத்தின் மொழிபெயர்ப்புகள் பல தமிழில் இருந்துள்ளன எனத் தெரிகிறது. இதில் ஒன்று டாக்டர் உ.வே. சாமிநாதைய்யரால் சேகரிக்கப்பட்டது. மஹாபரத சூளாமணி என்ற பெயரில் இந்த நூலும், அபிநய தர்பணமும் உ.வே.சா நூலகத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இவ்விரு நூல்களில் இருந்தும் தமிழும், சம்ஸ்கிருதமும் ஒன்றோடொன்று இணைந்தே நமது நாட்டியக் கலையை வளர்த்துள்ளன என்று தெரிய வருகிறது. இவ்விரு நூல்களையும் பின்பற்றிய பல நட்டுவனார்கள் தமிழ்நாட்டில் பரத நாட்டியத்தைப் போதித்து வந்துள்ளனர். இன்று பரத நாட்டியம் என்று வழங்கும் மரபு தமிழ் நாட்டியமும், பரதர் நாட்டியமும் தமது தனித்தண்மை இழக்காது ஆனால் ஒன்றால் ஒன்று வளம் பெற்று சாரங்கத் தேவர் மரபையும் பின்பற்றி வந்துள்ள கலையே என்பதில் ஐயமில்லை.

இந்திய நாட்டில் நாட்டியக் கலையின் இலக்கணங்களை வகுத்துக் கூறும் பண்டைய பெரும் நூல் பரதரது நாட்டிய சாஸ்திரமாகும். இந்நூல் எக்காலத்தில் இயற்றப்பட்டது என்பது குறித்து கருத்து வேறுபாடு உண்டு. கிறிஸ்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்துவுக்குப் பின்னர் 2ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு காலங்களை இந்நூலுக்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் இது இயற்றப்பட்டதெனில் அதே காலத்தில் தமிழில் மிகச் சிறந்த பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை சங்க இலக்கியம் என்று கூறுகிறோம்.
சுமார் 2300 பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியம் பத்துப்பாட்டு என்றும், எட்டுத் தொகை என்றும் இரண்டு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே பாடுவதற்கும் ஆடுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் அரங்கநாத பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரப் பிரபந்தங்களை அரையர் என்போர் இன்றும் பாடி அபிநயித்து வருகிறார்கள். இது போல் தேவார, திருவாசக பதிகங்களும் நாட்டியமாக ஆடப்பட்டுள்ளன. இந்த மரபை பார்க்கும் போது பரதரது நாட்டிய சாஸ்திரம் இயற்றப்பட்ட அதே காலத்தில் சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்துமே நாட்டியமாக தமிழ் நாட்டில் ஆடப்பட்டன எனில் மிகையாகாது.
சங்க இலக்கியங்களில் பத்து பாட்டு போன்ற பாடல்கள் மிகவும் நீளமானவை. பாரிபாடல் போன்றவை நடுத்தரமானவை. அகநானூறு, ஐங்குறுநூறு போன்றவை மிகவும் சிறியவை. ஆயினும் இவைகள் அனைத்துமே நாட்டியத்திற்கு பயன்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் தெருக்கூத்து என்ற பண்டைய நாட்டிய முறை இன்றும் வழக்கில் உள்ளது.
தெருக்கூத்தில் ஒரே கதை பல இரவுகளில் நடிக்கப் படுதல் உண்டு. அது போல சங்க கால பத்து பாடல்களும் பல இரவுகளில் நடிக்கப்பட்டு இருத்தல் கூடும். மேலும் தெருக்கூத்து ஆட்டத்தில் வெறும் பாடலாக சில பகுதியும் உள்ளன. அது போல சங்க இலக்கியத்தில் காணப்படும் பாடல்களில் சில இசைப்பதற்கும், அபிநயிப்பதற்கும் சில வாசகங்களாக நடிப்பதற்கும் பயன்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களின் 2300 பாடல்களில் 80 சதவீதத்திற்கு மேல் (அதாவது 1800 பாடல்கள்) சிருங்காரச்சுவையை அடிப்படையாகக் கொண்டவை. சிருங்காரத்தை இன்பம் என்றும் "அகம்" என்றும் கூறுவர். ஆதலின் இவை நடிப்பதற்கு மிகவும் சிறந்தவையாக கருதப்பட்டன. ஒரு வாழ்கின்ற வரலாற்றுத் தலைவனுடைய சிருங்காரத்தை வெளிப்படுத்தி ஆடினால் அவனது வாழ்நாளில் மட்டும் அது சிறப்புடையதாக காணப்படும். அவன் மறைந்த பிறகு பிறர் பார்த்து ரசிக்கக் கூடியதாக அது அமையாது. ஆதலின் கற்பனைப் பாத்திரமாகவோ அல்லது தெய்வ நாயகர்களாகவோ இருந்தாலே அனைவரும் பார்த்து ரசிக்க இயலும்.
இந்த உண்மையை நன்கு அறிந்த சங்கச் சான்றோர்கள் தாம் இயற்றும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வருவோராலும் ஆடவும் சுவைக்கும் வகையிலும் இயற்றியுள்ளனர். ஆதலால் தான் அகத்துறை பாடல்களில் தலைவனது பெயரையோ தலைவியினது பெயரையோ குறிக்கக் கூடாது என்பது இலக்கணம். ஆதலால் 2000 ஆண்டுகளாக இப்பாடல்கள் அழகிய இலக்கியங்களாக வாழ்ந்து வந்துள்ளன.
சங்க இலக்கியங்களில் குறிப்பாக கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டு தொகுதிகளையும் குறித்தல் வேண்டும். கலித் தொகையில் 150 பாடல்கள் உள்ளன. இவை அனைத்துமே சிருங்காரச் சுவையை முக்கியமாகக் கொண்டவை. கலி என்பது ஆடலின் ஒரு வகையாகும். இது முக்கியமாக துள்ளல் ஓசையை சிறப்பாகக் கொண்டது. "துள்ளல் ஓசை கலி என மொழிப" என்பார் தொல்காப்பியர். ஆதலின் துள்ளல் என்பது நாட்டியத்தை குறிக்கும். இன்றும் கேரளத்தில் ஒட்டந்துள்ளல் என்று ஒரு வகை நாட்டியத்தை கூறுகிறார்கள். கலி என்பதும் நாட்டியக் கூறு ஆகும். ஆதலின் கலித்தொகை பாடல்கள் அனைத்தும் சங்க காலத்தில் நாட்டியத்திற்காக எழுதப்பட்டவை எனலாம்.

இன்று கர்நாடக இசையில் பாடல்களுக்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று ஒரு இலக்கணம் உள்ளது போல் சங்க காலத்தில் கலிப் பாடல்கள் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற 4 பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். பாடல்கள் விரிவாகும்போது கொச்சகம், அம்போதரங்கம் என்ற பகுதிகளும் சேர்த்துக் கொள்ளப் படும். அவ்வாறு அமைக்கப்பட்ட 150 பாடல்களையும் தொகுத்து கலித்தொகை என்று அமைத்துள்ளனர். இதற்கு கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் சிவபெருமானின் தாண்டவங்களை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம் என்ற மூன்று ரெளத்தர தாண்டவங்களும் இக்கடவுள் வாழ்த்தில் இடம் பெறுகின்றன. இவை ரெளத்ரச் சுவையை எடுத்து உரைத்த போதிலும் சிருங்காரச் சுவையே அடிப்படையாக இப்பாடலில் காண்கிறோம். உமை அருகில் அமர்ந்து பாணி, தூக்கு, சீர், என்று தாளம் இட்டு சிவபெருமானை அன்போடு பார்ப்பதாக இன்பச்சுவை மேலோங்க எழுதப்பட்டுள்ளது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பகுதிகளாக திணைகளாக கலித்தொகை பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம், அங்கு வாழும் மக்கள், விலங்குகள், பறவைகள், பூக்கள் முதலியன பாடலிலே இடம்பெற்று அவை சிருங்காரச் சுவையை போதிப்பவையாக இயற்றப்பட்டுள்ளன.
ஆதலின் குறவர்கள், வேடர்கள், உழவர்கள், மீனவர்கள் ஆகிய நாட்டுப்புற ஆடல்களையும் நாட்டியத்தில் கொண்டு வர இயலும். ஆதலின் கலித்தொகை பாடல்கள் புதிய புதிய கருத்துக்களில் அமைப்புக்களில் சிருங்காரச் சுவையை வெளிப்படுத்தி நாட்டியத்திற்கும் ஏற்ற மிக உயர்ந்த பாடல்களாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்கள் பெரும்பாலும் அரசர்களுடைய வெற்றி தோல்விகளையும், புற ஒழுக்கத்தையும் எடுத்துரைக்கும் பாடல்கள் ஆகும். இவற்றில் ஐந்து பாடல்கள் "குறுங்கலி" என்ற பெயரில் உள்ளன. வையாவிக்கோ பெரும்பேகன் என்ற வள்ளல் இளமையும் அழகும் நிறைந்த தன் மனைவியாம் கண்ணகியை துறந்து வேறு ஒருத்தியிடம் செல்கிறான். கண்ணகி பிரிவுக்கு வருந்துகிறாள். ஆதலின் புலவர்கள் பேகனை கண்ணகியின் துயரைப் போக்க கேட்கின்றனர். இப்பாடல்கள் சிருங்காரச் சுவையை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. பிரிவினால் ஏற்படும் சிருங்காரத்தை "விப்ரலம்ப சிருங்காரம்" என்பர். அந்த அடிப்படையில் இவ்வைந்து பாடல்களும் அமைந்துள்ளன. இவற்றை நான்கு பெரும் புலவர்களான கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பாடி உள்ளனர். இவையும் நாட்டியத்திற்காக மிக அழகாக பயன்பட்டிருக்க வேண்டும். புறநானூற்றில் வரும் பேகன் கண்ணகயின் கதை பின்னர் சிலப்பதிகாரமாக மலர்ந்தது என்பர் சிலர்.
பரிபாடல் என்ற பாடல் வகையும் சிருங்கார சுவைக்கு முதலிடம் கொடுக்கும் என உரைகளிலிருந்து அறிகிறோம். 25 பாடல்கள் இப்போது பரிபாடல் தொகுப்பில் உள்ளன. இவற்றில் 15க்கு மேற்பட்டவை சிருங்காரச் சுவையே மேலோங்கி நிற்பவை. வைகை என்ற ஆற்றை பாடுகின்ற பாடல்கள் அனைத்துமே ஆற்றைப் பின்னணியாகக் கொண்டு சிருங்காரத்தை பாடி ஆட இயற்றப்பட்டவை. அதே போல் செவ்வேள் ஆகிய முருகனைப் பற்றிய பாடல்களும் இன்பச் சுவை மேலோங்கியவையாக இயற்றப் பட்டுள்ளதைக் காணலாம். தற்காலத்தில் சிருங்காரத்தை வெளிப்படுத்த கண்ணன் ஆய்ச்சியர் ஆகியோரை மையமாகக் கொண்டே பெரும்பாலும் ஆடுகின்றனர். ஆனால் சங்க காலத்தில் முருகனே சிருங்காரத்தின் தலைவனாகச் சித்தரிக்கப்பட்டு அவனை மையமாகக் கொண்டே இன்பச் சுவையை பாடவும் ஆடவும் பெற்றதைக் காண்கிறோம். பரிபாடல்களில் உள்ள முருகனைப் பற்றிய பாடல்களும் சிலப்பதிகாரத்து குன்றக் குரவை பாடல்களும் இதைத் தெளிவாக்குகின்றன. திருமாலோ தெய்வமாகவே சிறப்பாக போற்றப்படுகிறார்.
நாட்டியத்தில் இன்பச் சுவையே எல்லா மக்களாலும் கண்டு ரசிக்கக்கூடிய சுவையாகும். இப்போது நாட்டியத்திற்கு பயன்படும் பாடல்கள் பெரும்பாலும் கடந்த ஒரு 150 ஆண்டுகளுக்குள்ளாக இயற்றப்பட்ட பாடல்களாகும். பெரும்பாலான நாட்டியக் கலைஞர்கள் இந்த பாடல்களையே மீண்டும் மீண்டும் ஆடி வருகின்றனர். ஆனால் 2000 ஆண்டுகளுக்கும் முன்னர் இயற்றப்பட்ட அருமையான சுவையான தமிழ் பாடல்கள் உள்ளன. இவை இசைப்பதற்கும் ஆடுவதற்கும் இயற்றப்பட்டவை.
நல்ல அழகிய இப்பாடல்கள் வாசனை மலர்கள் போல் நம்மிடத்தில் ஏராளமாக இருக்கின்றன. இப்பாடல்களைப் பயன்படுத்தி நமது மரபை கலையை வெளிப்படுத்த பெரும் வாய்ப்பு உள்ளது.

தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.

இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்­கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.
சதிர்நடனத்திற்கு இன்றியமையாதது வாய்ப்பாட்டு. இது கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டது. மிருதங்கம், இதற்கு ஒரு முக்கியமான பக்கவாத்தியமாகும். நட்டுவனார் ஆட்டுவிக்க உபயோகிக்கும் கைத்தாளம் நடனத்திற்கு இயக்குனர் பயன்படுத்தும் கருவியாகும். நட்டுவனார் என்பவர் குருவாகவும் மேடையில் சொற்கட்டுக்களை சொல்பவராகவும் இருக்கலாம். இந்த சொற்கட்டுகள் பாட்டுக்கு இடையேயும் கூட வரும். நட்டுவாங்கம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், முகவீணை, துத்தி ஆகியவை சேர்ந்து இதற்கு இசைக் குழுவாக விளங்கி வந்தது.

சதிரில் அணியும் ஆடைகள் பல வண்ணங்களில் இருக்கும். தங்க நிறத்தில் அல்லது தென்னிந்திய கலாச்சார வழக்கமான தங்கத்தில் கற்களை பதித்த நகைகளையே அணிவர். வெள்ளி நிறத்தில் உள்ள நகைகளை உபயோகிப்பதில்லை.

பரத நிருத்தியத்தில் முழுமையான தேர்ச்சி பெற்றால் எந்த வகையான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கலாம். பாரதத்திலும் இன்னும் வெளி நாடுகளிலும் கூட இது புகழ் பெற்று விளங்குகிறதென்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்.

மேலே கூறப்பட்டுள்ள இந்த நடனத்தின் குணாதிசயங்கள் சென்ற இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்து வரும் மரபின் அடிப்படையில் குறிப்பிட்ட விவரங்களாகும்.
கவிதை, இலக்கியம், இசை, ஆகியவற்றிலும் ஒருவனுக்கு ஈடுபாடு ஏற்படச் செய்கிறது. தலை சிறந்த நடன ஆசிரியர்கள். ஆட்டக் கலைஞர்கள் இலக்கியத்திலும் சிறிதளவேனும் ஆர்வமும் புலமையும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக. டாக்டர் பத்தமா சுப்பிரமணியத்தை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல. சிறந்த இசையமைப்பாளரும் கூட. கூடவே இலக்கிய இரசனையும் கொண்டவராகத் திகழ்கிறார். இதனை அவர் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் கம்பன் புகழ் பாடித் தமிழன்னைக்குத் தொண்டாற்றி வரும் கம்பன் கழகத்தினர் நடத்திய கம்பன் விழாவில் நிகழ்த்திய நடனக் கச்சேரி மூலம் உணர்த்தியுள்ளார்.

கம்பநாட்டாள்வாரின் இராமாயணப் பாடல்களுக்குத் தனது பாணியிலேயே நாட்டியம் அமைத்து நடித்துக் காண்பித்தது இன்றும் பார்வையாளர்களின் மனங்களில் அழியா ஒவீயமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டியத்தில் லோக தர்மி, நாட்டிய தர்மி, என்னும் இரு வகை காணப்படுகின்றன. லோக தர்மி மூலம் பத்மா சுப்ரமணியம் கம்பநாட்டாள்வாரின் பாடல்களுக்கு அபிநயம் செய்வதை நாம் மறக்க முடியாது. லோக தர்மியானது நாட்டிய தர்மியைக் காட்டிலும் மக்களைச் சென்றடைகிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது.


டாக்டர் பத்மா சுப்ரமணியம் இருபது ஆண்டுகளுக்கு முன் கொழும்பில் வந்து பரத நாட்டியம் ஆடிய பின். "பத்மாவின் பரதம் நிலைக்குமா?" என இலங்கையிலுள்ள தமிழ் தினசரிப் பத்திரிகைகள் கேள்விகளைத் தொடுத்தன. ஆனால் இன்றுவரை பத்மாவின் பரதம் நிலைத்திருக்கிறது என்பதே உண்மை.
பரத நாட்டியக் கலையானது மற்றவரின் திறமைகளைப் போற்றவும் இரசிக்கவும் தூண்டுகோலாய் அமைகிறது. மற்றவர்களிடமுள்ள திறமைகளை ஆற்றல்களை இனங்கண்டு மதித்து வாழப் பழக்குகிறது. ஒவ்வொரு கலைஞனிடமும், ஆசிரியரிடமும் ஒரு தனித்துவம் காணப்படுகிறது. ஒருவர் நடனத்தை சுத்தமாக அதாவது அழுத்தந் திருத்தமாகக் கற்பிப்பதில் கவனஞ் செலுத்தி அதில் பாண்டித்தியம் உடையவராகக் காணப்படுவார் இன்னொருவர் ஆக்கத் திறனுள்ளவராக விளங்குவார். மற்றொருவர் குழு நடனங்களைச் சிறப்பாக அமைக்கும் திறமை உள்ளவராக இருப்பார் இன்னுஞ் சிலர் நாட்டிய நாடகங்களை வெகு நேர்த்தியாக வடிவமைப்பதில் தமது சாமர்த்தியத்தை வெளிக்காட்டுவர். வேறு சிலர், மரபு வழி வந்த பரத நாட்டியத்தைப் பயிற்றுவிப்பதிலும், கிராமிய நடனங்களை வடிவமைப்பதிலும் ஆற்றல் உடையவர்களாக விளங்குகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு நடன ஆசிரியரிடத்திலும் ஒரு தனித்துவம் காணப்படுகிறது. மற்றைய ஆசிரியர்களிடமும் கலைஞர்களிடமும் காணப்படுகின்ற திறமைகளைக் கண்டு அழுக்காறடையாது அவற்றைப் போற்றிப் பெருமைப்பவதற்கு பரத நாட்டியக் கலை வழி வகுக்கிறது.

தவிர மனித ஆளுமைப் பண்புகளில் ஒன்றெனக் கருதப்படும் சொல்வன்மையை விருத்தி செய்வதற்கும் பரத நாட்டியம் உதவுகிறது. திருவள்ளுவரும் தனது குறட்பாவில்

கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாகும்
வேட்ப மொழிவதம் சொல்" (திருக்குறள்:643)

எனக் கூறியுள்ளார். அதாவது கேட்பவர்களைத் தன்னோடும் பிணைத்துக் கொள்கின்ற கவர்ச்சி உடையதாகவும் பகையுற்றவனும் தன்னை விரும்பச் செய்வதாகவும் பேசுவதே சொல்லாற்றல்.
மனித ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியம்

மனித ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியத்தின் பங்களிப்பினை நாம் ஆராயு முன். மனிதன் என்பவன் யார் என்பதையும் மனித ஆளுமைக்குரிய வரைவிலக்கணங்கள் யாவை என்பதையும் அறிந்து கொள்ளுதல் அவசியமானதாகும்

மனிதன் என்னும் சொல்லுக்கு "சிந்திக்கும் உயிரி" என்பதே கருத்து. மன் என்னும் சமஸ்க்ருத வினையடியிலிருந்து பிறந்த பதம் தான் மனிதன் என்னும் சொல். மன்- என்றால் சிந்தித்தல் என்று கருத்தாகும். ஆகவே மனிதன் என்பவன் சிந்திக்கும் வல்லமை உடையவன் என்பது தெளிவாகிறது. மனிதன் என்பவன் விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவன் என்பதனை டார்வினின் கூர்ப்புக் கொள்கை விளக்குகிறது.

ஆறறிவு உடையவன் மனிதன் எனவம். பகுத்தறியும் திறன் உடையவன் என்பதும் அறிஞர்கள் ஆராய்ந்தறிந்த முடிவாகும். ஒரு தனி மனிதனைப் பூரணமாக்குவதே கல்வியின் நோக்கம் எனின் அதற்கு நடகத்தின் பங்களிப்பு எத்தகையது என்பதை நாம் ஊகித்தறியலாம். இற்றைக்கு இரண்டாயிரத்து நானூநுறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானியான பிளேட்டோ என்பவர் "இசை நடனம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவனே கல்விமான்" ஆவான் எனக் கூறியுள்ளார்.

"கல்வி என்பது குழந்தைகளிடமிருந்து முழூ மனிதனை வெளிக் கொணர்வது. முழூ மனிதனை உருவாக்குவது அவனுடைய ஆளுமை. எனவே மனிதனி உடல், உள்ளம், ஆன்மா, இருதயம் என்பவற்றை ஒருமித்த வகையில் விருத்தி செய்து ஆளுமையடையச் செய்வதே கல்வியின் பயனாகும்" என்பதே காந்தியடிகளின் கல்வித் தத்துவ விளக்கமாகும்.
பரத நாட்டியம் தனி மனிதனின் ஆளுமையை விருத்தி செய்வதற்கு எவ்வளவு; வழி முறைகளில் அனுசரணையாக அமைகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஆளுமைக்குரிய வரைவிலக்கணத்தையும், ஆளுமைப் பண்புகளையும். ஆளுமையை எவ்வாறு அளவிடலாம் என்பதையும் அறிந்து கொள்வது பொருத்தமாகும்.

ஆளுமை என்பது ஒருவருடைய தோற்றம். மனப்பாங்கு தலைமை தாங்கும் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது எனலாம். மேலும் ஒரு தனிநபரிடம் காணப்படும் எல்லா குணங்களும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்ததுதான் ஆளுமை எனவுங் கூறலாம். அதாவது ஒவ்வொரு தனி மனிதனும் திறமை. அடைவு ஆகியனவற்றில் மாத்திரமன்றி, மன எழுச்சி, கவர்ச்சிகள், மனப்பான்மைகள், பற்றுக்கள் ஆகியனவற்றிலும் வேறுபடுகின்றான். இவ் இயல்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான தன்மையே ஒருவனின் ஆளுமையாகும்.

ஆளுமை பற்றிக் கல்விமான்களும், உளவியலாளர்களும். அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களை நோக்குவோம்.

ஆளுமை பற்றிய வரைவிலக்கணங்களில் அதன் தனித்துவம். அமைப்பு, முழுமை ஆகிய இயல்புகள் வலியுறுத்தப்படுகின்றன. ஒரு சமூக நிலைமைக்கு ஒருவனுடைய அகம் கொண்ட உடல்-உள்ளத் தூண்டற் பேறுகளின் ஒருமையான அமைப்பே ஆளுமை என்று பேர்ட் என்னும் கல்வியியலாளர் கூறியுள்ளார்.
"ஒருவன் தனது சூழலுடன் கொண்ட தனியான பொருத்தப்பாடுகளை அவனுடைய அகத்தினுள் தீர்மானிக்கும் உளவியல் முறைகளின் அமைப்பே ஆளுமை என்று ஆல் போர்ட் என்னும் உளவியலறிஞர் கூறியுள்ளார். அதாவது சூழலுக்குத் தக்கவாறு இசைவாக்கம் அடைந்த உளத்தொகுதிகளின் ஒரு இயக்க நிலையே ஆளுமை ஆகும் என்பதே அவருடைய கருத்தாகும்.

ஒருவரிடம் காணப்படும் பற்றுணர்வும் சமூக மனப்பான்மையும் சேர்ந்த அடுக்கமைப்பும் ஆளுமையாகும் என செறில் என்னும் அறிஞர் கூறுகிறார்.

ஒருவனுடைய நடத்தைகள், மனப்பான்மைகள், திறமைகள், நாட்டங்கள் ஆகியவற்றின் தனியான ஒருங்கிணைப்பே ஆளுமை என்பதே மண் என்னும் அறிஞரின் கருத்தாகும். அதாவது ஒருவனுடைய அமைப்பு. பழக்க வழக்கங்கள். ஆர்வம், ஆற்றல், மனப்பாங்கு, உளச்சார்வு ஆகியவற்றின் மிக லயமான ஒரு ஒருமைப்பாடே ஆளுமையாகும் என்பதே இவரது கருத்து.

