Falkner Tree Template

Falkner Sphere Template Falkner Sphere Template

Falkner Tree Template

Falkner Sphere Template Falkner Sphere Template

Falkner Tree Template

Falkner Sphere Template Falkner Sphere Template

Falkner Tree Template

Falkner Sphere Template Falkner Sphere Template
Latest News

தமிழின் முதல் திரைப்படம்

Posted by பிறவி on Wednesday, June 29, 2011 , under | comments (0)
















நான் பொதுவாக சினிமாக்களுக்கு மதிப்புரையோ,விமர்சனங்களோ எழுதுவது குறைவு தான்.ஆனால் ஆரண்ய காண்டம் திரைப்படத்தை பார்த்த போது அதைப்பற்றி எழுதாமலிருப்பது அவ்வளவு நல்லதல்ல என்பதை உணர்ந்தேன்.இது தமிழ் சினிமாவின் பொற்காலம்.உலகதரம் வாய்ந்த சினிமாக்கள் தமிழில் வந்து கொண்டிருக்கிறது.மிகவும் யதார்த்தமாய் நிழல் உலகத்தை படமாக்கியது செல்வராகவனின் புதுப்பேட்டை படம்தான். அது யதார்த்தமான படம். ஆனால் இன்னும் பற்பல விதமாய் நிழல் உலகை திரையில் காட்ட உலகமெங்குமிருக்கும் இயக்குனர்களுக்கு ஆவல் உண்டு. Martin Scorsese, Quentin Tarantino, Guy Ritchie, Takeshi Kitano, என நிறைய இயக்குனர்களை உதாரணமாய் சொல்லலாம்.
இயக்குனர் Guy Ritchie பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரின் படங்களை பார்த்திருப்பீர்கள். நிழல் உலக கதையை வித்தியாசமாய் தருபவர். A comical approach of portraying gangsters, gangster worlds; with some comedy/cruel comedy; அதான் அவரின் ஸ்டைல். ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக நாலைந்து குழுக்கள் மோதிக்கொள்ளும். அப்பொருள் நழுவியபடியே இருக்கும். அதேப்போல் ஒரு கதை, அதே மாதிரியான ஸ்டைலில் இப்போது தமிழில் வந்திருக்கிறது.
இயக்குனர் Guy Ritchie தமிழிற்கு வந்து படமெடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இத்திரைப்படம். (Guy Ritchie படங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதம் அளவுக்கு தியாகராஜா குமாரராஜா படமெடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்). நிழல் உலக குழுக்கள், மெல்லிய நகைச்சுவை, குரூரமான நகைச்சுவை, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மை என பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர். அவரின் கதைக்கும் திரைக்கதைக்கும் ஒளிப்பதிவும், யுவனின் பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கின்றன. அதிலும் ஒளிப்பதிவு அட்டகாசம். பின்னணி இசையில் கூட பகடி இருக்கிறது.
நாம் எத்தனையோ கேங்க்ஸ்டர் படங்களைப் பார்த்திருக்கிறோம். தமிழிலும் பிற மொழிகளிலும். ஆனால், இந்த மாதிரியான ஒன்றை நான் பார்த்ததில்லை. தமிழ் சினிமா உருப்பட்டுவிடுமோ என்கிற கவலை பல பேருக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. ஒரு பாட்டு இல்லை, இரட்டை அர்த்த வசனம் இல்லை, ஹீரோயின் தொப்புள் காட்டவில்லை, தனி டிராக் காமெடியன் இல்லை. சத்தியமாக இது ஒரு தமிழ் சினிமாதான் என்று அடித்துச் சொன்னால்தான் நம்மவர்கள் நம்புவார்கள். உலக சினிமா உலக சினிமா என்று சொல்கிறார்களே, அது நிச்சயம் இப்படித்தானிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. New York நகரத்தில் நடந்த South Asian Internation Film Festivalலில் ஜூரி அவார்ட் வாங்கும் போதே தெரிந்திருக்கவேண்டும் படம் எப்படியென்று. நிதானமாக செல்லும் காட்சிகள், ஸ்லோ மோஷன் ஆக்ஷன், சேஸிங் கோரியோகிராபி, கதையின் மாந்தர்கள் நியாயமாக பேசவேண்டிய, பேசக்கூடிய இயல்பான வசனங்கள் வார்த்தைகள், பிரம்மிப்பூட்டும் கேமரா கோணங்கள், அருமையான அதேசமயம் கதையை விட்டு நகரவிடாமல் பிடித்துவைக்கும் பாடல்கள் இல்லாத பின்னனி இசை, சின்ன சின்ன டுவிஸ்ட்கள், அற்புதமான நடிப்பு... இவ்வளவு இருக்கிறது உலக சினிமா லிஸ்டில் ஈஸியாக இடம்பெற, வேறு என்ன வேண்டும்?
அமைதியாக ஆரம்பிக்கிறது படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்..ஆரம்பக்காட்சியே கிழவன் ஜாக்கி செராப் இளம் மனைவியுடன் வலுக்கட்டாயமாக கிளுகிளுப்பில் ஈடுபடுகிறார்..உடலுறவில் தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் இளம்மனைவியை அடித்து ஆக்ரோசம் காட்டுகிறார்..அடுத்து வெளியே வந்து அங்கு பேசிக்கொண்டிருக்கும் கும்பலிடம் சத்தம் போட்டு உள்ளே செல்லும் போது அந்த கிழவனின் பின்புலம் நமக்கு புரிய வருகிறது.அவர் குழுத் தலைவன்,தாதா என்பது.இன்னொரு தாதா கஜேந்திரன் குழுவுக்கு வந்த போதை பொருளை, ஜாக்கி செராப் குழு ,இடை தரகரிடம் இடைமறித்து வாங்க முயற்சிக்கும் போது,ஜாக்கியின் அடியாள் சம்பத்துக்கு வருகிறது கண்டம்,சம்பத் செய்த காரியத்தால் சம்பத் மனைவிக்கு வருகிறது கண்டம்,போதை பொருள் பறிபோகிறது.அது ஒரு அப்பா, மகனிடம் சிக்கி ,அந்த அப்பா தாதா கும்பலிடம் சிக்க,அங்கே அவனுக்கு வருகிறது கண்டம்,ரவிக்ரிஷ்ணாவை தாதா கிழவனின் இளம் மனைவி காதலிக்க அதனால் அவனுக்கு வருகிது கண்டம் ,இப்படி பல்வேறு நிழலுலக மனிதர்களின் கண்டங்களை சுமந்து அடுத்தடுத்த பரிணாமத்தில் பயணிக்கிறது இந்த காண்டம்.

எல்லா கேரக்டர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.கேமராவே கதாநாயகன்,காட்சி கலரிலிருந்து ,கேமரா கோணம் வரை ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு..ரசித்து என்பதை விட ருசித்து அனுபவித்து வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.இசை படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.இயக்குனரின் புதிய பாணியிலான முயற்சி பாராட்டுக்குரியது.போஸ்டர் முதல் படம் வரை அனைத்துலும் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்.என்றைக்கோ பார்த்த ட்ரைலரும்,அந்த போஸ்டருமே என்னை படம் பார்க்க தூண்டிய முதல் காரணி.பாடல் இல்லாத இன்னொரு சினிமா.சில இடங்களில் வசனங்கள் நச்..எந்த ஆம்பளையும் சப்ப கிடையாது..எல்லா ஆம்பளையுமே சப்பதான் என்று எதிர்பாராத நேரத்தில் கதாநாயகி பேசுவது..படத்தில் வரும் சிறுவன் பல இடங்களில் பேசும் வசனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன..ஆரண்ய காண்டம் என்ற இந்தப் படம் தமிழ் சினிமா என்ற விசித்திர உலகத்துக்கு முற்றிலும் புதியது. ஆம்; இப்படி ஒரு படம் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே வந்ததில்லை.
சிங்கப் பெருமாள் (ஜாக்கி ஷ்ராஃப்), பசுபதி (சம்பத் ராஜ்), சுப்பு (யாசின் பொன்னப்பா), சப்பை (ரவி கிருஷ்ணா), காளையன் (சோமசுந்தரம்), சிறுவன் கொடுக்காப்புளி (வசந்த்) ஆகிய ஆறு கதாபாத்திரங்களின் வாழ்வில் ஒரே நாளில் நடக்கும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த சம்பவங்களே ஆரண்ய காண்டம். சிங்கப் பெருமாளைப் போல் இன்னொரு தாதாவான கஜேந்திரனுக்கு சேர வேண்டிய சரக்கை நாம் மடக்கினால் என்ன என்று சிங்கப் பெருமாளை கேட்கிறான் பசுபதி. அது ஆபத்தானது என்று சொல்லும் சிங்கப் பெருமாளை “என்ன, டொக்கு ஆயிட்டீங்களா?” என்று பசுபதி கேட்பதிலிருந்து துவங்குகிறது கதை. அப்படிக் கேட்டு விட்டதால் பசுபதியைப் போட்டுத் தள்ளச் சொல்கிறான் சிங்கப் பெருமாள். அவனுடைய ஆட்களிடமிருந்து தப்பி ஓடும் பசுபதியைக் கொல்ல கஜேந்திரனின் ஆட்களும் துரத்துகிறார்கள். பசுபதியின் மனைவியைக் கடத்திக் கொண்டு போய் வைக்கிறான் சிங்கப் பெருமாள். இப்படி எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கப்படும் பசுபதி இதை எப்படி எதிர்கொள்கிறான் என்பது படத்தின் ஒரு பகுதி. சிங்கப் பெருமாளின் வைப்பாட்டியான சுப்புவுக்கும் பெண்களைப் போல் நளின பாவம் கொண்டிருக்கும் சப்பைக்கும் இடையில் ஏற்படும் காதலும் அதன் முடிவும் ஒரு கதை. இந்த தாதாக்களின் மோதலில் சந்தர்ப்பவசமாக மாட்டிக் கொள்ளும் முன்னாள் ஜமீந்தார் காளையனும் அவன் மகனும் இன்னொரு கதை.இயக்குனர் இந்தப் படத்தை எப்படிக் கொண்டு சென்றிருக்கிறாரோ அதை விடப் பல மடங்கு இந்தப் படத்துக்கு கூடுதல் பரிமாணங்களைச் சேர்ப்பதாக இருக்கிறது ஒளிப்பதிவும், இசையும். வணிக நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே செயற்கையாக சேர்க்கப்படும் பாடல்கள் இல்லாதது மட்டும் அல்ல; உண்மையில் ஏழெட்டு பாடல்களை சேர்க்கும் அளவுக்குத் தோதான இடங்கள் படத்தில் உண்டு. ஆனாலும் பாடல்கள் சேர்க்கப்படவில்லை என்பது மட்டும் அல்ல; படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பின்னணி இசை மட்டுமே நமக்குத் தனியாக ஒரு உள்கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
வசனங்களில் யதார்த்தம் தவிர, ஒரு குறிப்பிட்ட வகையான உரத்த குரலில் அல்லாத பிரத்யேக நையாண்டி படம் பூராவும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது

"நீ மாத்திரம் உயிரோட இருந்திருந்தா கொன்னு போட்டிருப்பண்டா" .

"சாமி கூட உக்கார்ந்து சரக்கடிச்சேன்னு சொன்னால ஊருல ஒரு பய நம்பமாட்டானே"


"தோத்தாங்கோளிகளா, என் பீயத் தின்னுங்கடா.. கிழட்டுக் கோளி...


"என்னா நீங்க டொக்காயிட்டீங்களா?"


"ரெண்டு கோடி சரக்கை அம்பது லட்சத்துக்கு தரேன்றான் குருவி." - " ஏன் அவங்க அக்கா என்ன லவ் பண்றாளா?"


"ஆண்டிங்கள உஷார் பண்ணணும்னா ஒரு டெக்னிக் இருக்கு. ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா -ன்னு கேட்கணும். கமல் பிடிக்கும்னு சொன்னா ஈசியா கவுத்தில்லாம்".


"பயம் போகலை.. ஆனா தைரியம் வந்துடுச்சு"


"பசுபதிய என்ன பண்றது -ன்னு யோசிக்கறேன்" - ம்.. முத்தம் கொடுத்து மேட்டர் பண்ணு".


"சார்.. இத வெளில சொல்ல மாட்டீங்கள்ள... - ம்.... தெரியலே....

குறிப்பாக சிங்கப்பெருமாளின் அடியாள் ஒருவன் ஆண்ட்டிகளை மடக்குவதற்கான டெக்னிக்குகளை விவரிப்பது, மற்றவர்கள் சப்பையை கலாய்ப்பது, கஜேந்திரனின் குரூரத்தைப் பற்றி பசுபதி டீக்கடையில் விவரிப்பது போன்ற காட்சிகளின் தொனியும் நீளமும், சாவகாசமும்... quentin tarantino -வின் படக்காட்சிகளை நினைவுப்படுத்துகின்றன. அந்த வகையறா இயக்குநர்களின் பாதிப்பு ஆ.கா.வில் தெரிந்தாலும் ஈயடிச்சான் காப்பியாக அல்லாமல் inspiration-ல் தமிழ்ச் சூழலுக்கு பொருத்தமாக வசனங்களையும் திரைக்கதையையும் அமைத்திருப்பதுதான் தியாகராஜன் குமாரராஜாவை சிலாகிக்க வைக்கிறது.
தமிழ்சினிமாவை டெக்னிக்கலாக நிறைய ஜாம்பவான்கள் தூக்கி நிறுத்திஇருந்தாலும்..
சமீபத்தில் மிஷ்கினின் அஞ்சாதே, நந்தலாலா,யுத்தம் செய் போன்ற படங்கள் உலகதிரைப்படங்களின் சாயலை, உலகதிரைப்படங்களின், எதார்தத்தை அந்த வாசனையை தமிழ் சினிமா ரசிகர்கள் நுகர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துக்கொண்டு இருந்த வேளையில், தடாலடியாக உலக திரைபடத்தின் தரத்துக்கு இணையாக ஒரு தமிழ்படம் வந்து இருக்கின்றது என்றால்.... அது ஆராண்ய காண்டம்தான்.
இந்த படம் தமிழ்சினிமாவின் பிரேக் த ரூல் மூவி என்று தாராளமாக சொல்லலாம்...

ஒரு பெரிய டான் தள்ளிக்கொண்டு தன் வீட்டிலேயே வைத்து இருக்கும் சின்ன பெண்ணிடம் உடலுறவு கொள்ளும் போது, சீக்கிரமாக ஊத்திக்கொள்ள, அந்த கோவத்தை, அந்த இயலாமையை அந்த பெண்ணின் மீது காட்ட, அவள் வலி தாங்காமல் ஒத்த வார்த்தையை சொல்லி விடுகின்றாள்.. என்ன சொல்லறா???

உங்களால முடியலைன்னா ஏன் என்னை அடிக்கறிங்க???

அந்த கோவம், கொடுமையன கோவம் எந்த ஆணாலும் தாங்கி கொள்ள முடியாத ஈகோ கோவம், அந்த கோபம் தனது கூட்டாளி மற்றும் அன்றைய சேவல் சண்டையில் சேவல் தலையை சீவுவது வரை வியாபிக்கின்றது..... மிக அழகான காட்சிக்கோர்வை. இப்படி ஒரு காட்சியோடு தமிழ்சினிமா தொடங்குவது இதுவே முதல் முறை....


இந்த படம் இயக்குனருக்கு முதல் படம்.. அப்படி நம்ப முடியவில்லை.....ஒரு 15 நிமிடத்துக்கு சிங்கம்பெருமாள் விட்டினுள் அலையும் கேமரா, எல்லா கேரக்டர்களையும் அறிமுகபடுத்துவதும் அதன் பிறகு ஆப்போசிட் டான் கஜேந்திரன் பற்றி வார்த்தையால் பயமுறுத்துவது சான்சே இல்லை... ஒன்ஸ் அப்பான்ய மெக்சிக்கோ படத்தில் ஆன்டனியோ பேன்டரசை, பாரில் அவன் எபபடி இருப்பான் என்று அறிமுகபடுத்தும் காட்சியை அது நினைவுபடுத்துகின்றன....

முதல் காட்சியில் சிங்கபெருமாள் கோஷ்ட்டிகள் சப்பையை வைத்து பேசி சிரிக்கும் காட்சிகள்.. தமிழ்சினிமாவுக்கு புதுசு..
இதுவரையிலான தமிழ் சினிமா இசையில் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் செய்திருப்பது ஒரு புரட்சி என்றே சொல்லலாம். இந்த quantum jump-ஐ நிகழ்த்துவதற்கு வெறும் இசையறிவு மட்டும் போதாது. சினிமாவின் மொழி தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் பல இடங்களில் எந்த இசையுமே இல்லாமல் மௌனமாகவே நகர்கிறது படம். எந்த இடத்தில் இசை கூடாது என்று தெரிந்து வைத்திருப்பவனே இசையை வசப்படுத்துபவனாக இருக்க முடியும். யுவன் அதை அனாயாசமாகச் செய்திருக்கிறார். மௌனத்தைப் போலவே படத்தின் பல இடங்களில் ஒரே ஒரு வயலின் அல்லது ஒரே ஒரு கிதாரின் மெல்லிய அதிர்வு மட்டுமே கேட்கிறது. சத்தமும் கூச்சலும் மட்டுமே இசை என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இதெல்லாம் மிகப் பெரிய ஆச்சரியம். அதேபோல் பசுபதி சிங்கப்பெருமாளின் அடியாட்களிடமிருந்து தப்பி ஓடும் காட்சி, சிறுவன் கொடுக்காப்புளி சரக்கை ஒளித்து வைப்பதற்காக ஓடும் காட்சி… இந்த இடங்களில் எல்லாம் பயன்படுத்தப்படும் இசை உலகத்தரம். நான் மட்டும் அல்ல; படத்தைப் பார்த்த அத்தனை பேருமே யுவனின் இசையை விமரிசையாகக் கொண்டாடுவதிலிருந்தே யுவன் எத்தகைய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதே யுவன் யோகி, பானா காத்தாடி போன்ற படங்களுக்கு எப்படி இசையமைத்திருக்கிறார் என்பதையும் இங்கே நினைவு கூர வேண்டும். ஒரு இயக்குனர் ஒரு இசையமைப்பாளரை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதே அந்தப் படத்தின் இசையின் தரத்துக்குக் காரணமாக அமைகிறது
ஆரண்ய காண்டத்தின் ஒளிப்பதிவைச் செய்திருப்பவர் P.S. வினோத். தேவ்.டிக்குப் பிறகு என்னைக் கவர்ந்த ஒளிப்பதிவு இதுதான். இவர் தமிழின் சினிமா மொழியையே மாற்றி அமைத்திருக்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். பல காட்சிகள் மேற்கத்திய ரெனேஸான்ஸ் ஓவியங்களை எனக்கு ஞாபகப் படுத்தின. தமிழில் ஒளி ஓவியர் என்று போட்டுக் கொண்டு ஜிம்கா வேலை செய்வது போல் இல்லை; வினோதின் ஒளிப்பதிவு நிஜமாகவே ஓவியத்தைப் போல் இருந்தது. குறிப்பாக சிங்கப்பெருமாள் வரும் காட்சிகள் அனைத்தும் Caravaggio-வின் (1571 – 1610) ஓவியங்களைப் போலவே இருந்தன. அதிலும் குறிப்பாக சிங்கப்பெருமாள் சப்பையைத் தாக்கும் காட்சி அச்சு அசலாக கரவாஜியோவின் டேவிட்டும் கோலியாத்தும் என்ற ஓவியம்தான். பிறகு, குமாரராஜாவின் பேட்டியைக் கேட்ட போது அவருக்கு ரெனேஸான்ஸ் ஓவியத்தில் மிகுந்த நாட்டம் உண்டு என்றும், அதே பாணியிலேயே எடுக்கலாம் என்று வினோதிடம் சொன்னதாகவும் குறிப்பிடுகிறார். சினிமா என்பது இசை, நடனம், ஓவியம், இலக்கியம், கட்டிடக் கலை, தத்துவம் என்று பல்வேறு கலை வடிவங்களையும், அறிவுத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு ஆரண்ய காண்டம் ஒரு உதாரணம்.ஆரண்யகாண்டம் வன்முறையின் அழகியலை சொன்ன முதல் தமிழ்ப் படம். தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரித்த சரணுக்கும் நமது வாழ்த்துக்கள்.இத்திரைப்படம் சர்வதேச,இந்திய விருதுகளை மொத்தமாக அள்ள போகிறது.ஜாக்கி செரபிற்கு நிச்சயம் அவார்டு உண்டு.தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சினிமாக்கள் பல உலகதரமானது என்று சொல்லப்பட்டபோதிலும் இந்த சினிமா உலகதரத்துக்கு ரசனைக்கு புது மெருகூட்டலை அளித்திருக்கிறது என்று நிச்சயம் சொல்ல முடியும்.

