Friday, July 30, 2010

சிலுவையில் தொங்கும் சாத்தான்


வெளியீடு: தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை 600 078
பக்கம் : 424
விலை ரூ. 125.00

தலைமறைவு இலக்கியங்கள் காலத்தை கருத்தில் கொள்பவையல்ல. பிரதி வாசகனுக்கு வழங்க வேண்டிய கருத்தியலை மட்டுமே கணக்கில் கொள்ளும் ரஷ்ய, இலத்தீன், அமெரிக்க, ஆப்பிரிக்க நாட்டினது இலக்கிய வரலாறுகள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்களின் கதையாடல்கள் மையம் என்கிற நிறுவனத்துக்கு எதிரான நிறுவனமாக மாறுகிறபொழுது அதனுடன் சமரசம் செய்து கொள்ளாத எதிர்நிலை கதையாடல்களாக மாறுகிற பொழுது இந்நிலையினை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதே தளத்திலேயே கூகி வா தியாங்கோவும் இயங்குகின்றார்.

"Pearls of Blood" என்ற நாவலுக்காக நாடு கடத்தப்பட்டவரும், தன் வாழ்வை சிறையில் கழித்த பொழுது அங்கே தரப்பட்ட மலம் துடைக்கும் தாளில் எழுதி மறைத்து வைத்து பின்னாளில் பெறப்பட்டு நாவலாக வெளிவந்த நீண்ட வரலாறுக்குரியவர்.

மொழி என்பது அதிகாரம் சார்ந்து கட்டமைக்கப்படுகின்ற பொழுது அதனைத் தகர்தெறிகின்ற பண்பாட்டுடன் கூடிய மாற்று மொழி வடிவம் எந்தவொரு விளிம்புநிலை படைப்பாளிக்கும் அவன் உணர்ந்து கொண்ட காலத்தின் நிகழ்வின் அசைவினைப் பொறுத்து எதிர் தன்மையில் அமையும். அம்மொழி விடுதலை நோக்கி மையம் நோக்கி பயணிக்கும் பொழுது மையம் எதிர் நிலையில் இயங்குவதையும் மொழியைச் சார்ந்தியங்கும் தேவையும் மையத்திற்கு ஏற்படுகிறது. தமிழக வரலாற்றைப் பின்னோக்கினால் சமண, பௌத்த மொழி அமைப்புடன் தொடங்கும் போராட்டம் இன்றைய காலகட்டம் வரைத் தொடர்கிறது. ஒட்டுமொத்தமாக மையம் என்கிற நிறுவனத்தை நோக்கி பயனிக்கின்ற அந்த கால இடைவெளியில் எடுத்துச் செல்லுகின்ற மொழியாளனின் நிலையும் அந்த நிகழ்வும் வரலாற்றில் என்றும் மறுக்கவியலாத பக்கங்களாகும். அதை இவருடைய படைப்பில் காட்டியிருப்பது எளிமையான எதார்த்தம்.

மொழி சார்ந்த குறியீட்டு வடிவம் வாசகனுக்கும் படைப்பாளிக்குமான புரிதலை மேலும் வலுப்பெற வைப்பதற்கும், படைப்பாளி சார்ந்த கருத்துருவாக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்வதற்கும் உதவுகின்றன. "சிலுவையில் தொங்கும் சாத்தான்" என்கிற முரணான எதிர்நிலை கருத்துருவாக்கமே நாவலை அர்த்தப்படுத்துகின்றன என்கிறபொழுதும் இவருடைய இடதுசாரி சிந்தனைகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் நிலைப்பாடுடையதாக ஆக்கியுள்ளது.

தலையில் துவங்கிய முரண்குறியீட்டை நாவலின் இறுதிவரையிலும் நகர்த்திச் செல்லுகின்றார். "தற்கொலை என்கிற கோழைத்தனமான முடிவிலிருந்து மீண்ட நிலையுடன் நாவல் தனது பயணத்தைத் தொடங்குகிறது. ஏகாத்திபத்தியமும், முதலாளித்துவம் தனது கோர கரங்களுக்குள் சமூகத்திலுள்ள அனைத்துவித மக்களையும் ஆட்கொண்டுள்ளது என்கிற நிலைபாட்டை ஒரே வண்டியில் பயணிக்கும் சாதாரண பெண் (வரீயங்கா), மாணவன் (கத்தூய்ரியா), போராளி (வங்காரி மாத்தாய்), தச்சுத் தொழிலாளி (முதூரி) வியாபாரி (விரேரி), தொழிலாளி (மூகிராய்) இவர்கள் அனைவரது வாழ்வும் முதலாளிய வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையினைக் கூறுவதோடு அவர்கள் பயணிக்கும் வண்டியின் உரிமையாளன் தனது மனசாட்சியை அடகுவைத்து விட்டு வரும் (முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாக சாத்தான்) குறியீடு செய்து இவர்கள் அனைவருமே அவனைத் தவிர்க்கவியலாது கட்டாயம் பயணிக்க வேண்டிய நிலைப்பாடு உடையவர்கள் என்கிற நிலையும் அந்நிலைக்கெதிரான கலகக்குரலை எழுப்பாதத் தன்மையினையும் சுட்டிச் செல்கின்றார்.

"சாத்தானின் விருந்து" நிகழ்வுக்கு அவர்கள் அனைவரும் செல்ல அங்கு, நடைபெறும் நிகழ்வுகளும், காட்சிகளும், அரசியல், பொருளாதாரம் அதனைச் சார்ந்தியங்கும் சமூகப் பண்பாட்டில் உயரிய நிலையில் இருக்கின்ற ஆளும் வர்க்கத்தினரால் ஆளப்படும் வர்க்கம், அடிமைப்படுத்தப்படும் சுரண்டப்படும் தன்மையினை கூறப்படுவதுடன், அதனை தங்கள் சமூகத்தகுதியாகவும் ஆளும் வர்க்கத்தினர் கருதும் நிலையினையும் உணர்கின்றனர்.

காலனிய ஆட்சிக்கு மறைமுகமாக தாங்கள் பிரதிநிதி எனவும் பண வெறியினால் தங்கள் நாட்டினரையே அடிமைப்படுத்துவதையும் முட்டாளாக்குவதையும் பெருமையாகக் கருதுகின்றனர். சமூக வெளியில் மதிப்பீடு என்பது இவர்களுக்கு பலவிதமான கார்கள், பங்களாக்கள், பல மனைவிகள் மற்றும் பல பெண் நண்பிகளின் மூலம் அளவிடப் படுவதாக உள்ளனர்.

கடைநிலைத் திருடர்களை பெரிதுபடுத்தும் அதிகாரம் சார்ந்த அரசு இவர்களுடன் இயல்பாக பழகும் முரண்பட்ட நிலையினையும் காண முடிகிறது. இந்நிலைப்பாட்டை கண்ட சமூகக் கூட்டம் என்கிற எல்லா நிலையிலும் உள்ள வண்டியில் பயணித்தக் கூட்டம் அதிர்வினை உள்வாங்கி செரித்துக்கொள்ளவியலாத ஒவ்வொரு சமூகப் பாத்திரமும் அதன்தன் நிலைபாட்டில் தனது எதிர்ப்பினை தெரிவிக்கின்றது.

நீதியின் பக்கம் சார்ந்து உண்மையின் தளத்தில் நின்றாலும் அது ஆளும்வர்க்கத்தின் சார்பாகவே பேசும். மாறாக சார்ந்தவனையே பாதிக்கும் என்கிற தளத்தில் போராளி பாத்திரமும், சிலுவையில் தொங்கும் சாத்தானின் கருத்துக்குட்பட்டு மனசாட்சியை அதனிடம் விற்றால் முதலாளி வர்க்கமாக மாறலாம் என்கிற தளத்தில் உள்ள சாதாரண குடிமக்கள் உழைக்கும் மக்களின் கூட்டத்தோடு சேர்ந்து உரிய கல்வியறிவுடன் போராடினால் "சாத்தானின் விருந்து" சிதைபடும் என்கிறக் கருத்தாக்கத்தையும் ஒவ்வொரு பாத்திரமும் அதுதன் கையில் எடுத்துக் கொள்கிற போராட்டத்தின் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது.

போராட்ட களத்தில் அதனை முன்னெடுத்துச் செல்கின்ற தலைமைக்கும் அதனுடனான குடும்பம் என்கிற நிறுவனத்திற்கும் இனை முரணான நிகழ்வு அமைவது இயல்பு. அகப் போராட்டமான இந்நிகழ்வினை தலைமை கையிலெடுக்கின்ற நிலைப்பாட்டினைப் பொருத்து முன்னேறிச் செல்கின்ற தோல்வியடைகின்ற தன்மை அமையும். அதை எந்த நிலையிலும் நழுவ விடாது கதை நகர்ந்து செல்வதும் இறுதியில் "பெண்" மற்றொரு போராட்டத்திற்கு தயாராகுவதுமாக உள்ளது.

