Wednesday, June 29, 2011

தமிழின் முதல் திரைப்படம்














நான் பொதுவாக சினிமாக்களுக்கு மதிப்புரையோ,விமர்சனங்களோ எழுதுவது குறைவு தான்.ஆனால் ஆரண்ய காண்டம் திரைப்படத்தை பார்த்த போது அதைப்பற்றி எழுதாமலிருப்பது அவ்வளவு நல்லதல்ல என்பதை உணர்ந்தேன்.இது தமிழ் சினிமாவின் பொற்காலம்.உலகதரம் வாய்ந்த சினிமாக்கள் தமிழில் வந்து கொண்டிருக்கிறது.மிகவும் யதார்த்தமாய் நிழல் உலகத்தை படமாக்கியது செல்வராகவனின் புதுப்பேட்டை படம்தான். அது யதார்த்தமான படம். ஆனால் இன்னும் பற்பல விதமாய் நிழல் உலகை திரையில் காட்ட உலகமெங்குமிருக்கும் இயக்குனர்களுக்கு ஆவல் உண்டு. Martin Scorsese, Quentin Tarantino, Guy Ritchie, Takeshi Kitano, என நிறைய இயக்குனர்களை உதாரணமாய் சொல்லலாம்.
இயக்குனர் Guy Ritchie பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரின் படங்களை பார்த்திருப்பீர்கள். நிழல் உலக கதையை வித்தியாசமாய் தருபவர். A comical approach of portraying gangsters, gangster worlds; with some comedy/cruel comedy; அதான் அவரின் ஸ்டைல். ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக நாலைந்து குழுக்கள் மோதிக்கொள்ளும். அப்பொருள் நழுவியபடியே இருக்கும். அதேப்போல் ஒரு கதை, அதே மாதிரியான ஸ்டைலில் இப்போது தமிழில் வந்திருக்கிறது.
இயக்குனர் Guy Ritchie தமிழிற்கு வந்து படமெடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இத்திரைப்படம். (Guy Ritchie படங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதம் அளவுக்கு தியாகராஜா குமாரராஜா படமெடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்). நிழல் உலக குழுக்கள், மெல்லிய நகைச்சுவை, குரூரமான நகைச்சுவை, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மை என பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர். அவரின் கதைக்கும் திரைக்கதைக்கும் ஒளிப்பதிவும், யுவனின் பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கின்றன. அதிலும் ஒளிப்பதிவு அட்டகாசம். பின்னணி இசையில் கூட பகடி இருக்கிறது.
நாம் எத்தனையோ கேங்க்ஸ்டர் படங்களைப் பார்த்திருக்கிறோம். தமிழிலும் பிற மொழிகளிலும். ஆனால், இந்த மாதிரியான ஒன்றை நான் பார்த்ததில்லை. தமிழ் சினிமா உருப்பட்டுவிடுமோ என்கிற கவலை பல பேருக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. ஒரு பாட்டு இல்லை, இரட்டை அர்த்த வசனம் இல்லை, ஹீரோயின் தொப்புள் காட்டவில்லை, தனி டிராக் காமெடியன் இல்லை. சத்தியமாக இது ஒரு தமிழ் சினிமாதான் என்று அடித்துச் சொன்னால்தான் நம்மவர்கள் நம்புவார்கள். உலக சினிமா உலக சினிமா என்று சொல்கிறார்களே, அது நிச்சயம் இப்படித்தானிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. New York நகரத்தில் நடந்த South Asian Internation Film Festivalலில் ஜூரி அவார்ட் வாங்கும் போதே தெரிந்திருக்கவேண்டும் படம் எப்படியென்று. நிதானமாக செல்லும் காட்சிகள், ஸ்லோ மோஷன் ஆக்ஷன், சேஸிங் கோரியோகிராபி, கதையின் மாந்தர்கள் நியாயமாக பேசவேண்டிய, பேசக்கூடிய இயல்பான வசனங்கள் வார்த்தைகள், பிரம்மிப்பூட்டும் கேமரா கோணங்கள், அருமையான அதேசமயம் கதையை விட்டு நகரவிடாமல் பிடித்துவைக்கும் பாடல்கள் இல்லாத பின்னனி இசை, சின்ன சின்ன டுவிஸ்ட்கள், அற்புதமான நடிப்பு... இவ்வளவு இருக்கிறது உலக சினிமா லிஸ்டில் ஈஸியாக இடம்பெற, வேறு என்ன வேண்டும்?
அமைதியாக ஆரம்பிக்கிறது படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்..ஆரம்பக்காட்சியே கிழவன் ஜாக்கி செராப் இளம் மனைவியுடன் வலுக்கட்டாயமாக கிளுகிளுப்பில் ஈடுபடுகிறார்..உடலுறவில் தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் இளம்மனைவியை அடித்து ஆக்ரோசம் காட்டுகிறார்..அடுத்து வெளியே வந்து அங்கு பேசிக்கொண்டிருக்கும் கும்பலிடம் சத்தம் போட்டு உள்ளே செல்லும் போது அந்த கிழவனின் பின்புலம் நமக்கு புரிய வருகிறது.அவர் குழுத் தலைவன்,தாதா என்பது.இன்னொரு தாதா கஜேந்திரன் குழுவுக்கு வந்த போதை பொருளை, ஜாக்கி செராப் குழு ,இடை தரகரிடம் இடைமறித்து வாங்க முயற்சிக்கும் போது,ஜாக்கியின் அடியாள் சம்பத்துக்கு வருகிறது கண்டம்,சம்பத் செய்த காரியத்தால் சம்பத் மனைவிக்கு வருகிறது கண்டம்,போதை பொருள் பறிபோகிறது.அது ஒரு அப்பா, மகனிடம் சிக்கி ,அந்த அப்பா தாதா கும்பலிடம் சிக்க,அங்கே அவனுக்கு வருகிறது கண்டம்,ரவிக்ரிஷ்ணாவை தாதா கிழவனின் இளம் மனைவி காதலிக்க அதனால் அவனுக்கு வருகிது கண்டம் ,இப்படி பல்வேறு நிழலுலக மனிதர்களின் கண்டங்களை சுமந்து அடுத்தடுத்த பரிணாமத்தில் பயணிக்கிறது இந்த காண்டம்.

எல்லா கேரக்டர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.கேமராவே கதாநாயகன்,காட்சி கலரிலிருந்து ,கேமரா கோணம் வரை ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு..ரசித்து என்பதை விட ருசித்து அனுபவித்து வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.இசை படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.இயக்குனரின் புதிய பாணியிலான முயற்சி பாராட்டுக்குரியது.போஸ்டர் முதல் படம் வரை அனைத்துலும் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்.என்றைக்கோ பார்த்த ட்ரைலரும்,அந்த போஸ்டருமே என்னை படம் பார்க்க தூண்டிய முதல் காரணி.பாடல் இல்லாத இன்னொரு சினிமா.சில இடங்களில் வசனங்கள் நச்..எந்த ஆம்பளையும் சப்ப கிடையாது..எல்லா ஆம்பளையுமே சப்பதான் என்று எதிர்பாராத நேரத்தில் கதாநாயகி பேசுவது..படத்தில் வரும் சிறுவன் பல இடங்களில் பேசும் வசனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன..ஆரண்ய காண்டம் என்ற இந்தப் படம் தமிழ் சினிமா என்ற விசித்திர உலகத்துக்கு முற்றிலும் புதியது. ஆம்; இப்படி ஒரு படம் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே வந்ததில்லை.
சிங்கப் பெருமாள் (ஜாக்கி ஷ்ராஃப்), பசுபதி (சம்பத் ராஜ்), சுப்பு (யாசின் பொன்னப்பா), சப்பை (ரவி கிருஷ்ணா), காளையன் (சோமசுந்தரம்), சிறுவன் கொடுக்காப்புளி (வசந்த்) ஆகிய ஆறு கதாபாத்திரங்களின் வாழ்வில் ஒரே நாளில் நடக்கும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த சம்பவங்களே ஆரண்ய காண்டம். சிங்கப் பெருமாளைப் போல் இன்னொரு தாதாவான கஜேந்திரனுக்கு சேர வேண்டிய சரக்கை நாம் மடக்கினால் என்ன என்று சிங்கப் பெருமாளை கேட்கிறான் பசுபதி. அது ஆபத்தானது என்று சொல்லும் சிங்கப் பெருமாளை “என்ன, டொக்கு ஆயிட்டீங்களா?” என்று பசுபதி கேட்பதிலிருந்து துவங்குகிறது கதை. அப்படிக் கேட்டு விட்டதால் பசுபதியைப் போட்டுத் தள்ளச் சொல்கிறான் சிங்கப் பெருமாள். அவனுடைய ஆட்களிடமிருந்து தப்பி ஓடும் பசுபதியைக் கொல்ல கஜேந்திரனின் ஆட்களும் துரத்துகிறார்கள். பசுபதியின் மனைவியைக் கடத்திக் கொண்டு போய் வைக்கிறான் சிங்கப் பெருமாள். இப்படி எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கப்படும் பசுபதி இதை எப்படி எதிர்கொள்கிறான் என்பது படத்தின் ஒரு பகுதி. சிங்கப் பெருமாளின் வைப்பாட்டியான சுப்புவுக்கும் பெண்களைப் போல் நளின பாவம் கொண்டிருக்கும் சப்பைக்கும் இடையில் ஏற்படும் காதலும் அதன் முடிவும் ஒரு கதை. இந்த தாதாக்களின் மோதலில் சந்தர்ப்பவசமாக மாட்டிக் கொள்ளும் முன்னாள் ஜமீந்தார் காளையனும் அவன் மகனும் இன்னொரு கதை.இயக்குனர் இந்தப் படத்தை எப்படிக் கொண்டு சென்றிருக்கிறாரோ அதை விடப் பல மடங்கு இந்தப் படத்துக்கு கூடுதல் பரிமாணங்களைச் சேர்ப்பதாக இருக்கிறது ஒளிப்பதிவும், இசையும். வணிக நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே செயற்கையாக சேர்க்கப்படும் பாடல்கள் இல்லாதது மட்டும் அல்ல; உண்மையில் ஏழெட்டு பாடல்களை சேர்க்கும் அளவுக்குத் தோதான இடங்கள் படத்தில் உண்டு. ஆனாலும் பாடல்கள் சேர்க்கப்படவில்லை என்பது மட்டும் அல்ல; படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பின்னணி இசை மட்டுமே நமக்குத் தனியாக ஒரு உள்கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
வசனங்களில் யதார்த்தம் தவிர, ஒரு குறிப்பிட்ட வகையான உரத்த குரலில் அல்லாத பிரத்யேக நையாண்டி படம் பூராவும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது

"நீ மாத்திரம் உயிரோட இருந்திருந்தா கொன்னு போட்டிருப்பண்டா" .

