Friday, July 08, 2005

என்னுள் பிறரும் பிறருள் நானும்

Abstract wp Pictures, Images and Photos

அறிமுகம்

எனக்கு எப்போதும் இவ்விரு ஒப்புமைகளில் குழப்பம் ஏற்படுவதுண்டு. என்னுள் பிறரும் பிறருள் நானும் இருப்பதாகத் தோன்றும் தருணங்களில் ஏற்படும் குழப்பம் அது. புனைவியலாளர்கள் சிலர் இந்தப் பூவுலகிற்கு வேறெங்கிருந்தோ உயிர் வந்ததாகவும் அதைக் கொண்டுவந்தவர்கள் வேற்றுலகவாசிகள் என்றும் நம்புகின்றனர். இதிலும் எனக்குக் குழப்பம்தான். உயிரோடு இவ்வுலகிற்கு வந்துவிட்ட பின்னும் அவர்கள் வேற்றுலக வாசிகள்தாமா என்னும் குழப்பம். நம்மிலிருந்து வேறுபடுத்திச் சொல்லும்படி அவர்களுக்கு நெற்றியில் கண் இருந்திருக்கலாம். அதன்மூலம் நாம் காணாததையெல்லாம் அவர்கள் கண்டிருக்கலாம். அவற்றை நமக்குச் சொல்லியிருப்பார்கள். முதலில் மொழியின் குறுக்கீட்டால் புரியாமை நிலவியிருந்தாலும் புரிதலின் பல்வேறு பரிமாணங்கள் பின்னர் நமக்குக் கை கொடுத்திருக்கும். குழந்தைகளுக்குப் படம் காட்டிப் புரிய வைப்பதைப்போல் நமக்குப் புகட்டியிருப்பார்கள். மேலதிகப் புரிதலுக்காக கதைகளை, கவிதைகளை, சித்திரங்களை, இசைக் கோலங்களை அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். சில கருத்துருக்கள் சொல்லில் முழுமை பெறாதபோது உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்கியிருக்கக் கூடும். (இதிலுள்ள ஆபத்து என்னவெனில் நெற்றிக்கண் ஒரு கற்பிதத்தின் ஊற்றுக்கண் என்பதை வசதியாக மறந்துவிட்டு, அதை ஞானத்தின் குறியீடாக அரசியல்படுத்தி, வேற்றுலகவாசிகளின் சூத்திரக் கயிற்றில் பூவுலகவாசிகள் வெறும் பாவைகள் என்பதாக அணி பிரித்து சண்டையிட்டு, அறிவியல் சாத்தியப்பாடுகளின் கற்பித வழிகளை அடைத்து விடுவதுதான்.)

இயற்பியலின் முதல் படிகள்

பொருள்கள் சிறியதிலிருந்து பெரியதாகின்றன. முட்டையிலிருந்து குஞ்சு பொரிகிறது. குஞ்சு பெரிதாகி முட்டையிடலாம். ஆனால் குஞ்சு முட்டையாவதில்லை. காலக் கணக்கறியப்படாத காலத்தில் பூவுலகம் முழுதும் நீராய் விரிந்திருந்தது. பின்னொரு காலத்தில் அந்நீரில் நுண்ணுயிரிகள் மிதந்து கொண்டிருந்தன. பிறகு அவை வளர்ந்து பெரிதாகின. அவற்றுள் சில நாளாவட்டத்தில் ஒளியுணர் உறுப்புகளும் நீந்துவதற்கான செதில்களும் பெற்று மீன்களாயின. கால்கள் முளைத்துத் தவளைகளாயின. இப்படியே வளர்ந்து நீர்வாழ் உயிரினங்களும் நிலம்வாழ் உயிரினங்களும் மெல்லமெல்ல உருவாயின. ஊர்வன, டினோசார்கள், குட்டி போடுபவை (எக, அணில், கங்காரு), பாலூட்டிகள் (மான், பூனை, புக, சிங்கம், குரங்கு, மனிதன்) என உயிர்வடிவாக்கங்கள் பெருகி வளர்ந்தன. யோசித்தால் இதுதான் வைணவர்கள் சொல்லும் தசாவதாரம் போலும். அதில் கடைசியாக வருவது கல்கி அவதாரம்- அது ஜார்ஜ் புஷ் மாதிரி அமைந்துவிடாமலிருந்தால் சரி.

பழங்குடி மக்கள் தங்கள் எண்ணங்களையெல்லாம் கானுயிர் வடிவங்களாகவே வரித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பொம்மைகளை உயிருள்ளவையாய்ப் பாவிப்பதைப் போன்ற வாழ்முறை அது. காலம் செல்லச்செல்ல கானுயிர்கள் தங்களைப்போல் இல்லை என்னும் பட்டறிவைப் பெற்றார்கள். ஆகவே அவர்கள் தங்கள் பாவனைப் பொருள்களுக்குப் பல்திறச் செழுமைகளையும் உயிரூட்டங்களையும் வழங்கினார்கள். இப்படியாகத்தான் மனித மூளை இயக்கம் பெறுகிறது. நம்மைச் சுற்றியுள்ள வெளித்தாக்கங்கள் நம்மைக் கட்டமைக்கும் உள்ளாக்கங்களாகின்றன. குழந்தையாய் நாம் பெறும் பண்பாட்டுப் பயிற்சிகள் நமது இயல்பிகந்த உள்ளுணர் கட்டுமானத்தின் ஆழ்நிலைப் படிமானங்களாகின்றன. இந்த உள்ளாக்கக் கருத்தமைதிகள் பழங்குடிச் சாமியாடிகளாலும் சூனியக்காரர்களாலும் ஓவியர்கள்- ஞானிகளாலும் நுண்ணுணர் தகைமைகளாய்த் தொடர்ந்து பேணப்பட்டு வந்துள்ளன. உழைப்பை நல்கும் உயிரற்ற எந்திரங்களையும் உயிருள்ள ஊழியர்களையும் களப்பொருள்களாக்கிய தொழில் யுகமானது பொருள்களை அர்த்தப் படுத்துவதற்கான புதிய பார்வையை நமக்கு வழங்கியுள்ளது.

அறிவியல் விழிப்புணர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை நம்புவதே கடுங்குற்றமாய் இருந்தது. என்னைத் தினமும் தாங்கி நிற்கும் அன்னைபூமி இன்னொரு பொருளைச் சுற்றி வருவதா! (இது ஏதோ தி.ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” போலல்லவா இருக்கிறது.) பூமி நகர்கிறது- சுற்றுகிறது என்றால் அது நான் அறியாமலா?