நாவலின் தமிழாக்கம் நாவலை எந்தவொரு இடத்திலும் வாசகனை அன்னியப்படுத்திவிடாமல் அதே தளத்தில் அழைத்துச் செல்வது மொழி பெயர்ப்பாளனின் வெற்றியே எனலாம். பாத்திரங்களின் நிலைபாட்டில் குறியீட்டை உணர்த்திய ஆசிரியர் பாத்திரங்களின் இடுதலிலும் அதனைச் செய்திருப்பாரோ எனத் தெரிகின்றது. அதன் விளக்கத்தினை தந்திருந்தால் இன்னும் மொழிபெயர்ப்பு சிறப்பாகவே அமைந்திருக்கும்.

இலங்கை போராளிகளின் களத்தில் உருவானது நாவல்களின் சாயல் இந்நாவலில் தென்பட்டாலும், காலனித்துவம், பின்னையக் காலனியத்துவம் என்கிற மேலைநாட்டு இலக்கியக் கொள்கைகள் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள சூழலில் காலனியத்துவ எதிர்ப்புடைய இந்நாவல் அனைவரும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது சிலுவையில் தொங்கும் சாத்தான் அல்ல நம்மனதில் தொங்கும் சாத்தான்.

சந்தியாவின் முத்தம் (கவிதைகள்)


நேரடியாகப் பார்க்க முடியாததைக் கண்ணாடியில் பிரதிபலித்துக்காட்டும் ஜாலத்தை நிகழ்த்துகிறது கவிதை - ஆனந்த்

காதல், வேதனை, உறவு, தனிமை, பிரிவு, பிரிவாற்றாமை, மௌனம், துயரம், நிராசை, ஸ்பரிசம், கனவுகள், கண்ணீர்த்துளிகள், வண்ணங்கள், இருள், ஒளி, இசை, இரவு, பகல், கடல், நிலவு, மழை, ரகசியங்கள், முத்தங்கள், சாவு, பறவை, பூனை, சொல், பேரன்பு, நித்யகல்யாணிப்பூ, இவையெல்லாம் கவிதாவின் கவிதையுலகில் உலவும், அதைக் கட்டமைக்கும் விஷயங்கள். கருத்துகள் மிகக் குறைவாகவும் உணர்ச்சிகளும் உள்ளுணர்வுகளும் பெருமளவுக்கும் தொடர்ந்து ஊடாடுவது கவிதாவின் கவிதைகளின் பலம்.
இயல்பாகவே பெண்மையின் பார்வைக் கோணமும் அவ்வாறான பார்வை சார்ந்த உணர்ச்சிகளும் உணர்வுகளும் பெருமளவுக்கு இருந்தாலும் இவரது கவிதைகள் பெண் கவிதை - ஆண்கவிதை என்ற பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டவை.
சுகத்துக்கும் சோகத்துக்கும் இடையிலான இடைவெளியைக் காதலின் வேதனை போக்கிவிடும் அதிசயத்தை இவரது கவிதைகள் கொண்டாடுகின்றன. மென்னுணர்வுகள் மனத்தில் புரியும் ஜாலத்தை எளிமையாகவும் நேரடியாகவும் அதேசமயம் அவற்றின் வீரியம் குன்றாமலும் சொல்லும் லாகவம் கவிதாவுக்குக் கைவந்திருக்கிறது. வேதனை மிகுந்த கணங்களில் எங்கிருந்தோ வந்து கசியும் அன்பு, அல்லது அவ்வாறான அன்பின் நினைவு, அந்த வேதனையை ஆற்றிவிடும் அற்புதம் "சந்தியாவின் முத்தம்" கவிதையில் மண்விலக்கி வெளிவரும் துளிர்போல் வெளிப்பட்டிருக்கிறது.

"ஆனால் சந்தியா தந்த முத்தம் அவள் வாழ்க்கையின் மீது மூழ்க வியலாத ஒரு கப்பலைப்போல மிதந்துகொண்டேயிருக்கிறது"
என்னும் வரிகள் மிக முக்கியமானவை. அது மூழ்கிவிடும் கப்பலாக இருந்தால் என்ன ஆகியிருக்கும்? வேறொரு சமயம் வேதனையில் ஆழ்ந்துபோகும் தருணத்தில் அது கிடைக்காமல் மனத்தின் ஆழத்தில் மூழ்கிப்போயிருக்கும். ஆனால் அந்த ஒரு முத்தம் அவளுக்கு எந்நேரமும் கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு ஆறுதலாக இருந்துகொண்டே இருக்கிறது. "மிதந்துகொண்டே இருக்கும் கப்பல்" என்னும் பிம்பம் மறதி மறுத்த நினைவாக, மனத்தின் ஆழ் நிலைகளுக்குள் காணாமல்போய் விடாத ஒரு வாக்காக, எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஆறுதலின் சின்னமாக நிலைத்துவிட்டிருக்கிறது.

"அபூர்வமான ஒரு தனிமையில் உட்கார்ந்துகொண்டிருந்தோம்"
என்று தொடங்கும் கவிதை, "நான் அவனுக்கு சாவைப் பரிசளிக்க விரும்புகிறேன் கத்தியின் மீது தலையணை குவளைத் தேநீரில் ஒரு துளி விஷம் மலைமுகட்டின் மீதொரு காதல் தருணம் அல்லது ஒரு முத்தத்தின் மூலமாவது" என்று முடிகிறது.
சந்தியாவின் முத்தம் என்றென்றும் கிட்டும் ஒரு ஆறுதலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த முத்தம் சாவுக்கு ஒரு சாதனமாக இருக்கிறது. முத்தம் என்பதன் பல பரிமாணங்கள், அதன் முழுப் பிரிகையும் இவரது கவிதைகளில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன.

கவிதாவின் கவிதைகளில் கனவுகள் இன்னொரு முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன. பச்சைக் கனவுகள், வெள்ளைக் கனவுகள், கறுப்புக் கனவுகள், இளஞ் சிவப்புக் கனவுகள், பாதி உடைந்த கனவுகள், விபரீதக் கனவுகள்.

ஒரு பை நிறையக் கனவுகளை வைத்துக்கொண்டு எதிர்ப்படும் எல்லோருக்கும் பரிசளித்துக்கொண்டிருந்தாள் அவள் என்று தொடங்கி, அபூர்வமாய்த் தோன்றும் கறுப்புக் கனவொன்றை தவறுதலாய் ஒரு குழந்தையிடம் அவள் கொடுத்த போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது கனவுகள் நிறைந்த அவளது பை களவு போனது அவள் காணாமல் போனாள் ஊர் இருண்டது என்று முடிகிறது.

குழந்தையிடம் கறுப்புக் கனவைத் தவறுதலாகக் கொடுத்தால் கனவுகளின் பை ஏன் களவுபோக வேண்டும்? அவள் ஏன் காணாமல்போக வேண்டும்? அதுமட்டுமின்றி ஊர் ஏன் இருண்டுபோக வேண்டும்? கறுப்புக் கனவு குழந்தையை என்ன செய்தது? கனவுகளின் பை இல்லாவிட்டால் அவள் இருக்க முடியாதா? கனவுகளின் வெளிப்பாடா அவள்? ஊரும் கனவுகளின் வெளித்தோற்றம்தானே?? அப்படியானால் ஊரும் அவளும் குழந்தைக்குள்தான் அடக்கமா?