அதிசயமே வியந்து நின்ற அதிசயம் ஆழி சூழ் உலகு

Posted by பிறவி on Friday, March 18, 2011 , under | comments (0)




''என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!''
--எழுத்தாளர் ஜோ டி குருஸ்
வாழ்க்கையை எத்தனைமுறை திருப்பி திருப்பி எழுதினாலும் ஏதாவது ஒரு சாரளம் மாத்திரம் நம் கண்ணில் பட்டு வாழ்வை புதிய வியாக்கியானத்தில் கொண்டு சேர்க்கிறது.எழுதப்படாத பல சமூக வாழ்க்கை நம் தமிழ் சூழலில் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதை மீண்டும் ஆழி சூழ் உலகு நாவல் மூலம் உணரமுடிகிறது.பிரமாண்ட எழுத்தாளர்களே மூக்கில் விரலை வைத்து அதிசயத்த அற்புதம் தான் ஆழி சூழ் உலகு என்ற அற்புத நாவல்.படைப்பனுபவத்திற்க்கு நல்ல கவனிப்பும் தேடலும் தான் முக்கியமானது என்பதை முதல் நாவலிலே மற்றவர்களுக்கு கற்று தருகிறார் நாவலாசிரியர்.
குமரி மாவட்டத்திலுள்ள ஆமந்துறை என்ற மீனவக் கிராமத்தினை மையமாகக் கொண்டு நாவல் விரிகிறது. 1985ஆம் ஆண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று திரும்பும் சிலுவை, சூசை, கோத்ரா பிள்ளை என்ற மூன்று பரதவர்களும் புயலில் மாட்டிக் கொள்வதாக நாவல் தொடங்குகிறது. மூவரும் மூன்று தலைமுறை களின் குறியீடுகள். பசியாலும் குளிராலும் வாடி நீரில் மிதக்கையில் ஒருவர் மற்றவருக்காக உயிர் துறக்கின்றனர்; சிலுவை மட்டும் காப்பாற்றப்படுகிறான். இதற்கிடையில் 1933ஆம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் கடலிலும் கடற்கரையிலும் நடைபெற்ற சம்பவங்களின் வழியாக நாவல் தொடர்கிறது.
பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் விவரிப்பில் மூன்று தலைமுறைகளாக, கிராமத்தில் ஏற்படும் மாற்றங்கள் பதிவாகியுள்ளன. ஆமந்துறையில் மீனவர்களும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாடார்களும் வாழ்கின்றனர். இவர்களிடையே அவ்வப் போது மோதல்களும் கொலைகளும் நிகழ்கின்றன. ஆனால் நடப்பில் நாடார்களும் பரதவர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கின்றனர். கிறித்துவர்களாக வாழ்ந்தாலும் பரதவர் களிடம் நாட்டார் நம்பிக்கைகளும் நாட்டார் தெய்வ வழிபாடும் செல்வாக் கோடு உள்ளன. சான்றாக, திமிங்கலம் போன்ற பெரிய மீனிடம் மாட்டிக்கொள் ளும்போது குமரி ஆத்தாவைத் துணைக்கு அழைக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் கடலில் மீனுக்காகப் பயணம் செய்கையில் அவர்கள் கரை திரும்புவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று. எப்பொழுதாவது கடலில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவர்களுடைய போராட்டம் இடைவிடாமல் தொடர்கிறது. பரதவர்கள் எல்லா வழிகளிலும் பொருளியல் ரீதியாகச் சுரண்டப்படுகின்றனர்; அவற்றி லிருந்து மீள்வது குறித்த தெளிவும் அவர்களிடமில்லை. அவர்கள் தங்களுக்குள்ளாகவே குழுக்களாகப் பிரிந்துகொண்டு அடிதடி, வெட்டுகுத்து, கொலை முதலான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பரதவர் வாழ்க்கையில் திருச்சபையின் ஆதிக்கம் மறுக்க முடியாத ஒன்று. அது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். கிறித்துவ ஆலயத்தில் பங்குத் தந்தையாகப் பணி யாற்றிய காகு பாதிரியாருக்கும் ஆமந்துறைப் பரதவர்களுக்கும் இடையிலான உறவு நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடனாக, கருவாடு வாங்கி வியாபாரம் செய்ய வந்த ரத்னசாமி நாடாருக்கும் ஆமந்துறைப் பரதவர்களுக்கும் இடை யிலான உறவு குறித்த சித்திரிப்பு மனித உணர்வின் உன்னதமான வெளிப்பாடு. பரதவர்கள் தொழில்ரீதியில் ஒன்றிணைந்தாலும் தனிப்பட்ட நிலையில் கிராமத்தினருடனும் தங்களுக்குள்ளும் முரண்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
பரதவர்களிடையே நிகழும் ஆண்-பெண் உறவின் பாலியல் ‘அத்துமீறல்களை’ நாவல் இயல்பாகப் பதிவு செய்துள்ளது. ஆண்களைப் போலவே பெண்களும் தங்கள் காமத்தினையும் காதலினையும் வெளிப்படுத்திடத் தயங்குவதில்லை. ரோஸம்மா இதற்கோர் உதாரணம்; தன்னிடம் உறவு கொள்பவனின் மகனிடம் உறவு கொள்கிறாள். பரதவர் குறித்த பல நாவல்களிலும் அவர் களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே பிரச்சினைகளும் அதனைத் தொடர்ந்து கலவரங்களும் நிகழ்வது பதிவு செய்யப் பட்டுள்ளது. இந் நாவலிலும் இவ்வாறான சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாவலின் இடையிடையே சங்ககால நெய்தல் நில வாழ் வினைச் சித்திரிக்கும் பாடல்களை இணைத்திருப்பது நம்மை அருஞ்சொற்பொருட்களைத் தேடிப் படிக்கவைக்கிறது. பரதவர்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் கடல்புரத்தில், உப்புவயல், மாணிக்கம், வாங்கல், கன்னி எனப் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமாகவும் புதுவித வாசிப்பனுபவத்தைத் தருவனவாகவும் உள்ளன. நிலத்தில் மட்டுமே வாழும் நமக்குக் கடற்புரத்தில் வாழும் பரதவர்கள் பற்றிய அறிமுகமின்மையும் பெரும்பான்மையான மக்களாக இருந்தும் அவர்கள் ஆதிக்க அரசியல் செய்யாமலிருப்பதும் அவர் களின் சாகச வாழ்வும் அவர்களைப் பற்றி வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
ஆழிசூழ் உலகி’ன் அடிநாதம் வலிமை வாய்ந்த மரணம். நாவலை வாசிக்கும் இரண்டாவது நிமிடமே கோத்ராபிள்ளையின் மரணம். பிறகு மடுத்தீன் மரணம். மரணம் தொழிற்சார்ந்த வாழ்க்கையிலும் வருகிறது; நோயிலும் வருகிறது. தொடர்ந்து மரணங்கள். சாவுக்குக் காரணம் தெரியவில்லை. பில்லி சூன்யமா? என்னும் குழப்பம். மரணத்தை எப்படி வெல்வது? என்ற ஆதங்கம் ஜோவை ஆழ்த்தினாலும் நாவலின் தளம் புறவயமாக இயக்கம் கொள்வதால் ஆழ்தளத்தில் அவரால் செல்ல முடியவில்லை. மரணத்தைத் தியாகத்தால் வெல்ல முடியும் என்கிறார். மரணமும் இயற்கையான தியாகம்தான். கடலுக்கும் கரைக்கும் இடையிலான மீனவனின் வாழ்க்கை போன்றது தான், வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பும். உயிரும் உயிரும் மோதும் தொழில்தான் மீன்பிடி வாழ்க்கை. இதில் யார் தோற்றாலும் கிடைப்பது மரணம். பிடித்த மீன் சாகக்கூடாது. செத்தா மற்றமீன் சாப்பிடும். பிறகு ‘கிழவனும் கடலும்’ போல எலும்புக் கூடுதான் கரைவந்து சேரும். எனவே வேட்டையாடிய உயிரை வேட்டையாளனே காப்பாற்றும் நிலை. கரைக்குக் கொண்டு வரப்படும் மீனுடன் ஜோடிமீன்கூட வருவதும். “நம்மள மாதிரி அறிவா அதுக்கு இருக்கும்? சிந்திச்சு பாத்தா அது நெலமையும் பாவந்தான...” என்று மேலும் தொம்மந்திரை பேசுவதும் மரணத்தின் ஆழம் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் விரிந்தது என்னும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த உணர்விலிருந்து புறத்தோற்றமாகத் தான் சார்ந்த சமூகத்தின் சித்திரங்களை மிகப்பெரிய கடலைப்போன்ற திரைச்சீலையில் தீட்டி இருக்கிறார்.
அமாவாசை இருளில் காற்றாலும் அலையாலும் மரம் உடைக்கப் பட்டுக் கடலுக்குள் தத்தளிக்கிறார்கள் சிலுவை, சூசையார், தொம்மந்திரை, வயதான பெரியவர் கோத்ரா பிள்ளை. அவர்களின் மரண அவலத்தினூடே நாவலின் கதை சொல்லப்படுகிறது. இயற்கையின் மாபெரும் சக்திக்குள் ஒன்றாகிக் கலக்கிறது கோத்ரா பிள்ளையின் மரணம். சாகும்போது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, குற்ற உணர்ச்சி, தவறுகள், உன்னதங்கள் எல்லாமே இயல்பாக அலசப்படுகின்றன. தான் சாகும்போது தோக்களத்தா கிழவியை (மனைவி) நினைத்தவாறு உயிரை விட்டதாக அவளிடம் கூறச்சொல்லும் கோத்ரா பிள்ளையின் பலவீனங்களும் இதில் அடக்கம். இவ்வாறு கதை சொல்லும் வடிவம் ஏற்கனவே எழுதப்பட்டதுதான். மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்யும் பெண் கீழே விழுவதற்குள் கதை சொல்லும் பாணியிலான புனைவுகளை நாம் வாசித்திருக்கலாம். ஆனால் தொழில் சார்ந்த வாழ்க்கையுடன் இணைத்து ஒரு இனவரைவியலை இந்த வடிவத்திற்குள் நிறுத்தி இருப்பதும் வேரும் கிளையுமாகப் படர்ந்த உறவுமுறையைச் சொல்லி இருப்பதும்தான் ஜோவின் திறமை.
‘உடல்’ என்பதன் இயக்கம் இரண்டு விதங்களில் இவரது நாவல்களில் இயக்கம் பெறுகின்றது. முதலாவதாக உழைப்பு சம்பந்தப்பட்டது. இரண்டாவதாக உறவு சம்பந்தப்பட்டது. இரண்டுமே உற்பத்தி சம்பந்தப்பட்டவை. (இந்த உற்பத்தி உறவில் சம்பந்தமில்லாத சாதி, ஆதிக்கம் பெறுவதுதான் ‘கொற்கை’யின் உள்ளடக்கம்.) உடல்மீதான வாழ்வம்சத்தின் முரட்டுத்தனம் கொண்ட உழைப்பாளர் வாழ்க்கையின் மரணமுடிவுகளைப் பதிவு செய்யும் தொடக்கம், வாழும் காலத்தில் அடையும் துடிப்பை இவற்றிலுள்ள பெரும்பாலான பாத்திரங்கள் உணர்த்தி நிற்கின்றன. தென்னைமரத்திலிருந்து விழும் சுந்தரபாண்டியின் மரணம்கூட இங்கு நினைவுகூரத்தக்கது. நாடார்களும் பனைகளிலிருந்து மீனவர்களைப்போலக் கதை பேசிக்கொண்டே தொழில் செய்கிறவர்கள். ‘தினமலர்’ பத்திரிகை தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் பனை யிலிருந்து கொண்டு உரத்துப் படித்த கதைகளும் குமரிமண்ணில் நடந்ததுண்டு. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது துணியை உயர்த்திக்காட்டி சுடப்பட்டுச் சாவது பற்றி ஜோ எழுதி இருப்பதையும் இந்த உடல்வாழ்வின் முரட்டுத்தனம் என்று சொல்லலாம். இதையும் பனையேறி நாடார்களிடம் கண்டு கொள்ளலாம். நான் ஹைஸ்கூல் படிக்கும்போது எங்களுக்கொரு வரலாற்று ஆசிரியர் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லும் சம்பவம் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. குமரிமண்ணைத் தாய்த்தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் நேசமணி ஈடுபட்டிருந்த காலத்தில் பலர் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையான சம்பவங்கள் நடைபெற்றன. அவர்களைப் பற்றி ஒருவர் வில்லுப்பாட்டில், “அந்த மங்காடு தேவசகாயமும், கீழ்குளம் செல்லையாவும், மானம் காக்கும் போரில், மார்பில் குண்டடி பட்டனரே” என்று பொதுக் கூட்டங்களில் பாடுவாராம். இதனைப் பாடிவிட்டு அந்த ஆசிரியர், “நாயர்களின் போலீஸ் பட்டாளம் சுடுவதற்காகத் தோக்கை ஏந்தியதும் இவர்கள், ‘இஞ்ச சுடுடா’ என்று வேட்டியை உயர்த்திக் காட்டினார்கள். குண்டுபாய்ந்த இடம் மார்பில் அல்ல; மர்மஸ்தானத்தில்” என்பார்.
அதுபோல வர்மக் கலையிலும் இந்த ஒற்றுமையைக் காணமுடிகிறது. தொம்மந்திரையின் இடது குதிகால் நரம்பில் தூண்டில் ஏறிக் கொழுவு கிறது. உடனே கோத்ராபிள்ளை அவனது கையிலுள்ள சில நரம்புகளைப் பிடித்துவிட ரத்தப்போக்கு நின்றுவிடுகிறது. தொழிலுடன் தொடர்பு கொண்ட இத்தகைய உடல் மீதான எழுத்துக்கள் இயற்கைக்கும் நாகரிகத்திற்கும் இடையிலான முரண்பாட்டைப் பெரிதாக்குகின்றன. நாடார்களைவிட மீனவர்களிடம் இந்த இயற்கைத்தன்மை பெரிதாக உள்ளது. ஜஸ்டின் மரம் கரைபிடிக்கத் தனி ஆளாக வரும்போது பனை மரத்திலிருந்து மருக்கொழுந்தின் ஆட்கள் நாட்டு வெடிகுண்டு வீசுகிறார்கள். அவன் சிறிது பின்வாங்கி நிதானித்திருக் கலாம். ஆனால் அவனது உடல் அவனை உந்தித் தள்ளுகிறது. அவன் நெஞ்சைக் குண்டு பிளக்கிறது. பொதுவாகக் கலவரத்தின்போது பிணம் விழுந்தால் நாடார்கள் விட்டுவிட்டுப் பிறகு பார்க்கலாம் என்று ஓடித் தப்புவார்கள். மீனவர்கள் என்றால் அதை எடுக்கப்போய் கூட இரண்டு பேர்களைப் பலிகொடுப்பார்கள். இந்த இயற்கையான முரட்டுத்தனம் தான் ஜோவின் கைவண்ணத்தில் உடலெழுத்தாக உருமாற்றம் பெற்றிருக்கின்றது.
உறவு சம்பந்தப்பட்ட உடல் எழுத்தில் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியது உறவைமீறிய வாழ்க்கை குறித்ததாகும். எந்தவிதமான வரைமுறைகள் எதுவுமின்றி உடலும் உடலும் சேரும் தன்மையில் தமிழில் இதுவரை இதுபோன்றதொரு படைப்பு வெளிவந்தது இல்லை. ஜஸ்டின் வழுக்குமரம் ஏறும்போது அவனைக் காதலிக்கும் வசந்தியின் மார்பகங்கள் பூரிக்கின்றன. அவன் வெற்றிபெற்றதும் அவள் அந்தரங்கத்தில் வழவழப்பு ஏற்படுவதை உணர்கிறாள். தன்னால் விரும்பப்படும் ஆணின் மீதான அளவுகடந்த பற்று அவனுடன் உடலு றவு கொள்வதற்குச் சமமானது என்ற வகையில் எழுத்தாக்குகிறார். இதே ஜஸ்டினுக்கும் வசந்தாவின் தகப்பனாருக்கும் வசந்த மாளிகை என்னும் ஒரே பெண்ணுடன் உறவு. தங்கச்சிமுறை வரும் எஸ்கலினோடு கில்பர்ட் கொள்ளும் உறவு. திடமனதில்லாத கில்பர்ட் சாமியார் படிப்பை உதறிவிட்டுக் கப்பல் தொழிலுக்குச் செல்கிறான். சித்தி முறை கொண்ட தன்னை விட இருபது வயது மூத்தவளான ரோசம்மாளோடு வருவேல் கொள்ளும் உறவு. அவன் தகப்பனார் விக்டர் பிள்ளையும் அவளுடன் உறவுகொள்வதை வருவேல் பார்க்கிறான். அவள் கிட்டத் தட்ட அவன் தாய்க்குச் சமமானவள். தூங்கிக்கிடக்கும் நிறைமாத கர்ப்பிணி மேரியைச் சுவரேறிக் குதித்துவந்து புணரும் சூசை. சாராயம் விற்கும் பண்டணத்தாளைப் போடத்துடிக்கும் சப்பாணியார். பிலிப் உடல்மீது மோகங்கொண்டு விளையாடும் சித்திக்காரி, மரியதாஸ் சாமியாருடன் ரென்சி கொள்ளும் உறவு. இவை போன்ற வரைமுறைகள் மீறிச் செல்லும் உடல் சார்ந்த உறவுகள் அனைத்துமே உடல் எழுத்தில் சேர்த்திதான். உடலுக்கு வெளியே உறவுகளற்ற தன்மைதான் புராதன எழுத்தை நோக்கிய பதிவுகளைச் செய்ய முயற்சிக்கின்றன. தரப்படுத்தப்பட்ட அல்லது நாகரிகம் செய்யப்பட்டவைகள் அனைத்துமே ஒழுக்கம் சார்ந்த அதிகார உலகத்தைக் கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன.
உடல்மீதான சாகசப் பயணத்தில் இவ் நாவல் குறிப் பிடத்தகுந்த இலக்கை நோக்கிச் செல்கின்றன. அது உறவுகளை வென்றெடுத்த உடல் சாம்ராஜியம். உணர்வுகளில் சங்கமிக்கும் இந்த உலகத்தில் எல்லாரும் உறவினர்கள்தான். ஆனால் எந்த உறவையும் அது விலக்கியோ, ஒதுக்கியோ பார்க்க மறுக்கிறது. இந்த நெருக்கம் தான் எழுத்துக்களில் புராதன வளத்தைச் சேர்க்கின்றன. பண்பாடு என்பது இவற்றின்மீது எழுப்பப்படும் கல்லறைகள் அல்லது மனித இழிவுகள் என்று ஆகிறது. அது தரும் குற்றஉணர்ச்சி இவ்வகையான எழுத்துக்களில் துளியும் இல்லை. ஆபாசம் என்ற கூச்சல் இல்லை. அணிவதைவிட அல்லது புனைவதைக் காட்டிலும் பெரிய ஆபாசம் எது? வேட்டையாடும் துடிப்பில் இருக்கும் உடல்கள் மீதான உணர்வுகளுக்கும் நெருக்கங்களுக்கும் மட்டுமே இவ்வகையான எழுத்துக்கள் முக்கியத்துவம் தருகின்றன.
முல்லை நிலத்து ஆயனுக்கும் மருத நிலத்து உழவனுக்கும் வாழிடம் சார்ந்து சாவை எதிர்கொள்கிற அச்சுறுத்தல்கள் எவையும் இல. மலை சார்ந்து வாழ்கிற குறவர்கள் மலையை முதல் முறை அறியும்போது ஒருவேளை இத்தகைய அச்சுறுத்தல் உண்டாகலாம். ஆனால் தான் வாழும் மலையை ஒரு முறை அறிந்துவிட்டால் பிறகு பழுதில்லை. ஏனென்றால் மலை அசையாப் பொருள். அசலம். அதில் கால்பாவி நிற்கலாம். நிலைமை என் பது அதன் மெய்ம்மை. அது நாளும் ஒரு கோலம் கொள்வதென்பது கிடையாது. ஆனால் கடல் அப்படியன்று. அது அசையும் பொருள். சலம் (சலசலப்பது சலம்; சலசலவாதது அசலம்). இன்றைக்கிருப்பதுபோல நாளைக்கு இருக்காது. நிலையாமை என்பது அதன் மெய்ம்மை. மிதக்கவும் வைக்கும்; மூழ்கடிக்கவும் செய்யும். நிலையாமையை உவமிப்பதாக நீரே அமைகிறது. நீர்க்கரை வாழ்வும் நீர்க்கோல வாழ்வாகவே நிலையாமையின் வசப்படுகிறது.
பரதவர்களைப் போலவே மறவர்களும் சாவை எதிர்கொள்ளும் வாய்ப்ப்பைப் பெற்றவர்கள்தாம். பரதவர்கள் நீர்க்களத்தில் சாவை எதிர்கொள்பவர்களானால் மறவர்கள் போர்க்களத்தில் சாவை எதிர்கொள்பவர்கள். ஆனால் மறவர்கள் எதிர்கொள்ளும் சாவும்கூட வாழிடம் சார்ந்து அவர்கள்மீது திணிக்கப்பட்டதன்று; நாளும் நிகழ்வதுமன்று.
எனவே மரணத்தின்முன் வாழ்வின் பெறுமதி என்ன என்ற கேள்வியை அலசுகிற புதினத்தின் கதைக்களமாக அமையத்தக்கது நெய்தல் நிலம் மட்டுமே. நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும். இரங்கலுக்குரிய பறையான சாப்பறையே நெய்தலுக்குரிய பறை. அந்தப் பறைக்கே நெய்தல் என்று பெயர் (ஓரில் நெய்தல் கறங்க...புறம். 194).
நிலையாமை என்கிற அடிக்கருத்தைப் புலப்படுத்துவதாகவே ' 'ஆழிசூழ் உலகின் ' ' தொடக்கப்பகுதிகள் அமைகின்றன. எடுத்த எடுப்பிலேயே ஆவேச அலைகளால் அடியுண்டு கட்டுமரம் கவிழ்ந்து சிதைகிறது. கடலால், அதாவது நீரோட்டத்தால், கடலை அலைக்கழிக்கிற காற்றால், கடலில் உலவுகிற மீன்களால் என்று நிலையாமை எப்போதும் பல்லிளித்து முன்நிற்பது அருமையாகச் சித்திரிக்கப்படுகிறது.
கடல் வாழ்வின் நிலையாமை புரியாவிட்டால் பரதவனைப் புரியாது. அவன் கடல் மாதிரி; எப்போது சீறுவான் எப்போது ஆறுவான் என்பது யாருக்கும் பிடிபடாத மந்தணம். பரதவனை மிகத் தெளிவாக நான்கைந்து வரிகளில் விளக்கிவிடுகிறார் ஜோ டி குரூஸ்:
' '...சரியான மிலேச்சப் பயலுவ... றால் சீசன் ஒண்ண வரும் பாத்துக்கிடுங்க, அப்ப ஒரு பயலையுங் கையில புடிக்க முடியாது. நூறு ரூபா நோட்ட காதுல சொருகி வெச்சிகிட்டு அலைவானுவ. பஸ்சுல ஏறுனா நோட்ட குடுத்திற்று சில்லற கேக்குறதே இல்ல...கையில காசு வந்திற்றா...! திசயவெள தியேட்டர்ல படம் பாக்க மாட்டான்வ. இங்கயிருந்தே டக்கர் புடிச்சிகிட்டு திருநவேலி நாரோயில்தாம். துணிக்கடையள் ள போயி வெல கூடுன துணி போடுலன்னுதாம் கேப்பானுவ. ' '
'நாளை பிழைத்துக் கிடப்போமா என்று தெரியாது. இன்று இருக்கிறோம். ஆகவே துய்த்து விடுவோம் ' என்ற 'உறுதியின்மை ' உளவியலே பரதவர்களை இத்தகைய நிலைகளுக்கு உந்தித் தள்ளுகிறது. எந்த ஒன்றையும் நாளைக்கு என்று ஆற வைக்க அவர்களுக்கு வசதி வாய்ப்பில்லை. அது துய்ப்பானாலும் சரி; பழி வாங்குவதானாலும் சரி.
பரதவர்களின் இந்த 'உறுதியின்மை உளவியலின் ' புறவெடிப்பாக வெளிப்படுகிற கண்மண் தெரியாத முரட்டுத்தனத்தைக் காட்சிப்படுத்துகிற இடங்களும் புதினத்தில் ஏராளம். அந்த முரட்டுத்தனம் ஆண்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் பெண்களுக்கானதாகவும் இருப்பது வசந்தா, கலிஸ்டா, மயிலாடியாள் ஆகியோர் வழியாகப் புலப்படுத்தப்படுகிறது.
சாவு தன்னை வெடிகுண்டின் வழியாகச் சுவை பார்க்க வருகிறது என்று தெரிந்தும் பின்வாங்காமல், புறமுதுகு காட்டாமல், நெஞ்சில் குண்டை வாங்கிச் சாவுக்குத் தன்னை உண்ணக் கொடுக்கிற ஜஸ்டினின் வீரம்; எத்தனை கடும்பகையிலும் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்குமான கடல் மோதல்கள் கரைக்கு இடம்பெயர்ந்துவிடாமல் கவனித்துக்கொள்கிற ஒழுங்கு; பெண்களை, குழந்தைகளைக் குறி வைக்காத ஆண்மை; பகையாட்களானாலும் தஞ்சமடைந்தவர்களைக் காக்கும் அறம்--என்று பழந்தமிழ் மரபில் சொல்லியும் பேணியும் வரப்பட்ட புறமரபுகள் அனைத்தும் இன்னும் பரதவர்கள் நடுவில் உயிர்த்துக் கிடப்பதைப் புதினத்தின் வழியாக அறியமுடிகிறது.
1933-இல் தொடங்கி 1985வரையிலான அரைநூற்றாண்டுக் காலத்தையும் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று தலைமுறையினரையும் இந்தப் புதினம் மையம் கொண்டிருக்கிறது. கோத்ராப் பிள்ளை மூத்த தலைமுறையின் படியாள்; சூசை நடுத் தலைமுறையின் படியாள்; சிலுவை இளைய தலைமுறையின் படியாள்.
கதையின் மையக் கதைமாந்தர்களாக ஆண்களில் கோத்ரா, சூசை, ஜஸ்டின் ஆகியோரும், பெண்களில் தோக்களத்தாள், மேரி, வசந்தா, அமல்டா ஆகியோரும் இவர்களையன்றிக் காகு என்ற பாதிரியாரும். ஏனைய கதைமாந்தர்கள் அனைவரும் இந்தக் கடற்புறத்துச் சேலையின் கரைக்கும் முன்றானைக்கும் வண்ணம் சேர்ப்பவர்கள் மட்டுமே.
புதினம் நெடுகிலும் யாருடைய பிறப்பைப்பற்றியும் ஒரு சிறுகுறிப்பும் கிடையாது. தன்னுடைய முன்னுரையில் புதின ஆசிரியர் சொல்வதுபோல, ' 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சனன வழி ஒன்றுதானே! ' ' அதில் விதந்தோத என்ன இருக்கிறது ?
ஆனால் மரணவழிகள்தான் எத்தனையெத்தனை ? மரணத்தின்முன் வாழ்வின் பெறுமதி என்ன என்று பேச விழைகிற இப்புதினத்தில் ஏராளமான சாவுகள் நிகழ்கின்றன. கடலில் கவிழ்ந்து செத்தவன், வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும் செத்தவன், இயற்கையாகச் செத்தவன், நோய்வாய்ப்பட்டுச் செத்தவன், வாழ விருப்பமின்றிச் செத்தவன், பிறர்வாழத் தான் முன்வந்து செத்தவன்...
மிக்கேல் பர்னாந்து, வியாகுலப் பிள்ளை, இருட்டியார், சுயம்பு, தொம்மந்திரை, ஊமையன், காகு, ஜஸ்டின், கோத்ரா, சூசை என்று பல கதைமாந்தர்கள் சாகிறார்கள். இவர்களில் கடைசி நான்குபேர் தவிர்த்த ஏனையோரின் சாவுகள் பெரிய அசைவுகள் எதையும் உருவாக்கவில்லை. காகு, ஜஸ்டின், கோத்ரா, சூசை ஆகியோரின் சாவுகள் உலுக்குகின்றன.
ஜஸ்டின் என்ற சண்டியர் தன்னுடைய பிழைகளுக்காக வருந்தி மனம் திரும்பிய நிலையில் சாவை எதிர்கொள்கிறான். அவ்வாறே சூசை என்ற உல்லாசியும் தன்னுடைய பிழைகளுக்காக வருந்தி மனம் திரும்பிச் சாவைத் தழுவுகிறான்.
ஜஸ்டின் மனம் திரும்பியது வாழ்வை விரும்பி. தன் மகனுக்காக வாழ வேண்டும் என்ற ஆவல் உந்த மனம் திரும்பினான். ஆனால் வாழமுடியாமல் கொலையுண்டான். ஆனால் சூசையின் மனத் திருப்பமோ சாவை நோக்கி அவனை உந்தித் தள்ளியது. தன்னுடைய உல்லாச விழைவினால் அழிந்துபோன ஒரு குடும்பத்தின் கடைசிப் படியாளாகிய பிறன் மகன் ஒருவனைக் காப்பாற்றத் தன்னைத் துறந்துகொண்டான்.
காகு என்ற பாதிரியார் ஆமந்துறை என்ற அந்த நெய்தற்புறச் சிற்றூரின் வாழ்வுக்கு விளக்கேற்றியவர். தான் பணியாற்றுகிற பங்குகளின் மக்களுக்காக வாழ்வதைத் தவிர அவருக்குத் தனியாக வாழ்வொன்றும் இல்லை. அவர் மூத்து இயற்கையாகச் சாகிறார். ஊரே இடம்பெயர்ந்து அவருடைய சாவுக்குப் போகிறது. அவருடைய சாப்பெட்டியைச் சுமக்கும் உரிமையை அவர்மேலான அன்பினால் தனக்குக் கோருகிறது.
காகு பாதிரியார் சாமியாராக இருந்து பிறருக்காக வாழ்ந்தவர்; கோத்ரா இல்லறத்தானாக இருந்து பிறருக்காக வாழ்ந்தவன்; பிறருக்காகத் தானே முன்வந்து செத்தவன். சூசை தன் வாழ்வைப் பிறன் மகனுக்காகத் தியாகம் செய்வதற்குக் கோத்ராவே வழிகாட்டி. சூசையாவது தன்னுடைய பிழைக்குக் கழுவாயாகத் தன் உயிரைத் தந்தான். கோத்ராவோ யாருக்கும் எந்தக் கடப்பாடும் இல்லாத நிலையிலும், எந்த எதிர்பார்ப்பும் பற்றுதலுமின்றி உயிர் துறந்த, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். மனுமகனாகத் தன் வாழ்வின் பெறுமதியை மரணத்தில் நிறுவிய கிறித்து சாவதற்குரிய சாவைச் செத்தவன்.
----------------------------------------------
நாவலின் பக்கமெல்லாம் பொங்கிப் பெருகி வருகின்ற விதவிதமான மீன் கள். அவை எப்படிப்பட்டவை தெரியுமா? ஓங்கல் மீன்களின் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மற்ற பகுதிகள் கரு நீலமாகவும் வழவழவென பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். முத லில் பார்ப்பவர்கள் மிரண்டு விடுவதுண்டு. போஸ்கோ எனும் மீனவனும் அப்படித்தான் ஒங்கலைப் பார்த்துப் பயம் கொள்கிறான். அப்போது தொம் மந்துரை எனும் தேர்ந்த கடலோடி அவனுக்குச் சொல்கிறான். “போஸ்கோ, பயப்புடாத. ஒங்கல்வ ரொம்ப நல்லதுவ. காந்திமாரி, சாதுவானதுவ. தோணியள்ல போற நம்ம ஆள்க தவறி கீழ வுழுந்திற்றான் வயின்னா இந்த ஒங்கல்வதாம் சுத்தி நின்னு சுறாப்பயல்வ கிட்ட வராம காப்பாத்துமாம்”. மீனுக்கும் பரதவர்களுக்குமான புரிதலும், கடலோடு இயைந்த அவர்களின் வாழ்வையும் அறிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது இந்த ஒரு துளி.
கடலின் விதவிதமான ரூபங்களை யும் கூட வாசகன் தொம்மந்துரையெனும் தேர்ந்த கடலோடியின் கண்களின் வழியாக கண்டடைகிறான். கருத்துப் பெருத்த வரிப்புலியன் தண்ணீருக்கு அடியில் மற்றொரு கருப்பும் அலைகிறது. அது என்ன தெரியுமா; “வரிப்புலியும் எப்பவும் ஜோடியாத்தாம் அலையும். இப்ப மாட்டிக்கிட்டது ஆணா, பெண்ணா தெரியலா”. “ஆணா இருக்கும் அது தாம் ஜோடியா நிக்கிற பொட்டகிட்ட பலத்த காட்டுறதுக்கு இந்த துள்ளு துள்ளுறாம்”. “சரிதாம் அண்ண, மரத்துகிட்ட சேர்ந்து வரும் போது பார்த்தமில்ல. அதுக்கு கீழேவே ஒரு கறுப்பு வந்துகிட்டேயிருக்கு”. “யாருக்குத் தெரியும், பரந்த கடல்ல ஜோடிய சுத்திக்கிட்டு இருந்திருப்பாவ, இப்ப நம்மாளு எதுலேயோ மாட்டிகிட்டான், நெனச்ச இடத்துக்கு போவ முடியல்லியே, முத்தங்கித்தம் குடுக்க முடியல்லியேன்னு சோகமா சுத்திக்கிட்டு இருக்குமாயிருக்கும்”. ஒரு படைப்பின் அதீதமான சாத்தியங்களையும் தேர்ந்த படைப்பாளியால் எட்டி விட முடியும் என்பதை தன்னுடைய முதல் நாவலில் நிரூபித்தவர் ஜோ. டி. குரூஸ்.