ஆம். வான்வெளியிலுள்ள பிற பொருள்களை நாம் உற்று நோக்கி உள்வாங்கிக் கொள்ளாத வரை அது நமக்குத் தெரியப் போவதில்லை. பூமியைப் போன்ற மற்ற கோள்களையும் பாருங்கள். அவை யாவும் பூமியைச் சுற்றவில்லை. மாறாக, பூமியும் சேர்ந்து சூரியனையே சுற்றுகின்றன. உண்மையில் நாம் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறோம் என்பதை அறியும்போது மிகவும் அச்சமாகவே உள்ளது.

வானம் முழுதும் ஒரு கணினித் திரைபோல இருந்து, அதில் நாம் சித்திரம்போல அசைவற்றிருந்தால் நன்றாயிருக்கும் இல்லையா?

நிச்சயமாக இல்லை. நிஜத்தில் அது ஒரு சகிக்க முடியாத சகப்பூட்டும் அனுபவமாகவே இருக்கும்.

மரணத்துக்குப் பின் நட்சத்திரங்களாகிப்போன எனது முன்னோர்கள் கதி என்ன?

அவர்களைப்பற்றி நீ ஒன்றும் கலைப்பட வேண்டாம். அவர்கள் மேலேதான் இருக்கிறார்கள். ஆனால் சும்மா இல்லை. நம்மைப் போலவே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நிலவு, வானம், நட்சத்திரங்கள், அண்ட சராசரங்கள் பற்றி என் அன்பான பாட்டி சொன்ன அருமையான கதைகளெல்லாம் என்னாவது?

நல்லது, அவை நம்மை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்காற்றியவை என்பது மறுக்க முடியாத உண்மை.

சரி, கலிலியோவும் நியூட்டனும் என்னானார்கள்? அரசியல் உள்நோக்கமுள்ள மண்டை கனத்தவர்களா அவர்கள்?

பாவம், அப்படியில்லை. கண்ணாடியைத் தேய்த்து, தொலைதூரக் கோள்களைத் துல்லியமாகப் பார்க்கப் பயன்படும் குவி வில்லைகள் செய்யத் தெரிந்த ஆகச்சாமானியர்கள்தாம் அவர்கள். வானத்தை ஊடுருவும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டவர்கள் அவர்கள்.

எனில், போப் எதற்காக கலிலியோ மேல் கோபம் கொள்ளவேண்டும்?

அது ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சினை. போப்பின் தேவாலயங்கள் பண்ணையடிமைச் சமூக மதிப்பீடுகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அதிகார பீடங்கள். அறிவியலற்ற குருட்டு நம்பிக்கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கோலோச்சிய மையங்கள். அவர்கள் நம்பிக்கைப்படி பூமியைச் சூரியன்தான் சுற்றி வருகிறது. சூரியனை பூமி சுற்றுவது உண்மைதான் என்றாலும் அதை ஒத்துக்கொள்வதென்பது அந்நாட்டுப் படிப்பாளிகளையும் இறையியலாளர்களையும் ஏன், போப்பையும் சேர்த்தே அடிமுட்டாள்களாக்கிவிடும். அது போப்பின் அதிகாரத்துக்கு விடும் அறைகூவல் என்பதோடு ஒருவகையில் கடவுளையே மறுப்பதாகிவிடும். போப் கடவுளுக்குச் சமம் அல்லவா. தமிழில் கடவுளுக்கு ஆண்டவன் என்றொரு அழகான பெயர் உண்டு- ஆள்கிறவன் என்னும் அர்த்தத்தில்.

ஐரோப்பா நெடுகிலும் மூண்ட விவசாயிகளின் கலகமும், ஹாலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் சீர்திருத்த லுத்ரன் பிரிவை ஆதரித்து நின்ற வணிக சமூகங்களும் கொடுத்த நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்த இத்தாலிய கிறித்துவப் பேரவை கலிலியோவின் முன்வைப்புகளை ஏற்றுக் கொள்வதென்பது தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பானது. ஏசுநாதர் உயர்த்திப் பிடித்த “பிறருக்காகப் பாரஞ் சுமக்கும் அன்பாகிய கடவுள்” துன்புறும் விவசாயிகள் பின்பற்றுவதற்கு மட்டும்தான். இந்தக் கடவுளைக் கலகக்காரர்களைத் தண்டிக்கும் அச்சத்தின் உருவகமாக வெளிப்படுத்துவதே இத்தாலியப் பழமைவாத சமயப் பேரரசின் தேவையாயிருந்தது. அரசியல் அறிவில்லாத கலிலியோ என்னும் மூடருக்கு அவர்களது கோபம் புரியவே இல்லை.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு போப் ஜான் பால், கலிலியோவுக்குச் செய்த அநீதிக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதுகூட தன்னை மீறி வளர்ந்துவிட்ட முதலாளித்துவ அதிகாரத்துடன் அவர் செய்துகொண்ட சமரசத்தின் வெளிப்பாடுதான். பழைய பண்ணையடிமைச் சமூகக் கடவுள்கள் அதிகாரமற்றுச் சுருங்கிப் போனதை இவ்வளவு காலதாமதத்திற்கு அப்பால்தான் அவர்கள் ஒத்துக்கொள்ள நேர்ந்திருக்கிறது.

நாம் ஒரு கல்லை வானத்தை நோக்கி விட்டெறிந்தால் அது மேலே மேலே வளைந்தேறிச் சென்று பின்னர் அதுபோலவே வளைந்திறங்கி பூமியில் வந்து விழுகிறது. பூமியானது உருண்டையாய் இருப்பதால், பூமியை வந்தடைய முடியாத அதிமனித சக்தியுடன் அந்தக் கல்லை மேல்நோக்கி எறிந்தால் என்னாகும்? அது வளைந்து வளைந்து மேலேறி, பூமியிலிருந்து வெகுதூரம் சென்று பூமியை எட்ட முடியாமல் வளைந்து வளைந்து விழுந்து கொண்டே இருக்கும்- அதாவது நாம் செலுத்தும் செயற்கைக் கோள்களைப்போல அந்தக் கல்லும் பூமியை வட்டமடிக்கும். அதன்மூலம், பொருள்கள் கீழே விழுவதும் எகிறிச் சென்று சுற்றி வருவதும் ஒரே இயற்பியல் விதிப்படிதான் என்பதை அறிகிறோம்.