கவிதாவின் கவிதைகளின் உறவும் அது தொடர்பான உசாவலும் அடிநாதமாகத் தொடர்ந்து இழைந்துகொண்டே வருகின்றன. உறவின் மறுபக்கம் இருப்பது யார் என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட ஒரு நபரா அல்லது நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு "நீ"யா? குறிப்பிட்ட ஒரு நபரென்றால் அந்த நபரின் குணாதிசயங்களுக்கேற்ப உறவின் வாசனையும் இயல்பும் மாற்றம் கொள்ளாதா? ஆனால் இந்தக் கவிதைகளில் எந்த ஒரு நானும் எந்த ஒரு நீயும் கொள்ளும் உறவின் அடிப்படை இலக்கணங்களும் உள்ளியக்கங்களும் ஆழமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நானுக்கும் மற்ற ஒவ்வொருவரும் ஒரு நீதான். இங்கே பரிசீலிக்கப்படுவது காதல் என்ற பெயரில் பொதுவாக நடந்துவரும் விளையாட்டுகள் அல்ல. அனைத்து மனித உறவுகளும் காதல் என்னும் பின்னணியில் பரிசீலிக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

இவரது கவிதைகளில் உறவு எவ்வாறு வண்ணம் மாறுகிறது என்று பார்ப்போம். கூடவே இரவின் நிறமும் பகலின் நிறமும்.
"நீ வரும் வரை என் உறவுகளின் நிறம் கறுப்பாய்த்தான் இருந்தது எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை தனிமையின் அரண்களை மீறிய தேவதூதனையொத்த உனது வருகை
எனது இரவுகளுக்கு வெளிர்நீல நிறத்தைத் தந்தது உனது வருகை
எனது இரவுகளுக்கு நீ தந்தாய் இரண்டு வெண்ணிறச் சிறகுகளை
நான் பறக்க யத்தனித்தபோது நீ விலகிச் சென்றாய்
ஒரு பைத்தியக்காரனின் கனவைப்போல எல்லாம் முடிந்தது
எனது முந்தைய இரவுகளைப் போலவே இப்போது
என் பகல்களும் கறுப்பாய்த் தானிருக்கின்றன"
தனியொரு உயிரின் வாழ்வனுபவத்தில் ஏற்படும் நிகழ்வுகள், உயிரனுபவத்தின் ஆழங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய சாத்தியத்தைத் தம்முள் கொண்டிருக்கின்றன. கவிதை மற்றும் பிற கலைகள் சார்ந்த முறைபாடுகள் இந்தச் சாத்தியத்தை உண்மையான அனுபவமாக ஆக்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த அனுபவம் இங்கே பல கவிதைகளில் வெளியாகியிருக்கிறது. தனிமை என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம். கவிதாவின் கவிதை உசாவலில் தனிமை முக்கியமானதொரு விஷயம். இந்த வரிகளைப் பாருங்கள்.

ஏதோ ஒன்று எதற்காகவோ என்னை அடையும்போது நான் அதை தனிமை என்னும் சொல்லால் குறிப்பிட்டுச் சொல்லலாம்தான் ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது அது தனிமை அல்ல அது நான்தான்.

பொதுவாகத் தனிமை என்பதைத் தன்னை ஆட்கொள்ளும் ஒரு உணர்வனுபவமாகத்தான் கருதுகிறோம். ஆனால் பிறர் யாருமற்ற நிலையில் தான் மட்டும் இருக்கும்போது தன்னையேதான் தனிமை என்று பெயரிட்டு அழைத்துக்கொள்கிறோம் என்பது உண்மைதானோ "நான்" என்னும் உள்ளுணர்வுதானே புறவயப்பட்டு விரிந்து நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. பெருநகரத்தின் ஆயிரங்கால் மண்டபத்தின்...எனத் தொடங்கும் கவிதை மிகப் பெரியதொரு காலத் திரையின் பின்னணியில் வரையப்பட்டிருக்கும் ஒரு சித்திரமாக விரிகிறது. மனிதப் பிரக்ஞையின் ஆழ்தளப் பிம்பங்கள் தனிமனத்தின் வழியாக வெளிப்பட நேர்ந்தாலும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை. அங்கே காலம் காலமாக உறைந்து நிற்கும் அந்த பிம்பங்கள் ஒரு பொருளில் உயிருள்ளவை. காலத்துக்கு அப்பாற்பட்டவை. எந்த ஒரு நேரத்திலும் ஒரு பிம்பம் உயிரோட்டம் கொண்டு மேல் மனத்தை - மனிதனை - தீண்ட முடியும். தீண்டிவிட்டுப் போய் மறுபடி உறைந்து நிற்கக்கூடும். அவ்வாறான தீண்டுதல் நிகழும்போது மேல்மனம் மிகவும் வலிமையான பாதிப்புக்கு உள்ளாக முடியும். நிரந்தரமான மாற்றங்களோ அல்லது நீண்ட கால பாதிப்புகளோ நேர முடியும். இவ்வாறான ஒரு முறைபாடு பற்றி இந்தக் கவிதை பேசுகிறது.

இந்தத் தொகுப்பில் சில நீண்ட கவிதைகள் இருக்கின்றன. அவை கவிதாவின் அகவுலகம் எந்த அளவுக்குச் செறிவு நிறைந்ததாக இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன.
கவிதாவின் உலகம் எத்தன்மையது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும் கவிதை இதோ:
எல்லாத் திசைகளிலும் பறந்து பார்க்கிறது இந்த சிறு பறவை வானத்தின் விரிவு பார்த்து வதைபடும் அதன் சிறகுகள்
ஜன்னல் வழி துண்டு வானம் கொடுத்து அதனிடம் கேட்கிறாய் போதுமா என்று
கடல் கொள்ளும் பெருந்தாகம் தவிர சில மழைத்துளிகள் எப்படிப் போதும்?

நேரடியாகப் பார்க்க முடியாததைக் கண்ணாடியில் பிரதிபலித்துக்காட்டும் ஜாலத்தை நிகழ்த்துகிறது கவிதை. இவர் கவிதைகள் இம்மாதிரியான கண்ணாடியாகத் திகழ்கின்றன. உயிரோட்டமுள்ள பல சித்திரங்களைக் காட்டுகின்றன. இந்தக் கவிதைகளின் பின்னால் தெரியும் அகன்றதொரு சித்திரத்தைப் பார்க்கும்போது, கவிதாவிடமிருந்து மேலும் நல்ல கவிதைகள் தொடர்ந்து வருவது நிச்சயமான ஒன்றாகத் தோன்றுகிறது.

(சந்தியாவின் முத்தம் (கவிதைகள்), ஆசிரியர்: கவிதா, பக்: 64, விலை: ரூ. 45, முதற்பதிப்பு: ஏப்ரல் 2008. வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001)

பிறகொரு இரவு (சிறுகதை)


உலகின் மகத்தான மனிதனாக கருதப்படும் காந்தியை அவர் தன் குருவாகக் கருதி வந்த தல்ஸ்தோயோடு ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளார் - கே.என். செந்தில்

நேற்றைய தத்துவங்களால் கட்டப்பட்ட கற்சுவர்க் கோட்டைகள் இன்றைய கேள்விகளுக்கும் தர்க்கத்திற்கும் ஈடுகொடுக்க அல்லது எதிர்கொள்ளத் திராணியற்றுச் சரிந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றின் நிலைகூட ஏறக்குறைய அதுதான். ஆனால் உருவாகி வந்த காலந்தொட்டே தன் மீது அழிவின் சிறு நிழலைக்கூட அனுமதிக்காத ஆற்றல் இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு. தொலைந்து போன பலநூறு ஏடுகளுக்குப் பிறகும் எரிந்துபோன, எரிக்கப்பட்ட எண்ணற்ற பிரதிகளுக்கு அப்பாலும், மாறாத ஒளியோடு மேலெழுந்து வருவது அகத்தை ஆதார சுருதியாக அது கொண்டிருப்பதாலேயே. ஓயாமல் அழைக்கும் மர்மக் குரலொன்றுக்கு (ஒரு குரல்தானா?) தன்னைப் பணயம்வைத்துப் படைப்பெனும் பெருங்கடல் மீது உள்ளுணர்வைத் திசையெனக் கொண்டு படைப்பாளி பயணமாகிறான். கரையில் நிற்பவர்கள் பாக்கியசாலிகள் அவர்களுக்குப் புயலில்லை, அச்சமில்லை, தத்தளிப்புமில்லை எழுத்தின் சுதந்திரம் ஏறக்குறைய பறத்தலின் சுதந்திரம் போன்றதுதான். பல சமயங்களில் இரை பொறுக்க மண்ணிற்கு வர வேண்டுமென்ற எளிய உண்மைகூட இந்தப் பறவைகளுக்கு மறந்து போகின்றன. தன்னை அழிக்கும் என நன்கு உணர்ந்தும் அது புதிய உலகைக் காணும் வேட்கையில் தன் பறத்தலை மேலும் முடுக்குகிறது. இவ்வாறான கலைஞர்கள்தான் பேரிலக்கியங்கள் என்றும் கிளாசிக்குகள் என்றும் கொண்டாடுகிற ஆக்கங்களை உலகிற்குத் தந்திருக்கிறார்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நான்கு கதைகளிலும் பெரும்பான்மையான நவீன புனைகதைகளைப் போலவே தனிமனிதனை முன்னிறுத்தி அவனது அகநெருக்கடிகளில் வேர் கொண்டுள்ளது. சிறுகதையின் வடிவம் மற்றும் வரையறை சார்ந்த தொழில்நுட்ப நியதிகள் இந்த நெடுங்கதைகளுக்குப் பொருந்த மாட்டா. மன அழுத்தத்திற்கும் மனப்பிறழ்வுக்கும் இடையில் அலைவுறும் ஒரு மனிதன்மீது எழுதப்பட்ட கதை "சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும்". இக்கதையில் பயின்று வரும் நவீன மொழி கூர்மையானது. பிளவுபட்ட நிலைகொண்ட இம்மனத்தின் மீது முன்னோடியின் நிழல் கண நேரத்தில் விழுந்து மறைகிறது எனினும் அதன் எதிர்த் திசையில் இக்கதை இயங்குகிறது. நகுலனின் எழுத்துக்களில் இது நிகழும்போது அது போதத்திற்கும் அபோதத்திற்கும் (துரைசாமியா? நவீனனா?) இடையில் ஊசலாடும் மனமாக இருக்கிறது. எப்போதும் அது உணர்ச்சியின் தளத்திலிருந்து உருவாகக் கூடியது. ஆனால் தேவிபாரதியின் இக் கதையின் இறுதி வாக்கியம்வரை அவன் விழிப்பு நிலையிலேயே இருக்கிறான். சந்தேகத்தின் நஞ்சும் அதன் வீரியமும் இக்கதையில் மூர்க்கமாக சொல்லப்படுகிறது. அறிவு நித்ய சகாவாக அவனுடன் எப்போதும் இருக்கிறது. எனினும் அதைத் தேவைக்கதிகமாகப் பிரயோகப்படுத்தி விட்டாரோ எனும் ஐயமும் எழுகிறது. கவிஞனை, தத்துவவாதியைப் பற்றி அவர் கூறியிருக்கும் ஏராளமான வரிகள் இக் கதைக்கு வெளியிலேயே நிற்கின்றன. உதாரணமாக தல்ஸ்தோய் காந்தி பற்றிய கதையில் (பிறகொரு இரவு) தவிர்க்க முடியாதவராக இருக்கிறாரென்றால் இக்கதைக்கு அன்னியராகவே உள்ளார்.