பொறுப்புணர்ச்சி, நேர்மை, நல்லொழுக்கம், பரந்த மனப்பான்மை, உறுதியான சிந்தனை, முகமலர்ச்சி, நல்ல சமூக இசைவுகள் ஆகியவற்றை எவன் ஒருவன் உடைத்தாய் இருப்பானோ அவனே முதிர்ந்த ஆளுமையை உடையவன் என மதிக்கப்படுவான்.

இக் கூற்றுகளின்படி ஆளுமையைப் பல காரணிகள் கட்டு;ப்படுத்துவதால் எந்த இருவரிடையேயும ஒரே விதமான ஆளுமை காணப்படு;வதில்லை. இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த குழந்தைகளில் கூடஇ சுறுசுறுப்பு வாயாடித்தன்மை. கோபம் இ கவலை முதலிய உணர்வுகள் விவேக ஈவு ஆகிய இயல்புகளில்; ஆளுமை வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இனி, ஒரு தனி மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியத்தின் பங்களிப்பு பற்றி நோக்குவோம்.

பரத நடனக் கலையானது ஒருவனின் உடைலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தாளத்திற்கேற்ப பாதங்கள் நர்த்தனம் செய்வதும் ஒரு கட்டுக் கோப்புக்குள் தான் நடைபெறுகிறது. இதனைத்தான் லயம் என்கிறோம். லயத்துடன் ஆட வேண்டும் என்றால் உள்ளமும் லயித்துப் போக வேண்டும். மனமானது உடலைக் கட்டுப்பா ட்டிற்குள் வைத்திருக்கும். ஆகவே, இவ்விரு அம்சங்களிலும் நடனம் ஒருவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவுகிறது எனில் மிகையாகாது.

தவிர, ஆற்றல்களை விருத்தி செய்து ஒருவனின் ஆளுமையை வளர்ப்பதற்கு பரத நாட்டியம் எவ் எவ் வகைகளில் உதவி புரிகின்றது என்பதை ஈண்டு நோக்குவோம். ஆற்றல்கள் பலவகைப்படும். அவற்றுள், அறிவு, திறன், முதலியவற்றிலும் கற்பனை, சிந்தனை, செயற்பாடு, தலைமைத்துவம், நினைவாற்றல், வீரம் நெறியாள்கை போன்றவற்றிலும் ஒருவனிடத்தே காணப்படும் ஆற்றல்களை பரதம் வளர்க்கிறது.

ஆற்றல்கள் பலவகைப்படும். அவற்றுள், அறிவு, திறன், முதலியவற்றிலும் கற்பனை, சிந்தனை, செயற்பாடு, தலைமைத்துவம், நினைவாற்றல், வீரம் நெறியாள்கை போன்றவற்றிலும் ஒருவனிடத்தே காணப்படும் ஆற்றல்களை பரதம் வளர்க்கிறது.

Tuesday, August 31, 2010

மத அடிப்படைவாதம்,ஜனநாயகம்,பயங்கரவாதம்:அடிமைவாதத்தின் கோரமுகங்கள்



றியாத் மாநகரில் வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் குடியிருப்பு அது. சகல வசதிகளையும் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடங்களைச் சுற்றி நாற்புறமும் ஆளுயர மதில்கள். அங்கே வசிப்பர்கள் அனைவரும் அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிக சம்பளம் வாங்கும் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். சாதாரண மனிதர்கள் எவரும் அந்தக் குடியிருப்புப் பக்கம் செல்லமுடியாது. நேரம் இரவு 11.20 மணி. வரப்போகும் ஆபத்தை உணராத குடியிருப்பைப் பாதுகாக்கும் வாயிற்காவலர்கள், தம்மை நெருங்கிய அமெரிக்கத் தயாரிப்புக் காரைக் கண்டு அசட்டையாக இருந்தார்கள். திடீரெனக் காருக்குள் இருந்தவர்கள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். ஒரு நிமிடத்திற்குள் காவலரண் தாக்குதல் செய்பவர்களின் வசமானது. தொடர்ந்து நுளைவாயில் கதவு திறக்கப்பட்டது. இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த ட்ரக் வண்டியொன்று விசையுடன் ஓடிச்சென்று அடுக்குமாடிக் கட்டடமொன்றுடன் மோதியது. காதைச் செவிடாக்கும் பயங்கர வெடிச்சத்தம் மாநகரின் உறக்கத்தைக் கலைத்தது. இவ்வளவும் 15 நிமிடத்திற்குள் நடந்தேறின.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இந்தத் தாக்குதல் மேற்குலக நாட்டு பிரசைகளை நோக்கிக் குறிவைத்ததாகத் தோன்றும். இருப்பினும் இம்முறையும் சர்வதேசச் செய்தி ஊடகங்களால் ஒரு முக்கிய உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அமெரிக்கக் கம்பனிக்குக் குறிவைக்கப்பட்ட விடயம் பலருக்குத் தெரியாது. "வினெல் கோப்ரேஷன்" என்ற சவூதி அரேபிய இராணுவத்தைப் பலப்படுத்த வந்துள்ள தனியார் வர்த்தகப் பாதுகாப்பு நிறுவனம்தான் தாக்குதல்காரரின் இலக்கு.

"வினெல் கோப்ரேஷன்" தொடக்கத்தில் அமெரிக்க லொஸ் ஏஞ்ஜலஸ் பகுதியில் அணைகட்டும் பணிகளில் ஈடுபட்டது. பின்னர் தனது வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கோடு இராணுவ வர்த்தகத்தில் இறங்கிவிட்டது. சீனாவின் உள்நாட்டுப்போரில் சியாங்கை சேக்கின் பாஸிச இராணுவத்திற்கு ஆயுதத் தளபாட உதவி வழங்கியது. வியட்னாம் போரின்போது இராணுவ நோக்கத்திற்கான அமெரிக்க இராணுவத்திற்கு விமான நிலையங்களைக் கட்டிக்கொடுத்தது. கிரெனெடாவில் சி.ஐ.ஏ உடன் சேர்ந்து கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட இடதுசாரிப் பிரதமரின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தது. தொண்ணூறுகளில் மிகப்பெரிய பாதுகாப்பு வர்த்தக நிறுவனமான "கார்லைல் குறூப்", "வினெல் கோப்ரேஷன்" ஐ வாங்கியது. தாய் நிறுவனமான கார்லைல் குறூப்பின் தலைவர் பிராங் கார்லூச்சி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ரீகனின் செயலாளராகப் பதவி வகித்தவர். இன்றைய ஜனாதிபதி புஷ் ன் குடும்பத்திற்கும் இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

"வினெல் கோப்ரேஷன்" சவூதி அரேபியாவில் என்ன செய்கிறது ? இந்த நிறுவனம் சவூதி அரேபிய அரசுடன் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. வேலை ? எண்ணைக் கிணறுகளபை; பாதுகாப்பது, சவூதி அரேபிய இராணுவத்திற்குப் பயிற்சி ஆலோசளை வழங்குவது, மன்னர் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்குவது... நேரடியாகச் சொன்னால், இக் கம்பெனி ஒரு கூலிப்படையாக சவூதி அரேபியாவில் தொழிற்படுகிறது. தனது சொந்தப் பிரஜைகளை நம்பாத சவூதி மன்னர் கடந்த இருபத்தைந்து வருடங்களாக வினெலை தனது நம்பிக்கைக்குரிய பாதுகாப்புப் படையாக வைத்துக்கொண்டுள்ளார். 1979 ம் ஆண்டு (ஈரானால் தூண்டப்பட்ட) கிளர்ச்சியாளர்கள், மெக்காவில் வருடாந்தம் இடம்பெறும் புனித யாத்திரையைப் பயன்படுத்தி, மெக்கா பெரிய பள்ளிவாசலை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மன்னரின் உத்தரவின்பேரில் கலகத்தை அடக்க வினெல் கூலிப்படை மெக்கா சென்றது. ஆயிரக்கணக்கான கலகக்காரரை கொன்று குவித்தது. இந்தச் சம்பவம் அன்று உலக நாடுகளின் கண்களை, காதுகளை எட்டாவண்ணம் மறைக்கப்பட்டது. ";இன்னொரு ஈரான்" உருவாவதைத் தடுப்பது முக்கியம் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரீகன் படுகொலைகளை நியாயப்படுத்தினார்.

ஈரான் என்னதான் மத அடிப்படைவாத அரசாக இருந்தபோதும், சவூதி அரேபியாவின் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத ஆட்சியின் தீவிரத் தன்மையளவிற்கு இல்லை. விமான நிலையச் சுங்கப்பரிசோதனையின் போது, சாதாரண சினிமாச் சஞ்சிகையின், கவர்ச்சி நடிகைகளின் படங்கள் மீது கறுப்பு வண்ணம் பூசப்படும், பிற மதத்தவர்கள் தமது வீட்டில் கூட தெய்வ உருவப்படங்களை வைத்திருப்பதற்குத் தடை, பெண்கள் வாகனம் ஓடத்தடை, பேரூந்து வண்டிகளில் பெண்களுக்கெனப் பின்புறத்தில் ஒதுக்கப்பட்ட தனியான இடங்கள், பூங்காக்களில் ஆண்களுக்கு மட்டும் அல்லது குடும்பங்களுக்கு மட்டும் என வேறுபாடுகள் கொண்ட இட ஒதுக்கீடு, பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட உயர்கல்வியும் , வேலைவாய்ப்பும், நாடுமுழுவதிலும் எந்த இடத்திலும் சினிமா இல்லை, மதுபானத் தடை, சட்டவிரோதமாக மதுதயாரிப்போரின் சிறையடைப்பு, களவுக்குக் கைவெட்டுதல், கள்ள உறவு வைத்த பெண்களைச் சந்தியில் வைத்துக் கல்லால் எறிந்து கொல்லுதல் போன்றவையெல்லாம் சவூதி அரேபியாவின் சாதாரண விடயங்கள். இந்நாடு எத்தனை தூரம் மத அடிப்படைவாதத்தில் ஊறியுள்ளதென்பதற்கான சில சான்றுகள் இவை.

சவூதி அரேபியாவில் "ஜனநாயகம்" , "சுதந்திரம்" போன்ற சொற்களைப் பாவிப்பதே குற்றம் என்று சொல்லுமளவிற்குச் சர்வாதிகார ஆட்சி நிலவுகிறது. மன்னர் குடும்பம்தான் ஜனாதிபதி, மந்திரிகள், பாராளுமன்றம், அரசாங்க அதிகாரிகள் எல்லாம். (மன்னரின் நூற்றுக்கணக்கான மனைவிமாருக்குப் பிறந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் போதும் முழு நாட்டையும் நிர்வகிக்க). சாதாரண குடிமக்கள் உழைத்துச் சாப்பிடும் வேளை, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சும்மாவிருக்க அரசாங்கம் பணம் கொடுக்கிறது. ஈராக்கில் சதாம் கட்டிய ஒரு டசின் மாளிகைகளைப்பற்றி உலக நாட்டுப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளின. ஆனால், சவூதி மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான இருபதிற்கும் குறையாத ஆடம்பர மாளிகைகள் பற்றி யாரும் கதைப்பதில்லை. முன்னாள் மன்னர் பஹ்த் கடைசியாக ஸ்பெயினுக்கு உல்லாசப் பிரயாணம் போனபோது தன்னோடு 50 பென்ஸ் கார்களையும் 350 சேவகர்களையும் எடுத்துச்சென்றார்.