"சாமி கூட உக்கார்ந்து சரக்கடிச்சேன்னு சொன்னால ஊருல ஒரு பய நம்பமாட்டானே"


"தோத்தாங்கோளிகளா, என் பீயத் தின்னுங்கடா.. கிழட்டுக் கோளி...


"என்னா நீங்க டொக்காயிட்டீங்களா?"


"ரெண்டு கோடி சரக்கை அம்பது லட்சத்துக்கு தரேன்றான் குருவி." - " ஏன் அவங்க அக்கா என்ன லவ் பண்றாளா?"


"ஆண்டிங்கள உஷார் பண்ணணும்னா ஒரு டெக்னிக் இருக்கு. ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா -ன்னு கேட்கணும். கமல் பிடிக்கும்னு சொன்னா ஈசியா கவுத்தில்லாம்".


"பயம் போகலை.. ஆனா தைரியம் வந்துடுச்சு"


"பசுபதிய என்ன பண்றது -ன்னு யோசிக்கறேன்" - ம்.. முத்தம் கொடுத்து மேட்டர் பண்ணு".


"சார்.. இத வெளில சொல்ல மாட்டீங்கள்ள... - ம்.... தெரியலே....

குறிப்பாக சிங்கப்பெருமாளின் அடியாள் ஒருவன் ஆண்ட்டிகளை மடக்குவதற்கான டெக்னிக்குகளை விவரிப்பது, மற்றவர்கள் சப்பையை கலாய்ப்பது, கஜேந்திரனின் குரூரத்தைப் பற்றி பசுபதி டீக்கடையில் விவரிப்பது போன்ற காட்சிகளின் தொனியும் நீளமும், சாவகாசமும்... quentin tarantino -வின் படக்காட்சிகளை நினைவுப்படுத்துகின்றன. அந்த வகையறா இயக்குநர்களின் பாதிப்பு ஆ.கா.வில் தெரிந்தாலும் ஈயடிச்சான் காப்பியாக அல்லாமல் inspiration-ல் தமிழ்ச் சூழலுக்கு பொருத்தமாக வசனங்களையும் திரைக்கதையையும் அமைத்திருப்பதுதான் தியாகராஜன் குமாரராஜாவை சிலாகிக்க வைக்கிறது.
தமிழ்சினிமாவை டெக்னிக்கலாக நிறைய ஜாம்பவான்கள் தூக்கி நிறுத்திஇருந்தாலும்..
சமீபத்தில் மிஷ்கினின் அஞ்சாதே, நந்தலாலா,யுத்தம் செய் போன்ற படங்கள் உலகதிரைப்படங்களின் சாயலை, உலகதிரைப்படங்களின், எதார்தத்தை அந்த வாசனையை தமிழ் சினிமா ரசிகர்கள் நுகர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துக்கொண்டு இருந்த வேளையில், தடாலடியாக உலக திரைபடத்தின் தரத்துக்கு இணையாக ஒரு தமிழ்படம் வந்து இருக்கின்றது என்றால்.... அது ஆராண்ய காண்டம்தான்.
இந்த படம் தமிழ்சினிமாவின் பிரேக் த ரூல் மூவி என்று தாராளமாக சொல்லலாம்...

ஒரு பெரிய டான் தள்ளிக்கொண்டு தன் வீட்டிலேயே வைத்து இருக்கும் சின்ன பெண்ணிடம் உடலுறவு கொள்ளும் போது, சீக்கிரமாக ஊத்திக்கொள்ள, அந்த கோவத்தை, அந்த இயலாமையை அந்த பெண்ணின் மீது காட்ட, அவள் வலி தாங்காமல் ஒத்த வார்த்தையை சொல்லி விடுகின்றாள்.. என்ன சொல்லறா???

உங்களால முடியலைன்னா ஏன் என்னை அடிக்கறிங்க???

அந்த கோவம், கொடுமையன கோவம் எந்த ஆணாலும் தாங்கி கொள்ள முடியாத ஈகோ கோவம், அந்த கோபம் தனது கூட்டாளி மற்றும் அன்றைய சேவல் சண்டையில் சேவல் தலையை சீவுவது வரை வியாபிக்கின்றது..... மிக அழகான காட்சிக்கோர்வை. இப்படி ஒரு காட்சியோடு தமிழ்சினிமா தொடங்குவது இதுவே முதல் முறை....


இந்த படம் இயக்குனருக்கு முதல் படம்.. அப்படி நம்ப முடியவில்லை.....ஒரு 15 நிமிடத்துக்கு சிங்கம்பெருமாள் விட்டினுள் அலையும் கேமரா, எல்லா கேரக்டர்களையும் அறிமுகபடுத்துவதும் அதன் பிறகு ஆப்போசிட் டான் கஜேந்திரன் பற்றி வார்த்தையால் பயமுறுத்துவது சான்சே இல்லை... ஒன்ஸ் அப்பான்ய மெக்சிக்கோ படத்தில் ஆன்டனியோ பேன்டரசை, பாரில் அவன் எபபடி இருப்பான் என்று அறிமுகபடுத்தும் காட்சியை அது நினைவுபடுத்துகின்றன....

முதல் காட்சியில் சிங்கபெருமாள் கோஷ்ட்டிகள் சப்பையை வைத்து பேசி சிரிக்கும் காட்சிகள்.. தமிழ்சினிமாவுக்கு புதுசு..
இதுவரையிலான தமிழ் சினிமா இசையில் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் செய்திருப்பது ஒரு புரட்சி என்றே சொல்லலாம். இந்த quantum jump-ஐ நிகழ்த்துவதற்கு வெறும் இசையறிவு மட்டும் போதாது. சினிமாவின் மொழி தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் பல இடங்களில் எந்த இசையுமே இல்லாமல் மௌனமாகவே நகர்கிறது படம். எந்த இடத்தில் இசை கூடாது என்று தெரிந்து வைத்திருப்பவனே இசையை வசப்படுத்துபவனாக இருக்க முடியும். யுவன் அதை அனாயாசமாகச் செய்திருக்கிறார். மௌனத்தைப் போலவே படத்தின் பல இடங்களில் ஒரே ஒரு வயலின் அல்லது ஒரே ஒரு கிதாரின் மெல்லிய அதிர்வு மட்டுமே கேட்கிறது. சத்தமும் கூச்சலும் மட்டுமே இசை என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இதெல்லாம் மிகப் பெரிய ஆச்சரியம். அதேபோல் பசுபதி சிங்கப்பெருமாளின் அடியாட்களிடமிருந்து தப்பி ஓடும் காட்சி, சிறுவன் கொடுக்காப்புளி சரக்கை ஒளித்து வைப்பதற்காக ஓடும் காட்சி… இந்த இடங்களில் எல்லாம் பயன்படுத்தப்படும் இசை உலகத்தரம். நான் மட்டும் அல்ல; படத்தைப் பார்த்த அத்தனை பேருமே யுவனின் இசையை விமரிசையாகக் கொண்டாடுவதிலிருந்தே யுவன் எத்தகைய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதே யுவன் யோகி, பானா காத்தாடி போன்ற படங்களுக்கு எப்படி இசையமைத்திருக்கிறார் என்பதையும் இங்கே நினைவு கூர வேண்டும். ஒரு இயக்குனர் ஒரு இசையமைப்பாளரை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதே அந்தப் படத்தின் இசையின் தரத்துக்குக் காரணமாக அமைகிறது
ஆரண்ய காண்டத்தின் ஒளிப்பதிவைச் செய்திருப்பவர் P.S. வினோத். தேவ்.டிக்குப் பிறகு என்னைக் கவர்ந்த ஒளிப்பதிவு இதுதான். இவர் தமிழின் சினிமா மொழியையே மாற்றி அமைத்திருக்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். பல காட்சிகள் மேற்கத்திய ரெனேஸான்ஸ் ஓவியங்களை எனக்கு ஞாபகப் படுத்தின. தமிழில் ஒளி ஓவியர் என்று போட்டுக் கொண்டு ஜிம்கா வேலை செய்வது போல் இல்லை; வினோதின் ஒளிப்பதிவு நிஜமாகவே ஓவியத்தைப் போல் இருந்தது. குறிப்பாக சிங்கப்பெருமாள் வரும் காட்சிகள் அனைத்தும் Caravaggio-வின் (1571 – 1610) ஓவியங்களைப் போலவே இருந்தன. அதிலும் குறிப்பாக சிங்கப்பெருமாள் சப்பையைத் தாக்கும் காட்சி அச்சு அசலாக கரவாஜியோவின் டேவிட்டும் கோலியாத்தும் என்ற ஓவியம்தான். பிறகு, குமாரராஜாவின் பேட்டியைக் கேட்ட போது அவருக்கு ரெனேஸான்ஸ் ஓவியத்தில் மிகுந்த நாட்டம் உண்டு என்றும், அதே பாணியிலேயே எடுக்கலாம் என்று வினோதிடம் சொன்னதாகவும் குறிப்பிடுகிறார். சினிமா என்பது இசை, நடனம், ஓவியம், இலக்கியம், கட்டிடக் கலை, தத்துவம் என்று பல்வேறு கலை வடிவங்களையும், அறிவுத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு ஆரண்ய காண்டம் ஒரு உதாரணம்.ஆரண்யகாண்டம் வன்முறையின் அழகியலை சொன்ன முதல் தமிழ்ப் படம். தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரித்த சரணுக்கும் நமது வாழ்த்துக்கள்.இத்திரைப்படம் சர்வதேச,இந்திய விருதுகளை மொத்தமாக அள்ள போகிறது.ஜாக்கி செரபிற்கு நிச்சயம் அவார்டு உண்டு.தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சினிமாக்கள் பல உலகதரமானது என்று சொல்லப்பட்டபோதிலும் இந்த சினிமா உலகதரத்துக்கு ரசனைக்கு புது மெருகூட்டலை அளித்திருக்கிறது என்று நிச்சயம் சொல்ல முடியும்.

