Friday, May 28, 2010

மாவீரன் திப்புசுல்தான்


1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: 'இன்று முதல் இந்தியா நம்முடையது' என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் "ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்" எனக் குறிப்பிடுகிறார்.(. 'Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company' என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், '30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது'. என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், 'இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்' என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். "அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! "ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது 'அக்னி சிறகுகள்' என்ற நூலில் தான் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, 'இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன' என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.

இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: "மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?" என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
'எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது' என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்."

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது 'திப்புவின் சமயக் கொள்கை' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் 'திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்' என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.

திப்புவின் விவசாயக்கொள்கை
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


போர்களத்தில் நேர்மை
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை."

மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. "அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்".என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

திப்புவை மாவீரனாக மாற்றியது எது?
இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.
உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.

திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது.ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது. கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. சஞ்சய்கான் 'the sword of tippu' என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை 'கற்பனைக்கதை' என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை 'கற்பனை கதை' எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன. அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும்,வறுமை,லஞ்சம்,ஊழல்,நிர்வாக சீர்கேடுகள்,தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும்.அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

Friday, May 21, 2010

மகத்தான இயலாமையின் மோனமொழி


கர்ணமோட்சம் குறும்படத்தை முன்வைத்து

குறும் படம் எனும் அற்புதமான கலைவடிவத்தை கையாளுகின்ற கலை ஆளுநர்கள் அதன் சிறப்பில்புகளை ஒரு சிலரை தவிர மற்றுள்ளவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை.ஆயினும் தமிழில் தொடர்ச்சியாக பல குறும்படங்கள் உயரங்களை தாண்டும் வல்லமை மிக்கதாக இருக்கிறது.எனது புலம் பெயர் வாழ்தலில் தமிழகத்தை போல பலவசதிகளை அடையமுடியாமல் போனாலும் தகவல் புரட்சியின் விளைவாக பல விஸயங்களை பயன்படுத்த முடிகிறது.அந்த வகையில் யூடூப் இணைய விடியோ மூலமாக பலவிதமான பாராட்டுதல்களை பெற்ற கர்ணமோட்சம் குறும்படத்தை கண்டேன்.பொதுவாக நான் விமர்சனம் எழுதினாலும் சிலாகித்து எழுதுவதில்லை.ஆனால் இந்த படத்தை குறித்து சிலாகித்து எழுதுவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்.எந்த ஒரு கலை வடிவமும் கால நீட்சியில் நிகழும் மாற்றத்தின் புழுதியில் தன் சாரத்தை இழந்து தனிமைப்படும்பொழுது அதை சார்ந்து இயங்கும் கலைஞனின் வாழ்வு அவன் அளவிலும் மற்றவர் பார்வையிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஒவ்வோரு காலகட்டமும் வாழ்வைப்பற்றிய பொதுவான ஒரு பார்வையை அதன் சமூகத்திடமிருந்து உருவாக்கிக்கொள்கிறது. பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் உய்வும் , எந்த வித நோக்குமற்ற கேளிக்கையும் நம்முடைய “ஊடக காலத்து” வாழ்வியல் பார்வையாக இருக்கும் பிண்ணனியில் ஒரு தெருகூத்து கலைஞனின் வாழ்வை முன் வைக்கிறது முரளி மனோகர் இயக்கிய “ கர்ணமோட்சம்” என்ற குறும்படம். [இந்த வருடம் கலை மற்றும் கலாச்சார பிரிவில் தேசிய விருதை பெற்றகுறும்படம்]