தமிழில் குப்பை போல் குவிந்து கிடக்கும் த்ரில்லர் கதைகளைத் தீவிரமான மொழியால் மறுதலிக்கிறது "ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்". இக்கதையின் பிரதானக் கருப்பொருளும்கூடக் கொலைதான். இந்த இரண்டு கதைகளிலும் களன் எந்த மனிதனாலும் தப்பிச் செல்ல இயலாத காமமே. ஒன்றை ஆணின் மனமும் மூளையும் ஒன்றிணைந்து நடத்திச் செல்ல, பிறிதொன்றில் பெண்ணின் கண்களின் வழி ஒரு கொலையை முன்வைத்து அவளது அக ஓட்டம் பதற்றமான சொற்களால் தீட்டிக் காட்டப்பட்டுள்ளது. "ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்" கதையின் பலமெனக் காலம் கலைக்கப்பட்டு நிகழ்வுகளின் மீது அது ஆதிக்கம் செலுத்துவதைக் கூறலாம். இதைப் பிரக்ஞைப்பூர்வமாக தேவிபாரதி கையாண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. கணவன் பரிசளித்த கைக்கடிகாரத்தை அவன் முன்னேயே வீசி உடைக்கும் பெண்ணே, அக்கணவனைக் கொன்ற பிறகு- இரகசிய உறவின் பொருட்டு- மேற்கொள்ளும் காரியங்கள் திகைப்பூட்டுபவையாக உள்ளன. விஸ்வமும் அருணும் இக்கதைக்கு கருவிகளாக மட்டுமே உள்ளனர். அருணுடனான அவளது இரசிய உறவின் தொடக்கப் புள்ளிகள் கூறப்படாமலேயே விடப்பட்டுள்ளன. கணவனைக் கொல்லும் அளவு பிணைப்புக் கொண்ட ஓர் உறவைப் பற்றிய ஆரம்பச் சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கலாமோ? என்ற வினாவைத் தவிர்க்க முடியவில்லை.

தொகுப்பின் சிறந்த புனைகதையென "பிறகொரு இரவு" கதையைச் சுட்டுவேன். உலகின் மகத்தான மனிதனாக - எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாலும் - கருதப்படும் காந்தியை அவர் தன் குருவாகக் கருதி வந்த தல்ஸ்தோயோடு ஒப்புமைப்படுத்திக் கூறப்பட்டுள்ள இக் கதையிலேயே தேவிபாரதியின் ஆளுமை வெளிப்பட்டுள்ளது. பகவதிச் சரண்களால் நிரம்பிக் கிடக்கும் சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்றாம் வகுப்பு இரயில் பெட்டியில் அவமானப்படுத்தப்படும்போதும், காவலர்களால் நடுநிசியில் மறித்து வினவப்படும்போதும் அவர்கள் எவருக்கும் காந்தியின் இருப்பு ஒரு கேலிக்குரியதாக, தேவையற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அது ஒரு குறியீடு மாறிக்கொண்டேயிருக்கும் நவீன உலகம் காந்தியின் சத்தியத்தைத் தன் புறங்கையால் ஒதுக்கித் தள்ளும். மேலும் அது பகவதி சரண்களின் பாசாங்குகளால் தன் நீதி சார்ந்த விவாதங்களை விட்டொழிக்கக் கற்றுக் கொள்ளும். அசோகமித்திரனின் "காந்தி" கதைக்குப் பிறகு அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள சிறந்த புனைகதை இதுவெனத் தயக்கமின்றிக் கூறலாம். இக்கதை ஆக்கத்தின்போது உருவான படைப்பு மனநிலையைப் பின்தொடர்ந்து செல்வதன் மூலமே தேவிபாரதி தன் படைப்பாக்கத்தின் அடுத்த கட்ட நகர்வையும் வளர்ச்சியையும் கண்டடைவார் எனத் தோன்றுகிறது. காப்பியத்தின் சிறுபகுதியொன்றைக் கையாண்டிருக்கும் "ஊழி" பிற மூன்று கதைகளைக் காட்டிலும் சற்றுக் கீழேயே உள்ளது. இதிலும் அவர் சில இடங்களில் மனிதனின் கீழ்மையைத் தொட்டுணர்த்தத் தவறவில்லை.

கவிஞர் சுகுமாரனின் முன்னுரை இந்த நெடுங்கதைகளின் தொகுப்புக்கு மிக நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. அதில் அவர் பல்வேறு புள்ளிகளை குறிப்புணர்த்திச் சென்றாலும் "அறச்சிக்கல் மீதான படைப்பியல் விவாதம்" என்னும் வரியிலிருந்து இத்தொகுப்பை மீள்வாசிப்பு செய்கையில் அது இப்பிரதிக்குக் கூடுதல் வெளிச்சத்தைத் தருகிறது.

(பிறகொரு இரவு (சிறுகதை), ஆசிரியர்: தேவிபாரதி, பக்: 144, விலை: ரூ. 95, முதற்பதிப்பு: ஜூலை 2009, வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001)

யுத்தங்களுக்கிடையில்... (நாவல்)



வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017 பக்கங்கள்: 160 விலை: ரூ. 60

கதைகளில் காலம், இடம் ஆகியன அழுத்தமாகப் பதிக்கப்பட்டாலும் அவற்றைக் கடந்த மனித வாழ்க்கைதான் முன்னுக்கு நிற்கிறது - அம்சன் குமார்

நாவல் என்பது வெறும் கதையல்ல. அது கதையையும் சொல்கிற அனேக ஊடகங்களில் ஒன்று. அவ்வூடகத்தின் சிறப்பு நாவலைப் படித்துவிட்டு நாவலைப் போன்றே ஒருவர் கதையைச் சொல்லிவிட முடியாது என்பதில் உள்ளது. அசோகமித்திரனின் நாவல்கள் இத்தகைய சிறப்பியல்பை நமக்கு உடனே ஞாபகப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளன.