Friday, March 18, 2011

அதிசயமே வியந்து நின்ற அதிசயம் ஆழி சூழ் உலகு


''என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!''
--எழுத்தாளர் ஜோ டி குருஸ்
வாழ்க்கையை எத்தனைமுறை திருப்பி திருப்பி எழுதினாலும் ஏதாவது ஒரு சாரளம் மாத்திரம் நம் கண்ணில் பட்டு வாழ்வை புதிய வியாக்கியானத்தில் கொண்டு சேர்க்கிறது.எழுதப்படாத பல சமூக வாழ்க்கை நம் தமிழ் சூழலில் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதை மீண்டும் ஆழி சூழ் உலகு நாவல் மூலம் உணரமுடிகிறது.பிரமாண்ட எழுத்தாளர்களே மூக்கில் விரலை வைத்து அதிசயத்த அற்புதம் தான் ஆழி சூழ் உலகு என்ற அற்புத நாவல்.படைப்பனுபவத்திற்க்கு நல்ல கவனிப்பும் தேடலும் தான் முக்கியமானது என்பதை முதல் நாவலிலே மற்றவர்களுக்கு கற்று தருகிறார் நாவலாசிரியர்.
குமரி மாவட்டத்திலுள்ள ஆமந்துறை என்ற மீனவக் கிராமத்தினை மையமாகக் கொண்டு நாவல் விரிகிறது. 1985ஆம் ஆண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று திரும்பும் சிலுவை, சூசை, கோத்ரா பிள்ளை என்ற மூன்று பரதவர்களும் புயலில் மாட்டிக் கொள்வதாக நாவல் தொடங்குகிறது. மூவரும் மூன்று தலைமுறை களின் குறியீடுகள். பசியாலும் குளிராலும் வாடி நீரில் மிதக்கையில் ஒருவர் மற்றவருக்காக உயிர் துறக்கின்றனர்; சிலுவை மட்டும் காப்பாற்றப்படுகிறான். இதற்கிடையில் 1933ஆம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் கடலிலும் கடற்கரையிலும் நடைபெற்ற சம்பவங்களின் வழியாக நாவல் தொடர்கிறது.
பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் விவரிப்பில் மூன்று தலைமுறைகளாக, கிராமத்தில் ஏற்படும் மாற்றங்கள் பதிவாகியுள்ளன. ஆமந்துறையில் மீனவர்களும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாடார்களும் வாழ்கின்றனர். இவர்களிடையே அவ்வப் போது மோதல்களும் கொலைகளும் நிகழ்கின்றன. ஆனால் நடப்பில் நாடார்களும் பரதவர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கின்றனர். கிறித்துவர்களாக வாழ்ந்தாலும் பரதவர் களிடம் நாட்டார் நம்பிக்கைகளும் நாட்டார் தெய்வ வழிபாடும் செல்வாக் கோடு உள்ளன. சான்றாக, திமிங்கலம் போன்ற பெரிய மீனிடம் மாட்டிக்கொள் ளும்போது குமரி ஆத்தாவைத் துணைக்கு அழைக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் கடலில் மீனுக்காகப் பயணம் செய்கையில் அவர்கள் கரை திரும்புவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று. எப்பொழுதாவது கடலில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவர்களுடைய போராட்டம் இடைவிடாமல் தொடர்கிறது. பரதவர்கள் எல்லா வழிகளிலும் பொருளியல் ரீதியாகச் சுரண்டப்படுகின்றனர்; அவற்றி லிருந்து மீள்வது குறித்த தெளிவும் அவர்களிடமில்லை. அவர்கள் தங்களுக்குள்ளாகவே குழுக்களாகப் பிரிந்துகொண்டு அடிதடி, வெட்டுகுத்து, கொலை முதலான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பரதவர் வாழ்க்கையில் திருச்சபையின் ஆதிக்கம் மறுக்க முடியாத ஒன்று. அது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். கிறித்துவ ஆலயத்தில் பங்குத் தந்தையாகப் பணி யாற்றிய காகு பாதிரியாருக்கும் ஆமந்துறைப் பரதவர்களுக்கும் இடையிலான உறவு நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடனாக, கருவாடு வாங்கி வியாபாரம் செய்ய வந்த ரத்னசாமி நாடாருக்கும் ஆமந்துறைப் பரதவர்களுக்கும் இடை யிலான உறவு குறித்த சித்திரிப்பு மனித உணர்வின் உன்னதமான வெளிப்பாடு. பரதவர்கள் தொழில்ரீதியில் ஒன்றிணைந்தாலும் தனிப்பட்ட நிலையில் கிராமத்தினருடனும் தங்களுக்குள்ளும் முரண்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
பரதவர்களிடையே நிகழும் ஆண்-பெண் உறவின் பாலியல் ‘அத்துமீறல்களை’ நாவல் இயல்பாகப் பதிவு செய்துள்ளது. ஆண்களைப் போலவே பெண்களும் தங்கள் காமத்தினையும் காதலினையும் வெளிப்படுத்திடத் தயங்குவதில்லை. ரோஸம்மா இதற்கோர் உதாரணம்; தன்னிடம் உறவு கொள்பவனின் மகனிடம் உறவு கொள்கிறாள். பரதவர் குறித்த பல நாவல்களிலும் அவர் களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே பிரச்சினைகளும் அதனைத் தொடர்ந்து கலவரங்களும் நிகழ்வது பதிவு செய்யப் பட்டுள்ளது. இந் நாவலிலும் இவ்வாறான சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாவலின் இடையிடையே சங்ககால நெய்தல் நில வாழ் வினைச் சித்திரிக்கும் பாடல்களை இணைத்திருப்பது நம்மை அருஞ்சொற்பொருட்களைத் தேடிப் படிக்கவைக்கிறது. பரதவர்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் கடல்புரத்தில், உப்புவயல், மாணிக்கம், வாங்கல், கன்னி எனப் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமாகவும் புதுவித வாசிப்பனுபவத்தைத் தருவனவாகவும் உள்ளன. நிலத்தில் மட்டுமே வாழும் நமக்குக் கடற்புரத்தில் வாழும் பரதவர்கள் பற்றிய அறிமுகமின்மையும் பெரும்பான்மையான மக்களாக இருந்தும் அவர்கள் ஆதிக்க அரசியல் செய்யாமலிருப்பதும் அவர் களின் சாகச வாழ்வும் அவர்களைப் பற்றி வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
ஆழிசூழ் உலகி’ன் அடிநாதம் வலிமை வாய்ந்த மரணம். நாவலை வாசிக்கும் இரண்டாவது நிமிடமே கோத்ராபிள்ளையின் மரணம். பிறகு மடுத்தீன் மரணம். மரணம் தொழிற்சார்ந்த வாழ்க்கையிலும் வருகிறது; நோயிலும் வருகிறது. தொடர்ந்து மரணங்கள். சாவுக்குக் காரணம் தெரியவில்லை. பில்லி சூன்யமா? என்னும் குழப்பம். மரணத்தை எப்படி வெல்வது? என்ற ஆதங்கம் ஜோவை ஆழ்த்தினாலும் நாவலின் தளம் புறவயமாக இயக்கம் கொள்வதால் ஆழ்தளத்தில் அவரால் செல்ல முடியவில்லை. மரணத்தைத் தியாகத்தால் வெல்ல முடியும் என்கிறார். மரணமும் இயற்கையான தியாகம்தான். கடலுக்கும் கரைக்கும் இடையிலான மீனவனின் வாழ்க்கை போன்றது தான், வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பும். உயிரும் உயிரும் மோதும் தொழில்தான் மீன்பிடி வாழ்க்கை. இதில் யார் தோற்றாலும் கிடைப்பது மரணம். பிடித்த மீன் சாகக்கூடாது. செத்தா மற்றமீன் சாப்பிடும். பிறகு ‘கிழவனும் கடலும்’ போல எலும்புக் கூடுதான் கரைவந்து சேரும். எனவே வேட்டையாடிய உயிரை வேட்டையாளனே காப்பாற்றும் நிலை. கரைக்குக் கொண்டு வரப்படும் மீனுடன் ஜோடிமீன்கூட வருவதும். “நம்மள மாதிரி அறிவா அதுக்கு இருக்கும்? சிந்திச்சு பாத்தா அது நெலமையும் பாவந்தான...” என்று மேலும் தொம்மந்திரை பேசுவதும் மரணத்தின் ஆழம் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் விரிந்தது என்னும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த உணர்விலிருந்து புறத்தோற்றமாகத் தான் சார்ந்த சமூகத்தின் சித்திரங்களை மிகப்பெரிய கடலைப்போன்ற திரைச்சீலையில் தீட்டி இருக்கிறார்.
அமாவாசை இருளில் காற்றாலும் அலையாலும் மரம் உடைக்கப் பட்டுக் கடலுக்குள் தத்தளிக்கிறார்கள் சிலுவை, சூசையார், தொம்மந்திரை, வயதான பெரியவர் கோத்ரா பிள்ளை. அவர்களின் மரண அவலத்தினூடே நாவலின் கதை சொல்லப்படுகிறது. இயற்கையின் மாபெரும் சக்திக்குள் ஒன்றாகிக் கலக்கிறது கோத்ரா பிள்ளையின் மரணம். சாகும்போது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, குற்ற உணர்ச்சி, தவறுகள், உன்னதங்கள் எல்லாமே இயல்பாக அலசப்படுகின்றன. தான் சாகும்போது தோக்களத்தா கிழவியை (மனைவி) நினைத்தவாறு உயிரை விட்டதாக அவளிடம் கூறச்சொல்லும் கோத்ரா பிள்ளையின் பலவீனங்களும் இதில் அடக்கம். இவ்வாறு கதை சொல்லும் வடிவம் ஏற்கனவே எழுதப்பட்டதுதான். மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்யும் பெண் கீழே விழுவதற்குள் கதை சொல்லும் பாணியிலான புனைவுகளை நாம் வாசித்திருக்கலாம். ஆனால் தொழில் சார்ந்த வாழ்க்கையுடன் இணைத்து ஒரு இனவரைவியலை இந்த வடிவத்திற்குள் நிறுத்தி இருப்பதும் வேரும் கிளையுமாகப் படர்ந்த உறவுமுறையைச் சொல்லி இருப்பதும்தான் ஜோவின் திறமை.
‘உடல்’ என்பதன் இயக்கம் இரண்டு விதங்களில் இவரது நாவல்களில் இயக்கம் பெறுகின்றது. முதலாவதாக உழைப்பு சம்பந்தப்பட்டது. இரண்டாவதாக உறவு சம்பந்தப்பட்டது. இரண்டுமே உற்பத்தி சம்பந்தப்பட்டவை. (இந்த உற்பத்தி உறவில் சம்பந்தமில்லாத சாதி, ஆதிக்கம் பெறுவதுதான் ‘கொற்கை’யின் உள்ளடக்கம்.) உடல்மீதான வாழ்வம்சத்தின் முரட்டுத்தனம் கொண்ட உழைப்பாளர் வாழ்க்கையின் மரணமுடிவுகளைப் பதிவு செய்யும் தொடக்கம், வாழும் காலத்தில் அடையும் துடிப்பை இவற்றிலுள்ள பெரும்பாலான பாத்திரங்கள் உணர்த்தி நிற்கின்றன. தென்னைமரத்திலிருந்து விழும் சுந்தரபாண்டியின் மரணம்கூட இங்கு நினைவுகூரத்தக்கது. நாடார்களும் பனைகளிலிருந்து மீனவர்களைப்போலக் கதை பேசிக்கொண்டே தொழில் செய்கிறவர்கள். ‘தினமலர்’ பத்திரிகை தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் பனை யிலிருந்து கொண்டு உரத்துப் படித்த கதைகளும் குமரிமண்ணில் நடந்ததுண்டு. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது துணியை உயர்த்திக்காட்டி சுடப்பட்டுச் சாவது பற்றி ஜோ எழுதி இருப்பதையும் இந்த உடல்வாழ்வின் முரட்டுத்தனம் என்று சொல்லலாம். இதையும் பனையேறி நாடார்களிடம் கண்டு கொள்ளலாம். நான் ஹைஸ்கூல் படிக்கும்போது எங்களுக்கொரு வரலாற்று ஆசிரியர் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லும் சம்பவம் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. குமரிமண்ணைத் தாய்த்தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் நேசமணி ஈடுபட்டிருந்த காலத்தில் பலர் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையான சம்பவங்கள் நடைபெற்றன. அவர்களைப் பற்றி ஒருவர் வில்லுப்பாட்டில், “அந்த மங்காடு தேவசகாயமும், கீழ்குளம் செல்லையாவும், மானம் காக்கும் போரில், மார்பில் குண்டடி பட்டனரே” என்று பொதுக் கூட்டங்களில் பாடுவாராம். இதனைப் பாடிவிட்டு அந்த ஆசிரியர், “நாயர்களின் போலீஸ் பட்டாளம் சுடுவதற்காகத் தோக்கை ஏந்தியதும் இவர்கள், ‘இஞ்ச சுடுடா’ என்று வேட்டியை உயர்த்திக் காட்டினார்கள். குண்டுபாய்ந்த இடம் மார்பில் அல்ல; மர்மஸ்தானத்தில்” என்பார்.
அதுபோல வர்மக் கலையிலும் இந்த ஒற்றுமையைக் காணமுடிகிறது. தொம்மந்திரையின் இடது குதிகால் நரம்பில் தூண்டில் ஏறிக் கொழுவு கிறது. உடனே கோத்ராபிள்ளை அவனது கையிலுள்ள சில நரம்புகளைப் பிடித்துவிட ரத்தப்போக்கு நின்றுவிடுகிறது. தொழிலுடன் தொடர்பு கொண்ட இத்தகைய உடல் மீதான எழுத்துக்கள் இயற்கைக்கும் நாகரிகத்திற்கும் இடையிலான முரண்பாட்டைப் பெரிதாக்குகின்றன. நாடார்களைவிட மீனவர்களிடம் இந்த இயற்கைத்தன்மை பெரிதாக உள்ளது. ஜஸ்டின் மரம் கரைபிடிக்கத் தனி ஆளாக வரும்போது பனை மரத்திலிருந்து மருக்கொழுந்தின் ஆட்கள் நாட்டு வெடிகுண்டு வீசுகிறார்கள். அவன் சிறிது பின்வாங்கி நிதானித்திருக் கலாம். ஆனால் அவனது உடல் அவனை உந்தித் தள்ளுகிறது. அவன் நெஞ்சைக் குண்டு பிளக்கிறது. பொதுவாகக் கலவரத்தின்போது பிணம் விழுந்தால் நாடார்கள் விட்டுவிட்டுப் பிறகு பார்க்கலாம் என்று ஓடித் தப்புவார்கள். மீனவர்கள் என்றால் அதை எடுக்கப்போய் கூட இரண்டு பேர்களைப் பலிகொடுப்பார்கள். இந்த இயற்கையான முரட்டுத்தனம் தான் ஜோவின் கைவண்ணத்தில் உடலெழுத்தாக உருமாற்றம் பெற்றிருக்கின்றது.