ஆமந்துறையெனும் பரதவர்களின் கிராமத்தில் வாழ்ந்த தொம்மந்துரையெனும் மீனவனின் கொடி வழிக் கதைதான் “ஆழிசூழ் உலகு” என்ற போதும் கதைகள் யாவும் காலக்கிரமமாக வரிசை வரிசையாக அடுக்கித்தரப்படவில்லை. பரதவர்களின் குலப்பாடகனான ஜோ.டி.குரூஸ் அவரது ஞாபகங்களின் ஊடாகப் பயணித்து 1933ல் துவங்கி 1985 வரையிலுள்ள அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலான ஆமந்துறைக்கும், தூத்துக்குடித் துறைமுக வளர்ச்சிக்கும் உள்ள உறவு. இந்த ஊரின் காவல் தெய்வம் போல வாழ்ந்த காகுச்சாமியார் எனும் கிறிஸ்தவ பாதிரியின் பிரம்மாண்டமான ஆகிருதி. ஊருக்குள் நிலத்திலும் மனிதர்களுக்குள் நிகழும் மனவெழுச்சி, மாற்றங்கள், கோபங்கள், பாலியல் இச்சைகள், பாலியல் மீறல்கள் என யாவற்றையும் ஒரு குலமரபுப் பாடலின் நுட்பத்தோடு பதிவு செய்திருக்கிறார். கடலின் அலையைப் போல காலத் தின் பெருவெளிக்குள் முன்னும், பின்னுமாக அலைவுறுகிறது நாவல். அவற்றிற்குள் காட்சிப்படுவதெல்லாம் பரதவ மக்களின் தனித்த மனக்கிலேசங்களே என்பதை வாசகன் கண்டடைவான்.

பரதவர்களின் வாழ்விடமான கடல் நிலையாமையின் அடையாளம், விவசாயம், கால்நடை பராமரித்தல் போன்ற தமிழர்களின் நிலம் சார் தொழில்களில் இருக்கும் குறைந்தபட்ச நிச்சயம் கூட பரதவ மக்களின் குலத்தொழிலான மீன் பிடித்தலில் சாத்தியமில்லை. இந்த நிச்சயமின்மையே அவர்களின் குணநலன்களையும், வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இயற்கை முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான பெருத்த நம்பிக்கையை புனித அந்தோணியாரை (அய்யா) தவிர வேறு எவரும் அளித்திடவில்லை. அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிற போதும், சுக்கு நூறாகச் சிதைகிற போதும் அய்யாவின் காலடியில் மண்டியிட்டுக் கதறிக்கடைத்தேறுகிறார் கள். “கண்ணீர்க் கடலில் தத்தளிப்பவர்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக இருக்கிறது மதம்”, என மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருப்பார். அதற்கான இலக்கிய சாட்சியை நாவலெங்கும் நாம் வாசித்தறிகிறோம்.

கிறிஸ்தவம் வந்தடைந்த செய்தியை நாவல் ஒரு புள்ளியில் சொல்லிச் செல்கிறது. நாயக்கர்களிடம் இருந்தும்., முகம்மதியர்களிடம் இருந் தும் எங்களைக் காப்பாற்றினால் நாங்கள் கிறிஸ்தவத்திற்குள் ஐக்கியமாகிறோம் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று, போரில் எதிரிகளை வீழ்த்தியதற்கு காணிக்கையாக கிறிஸ்தவத்திற்குள் கரைந்தார்கள் என்றொரு வாய்மொழி வரலாறு இத்தென்பகுதி கடற்கரைக் கிராமங்களில் புனித சவேரியாரின் பெயரால் சொல்லப்பட்டு வருவதையும் நாவல் பதிவு செய்கிறது. கடற்கரைக் கிராமத்துக் கிறிஸ்தவ திருவிழாக்களையும் கூட நாவல் அழுத்தமாக அதன் அழகியலோடு பதிவு செய்துள்ளது. தேர்த்திருவிழாக்களில் ஊர்ந்து வரும் சப்பரங்களும், அவற்றில் வீற்றிருக்கும் புனித சவேரியார், அந்தோணியார், தேவமாதா ஆகியோரின் சொரூபங்களும் ஐரோப்பிய கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் புதிதானது.