நீரில் கல்லை விட்டெறிந்தால் அது வட்டங்களாக விரிந்து செல்லும் சிற்றலைகளை உண்டாக்குகிறது. ஒரே சீராக அருகருகே நிற்க வைக்கப்பட்டுள்ள மிதிவண்டிகளில் ஒன்றைத் தட்டிவிட்டால் மளமளவென எல்லா வண்டிகளும் சாய்ந்து விழுந்து ஒரு அலையடிப்பை உருவாக்கும். கடலில் காற்றின் சலனத்தால் அலைகள் தோன்றுகின்றன. நீருக்கும் நிலத்துக்கும் இடையிலான வெப்ப மாறுதல் காற்றில் சலனத்தை ஏற்படுத்துகிறது. இவையெல்லாம் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான எளிய சான்றுகள்.

பழமை பேசும் கத்தோலிக்க சமூகத்தில் உட்கார்ந்துகொண்டு கலிலியோவால் இவ்வெளிய கருத்துகளையெல்லாம் விளக்கிச் சொல்லி நிறுவ முடியவில்லை. அதற்கு இங்கிலாந்திலிருந்து நியூட்டன் பிறந்து வரவேண்டியிருந்தது. இங்கிலாந்து, தன் மன்னனையே கொன்றுவிட்டு, ஓரளவு மதச்சார்பிலிருந்து விடுபட்டு, புதிய விழுமியங்களை உருவாக்கிக் கொண்டிருந்த நேரம் அது. அந்தச் சமயத்தில் கத்தோலிக்க அதிகார மையத்துக்கெதிராக கிளர்ச்சிகளும் விவசாயப் பெருங்குடிகளின் கலகமும் பரவிக் கொண்டிருந்ததால், புதிய ஆட்சியாளர்கள் புதுப்புது சட்டங்களையும் நவீன வழிமுறைகளையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். அத்தகையதொரு புதிய சகாப்தத்தில்தான் நியூட்டனால் தன் இயற்பியல் கோட்பாடுகளை- அதாவது, சூரியன், பூமி அல்லது மற்றெந்த கோளுக்கும் தனித்த சிறப்புத் தகுதிகள் என்று ஒன்றுமில்லை. ஒவ்வொரு கோளுக்கும் அதன் கனபரிமாணங்கள் என்னவாயிருந்தாலும் அதற்கென உள்ளார்ந்த மதிப்பு ஒன்று இருந்தது. அதுதான் அதன் பொருண்மை (Mass)- பொருள்திணிவு. அந்த மதிப்புதான் அதன் சுழற்சியைத் தீர்மானிக்கிறது. அதுவே அதன் இயற்பியல் தத்துவம்- என்னும் கோட்பாடுகளை முன்வைப்பது எளிதாயிருந்தது.

முதலாளித்தவத்துக்குப் பெரிதும் ஒத்துப்போவதான இவ்விதிகள் ஒரு பொருளுக்கு அதன் உள்ளார்ந்த மதிப்பீட்டைத் தவிர வரலாற்று ரீதியான வேறெந்த முக்கியத்துவத்தையும் இல்லாமலாக்குகின்றன. ஆனால் அவையும் ஒரு வரையறைக் குட்பட்டவையாகவே இருந்தன. உதாரணமாக, நியூட்டனின் விதியானது சூரியக் கோள்கள் அனைத்தும் ஏன் ஒரே திசையில் சுழல்கின்றன என்பதற்கு விடையளிப்பதில்லை. அதை உய்த்தறிய நாம் காலத்தால் பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சூரியக் குடும்பமும் நீர்ம ஊடகமாகப் பரந்து விரிந்து சுற்றிக் கொண்டிருந்தது. பின்னர் அந்த நீர்மம் உறைந்து, விரிசலுற்று, தனித்தனியே சுருங்கித் திரண்டு, இப்போது நாம் பார்க்கும் தன்மையிலான கெட்டிக் கோள்களாக மாறின. இப்படிப்பட்டதோர் அனுமானத்துக்குள்தான் நாம் அதற்கு விடை தேட வேண்டும். எனினும் நியுட்டனின் விதி ஈதர் போன்ற ஊடகச் சுழற்சியின் சாத்தியக்கூற்றை மறுத்து ஒதுக்கிவிடுகிறது. நியூட்டனின் விதியை பெரும் பரப்புக்கு (சமூகத்துக்கு) எதிராக, துகள்களை (தனிமனிதர்களை) முன்னிறுத்தும் கோட்பாட்டின் தொடக்கம் என்று சொல்லலாம். அதாவது, சமூகமானது அதில் பங்கேற்கும் தனிமனிதனுடைய ஒருங்கிணைப்பின் மூலமாகவே விளக்கம் பெறுகிறது.

நியூட்டன் உந்துசக்தி (Force) என்னும் கருத்துருவத்தை முன்மொழிந்தவர். உயிரற்ற பொருள்கள் ஒன்றையொன்று ஈர்க்கவும் விலக்கவுமான உயிர்ப்பு விசையாக இதை நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, இது ஒரு செயலூக்கி போலப் பொருள் தருகிறது. ஆனால் புவிஈர்ப்பில் அதன் அர்த்தத்தை இனிமேல்தான் வரையறுக்க வேண்டும். நாம் ஒருவரைப் பற்றிக்கொள்ள அல்லது விலக்கிவிட நம் கைகளைப் பயன்படுத்துகிறோம். இங்கு கை ஒரு முகவரின் பணியைச் செய்கிறது. புவிஈர்ப்பில் அப்படியொரு முகவாண்மையை இனிமேல்தான் கண்டறிய வேண்டும்.

ஒரு அனுமானத்தை விளக்க நாம் ஒரு புதிய கருதுகோளை உருவாக்குகிறோம். அது கொஞ்ச காலத்திற்கு வெற்றிகரமாகக் கைகொடுக்கும். ஆனால் அடுத்த கட்ட வளர்ச்சியின் போது அதுவே தடைக் கல்லாகிவிடுவதுண்டு.