இவ்வளவிருந்தும் சவூதி அரேபியாவை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை ஏன் எந்தவொரு செய்தி ஊடகமும் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத, சர்வாதிகார ஆட்சியாளர்களைப்பற்றி அறிவிப்பதில்லை? எல்லாம் சவூதி அரேபியா மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியென்ற காரணத்தால்தான். பெரும்பாலான சவூதி அரேபியாவின் இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. அதேபோல பெருமளவு எண்ணை ஏற்றுமதியாகுவதும் அமெரிக்காவிற்குத்தான். (சவூதி அரேபியா உலகிலேயே முதலாவது எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடு). மத்திய கிழக்கில் பெருமளவு அமெரிக்க ஆயுதங்களை, யுத்த விமானங்களை சவூதி அரேபியா வாங்கிக் குவித்து வருகின்றது. மலிவு விலையில் எண்ணை வாங்கும் அமெரிக்கா, பின்னர் ஆயுத விற்பனை மூலம் "பெற்றோலிய டொலர்களை" திரும்பப் பெற்றுக்கொள்கிறது.

1991 ம் ஆண்டு வளைகுடாப் போர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. யுத்தத்திற்கான செலவில் கணிசமான பகுதியை சவூதி அரேபியா பொறுப்பெடுக்கவேண்டுமெனக் கூறியது அமெரிக்கா. மில்லியன் டொலர்களை விழுங்கிய போர்ச் செலவுகள் சவூதிப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே எழுபதுகளின் மத்தியில் உருவான உலக பொருளாதாரப் பின்னடைவு வேறு சேர்ந்துகொண்டது. இதுவும் போதாதென்று (மேற்குலக நாடுகளால் வற்புறுத்தப்பட்ட) எண்ணை விலையிறக்கம் ஏற்றுமதி வருமானத்தைக் குறைத்தது. விளைவு ? வேலைவாய்ப்புகள் குறைந்தன, மாதாந்த வருமானம் குறைந்தது, சலுகைகள் நிறுத்தப்பட்டன. 1980 ல் ஒரு தனிநபரின் சராசரி வருட வருமானம் 28000 டொலர்களாக இருந்தது. இது அன்றைய அமெரிக்கரின் வருமானத்திற்குச் சமமானது. இன்று சவூதி அரேபிய தனிநபர் வருமானம் 7230 டொலர்களாகக் குறைந்துவிட்டது. இதேநேரம் அமெரிக்காவில் இவ்வருமானம் 34100 டொலர்களாக உயர்ந்துவிட்டது. விரைவான சனத்தொகைப் பெருக்கமும் பெருநகரங்களை நோக்கிய இடப்பெயர்வும் நிலைமையை மோசமடைய வைத்தது. இன்று சவூதி அரேபிய அரசாங்கம் 55 பில்லியன் டொலர்களுக்குக் கடனாளி என்றால் நம்புவது கடினமாகத்தானிருக்கும்.

சவூதி அரேபியாவில் வறுமை என்பது சில வருடங்களுக்கு முன்பு கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கமுடியாத விடயம். அங்கே வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் தொகை 20 வீதமாக இருக்கலாம் எனப் புகலிடத்தில் அரசியல் நடாத்தும் எதிர்க்கட்சி ஒன்று தெரிவித்தது. தலைநகரம் றியாத்திலும், ஜித்தாவிலும் சில பகுதிகள் ஏழைகள் வாழும் சேரிகளாகக் காட்சியளிக்கின்றன. திருட்டு, போதைப்பொருட்பாவனை என இன்னபிற குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. தெருவோரங்களில் பிச்சையெடுக்கும் பெண்களைக் காண்பது சாதாரணமாகிவிட்டது. இருப்பினும் குறிப்பிட்ட சேரிப்பகுதிகளினுள் வெளியிடத்து ஆட்கள் போவது இலகுவானதல்ல. நிலைமையைப் பார்க்கப்போன பத்திரிளையாளர்களைத் தடுத்து பொலிஸ் திருப்பியனுப்பியுள்ளது. உதவி நிறுவனத்தின் சார்பிலும் யாரும் அங்கு செல்லமுடியாது.

பல வருடங்களுக்கு முன்பு பிற அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியதால் பிரஜா உரிமை பெற்றவர்களின் பிள்ளைகள், விவாகரத்துப் பெற்ற அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தொழிற்தேர்ச்சி பெறாத சவூதிப் பிரஜைகள் ஆகியோரே அதிகமாக வறுமையில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சனைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேலையில்லாதோர் தொகை 8 வீதம். ஆனால், உண்மைத் தொகை 25 வீதமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. வருடந்தோறும் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு, இரண்டு மடங்கு பேர் விண்ணப்பிக்கின்றர். இப்படியான நிலையிலும் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டவரைத் தொடர்ந்தும் வேலைக்கு வைத்திருக்க விரும்புகின்றன. ஒரு சவூதிப் பட்டதாரி 800 டொலர்களை மாதச் சம்பளமாகக் கேட்டால் அதே வேலையை அனுபவமிக்க இந்தியப் பட்டதாரி 400 டொலருக்குச் செய்யத் தயாராகவிருப்பதுதான் இதற்குக் காரணம். ஒரு சவூதிப்பிரஜை தன்னுடைய குடும்பத்தையும் பராமரிக்கவேண்டிய நிலையிலிருக்கிறான். மேலும் வேலையில்லாப் பிரச்சினை காரணமாக ஆண்களுக்குத் திருமணமாவதும் தள்ளிப்போடப்படுகின்றது. அங்கே மணம் முடிக்கவேண்டிய ஆண், சீதனம் கொடுக்கவேண்டுமென்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். இன்னொரு பக்கத்தில் துப்பரவுத் தொழில் போன்றவற்றைச் செய்யும் அடிமட்டத் தொழிலாளர்கள் இப்போதும் வெளிநாட்டவர்கள் தான். அவர்கள் மாதாந்த வருமானம் 80 டொலர்களாகும். அத்தோடு எந்தவிதத் தொழிலாளர் நல உரிமையுமற்று அவர்கள் சுரண்டப்படுகின்றனர். சவூதி அரேபிய அரசு தனது உழைப்பாளர் வர்க்கத்தை இவ்வாறு தந்திரமாகப் பிரித்து வைத்துள்ளது.

இதுவரை கூறப்பட்ட பின்னணியின் அடிப்படையிலேயே சவூதி அரேபியாவில் அல்-கைதாவின் வளர்ச்சியைப் பார்க்கவேண்டும். எண்பதுகளில் "சர்வதேசக் கம்யூனிசத்தை" எதிர்த்த அணியில் சவூதி அரேபியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. உள்நாட்டுப் பிரச்சனைகளை மறைக்க தனது நாட்டு இளைஞர்களை ஆப்கானிஸ்தானுக்கு சோவியத் இராணுவத்தை எதிர்த்துப் போராட அனுப்பி வைத்தது. கடைசியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் (பனிப்) போர் முடிந்து நாடு திரும்பியவர்களுக்கு, அமெரிக்க அடிவருடி மன்னரின் ஊழலாட்சி கண்ணுக்குப் புலப்பட்டது. அப்போது ஆரம்பித்ததுதான் அல்-கைதாவின் சவூதி அரேபிய விடுதலைப் போராட்டம். ஆடம்பரமாக வாழ்ந்து, ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் மன்னர் "முஸ்லீம் அல்ல, மக்களின் எதிரி" என அல்-கைதா அறிவித்தது. வறுமையில் வாடிய வேலையற்ற இளைஞர்கள் அல்-கைதாவினால் கவரப்பட்டனர். இன்று சவூதி அரேபியாவில் சுதந்திரமான தேர்தல் நடாத்தப்பட்டால் பின்லாடன் ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ளதை எதிரிகளும் ஒப்புக்கொள்கின்றனர்.

2001 செப்டம்பர் 11 ல் நிகழ்ந்த நியூ யோர்க் தாக்குதலுடன் உடனடியாக ஆப்கானிஸ்தான் தொடர்புபடுத்தப்பட்டது. விமானக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் சவூதி அரேபியப் பிரஜைகள் என்ற விடயத்திற்கு அன்று யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தத் தாக்குதலில் அல்-கைதா தான் பொறுப்பு என்பது, இதுவரையும் உறுதியாகத் தெரியாவிட்டாலும், செப்டம்பர் 11 க்கும் பிற்பாடு, சவூதி அரேபியாவில் அல்-கைதாவிற்கு ஆதரவு பெருகியுள்ளது, மறுக்கவியலாத உண்மை. இதற்கு அமெரிக்க அரசின் சர்வதேச அளவிலான பிரச்சாரமும் காரணமாக இருக்கலாம். சவூதி ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தபோதும் அவர்களைக் குறிவைக்கும் தாக்குதல்களை பின்லாடன் ஆதரிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இருப்பினும், சவூதி அரசாங்கம் அல்-கைதாவை அடக்குவதில் தீவிரம் காட்டுகிறது. (பார்க்க: அறிக்கை 17- ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம்).

"சவூதி அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்குவதில் தீவிரம் காட்டவில்லை. றியாத் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை" என்று அமெரிக்க அரசு அறிவித்தது. இந்தக்கூற்று நகைப்பிற்கிடமானது. ஏனெனில் உலகில் சவூதி அரேபியாவிற்கு நிகரான சர்வாதிகார ஆட்சியை காண்பதரிது. அங்கே அரசியல் நிர்ணயச்சட்டம் எதுவும் கிடையாது. மன்னர் சொல்வதுதான் சட்டம். அப்படியான நிலையில் அரசுக்கு எதிராகக் கதைப்பதற்குக் கூட யாரும் துணியமாட்டார்கள். மேலும் றியாத் தாக்குதலுக்கு இலக்கான வினெல் நிறுவனம் சவூதி அரசின் முழுப்பாதுகாப்பையும் பொறுப்பெடுத்திருந்தது. இப்போது யார் யாரைப் பாதுகாக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் போரின் பின்னர் அல்-கைதாவை அடக்கிவிட்டோம் என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்த பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்திருப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அண்மையில் முடிந்த ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போர் அந்தப் பிராந்தியத்தில் எதிர்விளைவுகளை உண்டாக்குமென்பது, மத்தியகிழக்கு அரசியலை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகைகளில் கூட இது பற்றி விமர்சனக் கட்டுரைகள் வந்திருந்த போதும், சாதாரண அமெரிக்கர்கள் தம் நாட்டுப் பத்திரிகைகள் கூடவா வாசிப்பதில்லை எனப் பலர் வினவுமளவிற்கு நிலைமை இருக்கிறது. உண்மையில் தன்நாட்டு மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமெரிக்க அரசின் வெளிநாட்டு அரசியல் போக்கு இன்னமும் மாறவில்லை. சாதாரண அரபுமக்கள் அமெரிக்க முதலாளித்துவத்தை அல்ல அதன் வெளிவிவகாரக் கொள்கைகளையே எதிர்க்கின்றனர்.

இருப்பினும் அமெரிக்க அரசின் வெளிவிவகாரக் கொள்கையும் முதலாளித்துவப் பொருளாதாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை என்பது மத்திய கிழக்கு அரபுக்களுக்கு புரிய இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். ஆனால், சித்தாந்த ரீதியாகச் சீரமைக்கப்படாத தன்னெழுச்சியான எதிர்ப்பியக்கங்கள் வளர்ந்து வருகின்றன. அவைகள் "பேசும் மொழி" இஸ்லாமாக இருப்பதனால் பிறருக்கு இதைப்புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் அரபு நாடுகளின் அரசாங்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லாவகையான எதிர்ப்பையும் முறியடித்த பின்னர், மக்களுக்குத் தனது எதிர்ப்பை காட்ட இருக்கும் ஒரே வழி மதம் மட்டும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளூர் சந்தைகளில் வந்து குவியும் மேலைத்தேச நுகர்பொருட்களின் தாக்கம் உருவாக்கும் எதிர்விளைவுகள் அளவிடமுடியாதவை. உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் வீழ்ச்சி அதனைச் சார்ந்திருக்கும் மக்களின் வருமானத்தைப் பாதித்து வறுமைக்குத் தள்ளிவிடுகின்றது. மேலும் உள்நாடு உற்பத்திகள் அந்தப்பிரதேச மக்களின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. இதற்கு மாறாக மேற்கத்தைய பாவனைப் பொருட்கள் கலாச்சாரச் சீரழிவை உருவாக்குகின்றன. குறிப்பாக, அமெரிக்கா தனது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக பிறநாட்டுக் கலாச்சாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டித்தான், ஈரானிய மத அடிப்படைவாதத் தலைவர் கொமெய்னி "அமெரிக்கா பெரிய சாத்தான்" என்று கூறினார். அதாவது சாத்தான் மக்களின் மனதை மயக்கி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

இஸ்லாமிய ஆயுதபாணி இயக்கங்கள் மோசமடையும் சமூகப் பிரச்சினைகளை தமது கண்ணோட்டத்தில் பார்க்கின்றன. வறுமையை ஒழிக்க, அந்நியக் கலாச்சார ஆதிக்கத்தைத் தடுக்க முழு முஸ்லீம்களினதும் தேசியவிடுதலைப் போராட்டமே சரியான பாதை என்று போதிக்கின்றன. இதனால் இஸ்லாம் மூலம் தமக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்பும் குறிப்பாக வேலையற்ற, வறிய இளைஞர்கள் தீவிரவாத அரசியலால் கவரப்படுவதில் வியப்பில்லை. மொரோக்கோவிலுள்ள கஸாபிளாங்கோவில் நடந்த தாக்குதலைச் செய்தவர்கள் அனைவரும் மாநகர சேரிப்பகுதிகளிலிருந்து வந்த வறிய இளைஞர்கள் என்பதை அரசே தெரிவித்தது.