தென்குமரிக் கடற்கரையில் கோயில் கொண்டிருக்கும் கன்னியின் மீதான பரதவர்களின் நம்பிக்கை மகத்தானது. கடலையும், கடலுக்குள் மீன்பாடு அமைவதையும், பெரு வெள்ளம், ஆழிப் பேரலை இவற்றில் இருந்தும் தம்மைக் காக்கும் பெரும் சக்தியவள் என்கிற அவர்களின் நம்பிக்கையைக் கண்டறிந்ததால்தான் இங்கே கிறிஸ்த வத்தை பரப்பிட வந்த புனித சவேரியார், அவர்களுக்குள் மாதா வழிபாட்டைப் பிரபலப்படுத்தினார். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் தவிர வேறு எங்கும் யேசுவின் தாயான மேரிமாதாவைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் இல்லை. மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள், பரதவர்களின் தொல் சடங்குகள், குலமரபு, நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு அதன் வழியாகவே மதத்தையும், மத நிறுவனங்களையும் கட்டமைத்தனர் என்கிற சமூகவியல் ஆய்வினையும் நாவல் கொண்டிருக்கிறது.

தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் கலந்திருக்கிற கத்தோ லிக்க கிறிஸ்தவத் திருச்சபைகளின் மீதான விமர்சனத்தையும் நாவல் வைத்திடத் தவறவில்லை. கோயில் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கும் பரதவர்களின் வாழ்வை மேலேற்றுவதற்குப் பதிலாக திரு விழாக்கால காணிக்கையிலும் ஏலம் விடும் பொருட்களின் மூலமாக கிடைக் கும் பணத்தின் மீதும் மட்டுமே குறியாக இருக்கும் சாமியார்கள் பாலியல் மீறல்களை நிகழ்த்துவதையும் நாவல் தொட்டுச் செல்கிறது. இது மட்டுமல்லாது எல்லா மீனவக் கிராமங்களையும் ஊர்க்கட்சி, சாமியார் கட்சி என இரண் டாகப் பிரித்துப் போட்டு தனக்கு வேண்டியவர்களை மட்டும் நிர்வாகத் தில் வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்பவர்களையும் நாவல் படம் பிடித் துக் காட்டுகிறது. இந்த எளிய விமர்சனங்களை எல்லாம் அழித்து எழுதும் பேராற்றல் மிக்கவராக காகுச் சாமியார், நாவல் எங்கும் பிரம்மாண்ட ரூபம் கொள்கிறார்.

ஆமந்துறையெனும் மீனவ கிராமத்திற்கு பங்குத் தந்தையாக காகுச் சாமியார் வந்த நாள் முதல் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்கிறவராகவே வாழ்கிறார். புனித சவேரியாரின் மறு வடிவம் போலத்தான் நமக்குக் காட்சிப்படுத்தப்படுகிறார். அவரின் மீது கொண்ட பேரன்பினால்தான் நாவலாசிரியர், புத்தகத்தின் பிற்சேர்க்கையில் அவரின் முழுப் பக்க புகைப்படத்தை இணைத்துள்ளார். பலி பூசை நடத்தி விட்டு காணிக்கையை எண்ணிக் கணக்கிட்டு திருச்சபை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிற வெறும் மதப் பிரசங்கியல்ல காகுச் சாமியார் என்பதை நாவலெங்கும் நாம் கண்டுணர்கிறோம். தொம்மந்துரைக்கு விதவை மதினியைத் தாரமாக்குகிறார். விதவைத் திருமணத்தை ஆதரிக்கிறவராக மட்டும் அவரை நாம் பார்க்க முடியாது. அப்படியிருந்தால் காகுச் சாமியாரின் மரணம் நிகழ்ந்த போது ஆமந்துறையே திரண்டு போய் அவருக்கான மரியாதையைச் செய்திருக்காது. இறால் மீன் ஏற்றுமதிக்குள் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் நுட்பமான பங்கும் இருப்பதை அவர்களுடைய கடிதங்களை ஆய்வுக்குட்படுத்தினால் கண்டறிய முடியும். “ஆழிசூழ் உலகு” என்கிற இப்பெரும் படைப்பே கூட காகுச் சாமியார் சொல்கிற “நண் பர்களுக்காக உயிரை விடுறதை விட மேலான தியாகம் ஒன்றுமில்லை”ங்கிற இப்புள்ளியில் தான் சுழல்கிறது என்று நான் நினைக்கிறேன்.

ஆற்ற இயலாத பெருங்கோபம் தன்னுள் நீங்காது நிறைந்திருப்பதால் தான் ஜஸ்டின் வெட்டுண்டு கிடக்கிற போதும் அவனுடைய நெஞ்சாங் கூட்டிற்குள் மண்ணை அள்ளி நிறைக்கிறாள் வசந்தா. தன்னைத் தன் பிராயத்தில் துரத்தி துரத்தி வேட்டையாடியவன்; தன் தகப்பனைத் திட்டமிட்டு வெட்டிக் கொன்றவன் ஜஸ்டின். அவனை எப்படி எத்தனை நாளானா லும் மன்னிக்க முடியும் வசந்தாவால். விதவை மதினி அமலோற்பவத்தைத் திருமணம் செய்த பிறகு பிறந்த குழந்தை தனக்குப் பிறந்ததா, தன் அண்ணனுக்குப் பிறந்ததா என்கிற குழப்பமின்றி அன்பைக் கொட்டி பிள்ளையை வளர்க்க தொம்மந்துரையால் மட்டுமே முடியும். ஊரையே செல்வச் செழிப்பாக்கிய மிக்கேல் பர்னாந்து இலங்கையில் மரணத்திற்கு பிறகு ஆமந்துறை வந்தடைந்த அவளின் மருமகளான சாராவிற்கு சூசையார் நிகழ்த்திய மிருக குரூரத்தை எண்ணி தனக்குள் வதைபட்டு, அவளின் மகளான சிலுவையை தன் நெஞ்சில் சுமந்து வளர்ப்பதென நாவல் விதவிதமான மனித உணர்வுகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

சொல்லில் முடிவதில்லை என்ற ஒரு ஆதங்கம்

Posted by பிறவி on Sunday, February 06, 2011 , under | comments (0)




என்னைப் பொறுத்தவரை கவிதைகள் கவிஞர்களின் சிந்தனை வெளிப்பாடு. அந்த சிந்தனைகளோடு உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அந்த சிந்தனைகள் படிப்பவர்களின் எண்ணங்களில் கலந்து அவர்களை சிந்திக்க வைத்து அதன் மூலம் ஒரு செயல்திறனை உருவாக்க வைப்பதே கவிதையின் குறிக்கோளாக இருக்கமுடியும் எனத் தோன்றுகிறது.

ஒரு கவிதையின் மையப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிஞர் காதலைப்பற்றியோ, காட்சியைப் பற்றியோ, வீரத்தைப்பற்றியோ, சமூக உணர்வுகள் பற்றியோ, நாட்டுப்பற்று பற்றியோ அல்லது நகைச்சுவையாகவோ கவிதைகளை வெளிப்படுத்தலாம். அப்படி தோற்றுவித்த கவிதைகளுக்கு ஜீவனாக ஒரு காரணம் இருக்கும். அந்த ஜீவன், கவிதை படிப்பவர்களின் உணர்வில், அனுபவத்தில், சிந்தனையில் காணாமல் போயிருக்கக்கூடிய ஒரு நூலிழையை பிரித்து 'இதுதான் ' என்று தெளியவைத்து, கலந்து ஒரு சிறிய தன்னுணர்வை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் இரண்டு தளங்களில் இயங்குகிறது.
ஒன்று : கவிதை உருவாக்கத்தின் புறச் சூழ்நிலைகளையும் அவை உண்டு பண்ணும் அகச் சூழ் நிலைகளையும் பற்றியது. கவிதை உருவாகும் நேரத்தை நாம் கவிஞனருகில் நின்று கவனிக்கிற மாதிரியான அந்தரங்கத் தொனியை இந்தக் கவிதைகள் வெளியிடுகின்றன.

இன்னொன்று : இவை ஜெகதீசனின் வாழ்க்கையின் சில சிதறல்களை நமக்கு அளிக்கின்றன.

இத்துடன் ஒட்டியே ஜெகதீசனின் வாழ்க்கையில் கடந்து போகும் நபர்கள் பற்றிய வாழ்க்கைச் சித்திரமும் நடைச் சித்திரமாய் வந்து போகின்றன. கவிதையின் மூலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது அந்தக் கவிதைக்கான நம் அனுபவம் இன்னமும் விரிவடைந்து ரசனை பெருக்கம் கொள்கிறது. எல்லாக் கவிதைகளுக்கும் எல்லாக் கவிஞர்களுக்கும் இப்படிச் செய்வது சாத்தியம் தானா என்று கேள்வி எழலாம். கவிதை தன்னுள் நிறைவு கொண்டிருப்பதெனில் விளக்கங்களும், கவி மூலங்களும் தேவையா என்று ஒரு கேள்வி எழலாம். இப்படியும் கவிதையை அணுக வழியுண்டு என்பது தான் என் பதில்.

இதுவும் கடந்து போகும்
சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை

ஜெகதீசனின் கவிதைக் குரல் தனித்த குரல். எளிமையும் கைத்துப் போன மனத்தின் வெளிப்பாடும் கொண்டவை. வாழ்வனுபவங்களின் குறுக்குவெட்டுத் தோற்றமாய் எழும் அவருடைய கவிதைகள். ஆனால் பல நேரங்களில் சட்டென்று நின்று விடுவதான முழுமையின்மையைக் கொண்டதாய்த் தோன்றுவதுண்டு. இட்டு நிரப்பிக் கொள்ள அவருடைய மற்ற கவிதைகளிலிருந்தும் சில விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமோ என்னவோ.

நின்று சலித்த
நீள் பயணமொன்றில்
மென்று விழுங்கிய
பார்வையோடு நீ
விட்டுச் சென்ற
இருக்கையில்
இன்னமும்
உன் சூடு

கவிதைகள் இரண்டு வகை. விண்ணிலிருந்து மண்ணில் பொழிபவை ஒரு வகை.
ஆவேசமும், கூர்மையும் நிறைந்தவை அவை. அறிவுறுத்தும் உணர்த்தும் திறன் பெற்றவை. சமூக எழுச்சிக் காலங்களில் இடியுடன் புயலுடன் தரையிறங்கி மனிதத் திறளை தூண்டுபவை. ஆற்றல் கொள்ள வைப்பவை. ' பாரதியின் சாதி மதங்களை ப் பாரோம் போல....

இன்னொரு வகை கவிதைகள் மண்ணிலிருந்து விண் நோக்கி பாய்பவை. அழுத்தம் பெற்று இறுகிப் போன சுய அனுபவங்கள், உணர்வுகள், சிந்தனைகள், மேல் நோக்கி பீறிட்டு பாயும் போது இவ்வகைக் கவிதைகள் பிறக்கும். முன்னது பொது உணர்வைச் சமூகத்தினர் மீது பெய்து, தனிமனிதர்களின் உணர்வுகளைத் தழைக்கச் செய்யுமானால், பின்னது தனி மனித உணர்வு நிலையிலிருந்து பீறிட்டு சமூகத்தின் பொது உணர்வை தூண்டிக் கனியச் செய்யவை.
தனிவுணர்வும் பொது உணர்வும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவுபடாதவை. பிரிக்கவும் முடியாதவை.

இன்று மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் கவிதைப் போக்குப் பெருவழக்காகியுள்ளது. மண் பிளவு பட்டுள்ளது. வர்க்கம், சாதி, சமயம், இனம், மொழி, பால் என பிளவுபட்டுக் கிடக்கும் பூமியில் , எங்கோ ஒரு புள்ளியில் வேர் விட்டு மாட்டிக் கிடக்கிறது மனிதம். இந்த மாட்டுதலில் மூச்சு முட்டிப் போகும் மனிதத்தின் உணர்வுகள். விரிவு தேடி, எல்லைகள் அற்ற சுதந்திரம் தேடித் தாவும் இடம் வானமாகத் தான் இருக்க முடியும்.
வானத்துக்குத் தாவத் திராணியற்றுக் கீழ் நோக்கி மண்ணுக்குள் புதைந்து இருண்டு சுருண்டு போவோரும் உண்டு.

வானம் எல்லையற்றது. சுதந்திரமானது. இறக்கைகள் இழக்கும் வரை பறந்து திரிய இடம் தருவது. இந்த மண்ணுக்கும் விண்ணுக்குமான உணர்வின் தொப்புள் கொடியாக உயிர்ப் பாலமாக அமைவது தான் உயிர் உள்ள கவிதை.

தூக்கி எறியுங்கள்
உங்கள் தம்புராக்களை
தூளியில் உறங்கும்
சிசுவின்
உறக்கம் கலையும் முன்

ஜெகதீசன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி . அதன் அப்பட்டத்தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது. ஆனால் தமிழில் மிக மிக குறைவாக உள்வாங்கப்பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர். காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப்பட்டதோ பேசப்பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி அல்லது மனத்தெளிவு அவர் கவிதைகளின் சாரமாக உள்ளது. அது அனைவராலும் தொட்டுணரக்கூடிய ஒன்றல்ல. அபூர்வமாகவே சிலருக்கு அத்தகைய ஆழமான அமைதியின்மை உள்ளூர குடியேறி அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறது . அந்த அமைதியின்மை அங்கிருந்து அன்றாட வாழ்வின் அனைத்து தளங்களுக்கும் நகரவும் செய்கிறது .

முக்கியமான கவிஞர்களிடம் எப்போதுமே அடிப்படையான படிமங்கள் சில இருக்கும். அவற்றின் நீட்சியாகவே அவர்கள் தங்கள் உலகை கட்டியெழுப்பியிருக்கிறார்கள். ராபின் பறவை ஏன் எமிலி டிக்கன்ஸன் கவிதையில் மீண்டும் மீண்டும் வருகிறது என்ற கேள்விக்கு மிக மிக விரிவாகவே பதில் சொல்ல முடியும். வேர்ட்ஸ்வர்த்தின் நைட்டிங்கேல் புகழ் பெற்றது . அதைப்போன்றதே ஜெகதீசனின் முக்கியப் படிமங்கள் நடைபாதை, இடங்கள், பொருட்கள் என விரிகிறது.

“பிரிந்து கூடும்
கூடிப்பிரியும்
அநேகர் வரவை
கண்டிருந்தது அந்த இடம்”

“சற்று முன் நடந்த
சாலை விபத்தொன்றில்
பைக்கின் பின் அமர்த்தி
………………………….”

“அப்பா பொம்மைக்கு மத்தியில்
வரைந்த ஒரு வட்டத்தை
அப்பாவின் வயிரென்றான்”
கவிதைகள் வளமாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கவிதைக்கு வளம் எப்படிச் சேர்கிறது?

கருத்துக்களாலா, வார்த்தை ஜாலங்களாலா, உருவ வடிவங்களாலா, புரியாதபடி எழுதுவதாலா, நிகழ்கால நிகழ்வுகளைப் பிரதிபதிப்பதாலா, எதிர்கால எதிர்பார்ப்புகளைக் கனவாகக் காண்பதாலா, இறந்த காலச் சீர்கேடுகளைச் சீறுவதாலா, புதிர்களைப் போடுவதலா அல்லது விடுவிப்பதாலா, யதார்த்தங்களைப் பேசுவதாலா, யதார்த்தங்கள் என்ற பெயரில் மன அழுக்குகளைப் பகிரங்கப்படுத்திக்கொள்வதாலா ? கொஞ்சம் கொஞ்சம் எல்லாவற்றிலும் தான். எப்படி ? சில கவிதைகளைப் பார்த்தாலே விளங்கிவிடும்.

ஆத்மாநாம் ஒரு கவிதை இப்படி வருகிறது:

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆனாலும் மனதிலே ஒரு நிம்மதி

இரவில் பேய்கள்

குருட்டுக் கண்களைத் திறந்து பார்த்தால் இருட்டுதான் பிரகாசமாய்த் தெரிகிறது
செவிட்டுச் செவிகளைக் கூராக்கி முயற்சித்தால் நிசப்தம்தான் கூச்சலாய்க் கேட்கிறது
நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால் சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது
உருமாறிப் போனவன் உடல்மாறி மனம் மாறியபின்

உலகமகா யுத்தம்

ஒரு கூரைமேல் காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில் அணில் பறந்தது காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை

பொதுவாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால், கவிஞன் எழுதுவதும் வாசகன் படிப்பதும் ஒன்றல்ல. ஒவ்வொரு வாசகனின் கவித்துவ மனமும் தனக்குத்தானே வேறொரு கவிதையை எழுதிக்கொள்கிறது. கவிஞன் சொல்லக்கருதும் பொருளுக்கும் அதை வெளிப்படுத்தும் அவனுடைய சொற்களுக்கும் உள்ள உறுதியான, உண்மையான பிணைப்பு மட்டுமே வாசகனை ஈர்க்கமுடியும்.

புரிகின்ற கவிதைகளைக்காட்டிலும் புரியாத கவிதைகளே சிறந்தன என்ற கருத்துகூட நிலவுகிறது. பொருள் விளங்காமையின் காரணம் என்ன? ஞானக்கூத்தன் கூறுவார்: கவிதையில் பொருளைக் கவிதையிடம்தான் கேட்கவேண்டும். ஆசிரியனுக்குத் தெரிந்த பொருள் வாசகனுக்கு எட்டாமல் கவிதையிலேயே உறைந்துவிடுகிறது. இத்தகைய கவிதைகள் முதலில் புதிர் விடுவிக்கும் அறிவார்த்தமான முயற்சிகளையே அவாவுகின்றன. கவிதை நமக்கு எடுத்த எடுப்பிலேயே பரிச்சயமான முகத்தைக் காட்டிப் பேசுவது என்ற நிலைமையை இவை காலம் தாழ்ந்தே பெறக்கூடும்.

இன்றைய கவிதை தன் வளர்ச்சியில் புது உருவங்களைப் பெற்று வருகிறது. நீண்ட புதுக்கவிதைகள் இல்லை என்ற ஒரு காலகட்டம் இருந்தது. பேராசிரியர் அய்யப்ப பணிக்கர் தற்காலத் தமிழ்க் கவிதைகள் ஆட்டான் புழுக்கைகளைப்போல சின்னச் சின்னதாக இருக்கின்றன என்றபோது கவிஞர் ஷண்முகசுப்பையா மலையாளக் கவிதைகள் காளைமூத்திரம்போல நீண்டிருக்கின்றன என்றாராம். இன்றோ தமிழ்க் கவிதைகள் ஒருவரியிலிருந்து தொடர் காவியங்கள் வரை எழுதப்பட்டு வருகின்றன.

கார்லோஸ் காஸரெங் கூறுவார்:

கவிதையின் வரிகளுக்கிடையே
வெடிகுண்டொன்றை வையுங்கள்
வரிகளனைத்தும் சுக்கு நூறாகிச் சிதறட்டும்
பின்னர்
மேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள்
அதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்
அந்த இடிபாடுகளிலிருந்தே.
நம் கவிகள் இதைத்தான் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

முகங்கள் அவற்றின் பார்வைகள். பார்வைகள் வெளிப்படுத்தும் பயங்கள். முகங்கள் பார்வைகளில் மட்டுமல்ல, அவற்றின் பின்புலக் காட்சியின் நிர்மலமான வெற்றிடத்திலும் அச்சம் படிந்திருப்பதை உணரமுடிகின்றது. இருட்டைப் புரிந்து கொள்ளும் முயற்சி. பல நேரங்களில்:

'கருத்தை மருட்டியது கவலை
கிட்டாத கசப்பும்
நெஞ்சைக் குமட்டிவர
முகத்தின் முக்கால் பரப்பும்
இருள்மண்டி விளிம்புகட்ட
விழியை வெறுவெளியில்
குத்தி நின்றேன்.... (பொன் வேட்டை)
எனச் சொல்கின்ற கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைமுகம்.