ஒரு பள்ளியில் தன் கர்ணமோட்சம் கூத்தை நிகழ்த்திக்காட்ட இருங்கூர் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு தன் மகனுடன் – அவனுக்கு கிரிக்கெட் மட்டையும்,பந்தும்,வெள்ளை தொப்பியும் கூத்து முடிந்ததும் வரும் பணத்தில் வாங்கிதருவதாக வாக்கு - வருகிறான் கோவிந்தன் என்ற கூத்து கலைஞன். வரும் வழியிலேயே தன்னை கர்ணனாக வேசம்கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் கோவிந்தன் ,பள்ளி தாளளர் இறந்து விட்டதால் பள்ளி விடுமுறை என அறிந்து என்ன செய்வது என்றறியாது நிற்கிறான். பள்ளியின் தலைமை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊருக்கு திரும்பி செல்லக்கூட பணமில்லாத நிலையை கூற தலைமையாசிரியர் தான் வெளியே இருப்பதாகவும் சாயங்காலம் வீட்டிற்கு வந்தால் உதவுவதாகவும் கூறுகிறார். கோவிந்தனுக்கு வேறு வழியில்லை. காத்திருப்பதை தவிர. பசியோடிருக்கும் தன் மகனுக்கு ஒரு வடை வாங்கிகொடுத்துவிட்டு தண்னீர் குடித்து பசியாறுகிறார் “கர்ணன்”. அந்த தேநீர் கடையில் வேலை செய்யும் ஊமை சிறுமிக்கு கர்ணனின் பசி தெரிந்திருக்கவேண்டும். தெரு பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருக்கும் “கர்ணனு”க்கு சாப்பிட கொடுக்கிறாள் அவள். கையேந்தி பெற்றுக்கொள்கிறார் “ கர்ணன்”

அவரைப்பற்றி அவள் கேட்க கோவிந்தனுக்கு உற்சாகமாகிவிடுகிறது –அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு ஜீவனாவது இருக்கிறதே! – தான் அவள் வயதில் செஞ்சி துரைசாமி தஞ்சிரானிடம் கூத்து கற்றுக்கொண்டதையும். தான் கூத்தில் கர்ணன் வேசம் கட்டுவதையும் தான் பாட ஆரம்பித்தால் விடிய விடிய ஊரு சனம் மொத்தமும் கேட்கும் என் கூறிக்கொண்டே வ்ருபவர்“இப்பொழுதெல்லாம் யார் இருக்கா இதல்லாம் பார்க்க எல்லாத்தையும் டி.வி பொட்டி இழுத்துக்குச்சே” என்கிறார் ஏக்கத்துடன். ஒரு உற்சாகத்துடன் அந்த ஊமை பெண்ணிற்கு கூத்தை கற்றுக்கொடுக்க தொடங்குகிறார்.தன் குருவிற்கு வணக்கம் தெரிவித்து. அந்த சமயம் அங்கு வரும் தேநீர் கடைகாரன் அவள் முகத்தில் தண்ணீரை விசிறியடித்து அவளை இழுத்துச்செல்லும் பொழுது .“நாலு இட்லி வாங்க காசில்லாமல் தெரு தெருவாக சுத்துகினு இருக்கிற இதுல இவளுக்கு கூத்து கத்து குடுக்க போரியா போய்யா ஒ வேலய பாத்துக்கிட்டு” என கூறி “கர்ணனை” கிட்டதட்ட ஒரு பிச்சைகாரனாகவே ஆக்கிவிட்டுப்போகிறான்.

மிகவும் வேதனையுடன் அங்கிருந்து நடந்து செல்லும் கோவிந்தனை ஓடி வந்து வழி மறைக்கிறாள் அந்த ஊமை சிறுமி. கர்ணன் அவளையே பாக்கிறார். அவள் தன் கைகளை நீட்டி அவருக்கு ஏதோ கொடுக்கிறாள். கர்ணன் அதை கை நீட்டி வாங்குகிறார் கோவிந்தன். ஒரு ரூபாய் நாணயம். குரு தட்சணை. அவள் தன் குருவிற்கு குரு வந்தனம் செய்து ஓடுகிறாள். கோவிந்தன் அவளைப்பார்த்த வண்ணம் நிற்கிறார். இருக்கலாம் அந்த நிமிடம் கோவிந்தன் -கர்ணன்- மனம் மோட்சம் அடைந்திருக்கலாம். மெல்ல நடந்து போகும் கோவிந்தன் எதிர்படும் பள்ளி சிறுவர்களிடம் “ நான் கர்ண மஹாராஜா” என கூறி தன் கிரீடத்தை கழட்டி குடுத்துவிட்டு போகிறார். கிரீடம் தன் தன்மையை இழந்து அந்த சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாகிபோகிறது. அது அவருக்கும் இந்த சூழலுக்கு பொருந்தா விசயமாக பட்டிருக்கவேண்டும்.