அடிப்படை வசதிகள் இன்மை, வேலைவாய்ப்பு இன்மை, வறுமை என்பனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் விளைநிலங்கள். அதனால் பயங்கரவாதத்திற்கெதிராக போர் புரிபவர்கள் முதலில் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என இதுவரை பலர் கருத்துக் கூறியுள்ளனர். பிரான்ஸில் நடந்த உலகப் பணக்கார நாடுகளின் G 8 மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்த சமூக ஆய்வு நிறுவனமொன்று உலகில் பல உள்நாட்டு யுத்தங்களுக்குக் காரணம் இனங்களுக்கு அல்லது மதங்களுக்கு இடையிலான மோதலல்ல, மாறாக வறுமைதான் அடிப்படையென்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை பல மேலைத்தேய (ஆளும் வர்க்க சார்பு) அறிஞர்களின் கருத்துகளை நிராகரிக்கின்றது. பல்வேறு இனங்கள், மதங்கள் தமது கலாச்சார ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒன்றோடொன்று மோதுகின்றன. " கலாச்சாரங்களின் மோதல்" (?) அல்லது ஜனநாயகமின்மை என்பவையே இன்றைய யுத்தஙகளுக்குக் காரணமென்பது மேற்கத்தைய புத்திஜீவிகள் எம்மீது திணிக்க விரும்பும் கருத்து.

"சவூதி அரேபியா ஜனநாயக நாடானால், அவர்கள் எம்முடன் ஒத்துழைக்கமாட்டார்கள்." என்று வெளிப்படையாகவே கூறினார் அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர். பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு ஆயுத உதவி செய்வது எந்த வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை. ஈரானில் இவ்வாறான போக்கு கடைசியில் இஸ்லாமியப் புரட்சிக்கு வித்திட்டது. சவூதி அரேபியாவில் அப்படியொரு நிலைவந்தால் அந்நாட்டு அரசியற் தலைமையை எதிரியாகக் காட்டிவிட்டு, அமெரிக்க இராணுவம் நேரடியாகத் தலையிடும். பனாமா, ஈராக் எனத் தொடரும் வரிசையில், நாளை சவூதியும் இணையலாம்.

கணிணி:நவகாலனியத்தின் அரசியல் குரு


கணிணி அசாதரணமான தருணத்தில் ஆனதிலிருந்து நாம் துவங்கலாம்,பத்தாண்டுகளுக்கு முன்னர், தகவல் தொழிற்புரட்சி சமுதாயத்தை மாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தொழிற்கல்வி கற்க விரும்பும் பிள்ளைகளில், அதிபுத்திசாலிகளை மட்டும் தெரிந்தெடுத்து கணிப்பொறி வல்லுனராக்க அனுப்பிக் கொண்டிருந்த காலமது. ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியை துரிதப்படுத்தவும், ஆட்குறைப்பு செய்து செலவை மிச்சம் பிடிக்கவும் என கணணி மயப்படுத்தப்பட்டன. அவற்றிக்கு தேவையான மென்பொருள்களை உருவாக்கவும், இருப்பதை மெருகூட்டவும் என அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தேவைப்பட்டனர். ஒரு பக்கம் இந்த புதிய தொழில்வாய்ப்புகளை நாடி கணிப்பொறி வல்லுனர்கள் படையெடுத்துக் கொண்டிருந்த போது, மறுபக்கம் அவர்கள் தயாரித்து வழங்கிய மென்பொருள் துணை கொண்டு நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வந்தன. அப்போது இது குறித்து எந்த ஒரு ஐ,டி.(IT) பணியாளரும் அப்போது அக்கறைப்படவில்லை. தனது நலனே பெரிதெனக் கருதி கருமமே கண்ணாக இருந்து விட்டனர். இப்போது காலம் மாறி விட்டது. ஐ.டி. துறையின் தலைக்கு மேலே பணி நீக்கம் என்ற கத்தி தொங்குகின்றது. அன்று ஐ.டி. துறையின் மகிமை பற்றி மட்டுமே எழுதி வந்த தினமலர் பத்திரிகை; இன்று அந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை என்று அழுதுவடிகின்றது. ஹைதராபாத் ஐ.டி. பணியாளர்கள் தமக்கு வேலை போய் விடக்கூடாது என்று திருப்பதி பாலாஜி சாமியிடம் வேண்டுவதாக(இது கிண்டல் தானே?) செய்தி வெளியிட்டது.

ஆங்கிலத்தில் புலமை மற்றும் கல்வித் தகமை காரணமாக, "Out sourcing" என்ற பெயரில் அமெரிக்க மென்பொருள் தயாரிக்கும் ஐ.டி.(IT) கம்பனிகள் இந்தியா வந்த போது, இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டனர். இந்தியாவில் ஒரு புதிய வசதிபடைத்த வர்க்கம் விரைவாக உருவாகியது. சராசரி இந்திய சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என்பதால், கண் விழித்து செய்யும் இரவு வேலை என்றாலும் ஏற்றுக் கொண்டனர். மறுபக்கத்தில் இதே வேலையை செய்ய ஒரு அமெரிக்க கணிப்பொறி வல்லுநருக்கு கொடுப்பதில் கால்வாசியை கூட சம்பளமாக கொடுக்காது செலவை மிச்சம் பிடித்தன, அந்த கம்பெனிகள். Out sourcing செய்யும் கம்பெனிகள் தமது தாயகத்தில் ஆங்கில மொழியே பேசப்படுவதால், இந்திய தொழிலகங்களிலும் ஆங்கில மொழியை "உத்தியோகபூர்வ" மொழியாக்கினர். (வேலை செய்யும் இந்தியர்கள் தமது ஓய்வு நேரங்களிலும்,தமக்குள்ளே ஆங்கிலம் பேசினர்.) இந்த "ஆங்கிலப் பருப்பு" இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வேகும். இதே அமெரிக்க கம்பெனிகள் ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலகங்களை நிறுவி, உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. ஆனால் அங்கெல்லாம் உள்ளூர் மொழிகளில் தான் முகாமைத்துவம் நடக்கின்றது.

காலனிய காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் தாம் என்றென்றும் பிரயோசனப்படுத்தக் கூடிய வர்க்கமொன்றை உருவாக்கினார்கள். அந்த வர்க்கம் தமது தாய்மொழியான ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டும். தொழிற்புரட்சி காரணமாக வளர்ந்து வரும் இங்கிலாந்து மருந்துக் கம்பெனிகளுக்கு தேவைப்படும் மருத்துவர்கள், கட்டுமான கம்பெனிகளுக்கு தேவைப்பட்ட பொறியியலாளர்கள், இது போன்று தமக்கு தேவைப்படும் தகமையுடைவர்களை மட்டுமே உருவாக்கினார்கள். அந்த வரிசையில் தற்போது கணிப்பொறி வல்லுநர்கள் உருவாக்கப்படுகின்றனர். பொருளியல் மொழியில் கூறினால், சந்தையில் எந்தப் பண்டத்திற்கு பற்றாக்குறை உள்ளதோ, அதை உற்பத்தி செய்ய வேண்டும். அந்தப் பண்டம் மாங்காயாக இருந்தாலும், மருத்துவராக இருந்தாலும், இது தான் சந்தையின் விதி.

காலனியாதிக்க நாடான இங்கிலாந்தில் உருவாகிய மத்திய தர வர்க்கத்திற்கும், காலனி நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட மத்தியதர வர்க்கத்திற்கும் இடையே ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. இவற்றை சற்று விரிவாக பார்ப்பது இன்றைய நெருக்கடியை புரிந்து கொள்ள உதவும். "இங்கிலாந்து தேசியத்தில்" தங்கியிருந்த ஆங்கிலேய மத்தியதர வர்க்கம், ஏற்கனவே நாடளாவிய அதிகாரங்களை வைத்திருந்த அரச/பிரபு குடும்பங்கள் போன்ற உயர் வர்க்கத்திற்கு போட்டியாக புரட்சிகர மாற்றங்களை கொண்டுவந்தது. அரசவை மொழியான பிரெஞ்சு மொழியை கைவிட்டு விட்டு உழைக்கும் வர்க்கம் பேசிய ஆங்கில மொழியை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த தேசியவாத உணர்வு காரணமாகத்தான், அந்த தேசத்தை நிர்வகிக்க தேவையான அனைத்து வகையினரையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகின்றனவே அன்றி, நமது நாடுகளில் உள்ளது போல மருத்துவர்களை அல்லது கணிப்பொறி வல்லுனர்களை உற்பத்தி செய்யும் "சமூக தொழிற்சாலைகளை" கொண்டிருக்கவில்லை.

மத்தியதர வர்க்க பெற்றோர் தமது பிள்ளைகளை பெரும் மூலதனத்திற்கு சேவை செய்து சம்பாதிக்கும் படி போதித்து வளர்ப்பதால் தான், நிதி நெருக்கடியால் அமெரிக்க ஐ.டி. கம்பெனிகள் சொந்த ஊருக்கு மூட்டை கட்டும் போது, வேறு வழி தெரியாமல் திருப்பதி பாலாஜி சாமியிடம் சென்று முறையிடுகிறார்கள். பாமரர்கள் போல படித்தவர்களும் நடந்து கொள்வதை இந்தியாவில் தான் பார்க்கலாம். படித்தவர்கள் தமது திறமையை, அறிவை சொந்த தேச மக்களின் முன்னேற்றத்திற்கு செலவிட்டிருந்தால், தற்போது எதிர்காலம்
பற்றி அஞ்சத் தேவையில்லை. "உள்ளூரில் எனது திறமைக்கு தரும் கூலி குறைவு, அமெரிக்காவிலோ அள்ளிக் கொடுக்கிறார்கள்." என்று அதிக விலை பேசும் பெரு மூலதனத்திற்கு தனது உழைப்பை விற்கும் சுயநலவாதத்தை வெளிப்படுத்துவோர் அதற்கு தயாராகமாட்டார்கள். தமது உற்பத்தி செலவை குறைக்க மலிவு விலை தொழிலாளரை தேடி இந்தியா வரும் ஐ.டி. நிறுவனங்களுக்கும், தமது வருமானத்தை உயர்த்த அமெரிக்கா செல்லும் கணிப்பொறி நிபுணர்களுக்கும் தேசியம் தேவையில்லை. இது சர்வதேசியமல்ல, ஆனால் "சந்தை தேசியம்".