உறவு சம்பந்தப்பட்ட உடல் எழுத்தில் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியது உறவைமீறிய வாழ்க்கை குறித்ததாகும். எந்தவிதமான வரைமுறைகள் எதுவுமின்றி உடலும் உடலும் சேரும் தன்மையில் தமிழில் இதுவரை இதுபோன்றதொரு படைப்பு வெளிவந்தது இல்லை. ஜஸ்டின் வழுக்குமரம் ஏறும்போது அவனைக் காதலிக்கும் வசந்தியின் மார்பகங்கள் பூரிக்கின்றன. அவன் வெற்றிபெற்றதும் அவள் அந்தரங்கத்தில் வழவழப்பு ஏற்படுவதை உணர்கிறாள். தன்னால் விரும்பப்படும் ஆணின் மீதான அளவுகடந்த பற்று அவனுடன் உடலு றவு கொள்வதற்குச் சமமானது என்ற வகையில் எழுத்தாக்குகிறார். இதே ஜஸ்டினுக்கும் வசந்தாவின் தகப்பனாருக்கும் வசந்த மாளிகை என்னும் ஒரே பெண்ணுடன் உறவு. தங்கச்சிமுறை வரும் எஸ்கலினோடு கில்பர்ட் கொள்ளும் உறவு. திடமனதில்லாத கில்பர்ட் சாமியார் படிப்பை உதறிவிட்டுக் கப்பல் தொழிலுக்குச் செல்கிறான். சித்தி முறை கொண்ட தன்னை விட இருபது வயது மூத்தவளான ரோசம்மாளோடு வருவேல் கொள்ளும் உறவு. அவன் தகப்பனார் விக்டர் பிள்ளையும் அவளுடன் உறவுகொள்வதை வருவேல் பார்க்கிறான். அவள் கிட்டத் தட்ட அவன் தாய்க்குச் சமமானவள். தூங்கிக்கிடக்கும் நிறைமாத கர்ப்பிணி மேரியைச் சுவரேறிக் குதித்துவந்து புணரும் சூசை. சாராயம் விற்கும் பண்டணத்தாளைப் போடத்துடிக்கும் சப்பாணியார். பிலிப் உடல்மீது மோகங்கொண்டு விளையாடும் சித்திக்காரி, மரியதாஸ் சாமியாருடன் ரென்சி கொள்ளும் உறவு. இவை போன்ற வரைமுறைகள் மீறிச் செல்லும் உடல் சார்ந்த உறவுகள் அனைத்துமே உடல் எழுத்தில் சேர்த்திதான். உடலுக்கு வெளியே உறவுகளற்ற தன்மைதான் புராதன எழுத்தை நோக்கிய பதிவுகளைச் செய்ய முயற்சிக்கின்றன. தரப்படுத்தப்பட்ட அல்லது நாகரிகம் செய்யப்பட்டவைகள் அனைத்துமே ஒழுக்கம் சார்ந்த அதிகார உலகத்தைக் கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன.
உடல்மீதான சாகசப் பயணத்தில் இவ் நாவல் குறிப் பிடத்தகுந்த இலக்கை நோக்கிச் செல்கின்றன. அது உறவுகளை வென்றெடுத்த உடல் சாம்ராஜியம். உணர்வுகளில் சங்கமிக்கும் இந்த உலகத்தில் எல்லாரும் உறவினர்கள்தான். ஆனால் எந்த உறவையும் அது விலக்கியோ, ஒதுக்கியோ பார்க்க மறுக்கிறது. இந்த நெருக்கம் தான் எழுத்துக்களில் புராதன வளத்தைச் சேர்க்கின்றன. பண்பாடு என்பது இவற்றின்மீது எழுப்பப்படும் கல்லறைகள் அல்லது மனித இழிவுகள் என்று ஆகிறது. அது தரும் குற்றஉணர்ச்சி இவ்வகையான எழுத்துக்களில் துளியும் இல்லை. ஆபாசம் என்ற கூச்சல் இல்லை. அணிவதைவிட அல்லது புனைவதைக் காட்டிலும் பெரிய ஆபாசம் எது? வேட்டையாடும் துடிப்பில் இருக்கும் உடல்கள் மீதான உணர்வுகளுக்கும் நெருக்கங்களுக்கும் மட்டுமே இவ்வகையான எழுத்துக்கள் முக்கியத்துவம் தருகின்றன.
முல்லை நிலத்து ஆயனுக்கும் மருத நிலத்து உழவனுக்கும் வாழிடம் சார்ந்து சாவை எதிர்கொள்கிற அச்சுறுத்தல்கள் எவையும் இல. மலை சார்ந்து வாழ்கிற குறவர்கள் மலையை முதல் முறை அறியும்போது ஒருவேளை இத்தகைய அச்சுறுத்தல் உண்டாகலாம். ஆனால் தான் வாழும் மலையை ஒரு முறை அறிந்துவிட்டால் பிறகு பழுதில்லை. ஏனென்றால் மலை அசையாப் பொருள். அசலம். அதில் கால்பாவி நிற்கலாம். நிலைமை என் பது அதன் மெய்ம்மை. அது நாளும் ஒரு கோலம் கொள்வதென்பது கிடையாது. ஆனால் கடல் அப்படியன்று. அது அசையும் பொருள். சலம் (சலசலப்பது சலம்; சலசலவாதது அசலம்). இன்றைக்கிருப்பதுபோல நாளைக்கு இருக்காது. நிலையாமை என்பது அதன் மெய்ம்மை. மிதக்கவும் வைக்கும்; மூழ்கடிக்கவும் செய்யும். நிலையாமையை உவமிப்பதாக நீரே அமைகிறது. நீர்க்கரை வாழ்வும் நீர்க்கோல வாழ்வாகவே நிலையாமையின் வசப்படுகிறது.
பரதவர்களைப் போலவே மறவர்களும் சாவை எதிர்கொள்ளும் வாய்ப்ப்பைப் பெற்றவர்கள்தாம். பரதவர்கள் நீர்க்களத்தில் சாவை எதிர்கொள்பவர்களானால் மறவர்கள் போர்க்களத்தில் சாவை எதிர்கொள்பவர்கள். ஆனால் மறவர்கள் எதிர்கொள்ளும் சாவும்கூட வாழிடம் சார்ந்து அவர்கள்மீது திணிக்கப்பட்டதன்று; நாளும் நிகழ்வதுமன்று.
எனவே மரணத்தின்முன் வாழ்வின் பெறுமதி என்ன என்ற கேள்வியை அலசுகிற புதினத்தின் கதைக்களமாக அமையத்தக்கது நெய்தல் நிலம் மட்டுமே. நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும். இரங்கலுக்குரிய பறையான சாப்பறையே நெய்தலுக்குரிய பறை. அந்தப் பறைக்கே நெய்தல் என்று பெயர் (ஓரில் நெய்தல் கறங்க...புறம். 194).
நிலையாமை என்கிற அடிக்கருத்தைப் புலப்படுத்துவதாகவே ' 'ஆழிசூழ் உலகின் ' ' தொடக்கப்பகுதிகள் அமைகின்றன. எடுத்த எடுப்பிலேயே ஆவேச அலைகளால் அடியுண்டு கட்டுமரம் கவிழ்ந்து சிதைகிறது. கடலால், அதாவது நீரோட்டத்தால், கடலை அலைக்கழிக்கிற காற்றால், கடலில் உலவுகிற மீன்களால் என்று நிலையாமை எப்போதும் பல்லிளித்து முன்நிற்பது அருமையாகச் சித்திரிக்கப்படுகிறது.
கடல் வாழ்வின் நிலையாமை புரியாவிட்டால் பரதவனைப் புரியாது. அவன் கடல் மாதிரி; எப்போது சீறுவான் எப்போது ஆறுவான் என்பது யாருக்கும் பிடிபடாத மந்தணம். பரதவனை மிகத் தெளிவாக நான்கைந்து வரிகளில் விளக்கிவிடுகிறார் ஜோ டி குரூஸ்:
' '...சரியான மிலேச்சப் பயலுவ... றால் சீசன் ஒண்ண வரும் பாத்துக்கிடுங்க, அப்ப ஒரு பயலையுங் கையில புடிக்க முடியாது. நூறு ரூபா நோட்ட காதுல சொருகி வெச்சிகிட்டு அலைவானுவ. பஸ்சுல ஏறுனா நோட்ட குடுத்திற்று சில்லற கேக்குறதே இல்ல...கையில காசு வந்திற்றா...! திசயவெள தியேட்டர்ல படம் பாக்க மாட்டான்வ. இங்கயிருந்தே டக்கர் புடிச்சிகிட்டு திருநவேலி நாரோயில்தாம். துணிக்கடையள் ள போயி வெல கூடுன துணி போடுலன்னுதாம் கேப்பானுவ. ' '
'நாளை பிழைத்துக் கிடப்போமா என்று தெரியாது. இன்று இருக்கிறோம். ஆகவே துய்த்து விடுவோம் ' என்ற 'உறுதியின்மை ' உளவியலே பரதவர்களை இத்தகைய நிலைகளுக்கு உந்தித் தள்ளுகிறது. எந்த ஒன்றையும் நாளைக்கு என்று ஆற வைக்க அவர்களுக்கு வசதி வாய்ப்பில்லை. அது துய்ப்பானாலும் சரி; பழி வாங்குவதானாலும் சரி.
பரதவர்களின் இந்த 'உறுதியின்மை உளவியலின் ' புறவெடிப்பாக வெளிப்படுகிற கண்மண் தெரியாத முரட்டுத்தனத்தைக் காட்சிப்படுத்துகிற இடங்களும் புதினத்தில் ஏராளம். அந்த முரட்டுத்தனம் ஆண்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் பெண்களுக்கானதாகவும் இருப்பது வசந்தா, கலிஸ்டா, மயிலாடியாள் ஆகியோர் வழியாகப் புலப்படுத்தப்படுகிறது.
சாவு தன்னை வெடிகுண்டின் வழியாகச் சுவை பார்க்க வருகிறது என்று தெரிந்தும் பின்வாங்காமல், புறமுதுகு காட்டாமல், நெஞ்சில் குண்டை வாங்கிச் சாவுக்குத் தன்னை உண்ணக் கொடுக்கிற ஜஸ்டினின் வீரம்; எத்தனை கடும்பகையிலும் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்குமான கடல் மோதல்கள் கரைக்கு இடம்பெயர்ந்துவிடாமல் கவனித்துக்கொள்கிற ஒழுங்கு; பெண்களை, குழந்தைகளைக் குறி வைக்காத ஆண்மை; பகையாட்களானாலும் தஞ்சமடைந்தவர்களைக் காக்கும் அறம்--என்று பழந்தமிழ் மரபில் சொல்லியும் பேணியும் வரப்பட்ட புறமரபுகள் அனைத்தும் இன்னும் பரதவர்கள் நடுவில் உயிர்த்துக் கிடப்பதைப் புதினத்தின் வழியாக அறியமுடிகிறது.
1933-இல் தொடங்கி 1985வரையிலான அரைநூற்றாண்டுக் காலத்தையும் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று தலைமுறையினரையும் இந்தப் புதினம் மையம் கொண்டிருக்கிறது. கோத்ராப் பிள்ளை மூத்த தலைமுறையின் படியாள்; சூசை நடுத் தலைமுறையின் படியாள்; சிலுவை இளைய தலைமுறையின் படியாள்.
கதையின் மையக் கதைமாந்தர்களாக ஆண்களில் கோத்ரா, சூசை, ஜஸ்டின் ஆகியோரும், பெண்களில் தோக்களத்தாள், மேரி, வசந்தா, அமல்டா ஆகியோரும் இவர்களையன்றிக் காகு என்ற பாதிரியாரும். ஏனைய கதைமாந்தர்கள் அனைவரும் இந்தக் கடற்புறத்துச் சேலையின் கரைக்கும் முன்றானைக்கும் வண்ணம் சேர்ப்பவர்கள் மட்டுமே.
புதினம் நெடுகிலும் யாருடைய பிறப்பைப்பற்றியும் ஒரு சிறுகுறிப்பும் கிடையாது. தன்னுடைய முன்னுரையில் புதின ஆசிரியர் சொல்வதுபோல, ' 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சனன வழி ஒன்றுதானே! ' ' அதில் விதந்தோத என்ன இருக்கிறது ?
ஆனால் மரணவழிகள்தான் எத்தனையெத்தனை ? மரணத்தின்முன் வாழ்வின் பெறுமதி என்ன என்று பேச விழைகிற இப்புதினத்தில் ஏராளமான சாவுகள் நிகழ்கின்றன. கடலில் கவிழ்ந்து செத்தவன், வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும் செத்தவன், இயற்கையாகச் செத்தவன், நோய்வாய்ப்பட்டுச் செத்தவன், வாழ விருப்பமின்றிச் செத்தவன், பிறர்வாழத் தான் முன்வந்து செத்தவன்...
மிக்கேல் பர்னாந்து, வியாகுலப் பிள்ளை, இருட்டியார், சுயம்பு, தொம்மந்திரை, ஊமையன், காகு, ஜஸ்டின், கோத்ரா, சூசை என்று பல கதைமாந்தர்கள் சாகிறார்கள். இவர்களில் கடைசி நான்குபேர் தவிர்த்த ஏனையோரின் சாவுகள் பெரிய அசைவுகள் எதையும் உருவாக்கவில்லை. காகு, ஜஸ்டின், கோத்ரா, சூசை ஆகியோரின் சாவுகள் உலுக்குகின்றன.
ஜஸ்டின் என்ற சண்டியர் தன்னுடைய பிழைகளுக்காக வருந்தி மனம் திரும்பிய நிலையில் சாவை எதிர்கொள்கிறான். அவ்வாறே சூசை என்ற உல்லாசியும் தன்னுடைய பிழைகளுக்காக வருந்தி மனம் திரும்பிச் சாவைத் தழுவுகிறான்.
ஜஸ்டின் மனம் திரும்பியது வாழ்வை விரும்பி. தன் மகனுக்காக வாழ வேண்டும் என்ற ஆவல் உந்த மனம் திரும்பினான். ஆனால் வாழமுடியாமல் கொலையுண்டான். ஆனால் சூசையின் மனத் திருப்பமோ சாவை நோக்கி அவனை உந்தித் தள்ளியது. தன்னுடைய உல்லாச விழைவினால் அழிந்துபோன ஒரு குடும்பத்தின் கடைசிப் படியாளாகிய பிறன் மகன் ஒருவனைக் காப்பாற்றத் தன்னைத் துறந்துகொண்டான்.
காகு என்ற பாதிரியார் ஆமந்துறை என்ற அந்த நெய்தற்புறச் சிற்றூரின் வாழ்வுக்கு விளக்கேற்றியவர். தான் பணியாற்றுகிற பங்குகளின் மக்களுக்காக வாழ்வதைத் தவிர அவருக்குத் தனியாக வாழ்வொன்றும் இல்லை. அவர் மூத்து இயற்கையாகச் சாகிறார். ஊரே இடம்பெயர்ந்து அவருடைய சாவுக்குப் போகிறது. அவருடைய சாப்பெட்டியைச் சுமக்கும் உரிமையை அவர்மேலான அன்பினால் தனக்குக் கோருகிறது.
காகு பாதிரியார் சாமியாராக இருந்து பிறருக்காக வாழ்ந்தவர்; கோத்ரா இல்லறத்தானாக இருந்து பிறருக்காக வாழ்ந்தவன்; பிறருக்காகத் தானே முன்வந்து செத்தவன். சூசை தன் வாழ்வைப் பிறன் மகனுக்காகத் தியாகம் செய்வதற்குக் கோத்ராவே வழிகாட்டி. சூசையாவது தன்னுடைய பிழைக்குக் கழுவாயாகத் தன் உயிரைத் தந்தான். கோத்ராவோ யாருக்கும் எந்தக் கடப்பாடும் இல்லாத நிலையிலும், எந்த எதிர்பார்ப்பும் பற்றுதலுமின்றி உயிர் துறந்த, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். மனுமகனாகத் தன் வாழ்வின் பெறுமதியை மரணத்தில் நிறுவிய கிறித்து சாவதற்குரிய சாவைச் செத்தவன்.
----------------------------------------------
நாவலின் பக்கமெல்லாம் பொங்கிப் பெருகி வருகின்ற விதவிதமான மீன் கள். அவை எப்படிப்பட்டவை தெரியுமா? ஓங்கல் மீன்களின் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மற்ற பகுதிகள் கரு நீலமாகவும் வழவழவென பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். முத லில் பார்ப்பவர்கள் மிரண்டு விடுவதுண்டு. போஸ்கோ எனும் மீனவனும் அப்படித்தான் ஒங்கலைப் பார்த்துப் பயம் கொள்கிறான். அப்போது தொம் மந்துரை எனும் தேர்ந்த கடலோடி அவனுக்குச் சொல்கிறான். “போஸ்கோ, பயப்புடாத. ஒங்கல்வ ரொம்ப நல்லதுவ. காந்திமாரி, சாதுவானதுவ. தோணியள்ல போற நம்ம ஆள்க தவறி கீழ வுழுந்திற்றான் வயின்னா இந்த ஒங்கல்வதாம் சுத்தி நின்னு சுறாப்பயல்வ கிட்ட வராம காப்பாத்துமாம்”. மீனுக்கும் பரதவர்களுக்குமான புரிதலும், கடலோடு இயைந்த அவர்களின் வாழ்வையும் அறிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது இந்த ஒரு துளி.
கடலின் விதவிதமான ரூபங்களை யும் கூட வாசகன் தொம்மந்துரையெனும் தேர்ந்த கடலோடியின் கண்களின் வழியாக கண்டடைகிறான். கருத்துப் பெருத்த வரிப்புலியன் தண்ணீருக்கு அடியில் மற்றொரு கருப்பும் அலைகிறது. அது என்ன தெரியுமா; “வரிப்புலியும் எப்பவும் ஜோடியாத்தாம் அலையும். இப்ப மாட்டிக்கிட்டது ஆணா, பெண்ணா தெரியலா”. “ஆணா இருக்கும் அது தாம் ஜோடியா நிக்கிற பொட்டகிட்ட பலத்த காட்டுறதுக்கு இந்த துள்ளு துள்ளுறாம்”. “சரிதாம் அண்ண, மரத்துகிட்ட சேர்ந்து வரும் போது பார்த்தமில்ல. அதுக்கு கீழேவே ஒரு கறுப்பு வந்துகிட்டேயிருக்கு”. “யாருக்குத் தெரியும், பரந்த கடல்ல ஜோடிய சுத்திக்கிட்டு இருந்திருப்பாவ, இப்ப நம்மாளு எதுலேயோ மாட்டிகிட்டான், நெனச்ச இடத்துக்கு போவ முடியல்லியே, முத்தங்கித்தம் குடுக்க முடியல்லியேன்னு சோகமா சுத்திக்கிட்டு இருக்குமாயிருக்கும்”. ஒரு படைப்பின் அதீதமான சாத்தியங்களையும் தேர்ந்த படைப்பாளியால் எட்டி விட முடியும் என்பதை தன்னுடைய முதல் நாவலில் நிரூபித்தவர் ஜோ. டி. குரூஸ்.