அடுத்த தலைமுறையின் ரசனையும் அவர்களது உலகமும் கோவிந்தனுக்கு புரிவதில்லை. அடுத்த தலைமுறை தன் வாழ்வோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் விசயங்களிலிருந்து உருவாகப்போகும் மலினமான வாழ்வியல் பார்வை நம் கண்முன்னே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிதர்சனம். கோவிந்தன் மகன் கையில் ஒரு பொம்மை செல்போன் கிடைக்கிறது. அதை “அதிஷ்டம்” என சந்தோஷப்படும் அவன், முதலாய் தொடர்புகொள்வது சச்சின் டெண்டுல்கரை. பின் அவன் “பெப்ஸி” உமாவை தொடர்புகொண்டு பேசுகிறான் “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.......விஜய் படத்திலேந்து பாட்டுப்போடுங்க” கிரிகெட்,சினிமா இவற்றை ஆதர்சனமாகக்கொண்டு கேளிக்கையும் அந்த நேர சந்தோஷத்தை மட்டும் பிரதானமாய் கொள்ளும் தட்டையான தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் உழன்று கிடக்கும் அடுத்த தலைமுறைக்கும் கோவிந்தனின் கலைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிறப்பமுடியாத பெருவெளி. (மற்றோரு இடத்தில் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கோவிந்தன்Ring Ring Tone ஆக எதிர்கொள்ளும் பாட்டு : “ வாள மீனுக்கும் , விலங்கு மீனுக்கும் கல்யாணம்....” இந்த பாடல் மூலமாக அந்த தலைமையாசிரியரைப்பற்றி இயக்குனர் நம் மனத்தில் எழுப்பும் பிம்பம் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு)


இரண்டாவது கிளாஸ் தண்ணீர் கேட்ட கோவிந்தனை விரட்டுகிறான் தேநீர் கடைக்காரன். அவனுக்கு வாழ்க்கை பணம் சார்ந்தது உறவுகள்,நிகழ்வுகள் எதையுமே பண வடிவாய் புரிந்துக்கொள்பவன். அவனைப்பொருத்தவரை அந்த கூத்துக்காரன் “இடத்தை அடைத்துக்கொண்டு “ வியாபாரத்தை கெடுக்கும் இடையூறு. கோவிந்தனால் நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால் அவனால் கோவிந்தனையும், அவன் கூத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும்.அப்படி இல்லாத பட்சத்தில் எந்த கலைவடிவமும், கலைஞனும் அவன் வாழ்க்கைக்கு தேவையில்லாத வஸ்துக்கள். நம் காலத்து மனசாட்சியாக இருக்கிறான் அவன்.

தானும் தன் கலையும் கால மாற்றத்தில் தனிமைப்பட்டு போவதும், உறவுகளின் எதிர்பார்புகளை நிறைவேற்றமுடியாதசரிவும், தன்கென்றிருந்த வெளி இல்லாமல் போகும்பொழுது ஏற்படும் சூன்யமும் “ கர்ணமோட்சம்” முழுவதும் நிறைகிறது. பொருளாதாரம்,அர்த்தமற்ற வெற்று கேளிக்கை சார்ந்து இயங்கும் நம் கால சூழலில் பொருத்திக்கொள்ளமுடியாமல் திணரும் எந்த கலைக்கும்,கலைஞனுக்கும் பொருந்தும் “ கர்ணமோட்சம்”

கர்ணமோட்சம் குறும்படத்தை இயக்கிய முரளி மனோகர். பிறந்தது கும்பகோணம். படித்த்து ,வளர்ந்தது திண்டிவனம்.தமிழ்நாடு திரைப்படகல்லுரியில் இயக்குனர் பட்டய படிப்பு. இவரது மற்ற குறும்படம்” அக்காலம்” ஜெமினி ஸ்டியோ கேண்டீனில் வேலைப்பார்த்த ஏ.என்.எஸ்.மனியனைப்பற்றிய,அவர் நினைவுகள்பற்றிய ஆவணப்படம். கர்ணமோட்சம் தமிழ்நாடு அரசின் விருதையும் இந்த வருடம் மத்திய அரசின் விருதையும் பெற்றது. தற்சமயம் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் முரளி மனோகருக்கு வாழ்த்துக்கள்.