இந்தியாவில் தாம் அதிக வருமானம் எடுப்பதால் தம்மைப் பார்த்து பிறர் பொறாமைப்படுவதாக ஐ.டி. துறையில் பணி புரிபவர்கள் கவலைப்படுகின்றனர். மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாலேயே சிலருக்கு தலைக்கனம் வருவதும், பிறர் அதைப்பார்த்து பொறாமை கொள்வதும் மனித இயல்பு தான். இருப்பினும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் ஐ.டி. தொழிலாளிகள், பெரு மூலதனத்தின் நூலில் ஆடும் பொம்மைகள் என்பது அவர்களுக்கே தெரியாத போது, பிறர் அறியாததில் வியப்பில்லை. முதலில் தம்மை "கணிப்பொறி நிபுணர்கள்" போன்ற சிறப்பு அடைமொழியால் அழைக்கப்படுவதையே விரும்புவதும், பிற தொழிலாளர்களுடன் தம்மை இனம் காண மறுப்பதிலும் இருந்து தான் இந்த பிரச்சினை ஆரம்பமாகின்றது. அதிக சம்பளம் கொடுக்கும் பெரும் மூலதனம், இவர்களை அடிமட்ட உழைப்பாளர் வர்க்கத்திடம் இருந்து மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் குறைவாக சம்பாதிக்கும் பிற மத்தியதர வர்க்கத்திடம் இருந்தும் தனியாக பிரித்து வைத்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்திசாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம். இந்தியாவில் குறைந்த கூலியில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருளை, அதிக பட்ச விலை நிச்சயித்து அமெரிக்கா விலைக்கே இந்திய நுகர்வோருக்கும் விற்று தான் பில் கேட்ஸ் போன்றவர்கள் கோடீஸ்வரரானார்கள். மைக்ரோசொப்டின் விண்டோஸ் போன்ற அனைத்து மென்பொருட்களையும் பயன்படுத்தும் நிறுவனமொன்று காப்புரிமைப் பணம், வருடாந்த வாடகை என்று ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டிவருவதும், இந்த செலவை இறுதியில் எம்மைப் போன்ற அப்பாவி நுகர்வோர் செலுத்துவதும் எத்தனை பேருக்கு தெரியும்? உலகம் முழுவதும் கணனிப் பாவனையாளர்கள் தனது பொருட்களை மட்டுமே கட்டாயப்படுத்தி வாங்க வைத்து, ஏகபோக கொள்ளையடிக்கும் பில் கேட்ஸ் தான் இந்திய "கணனிக் கண்மணிகளின்" கண் கண்ட தெய்வம்.

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு படைகளால் பயன்படுத்தப் படும் மென்பொருட்கள் குற்றவாளிகளை மட்டும் பிடிக்கவில்லை, உள்நாட்டு போரில் அகப்படாது தப்பிவரும் அப்பாவி அகதிகளையும் பிடித்து சிறையில் அடைக்கின்றது, நாடு கடத்துகின்றது அல்லது தற்கொலைக்கு தள்ளுகின்றது. அந்தக்காலத்தில் ஹிட்லரின் கையில் இந்த மென்பொருட்கள் இருந்திருந்தால், எந்தவொரு யூதனும் தப்பியிருக்க முடியாது. தனிமனித சுதந்திரம் கொடிகட்டிப் பறப்பதாக பீற்றிக்கொள்ளும் மேலைநாடுகளில், தனிமனித நடவடிக்கைகளை அவதானிக்கும் மென்பொருட்கள் சத்தமில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நிறுவி வருகின்றன. பல நூறு பேரின் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மென்பொருட்களின் வருகையால், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலகில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேலையிழந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்? வேலை போனதால் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை? வேலை வாய்ப்பில்லாமல் எதிர்காலத்தை தொலைத்த இளைஞர்கள் எத்தனை? ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள், பிறரின் உயிர்களை பறிக்கும் குற்றத்தில் பங்கெடுக்கின்றனர். அதுபோல மென்பொருள் தயாரிப்பவர்களுக்கு, தாம் பிறரின் வேலைவாய்ப்பை பறிக்கிறோம், வறுமையை உருவாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு இருக்காதா? நிச்சயமாக இருக்கும்.

இந்த குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தான், பில் கேட்ஸ் தனது லாபத்தில் ஒரு சிறிய தொகையை தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்குகிறார். அதைக்கூட இடதுகைக்கு தெரியாமல் வலதுகையால் கொடுப்பதில்லை. ஊரைக்கூட்டி விளம்பரம் தேடிவிட்டு தான் செய்கிறார். ஐ.டி. நிறுவனங்களும் இது போன்ற விடயங்களை தெரிந்தே வைத்திருக்கின்றன. ஆனால் இந்த உண்மைகளை வெளிப்படையாக கூற முடியாது. "ஊழியர்களே! நாம் உலகில் நடக்கும் பாவங்களில் மறைமுகமாக பங்குபற்றுகின்றோம்!!" என்று எந்த தலைமை நிர்வாக அதிகாரியாவது கூறமுடியுமா? "சமூக சேவை தொண்டு செய்வது, தர்ம ஸ்தாபனங்களுக்கு நிதி வழங்குவது." என்று தமக்கும் சமூக பொறுப்புணர்வு இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். இந்த மாதிரியை தமது ஊழியர்களும் பின்பற்ற ஊக்குவிக்கின்றனர். வறுமைக்குள் தள்ளப்பட்ட நாடுகளை சுரண்டிக் கொழுக்கும், பணக்கார நாடுகளில் இந்த கலாச்சாரம் ஏற்கனவே உள்ளது.


ஐரோப்பிய கலாச்சாரத்தை...சரியாகச் சொன்னால் அமெரிக்க கலாச்சாரத்தை, அது சீரழிவே ஆனாலும், பழமைவாத இந்தியாவில் பரப்பத் துடிக்கும் ஐ.டி. நிறுவனங்களின் அரசியல் அதிகமாக கவனிக்கப்படுவதில்லை. கலாச்சார சீரழிவை தேர்ந்தெடுக்கும் ஒரு சிலரை வைத்துக் கொண்டு முழு ஐ.டி. துறையை களங்கப்படுத்தக் கூடாது என்பது உண்மைதான். ஆனால் அப்படி சீரழிவு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்களும் "அப்பாவி பலியாடுகள்" என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்து இந்த சீரழிவு கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் தரகு வேலையை ஐ.டி. நிறுவனங்களின் முகாமையாளர்கள் செய்கின்றனர். கம்பெனி செலவில் நடக்கும் இரவுக் களியாட்ட
விழாக்களில், மது தாராளமாக பரிமாறப்படுகின்றது. இந்தக் கம்பெனிகள் தர்ம ஸ்தாபனங்களுக்கு கிள்ளிப் போடும் தொகை, களியாட்டங்களுக்கு செலவழிக்கும் தொகையை விட மிகக் குறைவு என்பதை சொல்லத் தேவையில்லை.

இங்கே தான் ஐ.டி. கம்பெனிகளின் சுயரூபம் வெளிக்கின்றது. இந்திய கணிப்பொறி வல்லுனர்களின் உழைப்பை சுரண்டும் அதே நேரம், தாம் வழங்கும் (இந்திய தராதரத்தில்) அதிக சம்பளப் பணத்தை, நுகர்பொருள் கலாச்சாரம் நோக்கி திருப்பி விடுகின்றனர். ஐ.டி. கம்பெனிகளின் வருகைக்கு பின்னர் தான் இந்திய நகரங்களில் ஆடம்பர பாவனைப்பொருட்களை விற்கும் கடைகள் பெருகின. தீபாவளி, புதுவருடப் பிறப்புக்கு, ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது போல ஐந்நூறு, ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்களை வருடாவருடம் கொடுக்கின்றன. இவற்றை குறிப்பிட்ட (உதாரணத்திற்கு இறக்குமதி ஆடைகளை விற்பனை செய்யும்) கடைகளில் மட்டுமே பயன்படுத்தலாம். அப்படியான கடைகள் இருப்பது தெரியாதவர்களுக்கு கூட அவற்றை அறிமுகப்படுத்துவதுடன், அதிகமாக நுகர்வதற்கு ஆசை காட்டப்படுகின்றது.

தமிழ் மென்பொருட்களையும் இதே கணிப்பொறி நிபுணர்கள் உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. அதுகூட வியாபார நோக்கம் கருதித் தான் நடந்தது. தமிழ் மென்பொருள் பாவனை வந்த பிறகு கணணி விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளதையும், தமிழ் இணையத்தளங்களை பார்வையிடலாம் என அறிந்து ஆங்கிலம் தெரியாத ஆயிரக்கணக்கானோர் இணைய இணைப்பு பெற்றதை, நான் இங்கே புள்ளிவிபரங்களுடன் விளக்கத் தேவையில்லை. இதனை வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த விடயம் அது. ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால் தான் கணணி பயன்படுத்தலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. கணனிக்கு ஆங்கிலம் தெரியாது, அது குறியீடுகளை மட்டுமே புரிந்து கொள்ளும், என்ற அடிப்படை தொழில்நுட்பம் ஒருபுறம் இருக்கட்டும். ஆங்கிலத்தை மட்டும் நம்பியிருந்தால் சீனாவிலும், ரஷ்யாவிலும் கடை விரிக்க முடியாது; என்ற சந்தை நியதி தான் எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியையும் சாத்தியமாக்குகின்றது. தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல.

பங்குச் சந்தைக்கும், பால்காரனுக்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கு தெரியாது. அது போலத்தான் முதலாளித்துவம் எப்படி தம்மை பயன்படுத்தி விட்டு தூக்கியெறிகின்றது என்பது கணிப்பொறி நிபுணர்களுக்கு தெரியாது. அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளும், வர்த்தக நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு கணிப்பொறி நிபுணர்களை உருவாக்கும் கல்வியில் முதலிடுவதை நிறுத்தி விட்டன. அதற்குப் பதிலாக இந்தியாவில் ஐ.டி. படிப்பு முடித்தவர்களை பயன்படுத்திக் கொள்கின்றன. தாமே மென்பொருட்களை தயாரிக்கக் கூடிய வல்லமை இருந்தும், தகுதியான உள்ளூர் நிபுணர்கள் இருந்தும், அதற்கான முயற்சியே எடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இந்திய கணிப்பொறி நிபுணர்களை தருவித்து தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம், ஐ.டி. துறையில் இந்தியர்களை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதல்ல. பொருளாதார ரீதியான திட்டமிடலே ஒரேயொரு காரணம்.

உதாரணத்திற்கு ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நிறுவனம், தனக்கு தேவையான மென்பொருளை உருவாக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது, அதற்கு பத்து கணிப்பொறி நிபுணர்கள் தேவைப்படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை கூட்டிப்பார்த்தால், இறுதியில் அந்த மென்பொருளின் செலவு அதிகமாக இருக்கும். சந்தையில் அதைவிட குறைந்த விலைக்கு, ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் கிடைக்கின்றது. யாரும் எங்கே மலிவானது கிடைக்கும் என்று தானே பார்ப்பார்கள்? இந்திய கணிப்பொறி நிபுணர்களை தருவித்து, ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதால், இந்நாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் பயனடைகின்றன. குறிப்பிட்ட ஒரு நபரை பணியில் அமர்த்திக்கொள்ளும் நிறுவனம், அவரது சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவே முகவர் நிலையத்திற்கு கொடுக்கின்றது. இதனால் முகவர்கள் அதிக வருமானம் ஈட்டுவது ஒருபுறமிருக்க, தேவைப்படாவிட்டால் விரும்பிய நேரம் வேலையை விட்டு நிறுத்திவிடலாம் என்பது அனுகூலமாக பார்க்கப்படுகின்றது.