சார்புக் கொள்கை (Relativity)

நியூட்டனும் ஐன்ஸ்டீனும் மண்டை கனத்தவர்களோ கெட்டிக்காரர்களோ அல்லர் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அவர்கள் ஆகச்சாமானியர்கள். ஆனால் எந்தக் கருத்தையும் ஆழ்ந்து பரிசீலிக்கும் கூர்த்த மதிபடைத்தவர்களாய் இருந்தார்கள். அவ்வாறு செயல்படுவதற்குத் தேவையான அறிவியல்சார் அனுமானங்களும் ஏராளமான கால அவகாசமும் அவர்களுக்கிருந்தன. தொழிற்புரட்சி உருவாக்கிய தேவைகளால் அவர்களது ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல வழிகளும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் அவர்களுடைய பல ஆய்வுவிதிகள் கடைசிப் புள்ளி வரை தீர்வு காணப்படாமல் தொங்கலாகவே விடப்பட்டிருந்தன. அவற்றைத் தீர்ப்பதும் அக்காலகட்டத்தில் இயல்வதாயில்லை. ஒரு கட்டத்தில், ஈதர் போன்ற வாயுஊடகம் ‘வெளி’யெங்கும் விரவிப் படர்ந்திருந்ததாகவும், அதில் மின்காந்த அலைகள், ஒளிஅலைகள் போன்ற பல்வகைப்பட்ட அலைகளும் மிதந்து சென்றதாகவும் உறுதியாக நம்பப்பட்டது.

மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் அதுபற்றி ஆழமாகச் சோதித்தறிய உதவியாயிருந்தன. அச்சோதனைகளின்படி, இந்த அகிலம் ‘அணுக்கள்’ என்னும் பொருள்களாலேயே அடுக்கப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டது. இதன் துணைவிதியாக, “வெளி”யில் அணுக்கள் இல்லையெனில் அங்கு வேறெதுவும் இல்லை’ என்னும் முடிவு எட்டப்பட்டது. இந்தச் சிந்தனைக் கீற்றுதான் “பொருள்களுக்கிடையே வெற்றிடம் என்பதுதான் அவற்றின் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்னும் முடிவை எட்ட ஐன்ஸ்டீனுக்கு வழியமைத்துக் கொடுத்தது. எனில், ஒளி எப்படி வெற்றிடத்தினூடே பயணம் செய்யும்?... கோளங்கள், உடுக்கள் யாவும் வெறுமையில் பயணிக்கும்போது ஒளி ஏன் பயணிக்க முடியாது? ஆனால் ஒளி என்பது அலையா, அல்லது துகளா? இது ஊடகத்தின் மாயையா, அல்லது ஊடகம் கசியவிடும் திவலையா?
உலகத்தில் மாயைகள் என்று ஒன்றுமில்லை. இருப்பவை சிக்கல்களும் குழப்பங்களுமே. அவற்றைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வையும் காணறிவையும் வழங்கக்கூடிய மதிநுட்பமே இப்போதைய தேவை.
நியூட்டன் உந்துசக்தி என்னும் கருத்துருவை அறிமுகப்படுத்தித் தொங்கலில் விட்ட ஈரொட்டான புள்ளிகளை ஹாமில்டன் தன் கணித அறிவினைக்கொண்டு நிறைவு செய்தார். ஐன்ஸ்டீன் முன்மொழிந்த தானியங்கிச் சமனி( Principles of Equalance of Inertial Frame) விதியானது “உந்துசக்தி”யின் சில புதிர்களை வெளிச்சப்படுத்த உதவியது.

இயற்பியலானது பொருண்மைக்கும் ஒளிக்கும்(Mass and Light) இடையிலான உறவில் மேலும் சில துலக்கங்களை வேண்டுகிறது. பொருண்மை-ஆற்றல் (Mass - Energy), “வெளி”-காலம்(Space - Time) போன்ற சமனி விதிகளை ஐன்ஸ்டீன் முன்வைத்தார். அதாவது, யூக்ளிட் முன்வைத்த பழசாகிப்போன நேர்கோட்டுச் சிந்தனையை ஊடுருவி, இடஅளவீடானது பொருளின் ஈர்ப்பால் வளையும் என்பதை விளக்கினார். இதை இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்லலாம். கோள வடிவிலான பூமியில் இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரம் என்பது ஒரு நேர்க்கோடல்ல; துல்லியமாகச் சொல்வதெனில் அது ஒரு வளைவுக்கோடே. இவ்வாறான ஐன்ஸ்டீனின் முன்வைப்புகளையடுத்து, யூக்ளிடின் நேர்கோட்டுச் சிந்தனையில் ஊறிக் கெட்டிதட்டிப்போன அவநம்பிக்கைவாதிகளில் சிலர் “இது ஒருவகை யூத சூழ்ச்சி” என்றே எண்ணினர். உண்மையைச் சொல்வதெனில் இவையொன்றும் புதிய செய்தியல்ல. இச்சிந்தனைப் போக்குகள் பலகாலமாகப் பலராலும் வளர்க்கப்பட்டு வந்தவைதாம். ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள ஐன்ஸ்டீனே கூறியதைப்போல அவை ஒன்றும் கேலிக்குரியவை அல்ல; மாறாக, உண்மையின் சாயல்களைத் தாங்கி நிற்பவையாகும். எப்படி ஜார்ஜ் புஷ் ஹிட்லரின் சரியான வாரிசோ, அதைப்போல ஐன்ஸ்டீனை நியூட்டனின் நேரடி வாரிசாகக் காட்டும் சிந்தனைகள் அவை. ஐன்ஸ்டீன் இட அளவீடுகளையும் நேர அளவீடுகளையும் ஒருங்கிணைத்து மிக எளிதாக விளக்கங்கள் தந்தார். உதாரணமாக, கடிகாரத்தில் முள் எதைக் காட்டுகிறது? ஒரு இடத்தைத்தானே? ஆனால் அதை நேரமாகக் காண்கிறோம் அல்லவா? இச்சிந்தனையின் விளைவாகப் பொருண்மையும் ஆற்றலும் ஒருங்கிணைகின்றன. மேரி கியூரி அணுப்பிளவைப் பற்றி ஆராய்ந்தபோது பொருளை ஆற்றலாக மாற்றலாம் என்பது தெளிவாகியது. இதைத்தான் அணுசக்தி என்கிறோம்.