கர்ண மோட்சம்:

தயாரிப்பு : எம்.ஜீ.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

இயக்கம் : முரளி மனோகர்

கதை,உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்.

இசை : இரா,பிரபாகர்

நடிப்பு : ஜார்ஜ்,யுவராஜ்,கலியமூர்த்தி,பூர்ணிமா,சண்முகம்.

Tuesday, May 11, 2010

கசாக்கின் இதிகாசத்தை எழுதிப்பார்த்த ஒ.வி.விஜயன்



I wish to escape nothing, Ravi answered from within his silence, I want to be the sand of the desert, each grain of sand; I want to be the lake, each minute droplet. I want to be the laya, the dissolution.

From The Legends Of Khasak, 1969
ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.
பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.
கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.

ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.

கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :

…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.

“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.

“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.

“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.

“அக்காவை மறந்துவிடுவாயா?”

“மாட்டேன்”

“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”

இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.

… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”

... Long before the lizards, before the dinosaurs, two spores set out on
an incredible journey. They came to a valley bathed in the placid glow
of sunset.
My elder sister, said the little spore to the bigger spore, let us see
what lies beyond.
This valley is green, replied the bigger spore, I shall
journey no farther.
I want to journey, said the little spore, I want to discover. She
gazed in wonder at the path before her.
Will you forget your sister ? asked the bigger spore.
Never, said the little spore.
You will little one, for this is the loveless tale of karma; in it
there is only parting and sorrow.
The little spore journeyed on. The bigger spore stayed back in the
valley. Her root pierced the damp earth and sought the nutrients of death
and memory. She sprouted over the earth, green and contended.
... A girl with silver anklets and eyes prettied with surma came to
Chetali's valley to gather flowers. The Chempaka tree stood alone-
efflorescent, serene. The flower gatherer reached out and held down a soft
twig to pluck the flowers. As the twig broke the Chempaka said, My little
sister you have forgotten me !

- O.V.Vijayan "Legends of Khasak"

Short stories

* Short Stories of Vijayan(1978)
* Oru Neenda Rathriyude Ormakkayi(1979)
* Asanthi(1985)
* Balabodhini(1985)
* Kadaltheerathu(1988)
* Kattu Paranja Katha(1989)
* Poothaprabandham and Other Stories(1993)
* Kure Kathabeejangal (1995)
* O V Vijayante Kathakal (2000)
* Arakshithavastha(2007)

Collection of Essays

* Khoshayathrayil Thaniye(1987)
* Oru Sindoora Pottinte Orma(1987)
* Sandehiyude Samvadam(1988)
* Vargasamaram Swathwam(1988)
* Kurippukal(1988)
* Ithihasathinte Ithihasam(1989)
* Haindavanum Athihaindavanum(1998)
* Andhanum Akalangal Kaanunnavanum(2001) Satire
* Ente Charithranewshana Pareekshakal(1987)

Cartoons

* Ithiri Neramboke, Ithiri Darsanam (ഇത്തിരി നേരമ്പോക്ക്, ഇത്തിരി ദര്‍ശനം) (1990)
* Memoirs: A Cartoonist Remembers, Rupa & Co. (2002)
* Cartoon: Tragic Idiom ~ O.V. Vijayan's Cartoons & Notes on India, Edited by Sundar Ramanathaiyer and Nancy Hudson-Rodd, DC Books, (2006)

Translations into English

* After the Hanging and other stories
* The Saga of Dharmapuri
* The Legends of Khasak
* Infinity of Grace
* O. V. Vijayan:Selected fiction
Awards

* 1970- Odakkuzhal Award, for Khasakinte Itihasam
* 1990- State and Central Academy awards of Gurusagaram
* 1991- Vayalar Award for Gurusagaram
* 1992- Muttathu Varkey Award for Khasakinte Itihasam
* 2001- Ezhuthachan Award
* 2003- Padma Bhushan

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...