அவரது சமீபத்தியதும் எட்டாம் நாவலுமான யுத்தங்களுக்கிடையில் பின்னிப்பிணைந்த உறவுக்காரர்களின் பார்வைகள், அனுபவங்கள் ஆகியனவற்றை முன்வைத்து நகர்கிறது. உள்ளடக்கம் உருவத்தைத் தீர்மானிக்கிறபடியால் நாவல் ஊடுபாவுகள் மிகுந்த ஹைபர்லிங் உத்தியைக் கொண்டுள்ளது. ஹைபர்லிங் என்பது உண்மையில் உத்தி அல்ல. அதுவும் ஒரு புனைகதை வகை, கதையாடல். ஹைபர்லிங் என்கிற சொல்லாக்கம் கடந்த ஐந்து வருடங்களாகத்தான் எல்லோரது கவனத்தையும் பெற்றுள்ளது. அது ஒரு இணைகோட்டில் சந்தித்து மீண்டும் தன்வழியே பயணித்துச் செல்கிற கதாபாத்திரங்கள், கதைப் போக்குகள் ஆகியவற்றின் கோவையைக் குறிக்கின்றது. சமீபத்திய லத்தின் அமெரிக்கப் படங்கள் பல இக்கதையாடலைக் கொண்டுள்ளன. அமரோஸ் பெர்ரொஸ் (தமிழில் ஆயுத எழுத்து) ஒரு உதாரணம். திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் இக்கதையாடல் புனைகதைகளுக்கு ஒன்றும் புதிதல்ல. ஜுலியா கொர்தசாரின் ஹாப்ஸ்காட்ச், ஜீன் பால் சார்த்தின் ரிப்ரீவ் ஆகியன இத்தகைய கதையாடலைக் கொண்டுள்ள நாவல்கள். 1967இல் தீபம் இதழில் தொடராக வெளிவந்த அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் இதைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. கரைந்த நிழல்களைவிடவும் முழுமையாகவும் வெற்றிகரமாகவும் யுத்தங்களுக்கிடையில் நாவல் ஹைபர்லிங்கை பயன்படுத்தியுள்ளது. இதன் சில பகுதிகள் வார்த்தை இதழில் வெளிவந்தன.

பாரம்பரியமான கதைசொல்லல் இல்லாது போவதால் இவ்வகை நாவல்கள் வாசகனின் முயற்சியைக் கூடுதலாக வேண்டுகிறது. இவ்வகை நாவல் எழுதுபவர்கள் இந்தச் சிக்கலிலிருந்து வாசகன் வெளிவரவும் சில துப்புகள் தருவார்கள். அசோகமித்திரன் சில வர்ணனைகளைத் திரும்பத் திரும்பத் தருகிறார். ஆனால் கூறியது கூறல் என்றதாக இல்லாத வண்ணம் அவை ஒவ்வொரு முறையும் கதையின் வேறிடத்திற்கு வாசகனை அழைத்துச் செல்கின்றது. ஒரே மூச்சில் நாவலைப் படித்துவிடலாம். 155 பக்கங்கள். அசோகமித்திரனின் படைப்புகளை இருமுறை படிப்பதன் அவசியம் பற்றி ஏற்கனவே பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இது கட்டாயம் இருமுறை படித்தாக வேண்டிய நாவல். எனவே மறுமூச்சு எடுத்து இரண்டாம் முறையாக நாவலை உடனே படித்தால் புரிதல் எளிதாவதோடு மட்டுமின்றிப் படிப்பதன் சுவாரஸ்யமும் கூடும்.

நாவலின் கதை நிகழ்வுகளை ஒரு நேர்க்கோட்டில் வரிசைப்படுத்தினால் அது இவ்வாறு இருக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொடங்கி இரண்டாம் உலகப் போர் வரையிலான காலத்தில் நாவல் நிகழ்கிறது. மாயவரம் பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு நடத்தும் வாத்தியார் தனது நாற்பதாம் வயதில் இறந்துபோகிறார். அவருக்கு மொத்தம் பதினாறு குழந்தைகள். அவர்களில் உயிரோடு இருப்பவர்கள் எட்டு பேர். ஐந்து ஆண்கள். ரங்கமணி, சாம்பசிவன், ராமேசன், பாலு, சங்கரன். மூன்று பெண்கள். முதல் இரண்டு பெண்களின் பெயர்கள் தரப்படவில்லை. கடைசிப் பெண் சீதா. மூத்தவளைத் தவிர மற்ற இருவரும் விதவைகள்.
முதல் உலகப் போர் முடிந்திருக்கிறது. வாத்தியாரின் முதல் மகன் ரங்கமணி சர்க்கரை நோய் வந்து ஒரு காலை இழந்த பிறகு இறந்து போகிறான். பி.ஏ. படித்த அவனது தம்பி சாம்பசிவன் தவிர அக்குடும்பத்தில் யாருமே சரியாகப் படிக்கவில்லை. சாம்பசிவத்திற்குப் போலீஸ் உத்தியோகம். அவன் மீது உத்தியோகத்தில் அவப்பெயர் ஏற்படவே கவரிமான் போல் உயிரைவிட்டு விடுகிறான். ராமேசனுக்கு நிஜாம் சமஸ்தானத்தில் ரயில்வேயில் வேலை கிடைக்கிறது. அவன் தனது தம்பிகளான பாலு, சங்கரன் ஆகியோரை அங்கு அழைத்துவந்து வேலை வாங்கித் தருகிறான். அவர்களது வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம். ராமேசனின் முதல் மகன் ஸ்ரீவத்ஸன் அகால மரணமடைகிறான். ராமேசனுக்கு மேலும் மூன்று பெண்கள். ஒரு பையன் சீனு.
பாலுவுக்கு ட்ராலியில் சென்று கைகாட்டிகளைப் பராமரிக்கும் அலைச்சல் மிகுந்த வேலை. அவனுக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள். ஆறு ஆண்டுகள் கழித்து அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்து செகந்திராபாத்திலேயே பணி மாற்றலாகிறது. சங்கரனது குடும்ப வாழ்வில் சறுக்கல்கள். முதல் மனைவி பவானி இறந்துவிட அவன் அவளது அக்கா மகளான சுந்தரியை இரண்டாம் தாரமாக மணந்துகொள்கிறான். ஆனால் மூன்று சகோதரர்களும் கெட்டிக்காரர்கள். வந்த சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்தி அதில் தங்களுக்கேயான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். சகோதரர்கள் விட்டுப்போன தந்தையின் சிராத்தத்தை ஒன்றுகூடி புது இடத்தில் செய்கிறார்கள். அவர்களுடைய மனைவிமார்களும் மொழி தெரியாவிட்டாலும் சமயோசிதத்துடன் நடந்துகொள்கிறார்கள். ராமேசனின் மனைவி லட்சுமிக்குத் தையல் மிஷனை ஓட்டவும் தெரியும்.

ஆண்கள் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்வதைப் போல் பெண்கள் இரண்டாம் தாரமாகவும் வாழ்க்கைப்படுகிறார்கள். சீதா, சீதாவின் அக்கா இருவரும் ஐம்பது வயதுக்காரர்களுக்கு இரண்டாம் தாரங்கள். சீதாவின் கணவன் ஒரு பணக்கார வக்கீல். முதல் தாரத்துப் பையன் சீதாவை அவன் அப்பா மணந்தது பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறியவன்தான். கடைசிவரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

நாவலில் சீதாவிற்குத்தான் அதிக இடம். அவள் தனது கணவனின் சொத்துகளைத் திறமையாக நிர்வகிக்கிறாள். பணக்கார விதவையான அவள் வீட்டுக்குச் சகோதரர்களும் வந்து தங்கிப் போகிறார்கள். தனக்குத் துணையாக இருக்கட்டும் என்று கருதி, தன் அண்ணன் ரங்கமணியின் மகன் ராமசுப்புவை அழைக்கிறாள். அவனுக்குப் போதிய சாமர்த்தியம் இல்லாவிட்டாலும் அவனை அரவணைத்து ஆளாக்குகிறாள். விசாலாட்சி என்கிற பெண்ணை மணமுடித்து வைக்கிறாள். பண்டாபீசில் வேலையும் வாங்கித் தருகிறாள். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் ராம சுப்புவிற்குச் சீதாவின் சித்தப்பா மகன் வைதுவின் கூடா சகவாசம் ஏற்படுகிறது. அவனைப் பெரிதாக நம்பியிருந்த சீதா மனம் துவண்டு இறந்துபோகிறாள். சீதாவின் பணத்தை எடுத்துக்கொண்டு போய் வைதுவுடன் மெட்ராஸில் சுருட்டு வியாபாரம் செய்கிறேன் என்று எல்லாவற்றையும் இழந்துவிட்டு மீண்டும் பண்டாபீசில் ப்யூனாக வேலை பார்க்கத் தொடங்குகிறான் ராமசுப்பு.