ஆமந்துறையெனும் பரதவர்களின் கிராமத்தில் வாழ்ந்த தொம்மந்துரையெனும் மீனவனின் கொடி வழிக் கதைதான் “ஆழிசூழ் உலகு” என்ற போதும் கதைகள் யாவும் காலக்கிரமமாக வரிசை வரிசையாக அடுக்கித்தரப்படவில்லை. பரதவர்களின் குலப்பாடகனான ஜோ.டி.குரூஸ் அவரது ஞாபகங்களின் ஊடாகப் பயணித்து 1933ல் துவங்கி 1985 வரையிலுள்ள அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலான ஆமந்துறைக்கும், தூத்துக்குடித் துறைமுக வளர்ச்சிக்கும் உள்ள உறவு. இந்த ஊரின் காவல் தெய்வம் போல வாழ்ந்த காகுச்சாமியார் எனும் கிறிஸ்தவ பாதிரியின் பிரம்மாண்டமான ஆகிருதி. ஊருக்குள் நிலத்திலும் மனிதர்களுக்குள் நிகழும் மனவெழுச்சி, மாற்றங்கள், கோபங்கள், பாலியல் இச்சைகள், பாலியல் மீறல்கள் என யாவற்றையும் ஒரு குலமரபுப் பாடலின் நுட்பத்தோடு பதிவு செய்திருக்கிறார். கடலின் அலையைப் போல காலத் தின் பெருவெளிக்குள் முன்னும், பின்னுமாக அலைவுறுகிறது நாவல். அவற்றிற்குள் காட்சிப்படுவதெல்லாம் பரதவ மக்களின் தனித்த மனக்கிலேசங்களே என்பதை வாசகன் கண்டடைவான்.