அம்முகப்பிம்பங்கள் வெளிப்படுத்தும் அமைதியும் அபயக்குரலும் மனதில் மட்டுமல்ல உடலிலும் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டுத் தான் ஓய்கின்றன. அம்முகங்களில் ஏதோ ஒருவித இறுக்கம், நடுக்கத்துடன் விலக முயற்சிக்கும் விட்டில் பூச்சியின் இயல்பு. அச்சத்திற்கும் அமைதிக்குமிடையில் ஊசலாடும் தன்மை முகத்திரையிட்ட அனைத்து முகங்களிலும் வெளிப்படுகிறது. நடைமுறையோடு ஒட்டாத முகங்கள் அவை. உலகவாழ்விலிருந்து தப்பிக்க விழையும் சன்னியாசப் பார்வை அக்கண்களில். அம்மாதிரியான முகங்களில்தான் இவ்வுலகத்தின் இயக்கமும் முடக்கப்படுகிறது என்பதனை உணர்த்தும் புகைப்படங்கள். அனைத்துமே பதுங்கும் தன்மை கொண்ட, தப்பிக்க விழையும் முகங்கள். ஒளிவதற்கு உபகரணங்களாக முகத்திரைகள், துவாலைகள், கண்களை மறைத்த கண்ணாடிகள். அம்முகங்களுக்குள் வேற்றுமையின்றி வெளிப்படும் அபூர்வ அன்னியப் பார்வை. அப்பார்வைகளில் நிறைந்திருப்பது வெற்றிடம்- இருட்டு - சூன்யம். அப்பார்வையை பொருள் கொள்ள நமக்கு இயலாமை அல்லது விருப்பமில்லாமை. அப்பார்வைகளில் 'ஒரு தொலைநோக்கு ' இருந்திருக்கலாம். 'குறுகிய பார்வை

தவிர்த்திருக்கலாமென்பதான 'திடீர் ' அபிப்பிராயங்கள் பார்வையாளர்களுக்குத் தோன்றக்கூடும். நம் முகங்களை பற்றிய பிரக்ஞையற்று, அடுத்தவர் முகங்களில் மட்டுமே காணவிழைகின்ற எதிர்பார்ப்புகள். சூன்யத்தில், இருட்டைச் சுமந்து எதிர்காலத்தின் அவநம்பிக்கையற்றிருக்கும் பார்வை. இந்த அவ நம்பிக்கை நம்மிடமும் இருக்கிறது. இந்த அவநம்பிக்கையில் நமக்கும் பங்கிருக்கிறது. நம்மைப்போலவே அவைகளும் காத்திருக்கின்றன. நாம் எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதையும் அவை அறிந்திருக்கின்றன. வெளிச்சத்திடமிருந்து திரையிட்டு மறைந்துகொள்ளும் இக்குணத்தின் மூலமென்ன ? நெடுநாளாக கருப்பை இருட்டிற்குப் பழகிப்பழகி, திடுமென்று யோனியளித்த வெளிச்ச மிரட்சி நமது ஒளிசேர்ந்த வாழ்விற்குத் தடையாக வந்து சேர்ந்திருக்குமோ?

நமது பகுத்தறியும் வல்லமையை எப்போதேனும் இம்மாதிரியான முகங்களில், அவற்றின் பார்வைகளில் பிரயோகிப்பதுண்டா ? அம்மாதிரியான பார்வைகளில் வட்டமிடும் பயம் எவரிடம்? 'விளிம்பைத் தொட்டால் சூழலில் சிக்கிப் புதைந்து விடுவோம் ' என்கின்ற சமூக அச்சமா? எதற்காக அம்முகங்களுள் எட்டிப்பார்த்து ஒதுங்கும் பயம்?. எதற்காக இந்த விளிம்பு வாழ்க்கை? இவ்வச்சச் சூழலில் விடுபடும் எண்ணமேதும் அக்கண்களுக்கும் அவை சார்ந்த முகங்களுக்கும் இல்லையா? இவைகளுக்கான பதில் நம்மிடத்திலில்லை.

மாறாக 'முடிந்தபோதெல்லாம அகழ்ந்தெடுத்து படுகுழியின் விளிம்பில் அவர்களை நிற்கவைத்து பயம் வேண்டாம் என்றால் எப்படி ? ' என்ற கேள்வியே பதிலாக நமக்குள்.

மீட்டாத வீணை

இங்கிருந்து போயிருந்த
என்னைப் போலவே
அங்கிருந்து
அவர்கள் வந்தார்கள்
அவரவர் இடங்களைக் குறித்தே
அதிகமும் பேசிக் கொண்டிருந்தோம்
அயர்ந்து திரும்பும் வரை
தன் பொருட்டும்
ஏகும் விரல்களுக்காக
மீட்டாத வீணையென
காத்திருக்கும்
மீளாத் துயரில் அந்த இடம்.

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதைத் தொகுப்பு)
செல்வராஜ் ஜெகதீசன் - அகநாழிகை வெளியீடு
பக்கம் 64, விலை:ரூ.50.00

இருப்பினை தொலைத்து சென்றவன்

Posted by பிறவி on Friday, December 31, 2010 , under | comments (0)




சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்

நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்

என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்

நீங்கள் யாரென்று சொல்லுங்கள்

உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்

முழித்த முழி முழியையே முழுங்கும் போல

நீங்கள் யாரானால் என்ன

நான் யாரானால் என்ன

அனாவசியக் கேள்விகள்

அனாவசிய பதில்கள்

எதையும் நிரூபிக்காமல்

சற்று சும்மா இருங்கள்

சில எதிர்கால நிஜங்கள்


அரிசி மூட்டையிலிருந்து சிதறிய

அரிசி மணிகள் போல்

தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த

சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்

மொசைக் தரையில் தவறிப்போன

ஒற்றை குண்டூசி போல்

இவற்றைப் போல் இன்னும்

ஆயிரக்கணக்கான போல்கள்

பழக்கம்


எனக்கு கிடைத்த சதுரத்தில்

நடை பழகிக்கொண்டிருக்கிறேன்

கால்கள் வலுவேறின

நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று

என் நடப்பைத்

தெரிந்துகொண்ட சில மாக்கள்

விளம்பினர்

ரோட்டிலேயே நடக்க முடியவில்லை

ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்

நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா

என் கால்கள்

என் நடை

என் சதுரம்

ஐயோ

சொன்னால் மறுக்கிறார்கள்

எழுதினால் நிராகிக்கிறார்கள்

தாக்கினால் தாங்குகிறார்கள்

சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்

அற்புத உலகம்

அற்புத மாக்கள்

சுற்றி

அரச மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

வேப்ப மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

எந்த மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை இவன்

ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?


ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்த பின்னும் தன் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது ' என்றார் ஆத்மாநாம். என்னை அழித்தும் என்னை அழிக்க இயலாது என்றும் சொல்லியிருக்கிறார். அது சரிதான். அவருடைய் சாரம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அவருடன் உறவாட முடிகிறது. இந்த நேரத்தில் ஆத்மாநாமின் கவிதைகளை முழுமையாகவும் சிறப்பாகவும் பதிப்பித்து தந்திருக்கும் பிரம்மராஜனின் பணியை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

புதுக் கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு. ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர். தன் செயல்பாடுகள் குறித்தும் தான் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவருக்கு யோசனைகள் இருந்திருக்கின்றன. காலத்தின் வரிசையில் கடைசியாக தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் கவிதைகளின் பொதுக் குணத்தை பிரதிபலித்தல் இவருக்கு இயற்கையாக இல்லை. தன்னுடைய கவிதைகளை கண்டுபிடிக்கும் முயற்சியாகவே இவர் கவிதைகள் இருக்கின்றன. ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைப் போக்கை பிரதிபலித்து இவர் எழுதியுள்ள 'இன்னும் ' என்ற தலைப்பிட்ட கவிதையில்தான் இவர் சுத்தமாக இல்லாமல் இருக்கிறார். மற்றக் கவிதைகளில் - மொத்தம் 143 கவிதைகள் - இவரது ஆளுமை, பலவற்றில் மங்கலாகவும் ஒரு சிலவற்றில் மிகச் சிறப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. பிரதிபலிப்பு படைப்பாகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வாழ்நிலையில் தான் பெற்ற அனுபவங்களை கவிதை மூலம் இவர் ஆராய்ந்து கொண்டே போகிறார். தன்னை அறிந்து தன் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முனைப்பு இது. இந்த தெளிவு கூடிவரும் வகையை உணருவது இன்று சிரமமாக இருக்கிறது. இவரது கவிதைகளை கால வரிசைப்படுத்தித் தர பிரம்மராஜனுக்குச் சாத்தியப்பட்டிருக்கும் என்றால் இவர் பெற்றுள்ள வளர்ச்சியை இன்னும் துல்லியமாக நாம் மதிப்பிட்டிருக்க முடியும்.

சுதந்திரம் மனித ஆளுமைக்கு தரும் விகாசம், வாழ்நிலை சார்ந்த அபத்தங்களும் கேவலங்களும் தரும் வருத்தம், மனிதனை ஆசுவாசப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கும் இயற்கை, நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், இவை சார்ந்த உணர்வுகள் அவர் கவிதைகளில் அழுத்தம் பெறுகின்றன. தன் கவிதைகள் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் இவர். இதனால் தன் கவிதை மொழி தன் சக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதில் அவருக்கு கவனம் இருந்தது. ஏற்கும் புதுமையின் பொருள் என்ன என்பதிலும் இந்த மண் சார்ந்து அதன் பொருத்தம் என்ன என்பதிலும் அவர் கவனங்கள் கொண்டிருந்தார்.
'கவிதையை, நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.

கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.'

மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை.

பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை உமிழ்கிற (உதாரணம்: கட்டாந் தலைகள்), சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், பட்டியலிடும் கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.
'குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்', 'குட்டி இளவரசி வந்துவிட்டாள்', 'புத்தம் புதிய' எனும் தலைப்பிலுள்ள கவிதைகள், குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. குட்டி இளவரசிக்கு ஒரு கடிதத்தில், குழந்தைகளின் புனைவுலகம் சார்ந்த ஷிநீஷீஷீதீஹ் எனும் நாய் வருகிறது அல்ல வருகிறான். நாய்களின் தலைவனைக் கௌரவிக்கக் கூட்டம் நடக்கிறது. அந்தத் தலைவன் எதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் தெரியுமா, பின்னால் சுமக்கும் பையைக் கண்டுபிடித்ததற்காக.

'குட்டி இளவரசி வந்துவிட்டாள்' கவிதையைப் பார்ப்போம்: டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/ சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/ கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/ மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/ ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/ பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/ பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/ தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/ ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/ பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/ அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.

குட்டி இளவரசி நடக்கக் கற்றுக் கொண்டவள்; அநேகமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. பசிக்கு அழுதால்தான் அழுகை. வளர்ந்தவர்களின் ஒழுக்கம்/ ஒழுக்க விதிகள் அவளுக்குப் பொருந்தமாட்டா. மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுகிறாள். பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள் . . . வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?

'பூச்சுக்கள்' என்ற தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்.
வாழ்க்கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ தலை சீவி/ பவுடர் பூசி/ வெளிக் கிளம்பினேன்/ பஸ் ஸ்டாண்டில்/ என்னைப் போலவே/ ஆண்களும் பெண்களும்/ அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ அலங்கரித்து/ காத்து நின்றிருந்தனர்/ வந்து போய்க்கொண்டிருந்த/ வாகனங்களில்/ பொதுமக்கள்/ வேற்றுமை காண இயலாவண்ணம்/ உட்கார்ந்து கொண்டும்/ நகர்ந்துகொண்டும்/ பயணம் செய்துகொண்டிருந்தனர்/ என்னுடைய வாகனம் வந்துவிட்டது/ இடிபாடுகளுக்கிடையே/ நானும்/ ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/ எங்கோ ஒரு இடத்தில்/ நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/ ஒரு பூ கீழே தவழ்ந்தது.

இந்தக் கவிதையில் நகரத்தின் காலை நேரக் காட்சியொன்று தரப்படுகிறது. காலை நேரம் என்பதை எட்டிலிருந்து பத்து மணிக்குள் என்று வைத்துக்கொள்ளலாம். திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் ஏதோ ஒரு வேலை நாளாக இருக்க வேண்டும். இதில் வரும் கவிதை சொல்லி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நிற்கிறார். இவரைப் போலவே ஆண்களும் பெண்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அடையாளம் காண இயலாவண்ணம் பயணம் செய்கிறார்கள். இவரது வாகனம் வருகிறது. இவரும் ஒரு கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பெருநகரமொன்றின் வேலைநாட்களின் காலை நேரம் அதன் அத்தனை அவசரத்தோடும் அவதியோடும் கவிதைக்கான காட்சிப் பின்புலமாக நமக்குத் தரப்படுகிறது.

முதல் வரியிலிருந்தே, முதல் சொல்லிலிருந்தே கவிதை தொடங்கிவிடுகிறது. கண்ணாடியில் முகம் பார்த்து, தலை சீவி, பவுடர் பூசி, வெளிக் கிளம்பினேன் என்றாலே கவிதை சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டதை நமக்குக் காட்டிவிடலாம். ஆனால் வாழ்க்கைக் கண்ணாடி என்கிறார். நாம் ஏன் வெளியே கிளம்புவதற்கு முன் கண்ணாடி பார்க்கிறோம் கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரிகிறதா? ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம்? கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா? அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா? இப்படி வாசிக்கலாம். மற்றொரு வாசிப்பாகப் பேருந்து நெரிசலில் தவிக்கிற அதே சமயத்தில் பூமியின் வேறொரு பகுதியில் பூமி நகர்ந்து, கடல் கொந்தளிந்துவிடலாம். வேறொரு இடத்தில் தனக்குக் கீழே தண்ணீரிலோ காற்றிலோ பூவொன்று தவழ்வதைக் கவிஞர் சொல்வதாகக் கொள்ளலாம். அதாவது முதலில் சொல்லப்பட்ட சந்தடியும் இரைச்சலுமான நகரக் காட்சியின் அருகில் பூமியின் வேறெதோ இடத்தில் வேறெதோ காலத்தில் நடந்த, நடக்கப் போகிற நிகழ்ச்சியை வைத்துக் கவிதைக்கும் வாழ்வுக்கும் அழகூட்டிவிடுகிறார். இப்படியும் வாசிக்கலாம்.

இந்தக் கவிதையில் 'இடிபாடுகளுக்கிடையே' என்ற சொல்லைக் கவனியுங்கள். நெரிசல் என்ற சொல்லே பொதுவாக உபயோகத்திலுள்ள சொல், தகர்ந்த கட்டுமானங்களைப் பற்றிச் சொல்லும்போது நாம் உபயோகிக்கிற சொல் 'இடிபாடுகள்' என்பது, இப்போது மீண்டும் இந்தக் கவிதையை வாசியுங்கள்.

ஆத்மாநாமின் கவிதை உலகை மேலும் அறிவதற்கு ஏதுவாகச் சில வரிகளைப் பார்ப்போம்:

முட்டிமோதிப் பார்க்கிறது கடல்/ மணலைத் தன் நீலப் புடவைக்குள்/ சுருட்டிக்கொள்ள* உங்கள் இருப்பை நிரூபிக்க/ முத்தத்தைவிட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது . . . முத்தம்/ முத்தத்தோடு முத்தம்/ என்று/ முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்* முன்பென்றால் நினைவு/ பின்பென்றால் கனவு/ இப்பொழுதென்றால் நான்* நானும் வேறான நானும் பொய்/ நான் இல்லை* சித்திரத்திற்கு குரல் இருக்க வேண்டும்/ அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்/ பார்ப்பவன் பேச வேண்டும்/ பேச்சில் தெளிவு வற்றாதது தெளிவு/ நீங்கள் ஒவ்வொரு வரும்/ ஒரு சமவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்* எல்லோருமே/ ஒரே ஒரு புத்தகத்தைத்தான்/ படிக்கப்/ போகிறீர்கள்/ அது உங்கள் புத்தகம் தான்* இந்தக் கவிதை/ எப்படி முடியும்/ எங்கு முடியும்/ என்று தெரியாது./ திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும்/ இது முடியும்போது/ இருக்கும் (இருந்தால்) நான்/ ஆரம்பத்தில் இருந்தவன்தானா.* உதிரும்/ மலரின்/ கணிதத்தை/ என்றாவது/ யோசித்திருந்தால்/ மட்டும்/ இது புரியும்* சரக்கென்று/ உடல்விரித்துக்/ காட்டும்/ கற்றாழையின்/ நுனியிலிருந்து/ துவங்கிற்று வானம்* வயல்களுக்கப்பால் இருந்த/ சூரியன் மேலே சென்றான்/ எருமைகள் ஓட்டிச் சென்ற/ சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.

மொத்தக் கவிதைகளில் பதினைந்துக்கு மேற்பட்ட சமூக/ அரசியல் கவிதைகள் உள்ளன. ஒருவகையில் தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கான முன்னோடி என்றுகூட ஆத்மாநாமைச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகளில் நுட்பமானவையும் உள்ளன, அப்பட்டமானவையும் உள்ளன. இவ்வகைக் கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.

தூங்குபவர்களையும்/ தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களையும்/ எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்/ புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை* எனது சுதந்திரம்/ அரசாலோ தனி நபராலோ/ பறிக்கப்படுமெனில்/ அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்* மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்/ அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து* இந்த நகரத்தை எரிப்பது/ மிகச் சுலபம்/ ஒரு தீப்பெட்டி போதும் . . . ஓசைகள் குறைந்த இரவில்/ எங்கேனும் துவங்கலாம் . . . தனியொருவன் எரித்தால் வன்முறை/ அரசாங்கம் எரித்தால் போர்முறை * மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட/ அரச குமாரர்கள் . . . ஜனநாயக சர்வாதிகாரம் . . . சூழ்ந் துறங்கும்/ மனித உரிமைகள்.

இவ்வகையிலான இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்:

'நன்றி நவிலல்' எனும் தலைப்பில்: இந்தச் செருப்பைப் போல்/ எத்தனை பேர் தேய்கிறார்களோ/ இந்தக் குடையைப் போல்/ எத்தனை பேர் பிழிந் தெடுக்கப்படுகிறார்களோ/ இந்தச் சட்டையைப் போல்/ எத்தனை பேர் கசங்குகிறார்களோ/ அவர்கள் சார்பில்/ உங்களுக்கு நன்றி/ இத்துடனாவது விட்டதற்கு.

'தும்பி' எனும் தலைப்பில்: எனது ஹெலிகாப்டர்களைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் தும்பிகள்/ எனது தும்பிகளைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் வெடிகுண்டு விமானங்கள்/ எனது வெடிகுண்டு விமானங்களைப் பறக்கவிட்டேன்/ எங்கும் அமைதி/ எனது அமைதியைப் பறக்கவிட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்.

இவை மட்டுமல்ல, பல்வேறு தொனிகளில் ஏற்கனவே சொன்னதுபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, அரசியல் கவிதைகள் உள்ளன. இவ்வாறான கவிதைகளில் ஒன்று 'அவள்'. இந்த அவள் நீங்கள் நினைக்கிற 'அவள்' அல்ல, இது 1984க்கு முன்னர் எழுதப்பட்டது.

எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சகட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காண முடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறான். அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகித் தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச் சத்தம் ஒன்றும் கேட்கின்றன.

மேல் பத்தியிலுள்ளவையும் ஆத்மாநாமின் வாசகங்கள்தான். நம்மிடையே பல கவிஞர்களும் தம்மை நிறுவ முயன்று, தமக்கென்று ஒரு குறிப்பிட்ட ரீதியைத் தேர்ந்தெடுத்து, தம்மை மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கையில், தன்னையே தொடர்ந்து நிராகரித்து வந்ததால்தான் பல்வகைப்பட்ட, பல ரீதியிலான கவிதைகளை அவரால் எழுத இயன்றிருக்கிறது. தமிழில் பலவகையான கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஆத்மாநாம் ஒருவர். சரியாகச் சொல்வதானால் ஒரே ஒருவர்.

ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து Lithium, Hyportry, Largatyl, Fenargan போன்ற மருந்துகளை ஆத்மாநாம் தொடர்ந்து உட்கொண்டது தெரிகிறது. இவரது கவிதைகளில் 'ஒரு குதிரைச் சவாரி' என்கிற ஒரே ஒரு கவிதையில் மட்டுமே இந்த தனிப்பட்ட நிலைமை வெளியாகி வாசகனைத் துயருறச் செய்கிறது. எழுதுபவர்களது மன அவசங்களும் மன அலைவுகளும் மனச் சிக்கல்களும் கவிதையில் அதிகமாக எழுதப்படுகிற இந்தக் கட்டத்தில் கவிதை எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய தன்மை இது. கவிதைக்கு ஆட்படுவதற்கும் கவிதையை ஆட்படுத்த நினைப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை ஆத்மாநாம் உணர்ந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாத்திரைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொண்டுவரும் ஒருவரிடம் அவரது பெயர் கேட்கப்பட்டால், தனது பெயரைச் சொல்லக்கூட அவருக்கு நேரமெடுக்கும். ஆத்மாநாமுக்கு மனித உறவுகளிலும் சமூக வாழ்விலும் சிக்கலிருந்திருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு திடமான பரப்பில் நின்றிருந்திருக்கிறார். ஆத்மாநாம் கவிதைக்கு ஆட்பட்டவர்.

மொத்தம் நான்கே பக்கங்கள் வரக்கூடிய இவரது இரண்டு கட்டுரைகளும் பிரம்மராஜனுக்கு அளித்த நேர்காணலும் தமிழ்க் கவிதையியலுக்கு ஆத்மாநாமின் முக்கியப் பங்களிப்புகள். 'கவிதை எனும் வார்த்தைக் கூட்டம்' கட்டுரையில் எனது 'மனத்தில் தைத்த கவிதைகள்' எனத் தந்திருக்கும் கவிதை வரிகள், கவிதை பற்றிய புரிதலுக்குப் பெரிதும் உதவக்கூடியவை. இப்படி ஒரு பத்துக் கவிஞர்கள் அவர்களது மனத்தில் தங்கிய கவிதை வரிகளைத் தந்தால் அது தற்காலத் தமிழ்க் கவிதைகளின் உண்மையான வாசகருக்கு உதவக் கூடிய திரட்டாக அமையும்.

'ஆத்மாநாமைப் பற்றியும் கவிதை பற்றியும்' ஆத்மாநாம் - ஐ எனும் கட்டுரையில்:

தன்னிலிருந்து தானே விடுபடும் போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான் என்பவர், "உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்" என்று சொல்லி மேலும் "இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர், இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்று அஞ்சுகிறார்" என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தொடர்பாலா முடிந்தது? முடிந்ததா?

சூரியனோடு ஆடும் நாட்டியம்

Posted by பிறவி on Friday, October 29, 2010 , under | comments (0)





பரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வளர்ந்து மலர்ந்துள்ளது எனத் திட்டவட்டமாக கூறலாம். குறிப்பாக சொல்லப்போனால் பரத முனவர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் நாட்டியம் சிறந்த கலையாகப் பரிணமித்திருந்தது எனப் பரதரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்தே அறிகிறோம். தென்னாட்டவர்கள் தமது நாட்டியத்தில் லலிதமாகவும், இனிமையாகவும், அங்க அபிநயங்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களது நாட்டியத்தில் நிருத்தமும் (அபிநயமில்லாது ஆடல் புரிவது), கீதமும் அதிகம் காணப்படும். இன்பச் சுவையும், சிருங்காரமும் அவர்களது ஆடலில் அதிகம் காணப்படுகிறது என்று
தக்ஷிணாத்யாஸ் தாவத்
பஹு நிருத்தகீத வாத்யா: கைசிகீ பிராயா:
சதுர மதுர லலித அங்காபி நயாஸ்ச

என்று பரதமுனிவர் கூறுகிறார். இன்று பரத நாட்டியத்தில் நிருத்தம் அதிகம் இடம் பெறுவதைக் காண்கிறோம். மேலும் தென்னாட்டினர் அரங்கில் ஆட நுழையும் போது வலப்புறத்திலிருந்து வருவதை மரபாகக் கொண்டுள்ளனர் என்கிறார் பரதர். அவர்களது சொற்களில் "ன" காரம் அதிகம் பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறார். இதிலிருந்து பரதர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் நாட்டியம் தனித்த மரபு கொண்டு வளர்ந்திருந்தது என்று விளங்குகிறது.
மார்க்கி - தேசி
பரதரின் நாட்டிய சாஸ்திரம் ஓர் ஈடிணையற்ற நாட்டிய இலக்கண நூலாக மலர்ந்தது. அது தோன்றிய பின்னர் அந்நூலில் உள்ள கருத்துக்களும் மரபுகளும் ஆடல் பாணிகளும் தமிழ் நாட்டியத்தைப் பெரிதும் வளம் படுத்தின. பரதர் மரபை மார்க்கி என்றும் அந்தந்தப் பகுதிகளிலே மலர்ந்த ஆடல்களைத் தேசி என்று அழைக்கும் மரபு வளர்ந்தது. ஆதலின் தமிழ் நாட்டியத்தை, தேசி நாட்டியம் என்றும் கூறுவர்.
தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரத்தில் நாட்டியத்தைப் பற்றிய அரிய செய்திகள் அரங்கேற்றக் காதையிலும் பிற இடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. அரசன் வீற்றிருந்த நாட்டிய அரங்கில் ஆடிய மாதவி முதலில் தேசி நாட்டியத்தை ஆடி பிறகு மார்க்கி நாட்டியத்தை ஆடினாள் என்று காண்கிறோம். எந்த மொழி பேசும் பகுதியில் நாட்டியம் ஆடுகிறார்களோ அப்பகுதி மக்கள் புரிந்து கொள்ளும் மொழியையும், நாட்டியத்தையும் முதலில் ஆடி பிறகு அனைத்திந்திய நாட்டியத்தை ஆடினர் என்பது இதனால் புலனாகிறது. நாட்டிய ஆசானுக்கும், ஆடுவோர்க்கும், இசை வாத்தியம் வாசிப்போருக்கும், தமிழ் மொழியும் மரபும் தெரிந்திருக்க வேண்டும் அத்துடன் சம்ஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம்.

தமிழில் நாட்டிய நூல்கள்
தமிழ்நாட்டில் எராளமான நாட்டிய நூல்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டன. தொல்காப்பியக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் நாட்டிய நூல்கள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உண்டு. நாட்டியத்தைக் குறிக்கும் சயந்த நூல், குணநூல், பரதசேனாபதியம், பஞ்சமரபு, செயிற்றியம், முதலிய நூல்கள் தமிழிலிருந்தன. சோழர் காலத்தில் எழுதப்பட்ட பல நூல்கள் மறைந்து போயின.
கி.பி. 13ம் நூற்றாண்டில் "சங்கீத ரத்னாகரம்" என்ற நூல் சம்ஸ்கிருத மொழியில் சாரங்க தேவரால் இயற்றப் பட்டது. நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட "அபிநய தர்ப்பணம்" என்ற நூலும் தமிழ்மொழியில் 300 ஆண்டுகளுக்கு முன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
அபிநய தர்பணம் என்னும் நூலை வீரராகவய்யன் என்பவர் தமிழ்ப்படுத்தியுள்ளார். சங்கீத ரத்னாகரத்தின் மொழிபெயர்ப்புகள் பல தமிழில் இருந்துள்ளன எனத் தெரிகிறது. இதில் ஒன்று டாக்டர் உ.வே. சாமிநாதைய்யரால் சேகரிக்கப்பட்டது. மஹாபரத சூளாமணி என்ற பெயரில் இந்த நூலும், அபிநய தர்பணமும் உ.வே.சா நூலகத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இவ்விரு நூல்களில் இருந்தும் தமிழும், சம்ஸ்கிருதமும் ஒன்றோடொன்று இணைந்தே நமது நாட்டியக் கலையை வளர்த்துள்ளன என்று தெரிய வருகிறது. இவ்விரு நூல்களையும் பின்பற்றிய பல நட்டுவனார்கள் தமிழ்நாட்டில் பரத நாட்டியத்தைப் போதித்து வந்துள்ளனர். இன்று பரத நாட்டியம் என்று வழங்கும் மரபு தமிழ் நாட்டியமும், பரதர் நாட்டியமும் தமது தனித்தண்மை இழக்காது ஆனால் ஒன்றால் ஒன்று வளம் பெற்று சாரங்கத் தேவர் மரபையும் பின்பற்றி வந்துள்ள கலையே என்பதில் ஐயமில்லை.

இந்திய நாட்டில் நாட்டியக் கலையின் இலக்கணங்களை வகுத்துக் கூறும் பண்டைய பெரும் நூல் பரதரது நாட்டிய சாஸ்திரமாகும். இந்நூல் எக்காலத்தில் இயற்றப்பட்டது என்பது குறித்து கருத்து வேறுபாடு உண்டு. கிறிஸ்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்துவுக்குப் பின்னர் 2ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு காலங்களை இந்நூலுக்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் இது இயற்றப்பட்டதெனில் அதே காலத்தில் தமிழில் மிகச் சிறந்த பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை சங்க இலக்கியம் என்று கூறுகிறோம்.
சுமார் 2300 பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியம் பத்துப்பாட்டு என்றும், எட்டுத் தொகை என்றும் இரண்டு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே பாடுவதற்கும் ஆடுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் அரங்கநாத பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரப் பிரபந்தங்களை அரையர் என்போர் இன்றும் பாடி அபிநயித்து வருகிறார்கள். இது போல் தேவார, திருவாசக பதிகங்களும் நாட்டியமாக ஆடப்பட்டுள்ளன. இந்த மரபை பார்க்கும் போது பரதரது நாட்டிய சாஸ்திரம் இயற்றப்பட்ட அதே காலத்தில் சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்துமே நாட்டியமாக தமிழ் நாட்டில் ஆடப்பட்டன எனில் மிகையாகாது.
சங்க இலக்கியங்களில் பத்து பாட்டு போன்ற பாடல்கள் மிகவும் நீளமானவை. பாரிபாடல் போன்றவை நடுத்தரமானவை. அகநானூறு, ஐங்குறுநூறு போன்றவை மிகவும் சிறியவை. ஆயினும் இவைகள் அனைத்துமே நாட்டியத்திற்கு பயன்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் தெருக்கூத்து என்ற பண்டைய நாட்டிய முறை இன்றும் வழக்கில் உள்ளது.
தெருக்கூத்தில் ஒரே கதை பல இரவுகளில் நடிக்கப் படுதல் உண்டு. அது போல சங்க கால பத்து பாடல்களும் பல இரவுகளில் நடிக்கப்பட்டு இருத்தல் கூடும். மேலும் தெருக்கூத்து ஆட்டத்தில் வெறும் பாடலாக சில பகுதியும் உள்ளன. அது போல சங்க இலக்கியத்தில் காணப்படும் பாடல்களில் சில இசைப்பதற்கும், அபிநயிப்பதற்கும் சில வாசகங்களாக நடிப்பதற்கும் பயன்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களின் 2300 பாடல்களில் 80 சதவீதத்திற்கு மேல் (அதாவது 1800 பாடல்கள்) சிருங்காரச்சுவையை அடிப்படையாகக் கொண்டவை. சிருங்காரத்தை இன்பம் என்றும் "அகம்" என்றும் கூறுவர். ஆதலின் இவை நடிப்பதற்கு மிகவும் சிறந்தவையாக கருதப்பட்டன. ஒரு வாழ்கின்ற வரலாற்றுத் தலைவனுடைய சிருங்காரத்தை வெளிப்படுத்தி ஆடினால் அவனது வாழ்நாளில் மட்டும் அது சிறப்புடையதாக காணப்படும். அவன் மறைந்த பிறகு பிறர் பார்த்து ரசிக்கக் கூடியதாக அது அமையாது. ஆதலின் கற்பனைப் பாத்திரமாகவோ அல்லது தெய்வ நாயகர்களாகவோ இருந்தாலே அனைவரும் பார்த்து ரசிக்க இயலும்.
இந்த உண்மையை நன்கு அறிந்த சங்கச் சான்றோர்கள் தாம் இயற்றும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வருவோராலும் ஆடவும் சுவைக்கும் வகையிலும் இயற்றியுள்ளனர். ஆதலால் தான் அகத்துறை பாடல்களில் தலைவனது பெயரையோ தலைவியினது பெயரையோ குறிக்கக் கூடாது என்பது இலக்கணம். ஆதலால் 2000 ஆண்டுகளாக இப்பாடல்கள் அழகிய இலக்கியங்களாக வாழ்ந்து வந்துள்ளன.
சங்க இலக்கியங்களில் குறிப்பாக கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டு தொகுதிகளையும் குறித்தல் வேண்டும். கலித் தொகையில் 150 பாடல்கள் உள்ளன. இவை அனைத்துமே சிருங்காரச் சுவையை முக்கியமாகக் கொண்டவை. கலி என்பது ஆடலின் ஒரு வகையாகும். இது முக்கியமாக துள்ளல் ஓசையை சிறப்பாகக் கொண்டது. "துள்ளல் ஓசை கலி என மொழிப" என்பார் தொல்காப்பியர். ஆதலின் துள்ளல் என்பது நாட்டியத்தை குறிக்கும். இன்றும் கேரளத்தில் ஒட்டந்துள்ளல் என்று ஒரு வகை நாட்டியத்தை கூறுகிறார்கள். கலி என்பதும் நாட்டியக் கூறு ஆகும். ஆதலின் கலித்தொகை பாடல்கள் அனைத்தும் சங்க காலத்தில் நாட்டியத்திற்காக எழுதப்பட்டவை எனலாம்.

இன்று கர்நாடக இசையில் பாடல்களுக்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று ஒரு இலக்கணம் உள்ளது போல் சங்க காலத்தில் கலிப் பாடல்கள் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற 4 பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். பாடல்கள் விரிவாகும்போது கொச்சகம், அம்போதரங்கம் என்ற பகுதிகளும் சேர்த்துக் கொள்ளப் படும். அவ்வாறு அமைக்கப்பட்ட 150 பாடல்களையும் தொகுத்து கலித்தொகை என்று அமைத்துள்ளனர். இதற்கு கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் சிவபெருமானின் தாண்டவங்களை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம் என்ற மூன்று ரெளத்தர தாண்டவங்களும் இக்கடவுள் வாழ்த்தில் இடம் பெறுகின்றன. இவை ரெளத்ரச் சுவையை எடுத்து உரைத்த போதிலும் சிருங்காரச் சுவையே அடிப்படையாக இப்பாடலில் காண்கிறோம். உமை அருகில் அமர்ந்து பாணி, தூக்கு, சீர், என்று தாளம் இட்டு சிவபெருமானை அன்போடு பார்ப்பதாக இன்பச்சுவை மேலோங்க எழுதப்பட்டுள்ளது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பகுதிகளாக திணைகளாக கலித்தொகை பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம், அங்கு வாழும் மக்கள், விலங்குகள், பறவைகள், பூக்கள் முதலியன பாடலிலே இடம்பெற்று அவை சிருங்காரச் சுவையை போதிப்பவையாக இயற்றப்பட்டுள்ளன.
ஆதலின் குறவர்கள், வேடர்கள், உழவர்கள், மீனவர்கள் ஆகிய நாட்டுப்புற ஆடல்களையும் நாட்டியத்தில் கொண்டு வர இயலும். ஆதலின் கலித்தொகை பாடல்கள் புதிய புதிய கருத்துக்களில் அமைப்புக்களில் சிருங்காரச் சுவையை வெளிப்படுத்தி நாட்டியத்திற்கும் ஏற்ற மிக உயர்ந்த பாடல்களாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்கள் பெரும்பாலும் அரசர்களுடைய வெற்றி தோல்விகளையும், புற ஒழுக்கத்தையும் எடுத்துரைக்கும் பாடல்கள் ஆகும். இவற்றில் ஐந்து பாடல்கள் "குறுங்கலி" என்ற பெயரில் உள்ளன. வையாவிக்கோ பெரும்பேகன் என்ற வள்ளல் இளமையும் அழகும் நிறைந்த தன் மனைவியாம் கண்ணகியை துறந்து வேறு ஒருத்தியிடம் செல்கிறான். கண்ணகி பிரிவுக்கு வருந்துகிறாள். ஆதலின் புலவர்கள் பேகனை கண்ணகியின் துயரைப் போக்க கேட்கின்றனர். இப்பாடல்கள் சிருங்காரச் சுவையை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. பிரிவினால் ஏற்படும் சிருங்காரத்தை "விப்ரலம்ப சிருங்காரம்" என்பர். அந்த அடிப்படையில் இவ்வைந்து பாடல்களும் அமைந்துள்ளன. இவற்றை நான்கு பெரும் புலவர்களான கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பாடி உள்ளனர். இவையும் நாட்டியத்திற்காக மிக அழகாக பயன்பட்டிருக்க வேண்டும். புறநானூற்றில் வரும் பேகன் கண்ணகயின் கதை பின்னர் சிலப்பதிகாரமாக மலர்ந்தது என்பர் சிலர்.
பரிபாடல் என்ற பாடல் வகையும் சிருங்கார சுவைக்கு முதலிடம் கொடுக்கும் என உரைகளிலிருந்து அறிகிறோம். 25 பாடல்கள் இப்போது பரிபாடல் தொகுப்பில் உள்ளன. இவற்றில் 15க்கு மேற்பட்டவை சிருங்காரச் சுவையே மேலோங்கி நிற்பவை. வைகை என்ற ஆற்றை பாடுகின்ற பாடல்கள் அனைத்துமே ஆற்றைப் பின்னணியாகக் கொண்டு சிருங்காரத்தை பாடி ஆட இயற்றப்பட்டவை. அதே போல் செவ்வேள் ஆகிய முருகனைப் பற்றிய பாடல்களும் இன்பச் சுவை மேலோங்கியவையாக இயற்றப் பட்டுள்ளதைக் காணலாம். தற்காலத்தில் சிருங்காரத்தை வெளிப்படுத்த கண்ணன் ஆய்ச்சியர் ஆகியோரை மையமாகக் கொண்டே பெரும்பாலும் ஆடுகின்றனர். ஆனால் சங்க காலத்தில் முருகனே சிருங்காரத்தின் தலைவனாகச் சித்தரிக்கப்பட்டு அவனை மையமாகக் கொண்டே இன்பச் சுவையை பாடவும் ஆடவும் பெற்றதைக் காண்கிறோம். பரிபாடல்களில் உள்ள முருகனைப் பற்றிய பாடல்களும் சிலப்பதிகாரத்து குன்றக் குரவை பாடல்களும் இதைத் தெளிவாக்குகின்றன. திருமாலோ தெய்வமாகவே சிறப்பாக போற்றப்படுகிறார்.
நாட்டியத்தில் இன்பச் சுவையே எல்லா மக்களாலும் கண்டு ரசிக்கக்கூடிய சுவையாகும். இப்போது நாட்டியத்திற்கு பயன்படும் பாடல்கள் பெரும்பாலும் கடந்த ஒரு 150 ஆண்டுகளுக்குள்ளாக இயற்றப்பட்ட பாடல்களாகும். பெரும்பாலான நாட்டியக் கலைஞர்கள் இந்த பாடல்களையே மீண்டும் மீண்டும் ஆடி வருகின்றனர். ஆனால் 2000 ஆண்டுகளுக்கும் முன்னர் இயற்றப்பட்ட அருமையான சுவையான தமிழ் பாடல்கள் உள்ளன. இவை இசைப்பதற்கும் ஆடுவதற்கும் இயற்றப்பட்டவை.
நல்ல அழகிய இப்பாடல்கள் வாசனை மலர்கள் போல் நம்மிடத்தில் ஏராளமாக இருக்கின்றன. இப்பாடல்களைப் பயன்படுத்தி நமது மரபை கலையை வெளிப்படுத்த பெரும் வாய்ப்பு உள்ளது.

தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.

இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்­கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.
சதிர்நடனத்திற்கு இன்றியமையாதது வாய்ப்பாட்டு. இது கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டது. மிருதங்கம், இதற்கு ஒரு முக்கியமான பக்கவாத்தியமாகும். நட்டுவனார் ஆட்டுவிக்க உபயோகிக்கும் கைத்தாளம் நடனத்திற்கு இயக்குனர் பயன்படுத்தும் கருவியாகும். நட்டுவனார் என்பவர் குருவாகவும் மேடையில் சொற்கட்டுக்களை சொல்பவராகவும் இருக்கலாம். இந்த சொற்கட்டுகள் பாட்டுக்கு இடையேயும் கூட வரும். நட்டுவாங்கம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், முகவீணை, துத்தி ஆகியவை சேர்ந்து இதற்கு இசைக் குழுவாக விளங்கி வந்தது.

சதிரில் அணியும் ஆடைகள் பல வண்ணங்களில் இருக்கும். தங்க நிறத்தில் அல்லது தென்னிந்திய கலாச்சார வழக்கமான தங்கத்தில் கற்களை பதித்த நகைகளையே அணிவர். வெள்ளி நிறத்தில் உள்ள நகைகளை உபயோகிப்பதில்லை.

பரத நிருத்தியத்தில் முழுமையான தேர்ச்சி பெற்றால் எந்த வகையான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கலாம். பாரதத்திலும் இன்னும் வெளி நாடுகளிலும் கூட இது புகழ் பெற்று விளங்குகிறதென்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்.

மேலே கூறப்பட்டுள்ள இந்த நடனத்தின் குணாதிசயங்கள் சென்ற இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்து வரும் மரபின் அடிப்படையில் குறிப்பிட்ட விவரங்களாகும்.
கவிதை, இலக்கியம், இசை, ஆகியவற்றிலும் ஒருவனுக்கு ஈடுபாடு ஏற்படச் செய்கிறது. தலை சிறந்த நடன ஆசிரியர்கள். ஆட்டக் கலைஞர்கள் இலக்கியத்திலும் சிறிதளவேனும் ஆர்வமும் புலமையும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக. டாக்டர் பத்தமா சுப்பிரமணியத்தை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல. சிறந்த இசையமைப்பாளரும் கூட. கூடவே இலக்கிய இரசனையும் கொண்டவராகத் திகழ்கிறார். இதனை அவர் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் கம்பன் புகழ் பாடித் தமிழன்னைக்குத் தொண்டாற்றி வரும் கம்பன் கழகத்தினர் நடத்திய கம்பன் விழாவில் நிகழ்த்திய நடனக் கச்சேரி மூலம் உணர்த்தியுள்ளார்.

கம்பநாட்டாள்வாரின் இராமாயணப் பாடல்களுக்குத் தனது பாணியிலேயே நாட்டியம் அமைத்து நடித்துக் காண்பித்தது இன்றும் பார்வையாளர்களின் மனங்களில் அழியா ஒவீயமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டியத்தில் லோக தர்மி, நாட்டிய தர்மி, என்னும் இரு வகை காணப்படுகின்றன. லோக தர்மி மூலம் பத்மா சுப்ரமணியம் கம்பநாட்டாள்வாரின் பாடல்களுக்கு அபிநயம் செய்வதை நாம் மறக்க முடியாது. லோக தர்மியானது நாட்டிய தர்மியைக் காட்டிலும் மக்களைச் சென்றடைகிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது.


டாக்டர் பத்மா சுப்ரமணியம் இருபது ஆண்டுகளுக்கு முன் கொழும்பில் வந்து பரத நாட்டியம் ஆடிய பின். "பத்மாவின் பரதம் நிலைக்குமா?" என இலங்கையிலுள்ள தமிழ் தினசரிப் பத்திரிகைகள் கேள்விகளைத் தொடுத்தன. ஆனால் இன்றுவரை பத்மாவின் பரதம் நிலைத்திருக்கிறது என்பதே உண்மை.
பரத நாட்டியக் கலையானது மற்றவரின் திறமைகளைப் போற்றவும் இரசிக்கவும் தூண்டுகோலாய் அமைகிறது. மற்றவர்களிடமுள்ள திறமைகளை ஆற்றல்களை இனங்கண்டு மதித்து வாழப் பழக்குகிறது. ஒவ்வொரு கலைஞனிடமும், ஆசிரியரிடமும் ஒரு தனித்துவம் காணப்படுகிறது. ஒருவர் நடனத்தை சுத்தமாக அதாவது அழுத்தந் திருத்தமாகக் கற்பிப்பதில் கவனஞ் செலுத்தி அதில் பாண்டித்தியம் உடையவராகக் காணப்படுவார் இன்னொருவர் ஆக்கத் திறனுள்ளவராக விளங்குவார். மற்றொருவர் குழு நடனங்களைச் சிறப்பாக அமைக்கும் திறமை உள்ளவராக இருப்பார் இன்னுஞ் சிலர் நாட்டிய நாடகங்களை வெகு நேர்த்தியாக வடிவமைப்பதில் தமது சாமர்த்தியத்தை வெளிக்காட்டுவர். வேறு சிலர், மரபு வழி வந்த பரத நாட்டியத்தைப் பயிற்றுவிப்பதிலும், கிராமிய நடனங்களை வடிவமைப்பதிலும் ஆற்றல் உடையவர்களாக விளங்குகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு நடன ஆசிரியரிடத்திலும் ஒரு தனித்துவம் காணப்படுகிறது. மற்றைய ஆசிரியர்களிடமும் கலைஞர்களிடமும் காணப்படுகின்ற திறமைகளைக் கண்டு அழுக்காறடையாது அவற்றைப் போற்றிப் பெருமைப்பவதற்கு பரத நாட்டியக் கலை வழி வகுக்கிறது.

தவிர மனித ஆளுமைப் பண்புகளில் ஒன்றெனக் கருதப்படும் சொல்வன்மையை விருத்தி செய்வதற்கும் பரத நாட்டியம் உதவுகிறது. திருவள்ளுவரும் தனது குறட்பாவில்

கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாகும்
வேட்ப மொழிவதம் சொல்" (திருக்குறள்:643)

எனக் கூறியுள்ளார். அதாவது கேட்பவர்களைத் தன்னோடும் பிணைத்துக் கொள்கின்ற கவர்ச்சி உடையதாகவும் பகையுற்றவனும் தன்னை விரும்பச் செய்வதாகவும் பேசுவதே சொல்லாற்றல்.
மனித ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியம்

மனித ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியத்தின் பங்களிப்பினை நாம் ஆராயு முன். மனிதன் என்பவன் யார் என்பதையும் மனித ஆளுமைக்குரிய வரைவிலக்கணங்கள் யாவை என்பதையும் அறிந்து கொள்ளுதல் அவசியமானதாகும்

மனிதன் என்னும் சொல்லுக்கு "சிந்திக்கும் உயிரி" என்பதே கருத்து. மன் என்னும் சமஸ்க்ருத வினையடியிலிருந்து பிறந்த பதம் தான் மனிதன் என்னும் சொல். மன்- என்றால் சிந்தித்தல் என்று கருத்தாகும். ஆகவே மனிதன் என்பவன் சிந்திக்கும் வல்லமை உடையவன் என்பது தெளிவாகிறது. மனிதன் என்பவன் விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவன் என்பதனை டார்வினின் கூர்ப்புக் கொள்கை விளக்குகிறது.

ஆறறிவு உடையவன் மனிதன் எனவம். பகுத்தறியும் திறன் உடையவன் என்பதும் அறிஞர்கள் ஆராய்ந்தறிந்த முடிவாகும். ஒரு தனி மனிதனைப் பூரணமாக்குவதே கல்வியின் நோக்கம் எனின் அதற்கு நடகத்தின் பங்களிப்பு எத்தகையது என்பதை நாம் ஊகித்தறியலாம். இற்றைக்கு இரண்டாயிரத்து நானூநுறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானியான பிளேட்டோ என்பவர் "இசை நடனம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவனே கல்விமான்" ஆவான் எனக் கூறியுள்ளார்.

"கல்வி என்பது குழந்தைகளிடமிருந்து முழூ மனிதனை வெளிக் கொணர்வது. முழூ மனிதனை உருவாக்குவது அவனுடைய ஆளுமை. எனவே மனிதனி உடல், உள்ளம், ஆன்மா, இருதயம் என்பவற்றை ஒருமித்த வகையில் விருத்தி செய்து ஆளுமையடையச் செய்வதே கல்வியின் பயனாகும்" என்பதே காந்தியடிகளின் கல்வித் தத்துவ விளக்கமாகும்.
பரத நாட்டியம் தனி மனிதனின் ஆளுமையை விருத்தி செய்வதற்கு எவ்வளவு; வழி முறைகளில் அனுசரணையாக அமைகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஆளுமைக்குரிய வரைவிலக்கணத்தையும், ஆளுமைப் பண்புகளையும். ஆளுமையை எவ்வாறு அளவிடலாம் என்பதையும் அறிந்து கொள்வது பொருத்தமாகும்.

ஆளுமை என்பது ஒருவருடைய தோற்றம். மனப்பாங்கு தலைமை தாங்கும் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது எனலாம். மேலும் ஒரு தனிநபரிடம் காணப்படும் எல்லா குணங்களும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்ததுதான் ஆளுமை எனவுங் கூறலாம். அதாவது ஒவ்வொரு தனி மனிதனும் திறமை. அடைவு ஆகியனவற்றில் மாத்திரமன்றி, மன எழுச்சி, கவர்ச்சிகள், மனப்பான்மைகள், பற்றுக்கள் ஆகியனவற்றிலும் வேறுபடுகின்றான். இவ் இயல்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான தன்மையே ஒருவனின் ஆளுமையாகும்.

ஆளுமை பற்றிக் கல்விமான்களும், உளவியலாளர்களும். அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களை நோக்குவோம்.

ஆளுமை பற்றிய வரைவிலக்கணங்களில் அதன் தனித்துவம். அமைப்பு, முழுமை ஆகிய இயல்புகள் வலியுறுத்தப்படுகின்றன. ஒரு சமூக நிலைமைக்கு ஒருவனுடைய அகம் கொண்ட உடல்-உள்ளத் தூண்டற் பேறுகளின் ஒருமையான அமைப்பே ஆளுமை என்று பேர்ட் என்னும் கல்வியியலாளர் கூறியுள்ளார்.
"ஒருவன் தனது சூழலுடன் கொண்ட தனியான பொருத்தப்பாடுகளை அவனுடைய அகத்தினுள் தீர்மானிக்கும் உளவியல் முறைகளின் அமைப்பே ஆளுமை என்று ஆல் போர்ட் என்னும் உளவியலறிஞர் கூறியுள்ளார். அதாவது சூழலுக்குத் தக்கவாறு இசைவாக்கம் அடைந்த உளத்தொகுதிகளின் ஒரு இயக்க நிலையே ஆளுமை ஆகும் என்பதே அவருடைய கருத்தாகும்.

ஒருவரிடம் காணப்படும் பற்றுணர்வும் சமூக மனப்பான்மையும் சேர்ந்த அடுக்கமைப்பும் ஆளுமையாகும் என செறில் என்னும் அறிஞர் கூறுகிறார்.

ஒருவனுடைய நடத்தைகள், மனப்பான்மைகள், திறமைகள், நாட்டங்கள் ஆகியவற்றின் தனியான ஒருங்கிணைப்பே ஆளுமை என்பதே மண் என்னும் அறிஞரின் கருத்தாகும். அதாவது ஒருவனுடைய அமைப்பு. பழக்க வழக்கங்கள். ஆர்வம், ஆற்றல், மனப்பாங்கு, உளச்சார்வு ஆகியவற்றின் மிக லயமான ஒரு ஒருமைப்பாடே ஆளுமையாகும் என்பதே இவரது கருத்து.

பொறுப்புணர்ச்சி, நேர்மை, நல்லொழுக்கம், பரந்த மனப்பான்மை, உறுதியான சிந்தனை, முகமலர்ச்சி, நல்ல சமூக இசைவுகள் ஆகியவற்றை எவன் ஒருவன் உடைத்தாய் இருப்பானோ அவனே முதிர்ந்த ஆளுமையை உடையவன் என மதிக்கப்படுவான்.

இக் கூற்றுகளின்படி ஆளுமையைப் பல காரணிகள் கட்டு;ப்படுத்துவதால் எந்த இருவரிடையேயும ஒரே விதமான ஆளுமை காணப்படு;வதில்லை. இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த குழந்தைகளில் கூடஇ சுறுசுறுப்பு வாயாடித்தன்மை. கோபம் இ கவலை முதலிய உணர்வுகள் விவேக ஈவு ஆகிய இயல்புகளில்; ஆளுமை வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இனி, ஒரு தனி மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியத்தின் பங்களிப்பு பற்றி நோக்குவோம்.

பரத நடனக் கலையானது ஒருவனின் உடைலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தாளத்திற்கேற்ப பாதங்கள் நர்த்தனம் செய்வதும் ஒரு கட்டுக் கோப்புக்குள் தான் நடைபெறுகிறது. இதனைத்தான் லயம் என்கிறோம். லயத்துடன் ஆட வேண்டும் என்றால் உள்ளமும் லயித்துப் போக வேண்டும். மனமானது உடலைக் கட்டுப்பா ட்டிற்குள் வைத்திருக்கும். ஆகவே, இவ்விரு அம்சங்களிலும் நடனம் ஒருவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவுகிறது எனில் மிகையாகாது.

தவிர, ஆற்றல்களை விருத்தி செய்து ஒருவனின் ஆளுமையை வளர்ப்பதற்கு பரத நாட்டியம் எவ் எவ் வகைகளில் உதவி புரிகின்றது என்பதை ஈண்டு நோக்குவோம். ஆற்றல்கள் பலவகைப்படும். அவற்றுள், அறிவு, திறன், முதலியவற்றிலும் கற்பனை, சிந்தனை, செயற்பாடு, தலைமைத்துவம், நினைவாற்றல், வீரம் நெறியாள்கை போன்றவற்றிலும் ஒருவனிடத்தே காணப்படும் ஆற்றல்களை பரதம் வளர்க்கிறது.

ஆற்றல்கள் பலவகைப்படும். அவற்றுள், அறிவு, திறன், முதலியவற்றிலும் கற்பனை, சிந்தனை, செயற்பாடு, தலைமைத்துவம், நினைவாற்றல், வீரம் நெறியாள்கை போன்றவற்றிலும் ஒருவனிடத்தே காணப்படும் ஆற்றல்களை பரதம் வளர்க்கிறது.

மத அடிப்படைவாதம்,ஜனநாயகம்,பயங்கரவாதம்:அடிமைவாதத்தின் கோரமுகங்கள்

Posted by பிறவி on Tuesday, August 31, 2010 , under | comments (0)





றியாத் மாநகரில் வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் குடியிருப்பு அது. சகல வசதிகளையும் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடங்களைச் சுற்றி நாற்புறமும் ஆளுயர மதில்கள். அங்கே வசிப்பர்கள் அனைவரும் அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிக சம்பளம் வாங்கும் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். சாதாரண மனிதர்கள் எவரும் அந்தக் குடியிருப்புப் பக்கம் செல்லமுடியாது. நேரம் இரவு 11.20 மணி. வரப்போகும் ஆபத்தை உணராத குடியிருப்பைப் பாதுகாக்கும் வாயிற்காவலர்கள், தம்மை நெருங்கிய அமெரிக்கத் தயாரிப்புக் காரைக் கண்டு அசட்டையாக இருந்தார்கள். திடீரெனக் காருக்குள் இருந்தவர்கள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். ஒரு நிமிடத்திற்குள் காவலரண் தாக்குதல் செய்பவர்களின் வசமானது. தொடர்ந்து நுளைவாயில் கதவு திறக்கப்பட்டது. இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த ட்ரக் வண்டியொன்று விசையுடன் ஓடிச்சென்று அடுக்குமாடிக் கட்டடமொன்றுடன் மோதியது. காதைச் செவிடாக்கும் பயங்கர வெடிச்சத்தம் மாநகரின் உறக்கத்தைக் கலைத்தது. இவ்வளவும் 15 நிமிடத்திற்குள் நடந்தேறின.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இந்தத் தாக்குதல் மேற்குலக நாட்டு பிரசைகளை நோக்கிக் குறிவைத்ததாகத் தோன்றும். இருப்பினும் இம்முறையும் சர்வதேசச் செய்தி ஊடகங்களால் ஒரு முக்கிய உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அமெரிக்கக் கம்பனிக்குக் குறிவைக்கப்பட்ட விடயம் பலருக்குத் தெரியாது. "வினெல் கோப்ரேஷன்" என்ற சவூதி அரேபிய இராணுவத்தைப் பலப்படுத்த வந்துள்ள தனியார் வர்த்தகப் பாதுகாப்பு நிறுவனம்தான் தாக்குதல்காரரின் இலக்கு.

"வினெல் கோப்ரேஷன்" தொடக்கத்தில் அமெரிக்க லொஸ் ஏஞ்ஜலஸ் பகுதியில் அணைகட்டும் பணிகளில் ஈடுபட்டது. பின்னர் தனது வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கோடு இராணுவ வர்த்தகத்தில் இறங்கிவிட்டது. சீனாவின் உள்நாட்டுப்போரில் சியாங்கை சேக்கின் பாஸிச இராணுவத்திற்கு ஆயுதத் தளபாட உதவி வழங்கியது. வியட்னாம் போரின்போது இராணுவ நோக்கத்திற்கான அமெரிக்க இராணுவத்திற்கு விமான நிலையங்களைக் கட்டிக்கொடுத்தது. கிரெனெடாவில் சி.ஐ.ஏ உடன் சேர்ந்து கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட இடதுசாரிப் பிரதமரின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தது. தொண்ணூறுகளில் மிகப்பெரிய பாதுகாப்பு வர்த்தக நிறுவனமான "கார்லைல் குறூப்", "வினெல் கோப்ரேஷன்" ஐ வாங்கியது. தாய் நிறுவனமான கார்லைல் குறூப்பின் தலைவர் பிராங் கார்லூச்சி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ரீகனின் செயலாளராகப் பதவி வகித்தவர். இன்றைய ஜனாதிபதி புஷ் ன் குடும்பத்திற்கும் இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

"வினெல் கோப்ரேஷன்" சவூதி அரேபியாவில் என்ன செய்கிறது ? இந்த நிறுவனம் சவூதி அரேபிய அரசுடன் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. வேலை ? எண்ணைக் கிணறுகளபை; பாதுகாப்பது, சவூதி அரேபிய இராணுவத்திற்குப் பயிற்சி ஆலோசளை வழங்குவது, மன்னர் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்குவது... நேரடியாகச் சொன்னால், இக் கம்பெனி ஒரு கூலிப்படையாக சவூதி அரேபியாவில் தொழிற்படுகிறது. தனது சொந்தப் பிரஜைகளை நம்பாத சவூதி மன்னர் கடந்த இருபத்தைந்து வருடங்களாக வினெலை தனது நம்பிக்கைக்குரிய பாதுகாப்புப் படையாக வைத்துக்கொண்டுள்ளார். 1979 ம் ஆண்டு (ஈரானால் தூண்டப்பட்ட) கிளர்ச்சியாளர்கள், மெக்காவில் வருடாந்தம் இடம்பெறும் புனித யாத்திரையைப் பயன்படுத்தி, மெக்கா பெரிய பள்ளிவாசலை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மன்னரின் உத்தரவின்பேரில் கலகத்தை அடக்க வினெல் கூலிப்படை மெக்கா சென்றது. ஆயிரக்கணக்கான கலகக்காரரை கொன்று குவித்தது. இந்தச் சம்பவம் அன்று உலக நாடுகளின் கண்களை, காதுகளை எட்டாவண்ணம் மறைக்கப்பட்டது. ";இன்னொரு ஈரான்" உருவாவதைத் தடுப்பது முக்கியம் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரீகன் படுகொலைகளை நியாயப்படுத்தினார்.