தத்துவார்த்தமாக முற்றுவெளி- காலம் (absolute space time) வகைப்பட்ட கருத்துநிலை துல்லியமான அளவீடுகளில் பொருந்தி விடுவதில்லை. கொஞ்சம் இளைப்பாறலாக இப்படி யோசிக்கலாம். இந்தியாவில் கிராமங்களும் பழங்குடிச் சமூகங்களும் இன்னும் தீவுகளாகவே தனிமைப்பட்டுக் கிடக்கின்றன. இங்கு அம்மக்களை நோக்கி காலத்தினூடாகப் பயணிப்பது என்பது “வெளி”யிலிருந்து நகரத்திற்கும், நகரத்திலிருந்து கிராமத்திற்கும், கிராமத்திலிருந்து வனப் பகுதிகளுக்குமான- அதாவது நாகரிகச் சமூத்திலிருந்து பழங்குடிச் சமூகத்துக்குச் செல்லும் ஒரு பின்னோக்கிய பயணமாகவே அமைகிறது. இதை இன்னொன்றின் ஒப்புமையாகப் பார்க்கலாம். தொலைதூர உடுக்களிலிருந்து வரும் ஒளிக்கற்றை நம்மை வந்தடைவதற்கு பன்னூறாயிரம் ஆண்டுகளாகின்றன. எனவே, நாம் தொலைநோக்கியில் பார்க்கும் ஒளிக்கீற்றுகள் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவைதாம். இப்படியாகத்தான் நாம் அண்டத்தின் ஆதிமூலத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறோம்.

சார்புக் கொள்கையானது, நாம் தனித்துவமானவை என்று கருதிக்கொண்டிருக்கும் “வெளி”, காலம் போன்றவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் பற்றிப் பேசுகிறது. இதிலிருந்து “தனித்தஃ அளவீடு என்று ஒன்றுமில்லை. “மற்றதன்” அளவீட்டைச் சார்ந்துதான் எதுவும் அர்த்தம் பெறுகிறது. காலம், “வெளி”க்கிடையிலான எந்த அளவீடும் அவை ஒன்றுக்குள் ஒன்று கொண்டுள்ள சார்புநிலைக் குறியீடுதான். இவ்வகைக் கருத்தனுமானக் குறியீடுகளைக் கொண்டுதான் பொருள்களால் நிறைந்த இவ்வுலகத்தைப் புரிந்துகொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.

மேலும் சிக்கலான கணக்கீடுகள்:

வான்அறிவியல் எளிதில் புரியக்கூடிய பகுதியாகும். சமூகப் பிரச்சினைகளோவெனில் ஆகச் சிக்கலானவை. காரணம், அவை மனிதர்களால் நூற்கப்படுபவை. சிடுக்குகளால் ஆளப்படுபவை. சினிமாவில் பார்த்திருப்பீர்கள்: வர்க்கம், மதம், சாதி, மொழியால் வேறுபடும் இரு குடும்பங்களிலிருந்து வந்த இளைஞனும் யுவதியும் ஒருவரையொருவர் விரும்புவார்கள். ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் அதை மூர்க்கமாக எதிர்ப்பர். பார்வையாளர்கள் காதலர்களுக்காக உருகுவார்கள். அவர்கள் காதல் வெற்றி பெற வேண்டுவார்கள். தோல்வியடைந்தால் கதறியழுவார்கள். ஆனால் இதே பார்வையாளர்கள் தங்கள் குடும்பங்களில் அப்படியொரு காதல் மலர்ந்துவிட்டால் சினிமா பெற்றோர்களைவிடக் குரூரமானவர்களாக மாறி அதை நசுக்குவார்கள். அப்படியொரு இரட்டைநிலை அவர்களிடம் செயல்படும். நீங்கள் திகைத்துப் போவீர்கள், சினிமாக் காதலர்களுக்காகக் கதறியழுதவர்களா இவர்கள் என்று. நான் பேசும் “நான்Xஅவர்கள்” பற்றிய உறவுநிலைக் கருத்தாக்கம் இதற்கொப்பானதுதான். இயற்பியலிலும் இதே பிரச்சினையை- அலைXதுகள் இருமை நிலையை நாம் பார்க்கலாம். அணுவில் உள்ள எலக்ட்ரான் சில சமயம் அலை போலும் சில சமயம் துகள் போலும் நடந்துகொள்கிறது. அணுவுக்குள் அமரும்போது ஒருவிதமாகவும், தனித்திருக்கும்போது வேறு விதமாகவும் நடந்துகொள்கிறது. இதை ஐன்ஸ்டீன் உள்பட விஞ்ஞானிகள் பலரும் ஒரு புதிராகவே நினைக்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறுவார்: “மனிதனின் சாரம் மனிதனுள் இல்லை. அது அவன் சமுதாயத்துடன் கொள்ளும் உறவின் சாரமாயிருக்கிறது,” என்று. அணுவின் கண்டுபிடிப்பிகருந்து, பொருளின் சாரம் என்பது தனிமனிதனுக்குப் போலவே தனித்துவமானதல்ல. அது அணுமூலக் கூறுகளின் சாரங்களால் ஆனது என்பது புரிந்து கொள்ளப்பட்டது. அதனைக் கொண்டுதான் அணுவின் இயற்பியல், வேதியியல் குணங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது.

என்னுடைய நண்பன் ஒருவன் ஒருமுறை இப்படி விளக்கினான்: நீ கடைக்குப் போய் “டீ” கேட்டால் அது நீ அணுகிய கடைக்குத் தக்கவாறு வேறுபடுகிறது. உணவகமாயிருந்தால் டீத்தூளை வெந்நீரில் முக்கி, சாறெடுத்து, பாலும் சர்க்கரையும் கலந்து, ஒரு குவளையில் பருகுவதற்காகக் கொடுக்கப்படுகிறது. ஒரு மளிகைக் கடையாயிருந்தால் பொட்டலமாக அடைக்கப்பட்ட டீத்தூள் தரப்படுகிறது. நட்சத்திர விடுதிகளில் அல்லது ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளில் என்றால் ஒரு வெந்நீர்க் குடுவையோடு டீத்தூள், சர்க்கரைக் கட்டி அல்லது சாக்ரின், பால்பொடி ஆகியவை தனித்தனியாகத் தரப்படுகின்றன. அவற்றை நாம்தான் தகுந்த விகிதத்தில் கலந்து பருக வேண்டும். ஆக, ஒரு சொல் சமுதாயத்தில் வெவ்வேறு பொருள்களில் அடையாளப்படுகிறது. இதிலுள்ள பொது அம்சம் டீத்தூள் மட்டும்தான். அது கணினியின் வன்பொருள் போல. நமக்கான அர்த்தங்கள் மென்பொருள்களின் உள்ளீடுகள் உருவாக்குபவையே. ஆராய்ச்சியாளர்கள் பொருள்களைப் பற்றிய புரிதலைத் துல்லியப்படுத்தவே ஆய்வு மேற்கொள்கிறார்கள். சிலர் இத்தகைய ஆய்வுகள் வழியே பொருளின் எல்லாக் கூறுகளையும் ஒற்றைச் சூத்திரத்தில் கண்டு பிடித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்- அதாவது, ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்லிவிடும் ஒரு முழுமையான தனித்துவமுள்ள வகைமையாக. பெரும்பாலான கருதுகோள் வல்லுநர்களின் நம்பிக்கை என்னவென்றால், அண்ட நிகழ்வுகளையே விளக்கிவிடக்கூடியதும் எல்லா வகைமைகளையும் உள்ளடக்கியதுமான ஒரு கோட்பாட்டைக் கண்டறிந்துவிடலாம் என்பதுதான். அது எவ்வளவு சிக்கலானது என்பதை அதற்கான நீண்ட முயற்சியே சுட்டிக்காட்டுவதாயுள்ளது.