சாம்பசிவனின் மூத்த மகன் ராகவன் தன் தாய் தந்தையரைப் போல் நல்ல சிவப்பு. அவனது தாய்மாமன் கல்யாணச் சந்தையில் விலை போகாத கறுப்பான தன் மகள் பார்வதியை மணமுடித்து வைத்துவிடுகிறார். ராகவன், தன்னுடைய அம்மா, தம்பி, பார்வதி எல்லோரையும் பம்பாய் அழைத்துச் சென்று வாழ்கிறான். மோட்டார் மெக்கானிக்கான அவன் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குப் பம்பாய் அண்ணாவாகத் தெரியவருகிறான். ரங்கமணி மற்றும் அவனது உடன்பிறப்புகளின் தாய் எவரிடமும் நல்ல பெயர் வாங்கவில்லை. மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டே வாழ்ந்து உடம்புக்கு முடியாமல் ஆனால் கடைசிவரை தன் சொந்த வீட்டிலேயே வாழ்ந்து இறக்கிறாள்.

எஞ்சியுள்ள சகோதர சகோதரிகள் அவர்களுடைய குடும்பங்களுடன் ஒன்றுகூடும் மகிழ்வான வைபவமும் நடக்கிறது. போலகத்தில் வாழ்க்கைப்பட்ட மூத்த சகோதரியின் கணவர் ராஜப்பையரின் சஷ்டியப்த பூர்த்திக்கு எல்லோரும் கூடுகிறார்கள். இதை முன்னின்று நடத்துவது ராமசுப்பு என்று அறியும்போது அவர்களுக்கு வியப்பு கூடுகிறது. எவ்வளவோ இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் நடுவே அனைவரின் ஒன்றுகூடல் நிகழ்கிறது. அதன் பின் இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் தமிழ்நாட்டையும் நிஜாமின் சமஸ்தானத்தையும் உலுக்குகின்றன.

அசோகமித்திரன் முன்னுரையில் கூறுவதைப் போல் இது பிழைத்திருத்தல் பற்றிய நாவல். பிழைப்பும் ஒரு யுத்தம். அதற்கிடையே மனிதர்கள் எத்தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பதை நாவல் பரிசீலிக்கிறது. கல்வியை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கீழ் மத்திய தர பிராமணக் குடும்பம். சிலரால் கல்வியைப் பெற முடியவில்லை. சிலரால் கற்க இயலவில்லை. நூறு ரூபாய்கூட இயலாத நிலையில் ராகவனால் பட்டப்படிப்பு படிக்க முடியாது மெக்கானிக்காக ஆகிவிடுகிறான். சாம்பசிவன் பி.ஏ. படித்து முடிப்பதற்குள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வீட்டில் அவர்கள் இலைபோடும்வரை காத்திருந்து உண்ண வேண்டியிருந்தது. மற்றவர்களை எப்படியாவது கரையேற்றிவிட வேண்டும் என்கிற ஒரு பொறுப்புணர்வு பிழைப்பு தேடுகிறபோதே கூட வருகிறது. ராமேசன் தன் தம்பிகளையெல்லாம் செகந்திராபாத்துக்கு அழைத்து ரயில்வேயில் வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறான். மோழை என்று சொல்லப்பட்ட ரங்கமணி தனது தம்பிக்கு வேலையும் கல்யாணமும் நேர்வதற்குக் காரணமாகிறான். ராகவன் தன் தம்பியைப் பம்பாய்க்கு அழைத்துச் செல்லும்போதே அவனை எப்படி உற்சாகத்துடன் வைத்திருப்பது என்றும் யோசிக்கத் தொடங்குகிறான். சீதா ராமசுப்புவுக்கு வேலை ஏற்பாடு செய்து கல்யாணமும் செய்விக்கிறாள். தான் நினைத்தது சரியாக அமையவில்லை என்னும்போது ஜன்னியை வரவழைத்துத் தற்கொலை செய்துகொள்கிறாள். சங்கரன் தனது முதல் தாரத்து குழந்தைகளைத் தன்னோடு வைத்துப் பராமரிக்க முடியாதது கண்டு துயரத்தில் ஆழ்கிறான்.
வாத்தியாரின் மனைவிதான் அனைவராலும் விரும்பப்படாதவள். ஆனாலும் அவள் என்னதான் செய்வாள் என்று அவளுடைய நிலையில் தங்களை வைத்துப் பார்க்க அவளது குழந்தைகள் தவறுவது இல்லை. செகந்திராபாத் பால்காரனின் மனைவி ஜானகிபாயிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் சிற்றுண்டி நிலைய மானேஜர்வரை பல்வேறு மனிதர்கள் மற்றவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவிக்கொண்டே இருக்கிறார்கள். விதவையான சீதா தனது கணவனின் சொத்தை அவனது முதல் மனைவியின் மகனுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று நினைத்து வாழ்கிறாள். பிழைப்பைத் தேடும் அனைவரிடமும் ஒரு லட்சிய வேகமும் குடிகொண்டிருக்கிறது. வாடகை வீட்டிலிருக்கும் தேவதாசிகள் வீட்டுக்காரர்களிடம் எத்தனை கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள்! ராமேசனைப் போல் தனது குழந்தையையும் இழந்துவிட்ட வெள்ளைக்கார மேலதிகாரி அவனைக் கட்டிக்கொண்டு அழுவது பொதுவான மனிதப் பண்பின் அடையாளம்.

அசோகமித்திரனின் கதைகளில் காலம், இடம் ஆகியன அழுத்தமாகப் பதிக்கப்பட்டாலும் அவற்றைக் கடந்த மனித வாழ்க்கைதான் முன்னுக்கு நிற்கும். இதனாலேயே அவரது கதைகள் மூப்படைய மறுக்கின்றன. அவரது நகைச்சுவை தனித்தன்மை பெற்றது.

"ரயில் நிலையம் அருகே ஒரு தர்மச் சத்திரம். பாஷையே புரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது. அந்தச் சத்திரத்தில் ஆறு நாட்களுக்குமேல் தங்க விடமாட்டார்கள்".
"ராமசுப்பு பெண்ணைப் பார்த்தவன் வாய் மூடாதபடி இருந்தான். யாருக்கும் அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. ஆனால் அவளை மணம் செய்விக்கவில்லை என்றால் பட்டினி கிடந்து சாவேன் என்று சொல்லி ஒருவேளை சாப்பிடாமலும் இருந்தான். இன்னொரு வேளைக்குக் காத்திருக்கலாம். அதற்குள் சம்மதம் என்று சொல்லியனுப்பிவிட்டார்கள்".

இருண்மையான நகைச்சுவைக்கு அவர் தன்னிகரில்லாதவர்.
"சிவனே வந்து கைலாசத்திற்குக் கூப்பிட்டாலும் அவருக்கு நடக்கக் கால் இல்லை".
சிக்கனம் மிகுந்த அவரது சொல்நடை எவ்விதத் தயாரிப்புமின்றி வாசகனுக்கு உடனேயே பதைபதைப்பினையும் தர வல்லது.
"ஆறு வயதுப் பையன் நெருப்புச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சவ ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினான்".
"பதினேழு வயதில் தலை மொட்டை அடிக்கப்பட்டு உடுத்த நார்மடி. அவள் தலையை மழித்தவருக்குக்கூட அழுகை வந்திருக்கும்".
அவரது சற்றும் குறையாத வண்ணங்களுடன் வெளிவந்துள்ள நாவல் யுத்தங்களுக்கிடையில்.

(யுத்தங்களுக்கிடையில்... (நாவல்), ஆசிரியர்: அசோகமித்திரன், பக்: 160, விலை: ரூ. 60, முதல் பதிப்பு: பிப்ரவரி 2010, வெளியீடு: நர்மதா பதிப்பகம் 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017)

Saturday, July 24, 2010

நாட்டுப்புறவியல்-வீச்சும்,பரிணாமங்களும்



நாட்டுப்புறவியல் பல்கலைகழக பாடத்திட்டமாக வைக்கப்பட்டதிலிருந்து மைய முக்கியத்துவம் பெற்று வரும் வேளையில் நாட்டுபுறவியல் குறித்த நம்மவர்களின் ஆய்வும் நோக்கும் சரியானதாக இருந்திருக்கிறதா என்பதை இத்தருணத்தில் ஆய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.'நாட்டுப்புறவியல்' என்னும் நூலில், தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் எவ்வாறு தமிழ் நாட்டாரின் வாழ்வியலையும் நாநவில் படைப்பாக்கங்களையும் அயல்மொழிகளில் உள்ளவைபோல உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

"இணையம் வழியாக இன்று உலக அறிஞர்களின் அறிவுத்தொகுப்புகளை உற்று நோக்கிக் கற்கும்பொழுது மேல்நாட்டினரின் வளர்ந்த நிலையும் நாம் இன்னும் வளர்ச்சி நோக்கி நெடுந்தூரம் செல்ல வேண்டி உள்ளதும் புலப்படுகிறது. நாட்டுப்புறவியல் என்று சொல்லப்படும் 'FOLKLORE' எனும் துறை சார்ந்த படிப்பின் தேவை இந்திய அளவில் இன்னும் முழுமையாக உணரப்பட்டதாகத் தெரியவில்லை. 'FRRC,' 'IFSC,' 'FOSSILS' போன்று அங்கொன்றும், இங்கொன்றும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளனவே தவிர மேல்நாட்டை நோக்க, செய்யத்தகுந்த ஆய்வுக்களங்களைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இத்துறை மிகுந்த வளர்ச்சி பெற வேண்டி உள்ளது. பழுத்த தாள்களில் அச்சடித்து அகம் மகிழும் நம் மனப்போக்கினை மாற்றிக் கொண்டு இணையம் வழியாகச் செய்திகளை வெளி உலகிற்கு மின்மொழிகளில் தெரிவிக்க வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம். அதுபோல் தொன்மரபு பின்பற்றும் மக்கள் வாழும் காலத்திலேயே நம் பழைய அடையாளங்களைத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.