பரதவர்களின் வாழ்விடமான கடல் நிலையாமையின் அடையாளம், விவசாயம், கால்நடை பராமரித்தல் போன்ற தமிழர்களின் நிலம் சார் தொழில்களில் இருக்கும் குறைந்தபட்ச நிச்சயம் கூட பரதவ மக்களின் குலத்தொழிலான மீன் பிடித்தலில் சாத்தியமில்லை. இந்த நிச்சயமின்மையே அவர்களின் குணநலன்களையும், வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இயற்கை முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான பெருத்த நம்பிக்கையை புனித அந்தோணியாரை (அய்யா) தவிர வேறு எவரும் அளித்திடவில்லை. அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிற போதும், சுக்கு நூறாகச் சிதைகிற போதும் அய்யாவின் காலடியில் மண்டியிட்டுக் கதறிக்கடைத்தேறுகிறார் கள். “கண்ணீர்க் கடலில் தத்தளிப்பவர்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக இருக்கிறது மதம்”, என மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருப்பார். அதற்கான இலக்கிய சாட்சியை நாவலெங்கும் நாம் வாசித்தறிகிறோம்.

கிறிஸ்தவம் வந்தடைந்த செய்தியை நாவல் ஒரு புள்ளியில் சொல்லிச் செல்கிறது. நாயக்கர்களிடம் இருந்தும்., முகம்மதியர்களிடம் இருந் தும் எங்களைக் காப்பாற்றினால் நாங்கள் கிறிஸ்தவத்திற்குள் ஐக்கியமாகிறோம் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று, போரில் எதிரிகளை வீழ்த்தியதற்கு காணிக்கையாக கிறிஸ்தவத்திற்குள் கரைந்தார்கள் என்றொரு வாய்மொழி வரலாறு இத்தென்பகுதி கடற்கரைக் கிராமங்களில் புனித சவேரியாரின் பெயரால் சொல்லப்பட்டு வருவதையும் நாவல் பதிவு செய்கிறது. கடற்கரைக் கிராமத்துக் கிறிஸ்தவ திருவிழாக்களையும் கூட நாவல் அழுத்தமாக அதன் அழகியலோடு பதிவு செய்துள்ளது. தேர்த்திருவிழாக்களில் ஊர்ந்து வரும் சப்பரங்களும், அவற்றில் வீற்றிருக்கும் புனித சவேரியார், அந்தோணியார், தேவமாதா ஆகியோரின் சொரூபங்களும் ஐரோப்பிய கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் புதிதானது.

தென்குமரிக் கடற்கரையில் கோயில் கொண்டிருக்கும் கன்னியின் மீதான பரதவர்களின் நம்பிக்கை மகத்தானது. கடலையும், கடலுக்குள் மீன்பாடு அமைவதையும், பெரு வெள்ளம், ஆழிப் பேரலை இவற்றில் இருந்தும் தம்மைக் காக்கும் பெரும் சக்தியவள் என்கிற அவர்களின் நம்பிக்கையைக் கண்டறிந்ததால்தான் இங்கே கிறிஸ்த வத்தை பரப்பிட வந்த புனித சவேரியார், அவர்களுக்குள் மாதா வழிபாட்டைப் பிரபலப்படுத்தினார். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் தவிர வேறு எங்கும் யேசுவின் தாயான மேரிமாதாவைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் இல்லை. மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள், பரதவர்களின் தொல் சடங்குகள், குலமரபு, நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு அதன் வழியாகவே மதத்தையும், மத நிறுவனங்களையும் கட்டமைத்தனர் என்கிற சமூகவியல் ஆய்வினையும் நாவல் கொண்டிருக்கிறது.

தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் கலந்திருக்கிற கத்தோ லிக்க கிறிஸ்தவத் திருச்சபைகளின் மீதான விமர்சனத்தையும் நாவல் வைத்திடத் தவறவில்லை. கோயில் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கும் பரதவர்களின் வாழ்வை மேலேற்றுவதற்குப் பதிலாக திரு விழாக்கால காணிக்கையிலும் ஏலம் விடும் பொருட்களின் மூலமாக கிடைக் கும் பணத்தின் மீதும் மட்டுமே குறியாக இருக்கும் சாமியார்கள் பாலியல் மீறல்களை நிகழ்த்துவதையும் நாவல் தொட்டுச் செல்கிறது. இது மட்டுமல்லாது எல்லா மீனவக் கிராமங்களையும் ஊர்க்கட்சி, சாமியார் கட்சி என இரண் டாகப் பிரித்துப் போட்டு தனக்கு வேண்டியவர்களை மட்டும் நிர்வாகத் தில் வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்பவர்களையும் நாவல் படம் பிடித் துக் காட்டுகிறது. இந்த எளிய விமர்சனங்களை எல்லாம் அழித்து எழுதும் பேராற்றல் மிக்கவராக காகுச் சாமியார், நாவல் எங்கும் பிரம்மாண்ட ரூபம் கொள்கிறார்.

ஆமந்துறையெனும் மீனவ கிராமத்திற்கு பங்குத் தந்தையாக காகுச் சாமியார் வந்த நாள் முதல் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்கிறவராகவே வாழ்கிறார். புனித சவேரியாரின் மறு வடிவம் போலத்தான் நமக்குக் காட்சிப்படுத்தப்படுகிறார். அவரின் மீது கொண்ட பேரன்பினால்தான் நாவலாசிரியர், புத்தகத்தின் பிற்சேர்க்கையில் அவரின் முழுப் பக்க புகைப்படத்தை இணைத்துள்ளார். பலி பூசை நடத்தி விட்டு காணிக்கையை எண்ணிக் கணக்கிட்டு திருச்சபை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிற வெறும் மதப் பிரசங்கியல்ல காகுச் சாமியார் என்பதை நாவலெங்கும் நாம் கண்டுணர்கிறோம். தொம்மந்துரைக்கு விதவை மதினியைத் தாரமாக்குகிறார். விதவைத் திருமணத்தை ஆதரிக்கிறவராக மட்டும் அவரை நாம் பார்க்க முடியாது. அப்படியிருந்தால் காகுச் சாமியாரின் மரணம் நிகழ்ந்த போது ஆமந்துறையே திரண்டு போய் அவருக்கான மரியாதையைச் செய்திருக்காது. இறால் மீன் ஏற்றுமதிக்குள் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் நுட்பமான பங்கும் இருப்பதை அவர்களுடைய கடிதங்களை ஆய்வுக்குட்படுத்தினால் கண்டறிய முடியும். “ஆழிசூழ் உலகு” என்கிற இப்பெரும் படைப்பே கூட காகுச் சாமியார் சொல்கிற “நண் பர்களுக்காக உயிரை விடுறதை விட மேலான தியாகம் ஒன்றுமில்லை”ங்கிற இப்புள்ளியில் தான் சுழல்கிறது என்று நான் நினைக்கிறேன்.