பெரும் மூலதனத்துடன் வரும், வெளிநாட்டு தேசங்கடந்த நிறுவனங்களை கையாள்வதில், கியூபாவின் நடைமுறை இங்கே ஒப்புநோக்கத் தக்கது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் உல்லாசப் பிரயாணத் துறையில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் யாவும், கியூபா அரசுடன் Joint Venture என்ற இரட்டை முகாமைத்துவ முறையின் கீழேயே அனுமதிக்கப்பட்டன. துப்பரவு பணியாளர் முதல் மனேஜர் வரை கியூபா பிரசைகளையே பணிக்கு அமர்த்திய போதும், அவர்களுக்கு வெளிநாட்டு நிறுவங்கள் முன்னூறு தொடக்கம் எண்ணூறு(தகுதிக்கேற்ற படி) டாலர்கள் என்று அள்ளிக் கொடுத்த போதும், அனைத்து சம்பளங்களும் சராசரி கியூப தரத்தை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன. உதாரணத்திற்கு கியூபாவில், சராசரி சம்பளம் நூறு டாலர் என்றால், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளம் நூற்றி இருபது டாலராக இருக்கும். மிகுதியை பிடித்துக் கொள்ளும் அரசாங்கம் அதனை பிற துறை சார்ந்த தொழிலாளர் நல திட்டங்களில் முதலீடு செய்யும். வெளிநாட்டு நிறுவனங்கள் ஐந்து அல்லது பத்து வருடங்கள் மட்டுமே நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்படுவதால், அதற்குப் பின்னர் அரசாங்கம் பொறுப்பு என்பதால், யாருக்கும் அங்கே நாளை வேலை போனால் என்ன செய்வது, என்ற அச்சம் இல்லை. தொழிலாளர் மத்தியில் வேறுபாடுகளை உருவாக்கி, சமுகத்தில் பிரிவினை ஏற்படுத்தும், ஏற்றத்தாழ்வான சம்பள முறை ஏற்கனவே இந்தியாவில் தவிர்க்கப்பட்டிருந்தால்; யாரும் "திமிர் பிடித்தவர்கள்" என்று பெயர் எடுத்திருக்கவும் மாட்டார்கள், யாரையும் "பொறாமைக்காரர்கள்" என்று குற்றம் சாட்டவும் அவசியம் இருந்திருக்காது.நவகாலனியத்தின் வேர்கள் பரவ நெட்டிசன்கள் பொய்மை எதார்த்தத்தில் வீற்றிருப்பது கார்பரேட் முதலாளித்துவத்தின் வெற்றிகளுள் ஒன்றாகும்

Friday, July 30, 2010

சிலுவையில் தொங்கும் சாத்தான்


வெளியீடு: தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை 600 078
பக்கம் : 424
விலை ரூ. 125.00

தலைமறைவு இலக்கியங்கள் காலத்தை கருத்தில் கொள்பவையல்ல. பிரதி வாசகனுக்கு வழங்க வேண்டிய கருத்தியலை மட்டுமே கணக்கில் கொள்ளும் ரஷ்ய, இலத்தீன், அமெரிக்க, ஆப்பிரிக்க நாட்டினது இலக்கிய வரலாறுகள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்களின் கதையாடல்கள் மையம் என்கிற நிறுவனத்துக்கு எதிரான நிறுவனமாக மாறுகிறபொழுது அதனுடன் சமரசம் செய்து கொள்ளாத எதிர்நிலை கதையாடல்களாக மாறுகிற பொழுது இந்நிலையினை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதே தளத்திலேயே கூகி வா தியாங்கோவும் இயங்குகின்றார்.

"Pearls of Blood" என்ற நாவலுக்காக நாடு கடத்தப்பட்டவரும், தன் வாழ்வை சிறையில் கழித்த பொழுது அங்கே தரப்பட்ட மலம் துடைக்கும் தாளில் எழுதி மறைத்து வைத்து பின்னாளில் பெறப்பட்டு நாவலாக வெளிவந்த நீண்ட வரலாறுக்குரியவர்.

மொழி என்பது அதிகாரம் சார்ந்து கட்டமைக்கப்படுகின்ற பொழுது அதனைத் தகர்தெறிகின்ற பண்பாட்டுடன் கூடிய மாற்று மொழி வடிவம் எந்தவொரு விளிம்புநிலை படைப்பாளிக்கும் அவன் உணர்ந்து கொண்ட காலத்தின் நிகழ்வின் அசைவினைப் பொறுத்து எதிர் தன்மையில் அமையும். அம்மொழி விடுதலை நோக்கி மையம் நோக்கி பயணிக்கும் பொழுது மையம் எதிர் நிலையில் இயங்குவதையும் மொழியைச் சார்ந்தியங்கும் தேவையும் மையத்திற்கு ஏற்படுகிறது. தமிழக வரலாற்றைப் பின்னோக்கினால் சமண, பௌத்த மொழி அமைப்புடன் தொடங்கும் போராட்டம் இன்றைய காலகட்டம் வரைத் தொடர்கிறது. ஒட்டுமொத்தமாக மையம் என்கிற நிறுவனத்தை நோக்கி பயனிக்கின்ற அந்த கால இடைவெளியில் எடுத்துச் செல்லுகின்ற மொழியாளனின் நிலையும் அந்த நிகழ்வும் வரலாற்றில் என்றும் மறுக்கவியலாத பக்கங்களாகும். அதை இவருடைய படைப்பில் காட்டியிருப்பது எளிமையான எதார்த்தம்.

மொழி சார்ந்த குறியீட்டு வடிவம் வாசகனுக்கும் படைப்பாளிக்குமான புரிதலை மேலும் வலுப்பெற வைப்பதற்கும், படைப்பாளி சார்ந்த கருத்துருவாக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்வதற்கும் உதவுகின்றன. "சிலுவையில் தொங்கும் சாத்தான்" என்கிற முரணான எதிர்நிலை கருத்துருவாக்கமே நாவலை அர்த்தப்படுத்துகின்றன என்கிறபொழுதும் இவருடைய இடதுசாரி சிந்தனைகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் நிலைப்பாடுடையதாக ஆக்கியுள்ளது.

தலையில் துவங்கிய முரண்குறியீட்டை நாவலின் இறுதிவரையிலும் நகர்த்திச் செல்லுகின்றார். "தற்கொலை என்கிற கோழைத்தனமான முடிவிலிருந்து மீண்ட நிலையுடன் நாவல் தனது பயணத்தைத் தொடங்குகிறது. ஏகாத்திபத்தியமும், முதலாளித்துவம் தனது கோர கரங்களுக்குள் சமூகத்திலுள்ள அனைத்துவித மக்களையும் ஆட்கொண்டுள்ளது என்கிற நிலைபாட்டை ஒரே வண்டியில் பயணிக்கும் சாதாரண பெண் (வரீயங்கா), மாணவன் (கத்தூய்ரியா), போராளி (வங்காரி மாத்தாய்), தச்சுத் தொழிலாளி (முதூரி) வியாபாரி (விரேரி), தொழிலாளி (மூகிராய்) இவர்கள் அனைவரது வாழ்வும் முதலாளிய வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையினைக் கூறுவதோடு அவர்கள் பயணிக்கும் வண்டியின் உரிமையாளன் தனது மனசாட்சியை அடகுவைத்து விட்டு வரும் (முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாக சாத்தான்) குறியீடு செய்து இவர்கள் அனைவருமே அவனைத் தவிர்க்கவியலாது கட்டாயம் பயணிக்க வேண்டிய நிலைப்பாடு உடையவர்கள் என்கிற நிலையும் அந்நிலைக்கெதிரான கலகக்குரலை எழுப்பாதத் தன்மையினையும் சுட்டிச் செல்கின்றார்.

"சாத்தானின் விருந்து" நிகழ்வுக்கு அவர்கள் அனைவரும் செல்ல அங்கு, நடைபெறும் நிகழ்வுகளும், காட்சிகளும், அரசியல், பொருளாதாரம் அதனைச் சார்ந்தியங்கும் சமூகப் பண்பாட்டில் உயரிய நிலையில் இருக்கின்ற ஆளும் வர்க்கத்தினரால் ஆளப்படும் வர்க்கம், அடிமைப்படுத்தப்படும் சுரண்டப்படும் தன்மையினை கூறப்படுவதுடன், அதனை தங்கள் சமூகத்தகுதியாகவும் ஆளும் வர்க்கத்தினர் கருதும் நிலையினையும் உணர்கின்றனர்.

காலனிய ஆட்சிக்கு மறைமுகமாக தாங்கள் பிரதிநிதி எனவும் பண வெறியினால் தங்கள் நாட்டினரையே அடிமைப்படுத்துவதையும் முட்டாளாக்குவதையும் பெருமையாகக் கருதுகின்றனர். சமூக வெளியில் மதிப்பீடு என்பது இவர்களுக்கு பலவிதமான கார்கள், பங்களாக்கள், பல மனைவிகள் மற்றும் பல பெண் நண்பிகளின் மூலம் அளவிடப் படுவதாக உள்ளனர்.

கடைநிலைத் திருடர்களை பெரிதுபடுத்தும் அதிகாரம் சார்ந்த அரசு இவர்களுடன் இயல்பாக பழகும் முரண்பட்ட நிலையினையும் காண முடிகிறது. இந்நிலைப்பாட்டை கண்ட சமூகக் கூட்டம் என்கிற எல்லா நிலையிலும் உள்ள வண்டியில் பயணித்தக் கூட்டம் அதிர்வினை உள்வாங்கி செரித்துக்கொள்ளவியலாத ஒவ்வொரு சமூகப் பாத்திரமும் அதன்தன் நிலைபாட்டில் தனது எதிர்ப்பினை தெரிவிக்கின்றது.

நீதியின் பக்கம் சார்ந்து உண்மையின் தளத்தில் நின்றாலும் அது ஆளும்வர்க்கத்தின் சார்பாகவே பேசும். மாறாக சார்ந்தவனையே பாதிக்கும் என்கிற தளத்தில் போராளி பாத்திரமும், சிலுவையில் தொங்கும் சாத்தானின் கருத்துக்குட்பட்டு மனசாட்சியை அதனிடம் விற்றால் முதலாளி வர்க்கமாக மாறலாம் என்கிற தளத்தில் உள்ள சாதாரண குடிமக்கள் உழைக்கும் மக்களின் கூட்டத்தோடு சேர்ந்து உரிய கல்வியறிவுடன் போராடினால் "சாத்தானின் விருந்து" சிதைபடும் என்கிறக் கருத்தாக்கத்தையும் ஒவ்வொரு பாத்திரமும் அதுதன் கையில் எடுத்துக் கொள்கிற போராட்டத்தின் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது.

போராட்ட களத்தில் அதனை முன்னெடுத்துச் செல்கின்ற தலைமைக்கும் அதனுடனான குடும்பம் என்கிற நிறுவனத்திற்கும் இனை முரணான நிகழ்வு அமைவது இயல்பு. அகப் போராட்டமான இந்நிகழ்வினை தலைமை கையிலெடுக்கின்ற நிலைப்பாட்டினைப் பொருத்து முன்னேறிச் செல்கின்ற தோல்வியடைகின்ற தன்மை அமையும். அதை எந்த நிலையிலும் நழுவ விடாது கதை நகர்ந்து செல்வதும் இறுதியில் "பெண்" மற்றொரு போராட்டத்திற்கு தயாராகுவதுமாக உள்ளது.

நாவலின் தமிழாக்கம் நாவலை எந்தவொரு இடத்திலும் வாசகனை அன்னியப்படுத்திவிடாமல் அதே தளத்தில் அழைத்துச் செல்வது மொழி பெயர்ப்பாளனின் வெற்றியே எனலாம். பாத்திரங்களின் நிலைபாட்டில் குறியீட்டை உணர்த்திய ஆசிரியர் பாத்திரங்களின் இடுதலிலும் அதனைச் செய்திருப்பாரோ எனத் தெரிகின்றது. அதன் விளக்கத்தினை தந்திருந்தால் இன்னும் மொழிபெயர்ப்பு சிறப்பாகவே அமைந்திருக்கும்.

இலங்கை போராளிகளின் களத்தில் உருவானது நாவல்களின் சாயல் இந்நாவலில் தென்பட்டாலும், காலனித்துவம், பின்னையக் காலனியத்துவம் என்கிற மேலைநாட்டு இலக்கியக் கொள்கைகள் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள சூழலில் காலனியத்துவ எதிர்ப்புடைய இந்நாவல் அனைவரும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது சிலுவையில் தொங்கும் சாத்தான் அல்ல நம்மனதில் தொங்கும் சாத்தான்.