தமிழில் உள்ள இணையப் பக்கங்களை நோக்கும் பொழுது உள்ளூர்ச் செய்திகளின் தரத்தில் நம் இணையப் பக்கங்கள் உள்ளனவே தவிர, உலகத் தரத்தில் நம் பக்கங்களை வடிவமைக்க வேண்டி உள்ளது. உலகின் எந்த முனையில் உள்ளவரும் நம் பழமரபுச் செல்வங்கள் பற்றிய விரிவான பரந்த செய்திகளை அறியும் வண்ணம் நம் நாடு முழுவதும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். நம் நாட்டின் செய்தியைச் சொல்லும் எந்த இணையப் பக்க முகப்பிலும் பழமரபுச் செல்வங்கள் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் தொடர்புகள் (Links) இணைக்கப்பட வேண்டும். அரசு இணையப் பக்கங்களில் சுற்றுலா, கோயில், பார்க்கும் இடங்கள், மருத்துவம், திரைச்செய்தி, தங்கும் இடம் பற்றிய குறிப்புகள் இருப்பது போலவே மரபுச் செல்வங்கள் (Heritage) அல்லது 'Folklore' என்னும் செய்திப் பகுதி இணைக்கப் பெறல் வேண்டும். அமெரிக்க நாட்டுப்புறவியல் கழக இணையப் பக்கத்திற்குச் சென்றால் அமெரிக்காவில் உள்ள நாட்டுப்புறவியல் கல்விக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், படிப்பு முறைகள், படிக்கும் நேரம், கட்டணம், ஆசிரியர்கள், கட்டட அமைப்பு, முன்னோடி ஆய்வுகள், நூலகம் பற்றிய குறிப்புகள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. அதுபோல் நம் இணைய அமைப்புகள் அனைத்திலும் அறியத்தகுந்த இணையத் தொகுப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வாளர்களை அடையாளப் படுத்தும் கட்டுரைகள், படங்கள், மின்முகவரிகள், தொலைபேசி எண்கள், இணைய முகவரிகள் யாவும் நம் ஆய்வு முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்று தன் நாட்டத்தை வெளிப்படுத்தும் இளங்கோவன், நாட்டுப்புறவியல் துறையில் அரும்பாடுபட்டு உழைத்து மிகச் சிறந்த முடிபுகளைத் தம் ஆய்விதழான 'ஆராய்ச்சி''யில் கொண்டுவந்த அறிஞர் நா. வானமாமலை முதலான அறிஞர் பெருமக்களையும் அவர்களின் அறிவுப் புலத்தையும் உலகளாவிய நிலையில் அறியச் செய்வது நம் கடமை என்று உணர்த்துகிறார். அதே சமயம், "அதற்குரிய ஆக்கப் பணிகளில் வாய்ப்பு அமையப்பெறின் ஈடுபட்டு உழைப்போம்...." என்று எழுதுவதுதான் மனத்தை உறுத்துகிறது. வாய்ப்பு அமையப்பெறின் எவரும் எதையும் செய்யலாம். வாய்ப்பை உருவாக்கி அமைத்துக் கொண்டு அத்துறையில் ஈடுபட்டு உழைப்பதுதான் உண்மையான பணி. பின்னடைவுகளே வலிமைமிக்க முன்னெடுப்புகளுக்கு வழிவகுப்பன என்று 'போரின் கலை'(The Art Of War) என்னும் சீனப் பழம்நூல் சொல்லுகிறது.

'நாட்டுப்புறவியல்' என்ற இந்த நூல், அடிப்படைக(basics)ளிருந்து தொடங்குகிறது.

நாட்டுப்புறவியலை 'Folklore' என்ற சொல்லால் வில்லியம் ஜான் தாமஸ் 1846ஆம் ஆண்டில் குறிப்பிட்ட பின்பே இத்துறை தனியாக வளரலாயிற்று என்ற செய்தி முதல் இயலில் இடம்பெற்றுள்ளது. உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் நாட்டுப்புறவியல் தொடர்பாக ஆய்விலும் தொகுப்பிலும் மேற்கொள்ளப்பெற்ற முயற்சிகளும் பணிகளும் விரிவாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.

பின்னர் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய திரைப்படப் பாவலர் பாடல்கள் வரைக்கும் கொண்டுள்ள நாநவில் இலக்கியத்தின் தாக்கத்தை அலசுகிறது.

நாட்டுப்புறப் பாடலுக்குரிய தனித்தன்மைகளுள் ஒன்று சொல்லோ தொடரோ திரும்ப வருதல்; அந்தத் தனித்தன்மையுடன், சமூக மாற்றத்துக்கான கருத்து வீச்சுகளும் - மொழி அடிப்படையில் வழக்குச் சொற்களும் பழமொழிகளும் சித்தர் பாடல்களில் அமைந்துள்ளமையால் சித்தர் இலக்கியத்தை மக்கள் இலக்கியம் என்று அறிஞர்கள் உரைப்பது பொருத்தமே என்று குறிப்பிடுகிறார் இளங்கோவன்.(பக். 40-42)

நாட்டுப்புறவியல் கோட்பாடுகளின் விளக்கம் விரிவாக மூன்றாம் இயலில் சொல்லப்படுகிறது. அத்துறையின் முன்னோடி ஆய்வறிஞர் சி.எம். பெளராவின் அறுவகைப்பாட்டையும் மரியாலீச்சின் ஐவகைப்பாட்டையும் தவறாமல் குறிப்பிடுகிறார். தாலாட்டுப் பாடல்கள் தொடங்கி ஒப்பாரிப் பாடல்கள் வரையிலான நாநவில் இலக்கிய வடிவங்களை விளக்கி உரிய சான்றுகளையும் வயணமாகத் தந்துள்ளார்.

அடுத்த நான்காம் இயலான 'கதைப்பாடல்கள், 'நாட்டுப்புறவியல்' என்னும் இந்நூலின் அச்சாகத்(axle) தெரிகிறது. பண்பாடு வளர்ந்துள்ள நிலப்பகுதிகளைவிட வறண்ட பகுதிகளிலும் பின் தங்கிய பகுதிகளிலும் மட்டுமே கதைப்பாடல்களின்(Ballads) பெருக்கம் சாத்தியம் என்ற உலகநூல் கலைக் களஞ்சியத்தின்(The World Book Encyclopaedia) கருத்து உரியவாறு பயன்படுத்தப் பட்டுள்ளது(ப.98). வாய்மொழியாகப் பரவுவதே கதைப்பாடல்களின் முதன்மையான செயல்பாடு என்ற டேவிட் புக்கான் கருத்தும் இவ்வாறே.