பொருளும் உயிர்ப்பும்:

பொருள்களோடு நமக்குள்ள உறவும் பயன்களுமே நம்முடைய எல்லா கோட்பாட்டுச் சிந்தனைகளையும் உருவாக்குகின்றன. மார்க்ஸ் இதை மிகத் தெளிவாக நமக்கு அறிவுறுத்தியுள்ளார். அறிவியல் வளர்ச்சி ஒரு மாபெரும் பொற்கனவை உருவாக்கியது. சமூகத்திலுள்ள எல்லா முரண்களும் களையப்பட்டு விடும்; அதிநியாயங்கள் நிலைநாட்டப்பட்டுவிடும் என்பதான கனவு அது. மார்க்சே கூறியதுபோல, உழைப்பும் மூலதனமும் பற்றிய அவரது கோட்பாடும், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடுமே நவீன உலகுக்குப் பொருத்தமுள்ள அடிப்படை அம்சங்கள் என்பது அவருடைய நம்பிக்கை. இதில் டார்வினுடைய “தகுதியுள்ளவை பிழைக்கும்” என்னும் தத்துவத்தை சந்தைப் பொருளாதாரச் சூதாடிகள் தங்களுக்கேற்றாற்போல மாற்றியமைத்துக் கொண்டார்கள்- அதாவது, “சந்தையில் தோற்றவர்கள் மரபணு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் வாழத் தகுதியற்றவர்கள்; ஆகவே கழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள்” என்பதாக. ஆனால் மார்க்சினுடைய தத்துவத்தை அவ்வாறு தங்களுக்கேற்றாற்போல் புனைந்துகொள்ள அவர்களால் முடியவில்லை. ஏனெனில், அது முதலாளித்துவ முறைமையின் மூல வேரையே கீழறுப்புச் செய்துவிடுகிறது. “இலாபம் என்பது அபகரிக்கப்பட்ட உழைப்பன்றி வேறில்லை” என்று அடித்துச் சொல்லிவிடுகிறது. அதனால்தான்

மார்க்ஸ்-ஏங்கல் இருவரின் நூல்களும் அச்சம் தரத் தக்கவையாயும், அமுக்கப்பட வேண்டியவையாயும், தோற்றவர்களின் அறநெறிப் புலம்பல் என்று ஏளனம் செய்யப்படுபவையாகவும் முதலாளித்துவவாதிகளால் தள்ளிவைக்கப்படுகின்றன.

கம்யூனிஸ்ட் நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவுவதால் மேலைச் சமூகம் தன் முடைநாற்றமெடுத்த முதலாளித்துவ மாய்மாலங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, உலகமயமாக்கல் மூலம் தங்கள் நவகாலனியத்துவத்தைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அவர்களது போக்கிரித்தனங்களுக்கு இப்போதைக்கு எவ்விதத் தடுப்பரணும் இல்லாமல் போய்விட்டதுதான் ஆகப்பெரும் சோகம்.
ஆனாலும் மார்க்சை வென்றெடுத்து, ஒரு புதிய வளர்நிலைத் தத்துவத்தை அவர்களது சமூகம் கட்டமைத்துவிடும் என்பது இன்னும் அடைதற்கரிய அறைகூவலாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கூடவே நாம் இதைச் சொல்லித்தானாக வேண்டும். மார்க்சின் தத்துவம் ஏனைய மேற்கத்திய கருத்தோட்டத்துடன் ஒருவகையில் ஒத்துப்போகவே செய்கிறது. “எல்லாப் பொருள்களும் மனித குலத்தின் பயன்பாட்டுக்கும் சுரண்டலுக்குமே” என்னும் நவீன ஐரோப்பிய நம்பிக்கையையே அதுவும் எதிரொகக்கிறது. இதில் அடியோட்டமாகச் செயல்படுவது- பொருள்கள் உயிரற்றவைதாம் என்பதான ஒரு அடிமைப்படுத்தும் பார்வைதான். மனிதர்கள் தாங்களாகவே தொடர்பு படுத்திப் புனைந்துகொள்வதன்றி, பொருளிய உலகுக்கு ஆன்மிகப்போதம் என்று ஒன்றும் கிடையாது என்னும் நம்பிக்கையின் மேலேயே அவர்கள் தங்கள் செயல்வலிமையை நிறுவிக்கொண்டுள்ளனர். எனினும் மார்க்ஸ் ஒன்றைப் புரிந்துகொண்டிருந்தார். முதலாளித்துவம் தன்னுடைய கலாச்சாரம்தான் உண்மையானதும் உயர்வானதும் என்று சொல்லித் தன் படை வலிமையைக்கொண்டு பிறர்மேல் அதை வலிந்து திணிப்பதைத் தன் மாற்றிக்கொள்ள முடியாத வெறிக்குணமாகக் கொண்டுள்ளது என்பதை மார்க்ஸ் அறிந்திருந்தார்.

இந்தியாவின் சில தத்துவ விசாரங்கள் “மற்றதை”விட முற்பட்டவை என்பதும், மனிதப் புனைவின் உயிர்ப்பிக்கப்பட்ட ஒளிக்கீற்றுகள் என்பதும், நடைமுறை குப்பைகளுக்கப்பாலும் நிலைப்பட்டிருக்கும் அம்சங்கள். இந்தியத் தத்துவத் தளத்தில் மனிதர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டு அந்த அனுபவத்தின் மூலம் மானுட மேன்மைகள் யாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவ நிலையை அடைய முயன்றனர். ஒருவன் அனுபவித்துணரும் வேதனையின் ஆழத்திற்கேற்பவே அவனது புரிதலின் ஆழமும் கூடிவரும் என்பது அவர்களது கவனமாயிருந்தது. ஜகதீஷ் சந்திரபோசின் கண்டுபிடிப்புகளான- செடிகளுக்கு உயிருண்டு; கம்பிகள் போன்ற மின்சாதனங்கள் இல்லாமலேயே குறியீட்டுச் செய்திகளைக் கடத்த முடியும்- என்பவை ஒன்றும் தனிமனிதப் புத்திசாகத்தனத்தின் வெளிப்பாடல்ல. இந்தியாவில் அப்போதிருந்த “மற்ற”தன் கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொண்ட வெளிநிலைச் சிந்தனையின் நீட்சியாகவும், அதே நேரத்தில் அதற்கு எதிரானதுமான வெளிப்பாடாகவே அதைப் பார்க்க வேண்டும்.