சந்தியாவின் முத்தம் (கவிதைகள்)


நேரடியாகப் பார்க்க முடியாததைக் கண்ணாடியில் பிரதிபலித்துக்காட்டும் ஜாலத்தை நிகழ்த்துகிறது கவிதை - ஆனந்த்

காதல், வேதனை, உறவு, தனிமை, பிரிவு, பிரிவாற்றாமை, மௌனம், துயரம், நிராசை, ஸ்பரிசம், கனவுகள், கண்ணீர்த்துளிகள், வண்ணங்கள், இருள், ஒளி, இசை, இரவு, பகல், கடல், நிலவு, மழை, ரகசியங்கள், முத்தங்கள், சாவு, பறவை, பூனை, சொல், பேரன்பு, நித்யகல்யாணிப்பூ, இவையெல்லாம் கவிதாவின் கவிதையுலகில் உலவும், அதைக் கட்டமைக்கும் விஷயங்கள். கருத்துகள் மிகக் குறைவாகவும் உணர்ச்சிகளும் உள்ளுணர்வுகளும் பெருமளவுக்கும் தொடர்ந்து ஊடாடுவது கவிதாவின் கவிதைகளின் பலம்.
இயல்பாகவே பெண்மையின் பார்வைக் கோணமும் அவ்வாறான பார்வை சார்ந்த உணர்ச்சிகளும் உணர்வுகளும் பெருமளவுக்கு இருந்தாலும் இவரது கவிதைகள் பெண் கவிதை - ஆண்கவிதை என்ற பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டவை.
சுகத்துக்கும் சோகத்துக்கும் இடையிலான இடைவெளியைக் காதலின் வேதனை போக்கிவிடும் அதிசயத்தை இவரது கவிதைகள் கொண்டாடுகின்றன. மென்னுணர்வுகள் மனத்தில் புரியும் ஜாலத்தை எளிமையாகவும் நேரடியாகவும் அதேசமயம் அவற்றின் வீரியம் குன்றாமலும் சொல்லும் லாகவம் கவிதாவுக்குக் கைவந்திருக்கிறது. வேதனை மிகுந்த கணங்களில் எங்கிருந்தோ வந்து கசியும் அன்பு, அல்லது அவ்வாறான அன்பின் நினைவு, அந்த வேதனையை ஆற்றிவிடும் அற்புதம் "சந்தியாவின் முத்தம்" கவிதையில் மண்விலக்கி வெளிவரும் துளிர்போல் வெளிப்பட்டிருக்கிறது.

"ஆனால் சந்தியா தந்த முத்தம் அவள் வாழ்க்கையின் மீது மூழ்க வியலாத ஒரு கப்பலைப்போல மிதந்துகொண்டேயிருக்கிறது"
என்னும் வரிகள் மிக முக்கியமானவை. அது மூழ்கிவிடும் கப்பலாக இருந்தால் என்ன ஆகியிருக்கும்? வேறொரு சமயம் வேதனையில் ஆழ்ந்துபோகும் தருணத்தில் அது கிடைக்காமல் மனத்தின் ஆழத்தில் மூழ்கிப்போயிருக்கும். ஆனால் அந்த ஒரு முத்தம் அவளுக்கு எந்நேரமும் கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு ஆறுதலாக இருந்துகொண்டே இருக்கிறது. "மிதந்துகொண்டே இருக்கும் கப்பல்" என்னும் பிம்பம் மறதி மறுத்த நினைவாக, மனத்தின் ஆழ் நிலைகளுக்குள் காணாமல்போய் விடாத ஒரு வாக்காக, எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஆறுதலின் சின்னமாக நிலைத்துவிட்டிருக்கிறது.

"அபூர்வமான ஒரு தனிமையில் உட்கார்ந்துகொண்டிருந்தோம்"
என்று தொடங்கும் கவிதை, "நான் அவனுக்கு சாவைப் பரிசளிக்க விரும்புகிறேன் கத்தியின் மீது தலையணை குவளைத் தேநீரில் ஒரு துளி விஷம் மலைமுகட்டின் மீதொரு காதல் தருணம் அல்லது ஒரு முத்தத்தின் மூலமாவது" என்று முடிகிறது.
சந்தியாவின் முத்தம் என்றென்றும் கிட்டும் ஒரு ஆறுதலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த முத்தம் சாவுக்கு ஒரு சாதனமாக இருக்கிறது. முத்தம் என்பதன் பல பரிமாணங்கள், அதன் முழுப் பிரிகையும் இவரது கவிதைகளில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன.

கவிதாவின் கவிதைகளில் கனவுகள் இன்னொரு முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன. பச்சைக் கனவுகள், வெள்ளைக் கனவுகள், கறுப்புக் கனவுகள், இளஞ் சிவப்புக் கனவுகள், பாதி உடைந்த கனவுகள், விபரீதக் கனவுகள்.

ஒரு பை நிறையக் கனவுகளை வைத்துக்கொண்டு எதிர்ப்படும் எல்லோருக்கும் பரிசளித்துக்கொண்டிருந்தாள் அவள் என்று தொடங்கி, அபூர்வமாய்த் தோன்றும் கறுப்புக் கனவொன்றை தவறுதலாய் ஒரு குழந்தையிடம் அவள் கொடுத்த போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது கனவுகள் நிறைந்த அவளது பை களவு போனது அவள் காணாமல் போனாள் ஊர் இருண்டது என்று முடிகிறது.

குழந்தையிடம் கறுப்புக் கனவைத் தவறுதலாகக் கொடுத்தால் கனவுகளின் பை ஏன் களவுபோக வேண்டும்? அவள் ஏன் காணாமல்போக வேண்டும்? அதுமட்டுமின்றி ஊர் ஏன் இருண்டுபோக வேண்டும்? கறுப்புக் கனவு குழந்தையை என்ன செய்தது? கனவுகளின் பை இல்லாவிட்டால் அவள் இருக்க முடியாதா? கனவுகளின் வெளிப்பாடா அவள்? ஊரும் கனவுகளின் வெளித்தோற்றம்தானே?? அப்படியானால் ஊரும் அவளும் குழந்தைக்குள்தான் அடக்கமா?

கவிதாவின் கவிதைகளின் உறவும் அது தொடர்பான உசாவலும் அடிநாதமாகத் தொடர்ந்து இழைந்துகொண்டே வருகின்றன. உறவின் மறுபக்கம் இருப்பது யார் என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட ஒரு நபரா அல்லது நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு "நீ"யா? குறிப்பிட்ட ஒரு நபரென்றால் அந்த நபரின் குணாதிசயங்களுக்கேற்ப உறவின் வாசனையும் இயல்பும் மாற்றம் கொள்ளாதா? ஆனால் இந்தக் கவிதைகளில் எந்த ஒரு நானும் எந்த ஒரு நீயும் கொள்ளும் உறவின் அடிப்படை இலக்கணங்களும் உள்ளியக்கங்களும் ஆழமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நானுக்கும் மற்ற ஒவ்வொருவரும் ஒரு நீதான். இங்கே பரிசீலிக்கப்படுவது காதல் என்ற பெயரில் பொதுவாக நடந்துவரும் விளையாட்டுகள் அல்ல. அனைத்து மனித உறவுகளும் காதல் என்னும் பின்னணியில் பரிசீலிக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

இவரது கவிதைகளில் உறவு எவ்வாறு வண்ணம் மாறுகிறது என்று பார்ப்போம். கூடவே இரவின் நிறமும் பகலின் நிறமும்.
"நீ வரும் வரை என் உறவுகளின் நிறம் கறுப்பாய்த்தான் இருந்தது எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை தனிமையின் அரண்களை மீறிய தேவதூதனையொத்த உனது வருகை
எனது இரவுகளுக்கு வெளிர்நீல நிறத்தைத் தந்தது உனது வருகை
எனது இரவுகளுக்கு நீ தந்தாய் இரண்டு வெண்ணிறச் சிறகுகளை
நான் பறக்க யத்தனித்தபோது நீ விலகிச் சென்றாய்
ஒரு பைத்தியக்காரனின் கனவைப்போல எல்லாம் முடிந்தது
எனது முந்தைய இரவுகளைப் போலவே இப்போது
என் பகல்களும் கறுப்பாய்த் தானிருக்கின்றன"
தனியொரு உயிரின் வாழ்வனுபவத்தில் ஏற்படும் நிகழ்வுகள், உயிரனுபவத்தின் ஆழங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய சாத்தியத்தைத் தம்முள் கொண்டிருக்கின்றன. கவிதை மற்றும் பிற கலைகள் சார்ந்த முறைபாடுகள் இந்தச் சாத்தியத்தை உண்மையான அனுபவமாக ஆக்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த அனுபவம் இங்கே பல கவிதைகளில் வெளியாகியிருக்கிறது. தனிமை என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம். கவிதாவின் கவிதை உசாவலில் தனிமை முக்கியமானதொரு விஷயம். இந்த வரிகளைப் பாருங்கள்.

ஏதோ ஒன்று எதற்காகவோ என்னை அடையும்போது நான் அதை தனிமை என்னும் சொல்லால் குறிப்பிட்டுச் சொல்லலாம்தான் ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது அது தனிமை அல்ல அது நான்தான்.

பொதுவாகத் தனிமை என்பதைத் தன்னை ஆட்கொள்ளும் ஒரு உணர்வனுபவமாகத்தான் கருதுகிறோம். ஆனால் பிறர் யாருமற்ற நிலையில் தான் மட்டும் இருக்கும்போது தன்னையேதான் தனிமை என்று பெயரிட்டு அழைத்துக்கொள்கிறோம் என்பது உண்மைதானோ "நான்" என்னும் உள்ளுணர்வுதானே புறவயப்பட்டு விரிந்து நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. பெருநகரத்தின் ஆயிரங்கால் மண்டபத்தின்...எனத் தொடங்கும் கவிதை மிகப் பெரியதொரு காலத் திரையின் பின்னணியில் வரையப்பட்டிருக்கும் ஒரு சித்திரமாக விரிகிறது. மனிதப் பிரக்ஞையின் ஆழ்தளப் பிம்பங்கள் தனிமனத்தின் வழியாக வெளிப்பட நேர்ந்தாலும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை. அங்கே காலம் காலமாக உறைந்து நிற்கும் அந்த பிம்பங்கள் ஒரு பொருளில் உயிருள்ளவை. காலத்துக்கு அப்பாற்பட்டவை. எந்த ஒரு நேரத்திலும் ஒரு பிம்பம் உயிரோட்டம் கொண்டு மேல் மனத்தை - மனிதனை - தீண்ட முடியும். தீண்டிவிட்டுப் போய் மறுபடி உறைந்து நிற்கக்கூடும். அவ்வாறான தீண்டுதல் நிகழும்போது மேல்மனம் மிகவும் வலிமையான பாதிப்புக்கு உள்ளாக முடியும். நிரந்தரமான மாற்றங்களோ அல்லது நீண்ட கால பாதிப்புகளோ நேர முடியும். இவ்வாறான ஒரு முறைபாடு பற்றி இந்தக் கவிதை பேசுகிறது.

இந்தத் தொகுப்பில் சில நீண்ட கவிதைகள் இருக்கின்றன. அவை கவிதாவின் அகவுலகம் எந்த அளவுக்குச் செறிவு நிறைந்ததாக இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன.
கவிதாவின் உலகம் எத்தன்மையது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும் கவிதை இதோ:
எல்லாத் திசைகளிலும் பறந்து பார்க்கிறது இந்த சிறு பறவை வானத்தின் விரிவு பார்த்து வதைபடும் அதன் சிறகுகள்
ஜன்னல் வழி துண்டு வானம் கொடுத்து அதனிடம் கேட்கிறாய் போதுமா என்று
கடல் கொள்ளும் பெருந்தாகம் தவிர சில மழைத்துளிகள் எப்படிப் போதும்?

நேரடியாகப் பார்க்க முடியாததைக் கண்ணாடியில் பிரதிபலித்துக்காட்டும் ஜாலத்தை நிகழ்த்துகிறது கவிதை. இவர் கவிதைகள் இம்மாதிரியான கண்ணாடியாகத் திகழ்கின்றன. உயிரோட்டமுள்ள பல சித்திரங்களைக் காட்டுகின்றன. இந்தக் கவிதைகளின் பின்னால் தெரியும் அகன்றதொரு சித்திரத்தைப் பார்க்கும்போது, கவிதாவிடமிருந்து மேலும் நல்ல கவிதைகள் தொடர்ந்து வருவது நிச்சயமான ஒன்றாகத் தோன்றுகிறது.

(சந்தியாவின் முத்தம் (கவிதைகள்), ஆசிரியர்: கவிதா, பக்: 64, விலை: ரூ. 45, முதற்பதிப்பு: ஏப்ரல் 2008. வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001)

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...