தமிழ் - தமிழர் பண்பாடு தொடர்பான ஆய்வுகளில் ஏன் ஆங்கிலக் கலைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? அப்படிப் பயன்படுத்தினால் அந்தக் கலைச் சொல்லின் வழி குறித்து, மேற்கோளை மட்டுமே நம்பாமல், சொல்லாய்வுக்குச் சென்று அறிய வேண்டும். இலத்தீன் சொல்லிலிருந்து 'ballad' தோன்றியதாக(ப.97) இளங்கோவன் கூறுகிறார். "A narrative poem or song of popular origin in short stanzas, often with a refrain; originally handed down orally, often with changes and additions[

ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிகளுக்குள்ளோ மேற்கோள் குறிகளுக்குள்ளோ தராமல் நேரடியாகப் பயன்படுத்துவதையும் பிழையுடன் தருவதையும் ஆசிரியர் இனிவரும் பதிப்புகளில் தவிர்க்க வேண்டும். பக்கம் 19இல் "Finish Literature Society என்னும் பெயர்கொண்ட பின்லாந்து இலக்கியக்கழகம் 1831இல் தோற்றம் பெற்றது" என்று உள்ளது. 'Finish Literature Society' என்றால் "இலக்கியக் கழகத்தை ஒழித்துக் கட்டு!" என்று பொருள். இன்னொன்று, பின்லாந்திலுள்ள இலக்கியக் கழக்த்தின் பெயரை அப்படியே சுட்ட வேண்டுமென்றால் 'ஃபின்னிஷ்' மொழியில் தானே தர வேண்டும். இந்தச் சிக்கல்களை மிக எளிதாகத் தீர்க்க, பின்னிய இலக்கியக் கழகம்('Finnish Literature Society') என்று எழுதினாலே போதும். சொல்லுக்கு முன் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தாத ஆசிரியர், 'லோன்ராட்' என்று மொழிமுதல் வாராத எழுத்தைப் பயன்படுத்தாமல் 'உலோனிராடு' என்றல்லவா எழுத வேண்டும்? 'லோகநாதன்' என்ற பெயரை உலகநாதன் என்றெழுதுவதுதானே மரபு! சொல்லில் வடவெழுத்தை நீக்கியபின் தமிழ்மரபெழுத்துச் சொல்லமைப்பை அமர வைக்காமல் ஆங்கில எழுத்துகளில் அப்படியே சொல்லை எழுதுவது ஏற்புடையதா? திரைப்படப் பாடல்களுக்கு வடிவம் நல்கிய நாட்டுப்புறத்துக்குள் பகரமாக இன்று திரைப்பாவடிவம் வந்து நுழைந்துள்ளதுபோலத்தானே இதுவும்?

தோழர் உலகநாதன் பாடும் கானாப் பாடல்கள் சிலவற்றுக்கும் இதே கதைபொதி தன்மை (balade naturelle) இருப்பதை உணரலாம். தொல்பிரஞ்சுச் சொல் 'பலாத்'துக்கு உள்ள நடனப் பாட்டுத் தன்மையை "வாளைமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" என்ற உலகநாதனின் திரைப்பாட்டுக் காட்சியிலும் காணமுடிவது, "நாடுகளின் எல்லைகள் கடந்ததும் மொழியினப் பண்பாடுகள் கடந்ததுமான ஒருமையைக் கதை பொதி பாடல்களில் மட்டுமே காணமுடியும்" என்ற கருத்தியலை மெய்ம்மையுறுத்துவதாகும்.

நாட்டுப்புறவியல் அறிஞர் நா.வானமாமலை, தெய்வீகம், புராணம்,சமூகம், வரலாறு என்ற நான்கு அடிப்படைகளில் கதைப்பாடல்களை வகைமை செய்தது இந்நூலில் விளக்கம் பெற்றுள்ளது. சான்றுகளான இராமப்பையன் அம்மானை முதலான கதைப்பாடல் நூல்களைப் பற்றியும் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாவதும் இறுதியானதுமான 'நாட்டுப்புறவியலும் மானிடவியலும்' என்ற இயலில் கொடும்பாவி கட்டி இழுக்கும் வழக்கம், ஆவி வணக்கம், மந்திரம், மைபோடுதல், வசியம் செய்தல் முதலான பல நாட்டுப்புற நம்பிக்கைகள் விளக்கப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் வெளியான தமிழவனின் 'நாட்டுப்புற நம்பிக்கைகள்' என்ற நூல் இது தொடர்பான முன்னோடித் தொகுப்பு ஆகும்.

இவ்வியலில் 'வசியம் செய்தல்' பற்றிய பகுதியில் வரும்,

"மஞ்சள் அரைக்கையிலே

மதிலேறிப் பார்த்த மச்சான்

' என்னபொடி தூவி இங்கே

இழுத்தரைக்க கூடுதில்ல"

என்ற சான்றின் மூலவடிவம்-

"காரை வீட்டுத் திண்ணையிலே

கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே

என்ன நினைச்சுப் பார்த்தானோ

இழைச்சு அரைக்க முடியல்லியே"

என்ற தூய நாட்டுப்புறக் காதல் பாடல் ஆகும். நாற்பதாண்டுகளுக்கு முன் இந்த மூல வடிவம்தான் தொகுப்புகளில் இடம் பெற்றது.

நூலின் இறுதியில் 'உதவிய நூல்கள்' என்ற பட்டியலுக்குப் பின் 'உதவிய இணைய தளங்கள்' என்ற பட்டியலும் இடம் பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. ஏனெனில் மிகவும் சிறந்த தமிழறிஞர்களும் ஏனோ "அச்சைத்தான் பார்ப்போம்! இணையம் பார்த்திட ஏதிங்கே நேரம்?" என்று இன்னும் அடம் பிடித்துக் கொண்டிருக்கையில் இத்தகைய நலமனப்பான்மையை இளங்கோவன் கொண்டிருப்பது தென்பளிக்கிறது.

பின்னிணைப்பாக, தான் பல ஆண்டுகளுக்குமுன் பெரம்பலூர் மாவட்டத்தில் களப்பணியாகத் தொகுத்த சில பாடல்களைக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். உரை சொல்லி மாரடிக்கும் ஒப்பாரிப் பாடல் ஒன்று, கிட்டத்தட்ட பத்துப் பக்கம் தரப்பட்டுள்ளது. அதை வாசிக்கையில், நாட்டுப்புறக் குடும்ப வாழ்க்கையில் நிழலாடும் தனிமனிதச் சோகங்கள் பல நெஞ்சை நெருடுகின்றன. அதே சமயம் அதில் வரும் மருத்துவர் மற்றும் மருத்துவம் பற்றிய குறிப்புகள், ஓருவரின் இறப்புக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று தவிர்க்கும் தனிமனித மனநிலை(evasion)யைச் சுட்டுகின்றன.[இந்த மனநிலையை அடிப்படையாக வைத்தே சாந்திரார் என்ற சுவிட்சர்லாந்து நாவலாசிரியரை ஆராய்ச்சி செய்துள்ளார் பிரஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வே.நாயகர்.] நடவுப் பாடல் ஒன்றில்,

"காச செலவுபண்ணி

காலேஜிக்குப் போகச் சொன்னேன்

காலேஜிக்குப் போகாமலே எம்மா - அவன்

கடத்தெருவ சுத்தினாராம் எம்ம்மா - எம்மா"

என்று இடம் பெற்றிருப்பது சிரிப்பை உண்டாக்கினாலும், பின்னர் வரும் -

"ஆத்தங்கர ஓரத்தில்

ஏத்தம் எறக்கையிலே

வரப்போரம் வேலிகட்டி எம்மா - நான்

வறுமையிலே வளர்ந்தேனடி எம்ம்மா - எம்மா

பூமுடிச்சுப் பொட்டுவச்சுப்

பொன்னகையும் போட்டுவச்சு

கல்யாணம் முடிச்சீங்களே எம்மா - நான்

கண்கலங்கித் திரும்புவேனே எம்ம்மா - எம்மா

...........................................................................

ஸ்டவ்அடுப்பு முதல்கொண்டு

நீஎனக்கு எடுத்துவச்ச

இங்குஒரு ஸ்டவ்அடுப்பு எம்மா - என்

மாமிவாங்கி வச்சிருக்கா எம்ம்மா - எம்மா

ஒருசாதி ஒருரத்தம்

சொந்தமிடக் கூடாதுன்னு

என்னெ கொடுத்தாயே அம்மா - என்

இரத்தத்தையும் பார்த்தாயோ எம்ம்மா - எம்மா

தங்க அருகாபடி

தங்கதாண்டும் வாசப்படி

தங்களுக்குச் சீருசெய்ய எம்மா - அங்கத்

தகராறு ஆவுதடி எம்ம்மா - எம்மா"

போன்ற பாடல்கள் மனவெளியை ஈரமாக்குகின்றன. நாட்டுப்புறங்களில் பெண்கள் படும் கொடுமைகள் அவர்கள் வாய்விட்டுப்பாடும் நடவுப்பாடல்கள் முதலானவற்றில் பதிவானதிலிருந்தே நாட்டார் நாநவில் இலக்கியம் எவ்வளவு ஆற்றல் மிக்கதென உணரலாம். நாட்டுப் புறங்களில் வாழும் பெண்கள் குறித்த சித்தரிப்பு இப்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் வேறு ஒரு மாற்றுப் பரிமாணமும் கொள்ளத் தொடங்கியுள்ளது.நாட்டுப்புறவியலின் வகைமாதிரிகள் இந்திய குணத்துக்கேற்றவாறு,தமிழ் குணத்துக்கேற்றவாறு பரிணாமம் கொண்டிருக்கிறது என்பதை அறுதியிட்டு சொல்லமுடியும்.

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...