ஈரான் என்னதான் மத அடிப்படைவாத அரசாக இருந்தபோதும், சவூதி அரேபியாவின் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத ஆட்சியின் தீவிரத் தன்மையளவிற்கு இல்லை. விமான நிலையச் சுங்கப்பரிசோதனையின் போது, சாதாரண சினிமாச் சஞ்சிகையின், கவர்ச்சி நடிகைகளின் படங்கள் மீது கறுப்பு வண்ணம் பூசப்படும், பிற மதத்தவர்கள் தமது வீட்டில் கூட தெய்வ உருவப்படங்களை வைத்திருப்பதற்குத் தடை, பெண்கள் வாகனம் ஓடத்தடை, பேரூந்து வண்டிகளில் பெண்களுக்கெனப் பின்புறத்தில் ஒதுக்கப்பட்ட தனியான இடங்கள், பூங்காக்களில் ஆண்களுக்கு மட்டும் அல்லது குடும்பங்களுக்கு மட்டும் என வேறுபாடுகள் கொண்ட இட ஒதுக்கீடு, பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட உயர்கல்வியும் , வேலைவாய்ப்பும், நாடுமுழுவதிலும் எந்த இடத்திலும் சினிமா இல்லை, மதுபானத் தடை, சட்டவிரோதமாக மதுதயாரிப்போரின் சிறையடைப்பு, களவுக்குக் கைவெட்டுதல், கள்ள உறவு வைத்த பெண்களைச் சந்தியில் வைத்துக் கல்லால் எறிந்து கொல்லுதல் போன்றவையெல்லாம் சவூதி அரேபியாவின் சாதாரண விடயங்கள். இந்நாடு எத்தனை தூரம் மத அடிப்படைவாதத்தில் ஊறியுள்ளதென்பதற்கான சில சான்றுகள் இவை.

சவூதி அரேபியாவில் "ஜனநாயகம்" , "சுதந்திரம்" போன்ற சொற்களைப் பாவிப்பதே குற்றம் என்று சொல்லுமளவிற்குச் சர்வாதிகார ஆட்சி நிலவுகிறது. மன்னர் குடும்பம்தான் ஜனாதிபதி, மந்திரிகள், பாராளுமன்றம், அரசாங்க அதிகாரிகள் எல்லாம். (மன்னரின் நூற்றுக்கணக்கான மனைவிமாருக்குப் பிறந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் போதும் முழு நாட்டையும் நிர்வகிக்க). சாதாரண குடிமக்கள் உழைத்துச் சாப்பிடும் வேளை, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சும்மாவிருக்க அரசாங்கம் பணம் கொடுக்கிறது. ஈராக்கில் சதாம் கட்டிய ஒரு டசின் மாளிகைகளைப்பற்றி உலக நாட்டுப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளின. ஆனால், சவூதி மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான இருபதிற்கும் குறையாத ஆடம்பர மாளிகைகள் பற்றி யாரும் கதைப்பதில்லை. முன்னாள் மன்னர் பஹ்த் கடைசியாக ஸ்பெயினுக்கு உல்லாசப் பிரயாணம் போனபோது தன்னோடு 50 பென்ஸ் கார்களையும் 350 சேவகர்களையும் எடுத்துச்சென்றார்.

இவ்வளவிருந்தும் சவூதி அரேபியாவை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை ஏன் எந்தவொரு செய்தி ஊடகமும் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத, சர்வாதிகார ஆட்சியாளர்களைப்பற்றி அறிவிப்பதில்லை? எல்லாம் சவூதி அரேபியா மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியென்ற காரணத்தால்தான். பெரும்பாலான சவூதி அரேபியாவின் இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. அதேபோல பெருமளவு எண்ணை ஏற்றுமதியாகுவதும் அமெரிக்காவிற்குத்தான். (சவூதி அரேபியா உலகிலேயே முதலாவது எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடு). மத்திய கிழக்கில் பெருமளவு அமெரிக்க ஆயுதங்களை, யுத்த விமானங்களை சவூதி அரேபியா வாங்கிக் குவித்து வருகின்றது. மலிவு விலையில் எண்ணை வாங்கும் அமெரிக்கா, பின்னர் ஆயுத விற்பனை மூலம் "பெற்றோலிய டொலர்களை" திரும்பப் பெற்றுக்கொள்கிறது.

1991 ம் ஆண்டு வளைகுடாப் போர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. யுத்தத்திற்கான செலவில் கணிசமான பகுதியை சவூதி அரேபியா பொறுப்பெடுக்கவேண்டுமெனக் கூறியது அமெரிக்கா. மில்லியன் டொலர்களை விழுங்கிய போர்ச் செலவுகள் சவூதிப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே எழுபதுகளின் மத்தியில் உருவான உலக பொருளாதாரப் பின்னடைவு வேறு சேர்ந்துகொண்டது. இதுவும் போதாதென்று (மேற்குலக நாடுகளால் வற்புறுத்தப்பட்ட) எண்ணை விலையிறக்கம் ஏற்றுமதி வருமானத்தைக் குறைத்தது. விளைவு ? வேலைவாய்ப்புகள் குறைந்தன, மாதாந்த வருமானம் குறைந்தது, சலுகைகள் நிறுத்தப்பட்டன. 1980 ல் ஒரு தனிநபரின் சராசரி வருட வருமானம் 28000 டொலர்களாக இருந்தது. இது அன்றைய அமெரிக்கரின் வருமானத்திற்குச் சமமானது. இன்று சவூதி அரேபிய தனிநபர் வருமானம் 7230 டொலர்களாகக் குறைந்துவிட்டது. இதேநேரம் அமெரிக்காவில் இவ்வருமானம் 34100 டொலர்களாக உயர்ந்துவிட்டது. விரைவான சனத்தொகைப் பெருக்கமும் பெருநகரங்களை நோக்கிய இடப்பெயர்வும் நிலைமையை மோசமடைய வைத்தது. இன்று சவூதி அரேபிய அரசாங்கம் 55 பில்லியன் டொலர்களுக்குக் கடனாளி என்றால் நம்புவது கடினமாகத்தானிருக்கும்.

சவூதி அரேபியாவில் வறுமை என்பது சில வருடங்களுக்கு முன்பு கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கமுடியாத விடயம். அங்கே வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் தொகை 20 வீதமாக இருக்கலாம் எனப் புகலிடத்தில் அரசியல் நடாத்தும் எதிர்க்கட்சி ஒன்று தெரிவித்தது. தலைநகரம் றியாத்திலும், ஜித்தாவிலும் சில பகுதிகள் ஏழைகள் வாழும் சேரிகளாகக் காட்சியளிக்கின்றன. திருட்டு, போதைப்பொருட்பாவனை என இன்னபிற குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. தெருவோரங்களில் பிச்சையெடுக்கும் பெண்களைக் காண்பது சாதாரணமாகிவிட்டது. இருப்பினும் குறிப்பிட்ட சேரிப்பகுதிகளினுள் வெளியிடத்து ஆட்கள் போவது இலகுவானதல்ல. நிலைமையைப் பார்க்கப்போன பத்திரிளையாளர்களைத் தடுத்து பொலிஸ் திருப்பியனுப்பியுள்ளது. உதவி நிறுவனத்தின் சார்பிலும் யாரும் அங்கு செல்லமுடியாது.

பல வருடங்களுக்கு முன்பு பிற அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியதால் பிரஜா உரிமை பெற்றவர்களின் பிள்ளைகள், விவாகரத்துப் பெற்ற அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தொழிற்தேர்ச்சி பெறாத சவூதிப் பிரஜைகள் ஆகியோரே அதிகமாக வறுமையில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சனைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேலையில்லாதோர் தொகை 8 வீதம். ஆனால், உண்மைத் தொகை 25 வீதமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. வருடந்தோறும் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு, இரண்டு மடங்கு பேர் விண்ணப்பிக்கின்றர். இப்படியான நிலையிலும் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டவரைத் தொடர்ந்தும் வேலைக்கு வைத்திருக்க விரும்புகின்றன. ஒரு சவூதிப் பட்டதாரி 800 டொலர்களை மாதச் சம்பளமாகக் கேட்டால் அதே வேலையை அனுபவமிக்க இந்தியப் பட்டதாரி 400 டொலருக்குச் செய்யத் தயாராகவிருப்பதுதான் இதற்குக் காரணம். ஒரு சவூதிப்பிரஜை தன்னுடைய குடும்பத்தையும் பராமரிக்கவேண்டிய நிலையிலிருக்கிறான். மேலும் வேலையில்லாப் பிரச்சினை காரணமாக ஆண்களுக்குத் திருமணமாவதும் தள்ளிப்போடப்படுகின்றது. அங்கே மணம் முடிக்கவேண்டிய ஆண், சீதனம் கொடுக்கவேண்டுமென்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். இன்னொரு பக்கத்தில் துப்பரவுத் தொழில் போன்றவற்றைச் செய்யும் அடிமட்டத் தொழிலாளர்கள் இப்போதும் வெளிநாட்டவர்கள் தான். அவர்கள் மாதாந்த வருமானம் 80 டொலர்களாகும். அத்தோடு எந்தவிதத் தொழிலாளர் நல உரிமையுமற்று அவர்கள் சுரண்டப்படுகின்றனர். சவூதி அரேபிய அரசு தனது உழைப்பாளர் வர்க்கத்தை இவ்வாறு தந்திரமாகப் பிரித்து வைத்துள்ளது.

இதுவரை கூறப்பட்ட பின்னணியின் அடிப்படையிலேயே சவூதி அரேபியாவில் அல்-கைதாவின் வளர்ச்சியைப் பார்க்கவேண்டும். எண்பதுகளில் "சர்வதேசக் கம்யூனிசத்தை" எதிர்த்த அணியில் சவூதி அரேபியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. உள்நாட்டுப் பிரச்சனைகளை மறைக்க தனது நாட்டு இளைஞர்களை ஆப்கானிஸ்தானுக்கு சோவியத் இராணுவத்தை எதிர்த்துப் போராட அனுப்பி வைத்தது. கடைசியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் (பனிப்) போர் முடிந்து நாடு திரும்பியவர்களுக்கு, அமெரிக்க அடிவருடி மன்னரின் ஊழலாட்சி கண்ணுக்குப் புலப்பட்டது. அப்போது ஆரம்பித்ததுதான் அல்-கைதாவின் சவூதி அரேபிய விடுதலைப் போராட்டம். ஆடம்பரமாக வாழ்ந்து, ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் மன்னர் "முஸ்லீம் அல்ல, மக்களின் எதிரி" என அல்-கைதா அறிவித்தது. வறுமையில் வாடிய வேலையற்ற இளைஞர்கள் அல்-கைதாவினால் கவரப்பட்டனர். இன்று சவூதி அரேபியாவில் சுதந்திரமான தேர்தல் நடாத்தப்பட்டால் பின்லாடன் ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ளதை எதிரிகளும் ஒப்புக்கொள்கின்றனர்.

2001 செப்டம்பர் 11 ல் நிகழ்ந்த நியூ யோர்க் தாக்குதலுடன் உடனடியாக ஆப்கானிஸ்தான் தொடர்புபடுத்தப்பட்டது. விமானக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் சவூதி அரேபியப் பிரஜைகள் என்ற விடயத்திற்கு அன்று யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தத் தாக்குதலில் அல்-கைதா தான் பொறுப்பு என்பது, இதுவரையும் உறுதியாகத் தெரியாவிட்டாலும், செப்டம்பர் 11 க்கும் பிற்பாடு, சவூதி அரேபியாவில் அல்-கைதாவிற்கு ஆதரவு பெருகியுள்ளது, மறுக்கவியலாத உண்மை. இதற்கு அமெரிக்க அரசின் சர்வதேச அளவிலான பிரச்சாரமும் காரணமாக இருக்கலாம். சவூதி ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தபோதும் அவர்களைக் குறிவைக்கும் தாக்குதல்களை பின்லாடன் ஆதரிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இருப்பினும், சவூதி அரசாங்கம் அல்-கைதாவை அடக்குவதில் தீவிரம் காட்டுகிறது. (பார்க்க: அறிக்கை 17- ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம்).

"சவூதி அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்குவதில் தீவிரம் காட்டவில்லை. றியாத் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை" என்று அமெரிக்க அரசு அறிவித்தது. இந்தக்கூற்று நகைப்பிற்கிடமானது. ஏனெனில் உலகில் சவூதி அரேபியாவிற்கு நிகரான சர்வாதிகார ஆட்சியை காண்பதரிது. அங்கே அரசியல் நிர்ணயச்சட்டம் எதுவும் கிடையாது. மன்னர் சொல்வதுதான் சட்டம். அப்படியான நிலையில் அரசுக்கு எதிராகக் கதைப்பதற்குக் கூட யாரும் துணியமாட்டார்கள். மேலும் றியாத் தாக்குதலுக்கு இலக்கான வினெல் நிறுவனம் சவூதி அரசின் முழுப்பாதுகாப்பையும் பொறுப்பெடுத்திருந்தது. இப்போது யார் யாரைப் பாதுகாக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் போரின் பின்னர் அல்-கைதாவை அடக்கிவிட்டோம் என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்த பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்திருப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அண்மையில் முடிந்த ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போர் அந்தப் பிராந்தியத்தில் எதிர்விளைவுகளை உண்டாக்குமென்பது, மத்தியகிழக்கு அரசியலை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகைகளில் கூட இது பற்றி விமர்சனக் கட்டுரைகள் வந்திருந்த போதும், சாதாரண அமெரிக்கர்கள் தம் நாட்டுப் பத்திரிகைகள் கூடவா வாசிப்பதில்லை எனப் பலர் வினவுமளவிற்கு நிலைமை இருக்கிறது. உண்மையில் தன்நாட்டு மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமெரிக்க அரசின் வெளிநாட்டு அரசியல் போக்கு இன்னமும் மாறவில்லை. சாதாரண அரபுமக்கள் அமெரிக்க முதலாளித்துவத்தை அல்ல அதன் வெளிவிவகாரக் கொள்கைகளையே எதிர்க்கின்றனர்.

இருப்பினும் அமெரிக்க அரசின் வெளிவிவகாரக் கொள்கையும் முதலாளித்துவப் பொருளாதாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை என்பது மத்திய கிழக்கு அரபுக்களுக்கு புரிய இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். ஆனால், சித்தாந்த ரீதியாகச் சீரமைக்கப்படாத தன்னெழுச்சியான எதிர்ப்பியக்கங்கள் வளர்ந்து வருகின்றன. அவைகள் "பேசும் மொழி" இஸ்லாமாக இருப்பதனால் பிறருக்கு இதைப்புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் அரபு நாடுகளின் அரசாங்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லாவகையான எதிர்ப்பையும் முறியடித்த பின்னர், மக்களுக்குத் தனது எதிர்ப்பை காட்ட இருக்கும் ஒரே வழி மதம் மட்டும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளூர் சந்தைகளில் வந்து குவியும் மேலைத்தேச நுகர்பொருட்களின் தாக்கம் உருவாக்கும் எதிர்விளைவுகள் அளவிடமுடியாதவை. உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் வீழ்ச்சி அதனைச் சார்ந்திருக்கும் மக்களின் வருமானத்தைப் பாதித்து வறுமைக்குத் தள்ளிவிடுகின்றது. மேலும் உள்நாடு உற்பத்திகள் அந்தப்பிரதேச மக்களின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. இதற்கு மாறாக மேற்கத்தைய பாவனைப் பொருட்கள் கலாச்சாரச் சீரழிவை உருவாக்குகின்றன. குறிப்பாக, அமெரிக்கா தனது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக பிறநாட்டுக் கலாச்சாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டித்தான், ஈரானிய மத அடிப்படைவாதத் தலைவர் கொமெய்னி "அமெரிக்கா பெரிய சாத்தான்" என்று கூறினார். அதாவது சாத்தான் மக்களின் மனதை மயக்கி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

இஸ்லாமிய ஆயுதபாணி இயக்கங்கள் மோசமடையும் சமூகப் பிரச்சினைகளை தமது கண்ணோட்டத்தில் பார்க்கின்றன. வறுமையை ஒழிக்க, அந்நியக் கலாச்சார ஆதிக்கத்தைத் தடுக்க முழு முஸ்லீம்களினதும் தேசியவிடுதலைப் போராட்டமே சரியான பாதை என்று போதிக்கின்றன. இதனால் இஸ்லாம் மூலம் தமக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்பும் குறிப்பாக வேலையற்ற, வறிய இளைஞர்கள் தீவிரவாத அரசியலால் கவரப்படுவதில் வியப்பில்லை. மொரோக்கோவிலுள்ள கஸாபிளாங்கோவில் நடந்த தாக்குதலைச் செய்தவர்கள் அனைவரும் மாநகர சேரிப்பகுதிகளிலிருந்து வந்த வறிய இளைஞர்கள் என்பதை அரசே தெரிவித்தது.

அடிப்படை வசதிகள் இன்மை, வேலைவாய்ப்பு இன்மை, வறுமை என்பனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் விளைநிலங்கள். அதனால் பயங்கரவாதத்திற்கெதிராக போர் புரிபவர்கள் முதலில் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என இதுவரை பலர் கருத்துக் கூறியுள்ளனர். பிரான்ஸில் நடந்த உலகப் பணக்கார நாடுகளின் G 8 மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்த சமூக ஆய்வு நிறுவனமொன்று உலகில் பல உள்நாட்டு யுத்தங்களுக்குக் காரணம் இனங்களுக்கு அல்லது மதங்களுக்கு இடையிலான மோதலல்ல, மாறாக வறுமைதான் அடிப்படையென்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை பல மேலைத்தேய (ஆளும் வர்க்க சார்பு) அறிஞர்களின் கருத்துகளை நிராகரிக்கின்றது. பல்வேறு இனங்கள், மதங்கள் தமது கலாச்சார ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒன்றோடொன்று மோதுகின்றன. " கலாச்சாரங்களின் மோதல்" (?) அல்லது ஜனநாயகமின்மை என்பவையே இன்றைய யுத்தஙகளுக்குக் காரணமென்பது மேற்கத்தைய புத்திஜீவிகள் எம்மீது திணிக்க விரும்பும் கருத்து.

"சவூதி அரேபியா ஜனநாயக நாடானால், அவர்கள் எம்முடன் ஒத்துழைக்கமாட்டார்கள்." என்று வெளிப்படையாகவே கூறினார் அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர். பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு ஆயுத உதவி செய்வது எந்த வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை. ஈரானில் இவ்வாறான போக்கு கடைசியில் இஸ்லாமியப் புரட்சிக்கு வித்திட்டது. சவூதி அரேபியாவில் அப்படியொரு நிலைவந்தால் அந்நாட்டு அரசியற் தலைமையை எதிரியாகக் காட்டிவிட்டு, அமெரிக்க இராணுவம் நேரடியாகத் தலையிடும். பனாமா, ஈராக் எனத் தொடரும் வரிசையில், நாளை சவூதியும் இணையலாம்.