ஸóபீல்பெர்க்கின் “E.T. சினிமா, சத்யஜித் ரேயின் திரை வடிவை அடிப்படையாகக் கொண்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அதன் மூலக்கருத்து இந்தியத் தொன்மவியலை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியத் தொன்மத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்ந்திருந்த புனிதர்கள் பலருண்டு. E.T. அவர்களோடு ஒப்பிடும்போது மிகவும் இளைய புனிதர். E.T.யின் வெற்றி மேற்கத்திய பொருளியகன் மேல் பெறப்பட்ட இந்திய உயிர்த்துவத்தின் வெற்றியாகும். விவேகானந்தர் போன்ற இந்து சமய மீட்புவாதிகளால் தொடர்ந்து பேசப்பட்டு வந்த கருத்து இது. எனினும், வாழ்வின் பல தத்துவங்களைப்போலவே இவை இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சங்கள் என்று சொல்வதற்கில்லை. தொன்மையான “துரியட்”களும் ஐரோப்பிய சூனியவாதிகளும் இதுபோன்ற சூட்சுமங்களைக் கொண்டிருந்தவர்கள்தாம். ஆனால் அவை பின்னர் தலையெடுத்த யூத- கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களால் உறிஞ்சப்பட்டுவிட்டன. டான் ப்ரவுன் எழுதிய “ டாவின்சி கோட்” நாவல் இதில் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறது. அந்நூகல் கூறப்பட்டுள்ள சுக்கிரனின் சூலக் குறியீடு இந்தியக் கலாச்சாரத்தில், குறிப்பாக தமிழ் முருகனின் கையில் காணப்படும் சூலத்தை ஒத்ததே. கிறிஸ்தவர்கள் இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்று இழித்துக் கூறுவதை இவ்வெளிப்பாடுகளோடு நாம் ஒப்பு நோக்க வேண்டும். சூலமானது பெண்ணுறுப்பைக் குறிக்கும் சின்னம். இந்தச் சூலம்தான் குஜராத்தில் இந்துக் கயவர்களால் முஸ்லிம் பெண்களின் உறுப்புகளைச் சேதம் செய்யப் பயன்பட்டது என்பது ஆகக் குரூரமான கயமை.

பருப்பொருளையும் உயிர்த்தன்மையையும் இரண்டாக வகைப்படுத்துவது ஒரு வசதிக்காகத்தான். எல்லாப் பிரிவினைகளைப்போல இதையும் நாம் நம்புவதற்கில்லை. உருவாகும் ஒவ்வொரு பொருளிலும் அதை உருவாக்கியவனின் உழைப்பும் உயிர்ப்பாய் பொருந்தியிருக்கிறது. ஒரு சித்திரம் வெறும் வண்ணங்களின் கலவைதானா? அல்ல. சித்திரக்காரனின் உழைப்புதான் அதனை உயிர்ப்பிக்கிறது. சார்பு விதியின் மூலத் திவலை இங்கிருந்துதான் அர்த்தத்தைச் சேகரம் பண்ணுகிறது. ஒரு செடியைப் பார்க்கிறோம். ஆனால் அதுவல்ல அதன் முழுமை. அதை வளர்த்தவனையும் சேர்த்துப் பார்க்கும்போது அச்செடியின் வரலாறு, பயன்பாடு, தேவை என அனைத்தும் தொகுக்கப்பட்ட முழுமை கிடைக்கிறது.

எனக்கொரு விஞ்ஞானி நண்பன் இருந்தான். பகுத்தறிவுக்குப் புறம்பான எதையும் கடுமையாகச் சாடுகிறவன். ஆனால் அறிவார்ந்த அணுகுமுறைக்குப் பதிலாக எதிராளியை முட்டாளாக்குவதில் குறியாய் தர்க்கம் செய்வதிலும் உணர்ச்சி வசப்படுவதிலும் பெருவிருப்பம் கொண்டவன். எனக்கு இந்த ஒருவழிப் பேச்சில் ஈர்ப்பில்லை என்பதால் விட்டுக் கொடுத்து விடுவேன். அதேசமயம் அடுத்தவனுடைய தர்க்கம் சரியாகத் தோன்றினால் உடனே அவன் கட்சிக்கு மாறிவிடுவேன். அந்த நண்பன் ஒருநாள் ஒரு விசித்திரமான கதை சொன்னான். அவனுடைய தந்தை கிராமத்துப் பூசாரி. ஊர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். ஆனால் மகனோ தன் தந்தை வெறும் சடங்குப் பேர்வழி என்ற எண்ணம் கொண்டவன். ஒருநாள் மகன் தன் தந்தையின் இருப்பிடத்துக்குப் படுக்கச் சென்றான். அந்தப் பெரிய கூடத்தில் தன் படுக்கையை விரித்துக்கொள்ள ஆயத்தமானான். அவனுடைய தந்தை அவனிடம் வந்து, “நீ எங்கு வேண்டுமானாலும் படுத்துக்கொள். ஆனால் அந்த மோட்டுவளை உத்திரத்துக்குக் கீழாக மட்டும் படுக்காதே,” என்று சொல்க வைத்தார். போதாதா? நம் புரட்சியாளன் வேண்டுமென்றே அதற்கு நேர் கீழாகப் படுத்துக்கொண்டான். நள்ளிரவில் திடுக்கிட்டு விழித்தபோது ஓர் அந்நியனின் நடமாட்டம் தென்பட்டது. உடனே, “திருடன் திருடன்,” என்று கூவிக்கொண்டு அவனைப் பிடிக்க முயன்றான். ஆனால் அவனோ காற்றில் கரைந்தாற்போல் மறைந்து போனான். இதற்குள் அவனுடைய தந்தையும் ஓடிவந்து தடி எடுத்துக்கொண்டு திருடனைத் தேடினார். நல்ல காலம், திருடன் அகப்படவில்லை. அப்பனும் பிள்ளையும் நல்ல வாட்டசாட்டமானவர்கள். திருடனை அடித்தே கொன்றிருப்பார்கள். தந்தை அவனிடம், “கெட்ட கனவாக இருக்கும். தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்துக்கொள்,” என்று சொல்லிவிட்டுப் போனார். நண்பன் நடந்தவற்றைக் கோர்வையாக நினைவு படுத்திப் பார்த்தபோது, அந்த மனிதன் கொசு வலைக்குச் சேதாரமில்லாமல் அதனூடாகக் கடந்துசென்றது நினைவுக்கு வந்தது. மயிர்க்கால்கள் குத்திட்டுக் கொண்டன. வேறு வழி தோன்றாமல் தந்தை கூறியபடியே தன் படுக்கையை தள்ளிப் போட்டுக்கொண்டான். இதில் ஒரு ஈர்ப்பான செய்தி உண்டு. நவீன ஐரோப்பியப் பகுத்தறிவாளர்கள் அந்த உத்திரம் ஒரு உயிரற்ற, உலர்ந்த கட்டை என்று ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் அதில் ஒரு மனிதனுடைய வரலாறு பொதிந்து வைக்கப்பட்டிருக்கலாம். மரத்தில் எவனாவது தூக்கு போட்டுக்கொண்டு செத்திருக்கலாம். உத்திரம் அந்த மரத்தில் இழைத்ததாக இருக்கலாம். எல்லாம் ஒருவகை “லாம்”தான். வெளிப்படையான ஒரு அர்த்தமின்மையிலும் உள்ளுணர்வான ஓர் அர்த்தம் பொதிந்திருக்கலாம் என்னும் அனுமானத்தின் கூடுதல் தேடல் இப்படியாகவே நீள்கிறது.