ஆற்ற இயலாத பெருங்கோபம் தன்னுள் நீங்காது நிறைந்திருப்பதால் தான் ஜஸ்டின் வெட்டுண்டு கிடக்கிற போதும் அவனுடைய நெஞ்சாங் கூட்டிற்குள் மண்ணை அள்ளி நிறைக்கிறாள் வசந்தா. தன்னைத் தன் பிராயத்தில் துரத்தி துரத்தி வேட்டையாடியவன்; தன் தகப்பனைத் திட்டமிட்டு வெட்டிக் கொன்றவன் ஜஸ்டின். அவனை எப்படி எத்தனை நாளானா லும் மன்னிக்க முடியும் வசந்தாவால். விதவை மதினி அமலோற்பவத்தைத் திருமணம் செய்த பிறகு பிறந்த குழந்தை தனக்குப் பிறந்ததா, தன் அண்ணனுக்குப் பிறந்ததா என்கிற குழப்பமின்றி அன்பைக் கொட்டி பிள்ளையை வளர்க்க தொம்மந்துரையால் மட்டுமே முடியும். ஊரையே செல்வச் செழிப்பாக்கிய மிக்கேல் பர்னாந்து இலங்கையில் மரணத்திற்கு பிறகு ஆமந்துறை வந்தடைந்த அவளின் மருமகளான சாராவிற்கு சூசையார் நிகழ்த்திய மிருக குரூரத்தை எண்ணி தனக்குள் வதைபட்டு, அவளின் மகளான சிலுவையை தன் நெஞ்சில் சுமந்து வளர்ப்பதென நாவல் விதவிதமான மனித உணர்வுகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

Sunday, February 06, 2011

சொல்லில் முடிவதில்லை என்ற ஒரு ஆதங்கம்


என்னைப் பொறுத்தவரை கவிதைகள் கவிஞர்களின் சிந்தனை வெளிப்பாடு. அந்த சிந்தனைகளோடு உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அந்த சிந்தனைகள் படிப்பவர்களின் எண்ணங்களில் கலந்து அவர்களை சிந்திக்க வைத்து அதன் மூலம் ஒரு செயல்திறனை உருவாக்க வைப்பதே கவிதையின் குறிக்கோளாக இருக்கமுடியும் எனத் தோன்றுகிறது.

ஒரு கவிதையின் மையப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிஞர் காதலைப்பற்றியோ, காட்சியைப் பற்றியோ, வீரத்தைப்பற்றியோ, சமூக உணர்வுகள் பற்றியோ, நாட்டுப்பற்று பற்றியோ அல்லது நகைச்சுவையாகவோ கவிதைகளை வெளிப்படுத்தலாம். அப்படி தோற்றுவித்த கவிதைகளுக்கு ஜீவனாக ஒரு காரணம் இருக்கும். அந்த ஜீவன், கவிதை படிப்பவர்களின் உணர்வில், அனுபவத்தில், சிந்தனையில் காணாமல் போயிருக்கக்கூடிய ஒரு நூலிழையை பிரித்து 'இதுதான் ' என்று தெளியவைத்து, கலந்து ஒரு சிறிய தன்னுணர்வை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் இரண்டு தளங்களில் இயங்குகிறது.
ஒன்று : கவிதை உருவாக்கத்தின் புறச் சூழ்நிலைகளையும் அவை உண்டு பண்ணும் அகச் சூழ் நிலைகளையும் பற்றியது. கவிதை உருவாகும் நேரத்தை நாம் கவிஞனருகில் நின்று கவனிக்கிற மாதிரியான அந்தரங்கத் தொனியை இந்தக் கவிதைகள் வெளியிடுகின்றன.

இன்னொன்று : இவை ஜெகதீசனின் வாழ்க்கையின் சில சிதறல்களை நமக்கு அளிக்கின்றன.

இத்துடன் ஒட்டியே ஜெகதீசனின் வாழ்க்கையில் கடந்து போகும் நபர்கள் பற்றிய வாழ்க்கைச் சித்திரமும் நடைச் சித்திரமாய் வந்து போகின்றன. கவிதையின் மூலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது அந்தக் கவிதைக்கான நம் அனுபவம் இன்னமும் விரிவடைந்து ரசனை பெருக்கம் கொள்கிறது. எல்லாக் கவிதைகளுக்கும் எல்லாக் கவிஞர்களுக்கும் இப்படிச் செய்வது சாத்தியம் தானா என்று கேள்வி எழலாம். கவிதை தன்னுள் நிறைவு கொண்டிருப்பதெனில் விளக்கங்களும், கவி மூலங்களும் தேவையா என்று ஒரு கேள்வி எழலாம். இப்படியும் கவிதையை அணுக வழியுண்டு என்பது தான் என் பதில்.

இதுவும் கடந்து போகும்
சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை

ஜெகதீசனின் கவிதைக் குரல் தனித்த குரல். எளிமையும் கைத்துப் போன மனத்தின் வெளிப்பாடும் கொண்டவை. வாழ்வனுபவங்களின் குறுக்குவெட்டுத் தோற்றமாய் எழும் அவருடைய கவிதைகள். ஆனால் பல நேரங்களில் சட்டென்று நின்று விடுவதான முழுமையின்மையைக் கொண்டதாய்த் தோன்றுவதுண்டு. இட்டு நிரப்பிக் கொள்ள அவருடைய மற்ற கவிதைகளிலிருந்தும் சில விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமோ என்னவோ.

நின்று சலித்த
நீள் பயணமொன்றில்
மென்று விழுங்கிய
பார்வையோடு நீ
விட்டுச் சென்ற
இருக்கையில்
இன்னமும்
உன் சூடு

கவிதைகள் இரண்டு வகை. விண்ணிலிருந்து மண்ணில் பொழிபவை ஒரு வகை.
ஆவேசமும், கூர்மையும் நிறைந்தவை அவை. அறிவுறுத்தும் உணர்த்தும் திறன் பெற்றவை. சமூக எழுச்சிக் காலங்களில் இடியுடன் புயலுடன் தரையிறங்கி மனிதத் திறளை தூண்டுபவை. ஆற்றல் கொள்ள வைப்பவை. ' பாரதியின் சாதி மதங்களை ப் பாரோம் போல....

இன்னொரு வகை கவிதைகள் மண்ணிலிருந்து விண் நோக்கி பாய்பவை. அழுத்தம் பெற்று இறுகிப் போன சுய அனுபவங்கள், உணர்வுகள், சிந்தனைகள், மேல் நோக்கி பீறிட்டு பாயும் போது இவ்வகைக் கவிதைகள் பிறக்கும். முன்னது பொது உணர்வைச் சமூகத்தினர் மீது பெய்து, தனிமனிதர்களின் உணர்வுகளைத் தழைக்கச் செய்யுமானால், பின்னது தனி மனித உணர்வு நிலையிலிருந்து பீறிட்டு சமூகத்தின் பொது உணர்வை தூண்டிக் கனியச் செய்யவை.
தனிவுணர்வும் பொது உணர்வும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவுபடாதவை. பிரிக்கவும் முடியாதவை.

இன்று மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் கவிதைப் போக்குப் பெருவழக்காகியுள்ளது. மண் பிளவு பட்டுள்ளது. வர்க்கம், சாதி, சமயம், இனம், மொழி, பால் என பிளவுபட்டுக் கிடக்கும் பூமியில் , எங்கோ ஒரு புள்ளியில் வேர் விட்டு மாட்டிக் கிடக்கிறது மனிதம். இந்த மாட்டுதலில் மூச்சு முட்டிப் போகும் மனிதத்தின் உணர்வுகள். விரிவு தேடி, எல்லைகள் அற்ற சுதந்திரம் தேடித் தாவும் இடம் வானமாகத் தான் இருக்க முடியும்.
வானத்துக்குத் தாவத் திராணியற்றுக் கீழ் நோக்கி மண்ணுக்குள் புதைந்து இருண்டு சுருண்டு போவோரும் உண்டு.

வானம் எல்லையற்றது. சுதந்திரமானது. இறக்கைகள் இழக்கும் வரை பறந்து திரிய இடம் தருவது. இந்த மண்ணுக்கும் விண்ணுக்குமான உணர்வின் தொப்புள் கொடியாக உயிர்ப் பாலமாக அமைவது தான் உயிர் உள்ள கவிதை.

தூக்கி எறியுங்கள்
உங்கள் தம்புராக்களை
தூளியில் உறங்கும்
சிசுவின்
உறக்கம் கலையும் முன்

ஜெகதீசன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி . அதன் அப்பட்டத்தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது. ஆனால் தமிழில் மிக மிக குறைவாக உள்வாங்கப்பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர். காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப்பட்டதோ பேசப்பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி அல்லது மனத்தெளிவு அவர் கவிதைகளின் சாரமாக உள்ளது. அது அனைவராலும் தொட்டுணரக்கூடிய ஒன்றல்ல. அபூர்வமாகவே சிலருக்கு அத்தகைய ஆழமான அமைதியின்மை உள்ளூர குடியேறி அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறது . அந்த அமைதியின்மை அங்கிருந்து அன்றாட வாழ்வின் அனைத்து தளங்களுக்கும் நகரவும் செய்கிறது .

முக்கியமான கவிஞர்களிடம் எப்போதுமே அடிப்படையான படிமங்கள் சில இருக்கும். அவற்றின் நீட்சியாகவே அவர்கள் தங்கள் உலகை கட்டியெழுப்பியிருக்கிறார்கள். ராபின் பறவை ஏன் எமிலி டிக்கன்ஸன் கவிதையில் மீண்டும் மீண்டும் வருகிறது என்ற கேள்விக்கு மிக மிக விரிவாகவே பதில் சொல்ல முடியும். வேர்ட்ஸ்வர்த்தின் நைட்டிங்கேல் புகழ் பெற்றது . அதைப்போன்றதே ஜெகதீசனின் முக்கியப் படிமங்கள் நடைபாதை, இடங்கள், பொருட்கள் என விரிகிறது.

“பிரிந்து கூடும்
கூடிப்பிரியும்
அநேகர் வரவை
கண்டிருந்தது அந்த இடம்”

“சற்று முன் நடந்த
சாலை விபத்தொன்றில்
பைக்கின் பின் அமர்த்தி
………………………….”