கணினி நமக்கு ஏராளமான பயன்களை வழங்கி வருகின்றது. அண்மையில் மேற்குலக ஊடகத்தில் ஆடுகளைப் படியாக்கம் (Cloning) செய்வது பற்றி ஆரவாரமாகக் கதைக்கப்பட்டது. கணினிகள்கூட படியாக்கம் செய்யப்பட்டவைதாம். கணினிகள் பார்ப்பதற்கு ஒன்றுபோலத் தோன்றினாலும் அவற்றுள் நாம் இடும் மென்பொருளுக்கேற்றபடி அவை வெவ்வேறு விதமாகவே நடந்துகொள்கின்றன. கணினியின் இயங்குமுறைகள் வேறுபட்டதாக, Linux,MS Windows, Mac OS, Unix எனப் பலவிதமான கோப்பு அடைவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புரிதலோடு பார்க்கும்போது ஒவ்வொரு கணினியும் வேறுபட்டது; அதன் செயல்பாடும் வேறுவேறு என்பது புரிகிறது. MS Windows இல் அடிக்கடி நோய்த்தொற்று (Virus) ஏற்படும். Linux இல் அந்தச் சிக்கல் இருக்காது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மனித உருவாக்கத்தில் மரபுத் தொடர்ச்சி, வன்பொருள் பயன்பாடு என்பனவெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவனுள் பொதியப்படும் மென்பொருளே, அதாவது தனி மனிதனின் சமூகப் பங்கேற்பே தலையாய அம்சமாகிறது.

இயற்பியலிலும் பொருள்களின் படியாக்கக் கருத்துநிலை பற்றிய அலைக்கழிப்பு நிலவுகிறது. செய்திகள் ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும் என தாங்கள் தீர்மானித்ததை எடுத்துக்காட்டுவதற்காக ஐன்ஸ்டீன், போடெலோவ்ஸ்கி, ரோசன் ஆகியோர் ஒன்றித்த படியாக்கங்களை முன்மொழிந்தனர். குவாண்டம் தியரி (Quanum theory)க்கு எதிர்வாதமாக அவர்கள் அதைப் பயன்படுத்தினர். அந்த வாதம் இப்போது அவர்களையே திருப்பித் தாக்குவதாயுள்ளது. ஆனால் செய்திகள் ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும் என்பது விதியளவில் உறுதிப்பட்டு விட்டது. ஒளியைவிட வேகமாக எந்தப் பொருளும் பயணிக்காது என்னும் ஐன்ஸ்டீனின் பொருள்சார் கோட்பாட்டிற்கு இது ஒன்றும் முரண்பட்டதல்ல. ஏனெனில், செய்தியானது பொருளல்லதானே.

இக்கருத்துகளும்கூட ஒன்றும் புதுமையானவையல்ல. சொல்லப்போனால் உலகில் ஏதொன்றும் புதுமையானதல்ல. புதிதுபுதிதாகப் பெயரிடலைத்தான் நாம் ஆராய்ச்சிகளாக நிறுவிக்கொண்டிருக்கிறோம். ஆய்வின் ஒரு சாதக அம்சம் நாம் அதைப் புரிந்துகொண்டு பயனடைவதுதான்.

ஒன்றாய்ப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய வினோதக் கதைகள் பலவற்றை நாம் அறிவோம். இக்கதைகளில் ஒருவனை அடித்தால் மற்றவன் வகயால் துடிப்பான். இதையே மாற்றி, ஒருவன் வருந்தினால் மற்றவன் மகிழ்வதான எதிர்மறை இரட்டைகளும் சாத்தியமே. மானுட வரலாற்றில் வன்பொருள் படியாக்கம் என்பது சமூக ரீதியாகப் பொருளற்றதும் சுவை இல்லாததுமாகும். மென்பொருள் படியாக்கமே பலவண்ணக் கோலமானது. இதை விடவும் வண்ணமான விஷயம், ஒரு மூளையிலிருந்து மற்றொரு மூளைக்கு நேரடியாகச் செய்திகளை இடமாற்றம் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் பற்றியதாகும். உடம்பில் ஆவி புகுந்துகொள்வதாகச் சொல்லப்படுகிறதே, அது பேர்னறதொரு செயல்பாடு இது.

முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, “மற்ற”தற்கும் உயிர்ப்புண்டு என்பதோடு அது நம்மோடு சண்டையிடவும் செய்யும் என்பதாகும். (காத்ரினா சூறாவளி, புவி வெப்ப உயர்வு, ஈராக் எதிர்ப்பு, நேபாளக் கலகம் போன்றவை அத்தன்மையன.) எனினும், “நாம்Xஅவர்கள்” என்னும் இந்த இருண்ட ஈரொட்டான சாலை வழியாகத்தான் புஷ்ஷுக்குப் பிறந்தவனின் வழித்தோன்றல்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள்.

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...