“அப்பா பொம்மைக்கு மத்தியில்
வரைந்த ஒரு வட்டத்தை
அப்பாவின் வயிரென்றான்”
கவிதைகள் வளமாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கவிதைக்கு வளம் எப்படிச் சேர்கிறது?

கருத்துக்களாலா, வார்த்தை ஜாலங்களாலா, உருவ வடிவங்களாலா, புரியாதபடி எழுதுவதாலா, நிகழ்கால நிகழ்வுகளைப் பிரதிபதிப்பதாலா, எதிர்கால எதிர்பார்ப்புகளைக் கனவாகக் காண்பதாலா, இறந்த காலச் சீர்கேடுகளைச் சீறுவதாலா, புதிர்களைப் போடுவதலா அல்லது விடுவிப்பதாலா, யதார்த்தங்களைப் பேசுவதாலா, யதார்த்தங்கள் என்ற பெயரில் மன அழுக்குகளைப் பகிரங்கப்படுத்திக்கொள்வதாலா ? கொஞ்சம் கொஞ்சம் எல்லாவற்றிலும் தான். எப்படி ? சில கவிதைகளைப் பார்த்தாலே விளங்கிவிடும்.

ஆத்மாநாம் ஒரு கவிதை இப்படி வருகிறது:

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆனாலும் மனதிலே ஒரு நிம்மதி

இரவில் பேய்கள்

குருட்டுக் கண்களைத் திறந்து பார்த்தால் இருட்டுதான் பிரகாசமாய்த் தெரிகிறது
செவிட்டுச் செவிகளைக் கூராக்கி முயற்சித்தால் நிசப்தம்தான் கூச்சலாய்க் கேட்கிறது
நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால் சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது
உருமாறிப் போனவன் உடல்மாறி மனம் மாறியபின்

உலகமகா யுத்தம்

ஒரு கூரைமேல் காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில் அணில் பறந்தது காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை

பொதுவாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால், கவிஞன் எழுதுவதும் வாசகன் படிப்பதும் ஒன்றல்ல. ஒவ்வொரு வாசகனின் கவித்துவ மனமும் தனக்குத்தானே வேறொரு கவிதையை எழுதிக்கொள்கிறது. கவிஞன் சொல்லக்கருதும் பொருளுக்கும் அதை வெளிப்படுத்தும் அவனுடைய சொற்களுக்கும் உள்ள உறுதியான, உண்மையான பிணைப்பு மட்டுமே வாசகனை ஈர்க்கமுடியும்.

புரிகின்ற கவிதைகளைக்காட்டிலும் புரியாத கவிதைகளே சிறந்தன என்ற கருத்துகூட நிலவுகிறது. பொருள் விளங்காமையின் காரணம் என்ன? ஞானக்கூத்தன் கூறுவார்: கவிதையில் பொருளைக் கவிதையிடம்தான் கேட்கவேண்டும். ஆசிரியனுக்குத் தெரிந்த பொருள் வாசகனுக்கு எட்டாமல் கவிதையிலேயே உறைந்துவிடுகிறது. இத்தகைய கவிதைகள் முதலில் புதிர் விடுவிக்கும் அறிவார்த்தமான முயற்சிகளையே அவாவுகின்றன. கவிதை நமக்கு எடுத்த எடுப்பிலேயே பரிச்சயமான முகத்தைக் காட்டிப் பேசுவது என்ற நிலைமையை இவை காலம் தாழ்ந்தே பெறக்கூடும்.

இன்றைய கவிதை தன் வளர்ச்சியில் புது உருவங்களைப் பெற்று வருகிறது. நீண்ட புதுக்கவிதைகள் இல்லை என்ற ஒரு காலகட்டம் இருந்தது. பேராசிரியர் அய்யப்ப பணிக்கர் தற்காலத் தமிழ்க் கவிதைகள் ஆட்டான் புழுக்கைகளைப்போல சின்னச் சின்னதாக இருக்கின்றன என்றபோது கவிஞர் ஷண்முகசுப்பையா மலையாளக் கவிதைகள் காளைமூத்திரம்போல நீண்டிருக்கின்றன என்றாராம். இன்றோ தமிழ்க் கவிதைகள் ஒருவரியிலிருந்து தொடர் காவியங்கள் வரை எழுதப்பட்டு வருகின்றன.

கார்லோஸ் காஸரெங் கூறுவார்:

கவிதையின் வரிகளுக்கிடையே
வெடிகுண்டொன்றை வையுங்கள்
வரிகளனைத்தும் சுக்கு நூறாகிச் சிதறட்டும்
பின்னர்
மேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள்
அதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்
அந்த இடிபாடுகளிலிருந்தே.
நம் கவிகள் இதைத்தான் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

முகங்கள் அவற்றின் பார்வைகள். பார்வைகள் வெளிப்படுத்தும் பயங்கள். முகங்கள் பார்வைகளில் மட்டுமல்ல, அவற்றின் பின்புலக் காட்சியின் நிர்மலமான வெற்றிடத்திலும் அச்சம் படிந்திருப்பதை உணரமுடிகின்றது. இருட்டைப் புரிந்து கொள்ளும் முயற்சி. பல நேரங்களில்:

'கருத்தை மருட்டியது கவலை
கிட்டாத கசப்பும்
நெஞ்சைக் குமட்டிவர
முகத்தின் முக்கால் பரப்பும்
இருள்மண்டி விளிம்புகட்ட
விழியை வெறுவெளியில்
குத்தி நின்றேன்.... (பொன் வேட்டை)
எனச் சொல்கின்ற கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைமுகம்.

அம்முகப்பிம்பங்கள் வெளிப்படுத்தும் அமைதியும் அபயக்குரலும் மனதில் மட்டுமல்ல உடலிலும் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டுத் தான் ஓய்கின்றன. அம்முகங்களில் ஏதோ ஒருவித இறுக்கம், நடுக்கத்துடன் விலக முயற்சிக்கும் விட்டில் பூச்சியின் இயல்பு. அச்சத்திற்கும் அமைதிக்குமிடையில் ஊசலாடும் தன்மை முகத்திரையிட்ட அனைத்து முகங்களிலும் வெளிப்படுகிறது. நடைமுறையோடு ஒட்டாத முகங்கள் அவை. உலகவாழ்விலிருந்து தப்பிக்க விழையும் சன்னியாசப் பார்வை அக்கண்களில். அம்மாதிரியான முகங்களில்தான் இவ்வுலகத்தின் இயக்கமும் முடக்கப்படுகிறது என்பதனை உணர்த்தும் புகைப்படங்கள். அனைத்துமே பதுங்கும் தன்மை கொண்ட, தப்பிக்க விழையும் முகங்கள். ஒளிவதற்கு உபகரணங்களாக முகத்திரைகள், துவாலைகள், கண்களை மறைத்த கண்ணாடிகள். அம்முகங்களுக்குள் வேற்றுமையின்றி வெளிப்படும் அபூர்வ அன்னியப் பார்வை. அப்பார்வைகளில் நிறைந்திருப்பது வெற்றிடம்- இருட்டு - சூன்யம். அப்பார்வையை பொருள் கொள்ள நமக்கு இயலாமை அல்லது விருப்பமில்லாமை. அப்பார்வைகளில் 'ஒரு தொலைநோக்கு ' இருந்திருக்கலாம். 'குறுகிய பார்வை

தவிர்த்திருக்கலாமென்பதான 'திடீர் ' அபிப்பிராயங்கள் பார்வையாளர்களுக்குத் தோன்றக்கூடும். நம் முகங்களை பற்றிய பிரக்ஞையற்று, அடுத்தவர் முகங்களில் மட்டுமே காணவிழைகின்ற எதிர்பார்ப்புகள். சூன்யத்தில், இருட்டைச் சுமந்து எதிர்காலத்தின் அவநம்பிக்கையற்றிருக்கும் பார்வை. இந்த அவ நம்பிக்கை நம்மிடமும் இருக்கிறது. இந்த அவநம்பிக்கையில் நமக்கும் பங்கிருக்கிறது. நம்மைப்போலவே அவைகளும் காத்திருக்கின்றன. நாம் எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதையும் அவை அறிந்திருக்கின்றன. வெளிச்சத்திடமிருந்து திரையிட்டு மறைந்துகொள்ளும் இக்குணத்தின் மூலமென்ன ? நெடுநாளாக கருப்பை இருட்டிற்குப் பழகிப்பழகி, திடுமென்று யோனியளித்த வெளிச்ச மிரட்சி நமது ஒளிசேர்ந்த வாழ்விற்குத் தடையாக வந்து சேர்ந்திருக்குமோ?

நமது பகுத்தறியும் வல்லமையை எப்போதேனும் இம்மாதிரியான முகங்களில், அவற்றின் பார்வைகளில் பிரயோகிப்பதுண்டா ? அம்மாதிரியான பார்வைகளில் வட்டமிடும் பயம் எவரிடம்? 'விளிம்பைத் தொட்டால் சூழலில் சிக்கிப் புதைந்து விடுவோம் ' என்கின்ற சமூக அச்சமா? எதற்காக அம்முகங்களுள் எட்டிப்பார்த்து ஒதுங்கும் பயம்?. எதற்காக இந்த விளிம்பு வாழ்க்கை? இவ்வச்சச் சூழலில் விடுபடும் எண்ணமேதும் அக்கண்களுக்கும் அவை சார்ந்த முகங்களுக்கும் இல்லையா? இவைகளுக்கான பதில் நம்மிடத்திலில்லை.

மாறாக 'முடிந்தபோதெல்லாம அகழ்ந்தெடுத்து படுகுழியின் விளிம்பில் அவர்களை நிற்கவைத்து பயம் வேண்டாம் என்றால் எப்படி ? ' என்ற கேள்வியே பதிலாக நமக்குள்.

மீட்டாத வீணை

இங்கிருந்து போயிருந்த
என்னைப் போலவே
அங்கிருந்து
அவர்கள் வந்தார்கள்
அவரவர் இடங்களைக் குறித்தே
அதிகமும் பேசிக் கொண்டிருந்தோம்
அயர்ந்து திரும்பும் வரை
தன் பொருட்டும்
ஏகும் விரல்களுக்காக
மீட்டாத வீணையென
காத்திருக்கும்
மீளாத் துயரில் அந்த இடம்.

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதைத் தொகுப்பு)
செல்வராஜ் ஜெகதீசன் - அகநாழிகை வெளியீடு
பக்கம் 64, விலை:ரூ.50.00

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...